வெள்ளி, 18 நவம்பர், 2016

புதனின் சூட்சுமங்கள்,

நவக்கிரகங்களில் புதன் ஒருவகை. இரட்டை நிலை உள்ள கிரகமாவார். இவரது மிதுன ராசியின் இரட்டையர்கள் குறியீடு இதைத்தான் குறிக்கிறது. கிரகங்களில் ஆணுமல்லாத பெண்ணுமல்லாத அலிகிரகம் என்று புதனைச் சொல்வதுண்டு.. இந்நிலை பற்றி சென்றவாரம் நான் சுருக்கமாகச் சொல்லி இருக்கிறேன்.
புதன் ஒருவர் மட்டுமே தனித்திருக்கும் நிலையில் சுபராக இருப்பார். பிறருடன் இணையும் போது சேரும் கிரகம் சுபரானால் தன்னைச் சுபராகவும் அந்தக் கிரகம் பாபரானால் தன்னையும் பாபராகவும் தனது நிலையை மாற்றிக் கொள்வார்.
சூரியனுடன் புதன் இணையும்போது அவர் ஒரு ஜாதகத்திற்கு நன்மை தரும் சுபராக செயல்படுவாரா அல்லது தீமை தரும் பாபராக இருப்பாரா என்று கணிப்பதில் சிக்கல் ஏற்படும். அனுபவமுள்ள ஜோதிடரையும் தடுமாற வைக்கும் இடம் இது,
நமது கிரந்தங்களில் சூரியன் பாதி அசுபர் அதாவது அரைப்பாபர் என்று குறிப்பிடப்படுகிறார். இதில் மறைந்திருக்கும் சூட்சுமத்தை முன்னரே உங்களுக்கு விளக்கியிருக்கிறேன். அதன்படி சூரியன் மீதி சுபர் என்பதால் சூரியன் ஒருவருக்கு பாதி நல்லவராகவும் மீதி கெட்டவராகவும் செயல்படுவார் .
இதில் நல்லவர் கெட்டவர் எனும் நிலை சம்பந்தப்பட்ட லக்னங்களைப் பொறுத்தது. சூரியன் தனது நண்பர்களின் லக்னங்களுக்கு தனது ஆதிபத்தியத்தைப் பொறுத்து சுபராகவே செயல்படுவார். நட்பு லக்னங்களுக்கு ஆதிபத்திய பாபராக வந்தாலும் பெரிய கெடுதல்களைச் செய்வதில்லை.
இதற்கு உதாரணமாக மீன லக்னத்தைக் குறிப்பிடலாம். மீன லக்னத்தின் ஆறுக்குடைய கொடிய பாவியான சூரியன் லக்னாதிபதி குருவுக்கு நெருங்கிய நண்பர் என்பதால் தனது தசையில் மிகப்பெரும் கெடுதல்கள் எதையும் செய்ய மாட்டார்.
இதுபோன்ற நிலையில் சூரியன் தனது பாபவலுவை வெளிக்காட்ட இயலாத சூழலில் அவருடன் இணைந்திருக்கும் புதன் சுபத்தன்மை பெற்று சுபராகி நன்மைகளைச் செய்வார். சுருக்கமாக சொன்னால் சூரியன் நல்லது செய்யக் கடமைப்பட்டு சுபத்தன்மை மேலோங்கி இருக்கும் சூட்சும நிலையில் அவருடன் இணையும் புதனும் சுபராகி நற்பலன் செய்வார்.
தனுசு லக்னத்திற்கு சூரியனும் புதனும் பத்தாமிடத்தில் இணைந்திருக்கும் நிலையில் தர்மகர்மாதிபதி யோகம் நல்ல பலன்களைத் தருவது இந்தக் காரணத்தினால்தான்.
அதேநேரத்தில் சூரியன் அவயோகியாகி பாபத்தன்மையுடன் கெடுபலன்களைத் தர இருக்கும் லக்னங்களுக்கு அவருடன் இணைந்திருக்கும் புதன் தான் அந்த லக்னங்களுக்கு சுபரே ஆயினும் நன்மைகளைக் குறைத்தே தருவார்.
சமீப ஆண்டுகளில் தமிழில் வெளிவந்த ஜோதிட சூட்சும விளக்க நூல்களில் தலைசிறந்த நூலான ஶ்ரீராஜஜோதிடத்தில் குருநாதர் அய்யம்பாளையம் இரா. அருள்வேல் அய்யா அவர்கள் இதுபோன்ற நுண்ணிய சூட்சுமத்தை ஜோதிடம் கற்றுக் கொள்வதில் ஆரம்பநிலையில் உள்ளவர்கள் புரிந்து கொள்வதற்குச் சுலபமாக பாபர்களை கேந்திராதிபதி என்றும் சுபர்களை திரிகோணாதிபதி என்றும் பிரித்துச் சொல்லியிருப்பார்.
அவருடைய பயிற்சி வகுப்புகளிலும் சூரியனுக்கு முன்பின் பதினான்கு டிகிரிக்குள் இருக்கும் புதபகவான் சூரியனை விட்டு விலகி அடுத்த ராசியில் இருந்தாலும் பாபர் எனும் நிலைதான் பெறுவார் என்பதை தெளிவாக விளக்குவார்.
