சனி, 8 மார்ச், 2014

குருவின்றி சகல சாஸ்திரங்களையும் கற்கும் யோகம் யாருக்கு அமையும்

ஒருவருக்கு குரு என்பவர் சகலவற்றையும் கற்றுக் கொடுப்பவராகவும் ஒருவருடைய வாழ்வில் கல்வி கண் திறந்து அவருடைய வாழ்க்கையில் ஒளி ஏற்றக் கூடியவராகவும் இருப்பார். பொதுவாக குருவில்லாமல் ஒருவரால் கல்வி கற்பது என்பது மிகவும் கடினம். அதனால்தான் ’குரு இல்லா வித்தை பாழ்’ என்று சொல்லி வைத்துள்ளார்கள். அப்பேர்பட்ட குரு இல்லாமல் ஒருவர் சகல சாஸ்திரங்களையும் கற்று கொள்ள முடியுமா.

முடியும் ஆனால் அதற்கான கிரக நிலைகள் இருக்க வேண்டும். அதைப் பற்றி இப்போது பார்ப்போம்.

ராகு மகர ராசியிலும் கேது கடக ராசியிலும் இருப்பவர்களுக்கு இந்த யோகம் அமையும். இந்த நிலையில் ராகு கேதுக்கள் மாறியிருந்தாலும் பரிவர்த்தனை என்ற அடிப்படையில் இந்த யோகம் அமையும். இது ஏன் என்பதை விளக்கிச் சொல்ல புராண வரலாற்றை இங்கே சொல்வோம்.

முன்பொரு காலத்தில் சோமுகாசுரன் என்ற அசுரனொருவன் பிரம்ம தேவரிடமிருந்து நான்கு வேதங்களையும் கவர்ந்து எடுத்து (இக்கால பாஷையில் சொல்வதானால் திருடி) கொண்டு போய் மகர ஆழியில் (அதாவது கடல் – மகர ராசி கடல் போன்றது, ஜல ராசி என்றும் சொல்வார்கள்) வைத்து வாழ்ந்து வந்ததாகவும், அது எங்கு தேடியும் கிடைக்காமல், பிரம்ம தேவர் திருமாலின் உதவியை நாட அவரும் பெருமுயற்சிக்குப் பிறகு மகர ஆழியில் மறைந்திருந்த அசுரனை வதம் செய்து அதை மீட்டுக் கொண்டு வந்ததாகவும் அப்போது ரிக், யஜூர், சாம வேதங்களை கடக ஆழியில் வைத்து (இதுவும் ஒரு ஜல ராசிதான்) கேதுவை காவலாகவும் நான்காவது வேதமான அதர்வண வேதத்தை மகர ஆழியில் வைத்து ராகுவை காவலாக வைத்து அருள் செய்தார். இவ்விதம் காவலாக அமர்ந்த ராகு கேதுக்கள் குருவின்றி தாமே அவ்வேதங்களைக் கற்றுக் கொண்டு மறை ஓதும் அந்தணர்கள், மறை ஞானமுள்ள முனிவர்கள் போன்றார்களுக்கு சமமான அந்தஸ்தைப் பெற்றார்கள்.

மேலும் இந்த அமைப்புள்ளவர்கள் கல்வி மற்றும் கேள்விச் செல்வத்தில் சிறந்து விளங்குவார்கள் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த அமைப்புள்ளவர்கள் பொருட் செல்வத்தில் குறை பெற்று காணப்படுவார்கள் எனப் படுகிறது. இது பொது விதி. தன யோகங்களோ, வேறு ராஜ யோகங்களோ அமையப் பெற்றுள்ளவர்கள் நிச்சயம் தனவான்களாக இருப்பார்கள்.

இந்த அமைப்பிற்கு உதாரண ஜாதகங்கள் என்றால் வள்ளலார் வடலூர் ராமலிங்க அடிகளாரின் ஜாதகத்தில் ராகு மகரத்திலும் கேது கடகத்திலும் இருக்கிறார்கள். இன்னொருவர் திருமுருக கிருபானந்த வாரியார். அவர் ஜாதகத்தில் கேது மகரத்திலும் ராகு கடகத்திலும் இருக்கிறார்கள்.

