திங்கள், 26 மே, 2014

சாயா கிரகங்களின் சூட்சும நிலைகள்

Date :26/05/2014


சாயா கிரகங்களின் சூட்சும நிலைகள்-1

நவக்கிரகங்களை ஜோதிட சாஸ்திரம் மூன்று வகையாகப் பிரிக்கிறது.
ஒளிக் கிரகங்கள்
பஞ்சபூதக் கிரகங்கள்
சாயா(நிழல்) கிரகங்கள்
சூரியனும் சந்திரனும் ஒளிக்கிரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இதன் காரணமும் உங்களுக்குத் தெரியும். நமக்கு கிடைக்கும் இந்த ஒளியின் மூல நாயகனான சூரியன் பகலிலும், இரவில் சூரியனால் சந்திரனும் ஒளிர்கின்றன என்பதனாலேயே அவை ஒளிக்கிரகங்கள் ஆயின.
குரு, சுக்கிரன், புதன், செவ்வாய், சனி ஆகியவை பஞ்சபூதங்களின் குறியீடுகளுக்கு ஒப்புமை ஆக்கப்பட்டதால் அவை பஞ்சபூதக் கிரகங்கள் ஆயின.
மூன்றாவதான இராகு கேதுக்கள் நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படுவதன் காரணம் அவை உண்மையில் பருப்பொருளுடைய கிரகங்களே அல்ல என்பதுதான்.
அதாவது இராகு கேதுக்கள் என்பவை வெறும் தோற்றங்கள் மட்டும்தான். அவற்றிற்கு ஒரு நிஜமான வடிவம் கிடையாது. அதோடு இராகு கேதுக்கள் நிழல்கள் என்று சொல்லப்பட்டாலும் நிதர்சனமாக அவைகள் இருட்டுகள் என்றுதான் நான் சொல்வேன்.
உண்மையில் இராகு கேதுக்கள் என்பவை பூமி மற்றும் சந்திரனின் நிழல்கள்தான். அதாவது பூமி, சூரியனைச் சுற்றிவரும் சூரியப்பாதையும், சந்திரன் பூமியைச் சுற்றிவரும் அதே போன்ற பாதையின் விரிவு படுத்தப்பட்ட நிலையும் சந்தித்துக் கொள்ளும் இரண்டு புள்ளிகள்தான் ராகு கேதுக்கள் என அழைக்கப் படுகின்றன.
இந்த இரண்டு புள்ளிகளையும் ஒரே நேர்கோட்டால் இணைக்க முடியும். அந்த வகையில் பார்த்தால் இரண்டும் ஒரே கிரகம்தான் என்று கூட நாம் சொல்ல முடியும்.
இராகு கேதுக்களை மிக நுட்பமாகவே பிரித்தறிய வேண்டும். சந்திரனின் ஏறு பாதையில் உள்ள இராகுவிற்கென்று சில தனிப்பட்ட குணங்களும், இறங்கு பாதையில் உள்ள கேதுவிற்கென்று சில குணங்களும் உள்ளன.
நம் ஜோதிடத்தின் நாயகனான சூரியன் உள்ளிட்ட ஏழு கிரகங்களையும் முற்றிலும் வலிமை இழக்கச் செய்யும் ஆற்றல் உள்ளவை இந்த இரண்டு இருள் கிரகங்கள் மட்டும்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதிலும் ஒரு கிரகத்தின் உண்மையான குணத்தையே நேர் எதிராக மாற்றிப் பாதிக்கும் வல்லமை இராகுவிற்கு மட்டுமே உண்டு.
என்னுடைய முப்பது ஆண்டுகளுக்கும் மேலான ஆய்வில் நான் அறிந்தவைகளில் ஒன்று கோட்சாரத்தில் ஏழரைச்சனியைப் போலவே மூன்று தொடர் இராசிகளைப் பாதிக்கும் திறன் இராகுவிற்கும் உண்டு என்பதுதான்.
அதாவது சனி என்பதும் இராகுவைப் போலவே இருள் கிரகம்தான். ஆனால் பருப்பொருள் உடைய வாயுக்கிரகம். அதாவது சனி திடப் பொருள்களான மண், பாறைகள் போன்றவைகளால் அமைந்த கிரகம் அல்ல. பஞ்சபூதக் கிரகங்களில் அவர் முற்றிலும் வாயுவினால் மட்டுமேயான எடையற்ற கிரகம் ஆவார்.
அதாவது சனியின் எடை நீரின் அடர்த்தியை விடக் குறைவு. சனியை நீங்கள் அதை விடப் பெரிய கடலில் தள்ளுவீர்களே ஆனால் அது அந்தக் கடலில் மிதக்கும். சூரியனிடமிருந்து அவர் வெகு தூரத்தில் இருப்பதால் அவருக்கு கிடைக்கும் சூரிய ஒளியும் குறைவு, அதனால் அவரின் பிரதிபலிப்புத் திறனும் குறைவு எனும் நிலையில் அவர் இருள் கிரகம் ஆகிறார்.
இருளாகிய சனி கோட்சாரத்தில் தான் இருக்கும் இராசியையும், அதன் முன்பின் இராசியையும் ஏழரைச்சனியாகி பாதிப்பது போல கோட்சாரத்தில் ஒரு இராசியில் தங்கி இருக்கும் இராகுவும் தன் முன்பின் ராசிகளைப் பாதிக்கவே செய்கின்றார்.
ஆனால் இராகுவின் கடுமை சனியைப்போல் இல்லாமல் சற்றுக் குறைவு. அதற்கு அவர் பருப்பொருள் அற்ற வெறும் நிழல் கிரகம் என்பதும் ஒரு காரணம்.
எதையுமே நேரிடையாகச் சொல்லாமல் மறைபொருளாகச் சொல்லும் நமது கிரந்தங்களில் ஞானிகள் 3,11 மிடங்களில் இருக்கும் இராகு கேதுக்கள் நன்மையைச் செய்வார்கள் என்று சொல்வதன் உண்மையான சூட்சுமம் என்னவெனில், மேற்சொன்ன இடங்களில் இராகுவோ கேதுவோ இருக்கும் நிலையில் இந்த பாவங்களின் நேர் எதிர் பாவமான இலக்கினத்தின் அதிர்ஷ்ட வீடுகள் ஐந்து மற்றும் ஒன்பதில் இதன் மறுமுனைக்கிரகம் இருந்து நல்ல பலன்களை மற்றொரு முனையான 3,11 மிடங்களுக்கு தரும் என்பதுதான்.
அதாவது மூன்றாமிடத்தில் ராகு இருக்கும் நிலையில் லக்னத்தின் அதிர்ஷ்ட பாவமான ஒன்பதில் கேது இருந்து ராகுவின் மூலமாக நல்ல பலன்களை எடுத்துத் தரும். பதினொன்றில் ராகு இருக்கும் நிலையில் இன்னொரு அதிர்ஷ்ட ஸ்தானமான ஐந்தாமிடத்தில் கேது இருந்து அந்த பாவ நன்மைகளைச் செய்யும்.
இன்னொரு சூட்சுமத்தையும் சொல்கிறேன்...
எப்பொழுதுமே இராகுவிற்கு பலன் கூறும் போது கேது இருக்கும் இடத்தின் தன்மையிலும், அதன் பார்வையிலும், கேதுவிற்கு பலன் சொல்லும் போது இராகு இருக்குமிடத்தின் தன்மையிலும், அதன் பார்வையிலும் பலன் சொல்லுங்கள். மிகச் சரியாக வரும்.
மற்ற ஏழு கிரகங்களும் அவை இருக்கும் நட்சத்திர நாதனின் அடிப்படையிலேயே தனது தசையில் முதன்மைப் பலன்களைச் செய்யும் நிலையில் இராகு கேதுக்கள் சார அடிப்படையில் முதன்மைப் பலன்களை செய்வது இல்லை. இது எனது நீண்ட ஆய்வில் கிடைத்த தீர்க்கமான முடிவாகும். இதனை நீங்கள் நன்கு அறிந்த ஜாதகங்களுடன் ஒப்பிட்டுப் பார்தால் உங்களுக்கும் இந்த உண்மை புரியும்.
இராகு கேதுக்கள் முதலில்...
தன்னுடன் இணைந்த கிரகம், பிறகு
தான் இருக்கும் வீட்டின் அதிபதி, அடுத்து
தன்னைப் பார்த்த கிரகம், பின்னர்
தான் பெற்ற சாரநாதன்,
இறுதியாக
தனக்கு கேந்திரங்களில் இருக்கும் கிரங்களின் தன்மை
அல்லது
தான் சாரமளித்த கிரகங்களின் தன்மை
என்ற வரிசைப்படியே தனது தசையில் பலன்களைச் செய்கின்றன.
மற்ற கிரகங்களின் இருப்பை நாம் எப்போதும் உணருகின்றோம். அவற்றை வெறுங்கண்ணால் பார்க்கவும் செய்கின்றோம் எனும் நிலையில் இராகு கேதுக்களை நாம் கிரகண காலங்களில் மட்டுமே பார்க்க முடியும்.
இன்னொரு வினோத விளைவாக திருக்கணித பஞ்சாங்கம் சரியா? வாக்கியப் பஞ்சாங்கம் சரியா? என்ற விவாதத்தில் பெரும்பாலானோரை திருக்கணிதத்தின் பக்கம் சாய வைத்ததும் இந்த இராகு கேதுக்கள் தான்.
எப்படி எனில் திருக்கணிதத்திற்கும், வாக்கியத்திற்கும் கிரகங்கள் அமைந்திருக்கும் டிகிரி அளவில் சில வித்தியாசங்கள் உள்ளன. இவற்றில் எது சரி என்பதைச் சரி பார்க்க, சாதாரண மனிதராகிய நாம் மகாவிஷ்ணுவைப் போல விஸ்வரூபம் எடுத்து வானத்துக்கு மேலே நின்று பார்த்துத்தான் கிரகங்களின் சரியான இருப்பிடத்தை அடிக்கணக்கில் துல்லியமாக அளவெடுக்க முடியும்.
ஆனால் சூரிய சந்திரர்களை மறைக்கும் இராகு கேதுக்களின் இருப்பு சிறிது மாறினாலும் குறிப்பிட்ட நேரத்தில் கிரகணம் வராது என்பது உண்மை.
இதன் அடிப்படையில் வாக்கியப் பஞ்சாங்க கணிப்புகள் சிறிது பிசகுவதால் சமீபத்திய வருடங்களில் திருக்கணித கிரகண நேரத்தையே வாக்கியப் பஞ்சாங்கங்கள் எடுத்து வெளியிடுகின்றன.
செவ்வாய், சனி ஆகிய இரு பாவக் கிரகங்களின் தொடர்பையோ இணைவையோ, பார்வையையோ பெற்ற இராகு கேதுக்கள் மிகக் கடுமையான பலன்களைச் செய்யும். ஆனால் இவ்விரு கிரகங்கள் நீசம் பெறும் நிலையில் மேஷ கடகத்தில் அவர்களுடன் இணைந்து இருக்கும் இராகு கெடுபலன்களைக் குறைத்துத்தான் செய்கிறார்.
மேலும் அஷ்டமாதிபத்தியம் பெற்ற பாவக் கிரகங்களின் இணைவைப் பெற்ற நிழல் கிரகங்கள் அல்லது எட்டாமிடத்தில் இருந்து பாவ கிரகங்களின் இணைவைப் பெற்ற இராகு கேதுக்கள் ஆகிய இரண்டு நிலையும் மிகக் கடுமையானவை.
இந்த அமைப்பில் இருக்கும் இராகு கேது தசைகள் மிகவும் மோசமான பலன்களைத் தரும். இந்த நிலைகள் இலக்கினத்திற்கு மட்டுமல்ல சந்திரனுக்கு எட்டு என்று இருந்தாலும் பொருந்தும் .
இன்னொரு சூட்சும நிலையாக ஒரு ஜாதகத்தில் இலக்கினாதிபதி கெட்டு அல்லது முற்றிலும் வலுவிழந்த நிலையில் இருந்து இராகு கேதுக்கள் இலக்கினாதிபதியோடு சம்பந்தப்படாமலேயே இலக்கினத்தில் இருக்கும் நிலையில் நிழல் கிரகங்களின் தசை நடைபெற்றால் ஜாதகரின் உடல் நலம் மற்றும் மனநலம் இரண்டையும் நாசமாக்கும்.
இலக்கினாதிபதி பாவ கிரகங்களோடு இணைந்து அவர்களது பிடியில் இருந்தால் நிலைமை இன்னும் மோசமாகும்.
மேலும் இலக்கினத்தோடும், அஷ்டமாதிபதியோடும் ஒரே நேரத்தில் இராகு சம்பந்தப்படும் நிலையில் ஜாதகரை சுயமரணம் எனும் முடிவைத் தேட வைக்கிறார். இப்படி ஒருவர் தற்கொலை முடிவெடுக்கும் நிலையில் அஷ்டமாதிபதியை இராகு பகவான் மிகவும் நெருங்கி முற்றிலும் பலவீனப்படுத்தி இருப்பார்.
மேற்கண்ட அமைப்பில் எட்டுக்குடையவன் பாவ கிரகமாக இருந்தாலோ இவர்களுடன் ஆறுக்குடையவரும் சம்பந்தப்பட்டிருந்தாலோ தற்கொலை என்பது கொடூரமான விபத்தாக மாறலாம்.
இன்னும் சில நிலைகளை அடுத்த மாதம் பார்க்கலாம்.....
சாயா கிரகங்களின் சூட்சும நிலைகள்-2

இராகு கேதுக்களைப் பற்றிய சில முக்கியமான சூட்சும நிலைகளை சென்ற மாதம் பார்த்தோம். அதன் தொடர்நிலையை இப்போது பார்க்கலாம்...
ஒரு பாவத்தில் இராகு கேதுக்கள் எப்போது அமர்கின்றனவோ, அது முதல் அந்த பாவ ஆதிபத்தியம், மற்றும் பாவாதிபதியின் தன்மைகள், அதன் காரகத்துவங்களை சாயாக்கிரகங்கள் ஆளுமை செய்கின்றன அல்லது கட்டுப்படுத்துகின்றன.
அதிலும் குறிப்பாக சில நிலைகளில் இராகு இருக்கும் பாவத்தின் அதிபதி தனது ஆதிபத்திய பலனையும், காரகத்துவங்களையும் தரும் வலிமையை இழந்து விடுறார்.