அடுத்து எழுத்தை ஆளுபவன் புதன்தான் என்பதால். ஒருவர் எழுத்தில் ஆளுமை செய்வதற்கு புதனின் தயவு மிகவும் அவசியம். புதன் வலுப்பெற்றவர்கள்தான் தனது மனதில் நினைக்கும் விஷயத்தை அப்படியே எழுத்தில் கொண்டு வருவதில் வல்லவர்களாக இருப்பார்கள்.
உலகின் மிகச்சிறந்த கவிஞர்கள் அனைவரும் புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களே. அதிலும் புதன் சுக்கிரனுடன் இணைந்திருக்கும் நிலையில் பிறந்தவர்கள். காதல் கவிதைகளை எழுதிவதில் வல்லமை பெற்றவர்களாக இருப்பார்கள்.
ஒருவரை பத்திரிகைத்துறையில் ஈடுபடுத்துபவரும் புதபகவான்தான். ஜாதகத்தில் வலுப்பெற்ற புதன் ஒரு பத்திரிகையை திறம்பட நடத்தும் ஆற்றலைத் தருவார். ஒருவர் ஜர்னலிசம் படிப்பதற்கும் எடிட்டராகவும் நிருபராகவும் பத்திரிகையில் வேலை செய்வதற்கும் புதன்தான் முதல்காரணம். சடசடக்கும் புத்தம்புதிய காகிதத்தின் மணத்தை நுகர்ந்தபடி நீங்கள் வேலை செய்பவரா? நீங்கள் புதனின் ஆதிக்கத்தில் உள்ளவர் என்று அர்த்தம்.
அதேபோல அரசியலை அலசுவதற்கும் அதை விமர்சிப்பதற்கும் தேவையான தீர்க்கமான அறிவும் தொலைநோக்குப் பார்வையும் புதனால்தான் தரப்படுகிறது. அரசியலில் நாளை என்ன நடக்கும் என்று சொல்வதற்கு தன்னைச் சுற்றி நடப்பவைகளை உள்வாங்கி விருப்பு வெறுப்பின்றி கணிக்கும் திறன் தேவைப்படும். இந்தத் திறமையைத் தருபவர் புதன்.
நாளை என்ன நடக்கும் என்று கணிக்கும் திறனுக்கு புதன்தான் அதிபதி என்பதால்தான் ஜோதிடர்களும் புதபகவானின் ஆதிக்கத்தினுள் வருகிறார்கள். புதனின் மிதுனம் கன்னி லக்னங்களில் பிறந்தவர்கள் கணிப்புத் திறனுக்கு பெயர்போனவர்களாகவும அடுத்தவர்கள் எந்த சமயத்தில் எப்படி செயல்படுவார்கள் என்பதை முன்கூட்டியே உணர்ந்து கொள்ளும் அறிவாளிகளாகவும் இருப்பார்கள்.
ஒருவர் சிற்பியாவதற்கும் முழு முதல்காரணம் புதபகவான்தான். ஓவியம், சிற்பம் போன்ற பிரதிபிம்பங்களை உயிருள்ளவை போலக் காட்டும் துணுக்கமான கலைகள் புதனுக்குச் சொந்தம். அதேபோல கணிதத்தில் நூற்றுக்கு நூறு எடுப்பவர்களும் புதன் வலுப்பெற்ற மாணவர்கள்தான்.
புதனின் இரட்டைநிலையில் இன்னொன்றையும் குறிப்பிடலாம். ஒரு ஜாதகத்தில் புதன் நீசநிலை பெற்று பங்கமாகி நீசபங்க நிலையில் மீனத்தில் இருந்தால் சில குறிப்பிட்ட நிலைகளில் அந்த நபருக்கு கல்வியில் தடை ஏற்பட்டு பள்ளியிறுதி வகுப்பு வரை மட்டுமே படிக்கும் வாய்ப்புக் கிடைக்கும்.
அதேநேரத்தில் பள்ளியில் தொடர்ந்து படிக்காத அவர் அனுபவ அறிவில் கல்லூரியில் படித்தவரை விட மேலான நிலையில் இருப்பார். சகல விஷயத்திலும் பாண்டித்யம் பெற்றிருப்பார். மேலும் கல்லூரியில் படிக்காத அவர் சரளமான ஆங்கில அறிவும் பிறமொழி அறிவும் பெற்றிருப்பார். இவையெல்லாம் புதனின் இரட்டை நிலைகளே.
மிகச்சிறந்த வியாபாரிகள் புதனால்தான் உருவாகிறார்கள். புதன் நாவன்மையை குறிப்பவர் என்பதால் ஒருவர் தனது வாடிக்கையாளருடன் திறமையாக பேசி தன் தொழிலை வளர்த்துக் கொள்வதற்கு புதனே காரணம்.
இயற்கைச் சுபக்கிரகங்கள் கேந்திரங்களுக்கு அதிபதியாகும் போது ஏற்படும் கேந்திராதிபத்திய தோஷம் புதனுக்கு அதிகமாக உண்டு.