அடியேனுடைய ஜாதகத்திலும் மகர ராகுவும் கடக கேதுவும்தான். பல சந்தர்ப்பங்களில் பிறருடைய தயவில்லாமல் பலவற்றைக் கற்றிருக்கிறேன். கற்றும் வருகிறேன். இதற்கு மேல் சொன்னால் அது நான் என்னையே சுய விளம்பரப் படுத்திக் கொள்வது போலும் சுய புராணம் பாட பதிவு ஆரம்பித்தது போலும் ஆகி விடும். இதைப் படிக்கும் யாரும் தங்களுக்கு இந்த அமைப்புள்ள ஜாதகம் இருந்தாலோ அல்லது தெரிந்தவர் யாரும் இருந்தாலோ எனக்கு தெரியப் படுத்துங்கள். என் ஆராய்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

என் உறவுக்காரர்கள் இருவருக்கு இந்த அமைப்பு இருக்கிறது. இருவருக்கும் கேது மகரத்தில், ராகு கடகத்தில். அதை எனது ஆராய்ச்சிக்காக வைத்திருக்கிறேன்.

அடுத்து இன்னொரு முக்கியமான விசயத்தையும் பார்த்து விடுவோம். ராகு கேது ஆகியவற்றின் தசா புத்தி அந்தர காலங்களில் யாருமே படாத பாடு படுவார்கள். போதுமடா சாமி என்ற நிலைக்குத் தள்ளப் படுவார்கள். ஆனால் கடகம், மீனம் ஆகிய ஜால ராசிகளை லக்கினங்களாகக் கொண்டு பிறந்தவர்களுக்கு இதில் விதிவிலக்கு உண்டு. அவர்களுக்கு ராகு தசா புத்தி காலங்களில், பிற்கால வாழ்க்கைக்கு தேவையான பாக்கியங்களும், ஆடை, ஆபரண, அணிகலன்  மற்றும் செல்வ சேர்க்கையும் ஏற்படும். இதை விளக்கும் ஜோதிட பாடலை கீழே பார்ப்போம்.

பேசுலக்கின மீனநண்டிற் பிறந்தவர் தங்கட்கெல்லாம்
பாசமாய் மகாதிசையின் பலன்களைப் பார்க்கும்போது
தேசுறு கரியபாம்பின் திசைவரிற் பாக்கியங்கள்
தூசுபொன் சோபனம் நற்சுப பலன் பெறுவர்தாமே

அதே போல் கன்னி, மகர லக்கினங்களில் பிறந்தவர்களுக்கு கேது தசா புத்திகளில் பெரும் செல்வம் சேரும். பலரும் போற்றிப் பாரட்டும் வகையில் வாழ்க்கையும் வாகன சேர்க்கையும் அமையும். இதை விளக்கும் ஜோதிட பாடலை கீழே பார்ப்போம்:-

தார்செறி மகரங்கன்னி தனிற் பிறந்தோர்கட்கெல்லாம்
பார்செறி மகாதிசையின் பலன்களைப் பார்க்கும் போது
சீர்பெறு கேதுவான திசை வரும்போது செல்வம்
ஊர்திசார் அரசரால் சன்மானமுண்டாங் கண்டீரே

இப்பாடலின் படி அரசரால் சன்மானம் பெற இந்த காலத்தில் அரசர் எங்கே இருக்கிறார். அரசாங்க சன்மானம் (அமைச்சர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் மூலாமாக) பெறலாம்.

இன்றைக்கு இவை போதும் என்று நினைக்கிறேன். சுப்பையா வாத்தியார் எப்போதும் சொல்வது போல்தான். உங்கள் நேரம் பொறுமை இவற்றை கருதி இத்துடன் நிறைவு செய்கிறேன். இடையில் வேறு தலைப்பில் பாடம் நடத்திவிட்டு பிறகு ராகு கேதுக்களைப் பற்றிய பாடத்தை மேலும் தொடரலாம் என்று இருக்கிறேன்.

