ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

ஜோதிட பாடம் LKG அடிப்படை 2

 

                                                                                                                              ராசிகளும் இடங்களும் -

1 .மேசம்

வேலூர் மாவட்டத்தின் மத்திய பகுதி, மேற்கு பகுதிகள், தர்மபுரி மாவட்டத்தின் கிழக்குப் பகுதி, திருவண்ணாமலை மாவட்டத்தின் மேற்கு பகுதி

2. ரிசபம்

சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம்

3 மிதுனம்

கடலூர், அரியலூர், நாகை, திருவாரூர்

4 கடகம்

தஞ்சை மாவட்டம்

5 சிம்மம்

சிவகங்கை , புதுக்கோட்டை -

6 கன்னி

தூத்துக்குடி, திருநெல்வேலி , கன்னியாகுமரி

7. துலாம்

திரு ெநல்வேலி மாவட்டத்தின் வடக்கு மற்றும் மேற்கு பகுதி ; விருதுநகர் மாவட்டத்தின் தெற்கு பகுதி.

8. விருச்சகம்

தேனி, திண்டுக்கல், மாவட்டத்தின் மேற்கு மற்றும் மத்திய பகுதி, கோவை மாவட்டத்தின் தெற்கு பகுதி, ஈரோடு மாவட்டத்தின் தெற்குப் பகுதி.

9. தனுசு

கோவை மாவட்டத்தின் வடகிழக்கு பகுதி, ஈரோடு மாவட்டத்தின் மத்திய பகுதி.

10. மகரம்

நீலகிரி மாவட்டம், ஈரோடு மாவட்ட வடக்கு, சேலம் மாவட்டத்தின் வடமேற்கு, தர்மபுரி மாவட்டத்தின் வடக்கு மற்றும் மேற்கு பகுதி

11. கும்பம்

சேலம் மாவட்டத்தின் தெற்கு, நாமக்கல், திருச்சி மாவட்டத்தின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகள்; கரூர் மாவட்ட வடக்கு பகுதி

12. மீனம்

மதுரை, கரூர் தெற்கு பகுதி, திருச்சி மாவட்ட தெற்கு பகுதி, திண்டுக்கல் மாவட்ட கிழக்கு பகுதிகள் ஆகும்.

நாம் இப்போது 5-ம் வீட்டைப் பற்றிப் பார்க்கப் போகிறோம். 5-ம் வீட்டை வைத்து என்னவெல்லாம் கூறலாம்? 5-ம் வீட்டைப் பூர்வ பண்ணிய ஸ்தானம் என்று கூறுவர். போன ஜென்மத்தில் ஒருவர் புண்ணியம் செய்தாரா அல்லது பாபம் செய்தாரா என்பதை இந்த வீட்டைக் கொண்டு தீர்மானிக்கலாம். பாப கிரகங்களான சனி, செவ்வாய், ராகு, கேது, சூரியன் இவைகள் 5-ம் வீட்டில் இருக்குமேயாகில் அவர் போன ஜென்மத்தில் பாபம் செய்தவர் எனக் கூறலாம். இயற்கையிலேயே சுப கிரகங்களான குரு, சுக்கிரன், வளர்பிறைச் சந்திரன், தீயரோடு சேராத புதன் ஆகியோர் 5-ம் வீட்டில் இருப்பார்களேயானால் அவர் பாபம் செய்யாதவர் எனக் கூறலாம். ஆக ஒருவர் முற்பிறவியில் பாபம் செய்தவரா அல்லது புண்ணியம் செய்தவரா என்பதை 5-ம் வீட்டைக் கொண்டு மேலே கூறியவற்றிலிருந்து தீர்மானிக்கலாம்.

 

அடுத்தது 5-ம் வீட்டைப் புத்திர ஸ்தானம் என்றழைப்பர். ஒருவருக்குக் குழந்தை பிறக்குமா அல்லது பிறக்காதா என்பதையும் இந்த வீட்டைக் கொண்டு தீ£ர்மானம் செய்யலாம். புத்திரஸ்தானத்தில் சனி, ராகு, கேது, செவ்வாய், சூரியன் ஆகியோர் இருந்தால் புத்திர நாசம் என்று கூறுவர். 5-ம் வீட்டில் சனி இருந்தால் "தத்துப் பிள்ளை யோகம்" என்று கூறுவர். அதாவது அவருக்குக் குழந்தைகள் யோகம் இல்லை என்று பொருள். ஆனால் சிலருக்கு 5-ம் பாவம் கெட்டிருந்தும் குழந்தைகள் யோகம் இருக்கும். அதற்குக் காரணத்தைப் பின்னால் பார்ப்போம். பொதுவாக 5-ம் வீட்டில் பாப கிரகங்கள் இருப்பது நல்லது இல்லை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