அதே நேரத்தில் அந்த வீட்டில் அமர்ந்த இராகு தனது தசையில் அந்த பாவத்தின் ஆதிபத்தியப் பலனையும், அந்த வீட்டின் அதிபதி கிரகத்தின் காரகத்துவப் பலனையும் செய்வார்.
மேலும் இராகு கேதுக்கள் அமர்ந்த இராசிநாதனின் தசை ஜாதகருக்கு வாழ்நாளில் வர இயலாத நிலை இருந்தால் முழுக்க முழுக்க அந்த பாவத்தில் அமர்ந்த நிழல் கிரகங்கள்தான் அந்த பொறுப்பை எடுத்துச் செய்கின்றன.
அதே போலத்தான் இராகுவுடன் இணைந்த கிரகத்தின் நிலையும்....! ராகுவுடன் இணைந்த கிரகத்தின் ஆதிபத்தியம் மற்றும் காரகத்துவங்களையும் இராகுதான் தனது தசையில் எடுத்துச் செய்வார்.
இன்னொரு நிலையாக இராகு அமர்ந்த பாவாதிபதி தனது தசையில் பலன்களை
மாற்றி மாறுபட்டதாகத் தருவார். அதாவது ஜோதிடரின் கணிப்பில் இந்த தசை நன்றாக இருக்காது எனும் நிலையில் அந்த தசை நற்பலன் தருவதும், நன்மைகள் செய்யும் என்ற கணிப்பில் கெடுதல்களைச் செய்து குழம்பச் செய்வதும் இராகு கேதுவின் வேலைதான்.
ஒரு கிரகத்தின் தசை எவ்வாறு பலன் தரும் என்று கணிக்கும் முன்பு அந்த கிரகத்தின் வீடுகளில் இராகு கேதுக்கள் அமர்ந்து அந்த பாவம் கெட்டுப் போயிருக்கிறதா என்பதைக் கவனித்த பின்னரே பிறகு அந்த தசையைப் பற்றிய பலன்களைச் சொல்ல வேண்டும்.
உதாரணமாக மிதுன இலக்கினத்திற்கு செவ்வாய் தசை நன்மைகளை அளிக்காது. மிதுனத்திற்கு செவ்வாய் 6, 11க்குடைய பாவி என்பதாலும், இலக்கினாதிபதி புதனுக்கு அவர் ஆகாதவர் என்பதாலும் தசையின் ஒரு பகுதியான மூன்றரை வருடங்கள் தன் ஆறாமிடத்துப் பலனை மிகக் கடுமையாகத் தந்து ஜாதகரை வாட்டி வதக்குவார்.
ஆனால் ஆறாமிடமான விருச்சிகத்தில் இராகுவும் சனியும் இணைவு பெற்றிருந்து, செவ்வாய் வேறு எங்கிருந்து தசை நடத்தினாலும் ஆறாமிட கொடிய பலன்கள் நடக்காது.
ஏனெனில், ஆறாமிட கெட்ட பலன்களை இராகு ஆளுமை செய்கிறார். மேலும் ஆறாமிடத்தில் இரண்டு பாவக்கிரகங்கள் இருந்து அந்த இடத்தைக் கெடுக்கிறார்கள். எனவே செவ்வாய் தசை நன்மை செய்யும்.
புரியவில்லையா? நிதானமாக ஒன்றுக்கு இரண்டு முறை திரும்பவும் படியுங்கள். புரியும்...!
அதே நேரத்தில் அடுத்து வரும் இராகு தசையில் முழுமையான கெடுபலன்கள் நடக்கும். ஜாதகரை இராகுதசை பிளாட்பாரத்திற்கு கொண்டு வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை.
ஏனென்றால், இராகு செவ்வாயின் வீட்டில் இருக்கிறார். விருச்சிகத்தில் அவர் உச்சபலம் பெறுவார். ( பாவக்கிரகங்கள் நன்மை செய்ய வேண்டுமானால் ஸ்தான பலம் மற்றும் நேர்வலு அடையக் கூடாது. எனது பாவக்கிரகங்களின் சூட்சுமவலுத் தியரிப்படி சூட்சுமவலு தான் பெற வேண்டும்.) அஷ்டமாதிபதி சனியின் இணைவு வேறு. அதாவது ஆறாமிட செவ்வாயின் பலனை இராகு முழுமையாகத் தன் தசையில் செய்வார்.
இன்னும் ஒரு சூட்சும நிலையாக ஆட்சி பெற்ற கிரகத்துடன் இருக்கும் இராகு கேதுக்கள் அது மூன்று பதினோராமிடங்களாக இருந்தாலும் நல்ல பலன்களைத் தருவது இல்லை.
அது ஏனெனில், இப்போது நீங்கள் உங்களின் சொந்த வீட்டில் வலுவாக இருக்கும் நிலையில் இன்னொருவர் உங்கள் வீட்டை ஆக்கிரமிக்க வருகிறார் என்றால் என்ன செய்வீர்கள்..?
எதிர்த் தாக்குதல் நடத்துவீர்கள்... இல்லையா...?
எதிரியும் வலுவானவராக இருந்தால் என்ன நடக்கும்...? சண்டையில் இருவருமே களைத்துப் போய் உங்களைச் ஜெயிக்க முடியாமல் அவரும், அவரைத் துரத்த முடியாமல் நீங்களும் அதே வீட்டில் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு குடியிருப்பீர்கள்.
அதுபோலத்தான்...
தான் ஆக்கிரமிக்கும் வீட்டின் அதிபதி அங்கேயே வலுவாக இருந்து தனக்கு எதிர்ப்புக் காட்டி நெருக்குதல் தருவதால், எதிர்ப்பு வலுத்த நிலையில் இராகு கேதுக்களும் நல்ல பலன் செய்யாது. நிழல்கிரக ஆக்கிரமிப்பால் ஆட்சி பெற்ற கிரகமும் அங்கே நல்ல பலன் செய்ய முடிவது இல்லை.
ஆனால் ஒரு நீசக்கிரகம் இராகுவுடன் இணையும் போது, ஏற்கனவே அந்தக் கிரகம் பலவீனம் பெற்றிருக்கும் நிலையில் முற்றிலுமாக இராகுவிடம் சரணடைந்து விடுவதால் அந்தக் கிரகத்தின் காரகத்துவங்களையும் ஆதிபத்தியங்களையும் முற்றிலுமாகக் கவர்ந்து, எதிர்க்க யாரும் இல்லாத நிலையில், தான் இருக்கும் பாவத்தின் தன்மைகளைப் பொறுத்து இராகு பலன்களைச் செய்கிறார்.
அடுத்த மாதமும் தொடருவோம்.....
சாயா கிரகங்களின் சூட்சும நிலைகள்-3

ராகு கேதுக்களின் நுண்ணிய செயல்பாடுகள் மற்றும் சூட்சுமங்களை இந்த மாதமும் தொடர்ந்து பார்க்கலாம் ............
நவக்கிரகங்களில் ராகுபகவான் மட்டுமே ஜோதிடர்களின் தலையைச் சுற்ற வைத்து திணற வைக்கும் கிரகம் ஆவார். ஏனெனில் ராகு இருக்கும் சில நிலைகளில் அவரது தசை நன்மையைச் செய்யுமா அல்லது தீமை தருமா என்று கணிப்பது ஜோதிடர்களுக்கு பெரும் சவாலாகவே அமையும்.
அதிலும் ராகுவோ, கேதுவோ சுயச்சாரத்தில் இருந்து விட்டால் வேறு வினையே வேண்டாம். பலன் சொல்லுவது குதிரைக் கொம்புதான்.........
மற்றுமொரு அமைப்பாக குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டோருக்கு ராகு தசை நடப்பில் இருந்தால் அக்குடும்பத்தில் பிரிவு, துயரம், மரணம், தரித்திரம் போன்ற பலன்கள் நடக்கும்.
ஏனெனில் ராகு என்பது ஒரு இருட்டு. குடும்ப உறுப்பினர்களில் பெரும்பாலோருக்கு ராகு தசை நடக்கிறது என்றால் குடும்பமே இருட்டில் இருக்கிறது என்றுதான் பொருள்.
இது போன்ற ஒட்டுமொத்த சூழ்நிலையில் ஜாதகத்தில் ராகு ஆமேடம் எருது சுறா எனப்படும் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், போன்ற ஸ்தானங்களில் இருந்தாலும் சரி, 3, 11 மிடங்களாக இருந்தாலும் சரி... கெட்ட பலன்கள்தான் நடக்கும்.
நம்முடைய மூல நூல்களில் ராகு நன்மை செய்வார் என்று கூறப்பட்டிருக்கும் அனைத்து அமைப்புகளும் ஒரு ஜாதகத்தில் இருந்து ராகு தசையில் ஜாதகர் கஷ்டப்படுகிறார் என்றால் உடனடியாக அவருடைய குடும்ப உறுப்பினர்களின் ஜாதகங்களை வாங்கிப் பாருங்கள். நிச்சயம் அவர்களில் வேறு எவருக்காவது ராகுதசை நடப்பில் இருக்கும்...
என்னுடைய அனுபவத்தில் தாய், தந்தை மற்றும் குழந்தைகளுக்கு ராகுதசை அல்லது புக்தி நடப்பில் இருந்த போது குடும்பமே வறுமை மற்றும் வேறு வகையான பிரச்னைகளில் சிக்கி சிதறுண்டு போன நிலைகளை பார்த்திருக்கிறேன்.
இந்தக் காரணத்தினால்தான் திருமணப் பொருத்தம் பார்க்கும் போது எதிர்காலத்தில் இருவருக்கும் ராகுதசை சந்திப்பு இருக்கக் கூடாது என்பதை நான் முக்கியமாகப் பார்க்கிறேன்.
அடுத்து இன்னொரு சூட்சுமத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்....
நமது கிரந்தங்களில் சொல்லப்படும் காரகன் காரக பாவத்தில் இருக்கும் �காரஹோ பாவ நாஸ்தி� எனும் நிலையை எடுத்துச் செயல்படுத்துவது பெரும்பாலும் ராகு கேதுக்கள் தான்.
உதாரணமாக, செவ்வாய் சகோதரகாரகன். அவர் சகோதர ஸ்தானமான மூன்றாமிடத்தில் வலுவுடன், சுபர் பார்வையின்றி இருந்து தசை நடத்தினால் நிச்சயம் சகோதரபிரிவு, சகோதர விரயம், உடன்பிறப்பால் தொல்லை போன்ற பலன்களைச் செய்வார்.
இதில் செவ்வாய் தசை ஏழுவருடம் என்ற நிலையில் மிகக் கடுமையான சகோதர பலனை ஏழு வருடங்களில் எப்போது செய்வார் என்று கணிப்பது மிகவும் கடினம்.
இந்த நிலையில் ராகுவோ கேதுவோ செவ்வாயின் வீடுகளில் இருந்தாலோ, அல்லது செவ்வாயின் பார்வையைப் பெற்றிருந்தாலோ, அல்லது வேறு ஏதேனும் ஒரு வகையில் செவ்வாயின் சம்பந்தத்தைப் பெற்றிருந்தாலோ அவர்களின் புக்திகளில் சகோதர விரயம் போன்ற கடுமையான பலன்கள் இருக்கும்.
அதிலும் ராகுவுக்கோ கேதுவுக்கோ ஆறு எட்டாமிட சம்பந்தம் இருந்தால் அவர்களது புக்திகளில் சகோதரனை மாரகம் செய்து �காரஹோ பாவ நாஸ்தி� யை செயல்படுத்துவார்கள்.
மேலும் குழந்தைப் பருவத்தில் வரும் ராகு தசை சிறுவயது சுக்கிர தசையைப் போலவே நன்மைகளைத் தராது.
�குட்டிச் சுக்கிரன் குடியைக் கெடுக்கும்� �குட்டிச் சுக்கிரன் கொட்டிக் கவிழ்க்கும்� என்பது போன்ற சிறுவயது சுக்கிர தசையைப் பற்றிய பழமொழிகளை நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள் .
அது ஏனெனில்...
சுக்கிரன் காமத்திற்கு காரணமான கிரகம். சிறு வயதில் உடல் ரீதியாக காமத்திற்கு தயாராகாத நிலையில் வரும் சுக்கிர தசையில் ஜாதகர் இனம் புரியாத பாலியல் உணர்வுகளால் தூண்டப்பட்டு மனரீதியாக அலைக்கழிக்கப் படுவார்.
காமத்திற்கு உடலும் தயாராகாமல் மனமுதிர்ச்சியும் இல்லாத இளம் பருவத்தில் வரும் சுக்கிரதசை ஜாதகரை காமத்தைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கத் தூண்டும் மற்றும் வேறுவழியில் இட்டுச் செல்லும் என்பதால்தான் நமது கிரந்தங்கள் சுக்கிரதசை நடுத்தர வயதில் அதாவது காமத்திற்கு அடிமையாகாத 32 வயதிற்கு மேல் வரவேண்டும் என்று குறிப்பிடுகின்றன.
அதுபோலவே ராகு என்பவன் ஒருநிலையில் ஞானகாரகனாகவும் இன்னொரு நிலையில் சாதுரியமாக ஏமாற்றும் கிரகமாகவும் செயல்படுவார். அதாவது தான் ஏமாறுகிறோம் என்பதே தெரியாமல் தன்னிடம் சந்தோஷமாக ஏமாந்து செல்பவர்களை உண்டாக்கும் திறமையை ராகு அளிப்பார்.
மேலே கண்ட ஞான, மற்றும் ஏமாற்றும் இரண்டு நிலைகளையுமே சிறு வயதில் செய்ய முடியாது என்பதும் ராகுதசை சிறு வயதில் பலனளிக்காது என்பதற்கு ஒரு காரணம்.
சிறு வயதில் நமக்கு பள்ளிப் படிப்பைத் தவிர வேறு எந்த வேலைகளும் இக்காலத்தில் இல்லை என்பதால்தான் அதற்கான முரண்பாடான ஞானகாரக ராகு தசை நடக்கும் போது கல்வியில் தடை, படிப்பு சரிவர வராதது போன்ற பலன்கள் நடக்கின்றன.
அடுத்து இன்னொரு நிலையாக இளம் பருவத்தில் காமத்தை அறிமுகப் படுத்துவதும், காதல் என்ற பெயரில் கற்பிழக்கச் செய்வதும் இந்த ராகு கேதுக்கள் தான்.
அதிலும் பருவ வயதுப் பெண்களுக்கு ராகுதசையோ புக்தியோ நடைபெறுமாயின் பெற்றோர்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும். ஆறு மற்றும் எட்டில் இருக்கும் ராகுதசை புக்தி அல்லது அஷ்டமாதிபதி தொடர்பை பெற்ற ராகு கேதுக்களின் தசை புக்திகளில் கண்டிப்பாக ஒரு இளம்பெண் காதல் என்ற பெயரில் ஏமாறுவார்.