செவ்வாய் தோஷம்



பொதுவாகவே இன்றைய காலகட்டத்தில், திருமண வயதை எட்டிய (20 வயது முதல் 24 வயது வரை) , திருமண வயதைக் கடந்தும் (24 வயதைக் கடந்தும்) திருமணம் தடைபட்டு, திருமணம் ஆகாமல் இருக்கும் ஆண் பெண்களை பெற்றுள்ள பெற்றோர்களுக்கு, தங்கள் குழந்தைகளின் திருமணம் சம்மந்தப்பட்ட முக்கியமான சில பிரச்சினைகளுள் முதன்மையானதும், வேதனை தரக்கூடியதாகவும் இருக்கின்ற ஒரு விஷயம், இந்த செவ்வாய் தோஷம் தான்.

பெற்றோர்கள் தம் மக்களுக்கு திருமணம் நிச்சயிக்க முற்படும் போது திருமணப் பொருத்தம் பார்ப்பதற்காக ஜோதிடரை அணுகும் போது மணமகன் வீட்டார் அணுகும் ஜோதிடர் செவ்வாய் தோஷம் பற்றி ஒரு கருத்தை சொல்லுவார், மணமகள் வீட்டார் அணுகும் ஜோதிடர் செவ்வாய் தோஷம் பற்றி ஒரு கருத்தை சொல்லுவார். இரு வீட்டாரும் அவரவர் ஜோதிடர் சொல்வதையே வேதவாக்காக எடுத்துக்கொண்டு குழம்பிவிடுகின்றனர்.

செவ்வாய் தோஷத்திற்கு, தென் இந்திய மக்கள்தான் அதிக முக்கியத்துவம் தருகின்றனர். வட இந்தியாவில் செவ்வாய் தோஷத்திற்கு முக்கியதுவம் தருவதில்லை.

சரி. செவ்வாய் தோஷம் என்றால் என்ன?

லக்கினம், சந்திரன், சுக்கிரன் நின்ற ராசியிலிருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய ராசிகளில் இருந்தால், செவ்வாய் தோஷம் எனப்படும். இது பொது விதி. சில விதி விலக்குகளும் உண்டு.

பொது விதியிலேயே முரண்பாடுகள் இருக்கின்றன.
இந்த முரண்பாடுகளைப் பற்றி முதலில் பார்த்துவிட்டு, விதிவிலக்குகளைப் பற்றி பிறகு பார்ப்போம்.

லக்கினத்திற்கு மட்டும்தான் செவ்வாய் தோஷம் பார்க்க வேண்டும். சந்திரனுக்கோ, சுக்கிரனுக்கோ பார்க்க வேண்டிய தேவையில்லை, லக்கினம் நின்ற ராசியிலிருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய ராசிகளில் இருந்தால், செவ்வாய் தோஷம் ஏற்ப்படும் என்று ஒரு சில ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

லக்கினத்திற்குப் பார்ப்பது போல, சந்திரனுக்கும் பார்க்க வேண்டும். சுக்கிரனுக்குப் பார்க்க வேண்டியதில்லை, லக்கினம் அல்லது சந்திரன், இரண்டில் ஏதேனும் ஒன்றிற்கோ அல்லது இரண்டிற்குமா செவ்வாய் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் தோஷம் ஏற்படும் என்றும் லக்கினத்திற்கு மட்டும் செவ்வாய் தோஷம் அது முழு தோஷம் என்றும், சந்திரனுக்கு மட்டும் இருந்தால் அது அரைபங்கு தோஷம் என்றும் இரண்டுக்கும் இருந்தால் கடுமையான தோஷம் என்றும் ஒரு சில ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

இன்னும் சில ஜோதிடர்கள் லக்கினப்படி உள்ள பரிகார செவ்வாயை சந்திரனுக்கு உள்ள சுத்த செவ்வாயை பொருத்தலாம் என்றும் கூறுகின்றனர்.