 

ஒருவர் காதல் விவகாரத்தைக் குறிப்பதும் இந்த 5-ம் வீடுதான். 7-ம் வீட்டு அதிபதி 5-ம் வீட்டில் இருந்தாலும், 5-ஆம் வீட்டு அதிபர் 7-ம் வீட்டில் இருந்தாலும் ஒருவர் காதல் திருமணம் செய்வர் என்று கூறலாம். 7-ம் வீடு திருமணத்தைக் குறிக்கும் வீடு அல்லவா? 5-ம் வீடு காதல் விவகாரத்தைக் குறிப்பதனால் 7-ம் வீடும், 5-ம் வீடும் சம்மந்தப் பட்டால் அது காதல் திருமணத்தில்தான் முடியும்.

 

கலை சம்மந்தப் பட்ட துறையையும் குறிப்பது இந்த வீடுதான். சினிமா, டிராமா, பாட்டு, நடிப்புப் போன்ற கலைத்துறைகளையும் இந்த வீடுதான் குறிக்கிறது. 10-ம் வீட்டு அதிபர் சுக்கிரனாக இருந்து அவர் 5-ஆம் வீட்டில் இருந்தால் அவர் கலைத்தொழிலில் இருப்பார் எனக் கொள்ளலாம். ஆக 5-ம் வீடு பொழுதுபோக்கு அம்சங்களையும் குறிக்கிறது எனத் தெரிந்து கொண்டீர்கள். 10-ம் வீடும் 5-ம் வீடும் சம்மந்தப் பட்டால் அவர் கலைத்தொழிலில் இருப்பார் எனக் கொள்ளலாம்.

Speculation - துறையையும் குறிப்பது இந்த வீடுதான். லாட்டரி, ரேஸ், Cross-word Puzzle போன்றவற்றையும் குறிப்பது இந்த வீடுதான். ஒருவருக்கு லாட்டரியில் பரிசு கிடைக்குமா அல்லது கிடைக்காதா என்றும் இந்த வீட்டைவைத்து அறியலாம். எப்படி? 5-ம் வீட்டதிபர் 2-ம் வீட்டில் இருந்தால் பரிசு கிடைக்கும் எனக் கொள்ளலாம். 2-ம் வீடு தனஸ்தானம் அல்லவா? 2-ம் வீட்டதிபர் 5-ம் வீட்டில் இருந்தாலும் இந்த மாதிரிப் பரிசு கிடைக்கும் எனக் கொள்ளலாம். 5-ம் வீடு 11-ம் வீட்டுடன் சம்மந்தப் பட்டால் பெரும் தொகை கிடைக்க வழியுண்டு. 11-ம் வீடு லாபஸ்தானம் அல்லவா? ஆகையால் பெரும்தொகை கிடைக்க வழியுண்டு. 2-ம் வீட்டுடன் சம்மந்தப் பட்டால் சிறிய தொகைதான் கிடைக்கும். ஏனெனில் 2-ம் வீடு தனவரவைத்தான் காட்டுகிறது. 11-ம் வீடு லாபத்தைக் காட்டுகிறது. 2-ம் வீட்டிற்கும் 11-ம் வீட்டிற்கும் உண்டான வித்தியாசத்தை இப்போது தெரிந்து கொண்டீர்கள் அல்லவா?

 

ஒருவருடைய புத்திகூர்மையையும் குறிப்பது இந்த வீடுதான். கிரகங்களில் புதனும், வீடுகளில் 5-ம் வீடும் புத்திசாலித்தனத்தையும் குறிக்கிறது. ஒருவர் என்ன தெய்வத்தைத் தொழவேண்டும் என்பதையும் 5-ம் வீட்டை வைத்துக் கூறிவிடலாம். 5-ம் வீட்டில் என்ன கிரகம் இருக்கிறதோ அதை வைத்து நீங்கள் வழிபடவேண்டிய தெய்வத்தைக் கூறவேண்டும். எந்தெந்த கிரகத்திற்கு யார் அதிதேவதை என்று கீழே கொடுத்து இருக்கிறோம்.