தனுசு, மீனலக்னங்களுக்கு அவர் கேந்திராதிபதியாகவும், பாதகாதிபதியாகவும் அமைவார் என்பதால் மேற்கண்ட இரண்டு லக்னங்களுக்கு மட்டும் ஏழாமிடத்தில் தனித்து எவருடைய சேர்க்கையும், பார்வையுமின்றி வலுப்பெறும் நிலையில் அவருடைய தசையில் மணவாழ்வில் கெடுதல்களையும், சிக்கல்களையும் வாழ்க்கை இழப்பினையும் செய்வார்.
தனுசு, மீன லக்னங்களுக்கு அவருடைய நான்கு பத்தாம் கேந்திர நிலைகளில் தனித்திருந்தால் இதே பலன்தான். ஆனால் கேந்திராதிபத்திய தோஷத்தோடு பாதகாதிபத்தியமும் சேரும் நிலையில் மட்டுமே அவருடைய கெடுபலன்கள் தூக்கலாக இருக்கும்.
கன்னி லக்னத்திற்கும் அவர் பத்தாமிட அதிபதியாவார். இங்கு அவர் ஆட்சிநிலை அடைவார் என்றாலும் தனித்திருந்தாலும் மிகப்பெரிய கெடுதல்களை அவர் செய்வதில்லை. இதற்கு அவர் லக்னாதிபதி என்பதும் ஒரு காரணம்.
ஆனால் மிதுன லக்னத்திற்கு அவர் நான்காம் வீட்டில் ஆட்சி, மூலத்திரிகோணம், உச்சம் என்ற மூன்று நிலைகளை அடைந்து தனித்திருப்பது நல்லநிலை அல்ல. என்னுடைய அனுபவத்தில் எவருடனும் சேராமலும் இங்கு தனித்து உச்சமாகும் புதபகவான் மிதுன லக்னத்திற்கு கேந்திராதிபத்திய தோஷத்தை கண்டிப்பாக செய்யவே செய்கிறார்.
இந்நிலையில் நான்காமிட ஆதிபத்தியங்களான வீடு வாகனம் தாயார் கல்வி போன்றவைகளும் புதனின் காரகத்துவங்களும் குறைவுபடும். எனவே தனித்திருக்கும் புதன் விஷயத்தில் பலன் சொல்லும் போது கவனமாக இருப்பது நல்லது.
புதன் சூரியனை தன்னுடைய முதன்மை நண்பராக கருதுவதால் மிதுனம் கன்னி லக்னக்காரர்களுக்கு சூரியதசையில் கெடுதல்கள் நடப்பதில்லை. புதபகவான் யோகம் அளிக்கும் நிலையில் இருந்து தசை நடத்தினால் ஒருவரை மிகச்சிறந்த உயர்நிலைக்கு கொண்டு செல்வார். அதே போல பத்தாமிடத்தோடு சுபத்துவம் பெற்று அவர் சம்பந்தப்படும் நிலையில் சொல்லிக்கொடுக்கும் துறையில் இருக்க வைப்பார்.
மிகப்பெரிய கல்வி நிலையங்களை நடத்துபவர்களின் ஜாதகங்களில் வலுப்பெற்ற புதபகவான் பத்தாமிடத்தோடு தொடர்பு கொண்டிருப்பார். அதேபோல கல்விநிலையங்களை நடத்துபவர்கள், அவற்றில் பணிபுரிபவர்களின் ஜாதகங்களில் சொல்லிக்கொடுக்கும் காரகத்துவத்தையுடைய இன்னொரு கிரகமான குருபகவானின் இணைவோ பார்வையோ சம்பந்தமோ இருக்கும்.
உறவுகளில் தாய்மாமனைக் குறிக்கும் கிரகம் புதன். ஒருவருக்கு சுபத்துவம் அடைந்த புதன் ஏழாமிடத்தோடு சம்பந்தப்படும் நிலையில் அவர் மாமன் மகளையோ அத்தை மகளையோ வாழ்க்கைத் துணையாகப் பெற்றிருப்பார்.
அதேபோல தூது செல்பவர்களையும் செய்திகளைக் கொண்டு சேர்ப்பவர்களையும் புதனே குறிப்பவர் என்பதால் ஜாதகத்தில் சுபத்துவத்துடன் அவர் பெற்றுள்ள வலிமையைப் பொறுத்து ஜாதகரை மிக உயரிய வெளிநாட்டுத் தூதர் பதவி முதற்கொண்டு தபாலை சைக்கிளில் கொண்டு செல்லும் தபால்காரர் கூரியர் பாய் வரை ஈடுபடுத்துவார்.
அடுத்த வியாழன் புதனின் இன்னும் சில நிலைகளைப் பார்க்கலாம்.
மறைவு ஸ்தானங்களில் புதன் கெடுதல் செய்வதில்லை.. ஏன் ?
அதேபோல புதனுக்கு மட்டும் உள்ள ஒரு சூட்சுமநிலையாக அவர் லக்னாதிபதியாகி பனிரெண்டாமிடத்தில் அமரும் போது வலிமை இழக்க மாட்டார்.