ஸ்ரீ பொத்தேரி ராமய்யங்கார் மற்றும் ஸ்ரீ கீழாத்தூர் ஸ்ரீநிவாசாச்சாரியார் ஆகிய இரு அனுபவமிக்க ஜோதிடர்களால் எழுதப்பட்டு “ தி லிட்டில் பிளவர் கம்பெனி ” பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட “ குடும்ப ஜோதிடம் ” என்ற நூலில் “ லக்கினம், சந்திரன், சுக்கிரன் நின்ற ராசியிலிருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய ராசிகளில் இருந்தால், செவ்வாய் தோஷம் எனப்படும் ” என்று பொது விதியையும் கூறி சில விதிவிலக்குகளையும் குறிப்பிடுகிறார்.

ஆனால் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தாரல் நடத்தப்பட்ட “ ஜோதிடவியல் பட்டயச் சான்றிதழ் ” படிப்பிற்கான பாடத்திட்டத்தைத் தயாரித்த ஆசிரியப் பெருமக்கள் - பல நூறு ஜாதகங்களை ஆய்வு செய்தவர்கள் – பாடப்புத்தகத்தில் “ செவ்வாய் தோஷம் திருமணத்தைத் தாமதப்படுத்துமே தவிர தோஷத்தைத் தராது. ” என்று வலியுறுத்திக் கூறியுள்ளனர். மேலும், பல நுற்றுக்கணக்கான ஜாதகங்களை ஆராய்ந்து அனுபவம் மிக்க ஜோதிடர் ஸ்ரீமான் ஓ.பி. லக்ஷ்மி நரசிம்மாச்சாரியார், அவர்களால் எழுதப்பட்டு ஆனந்தபோதினி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட ஜோதிஷ பாவத்திரைய நிர்ணயம் என்ற நூலில் செவ்வாய் தோஷம் என்று ஒரு தோஷமே இல்லை என்று குறிப்பிடுகிறார்.

இனி விதி விலக்குகளைப் பற்றி பார்ப்போம்.

1) மேற்படி 2, 4, 7, 8, 12 –மிடங்கள் செவ்வாயின் ஆட்சி வீடாகிய மேஷம், விருச்சிகம் நீச்ச வீடாகிய கடகம், உச்ச வீடாகிய மகரம் ஆகிய ராசிகளாக இருந்து அங்கே செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை.

2) 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருக்கும் செவ்வாய், - சூரியன், சனி, குரு ஆகிய இம்மூன்று கிரகங்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்களின் சேர்க்கையோ பார்வையோ பெற்றிருந்தால் தோஷம் இல்லை.

3) ஜென்ம லக்கினம் கடகமாகவோ, சிம்மமாகவோ இருந்தால், 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் எங்கிருந்தாலும் தோஷம் இல்லை.

4) செவ்வாய் இருக்குமிடம் மிதுனம் அல்லது கன்னியாக இருந்து அது 2 –ஆம் வீடாக இருந்தால் தோஷம் இல்லை.

5) செவ்வாய் இருக்குமிடம் மேஷம் அல்லது விருச்சிகமாக இருந்து அது 4 –ஆம் வீடாக இருந்தால் தோஷம் இல்லை.

6) செவ்வாய் இருக்குமிடம் கடகம் அல்லது மகரமாக இருந்து அது 7 –ஆம் வீடாக இருந்தால் தோஷம் இல்லை.

7) செவ்வாய் இருக்குமிடம் தனுசு அல்லது மீனமாக இருந்து அது 8 –ஆம் வீடாக இருந்தால் தோஷம் இல்லை.

8) செவ்வாய் இருக்குமிடம் ரிஷபம் அல்லது துலாமாக இருந்து அது 12 –ஆம் வீடாக இருந்தால் தோஷம் இல்லை.

9) எந்த லக்கினமானாலும், செவ்வாய் இருக்குமிடம் சிம்மம் அல்லது கும்பமாக இருந்து, அது 2, 4, 7, 8, 12 – ஆம் வீடுகளில் எதுவாக இருந்தாலும் தோஷம் இல்லை.

10) 2, 4, 7, 8, 12 – ஆம் வீடுகளில் செவ்வாய் சந்திரன் அல்லது புதன் அல்லது சந்திரன், புதன் இருவருடன் சேர்ந்திருந்தால் தோஷம் இல்லை.