தனக்கு முற்றிலும் பொருத்தமில்லாத, தன்னை விட அனைத்து தகுதிகளிலும் குறைந்த நேர்மாறன ஒருவரை ஒரு இளம் பெண் தேர்ந்தெடுத்து அவரிடம் தன் மனம், உடல் இரண்டையும் ஒப்படைப்பதும், அவருடன் ஓடிப் போய் வாழ்க்கையைத் தொலைப்பதும் இந்த ராகு கேதுக்களின் திருவிளையாடல் தான்....
நன்கு படித்த தகுதி வாய்ந்த ஒரு பெண் ஒரு குறைந்த படிப்பு மட்டுமே படித்த மெக்கானிக்கையோ, ஆட்டோ டிரைவரையோ அல்லது ஒன்றுமே செய்யாமல் ஊர் சுற்றித் திரிபவரையோ காதலிக்கிறாரா..? அந்த பெண்ணின் ஜாதகத்தை வாங்கிப் பாருங்கள். அதில் எட்டாமிடத்தின் சம்பந்தமோ அல்லது அஷ்டமாதிபதியின் சம்பந்தமோ பெற்ற ராகு கேதுக்கள் இருப்பார்கள்.
இன்னும் சில நிலைகளை அடுத்த மாதம் பார்க்கலாம்......
சாயா கிரகங்களின் சூட்சும நிலைகள்-4

ராகு கேதுக்களைப் பற்றிய மேலும் சில நிலைகளை இந்த மாதமும் தொடர்ந்து பார்க்கலாம்...
பொதுவாக ராகு சனியைப் போலவும் கேது செவ்வாயைப் போலவும் பலன் அளிப்பார்கள் என்று நமது மூல நூல்களில் ஞானிகளால் சொல்லப் பட்டிருக்கிறது.
இதில் மறைந்திருக்கும் சூட்சுமம் என்னவெனில்....
சனியின் நண்பர்களான சுக்கிரன் புதன் ஆகியோரின் லக்னங்களான ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மற்றும் மகரம், கும்பம் ஆகிய லக்னங்களில் பிறந்தவர்களுக்கு ராகு நன்மைகளைச் செய்வார்.
செவ்வாயின் நட்புக் கிரகங்களான சூரியன் சந்திரன் குரு ஆகியோரின் லக்னங்களான கடகம் சிம்மம் தனுசு மீனம் மற்றும் மேஷம் விருச்சிகம் ஆகிய ஆறு லக்னங்களில் பிறந்தவர்களுக்கு கேது நன்மைகளைச் செய்வார் என்பதுதான்.
மேற்படி இரு பிரிவு லக்னங்களில் பிறந்தவர்களுக்கும் அவரவர் லக்னங்களுக்கு ஏற்றபடி நல்ல அமைப்புகளில் ராகு கேதுக்கள் அமைந்து விட்டால் மிகப் பெரிய நன்மைகளைச் செய்கின்றன.
அதோடு இன்னும் ஒரு சூட்சுமமாக மிதுன லக்னத்திற்கு மட்டும் ராகுபகவான் கெடுதல்களைச் செய்யாத யோகர் எனும் நிலை பெறுவார்.
பொதுவாக மிதுனத்திற்கு சுக்கிரன் மட்டுமே சுபர் ஆகிறார். பாக்யாதிபதியான சனி பகவான் அஷ்டமாதிபத்தியமும் அடைவதாலும் லக்னாதிபதியான புதன் நான்காமிட கேந்திரத்திற்கு அதிபதியாகி கேந்திராதிபத்திய தோஷம் அடைவதாலும் இருவருமே சுபர் எனும் நிலை பெற மாட்டார்கள்.
அதோடு இயற்கைப் பாவக் கிரகமான சனிபகவான் மிதுனத்திற்கு ஒன்பதாம் பாவமான திரிகோணத்திற்கு அதிபதியாவதால் ராகு மட்டுமே மிதுனத்திற்கு யோகம் செய்வார். (சுபர் வேறு யோகர் வேறு என்பதை புரிந்து கொண்டு படியுங்கள்.)
என்னுடைய முப்பதாண்டு கால ஆராய்ச்சியில் மிதுன லக்னத்தவர்களுக்கு ராகு கெட்ட இடத்தில் இருந்தாலும் அல்லது பாவர்களுடன் கூடி தசை நடத்தினாலும் முற்றிலும் கெடுதல்கள் செய்வது இல்லை.
பெரும்பாலான வடமொழிக் கிரந்தங்கள் ராகுவிற்கு மிதுனம் உச்ச வீடு என்று சொல்கின்றன. இது கூட மிதுனத்திற்கு ராகு யோகம் செய்வதன் காரணமாக இருக்கலாம்.
மேலும் ராகு கேதுக்களின் ஆட்சி உச்ச நீச நிலைகளைப் பற்றி பல விதமான கருத்துக்கள் உள்ளன.
ராகு சனியைப் போல செயல்படுபவர் என்பதால் சனியின் ஸ்திர வீடான கும்பம் ராகுவின் ஆட்சி வீடு எனவும், கேது செவ்வாயைப் போல பலன்களைத் தருவார் என்பதால் செவ்வாயின் ஸ்திர வீடான விருச்சிகம் கேதுவிற்கு ஆட்சி வீடு எனவும் சில வடமொழி நூல்கள் குறிப்பிடுகின்றன.
ஆனால் ஏற்கனவே பருப்பொருளுடைய முழுமையான கிரகங்கள் ராசிமண்டலத்தில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தும் இடங்கள் நம் ஞானிகளால் அறிந்து பகுக்கப்பட்டு ஏழு கிரகங்களுக்குமான ஆட்சி வீடுகளாக பிரித்து ஒதுக்கப்பட்டு விட்ட நிலையில் பருப்பொருளே இல்லாத வெறும் நிழல்களான ராகு கேதுக்களுக்கு அவைகளில் இரண்டை ஒதுக்குவது அர்த்தமற்றதாகவும் நமது ஒப்பற்ற ஞானிகளன்றி வேறு எவரோ செய்த இடைச்சொருகலாகவும் எனக்குத் தோன்றுகிறது.
எனவே ராகு கேதுக்களுக்கு ஆட்சி வீடுகள் என்ற ஆராய்ச்சியே தவறு என்றும் சொல்லத் தோன்றுகிறது.
ஆனால், பராசர ஹோரையில் மகரிஷி பராசரர் ராகுவிற்கு ரிஷபம் உச்சவீடு, கடகம் மூலத்திரிகோணம், கன்னி ஆட்சி வீடு என்று கூறுகிறார். மகரிஷி காளிதாசரும் தனது உத்தர காலாம்ருதத்தில் ராகுவிற்கு ரிஷபம் உச்ச வீடு என்கிறார்.
பெரும்பாலான தென்னிந்திய மூல நூல்களில் ராகுவிற்கு விருச்சிகம் உச்சம் ரிஷபம் நீசம் என்றே சொல்லப்பட்டிருக்கிறது.
என்னுடைய நீண்ட கால அனுபவத்தின்படியும் பாவக் கிரகங்கள் நேர்வலுவடையக் கூடாது, அப்படி வலுவடைந்து ஸ்தான பலம் பெற்றால் கெடுப்பார்கள் என்ற எனது �பாவக் கிரகங்களின் சூட்சும வலு� தியரிப்படியும் ரிஷப ராகு எவரையும் கெடுத்தது இல்லை. நன்மைகள்தான் செய்கிறது.
அதே நேரத்தில் விருச்சிக ராகு தசையில் கெட்ட பலன்கள்தான் நடக்கின்றன என்பதால் விருச்சிகம் ராகுவிற்கு உச்சம்... ரிஷபம் ராகுவிற்கு நீசம் என்றே நான் கணிக்கிறேன்.
மேலும் கால புருஷ தத்துவத்தின்படி நமக்கு ஒளி வழங்கும் மூல ஒளிக் கிரகங்களான சூரியனுக்கும் சந்திரனுக்கும் கால புருஷனின் முதல் இரண்டு வீடுகளான மேஷமும் ரிஷபமும் உச்ச வீடுகளாயின.
இந்நிலையில் சந்திரனால் உருவாகும் நிழல் கிரகமான ராகுவிற்கும் சந்திரனின் உச்ச வீடான ரிஷபத்தை பங்கிட்டு அளிப்பது இருட்டுக்கும் வெளிச்சத்திற்கும் ஒரே இடம் என்ற நிலையில் பொருத்தமற்றது என்பது என் கருத்து.
அதே நேரத்தில் இருளும் ஒளியும் எதிர் எதிர் நிலை கொண்டவை என்பதாலும் விருச்சிகத்தில் வேறு எந்த கிரகமும் உச்சநிலை அடைவதில்லை என்பதாலும் ரிஷபத்தின் நேர் எதிர் வீடான விருச்சிகத்தை ராகுவிற்கு உச்ச வீடாகக் கொள்வதே பொருத்தமாகவும் இருக்கும். (இது பற்றிய இன்னும் சில சூட்சும விளக்கங்கள் இருக்கின்றன. அவற்றை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன்.)
அடுத்து ராகு கேதுக்களுக்கு 3 7 11 மிட பார்வை உண்டு என்று சிலர் கூறுகின்றனர். இதைப் பற்றியும் நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். கிரகங்களின் பார்வை என்பதே அவற்றின் ஒளி வீச்சுத்தான் என்பதை ஏற்கனவே நான் விளக்கியிருக்கிறேன்.
அதன்படி சுயஒளியும் இல்லாத, ஒளியை பிரதிபலிக்கவும் முடியாத வெறும் இருட்டுக்களான ராகு கேதுக்களுக்கு பார்வை பலம் உண்டு என்பது இயல்புக்கு மாறானது. எனவே ராகு கேதுக்களுக்கு பார்வை பலம் இல்லை என்பதே எனது கருத்து.
ஆயினும் ராகு கேதுக்கள் ஒருவருக்கு ஒருவர் நேர் எதிராக 180 டிகிரியில் சுற்றி வருபவை என்பதால் ஒன்று அடுத்ததை... அதாவது அது நிற்கும் ஏழாம் பாவத்தை நிச்சயம் பாதிக்கும். அதனை ஏழாம் பார்வை என்பது பொருத்தமற்றது.
ராகு கேதுவை ஏழாம் பார்வையாக பார்க்கிறது கேது ஏழாம் பார்வையாக ராகுவை பார்க்கிறது என்று சொல்லக் கூடாது. அது தவறு.
எனது இந்தக் கருத்தை மறுப்பவர்கள் ராகுவின் மூன்றாம் பார்வையில் இந்த பலன் நடந்தது, பதினோராம் பார்வையால் இந்த பாவம் பாதிக்கப்பட்டது என்று ஒரு ஜாதகத்தை உதாரணமாகச் சொல்வீர்களேயானால் நான் உங்களுக்கு சொல்வது...
அந்த ஜாதகத்தை இன்னும் நன்றாக கவனமுடன் பாருங்கள். அந்தச் செயலோ அந்த பாவமோ வேறு ஏதேனும் ஒரு வகையில் தான் பாதிக்கப் பட்டிருக்கும் என்பதை நீங்களே உணருவீர்கள். இது உறுதி.
நமது ஜோதிடத்தின் மூலநாயகனும், தன் நேர் எதிரில் வருபவர்களை அஸ்தமனமாக்கி வலுவிழக்க வைப்பவனும், நாம் அனைவரும் தோன்றக் காரணமான முழுமுதல் ஜோதியான சூரியனையே மறைத்து பலமிழக்க வைப்பவரான ராகு பகவானின் இன்னும் சில சூட்சுமங்களை அடுத்த மாதமும் பார்க்கலாம்.....
சாயா கிரகங்களின் சூட்சும நிலைகள்-5

நமது பூமி உள்ளிட்ட அனைத்துக் கிரகங்களும், பூமியில் உயிரினங்களும் தோன்றக் காரணமான சூரியனின் ஒளியையே சிறிது நேரம் மறைத்து பூமிக்கு கிடைக்காமல் தடுக்கும் ஆற்றல் ராகு கேதுக்களுக்கு இருப்பதாலேயே நமது மூல நூல்கள் ஒன்பது கிரகங்களின் வலிமையை கணக்கிடும்போது ராகு கேதுக்களுக்கு முதலிடம் அளிக்கின்றன.
ஒரு கிரகத்தின் காரகத்துவம் மற்றும் ஜாதகத்தில் அந்தக் கிரகம் ஏற்றுள்ள ஆதிபத்தியத்தின் தன்மைகளைத் தரவிடாமல் முழுமையாகத் தடுக்கும், அல்லது குறைக்கும் ஆற்றல் நவக்கிரகங்களில் ராகுவிற்கு மட்டுமே உண்டு.
சூரியனுக்கு அருகே ஒரு குறிப்பிட்ட டிகிரிக்குள் நெருங்கும் கிரகங்கள் அஸ்தங்கம் எனும் பெயரில் எவ்வாறு வலுவிழக்கின்றனவோ, அதே போல் ராகுவிடம் நெருங்கும் கிரகமும் வலுவிழக்கும். குறிப்பாக ராகுவிற்கு எட்டு டிகிரிக்குள் நெருங்கும் கிரகம் ராகுவினால் சுத்தமாக பலவீனமாக்கப்பட்டு தனது இயல்புகள் அனைத்தையும் பறி கொடுத்து விடும்.
அதாவது அதிக ஒளியையும், ஒளியே இல்லாத இருட்டையும் நெருங்கும் கிரகங்கள் தங்களின் சுயத்தன்மையை இழப்பார்கள்.
உதாரணமாக, ராகுவிடம் மிக நெருங்கும் குருபகவான் குழந்தைகளையும், அதிகமான பணவசதியையும், நேர்மையான குணத்தையும், ஆன்மீக ஈடுபாட்டையும் தரும் சக்தி அற்றவர்.
ராகுவுடன் நெருங்கி இணையும் சுக்கிர பகவான் பெண் சுகத்தையும், உல்லாசத்தையும், காதல் அனுபவம் மற்றும் சுக வாழ்வையும் தர மாட்டார்.
செவ்வாய் பகவான் தன் இயல்புகளான கோபம் வீரம் வெறித்தனம் கடின மனம் சகோதரம் போன்றவற்றை இழப்பார்.