இதுபற்றி விரிவாகச் சொல்ல வேண்டுமானால் ஆறு, எட்டு, பனிரெண்டாம் இடங்கள் மறைவுஸ்தானங்கள் என்று சொல்லப்படுகின்றன. இந்த மறைவிடங்கள் எனப்படுவது ஷட்பலம் எனப்படும் ஒரு கிரகத்தின் ஆறுவிதமான பலங்களில் முதன்மை பலமான ஸ்தான பலத்தைக் கணக்கிட உதவுகிறது.
ஒரு கிரகம் மறைவிடங்களில் இருக்கும் போது பலவீனம் அடையும். அதே நேரத்தில் அந்த மறைவுஸ்தானத்தில் பகை நீசநிலை அடையும் போது முற்றிலும் வலுவிழக்கும். இதுவே ஜோதிட முக்கிய விதி.
இன்னொரு முக்கிய சூட்சுமமாக ஸ்தானபலம் இழக்கும் கிரகம் ஷட்பலங்களில் அதனையடுத்த பலமான திக்பலத்தைப் பெறும் நிலையில் வலுவாக இருப்பதாகத்தான் பொருள்.
அதாவது பத்தாமிடத்தில் சூரியனோ, செவ்வாயோ நீசமாக இருந்தாலும் வலுவாகவே இருப்பார்கள். ஏனெனில் பத்தாமிடத்தில் ஸ்தானபலத்திற்கு அடுத்த வலுவான அமைப்பான திக்பலத்தை இவர்கள் பெறுவதால் வலிமை இழக்க மாட்டார்கள்.
புதன் லக்னாதிபதியாகி பனிரெண்டில் மறையும் போது மிதுன லக்னத்தை எடுத்துக் கொண்டால் அவரது இரண்டாவது நண்பரான சுக்கிரனின் வீட்டில் நட்பு நிலையிலும் லக்னத்தில் அவர் திக்பலம் அடைவார் என்பதால் திக்பலத்திற்கு வெகு அருகிலும் இருப்பார்.
கன்னி லக்னத்திற்கு பனிரெண்டில் மறையும் போது அவரது முதன்மை நண்பரான சூரியனின் சிம்ம வீட்டில் அதிநட்பு நிலையிலும் திக்பலத்திற்கு அருகிலும் இருப்பார் என்பதால் இந்த இரு நிலைகளிலும் இருக்கும் புதபகவான் வலுவாகவே செயல்படுவார்.
ஜோதிட சாஸ்திரத்தில் வித்யாக்காரகன் என்று புகழப்படும் ஒரு மனிதனின் அறிவுக்கும் ஞானத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் காரணமான கிரகமான புத பகவானைப் பற்றிய சூட்சுமங்களை தற்போது பார்க்கலாம்.
ஒருவர் புத்திசாலியாக இருக்க வேண்டும் என்றால் அவரது ஜாதகத்தில் கண்டிப்பாக புதன் வலுப்பெற்று இருக்க வேண்டும். ஒரு குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தையின் ஜாதகத்தை கணிக்க வரும் பெற்றோர். முதலில் கேட்கும் கேள்வி என் குழந்தை என்ன படிப்பான் என்பதுதான். அந்தப் படிப்புக்குக் காரணமானவன் புதன்.
புதனைப் பற்றிக் குறிப்பிடும் பழமொழிகளில் “பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது” என்ற பழமொழி புதன் கிழமையைக் குறிக்கிறது என்று சிலர் தவறாக அர்த்தம் கொள்கிறார்கள்.
இந்த முதுமொழி பொன் எனப்படும் ஜோதிடத்தின் பொன்னவனான. குருபகவான் தரும் பணம் மற்றும் குழந்தைச் செல்வம் ஒருவருக்குத் தாராளமாகக் கிடைத்தாலும் புத பகவான் தரும் அறிவுச் செல்வம் அவருக்கு சுலபத்தில் கிடைக்காது என்ற அர்த்தத்தில் குறிப்பிடப்படுகிறது.
இவ்வுலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் இனிமேல் நாம் அறியப்போகும் அனைத்துக் கண்டுபிடிப்புகளுக்கும் சொந்தக்காரர் புதன்தான். நவீன விஞ்ஞானிகளை உருவாக்குபவரும் இவர்தான். அறிவால் இந்த உலகத்தை ஆட்டுவிப்பவர் என்பதால்தான். நமது இந்திய வேத ஜோதிடத்தில் எல்லாவற்றிலும் நிபுணத்துவம் உள்ளவர் எனும் அர்த்தத்தில் இவர் நிபுணன் என்று புகழப்படுகிறார்.
ஒருவருடைய ஜாதகத்தில் புதன் மட்டும் வலுவாக இருந்தால் போதும். எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் தன்னுடைய அறிவின் மூலமாக அந்த ஜாதகர் தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டு அடுத்தவர் துணையின்றி முன்னேறி விடுவார்.
எல்லா வகையிலும் புதபகவான் ஒரு தனித்துவமுள்ள கிரகமாவார். அவருடைய சுப அசுப நிலைகளும் அப்படிபட்டவை. இதனால்தான் நமது மூலநூல்களில் எவருடனும் சேராமல் தனித்திருக்கும் புதன் மட்டுமே முழுச்சுபராகச் சொல்லப்பட்டுள்ளது.