11) செவ்வாய் நின்ற ராசி அதிபதி லக்கினத்திற்கு கேந்திரத்தில் அல்லது திரிகோணத்தில் இருந்தால் தோஷம் இல்லை.

12) செவ்வாய் 8, 12 – ல் இருந்து செவ்வாய் நின்ற ராசி மேஷம், சிம்மம், விருச்சிகம், மகரம் ஆனால் தோஷம் இல்லை.

13) ராகு, கேது -களின் சேர்க்கையோ பார்வையோ பெற்றிருந்தால், தோஷம் இல்லை.

14) செவ்வாய் சிம்மம், கடகம், தனுசு, மீனம் ஆகிய ராசிகளில் இருந்து அது 2, 4, 7, 8, 12 – ஆம் வீடுகளில் எதுவாக இருந்தாலும் தோஷம் இல்லை.

மேற்கண்ட பதினான்கு விதி விலக்குகளையும் தேவகேரளம் என்ற மூல நூலிலிருந்து ஸ்ரீ பொத்தேரி ராமய்யங்கார் மற்றும் ஸ்ரீ கீழாத்தூர் ஸ்ரீநிவாசாச்சாரியார் ஆகிய இரு அனுபவமிக்க ஜோதிடர்கள் தொகுத்து குடும்ப ஜோதிடம் – நூலில் தந்துள்ளனர்.

மேற்படி 14 விதிவிலக்குகளையும் பெரும்பாலான ஜோதிடர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. பொது விதியை மட்டுமே எடுத்துக் கொள்கின்றனர். அதையாவது முழுமையாக பயன் படுத்துகிறார்களா? என்றால் இல்லை. லக்கினத்துக்கு மட்டும்தான் செவ்வாய் தோஷம் பார்க்கவேண்டும், என்று ஒரு ரகம், லக்கினத்துடன் சந்திரனுக்கும் சேர்த்துப் பார்க்க வேண்டும் என்று ஒரு ரகம், லக்கினம், சந்திரன், சுக்கிரன் ஆகிய மூன்றுக்கும் பார்க்க வேண்டும் என்று ஒரு ரகம்.

ஒரு சில ஜோதிடர்கள் மேற்படி விதி விலக்குகளை பயன்படுத்துகின்றனர். எப்படி தெரியுமா?
2, 4, 7, 8, 12 – ல் செவ்வாய் இருந்து விதிவிலக்குகளில் ஏதாவது ஒன்றிரண்டின்படி செவ்வாய் தோஷம் இல்லாமலிருந்தாலும், இது பரிகாரச்செவ்வாய் அல்லது கழிக்கும் செவ்வாய், பரிகாரம் செய்து தோஷதைக் கழிக்க வேண்டும் இல்லையென்றால் விபரீதம் ஏற்படும் என்று கூறி பரிகாரம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கில் பணம் கறந்துவிடுகின்றனர்.

இப்படி முரண்பாடுகளையும், விதிவிலக்குகளையும் கொண்டுள்ள செவ்வாய் தோஷத்தைப் பற்றிய மேலும் சில கருத்துக்களையும் பார்போம்.

மணமக்கள் இருவரில் ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்து, மற்றவருக்கு இல்லாவிட்டால் செவ்வாய் தோஷம் இல்லாதவர் மரணம் அடைவார், என்பது பெரும்பாலான ஜோதிடர்களின் கருத்தாக இருக்கிறது. இந்தக் கருத்து சரியானது என்றால், மரணம் எப்பொழுது நிகழும்? என்று கேட்டால் செவ்வாய் திசையில் அல்லது செவ்வாய் புத்தியில் அல்லது செவ்வாய் அந்தரத்தில் மரணம் ஏற்படும் என்று கூறுவார்கள்.

செவ்வாய் திசையில் மரணம் ஏற்படும் என்றால்....
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், திருவாதிரை, சுவாதி, சதயம் போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் திசை சுமார் 70 – 80 வயதுக்கு மேல்தான் நடைமுறைக்கு வரும். 70 – 80 வயதுக்கு மேல் மரணம் என்பது சாதாரண விஷயம்.