ராகுவிடம் சரணடையும் சனியால் வறுமை, தரித்திரம், கடன், நோய், உடல் ஊனம் போன்றவற்றைத் தர இயலாது. சந்திரன் மனதிற்கும், மனம் எடுக்கும் முடிவுகளுக்கும் காரணமானவர் என்பதால் ராகுவிடம் நெருங்கும் போது மனதைக் கட்டுப்படுத்தும் ஆற்றலை ஜாதகர் இழந்து மனநலம் குன்றுவார். தாயன்பு பறிபோகும்.
புதனுடன் இணையும் ராகுவால் நிபுணத்துவம் குறையும். அறிவாற்றல் அளவோடுதான் இருக்கும். கணிதத்திறமை காணாமல் போகும். சூரியன் ஆன்ம பலத்தையும், அரசுத்தொடர்பு, அரசலாபம், தந்தையின் ஆதரவு போன்றவற்றைத் தரும் வலிமையை இழப்பார்.
ஒரு கிரகம் உச்சம் மூலத்திரிகோணம் ஆட்சி போன்ற எத்தகைய வலிமை நிலையில் இருந்தாலும் சரி. அது ராகுவுடன் மிகவும் நெருங்கினால் அத்தனை வலிமையையும் இழக்கும். நான் மேலே சொன்னவைகளை நீங்கள் நன்றாக அறிந்த ஜாதகத்தில் ஒப்பிட்டு ஆராய்ந்து பாருங்கள். மிகச் சரியாக இருக்கும்.
உதாரணத்திற்கு நம் காலத்தில் வாழ்ந்த தெய்வம், காமாட்சி என்ற பெயர் தவிர பெண்ணின் வாசனை கூட அறியாமல், துறவுக்கு உண்மை அர்த்தமாய் சொகுசு வாழ்க்கை தவிர்த்து, நம் கண்முன் நடமாடிய மகான் காஞ்சி மகாபெரியவரின் அவதார ஜாதகத்தில் மீனத்தில் உச்ச சுக்கிரனுடன் ராகு இணைந்ததைச் சொல்லலாம்.
சூரியனுடன் இணைந்து அஸ்தங்கம் பெற்றிருக்கும் நிலையில் கூட ஒரு கிரகம் பரிவர்த்தனை அடைந்திருந்தால் தன் சுயபலத்தை பெறும் என்றும் நமது கிரந்தங்களில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் ராகுவிடம் இணைந்த கிரகங்களுக்கு அவ்வாறு விமோசனம் கிடையாது.
(எப்போதும் சூரியனுடன் இணைந்தே இயங்குவதால் புதனுக்கு அஸ்தங்க தோஷம் இல்லை என்று மகாபுருஷர் காளிதாசர் சொல்லுகிறார். அதுபோல சுக்கிரனுக்கும் அஸ்தங்க தோஷம் இல்லை என்று வேறு சில மூலநூல்கள் சொல்லுகின்றன.)
நான் மேலே சொன்னவைகள் குறிப்பிட்ட கிரகங்களின் காரகத்துவங்கள் மட்டும்தான். ஜாதகத்தில் மேற்கண்ட கிரகங்கள் எந்த ஆதிபத்தியங்களுக்கு உரியனவோ அவைகளும் அந்தக் கிரகங்கள் வலுவிழந்ததால் பாதிக்கப்படும்.
அதாவது ஐந்துக்குடையவன் ராகுவுடன் நெருங்கினால் புத்திரபாக்கியமும், அதிர்ஷ்டமும், சிந்தனை மற்றும் செயல்திறனும் பாதிக்கப்படும். ஆறுக்குடையவன் இணைந்தால் ஜாதகர் நோயற்றநிலை, கடன் வாங்க அவசியமின்மை, எதிரிகளற்ற வாழ்வு போன்றவைகள் அமையப் பெறுவார்.
ஏழுக்குடையவனுடன் ராகு இணைவு பெற்றால் தாமததிருமணம் அல்லது திருமணமே இல்லாத நிலை, அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் போன்ற பலன்கள் நடைபெறும். அஷ்டமாதிபதி ராகுவுடன் மிக நெருங்கி இருந்தால் அந்த ஜாதகர் தீர்க்காயுள் வாழுவது கடினம்.
அதே நேரத்தில் இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். தன்னுடன் மிக நெருங்காமல் அதே ராசியில் குறிப்பிட்ட டிகிரி இடைவெளியில் இருக்கும் கிரகங்களின் இயல்பை ராகு பெறுவார் என்பதால், தன்னுடன் இணைந்த கிரகங்களின் காரக மற்றும் ஆதிபத்திய பலன்களை ராகுபகவான் தனது தசை புக்திகளில் செய்வார். அதாவது அவர்களிடமிருந்து பறித்ததை ராகு தனது தசையில் தருவார்.
உதாரணமாக, குருவுடன் இணைந்து நல்ல ஸ்தானங்களில் அமர்ந்த ராகு தசையில் மிகப்பெரிய தனலாபம், புத்திர பாக்கியம் போன்றவைகளும் சுக்கிரனுடன் இணைந்து நல்ல இடங்களில் அமர்ந்த ராகுதசையில் சொகுசு வாழ்க்கையும் பெண்களால் சுகமும் இருக்கும்.
அதே போல பாவக்கிரகங்களுடன் இணைந்த ராகு அவர்களின் கெட்ட காரகத்துவங்களை தனது தசையில் பிரதிபலித்து ஜாதகரை கஷ்டங்களுக்கு உள்ளாக்குவார். குறிப்பாக சனி செவ்வாயின் பார்வையைப் பெற்ற ராகு தன் தசையில் நல்ல பலன்களைச் செய்வது கடினம். மேற்கண்ட இருவரும் லக்ன சுபர்களாக இருந்தாலும் இதே நிலைதான்.
ஒரு கிரகம் ராகுவுடன் எத்தனை டிகிரியில் இணைந்திருக்கிறது, வேறு ஏதாவது பலவீனத்தை அந்தக் கிரகம் அடைந்திருக்கிறதா, அதோடு அவர்கள் இருக்கும் ராசி எப்படிப்பட்டது, லக்னத்திற்கு அந்த ராசி எத்தனையாவது பாவம், மற்றும் ராகுவிற்கு அந்த பாவம் வலிமையான இடமா என்பதோடு
வேறு யாருடைய பார்வை மற்றும் தொடர்பு ராகுவிற்கு இருக்கிறது.... ராகுவும் அவருடன் இணைந்த கிரகமும் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறார்கள்.... அந்த நட்சத்திர நாதன் லக்னத்திற்கு சுபரா அசுபரா என்ன பாவத்திற்கு உரியவர்.... போன்ற நுணுக்கமான விஷயங்களை உங்களால் சரியாகக் கணிக்க முடிந்தால் போதும். ஒருவருக்கு ராகுதசை எத்தகைய பலன் தரும் என்பதை நீங்கள் துல்லியமாகச் சொல்லி விட முடியும்.
மேலும் இந்த நூற்றாண்டின் ஜோதிடஞானி, குருநாதர், ஜோதிஷவாசஸ்பதி, தெய்வக்ஞசிரோமணி மு. மாதேஸ்வரன் அய்யா அவர்கள் தன்னுடைய ஆராய்ச்சியில் ராகுவிற்கு 3 6 10 11 மிடங்களைப் போலவே பனிரெண்டாமிடமும் நல்ல பலன்களைத் தரும் இடம்தான் என்று கூறுகிறார்.
அதைப் பற்றியும் கேந்திர கோணங்களில் இருக்கும் ராகு கேதுக்கள் என்ன பலன்களைத் தருவார்கள் என்பது பற்றியும் அடுத்த மாதம் பார்க்கலாம்......
சாயா கிரகங்களின் சூட்சும நிலைகள்-
இந்த நுற்றாண்டில் தமிழ் ஜோதிட உலகிற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம், குருநாதர், ஜோதிஷவாசஸ்பதி மு. மாதேஸ்வரன் அய்யா அவர்கள் தன்னுடைய மிகப் பெரிய அனுபவத்தின் கருத்தாக ராகுவிற்கு பனிரெண்டாமிடமும் மிக நல்ல ஸ்தானம்தான். விரயராகு கெடுதல்கள் செய்வதில்லை என்று கூறுகிறார்.
மிகப் பெரும்பாலான வி.ஐ.பி க்களின் ஜாதகங்களில் இந்த பனிரெண்டாமிட ராகுவை நான் பார்த்திருக்கிறேன். மேலும் குரு தசை மிகவும் யோகம் செய்வதற்கான அடிப்படை அஸ்திவாரங்களை பனிரெண்டாமிட ராகு செய்வார்.
பொதுவாக தான் இருக்கும் வீட்டை கெடுக்கும் இயல்புடையவரான ராகு பனிரெண்டாமிடம் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய வீடுகளாக அமையும் பட்சத்திலும், அங்கே சுபத்துவம் அடைந்தாலும் அதிகமான நன்மைகளைச் செய்வார்.
அதாவது முக்கியமாக பனிரெண்டாமிடத்தின் அசுப ஆதிபத்தியமான விரயங்களைத் தடுத்து சேமிக்கும் அளவிற்கு ஜாதகருக்கு வேறுவழிகளில் பண வரவை அளிப்பார்.
அடுத்து கேந்திர கோணங்களில் இருக்கும் ராகு தனது தசா புக்திகளில் அந்த பாவத்தைக் கெடுப்பார் என்பது பொதுவான ஜோதிட விதி.
ஆனால் இயற்கை சுபக்கிரகங்கள் கேந்திரங்களுக்கு அதிபதியாகக் கூடாது என்ற விதியின் மறைவில் இயற்கை பாவக் கிரகங்கள் திரிகோணத்திற்கு அதிபதியாகக் கூடாது என்ற சூட்சுமம் உள்ளது. இதுவே பாதகாதிபதிகளின் தத்துவம் என்ற எனது ஆய்வு முடிவினை ஒட்டியும், இயற்கை பாவரான ராகு தான் இருக்கும் வீட்டு அதிபதியின் தன்மையை பிரதிபலிப்பவர் என்பதாலும் சனி செவ்வாயின் வீடுகள் ஐந்து ஒன்பதாம் இடங்களாகி அந்த வீடுகளில் இருந்தால் மிகக் கடுமையான கெடுபலன்களைத் தருவார்.
இந்த அமைப்பின்படி கடகம், கன்னி, துலாம், தனுசு, ஆகிய லக்னக் காரர்களுக்கு ராகு ஐந்தாமிடத்தில் கெடுதல்களைச் செய்வார்.
மேற்கண்ட அமைப்பில் நடக்கும் ராகு தசை, புக்திகளில் குழந்தைகள் சம்பந்தப் பட்டவைகளில் கெடுபலன்களும், புத்திர சோகமும், வாரிசு விரோதம், அவர்களால் அவமானம், அதிர்ஷ்டக்குறைவு, பூர்வீக சொத்துக்கள் இழப்பு போன்ற பலன்கள் நடக்கும். மேலும் ஐந்தாமிட ஆதிபத்தியங்கள் அனைத்தும் பாதிக்கப்படும்.
அதேபோல ரிஷபம், மிதுனம், சிம்மம், மீனம் ஆகிய நான்கு லக்னத்தவர்களுக்கும் ராகு ஒன்பதாமிடத்தில் கெடுபலன்களை நடத்துவார். இந்த லக்னத்தவர்களின் ஒன்பதாமிட ராகு தசையில் தந்தையின் ஆதரவை இழத்தல், தந்தையின் மறைவு, விரோதம், பாக்யங்கள் பறிபோகுதல் போன்றவை நடக்கும்.
மேலே கண்ட எட்டு லக்னங்களுக்கும் திரிகோணங்களில் ராகு தனித்த நிலையில் இருந்தால் நான் சொன்ன பலன்களே நடக்கும். அதே நேரத்தில் ராகு இந்த இடங்களில் சுபர் பார்வை பெற்றோ வேறு ஒரு கேந்திராதிபதியுடன் இணைந்து இருந்தாலோ சிறிது மாறுபாடான பலன்களைத் தருவார். ஆனாலும் அடிப்படையில் கெடுபலன்கள்தான் என்பது மாறாதது.
என்னிடம் சனி, செவ்வாயின் உச்சநிலை மற்றும் திரிகோணாதிபத்தியம் பற்றிக் கேட்பவர்கள் கடந்த ஒரு வருட காலமாக நான் ஒரு ஜோதிட வாரப் பத்திரிகையில் எழுதிய தொடரை தேடிப் பிடித்துப் படியுங்கள்.. எல்லாம் புரியும்.
இதைப் போலவே சுபக்கிரகங்கள் கேந்திராதிபத்திய தோஷம் பெறும் கேந்திர ஸ்தானங்களில் தனித்து இருக்கும் ராகு அந்த பாவத்தை முழுமையாகக் கெடுப்பார்.
ஏற்கனவே நான் இந்த தொடரில் �காரஹோ பாவ நாஸ்தி� அமைப்பை செயல்படுத்துவது ராகு கேதுக்கள் தான் என்று எழுதியதைப் போலவே கேந்திராதிபத்திய தோஷத்தை எடுத்துச் செயல்படுத்துவதும் பெரும்பாலும் ராகு கேதுக்கள் தான்.
அதிலும் சந்திரன் பூரணத்தை நெருங்கும் சமயத்தில் வளர்பிறைச் சந்திரனாக இருக்கும் போது கடகத்தில் தனித்து அமரும் ஏழாமிட ராகு மிகவும் கடுமையானவர். இந்த அமைப்பில் மகரத்தில் சந்திரன் அமர்ந்து ராகுவைப் பார்க்கும் நிலையில் ராகுதசை புக்திகளில் வாழ்க்கைத் துணையைப் பாதிப்பார்.
அதாவது கேந்திராதிபத்திய தோஷம் பெற்ற கிரகங்களின் தொடர்பைப் பெற்ற ராகு கேதுக்கள் அவர்களின் செயல்களை தாங்களே எடுத்து நடத்துவார்கள். இது ராகுதசை கேதுபுக்தியிலோ அல்லது சம்பந்தப் பட்ட கிரகங்களின் புக்தியிலோ நடக்கும்.
மேலும் 4, 7, 10 மிடங்களில் தனித்து அமரும் ராகு மேற்கண்ட பாவங்களின் ஆதிபத்தியங்களில் முக்கியமான ஒன்றை நிச்சயம் பாதிப்பார். அதாவது நான்காமிட ராகுவால் கல்வி, வீடு, வாகனம் தாயார் இவைகளில் ஏதேனும் ஒன்று, ஏழாமிட ராகுவால் வாழ்க்கைத்துணை, நண்பர்கள், மணவாழ்வு, பங்குதாரர்கள் போன்றவைகளில் ஒன்று, பத்தாமிட ராகுவால் தொழில், வேலை, வியாபாரம், வாழ்வதற்கான வழிமுறை போன்றவைகளில் ஒன்று நிச்சயம் பாதிக்கப்படும்.