புதன் சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கிரகம் என்பதால் பூமி மையக் கோட்பாட்டின்படி நம்முடைய பார்வைக் கோணத்தில் எப்போதும் சூரியனுடன் இணைந்தே இருப்பார்.
மிக அபூர்வமான சூழ்நிலையில் வருடத்தில் சில வாரங்கள் மட்டும் அவர் சூரியனை விட்டு விலகி இருப்பார். அப்போது ஜாதகத்தில் சூரியனுக்கு முன்பின் ராசிகளில் இருப்பார். இதுபோன்று சூரியனுடனோ வேறு பாபக் கிரகங்களுடனோ சேராமல் இருக்கும் நிலையில் அவர் முழுமையான சுபராகி மிகப் பெரிய நன்மைகளைச் செய்வார்.
வேறு எந்தக் கிரகத்துடனும் சேராமல் புதன் தனித்திருக்கும் நிலையில் அவரது பார்வைக்கு குருவுக்கு நிகரான சக்தி உண்டு. இதை என்னுடைய முப்பது ஆண்டுகளுக்கும் மேலான ஜோதிட அனுபவத்தில் அனேக ஜாதகங்களில் நான் பார்த்திருக்கிறேன்.
அதே நேரத்தில் புதனும் சூரியனும் இணையும் போது சூரியன் குறிப்பிட்ட ஜாதகருக்கு யோகராக இருக்கும் நிலையில் புதபகவான் அந்த ஜாதகத்திற்கு மிகுந்த நன்மையை அளிப்பார் என்பதும் ஒரு சூட்சுமம். இதற்கு சூரியன் அவரது முதன்மை நண்பர் என்பது காரணம்.
ஏற்கனவே செவ்வாயின் சூட்சுமங்களில் நான் எழுதியதைப் போல உடலை இளமையாக வைத்து கொள்ள உதவுபவர் செவ்வாய் என்றால் மனதை இளமையான வைத்து கொள்ள உதவுபவர் புதன்.
புதன் வலுப்பட்டவர்கள் தன்னம்பிக்கையுடன் எதையும் பாசிட்டிவ் அப்ரோச் என்று சொல்லப்படும் நேர்மறை நிலையில் அணுகுவார்கள். எந்த சூழ்நிலையிலும் மனதைத் தளரவிட மாட்டார்கள். எத்தனை தோல்விகள் வந்தாலும் அவற்றிலிருந்து அனுபவங்களைக் கற்றுக் கொண்டு தோல்விகளை வெற்றியாக மாற்றுபவர்கள் புதனின் அருள் பெற்றவர்கள்தான்.
ஒருவர் மிகச்சிறந்த பேச்சாளராகவும், பேச்சால் அடுத்தவர் மனதை மயக்குபவராகவும் இருப்பதற்கு புதனின் பலம் அவசியம். பெரிய வியாபாரிகள், மேடைப் பேச்சாளர்கள், பட்டிமன்ற நடுவர்கள், நகைச்சுவை நடிகர்கள், அறிவுப்பூர்வமான விவாதம் செய்பவர்கள், கணக்குத் துறையினர் உள்ளிட்ட பலர் புதனால் உருவாக்கப் பட்டவர்கள்தான்.
குஜாதி ஐவர்கள் என்று நமது கிரந்தங்களில் குறிப்பிடப்படும் குரு, சுக்கிர, புதன், செவ்வாய், சனி இவர்கள் ஐவரும் லக்னத்திற்கு கேந்திரங்கள் என்று கூறப்படும் 1,4,7,10-ல் ஆட்சியோ உச்சமோ பெற்றால் அதனை பஞ்சமகா புருஷ யோகம் என்று நமது ஜோதிட மூல நூல்கள் சிறப்பித்துச் சொல்கின்றன.
இதில் புத பகவான் தரும் யோகத்திற்கு பத்ர யோகம் என்று பெயர். இதில் காமத்திற்குக் காரணமான சுக்கிரன் மட்டும் சந்ததிவிருத்திக்கு அனைவருக்கும் காமம் தேவைப்படுவதன் பொருட்டு அனைத்து லக்னக்காரர்களுக்கும் கேந்திரங்களில் ஆட்சியோ உச்சமோ பெறுவார். வேறு எந்த கிரகத்திற்கும் இந்த விசேஷமான அமைப்பு இல்லை.
(இதைப்பற்றி சில வருடங்களுக்கு முன் நான் எழுதிய மாளவ்ய யோகம் பற்றிய கட்டுரையில் விளக்கியிருக்கிறேன். அடுத்து வரும் சுக்கிரனைப் பற்றிய விளக்கங்களில் மீண்டும் இதைச் சொல்கிறேன்,)
அதுபோல குரு செவ்வாய் சனி ஆகியோர் சரம், ஸ்திரம் ஆகிய எட்டு லக்னங்களுக்கு மட்டுமே யோகம் தருவார்கள்.