செவ்வாய் புத்தியில் ஏற்படும் என்றால்.....
எந்த திசையில்? பொதுவாக ஒவ்வொரு மனிதனும் திருமணத்திற்குப் பிறகு சராசரியாக 3 அல்லது 4 திசைகளை சந்திக்கின்றனர்.

செவ்வாய் அந்தரத்தில் என்றால்.....
எந்த திசையில்? எந்த புத்தியில்?

யாருடைய ஜாதகப்படி செவ்வாய் திசை அல்லது புத்தி அல்லது அந்தரம் மரணத்தை தரும்?

செவ்வாய் தோஷம் உள்ளவர் ஜாதகப்படியா? செவ்வாய் தோஷம் இல்லாதவர் ஜாதகப்படியா?

இப்படி கேள்வி கேட்டால், இவன் விதண்டாவாதம் செய்கிறான், இவனுக்கென்ன தெரியும்? நான் என் அணுபவத்தில் எத்தனை ஜாதகங்களை பார்த்திருப்பேன்? என்னைவிட அவன் பெரிய இவனா? என்று ஏளனம் செய்வார்கள்.

இப்படி சொல்லும் பல ஜோதிடர்களிடம் கணவன் மணைவி இருவரில் ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்து மற்றவருக்கு இல்லாமல் இருந்து இருவரில் ஒருவர் மரணம் அடைந்து மற்றவர் உயிருடன் இருக்கும் ஒரே ஒரு ஜோடி ஜாதகத்தை ஆதாரமாகத் தாருங்கள் என்று நான் பலமுறை கேட்டிருக்கிறேன்.யாரும் தரவில்லை.

ஆனால் என்னிடம் இருவரில் ஒருவருக்கு செவ்வாய்
தோஷம் இருந்து மற்றவருக்கு இல்லாமல் இருந்து இருவரும் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஜாதகங்களும், இருவருக்கும் செவ்வாய் தோஷம் இல்லாமல் இருந்து, திருமணத்திற்குப் பிறகு 15 ஆண்டுகள் கழித்து விவாகரத்து பெற்றவர்கள் ஜாதகங்களும் உள்ளன.

ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷத்தை நிர்ணயிப்பதற்கு முன், கீழ்கண்ட விஷயங்களை கவனிக்க வேண்டும்.

1) அந்தந்த ஜாதகப்படி ஆதிபத்தியத்தின் அடிப்படையில் செவ்வாய் சுபரா? பாவியா?

2) அந்தந்த ஜாதகப்படி செவ்வாய் நின்ற ராசி அதிபதி, நட்சத்திர அதிபதி யார்? செவ்வாய் நின்ற ராசி அதிபதி, நட்சத்திர அதிபதியின் நிலை சாதகமானதா? பாதகமனதா?

3) மணமக்கள் இருவருக்கும், தோஷம் இருகிறது, அல்லது தோஷம் இல்லாமல் சுத்த ஜாதகமாக இருக்கிறது, என்ற நிலையில் திருமணத்திற்குப் பிறகு நன்மை இல்லாவிட்டாலும் எந்த தீய நிகழ்வுகளும் ஏற்படாது? என்பதற்கு எதுவும் உத்திரவாதம் உண்டா?

4) சூரியன், சந்திரன், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய எட்டு கிரகங்களும் தோஷத்தைத் தராதா?

5) 2, 4. 7, 8, 12 ஆகிய இடங்களைத் தவிர 1, 3, 5, 6, 9, 10, 11 ஆகிய இடங்களில் உள்ள செவ்வாய் தோஷத்தை செய்யாதா?

6) முன்னதாகக் கூறப்பட்ட 14 விதிவிலக்குகளையும் அனுசரிப்பதா? வேண்டாமா?