அதே நேரத்தில் இது தவிர்த்து கேந்திர ராகு மற்ற பிற நன்மைகளையும் பொருளாதார மேம்பாடுகளையும் கண்டிப்பாகத் தரும்.
மேலும் மேற்கண்ட கேந்திர ஸ்தானங்களில் இருக்கும் ராகு, அந்த லக்னங்களுக்கு திரிகோணாதிபதிகளான ஐந்து மற்றும் ஒன்பதுக்குடைய கிரகங்கள் குரு, சுக்கிரன், புதன், வளர்பிறைச் சந்திரன் போன்ற இயற்கைச் சுபர்களாக இருந்து அவர்களுடன் இணைவு பெற்றிருந்தால் தன்னுடன் இணைந்தவர்களின் ஆதிபத்திய மற்றும் காரகத்துவங்களைக் கெடுத்து, அதாவது அவர்களின் பலம் மற்றும் தன்மைகளைத் தான் ஏற்றுக் கொண்டு அபரிதமான சக்தி கொண்ட சுபராக மாறி தனது தசையில் மிகப்பெரும் நன்மைகளைச் செய்வார்.
இப்படிப்பட்ட அமைப்பில் மேற்படி ஜாதகருக்கு ராகுதசை தன் வாழ்நாளில் மறக்க முடியாத அளவிற்கு உயர்வானதாக இருக்கும்.
ஏதோ ஒரு விதத்தில்  என்னுடன் தொடர்பு கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதில் இருந்து தெரிகிறது.
என்னுடைய ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் நுணுக்கமான அர்த்தங்கள் இருப்பதாலும் வார்த்தைகளை மிகக்கவனமாக நான் தேர்ந்தெடுப்பதாலும் என்னுடைய எழுத்துக்கள் படிப்பவர்களுக்கு நன்கு புரியும் என்று இதுவரை நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
ஆயினும் ஆதிபத்தியங்களுக்கும் காரகத்துவங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் தெரியாமல் சிலர் குழம்புகிறீர்கள். அதோடு ஒரு செயல் என்பது ஒரே ஒரு கிரகம் சம்பந்தப்பட்டது மட்டும் அல்ல என்பதும் ஜோதிடத்தில் அடிப்படையான பால பாடம்.
ஒரு சம்பவம் அல்லது செயல் என்பது கிரகங்களின் சேர்க்கையால் நடத்தப் பெறுவது. தனி ஒரு கிரகத்தினால் அல்லவே அல்ல. ஒரு கிரகம் மட்டுமே தனித்து எந்த ஒன்றையும் செய்யவே முடியாது.
சென்ற மாதம் நான் எழுதிய கட்டுரையில் ராகுவுடன் மிக நெருங்கும் குரு பகவானால், குழந்தைகளையும், பணத்தையும், நேர்மையான குணத்தையும், ஆன்மிக ஈடுபாட்டையும் கொடுக்க இயலாது என்று குறிப்பிட்டிருந்தேன்.
ஜோதிடத்தில் தனக்கு ஐந்ந்ந்ந்ந்ந்து வருட அனுபவம்(!) என்று தன்னைக் குறிப்பிட்டுப் பேசிய வாசகர் தன்னுடைய ஜாதகத்தில் குரு ராகுவுடன் இரண்டு டிகிரியில் இணைந்திருந்தும் தான் மிகுந்த ஆன்மிக ஈடுபாட்டுடன் இருப்பதாக குறிப்பிட்டார்.
குரு தசையில் குழந்தைகளும், பொருளாதார வசதியும் இருந்ததா? என்று கேட்டேன்... �இல்லை... அனைத்தும் தற்போதைய சனிதசையில் தான் கிடைத்தன.� என்றார். அவருக்கு விருச்சிகம் லக்னமாகி ஏழாமிடத்தில் சுபரின் ரிஷப வீட்டில் நட்புடன் திக்பலமாகி அமர்ந்த சனிதான் ஆன்மிக ஈடுபாட்டுக்கான காரண கிரகம் என்பதை விளக்கினேன்.
ஆன்மிகம் என்பது குரு, சனி, கேது ஆகிய மூன்று கிரகங்களின் பங்களிப்புக் கலவை. அதுபோலவே எந்த ஒரு காரகத்துவமும் தனி ஒரு கிரகம் மட்டும் சம்பந்தப் பட்டதாக இருக்க முடியாது.
உதாரணமாக சனி உச்சம் பெற்றால் பூரண ஆயுள் என்று சொல்லி விடமுடியாது. ஆயுள் என்பது லக்னாதிபதியும், அஷ்டமாதிபதியும், சனியும் சேர்ந்த கலவையான விஷயம்.
ஜோதிடத்தில் ஐந்து வருட அனுபவம் என்பது ஆரம்பநிலைதான். அதாவது LKG யில்தான் இப்போது இருக்கிறீர்கள். இன்னும் MA M.Phil, போன்ற முதுகலைப் படிப்பு வரை தொடரும் பாக்கியம் உங்களுக்கு கிடைத்தால் ஓரளவு புரியும் நிலைக்கு உங்களால் வர முடியும்.
அதுபோல என்னுடைய முப்பது வருட அனுபவத்தை இங்கே ஒரு மூன்று பக்கம் எழுதுவதாலோ என்னிடம் நீங்கள் மூன்று நிமிடம் தொலைபேசியில் பேசுவதாலோ நான் உங்களுக்கு முழுமையாக விளக்கி விடமுடியாது.
நான் ஒரு சூட்சுமத்தை எளிமையாக விளக்கினாலும் புரியும் தகுதி நிலை உங்களுக்கு இருந்தால்தான் அந்த சூட்சுமம் உங்களுக்கு பிடிபடும். இல்லையெனில் மண்டையைப் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டியதுதான்.
ஆயினும் வருடங்கள் கடந்தபின் புரியும் நிலை வருகையில் இந்த எளியவனின் கருத்து ஒரு நாள் உங்களுக்குப் புரியும் ...........!
அடுத்த மாதமும் ராகுவுடன் பயணிப்போம் !
சாயா கிரகங்களின் சூட்சும நிலைகள்-7

சென்ற இதழில் கேந்திர கோணங்களில் இருக்கும் ராகு செய்யும் பலன்களைப் பற்றிப் பார்த்தோம்.
தற்போது கேந்திரத்திற்கும், கோணத்திற்கும் பொதுவானது எனப்படும் லக்னத்தில் இருக்கும் ராகு என்ன செய்வார் என்பதைப் பற்றிச் சொல்லும் முன் கேந்திரம், திரிகோணம் என்று சொல்லப்படும் 1, 4, 7, 10 மற்றும் 1, 5, 9 மிடங்கள் அவ்வளவு சிறப்பாகச் சொல்லப்படுவது ஏன்? அதன் சூட்சுமம் என்ன? என்று ஒரு வாசகர் (ரசிகர்!) கேள்வி எழுப்பி இருந்தார்.
திரிகோணங்கள் எனப்படுபவை ஒரே நட்சத்திரங்களை உள்ளடக்கிய மூன்று வித்தியாசமான ராசிகள். கேந்திரங்கள் எனப்படுவை ஒன்பது கிரகங்களின் ஆளுகைக்கு உட்பட்ட நட்சத்திரங்களை தொடர்ச்சியாகக் கொண்ட ஒரே தன்மை கொண்ட ராசிகள்.
அதாவது காலபுருஷனின் முதல் ராசியான மேஷத்திற்கு சிம்மமும், தனுசும் திரிகோணங்கள் (1, 5, 9, மிடங்கள்) ஆகும். இந்த மூன்று ராசிகளுக்குள்ளும் ஒரே கிரகத்தின் ஆளுமை கொண்ட நட்சத்திரங்களே இருக்கும்.
அதாவது மேஷத்திற்குள் இருக்கும் அசுவினி, பரணி, கிருத்திகை சிம்மத்திற்குள் அமைந்த மகம், பூரம், உத்திரம் மற்றும் தனுசுவில் அடங்கும் மூலம், பூராடம், உத்திராடம் ஆகிய மூன்றும் கேது, சுக்கிரன், சூரியன் ஆகிய கிரகங்களின் ஆளுமையைக் குறிப்பவை.
மேலும் மேஷம், சர ராசி, சிம்மம் ஸ்திரம், தனுசு உபயம் என திரிகோண ராசிகள் மூன்றும் வெவ்வேறு தன்மை கொண்ட ராசிகள். இதைப் போலவே ஒவ்வொரு ராசிக்கும் அதன் திரிகோண ராசிகள் ஒரே நட்சத்திரங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.
கேந்திரங்கள் எனப்படும் 1, 4, 7, 10 மிடங்களைக் கவனித்தால் மேஷத்தின் கேந்திரங்களாக கடகம், துலாம், மகரம் ஆகிய ராசிகள் அமையும். இவற்றில் மேஷத்தில் அசுவினி, பரணி, கிருத்திகை 1 ம் பாதம் என ஆரம்பித்து மகரத்தின் உத்திராடம் 2, திருவோணம், அவிட்டம் 2ல் தொடர்ந்து துலாத்தின் சித்திரை 3, சுவாதி, விசாகம் 3 ல் நீடித்து கடகத்தின் புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் என அனைத்துக் கிரக நட்சத்திரங்களையும் தொடர்ச்சியாக உள்ளடக்கி முடியும்.
அதோடு இந்த ராசிகள் அனைத்தும் சர ராசிகள் மட்டும் என்பதைப் போல் அனைத்துக் கேந்திர ராசிகளும் சரம், ஸ்திரம், உபயம் மட்டுமாகவே இருக்கும். கலந்து வராது. இவைதான் கேந்திர, கோணங்களின் சிறப்பு.
இதையும் தாண்டி திரிகோணாதிபதிகளாக இயற்கைப் பாவக் கிரகங்களான சனி, செவ்வாய் வரக்கூடாது என்று நான் அடிக்கடி எழுதுவதில் ஒரு மிகப்பெரிய சூட்சுமம் உள்ளது. அதை இங்கே விவரித்தால் இந்தக் கட்டுரை திசை மாறும் என்பதால் வேறொரு சந்தர்ப்பத்தில் அதை விளக்க முயற்சிக்கிறேன்.
அடுத்து லக்னம் என்பது ஜாதகரை, அதாவது உங்களைத்தான் குறிக்கிறது. ஒருவரது லக்னம் எது, லக்னாதிபதி யார்? லக்னத்தோடு சம்பந்தப்படும் கிரகங்கள் எவை? என்பதை வைத்து உங்களைப்பற்றி நூறு சதவிகிதம் துல்லியமாகச் சொல்ல முடியும்.
(என்னிடம் பலன் கேட்க வருபவர்களிடம் நான் முதலில் இந்த முறையைக் கையாண்டு ஜாதகரின் குண விசேஷங்களைச் சொல்லி விடுகிறேன். இவற்றைத் தெளிவாக உங்களால் சொல்ல முடிந்தால் பலன் கேட்பவருக்கு உங்கள் மேல் நம்பகத்தன்மை கூடும்.)
அதோடு ராகு என்பது ஒரு இருட்டு என்று நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். எனவே லக்னத்தில் ராகு என்றால் நீங்கள் இருளில் நிற்கிறீர்கள் என்று அர்த்தம். உங்களை, உங்கள் திறமைகளை யாரும் கவனிக்க முடியாது மற்றும் பார்க்க மாட்டார்கள் என்று அர்த்தம். எனவே லக்னத்தில் ராகு இருப்பது சிறப்பான நிலை அல்ல.
பாவக்கிரகங்களான செவ்வாய், சனியின் ராசிகள் லக்னங்களாகி அதில் ராகு இருந்து பாவிகளின் தொடர்பை அவர் பெற்றிருப்பின் அந்த ஜாதகர் முன்கோபம், பிடிவாதம், குறுகிய மனப்பான்மை, சுயநலம், தந்திரப்போக்கு, நன்றி மறத்தல், முட்டாள்தனம் போன்ற குணங்களைக் கொண்டிருப்பார்.
அதிலும் மேஷம் லக்னமாகி ராகு அதில் இருந்து, ராகு கேதுக்களுடன் இணையாத செவ்வாயின் பார்வையை ராகு பெற்றிருந்தால் அந்த ஜாதகர் கடுமையான முன் கோபக்காரராகவும், முரட்டுத்தனம் உடையவராகவும் இருப்பார்.
அதோடு விருச்சிகம், மகர, கும்பங்களில் ராகு இருந்து அஷ்டமாதிபதியின் இணைவை நெருக்கமாக பெற்றிருந்தால் தற்கொலை எண்ணத்தை ராகு தூண்டுவார். ராகு அல்லது எட்டுக்குடையவனின் தசாபுக்திகளில் ஜாதகர் தற்கொலை முயற்சிகளில் இறங்கி வெற்றி பெறக் கூடும்.
விஷமருந்தியோ, தூக்குப்போட்டுக் கொண்டோ தன் மரணத்தைக் தேடிக் கொள்ள வைப்பவர் ராகு பகவான். சில நேரங்களில் சிலர் கொடூரமான முடிவுகளைத் தேடிக் கொள்வதும் இவரால்தான். லக்னத்தில் சுபத்துவமோ சூட்சுமவலுவோ பெறாத ராகு இந்த வேலைகளைச் செய்வார்.
பாவிகளுடன் தொடர்பு கொண்ட ராகு லக்னத்தில் இருந்தால் உடல்நலம் மனநலம் இரண்டையும் தனது தசை புக்திகளில் பாதிப்பார். லக்னத்தில் இருந்து இயற்கைப் பாவியான ஆறாமிடத்தோனுடன் சம்பந்தப்படும் ராகு மனநோயாளிகளை உருவாக்குவார்.
ஆனால் லக்னத்தில் சுபருடன் இணைந்தோ சுபரால் பார்க்கப்பட்டோ, சுபரின் வீடுகள் லக்னமாகி அதில் அமர்ந்த ராகுவோ இதுபோன்ற கெடுபலன்களைச் செய்வது இல்லை.
அதாவது ராகு எப்போதுமேதான் இருக்கும் வீட்டின் அதிபதியையும் தன்னைப் பார்க்கும் மற்றும் தன்னோடு இணைந்தவர்களின் குணங்களையும் பிரதிபலிப்பவர் என்பதால் சுபரின் வீடுகளான ரிஷபம் துலாம் மீனம் தனுசு போன்ற ராசிகள் லக்னங்களாகி அதில் சுபரோடு இணைந்து அல்லது சுபரால் பார்க்கப்பட்டு இருந்தால் மிகப் பெரும் நன்மைகளைச் செய்வார்.