ஆனால் புதபகவான் மட்டும் அரிதிலும் அரிதாக வெறும் நான்கு லக்னங்களுக்கு மட்டுமே, அதாவது உபய லக்னங்களுக்கு மட்டுமே பத்ரயோகத்தை அளிப்பார். இது ஒன்றே நவக்கிரகங்களில் இவரது பெருமையையும் மனிதவாழ்வில் அறிவின் அத்தியாவசியத்தையும் காட்டும்.
படைப்புக் கடமைக்காக அனைவருக்கும் காமம் தரப்படுகின்ற நிலையில் அறிவு மட்டும் பூர்வஜென்ம கர்ம வினையைப் பொறுத்து வெகு சிலருக்கு மட்டுமே தரப்படுகிறது. நம்மில் சிலர் மட்டுமே மிகச்சிறந்த அறிவாளிகளாக இருப்பதன் காரணம் இதுவே.
இன்னும் ஒரு ஜோதிட சூட்சுமத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்….
அறிவு ஓங்கி நிற்கும் நிலையில் அங்கே அற்பசுகங்களுக்கு இடமில்லை என்பதை காட்டவே அறிவுக்குக் காரகனான புதன் உச்சம் பெறும் கன்னி ராசியில் சிற்றின்பகாரகன் சுக்கிரன் நீசமாகி வலு இழக்கிறார்.
புத்தி மழுங்கடிக்கப்பட்டு சிற்றின்ப சுகம் ஓங்கி நிற்கும் நிலையில் அறிவுக்கு அங்கே இடமில்லை… அங்கே அறிவு வேலை செய்யாது என்பதைக் குறிக்கவே காலபுருஷனின் படுக்கையறை எனப்படும் அயன சயன போகஸ்தானமான மீனத்தில் போகக்காரகன் சுக்கிரன் உச்சமாகும் நிலையில் புத்திக்காரகன் புதன் நீசமடைகிறார்.
இதுவே புதனின் உச்ச நீசத் தத்துவம்……
மேலும் நவக்கிரகங்களில் தன் சொந்த வீட்டில் ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம் என்ற மூன்று நிலைகளை ஒருசேரப் பெறுவதும், நீசமடையும் பொழுதும் தன் சுயநட்சத்திரத்தில் வலுப்பெறுவதும் புதன் ஒருவர் மட்டுமே.
மற்ற இரு ஆதிபத்தியக் கிரகங்கள் அனைவரும் இரண்டு இடங்களில் ஆட்சி, ஒரு இடத்தில் உச்சம் என மூன்று இடங்களில் பலம் பெறும் நிலையில் புதபகவான் இரண்டு இடங்களில் மட்டுமே வலுப்பெறுவதால்தான் அவர் உபய லக்னங்களுக்கு மட்டும் பத்ரயோகம் அளிக்கும் நிலைக்கு உள்ளாகிறார்.
புகழ்பெற்ற ஜோதிடர்கள் அனைவரும் புதபகவானின் அருளைப் பெற்றவர்களே. புதன் கன்னியிலோ, மிதுனத்திலோ, மீனத்தில் நீசபங்கம் பெற்றோ பலமாக அமைந்த பலர் புகழ்பெற்ற ஜோதிடர்களாக இருக்கின்றனர்.
சந்திரகேந்திரத்தில் நிற்கும் புதனுக்கு அதிக வலிமை உண்டு. சூரியனை விட்டு விலகி அவரால் அதிகதூரம் செல்ல முடியாது என்பதால் புதனுக்கு அஸ்தங்க தோஷம் இல்லை என்று மகாபுருஷர் காளிதாசர் கூறுகிறார். அனுபவத்திலும் அது சரிதான்.
புதன் அஸ்தங்கம் அடையும் நிலையிலும் அவரது காரகத்துவங்கள் பெரும்பாலும் பாதிப்பதில்லை. ஆயினும் ராகுவுடன் அவர் மிகவும் அருகில் நெருங்கும் சமயத்தில் அவர் வலிமை இழக்கிறார். கேந்திராதிபத்திய தோஷத்தில் இவர் குருவுக்கு அடுத்த நிலையில் தோஷத்தை ஏற்படுத்துவார்.
புதபகவான் பத்ரயோகத்தைத் தரும் நிலையில் இருக்கும்போது சந்திரன் செவ்வாய் குரு ஆகியோருடன் இணைவதும் அவர்களின் பார்வையைப் பெறுவதும் யோகத்தைப் பங்கப்படுத்தும். என்னதான் “குரு பார்க்க கோடி நன்மை” என்றாலும் புதனுக்கு அவர் ஆகாதவர் என்பதால் சிலநிலைகளில் குரு புதனைப் பார்ப்பது புதனின் தனித்துவத்தை பலவீனப்படுத்தும்.
புதன் கேந்திராதிபத்திய தோஷம் பெறும் நிலையில் தனித்து இருந்தால் ஜாதகரை பெரும் துன்பங்களுக்கு ஆளாக்குவார். கன்னிராசியில் அவர் வக்ரநிலை அடையாமல் இருப்பதும் மிகவும் முக்கியம். உச்சநிலையில் வக்ரம் பெறுவது நீச நிலையையே தரும் என்பதால் கன்னியில் வக்ரம் பெறும் புதனால் முழுமையான யோகத்தைத் தர இயலாது.
