புதன், 21 மே, 2014

ஆன்மீகத்தில் முன்னேற்றம்

எத்தனையோ கோவில்களுக்குச் சென்று வழிபட்டிருக்கிறோம்;எத்தனையோ பரிகாரங்கள் செய்திருக்கிறோம்;இருந்தும் ஏன் அவை நமக்கு பலன்களைத் தரவில்லை? என்று  சிந்தித்திருக்கிறோமா. . .?
1990கள் வரையிலும் எவையெல்லாம் நமது இந்து தர்மத்தின் கடமைகளாக இருந்தனவோ,அவைகள் இன்று கேலி செய்யப்படுகின்றன;எவையெல்லாம் தீயப் பழக்கம் என்று நம்பப் பட்டனவோ, அவையெல்லாம் இன்று கவுரவமாகக் கருதப்படுகின்றன;(உதாரணம் மது அருந்துவது;உடன் பிறந்தவர்களுக்கு உதவுவது; பிறரின் குடும்ப விவகாரங்களில் தலையிடுவது போன்றவை தீயப் பழக்கங்களாக இருந்தவை இன்று கவுரவமாகக் கருதப்படுகின்றன)ஏன் இந்த இழிநிலை?
நான்கு யுகங்களில் துன்பத்தை மட்டுமே மனிதர்களுக்குத் தரும் யுகம் நாம் வாழ்ந்து வரும் கலியுகம்;இந்த கலியுகத்தில் நமது இல்லற வாழ்க்கையோடு ஆன்மீக முன்னேற்றத்தை அடைய நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை ஏராளமான ஆன்மீக அமைப்புகள்,ஜோதிட அமைப்புகள் பயிற்சி வகுப்புகள்,போதனை முகாம்கள் மூலமாக பரப்பிக்கொண்டே இருக்கின்றன;
ஆனால்,இவைகள் மூலமாக கிடைக்கும் ஆன்மீக முன்னேற்றத்தை தக்க வைக்க நாம் செய்ய வேண்டிய சுயக் கட்டுப்பாடுகள் என்னென்ன தெரியுமா?
1.அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்துவது
2.மது,குட்கா போன்றவைகள் நுகர்வதை நிரந்தரமாக நிறுத்துவது
3.நமது ஆன்மீக லட்சியங்கள்,நோக்கங்களை ஒருபோதும் வெளிக்காட்டாமல் இருப்பது
4.நமக்குத் தகுந்த ஆன்மீக குருவைத் தேடி கண்டறிதலும்;கண்டறிந்தப் பின்னர் அவரின் வழிகாட்டுதல் படி மட்டும் நமது வாழ்க்கையை சீரமைத்துக் கொள்ளுதலும்;குருவின் மனதில் நீங்காத இடம் பிடித்தலும்;
5.தமிழ்ப்பண்பாட்டை விடாப்பிடியாகப் பின்பற்றி வருவது;