 

கிரகம்    அதிதேவதை

சூரியன்   சிவன்

சந்திரன்   பார்வதி

செவ்வாய் முருகன்

புதன் விஷ்ணு

குரு தக்ஷ¢ணாமூர்த்தி

சுக்கிரன்  லக்ஷ்மி

சனி சாஸ்தா

ராகு காளி, துர்கை, கருமாரியம்மன்

கேது வினாயகர், சண்டிகேஸ்வரர்

ஒருவருக்கு 5-ம் வீட்டில் கேது இருக்கிறது எனக் கொள்ளுங்கள்;அவர் வினாயகரை உபாசனை செய்ய வேண்டும். செவ்வாய் இருக்குமேயாகில் முருகனை வழிபட வேண்டும். இவ்வாறாக மேற்கூறிய தெய்வங்களை வழிபட வேண்டும். இவ்வாறாக 5-ம் வீட்டைக் கொண்டு ஒருவர் எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் என்று கூறலாம். மந்திர உச்சாடனம், வேதங்கள், மதநம்பிக்கை, இவற்றையெல்லாம் இந்த வீட்டைக் கொண்டு அறியலாம். கேது ஞானகாரகன். 5-ம் வீட்டுடன் சம்மந்தப் பட்டால் அவருக்கு அவர் மதத்தின்மேல் தீவீர பக்தி இருக்கும். இப்போது 5-ம் வீட்டு அதிபர் ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால என்ன பலன் என்று அறிவோம்.

இலக்கினத்தில் இருந்தால் தெய்வ அனுக்கிரகம் அவருக்குக் கிடைக்கும். Providential Help என்று சொல்வார்களே அது அவர்களுக்குக் கிடைக்கும். இலக்கினத்தில் கெட்ட கிரகம் இருந்து அதனுடன் 5-ம் வீட்டதிபர் இருந்தால் துர்தேவதைகளை வசியம் செய்பவராக இருப்பார்.

 

2-ம் வீட்டில் இருந்தால் லாட்டரி, ரேஸ் போன்றவற்றிலிருந்து பணம் கிடைக்கும். சரி1 எப்போது கிடைக்கும்? 5-ம் வீட்டையும், 2-ம் வீட்டையும் குறிக்கும் தசா, புக்தி காலங்களில் கிடைக்கும். அரசாங்கத்திடமிருந்து பணவரவு கிட்டும். ஏனெனில் 5-ம் வீடு அரசாங்கத்தையும் குறிக்கிறது. ஒருவருக்கு 5-ம் வீட்டையும் 2-ம் வீட்டையும் குறிக்கும் கிரகங்களின் தசா, புக்தி காலங்களில் புத்திரபாக்கியம் உண்டாகும். 5-ம் வீடு புத்திரத்தையும், 2-ம் வீடு குடும்பத்தையும் குறிப்பதனால் அப்போது புத்திர பாக்கியம் உண்டாகும். 5-ம் வீட்டதிபதியுடன் பாபகிரகங்களின் சேர்க்கை இருந்து 2-ல் இருந்தால் அப்போது பணவிரயம் ஏற்படும். ரேஸ், ஸ்பெகுலேஷன் துறையில் பணத்தைக் கோட்டை விடுவர். அரசாங்கத்திற்கு தண்டமாகப் பணம் செலுத்துவர்.

 

3-ம் வீடு சிறு பயணத்தைக் குறிக்கிறது அல்லவா? 5-ம் வீடு மதம் கோவில்களைக் குறிக்கிறது. ஆக இவர் தெய்வதரிசனத்திற்காக வெளியூர்ப்பயணம் மேற்கொள்ளுவர். 3-ம் வீடு என்பது 5-ம் வீட்டிற்குப் 11-வது வீடு அல்லவா? புத்திர பாக்கியம் உண்டென்று கூறலாம். 5-ம் வீட்டின் காரகத்துவங்கள் நன்றாக இருக்கும் எனக்கொள்ளலாம். இதுதான் 5-ம் வீட்டதிபர் 3-ல் இருந்தால் பலன்.

 

5-ம் வீட்டதிபர் 4-ல் இருந்தால் 5-ம் வீட்டின் காரகத்துவங்கள் பாதிக்கப்படும். ஏனெனில் 5-ம் வீட்டிற்குப் 12-ம் வீடு 4-ம் வீடல்லவா! 5-ல் சுபக்கிரகங்கள் இருந்தால்தான் அந்தவீட்டின் காரகத்துவம் ஓரளவிற்கு நன்றாக இருக்கும். இவரின் புத்திரர் விவசாயம் அல்லது கட்டிடத்தொழில் சம்மந்தமான தொழிலில் இருப்பார் எனக்கொள்ளலாம். இவரின் தாயார் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்.