புதனும் சந்திரனும் கட்டுக்கு உட்பட்ட சுபர்கள் என்பதால் (அதாவது பாவிகளுடன் சேராத தனித்த புதனும், வளர்பிறை சந்திரனும் மட்டுமே சுபர்கள்.) அவர்கள் பரிபூரண சுபத்துவம் பெற்றிருக்கும் நிலையில் அவர்களின் வீடுகளான மிதுனம் கன்னி கடகத்தில் இருக்கும் ராகு மற்ற சுபர்களுடன் தொடர்பு கொண்டிருக்கும் நிலையில் நற்பலன்களைத் தருவார்.
ஆயினும் பொதுவாக ராகு லக்னத்தில் அமர்வது நல்ல நிலை அல்ல. லக்ன ராகு ஜாதகரை பிரகாசிக்க இயலாமல் செய்வார். இருட்டு உங்கள் மேல் கவிந்திருந்தால் என்ன ஆகும்..? நீங்கள் வெளியே தெரிய மாட்டீர்கள். உங்களுடைய திறமைகள் வெளி வர முடியாத சூழ்நிலை இருக்கும். மேலும் லக்ன ராகு உடல், மனம் இரண்டையும் பாதிப்பார். நல்ல குணங்களை தள்ளிப் போகச் செய்வார்.
இன்னும் ராகுவைப் பற்றி உள்ள சூட்சுமங்களை அடுத்த மாதம் பார்ப்போம்....
சாயா கிரகங்களின் சூட்சும நிலைகள்-8

சென்ற மாத கட்டுரையில் சனி, செவ்வாயின் திரிகோணாதிபத்தியம் பற்றிய சூட்சுமத்தை பின்னர் சொல்கிறேன் என்று எழுதியதற்கு இத்தனை கேள்விகள் உங்களிடமிருந்து வரும் என நான் உண்மையில் எதிர்பார்க்கவில்லை.
அதிலும் திருப்பூர் வாசகி ஒருவர் � சொல்லிக் கொடுக்க மறுக்கிறீர்கள் குருஜி...� என்றதோடு மட்டுமல்லாமல்.. இதே போல மார்ச் 2012 குருவருள் ஜோதிடம் இதழில் �சனி எப்படி ஆயுள்காரகன் ஆனார்..? � என்பதை பின்னர் விளக்குகிறேன் என்று சொல்லி இதுவரை அதைப் பற்றியும் சொல்லவில்லை என்றும் சுட்டிக் காட்டினார்.
அந்தக் கட்டுரை குருவருள் ஜோதிடத்தில் வெளிவந்த நேரத்தில் நான் ஜோதிட வாரப் பத்திரிகையான திரிசக்தி ஜோதிடத்தில் சனி, செவ்வாய் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்ததால் �சனி எப்படி ஆயுள் காரகன் ஆனார்� என்ற சூட்சுமத்தை அந்தத் தொடரில் எழுதினேன். அதனை குருவருள் ஜோதிடம் வாசகர்களுக்கு விளக்காதது எனது தவறுதான்.
என்னைப் பொறுத்தவரையில் இத்தனை ஆண்டு கால ஜோதிட அனுபவத்தில் பரம்பொருள் எனக்கு தெரிய அனுமதித்த எந்த ஒரு சூட்சுமத்தையும் நான் ஒளித்து வைத்ததே இல்லை. அனைத்தையும் பிறருக்கு விளக்கியிருக்கிறேன். இது என்னைத் தொடர்ந்து படிப்பவர்களுக்குத் தெரியும்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் எவருமே அறியாத, பரம்பொருள் என்னைத் தெரிந்து கொள்ள அனுமதித்த �குருபகவான் ஏன் சுபரானார்? சனி எப்படி பாவரானார்?� மற்றும் �சுபக்கிரக வரிசையை ஞானிகள் எப்படி ஏற்படுத்தினார்கள்?� போன்ற சூட்சுமங்களை நான் விளக்கமாக எழுதியதும் இதில் சேர்ந்ததுதான்.
அதோடு, எந்த ஒரு விஷயத்தையும் சுற்றி வளைக்காமல் நேரடியாகச் சொல்வது என் வழக்கம். சாயா கிரகங்களைப் பற்றிய இந்த தொடரில் சனி செவ்வாயை இழுத்தால் அது மகாபாரத கிளைக்கதை போல மாறி மூல விஷயத்தை விட்டு விட்டு வேறு எங்கேயோ போய் விடும் அபாயம் இருக்கிறது.
இன்னும் ராகு கேதுக்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சூட்சுமங்கள் இருக்கின்றன. அவைகளை முழுவதுமாக இந்த தொடரில் சொல்வேன். அடுத்த தொடரில் மற்ற விஷயங்களைப் பற்றி பார்க்கலாம்.....
மார்ச் 2012 குருவருள் ஜோதிடம் இதழில் நான் எழுதிய சனி எப்படி ஆயுள்காரகன் ஆனார்? என்ற சூட்சுமத்தை இப்போது தெரிந்து கொள்ளுங்கள்...
சனி பகவான் எப்படி ஆயுளுக்கு காரகன் ஆனார்..?
�ஜோதிடக்கலை அரசு� ஆதித்யகுருஜி
(பஞ்சமஹா புருஷ யோகங்களில் ஒன்றான சசயோகம் பற்றிய ஆய்வுக்கட்டுரையின் ஒரு பகுதி)
சில ஜோதிட ஆய்வாளர்கள் சனி பகவான் உச்சம் பெறுவது மிகுந்த அதிர்ஷ்டம் எனவும், தற்போது இன்னும் மூன்று வருடங்கள் சனி உச்சத்தில் இருப்பதால் இந்த வருடங்களில் பிறக்கும் குழந்தைகள் அதிர்ஷ்டசாலிகள் எனவும் எழுதுகிறார்கள். இது முற்றிலும் தவறு.
உச்சம் பெறும் அனைத்துக் கிரகங்களும் நன்மை செய்யும் என்றால் நமது ஞானிகள் சுபக் கிரகங்கள் பாவக் கிரகங்கள் என்று கிரகங்களை இரண்டு பிரிவாக பிரித்திருக்க வேண்டிய அவசியமே இல்லை.
கிரகங்களின் காரகத்துவங்களை சுபம், அசுபம் எனவும் நமக்கு வகைப்படுத்திக் காட்டியிருக்க வேண்டியதும் இல்லை. கிரகங்கள் வலிமை பெற்றால் நல்லது செய்யும் என்று பொதுவாக சொல்லிவிட்டுப் போயிருக்கலாம்.
நமது கிரந்தங்களில் ஞானிகள், வலுப்பெற்ற கிரகங்கள் மனிதனுக்கு நன்மையைக் செய்யும் என்று எந்த இடத்திலும் சொல்லவே இல்லை.
வலிமை பெற்ற ஒரு கிரகம் தனது காரகத்துவங்களை ஜாதகருக்கு வலுவுடன் தரும் என்றே சொல்லியிருக்கிறார்கள்.
அப்படியானால் ஆயுளைத் தவிர்த்து மனிதனுக்கு கெடுதல் செய்பவைகளான வறுமை, தரித்திரம், நோய், கடன் தொல்லை, அடிமைவேலை, உடல் உழைப்பை மட்டுமே நம்பி பிழைத்தல், உடல் ஊனம், அழுக்கு இடங்களில் இருக்கும் நிலை போன்றவற்றைத் தரும் சனிபகவான் உச்ச வலிமை பெற்றால் உங்களுக்கு என்ன பலன்களைத் தருவார்?
மற்ற சுபக் கிரகங்களான குரு, சுக்கிரன், புதன், வளர்பிறைச் சந்திரன் போன்ற கிரகங்களைப் போல தனித்து அதிர்ஷ்டம் தரும் அமைப்பு சனி, செவ்வாய் உள்ளிட்ட பாவக் கிரகங்களுக்கு கிடையாது.
தனித்து எவ்வித சுபத்தன்மையும் பெறாமல் வலிமை பெறும் நிலையில் சனி பகவான் தன் தசையில் தாங்க முடியாத கொடிய பலன்களைச் செய்வார்.
சனி நல்லது செய்ய வேண்டும் என்றால் அவர் குருவின் பார்வையையோ தொடர்பையோ அல்லது மற்ற சுபக்கிரகங்கள் அல்லது லக்ன சுபர்களின் சம்பந்தத்தையோ பெற்றிருக்க வேண்டும்.
உச்சத்தில் வக்ரம் போன்ற உச்சபங்கம் பெற்று முற்றிலும் நீச நிலையாக வலிமை இழந்து சுபர் பார்வை பெற்ற சனி மிகப் பெரிய சொகுசு வாழ்க்கையைத் தருவார்.
இத்தனை கொடுமையான பலன்களை காரகத்துவங்களாகப் பெற்ற சனி பகவானிடம் ஆயுள் எனும் விஷயம் எப்படி வந்தது என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம்.
அந்த சூட்சுமத்தையும் இப்போது விளக்குகிறேன்......
பொதுவாக நமது புனித நூல்கள் அனைத்துமே இனிமேல் பிறவாமை வேண்டும். பரம்பொருளின் காலடியில் முற்றிலுமாக சரணடைந்து அதனுடன் இணைய வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றன.
சித்தர்களும் ஞானிகளும் தங்களுக்கு எப்போது �முக்தி� கிடைக்கும் என்றே ஏங்குகிறார்கள். (அதாவது தாங்கள் விரைவில் இந்த பூமியிலிருந்து விடுபட வேண்டும் என்பதே முற்றும் துறந்தவர்களின் நோக்கம்.)
உண்மையான புரிதல் என்னவெனில் இந்த மனித வாழ்வே ஒரு சுமை என்பதுதான். மனிதனின் இறப்பிற்குப் பிறகு �ஏதோ ஒரு நல்லது� இருக்கிறது என்பதையே நமது ரிஷிகளும், சித்தர்களும் உணர்ந்து நமக்கும் சொல்லியிருக்கிறார்கள்.
விளங்கிக் கொள்ள முடியாத ஏதோ ஒரு விஷயத்திற்காகவே நாம் எங்கிருந்தோ இந்தப் பூமியின் பக்கம் தற்போது வந்திருக்கிறோம். இங்கே செய்யும் தவறுகளால் இங்கிருந்து விடுபட முடியாமல் மீண்டும் மீண்டும் இங்கேயே பிறக்கிறோம். இது ஒரு வழிப்போக்குப் பயணம் அவ்வளவே.
நாம் கிளம்பிய நல்ல இடத்திற்கு திரும்பிச் செல்லத் தடையாக, நம்மை இங்கேயே இருக்க வைக்கும் நமது �ஆயுள்� என்பது, பலரும் நினைப்பதைப் போல ஒரு சுபகாரகத்துவம் கொண்ட நல்லநிலை அல்ல என்பதே உண்மை.
அதனால்தான் அதுவும் மனிதனுக்கு வேண்டாத காரகத்துவங்களைக் கொண்ட சனியிடம் சேர்ந்தது.
சனி தரும் இன்னொரு கொடிய பலனான ஆயுள்... நம்மை பரம்பொருளிடம் சேரும் ஒரு நல்ல நிலையை, இனிமையான அனுபவத்தை இன்னும் சற்றுத் தள்ளி வைக்கும் ஒரு கெட்ட நிலைதான்.
ஜோதிடத்தில் எதுவுமே வெளிப்படையாக புரியும்படி ஞானிகளால் சொல்லப் படுவதில்லை. சொல்லப்படவும் மாட்டாது. அப்படிச் சொன்னாலும் அநேகருக்கு அது புரியாது.
ஆகவே புரியும் தகுதி நிலையை...
அதாவது பள்ளிகளில் முதலில் எல். கே. ஜி அடுத்து ஒன்று முதல் பனிரெண்டு வகுப்புக்கள் பிறகு கல்லூரி, எம். ஏ. போன்ற முதுநிலைப் படிப்புக்கள் போன்ற நிலையை படிப்படியாக நீங்கள் எட்டும் வரை சில நுணுக்கமான விஷயங்கள் உங்களுக்குப் புரியவே புரியாது.
அதுவே இந்த மகா கலையின் மகத்துவம்.
சாயா கிரகங்களின் சூட்சும நிலைகள்-9

நம்முடைய கிரந்தங்கள் அனைத்தும் �நானாவித வேடத்தொழில்� மற்றும் �சாதுர்யமாக ஏமாற்றுதல்� ஆகிய இரண்டு விஷயங்களை ராகுவிற்குரிய முக்கியமான காரகத்துவங்களாக சொல்லுகின்றன.
நவீனயுகத்தில் சினிமாவில் நடித்தல், மற்றும் தொலைக்காட்சி போன்ற நேரடி ஊடகங்களில் தோன்றுதல் போன்றவைகளைச் செய்ய வைப்பவர் ராகுதான். ஒருவருக்கு ராகு, சுக்கிரன் மற்றும் சந்திரனைத் தொடர்பு கொண்டு அவர்கள் சம்பந்தம் பெற்று அல்லது ராகு அவருக்குரிய நல்ல பாவங்களில் அமர்ந்திருந்தால் ராகு தசையில் பொதுமக்கள் மத்தியில் தோன்றி பிரபலமடையும் யோகம் நடக்கும்.
அதோடு �ஒயிட் காலர் கிரைம்� எனப்படும் நாகரிக குற்றங்களை செய்ய வைப்பவர் ராகு பகவான்தான். சாதுரியமாக ஏமாற்றுதல் எனும் பிரிவில் லாட்டரி சீட்டுகளையும் மற்ற பிற சூதாட்டங்களையும் சேர்க்கலாம் என்பதால் இது போன்ற துறைகளில் நல்ல பாவங்களில் அமர்ந்த ராகு பகவான் தனது தசையில் ஏராளமான பண லாபத்தை அள்ளித் தருவார்.
ஸ்பெகுலேஷன் துறை எனப்படும் பங்குச் சந்தையிலும் பொருள் சேர்க்க வைப்பவர் ராகுதான். தற்போது புதிது புதிதாக கிளம்பும் ஈமு கோழி வளர்ப்பு, அதிக வட்டி தருகிறோம் என ஆசை காட்டுதல், மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் பணம் தருகிறோம் என ஏமாற்றுதல், தேக்குமரம் மூலிகைச் செடி வளர்ப்பு போன்ற குறுக்குவழி சிந்தனைகள் அனைத்திற்கும் காரணகர்த்தா ராகு பகவான்தான்.