7) ஒரு குறிப்பிட்ட ஜாதகத்தில் மூலநூல்களில் கூறப்பட்டுள்ள ராஜயோக கிரக அமைப்பு இருந்த போதும் நடைமுறையில் அனுபவத்தில் ஒத்துப்போகவில்லை, ஏன் என்று கேட்டால் பெரும்பாலான ஜோதிடர்களின் கருத்து “ சில சிறப்பு விதிகளின்படி யோகம பங்கம் ஏற்பட்டுவிட்டது ”, என்று கூறுகிறார்கள். அதுபோல இந்த செவ்வாய் தோஷத்திற்கு தோஷ பங்க நிலை ஏற்பட்டுள்ளதா? என்று பார்க்க வேண்டுமா? கூடாதா?

8) லக்கினத்திற்கு மட்டும் தான் செவ்வாய் தோஷம் பார்க்கவேண்டும் என்று கூறுபவர்களுக்கு – களத்திரக்காரகன் சுக்கிரனுக்கு செவ்வாய் தோஷம் பார்க்கத் தேவையில்லையா? உடல் காரகன் மற்றும் மனோகாரகன் சந்திரனுக்கு செவ்வாய் தோஷம் பார்க்கத் தேவையில்லையா?

வெள்ளி, 7 மார்ச், 2014

திருமணத்திற்கு தடையாக இருக்கும் ராகு - கேது தோஷம்

மனித பிறவி எடுத்த ஒவ்வொருவர் ஜாதகத்திலும் சில தோஷங்கள் காணப்படுகின்றன. அவற்றில் முதன்மையான மற்றும் பிரச்சனைக்குரியதாக கருதப்படும் தோஷம் ராகு-கேதுவினால் வரும் தோஷங்களாகும்.

பிதூர் தோஷம், களத்திர தோஷம், சர்ப்பதோஷம், புத்திர தோஷம் போன்ற முக்கிய தோஷங்களுக்கு ராகு, கேதுக்களே காரணமாகின்றனர். ராகு-கேது எல்லோருக்கும் கெடுதலை செய்து விடுவதில்லை ஒரு சிலருக்கு அபரிதமான நன்மைகளையும் கொடுப்பார்கள்.

ஆண் பெண் இருபாலருக்கும் திருமணம் தடைப்பட்டால், கனவில் அடிக்கடி பாம்பு வந்தால் பரிகாரம் செய்வது நல்லது. திருநாகேஸ்வரம், கீழப்பெரும் பள்ளம் ஆகிய ராகு, கேது ஸ்தலங்களிலும், காளஹஸ்தி போன்ற சிறப்பு பெற்ற கோயில்களிலும் பரிகார பூஜைகள் செய்யலாம்.

மேலும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர், சிவன் உள்ளிட்ட (பாம்பு தொடர்பான) கோயில்களிலுக்கு சென்று வழிபாடும் மேற்கொள்ளலாம். நவகிரகத்தில் உள்ள ராகு/கேதுவுக்கும் விளக்கேற்றலாம். ஜோதிடத்தில் கேது ஞானக்காரகன் என்று அழைக்கப்படுகிறார்.

அவரது ஆதிக்கம் பெற்றவர்கள் அல்லது தோஷம் பெற்றவர்கள் மனநிலை சரியில்லாதவர்கள், மனவளம் குன்றியவர்களுக்கு உதவலாம். ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்யலாம். பள்ளிப் பாடம் நடத்திய ஆசிரியருக்கு உதவலாம்.

பழைய பள்ளிக்கூடங்களைப் புதுப்பிக்க உதவலாம். பணம் செலுத்த முடியாமல் தவிக்கும் ஏழை மாணவர்களின் படிப்புக்கு பொறுப்பேற்கலாம் இதுவும் சிறந்த பரிகாரமாகும்.

இன்னொரு சிறந்த பரிகாரமாக ராகு-கேதுவால் பாதிக்கப்பட்டவர்கள் தாய்வழி பாட்டன்,பாட்டி-தகப்பன் வழிபட்டன்,பாட்டி இவர்களுக்கு பணிவிடை செய்து அவர்களை மகிழ்விப்பது சிறந்த பரிகாரமாகும். காரணம் ஜோதிட ரீதியாக ராகு,கேதுற்கு இவர்களே அதிபதி ஆவார்கள்.

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...