முட்டை முழு அசைவமே;செயற்கையாக உருவாக்கப்படும் முட்டையும் அசைவமே;முட்டையை ஒரு பொருளாகக் கலக்கும் பொருட்களும்(கேக்,புரோட்டா மற்றும் பல உணவுப் பொருட்கள்) அசைவமே! மனிதர்களாகிய நமக்கு பிறந்த ஜாதகம் இருப்பது போல,ஆடு,மாடு,கோழி,மீன்,நண்டு போன்ற உயிரினங்களுக்கும் பிறந்த ஜாதகம் உண்டு;அதன்படி,அவைகளுக்கு வேதனைகளும்,சுகங்களும் அவைகளின் வாழ்நாளில் மாறி மாறி உருவாகும்;ஆனால்,நாம் சுவைக்காக அவைகளை கொன்று,உணவாக்கிக் கொள்கிறோம்;அதன் மூலமாக அவைகளின் ஜாதகங்களில் இருக்கும் அனைத்து தோஷங்களும் நம்மை,நமது பிறந்த ஜாதகத்தில் இருக்கும் யோகங்களை தடுத்து நிறுத்திவிடும்;
மிருகங்களுக்கு ஜாதகம் கணிக்கும் பழக்கம் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை நமது நாட்டில் இருந்துள்ளது;உதாரணமாக,அரபு நாடுகளில் இருந்து நமது மன்னர்களின் படைகளுக்கு குதிரைகள் வாங்குவதுண்டு;குதிரைகள் அரண்மனைக்குரிய பகுதிக்குள் கொண்டு வந்ததும்,அந்த நேரத்தை வைத்து ஜோதிடம் கணிப்பதுண்டு;சிறந்த கிரகநிலையில் அரண்மனைக்குள் வந்திருக்கும் குதிரைகளை மன்னருக்காக பயிற்சியளிப்பது பல காலமாக நடைமுறையில் இருந்திருக்கிறது; தற்போது இந்தப் பழக்கம் இல்லை;
நாம் ஒரு பெட்டிக் கடை நடத்தினாலும் சரி;நமது ஊரிலேயே பெரிய சூப்பர் மார்கெட் நடத்தினாலும் சரி;நமக்கு என்று தொழில் போட்டியாளர்  ஒருவராவது இருக்கவே செய்வார்;
அல்லது
நாம் ஒரு தனியார் நிறுவனத்தில் க்ளார்க்காக பணிபுரிந்தாலும் சரி;அரசுத் துறையில் அதிகாரம் மிக்கப் பதவியில் இருந்தாலும் சரி;நம்மைப் பிடிக்காதவர்கள் இருக்கவே செய்வர்;
இவர்களால் நம்மை நேரடியாக கட்டுப்படுத்த முடியாத போது,இவர்கள் செய்யும் முதல் செயல் என்னதெரியுமா? நமது வளர்ச்சியைத் தடுத்து நிறுத்திட குறுக்கு வழியைப் பின்பற்றுவதே;இந்த குறுக்கு வழியானது சூட்சுமமாக இருக்கும்;இந்த குறுக்கு வழியானது,நாம் அசைவம் சாப்பிடத் துவங்கியதும் ‘வேலை’ செய்ய ஆரம்பிக்கும்;இந்த குறுக்கு வழியானது,சில சமயம் நமது உடல்நிலையைச் சீர்குலைக்கலாம்;டாக்டரிடம் ஆலோசித்தாலும் இன்றைய ஆங்கில மருத்துவத்தால் கண்டறிய முடியாது;நமது தொழில் ஸ்தானத்தை சீரழிக்கலாம்;காரணத்தை நமது ‘பகுத்தறிவினால்’ கண்டுபிடிக்கவே முடியாது;
நாம் சொந்த வீடு கட்ட அல்லது நமது கடன்கள் விரைவாகத் தீர ஒரு பரிகாரத்தை இத்தனை வாரம்,இந்தக் கோவிலுக்குச் சென்று இன்னின்ன பொருட்களுடன் செய்கிறோம்;அப்படிச் செய்து முடித்தப் பின்னரும் கூட அந்த பரிகாரம் நமக்குப் பலன்கள் தருவதில்லை;நாம் தான் வாரம் ஒருமுறை சிக்கன்,மட்டன் என்று வெளுத்துக் கட்டும் போது எப்படி அந்த பரிகாரம் நமக்குப் பலன்களைத் தரும்? ஒருபோதும் அது நமக்குத் தராது;
சைவ உணவு சாப்பிடும் பழக்கமே நம்மை தகுந்த குருவிடம் அறிமுகப்படுத்தும்;சைவ உணவு சாப்பிடுபவர்களின் சுவாசத்தில் ஒரு ‘லயம்’ இருக்கும்; ஆனால்,அசைவ உணவு சாப்பிடுபவர்களின் சுவாசத்தில் ஒருவிதமான பதற்ற நிலையே இருக்கும்;யோகாசனம் கற்றுத் தரும் மாஸ்டர்களாலோ அல்லது தினசரி ப்ராணயாமம் செய்பவர்களாலோ மட்டுமே இந்த வித்தியாசத்தை அறியமுடியும்;அசைவ உணவு சாப்பிடுபவர்களின் சுவாச எண்ணிக்கையை கவனித்துப்பார்த்தால்,விரைவாக இருக்கும்;இதனால்,அவர்களின் ஆயுட்காலம் குறைவதை மேல்நாட்டு இண்டாலஜிஸ்டுகள் கண்டறிந்துள்ளனர்;

இல்லறத்தில் இருந்துகொண்டே ஆன்மீக முன்னேற்றத்திற்கு முயற்சி செய்வதே நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் அனைவராலும் இயன்ற காரியம் ஆகும்;தமிழ்ப் பண்பாட்டை விடாப்பிடியாக பின்பற்றுவதால் மட்டுமே நம்மால் ஆன்மீகத்தில் பலநிலைகளை இப்பிறவியிலேயே கடக்க முடியும்.ஏனெனில்,பல யுகங்களாக இந்த வழிமுறைப்படியே ஏராளமான பாமர மக்கள்,ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடைந்து சித்தர்களாகவும்,சிவகணங்களாகவும் ஆகியிருக்கின்றனர்;

ஓம்சிவசக்திஓம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...