சமீபகாலங்களில் மிகவும் புகழ்பெற்று வரும் ஐ.டி.த்துறை எனப்படும் கணிப்பொறி மென்பொருள் சம்பந்தப்பட்ட துறைகளை குறிப்பவரும் புதபகவான்தான். புதனின் மிதுன கன்னி லக்னங்களில் பிறந்தவர்களே பெரும்பாலான மென்பொருள் மற்றும் கணினி ஆய்வாளர்கள். கணினி இல்லையேல், அதன் சாப்ட்வேர் இல்லையேல் இன்று உலகமே இல்லை என்ற வார்த்தையை சிறிது மாற்றி புதன் இல்லையேல் உலகு இல்லை என்றும் சொல்லலாம்.
புதனின் பிறப்பில் உள்ள சூட்சுமம் என்ன ?
ஒருவருடைய மனத்தை ஆள்பவன் சந்திரன். அவரின் புத்திக்கு அதிபதி புதபகவான். மனதிலிருந்து புத்தி பிறக்கிறது. எனவேதான் நம்முடைய தெய்வாம்சம் பொருந்திய ஞானிகள் சந்திரனிடமிருந்து புதன் பிறந்தான் என்று சொன்னார்கள்.
ஜோதிடத்தில் இருக்கும் கிரகங்களுக்கிடையே இருக்கும் உறவு முறையில் புதனுக்கும் சந்திரனுக்கும் மட்டும் ஒரு விசித்திரமான அமைப்பு உண்டு, என்னவெனில் சந்திரனுக்கு புதன் நட்புக்கிரகம். அதாவது புதனை சந்திரன் நெருக்கமானவராகக் கருதுபவர். ஆனால் புதனுக்கு சந்திரனைப் பிடிக்காது. புதன் சந்திரனை எதிரியாக நினைப்பவர்.
ஒப்பாரும் மிக்காரும் இல்லா நமது ரிஷிகள் புராணங்களில் சொல்லியிருக்கும் ஏராளமான கதைகளின் பின்னணியில் ஜோதிட சூட்சுமங்களும் எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத பிரபஞ்சத் தத்துவங்களும் இருக்கின்றன என்று இந்த தொடர் கட்டுரைகளின் ஆரம்பத்திலேயே சொல்லிருக்கிறேன்.
அதற்கு இந்த சந்திரன், புதன் உறவுமுறைக் கதையும் ஒரு உதாரணம்.
நமது புராணங்களில் சந்திரனின் முறையற்ற உறவில் அதாவது தவறான வழியில் பிறந்தவர் புதன் என்று கதையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த கதைக்குள் ஒளிந்திருப்பது ஒரு ஜோதிட உண்மையே.
இரண்டு கிரகங்களுக்கிடையே இருக்கும் நட்பு, பகை உறவுமுறையில் ஒரு கிரகம் மற்றொன்றுக்கு நட்பு, அந்த மற்றொன்று முதலாம் கிரகத்தை பகையாக கருதும் என்று புரிந்து கொள்ளச் சிக்கலான ஜோதிட உண்மையை கற்றுக் கொள்பவனுக்கு தெளிவாக விளக்கவே நமது ரிஷிகள் சந்திரனின் முறையற்ற கள்ளத்தொடர்பால் பிறந்தவர் புதன் என்ற கதையைச் சொன்னார்கள்.
ஏனெனில் ஒரு குழந்தை எப்படிப்பட்ட வழியில் பிறந்தாலும் அதனைப் பெற்றவர்கள் அதன் மேல் பாசத்துடன் இருப்பார்கள். ஆனால் தவறான வழியில் பிறந்த குழந்தை தன் பிறப்பைக் குறித்த தாழ்வுமனப்பான்மையால் பெற்றோர்களை வெறுக்கும்.
எனவே புதனின் பிறப்பைக் குறித்த நமது புராணக்கதைகள் நமது தெய்வாம்சம் பொருந்திய ஞானிகளின் அபாரமான எடுத்துக்காட்டுடன் கூடிய ஒரு விஷயத்தை நமக்குப் எளிதாகப் புரிய வைப்பதற்கான விளக்கும் தன்மையையே குறிக்கிறதே அன்றி இது பகுத்தறிவாளர்கள் நினைப்பது போல கள்ளத் தொடர்பு சமாசாரம் அல்ல.
ஒன்றை எளிதாகப் புரிய வைக்க நமது உலகின் மேலான இந்து மதத்தில் நமக்குச் சொல்லப்பட்ட உதாரணக் கதைகளே பின்னால் வந்தவர்களால் கண் காது மூக்கு வைக்கப்பட்டு நம்ப முடியாத அபத்தங்கள் என்று பகுத்தறிவாளர்கள் கிண்டல் செய்ய ஏதுவாயிற்று..