அதேநேரத்தில் இப்படிப்பட்ட சிந்தனைகளையும் செயல் திட்டங்களையும் தருகின்ற ராகு பகவானுக்கு சுபர்களின் பார்வையும் தொடர்பும் இருக்கும் பட்சத்தில் சிறிய தண்டனையோடு சட்டத்தின் பிடியில் இருந்தும் ஜாதகர் தப்பித்து விடுவார்.
அதோடு ராகு தசை நடக்கும்போது ஒரு நபருக்கு ஜோதிடம் ஆன்மிகம் போன்றவைகளிலும் ஈடுபாடு உண்டாகலாம். சிலருக்கு ராகு புக்திகளில் ஜோதிடம் மற்றும் அந்நிய மொழி கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
குறிப்பாக சிலருக்கு பிளாக் மேஜிக் எனப்படும் மந்திரதந்திரங்கள், மாந்திரீகம் போன்றவைகளையும் ராகு கற்க வைப்பார். சுபரோடு சேர்ந்து சுபர் வீட்டில் இருக்கும் ராகு ஒருவரை தனது தசையில் ஜோதிடராக புகழ் பெற வைப்பார்.
ஒரு சர ராசியில் (மேஷம் கடகம் துலாம் மகரம்) ராகு இருந்து, அந்த பாவம் லக்னத்திற்கு 3, 11 மிடங்களாக அமைந்து, அந்த ராகுவுக்கு வீடு கொடுத்த கிரகம் உச்சம் பெற்று, ஐந்து அல்லது ஒன்பதுக்குடையவன் சாரத்தில் இருக்கும் ராகுவின் தசை வருமானால் ஜாதகர் ஏழ்மையான நிலையில் பிறந்திருந்தாலும் மறைமுகமான வழியில் நூற்றுக்கணக்கான கோடிகளை சம்பாதிப்பார் என்பது உறுதி.
இது போன்ற அமைப்பில் ராகுதசை சுயபுக்தியில் சாதாரண தொழிலாளியாக அதிகார உச்சத்தில் இருக்கும் குடும்பத்திற்கு அறிமுகம் ஆகி இன்று கோடிகளை குவித்து வைத்திருக்கும் சில ஜாதகங்களை நான் ஆரம்பம் முதலே ஆராய்ந்திருக்கிறேன்.
அதே போல ராகு தனது தசை புக்திகளில் அந்நிய தேசம் சென்று பொருள் தேட வைப்பவர். ஜோதிடக்கலை உருவான காலத்தில் நமது இந்தியா ஐம்பத்தியாறு தேசங்களாக பிரிக்கப்பட்டு இருந்ததால் ஹைதராபாத் மும்பை டெல்லி போன்ற வட மாநிலங்கள் கூட ஜோதிடப்படி வெளிதேசங்கள்தான்.
சர ராசிகளில் வலுவாக அமர்ந்த ராகு கேதுக்கள் தங்களது தசா புத்திகளில் ஜாதகரை நிச்சயமாக வெளியிடங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். மேலும் ஒரு முக்கியமான காரகத்துவகமாக அந்நிய மொழிகளை கற்றுக்கொள்ளுதல் குறிப்பாக ஆங்கிலம் ஹிந்தி மற்றும் வேற்று மதத்தவரை விரும்புதல், நட்பு கொள்ளுதல் போன்றவைகளையும் நடத்துபவர்கள் ராகு கேதுக்கள்தான்.
சில நிலைகளில் எனது அனுபவத்தில் ராகு பகவான் இஸ்லாமிய மதத்தையும் கேது பகவான் கிறிஸ்துவ மதத்தையும் சுட்டிக் காட்டுவார்கள்.
நிறைவாக ராகுதசை பற்றி எனக்குத் தெரிய பரம்பொருளால் அனுமதிக்கப்பட்ட ஒரு சூட்சுமத்தை சொல்லி இம்மாதக் கட்டுரையை முடிக்கிறேன்.
எப்போதுமே ராகு தசை நடந்து கொண்டிருக்கும் பொழுது, ராகு தசை சுக்கிர புக்தியில் இருந்து ஒரு திருப்பம் இருக்கும். ஒரு ஜாதகருக்கு ராகு தசை நல்ல பலன்களைத் தந்து கொண்டிருந்தால் சுக்கிரபுக்திக்கு பிறகு வரும் கடைசி மூன்று புக்திகளில் அதாவது சூரிய, சந்திர, செவ்வாய் புக்திகளில் மாறுபாடான கெடுபலன்களைச் செய்வார்.
ஏற்கனவே ராகுதசையில் கெடுதலான பலன்கள் நடந்து கொண்டிருந்தால் மேற்கண்ட மூன்று புக்திகளிலும் சற்று மூச்சு விட்டுக் கொள்ளும்படியான ஒரு சுமுக நிலையை ராகு தருவார்.
ராகுதசையில் மேற்கண்ட அந்தரங்களிலும் இதை உணரலாம். இதற்கு ராகுவிற்கு சூரிய , சந்திர , செவ்வாய் , மூவரும் கொடிய பகைவர்கள் என்பது காரணமாக இருக்கலாம் .
ராகு எப்பொழுதுமே சூரிய சந்திரர்களை கடும் பகைவராக எண்ணுபவர். கிரகணம் உண்டாவதே ராகு கேதுக்களால்தான். அதாவது மூல ஒளிக் கிரகங்களை மறைத்து இருளாக்கும் தன்மை ராகு கேதுக்களுக்கு மட்டுமே உண்டு என்பதால்தான் சூரிய சந்திரர்களுக்கும் ராகு கேதுக்களுக்கும் பகை என்பது உண்டாயிற்று.
இதைப் புரியும்படி விளக்கவே நமது ரிஷிகள் பாற்கடலில் பிறந்த அமுதத்தை உண்ணும் போது ராகு கேதுக்கள், சூரிய சந்திரர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டு தலைவேறு உடல் வேறு ஆனார்கள் என்ற கதையினைச் சொன்னார்கள்.
அடுத்த மாதம் இன்னும் சில சூட்சுமங்களைப் பார்க்கலாம்.......
சாயா கிரகங்களின் சூட்சும நிலைகள்-10

ஆமேடம் எருது சுறா நண்டு கன்னி
ஐந்திடத்தில் கருநாகம் அமர்ந்து நிற்கில்
பூமேடை தனில் துயிலும் ராஜயோகம்
போற்றிடுவர் வேறு இன்னும் புகலக் கேளாய்
ஏமாறாதே நான்கு கேந்திரத்தும்
இடைவிடாமற் கிரகம் இருந்தாகில்
தேமேவு பர்வதமா யோகமாகும்
சீமான் ஆகுவான் ராஜயோகஞ் செப்பே...
தமிழ் ஜோதிட நூல்களில் மிகவும் மதிப்பு வாய்ந்ததான �ஜாதக அலங்காரம்� ராகுவைப் பற்றி குறிப்பிடும் மேற்கண்ட பாடல் ஏறத்தாழ அனைத்து ஜோதிடர்களும் அறிந்த ஒரு புகழ் பெற்ற பாடல்.
இந்த பாடலின் முதல் மூன்று வரிகள் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ஐந்து ராசிகளில் ராகு இருந்து அதனுடைய தசை வரும் போது அந்த ஜாதகருக்கு � பூப்படுக்கையில் படுக்கும் ராஜயோகம்� எனச் சொல்லுகிறது.
அடுத்த வரிகள் நான்கு கேந்திரங்களிலும் தொடர்ந்து கிரகங்கள் இருந்தால் சிறப்பான பர்வத யோகத்தை தரும் எனக் குறிப்பிடுகிறது.
மேலே சொல்லப்பட்ட இந்த �நான்கு கேந்திரங்களில் கிரகங்கள்� எனும் அமைப்பை மேற்கண்ட ஐந்து ராசிகளில் இருக்கும் ராகுவிற்கு நான்கு கேந்திரங்களில் கிரகங்கள் இருந்தால் இந்த யோகம் என்று சிலரும், இந்த ராசிகளில் ராகு இருக்கும் நிலையில் லக்னத்திற்கு நான்கு கேந்திரங்களில் கிரகங்கள் இடைவிடாமல் இருந்தால் இது போன்ற சிறந்த பர்வதயோகம் என்று சிலரும் கருத்து வேற்றுமை கொள்கின்றனர்.
ஜாதக அலங்காரத்திலேயே இப்பாடலுக்கு லக்னத்திலிருந்து இடைவிடாமல் நான்கு கேந்திரங்களிலும் கிரகங்கள் இருந்தால் என்றுதான் விளக்கம் சொல்லப் பட்டிருக்கிறது.
என்னுடைய முப்பதாண்டு கால ஆய்வில் நான் உணர்ந்த உண்மை என்னவெனில் மேற்கண்ட மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய இடங்களில் ராகு அமர்ந்து இந்த பாவங்களில் இருக்கும் ராகுவிற்கு கேந்திரங்களில், அதாவது ராகுவின் முதலாம் கேந்திரமான அவர் இருக்கும் வீட்டில் அவருடன் இணைந்து ஒரு கிரகம், அடுத்து ராகுவிற்கு நான்கில் ஒன்று, அடுத்ததாக ராகுவிற்கு எதிரில் இருக்கும் கேதுவுடன் இணைந்து ஒரு கிரகம், அடுத்து ராகுவிற்கு பத்தாமிடத்தில் ஒரு கிரகம் என இடைவிடாமல் கிரகங்கள் இருந்தால் மிகப்பெரிய ராஜயோகத்தை ராகு தன் தசையில் செய்யும்.
இதுபோன்ற அமைப்பில் ராகு பதினொன்றில் இருந்தாரெனில் மற்ற அனைத்துக் கிரகங்களும் பணபரஸ்தானங்கள் என்று சொல்லப்படும் இரண்டு ஐந்து எட்டு பதினொன்றில் இருக்கும். அப்போது பாக்யாதிபதி இரண்டில் இருக்கலாம். ஜீவனாதிபதி ஐந்தில் அமர்ந்து ராகுவைப் பார்க்கலாம். தனாதிபதி எட்டில் அமர்ந்து தன் வீட்டைப் பார்க்கலாம். பஞ்சமாதிபதி ராகுவுடன் இணைந்திருந்து ஜீவனாதிபதியைப் பார்க்கலாம்.
இந்த கேந்திர அமைப்பில் ராகு அனைத்துக் கிரகங்களின் இணைப்பினால் அவர்களின் பலத்தைக் கவர்ந்து தன் தசையில் மிகப் பெரிய தனலாபத்தை பொருளாதார மேன்மையைத் தரும்.
அதேபோல ராகு மூன்றாமிடத்தில் இருந்தாரெனில் மற்ற கிரகங்கள் ஆபோக்லிய ஸ்தானங்கள் என்று சொல்லப்படும் மூன்று ஆறு ஒன்பது பனிரெண்டு ஆகிய இடங்களில் இருக்கும். இந்த அமைப்பிலும் பாக்யாதிபதி தன் வீட்டிலோ அல்லது ராகுவுடன் இணைந்து தன் வீட்டைப் பார்வையிட்டோ மற்ற துர்ஸ்தானாதிபதிகள் ஒருவருக்கொருவர் மாறி அமர்ந்தோ இருந்தார்கள் எனில் ராகு யோகம் செய்வார்.
அதே நேரத்தில் ராகுவுக்கு நான்கு கேந்திரங்களிலும் இடைவிடாமல் கிரகங்கள் இருக்கும் நிலையில் யோகம் பூரணமாகக் கிடைக்கும். ஏதேனும் ஒரு இடத்திலோ அல்லது ராகு கேதுவுடன் கிரகங்கள் இணையாமல் ராகுவிற்கு இரண்டு பக்கங்களில் மட்டும் கிரகங்கள் இருந்தாலும் யோக அமைப்புத்தான்.
ஆனால் இந்த யோகம் செயல்பட வேண்டுமெனில் ராகுதசை வர வேண்டும். புக்திகளில் இந்த அமைப்பு பலன் அளிக்காது.
ஒரு வகையில் ராகு பகவானை நான் இராமாயணத்தில் ராமபிரானால் மறைமுக வழியால் வீழ்த்தப்பட்ட வாலியுடன் ஒப்பிடுவேன். எப்படியெனில் ராமாயணத்தில் வரும் கதாபாத்திரமான வாலி தன் எதிரில் நின்று சண்டையிடுபவர்களின் பலத்தை தன்வசமாக்கிக் கொள்ளும் திறமை படைத்தவர். அதனாலேயே ஸ்ரீராமர் வாலியை மறைந்திருந்து அம்பெய்தி வீழ்த்தினார்.
அதுபோவே ராகுவும் தன் எதிரில் அமர்ந்து தன்னைப் பார்க்கும் கிரகங்களின் பலத்தை முற்றிலும் தனதாக்கிக் கொண்டு அந்த கிரகங்களை ஒன்றுமில்லாமல் செய்து விடுவார்.
உதாரணமாக கேதுவுடன் இணைந்து ராகுவைப் பார்க்கும் செவ்வாயின் தசையில் நல்ல, கெட்ட பலன்கள் எதுவும் முழுமையாக இருக்காது. ஆனால் அடுத்து நடைபெறும் ராகு தசையில் ராகு, செவ்வாயின் பலன்களை முழுமையாகச் செய்வார். அதேபோல் கேதுவுடன் இணைந்து கேளயோகத்தில் இருக்கும் குருபகவானின் பலனை ராகு முழுக்க தனது தசையில் செய்து விடுவார். குருதசை ராகு தசையின் பலன்களின் தொடர்ச்சியாகத்தான் இருக்கும்.
அதே நேரத்தில் தனக்கு எதிரில் இல்லாமல், தன்னை தனது சிறப்புப் பார்வைகளால் பார்க்கும் குருபகவானின் முழுபலத்தையும் ராகுவால் பறிக்க முடியாது. அதாவது ராகுவிற்கு திரிகோணங்களில் இருந்து தனது ஐந்து, ஒன்பதாம் பார்வைகளால் ராகுவைப் பார்க்கும் குரு தனது பலத்தை இழக்க மாட்டார்.
இன்னொரு நிலையாக சிறப்பு கேந்திரப் பார்வைகளைப் பெற்ற சனியும், செவ்வாயும் குறிப்பிட்ட ஒரு நிலையில் ராகுவை பார்ப்பது நல்ல பலன்களைத் தராது.
அதாவது செவ்வாய் நான்காம் பார்வையையும் சனி பத்தாம் பார்வையையும் சிறப்பு கேந்திரப் பார்வைகளாகக் கொண்டவர்கள். இவர்கள் இருவரும் ராகுவிற்கு கேந்திரங்களில் அதாவது ராகுவிற்கு நான்கில் சனியும், பத்தில் செவ்வாயும் இருந்தால் இருவருமே ஒரு சேர ராகுவைப் பார்ப்பார்கள்.
(ஏற்கனவே இந்த தொடரில் நான் ராகுபகவான் செவ்வாய், சனி தொடர்பை பெறக்கூடாது என்று சொல்லி இருக்கிறேன்)
இது போன்று அமைப்பில் ராகு இருக்கும் பட்சத்தில் ராகு அந்த ஜாதகத்தில் சனியும் செவ்வாயும் எந்த ஆதிபத்தியங்களுக்கு உரியவர்களோ அந்த ஆதிபத்தியங்களையும் இருவரின் காரகத்துவங்களையும் தனது தசை புக்தி அல்லது அவர்களின் தசை புக்திகளில் கெடுப்பார்.
குறிப்பாக இதுபோன்று கேந்திர அமைப்பில் சனி செவ்வாய் இருந்தால் ராகு தசை சனிபுக்தி அல்லது சனிதசை ராகு புக்திகளில் சனி அடிமைவேலை மற்றும் தொழில்காரகன் என்பதால் ஜாதகருக்கு வேலையிழப்பு, தொழில்சரிவு போன்றவைகளும் செவ்வாய் சகோதரகாரகன் என்பதால் ராகு தசை செவ்வாய் புக்தி அல்லது செவ்வாய் தசை ராகு புக்திகளில் சகோதர இழப்பு, சகோதரவிரோதம் போன்ற பலன்களும் மேற்படி கிரகங்களின் ஜாதக ஆதிபத்தியங்களில் கெடுதல்களான நிகழ்வுகளும் நடக்கும்.
இதே அமைப்பு தலைகீழாக அதாவது ராகுவிற்கு நான்கில் செவ்வாயும் பத்தில் சனியும் இருந்தால் இருவரும் ஒரு சேர கேதுவைப் பார்ப்பார்கள். அப்போது நான் மேற்சொன்ன பலன்கள் கேதுதசை சனிபுக்தி அல்லது சனிதசை கேது புக்தி மற்றும் கேதுதசை செவ்வாய் புக்தி அல்லது செவ்வாய் தசை கேது புக்திகளில் நடக்கும்.
பொதுவான இன்னொரு கருத்தையும் சொல்லி விடுகிறேன்...
சந்திரனின் ஏறுகணு ராகு, இறங்குகணு கேது என்பதால் அதாவது சந்திரனின் சுற்றுப்பாதையில் ஏறுபாதை ராகு, இறங்குபாதை கேது என்பதால் ராசிச் சக்கரத்தின் முதல் ஆறு ராசிகளான மேஷம் முதல் கன்னி வரையில் ராகு இருந்தால் நல்ல பலன்களையும் அடுத்த ஆறு ராசிகளான துலாம் முதல் மீனம் வரை கேது இருந்தால் நல்ல பலன்களையும் செய்வார்கள்.
அடுத்த இதழில் சந்திப்போம் ......
சாயா கிரகங்களின் சூட்சும நிலைகள்-1
நிழல் கிரகங்களான ராகு,கேதுக்களைப் பற்றிய இந்த தொடரை ஆரம்பத்திலிருந்து படித்து வரும் வாசகர்கள் ஒரு விஷயத்தை கவனித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இதைக் குறிப்பாக கண்டுணர்ந்து என்னிடம் கேட்ட சேலம் ஓய்வு பெற்ற இன்ஜினியரிங் கல்லூரி பேராசிரியரையும், உடுமலைப்பேட்டை மற்றும் தூத்துக்குடி வாசகர்களையும் நான் பாராட்டுகிறேன்.
அதாவது பெரும்பாலான நமது கிரந்தங்கள் ராகுவிற்கு 3, 6, 11 மிடங்கள் நல்ல இடங்கள், இந்த ஸ்தானங்களில் இருக்கும் ராகு நன்மைகளைச் செய்வார் என்று சொல்லும் நிலையில் இந்த தொடரில் நான் 3, 11 மிடங்களில் மட்டுமே ராகு நன்மைகளைச் செய்வார் என்றே சொல்லி வந்திருக்கிறேன்.
அது ஏனெனில் நமது மூலநூல்கள் யாவும் பெரும்பாலான நுணுக்கங்களை பொதுவாகவும், குறிப்பால் உணர்த்தியும் சொல்லும் தன்மை கொண்டவை. இதைப் பற்றி நான் ஏற்கனவே �பாதகாதிபதி பற்றிய ரகசியங்கள்� கட்டுரையில் நமது ஞானிகள் ஒன்றும் கணக்கு வாத்தியார்கள் அல்ல....... உங்களின் காதுகளைப் பிடித்துத் திருகி ஜோதிட ரகசியங்களை கற்றுத் தருவதற்கு என்று குறிப்பிட்டிருக்கிறேன்.
ஜோதிடக்கலை என்பது அனுபவத்தில் படிப்படியாக உணர்ந்து முன்னேற வேண்டிய ஒரு கலை. நெஞ்சில் குத்தி குத்தி மனப்பாடம் செய்யும் பள்ளிக்கூட கலை அல்ல. இங்கு அடிப்படை விஷயங்கள்தான் தெளிவாக்கப்படும். அதன் மேல் நீங்கள்தான் உங்களின் அனுபவத்தைக் கொண்டு கட்டிடம் எழுப்பிக் கொள்ள வேண்டும். அதுதான் நீடித்தும் இருக்கும்.
எப்படி LKG மாணவனுக்கு MA பாடத்தை நடத்த முடியாதோ அது போல ஆரம்ப நிலையில் உள்ளவருக்கு சூட்சுமங்களை சொன்னாலும் புரியாது என்பதால் பல விஷயங்கள் இங்கே நீங்கள் படிப்படியாக ஒவ்வொரு நிலையாகக் கடக்கும் போது மட்டுமே புரியும்படியாக ஞானிகளால் சொல்லப்பட்டன. அதன்படியே அமைக்கப்பட்டன.
அதன்படி மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய இடங்கள் ஜாதகத்திற்கு எந்த பாவமாக இருந்தாலும் அதில் இருக்கும் ராகு மிக மோசமான கெடுதல்களை செய்ய மாட்டார் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருந்தீர்களேயானால்,
இந்த ஐந்து இடங்களைத் தவிர மற்ற இடங்கள் ஜாதகருக்கு ஆறாம் இடமானால் அதில் இருக்கும் ராகு ஜாதகருக்கு கெடுதல்களைச் செய்வார் என்பதையும் உங்களால் புரிந்து கொண்டிருக்க முடியும்.
உத்தரகாலாம்ருதத்தில் 3, 6, 11 மிடங்களை ராகுவிற்கு நன்மை தரும் இடங்களாகக் கூறும் மகாபுருஷர் காளிதாசரே இன்னொரு சுலோகத்தில் 6, 8, 12ல் இருக்கும் ராகு கேதுக்கள் ஜாதகனுக்கு முதலில் நன்மையைச் செய்து பிறகு அவனுக்கு மாரகம் அல்லது மரணத்திற்கு நிகரான துன்பத்தை தருவார்கள் என்று சொல்லுகிறார்.
ஆறாமிடம் என்பது வழக்கு, வம்பு, விபத்து, நோய், கடன், எதிரி இவைகளுக்கான ஸ்தானம் என்பதால்தான், இருக்கும் வீட்டை கெடுக்கும் இயல்புடைய பாவக்கிரகமான ராகு அங்கே அமரும் போது மேற்படி ஆறாம் பாவத்தின் கெட்ட ஆதிபத்தியங்களை கெடுத்து நல்ல பலன்களைத் தருவார் என்பதன் அடிப்படையில் ராகுவிற்கு ஆறாம் பாவம் நன்மைகளைத் தரக்கூடிய இடம் என்று சொல்லப்பட்டது.
ஆனால் ஒரு சுபகிரகம் தான் இருக்கும் பாவத்தை வலுவாக்கும் என்பதன் அடிப்படையில் சில நிலைகளில் ராகு சுபர்களின் பார்வை தொடர்பு இவைகளைப் பெற்று முழு சுபத்தன்மை அடையும் நிலையில் ஆறாம் பாவத்தில் அமர்ந்தால் அந்த பாவத்தை வலிமை பெறச் செய்து வம்பு வழக்கு விபத்து கடன் நோய் போன்ற கெடுபலன்களைச் செய்வார்.
மிதுனம் துலாம் தனுசு மீனம் போன்ற சுபராசிகள் ஆறாம் இடமாகி, இந்த பாவங்களின் அதிபதிகளான குரு சுக்கிரன் புதன் ஆகியோர் உச்சம் போன்ற வலிமை பெற்று அந்த பாவம் வலுப்பெற்ற நிலையில் அங்கே ராகு அமர்ந்து சுபர்களின் தொடர்பையும் பெற்றிருந்தால் ராகுதசை நல்ல பலன்களைச் செய்வது கடினம்.
பெரும்பாலும் ஆறாமிடத்தில் இருக்கும் ராகு தனது தசை புக்திகளில் தன்னுடன் இணைந்திருப்பவரின் நெருக்கத்தையும் இணைந்திருக்கும் தூரத்தையும் பொறுத்து உடன் இருப்பவரின் காரகத்துவத்தையும் அழிப்பார்.
உதாரணமாக மிதுனம் ஆறாமிடமாகி புதன் சுபத்துவம் பெற்று ராகு சுக்கிரனுடன் இணையும் நிலையில் ராகுதசை புக்திகளில் வாழ்க்கைத் துணையைப் பாதிப்பார். இதே போன்ற நிலையில் ஆறாமிடம் சுபரின் வீடாகி வலுப் பெற்ற நிலையில் செவ்வாயுடன் இருந்தால் சகோதரனையும், சனியுடன் இருந்தால் ஜாதகரின் ஆயுளையும் பாதிப்பார்.
அதே நேரத்தில் இன்னொரு நிலையாக இத்தகைய சுபர் வீடுகளில் தனித்து இருக்கும் ராகுவும் தான் இருக்கும் வீட்டில் அதிபதியான அந்த சுபக்கிரகம் வலிமை பெறும் நிலையில் ஆறாம் வீட்டின் கெடுபலன்களைத்தான் செய்வார். நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது. (சொல்வது புரியவில்லையா? திரும்பத் திரும்ப படியுங்கள். புரியும்.)
ராகு என்பவர் ஏமாற்றும் தன்மை கொண்ட, எந்த வழியிலாவது ஏராளமான வருமானத்தை தரும் ஒரு இயற்கை பாவக்கிரகம். அவர் கெட்ட நிலைகளில் இருந்தால்தான் நல்ல பலன்கள் இருக்கும். முற்றிலும் சுபத்தன்மை அடைந்தால் தன் இயல்புக்கு மாறான தன்மைகளை அளிக்க முடியாமல் ராஜபக்சே முன் பிரபாகரன் இப்போது தோன்றினால் எப்படி குழம்பிப் போவாரோ அதுபோல குழம்பி அந்த பாவத்தின் தன்மைகளை மட்டும் செய்ய ஆரம்பித்து விடுவார்.
அதேபோல தன் காரகத்துவங்களை (முறைகேடான வழியில் பணம் சம்பாதித்தல், சுலபமான முறைகளில் வருமானம் பெறுதல், சாதுர்யமாக ஏமாற்றுதல் ) அவர் முழுமையாக எவர் தயவும் இன்றி, யாருடைய தலையீடும் இல்லாமல் ஜாதகருக்கு தர வேண்டுமெனில் அவர் மேஷம் ரிஷபம் கடகம் கன்னி மகரம் ஆகிய வீடுகளில் மட்டுமே இருக்க வேண்டும்.
மேற்படி பாவங்களில் தனித்தோ அல்லது வேறு எவருடன் சேர்ந்தோ இருக்கும் ராகு மட்டுமே சுயமாக எவருடைய கட்டுப்பாடும் இன்றி தன் விருப்பப்படி இயங்க கூடிய அதிகாரம் படைத்தவர்.
அதே நேரத்தில் 3, 11 மிடங்களில் இருக்கும் ராகு கேதுக்கள் அத்தனை சிறப்பாக சொல்லப்படுவதன் சூட்சுமத்தை இந்த தொடரின் ஆரம்பத்திலேயே நான் உங்களுக்கு விளக்கியது நினைவிருக்கும்.
அதாவது மேற்படி இரண்டு பாவங்களில் ராகுவோ அல்லது கேதுவோ இருக்கும் நிலையில், அதன் இன்னொரு மறுமுனைக் கிரகம் அந்த லக்னத்தின் யோக திரிகோண பாவங்களான ஐந்து அல்லது ஒன்பதாமிடத்தில் இருந்து அந்த பாவத்தின் நன்மைகளை எடுத்துக் கொடுக்கும் என்பதால்தான் 3, 11 மிடங்கள் ராகு கேதுக்களுக்கு சிறப்பாகச் சொல்லப்படுகின்றன.
இந்த தொடரின் மூலம் ராகுவைப் பற்றிய பெரும்பாலான சந்தேகங்கள் உங்களுக்கு தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறேன்.
ராகுவைப் பற்றி குருவருள் ஜோதிடத்தில் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே வெளியிடக் கூடிய ஒரு கட்டுரையை நான் எழுதியிருந்த நிலையில் உங்களுடைய ஏராளமான கேள்விகளும், தொலைபேசி பேச்சுக்களுமே இத்தனை மாத தொடராக இதனை மாற்றியது.
இன்னும் காலசர்ப்ப தோஷம், ஆழ்வார்கள் நாயன்மார்கள் போன்ற ஆன்மீகத் திருவுருக்கள் பெரும்பாலும் ராகுகேதுக்களின் நட்சத்திரங்களில் அவதரிப்பது ஏன்? என்பது போன்றவைகளும், கேதுவின் தனிப்பட்ட சிறப்பியல்புகளும் எழுதுவதற்கு இருக்கின்றன.
ஆயினும் என்னுடைய அதிகமான வேலைப்பளுவினால் இத்தொடரை இத்துடன் முடித்துக் கொள்கிறேன். மீதமுள்ள சூட்சுமங்களையும் என்றேனும் ஒருநாள் உங்களுக்குச் சொல்ல பரம்பொருள் என்னை அனுமதிக்கும் என்று நம்புகிறேன்.
வணக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...