வெள்ளி, 4 நவம்பர், 2016

அதிர்ஷ்டமான பெண் யாருக்கு மனைவியாக அமைவாள்

ஒரு ஜாதகருக்கு ஏழாம் வீடோ அல்லது இரண்டாம் வீடோ, ரிஷபம் , கடகம் , சிம்மம், துலாம் , தனுசு, கும்பம், மீனமாக  அமைந்து, அந்த வீடுகள் முறையே 100  சதவிகிதம் சுய ஜாதகத்தில் நன்றாக இருந்தால்.

 நிச்சயம் அந்த ஜாதகருக்கு அமையும் மனைவி, நிச்சயம் அதிர்ஷ்டம் நிறைந்த ஜாதகியாகவும், அழகான அமைப்பை கொண்டவளாகவும் இருப்பாள் என்பது  முற்றிலும் உண்மை.

மேலும் ரிஷபம் ஏழாம் வீடாக அல்லது இரண்டாம் வீடாக கொண்டு 100  சதவிகிதம் நன்றாக இருக்கும் ஜாதகருக்கு, அமையும் மனைவி,
 நிச்சயம் அதிர்ஷ்டம் நிறைந்த பெண்ணாகவும், தனது கணவனுக்கு, சொத்து சுகம், வண்டி வாகனம், செல்வம் போன்ற வளங்களை கொண்டு வருபவளாகவும் இருப்பாள் .  

கடகம் ஏழாம் வீடாக அல்லது இரண்டாம் வீடாக   கொண்டு 100  சதவிகிதம் நன்றாக இருக்கும் ஜாதகருக்கு, அமையும் மனைவி, 
தனது கணவருக்கு மனோ ரீதியாக ஆலோசனைகளை வழங்கி தன்னம்பிக்கையுடன் தனது கணவன் முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்ட வாழ்க்கையினை பெற துணையிருப்பாள்.

சிம்மம் ஏழாம் வீடாக அல்லது இரண்டாம் வீடாக கொண்டு 100  சதவிகிதம் நன்றாக இருக்கும் ஜாதகருக்கு, அமையும் மனைவி, 
தனது கணவருக்கு தனது சுய உழைப்பால் ஆதரவாக நின்று , தனது கணவன் வாழக்கையில் முன்னேற்றம் பெறவும் சகல யோகங்களையும் பெறவும் நல்ல ஆலோசனை சொல்பவளாகவும், வாழ்க்கையில் எந்த நிலையிலும் தனது கணவனுடன் நின்று அவனது வாழ்வு முன்னேற்றம் பெற ஆதரவு தந்து அதிர்ஷ்டத்தையும் அள்ளி தருவாள் .

 துலாம் ஏழாம் வீடாக  அல்லது இரண்டாம் வீடாக கொண்டு 100  சதவிகிதம் நன்றாக இருக்கும் ஜாதகருக்கு, அமையும் மனைவி, 
தனது கணவருக்கு தனது அறிவாற்றலால் துணை நின்று ஒரு சிறந்த மந்திரியாக ஆலோசனை சொல்லி அவனது வாழ்க்கையில் நீடித்த அதிர்ஷ்ட வாழ்க்கையினை பெற ஆலோசனை சொல்பவளாகவும், எவ்வித சூழ்நிலையையும் சமாளிக்கும் ஆற்றல் கொண்டவளாக, தனது கணவனுக்கு இறுதிவரை துணை இருப்பாள் .

 தனுசு ஏழாம் வீடாக  அல்லது இரண்டாம் வீடாக கொண்டு 100  சதவிகிதம் நன்றாக இருக்கும் ஜாதகருக்கு, அமையும் மனைவி, 
தனது கணவருக்கு தனது பூர்வீக அமைப்பில் இருந்து வரும்பொழுதே சகல யோகங்களையும், பொன் பொருள், பசு பாக்கியம் , நிலையான சொத்துகள் அனைத்தையும் கொண்டுவரும் தன்மை உடையவளாக இருப்பாள் .

 கும்பம் ஏழாம் வீடாக  அல்லது இரண்டாம் வீடாக கொண்டு 100  சதவிகிதம் நன்றாக இருக்கும் ஜாதகருக்கு, அமையும் மனைவி, குடும்பத்திற்கு வந்தவுடனேயே ஜாதகருக்கு யோகா வாழ்க்கை ஆரம்பம் ஆகிவிடும் , மேலும் தம்பதியர் தொட்டதெல்லாம் பொன்னாக மாறும், மற்றாவர்கள் ஆதாரவு இவர்களுக்கு எப்பொழுதும் கிடைத்து கொண்டே இருக்கும், மக்கள் ஆதரவால் வெகு விரைவில் அதிர்ஷ்ட வாழ்வினை பெறுவாள் .

மீனம்  ஏழாம் வீடாக  அல்லது இரண்டாம் வீடாக கொண்டு 100  சதவிகிதம் நன்றாக இருக்கும் ஜாதகருக்கு, அமையும் மனைவி, 
ஒரு அதிர்ஷ்ட தேவதை இவளது கால் பட்ட இடமெல்லாம் சகல யோகங்களும் பெருகும், தனது கணவனுக்கு மட்டும் அல்ல அவனை சார்ந்தவர்களுக்கும், இந்த அதிர்ஷ்டம் பலன் தரும் என்பது ஒரு சிறப்பான விஷயம்.

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...