 

5-ம் வீட்டதிபர் 5-ல் இருந்தால் தன் தொழிலில் திறமையுடன் இருப்பார். மந்திர சாஸ்த்திரங்களில் திறமைமிகுந்தவராக இருப்பார். இவரின் குழந்தைகள் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவர். அரசாங்கத்தின் உதவி இவர்களுக்குக் கிட்டும். புத்திரர்களால் இவருக்கு உதவி கிட்டும்.

 

5-ம் வீட்டதிபர் 6-ல் இருந்தால் புத்திர பாக்கியம் குறைவு எனக் கொள்ளலாம். ஏனெனில் 6-ம் இடம் மறைவு ஸ்தானம் அல்லவா! தாய்மாமன் நன்றாக புகழுடன் இருப்பார்.

 

6-ம் இடம் தாய்மாமனைக் குறிக்கிறது அல்லவா! சிலர் தாய்மாமனின் குழந்தையை தத்து எடுத்துக் கொள்வர். புத்திரர்களால் நன்மைகளையோ அல்லது லாபத்தையோ எதிர்பார்க்க முடியாது.

 

7-ல் இருந்தால் காதல் திருமணம்செய்து கொள்வர். 5-ம் இடம் காதலையும், 7-ம் இடம் திருமணத்தையும் குறிக்கிறது அல்லவா? இந்த சேர்க்கை காதல் திருமணத்தைக் கொடுக்கும்.

 

8-ம் இடத்தில் இருந்தால் புத்திர சந்தான தோஷம் உண்டு. அதிர்ஷ்டக்குறைவானவர் என்று கூறலாம்.

 

9-ம் வீட்டில் இருந்தால் இவருடைய புத்திரர்களில் ஒருவர் நற்பெயருடன் நன்றாக இருப்பார். கல்வியில் திறமையுடன் இருப்பர். பிதுர் பாக்கிய சொத்துக்கள் கிடைக்கும். பெரியவர்களிடம் பக்தி விசுவாசத்துடன் இருப்பர். சாஸ்த்திரங்களில் தேர்ச்சியும், பாண்டித்தியமும் பெற்று தெய்வீக வழிபடுகளில் பற்றுதலுடனும், தீவீர நம்பிக்கையுடனும் இருப்பார்கள். தருமம், நீதி ஆகியவற்றைக் கடைப் பிடித்து வாழ்க்கை நடத்துவார்கள்.

 

10-ம் வீட்டில் இருந்தால் புத்திர சந்தான விருத்தி ஏற்படும். சத்காரியங்களில் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள். அரசின் நன்மதிப்பைப் பெற்றவர்களாக இருப்பார்கள்.

 

11-ம் வீடு லாபஸ்தானம் அல்லவா? அங்கு 5-ம் வீட்டு அதிபதி இருப்பின் இவரின் புத்திரர் நற்பெயரெடுத்து நல்ல நிலைக்கு வருவர். இவருக்குப் புத்திரர்களால் உதவி கிடைக்கும். மேலே கூறியதுபோல் லாட்டரி, ரேஸ்போன்றவற்றிலிருந்து பணவரவு உண்டாகும். பொதுவாக 5-ம் இடத்தின் காரகத்துவங்கள் சிறந்து விளங்கும்.

 

12-ம் வீட்டில் இருந்தால் இதுவும் புத்திர தோஷம்தான். மனைவிக்கு அடிக்கடி கர்பச்சிதைவு ஏற்படும். உடல் நிலை பாதிக்கக்கூடும். எதிலும் பற்றில்லாத வாழ்க்கை வாழ்வர். தெய்வீக வாழ்க்கை வேண்டி ஊர் ஊராகச் சுற்றுவர்.

5-ம் வீடு புத்திர ஸ்தானம் என்று தெரிந்து கொண்டீர்கள். 5-ம் வீட்டில் பாபகிரகங்கள் இருப்பது நல்லதில்லை எனவும் தெரிந்து கொண்டீர்கள். 5-ம் வீட்டில் ராகு இருந்தாலும், 5-ம் வீட்டதிபர் ராகுவுடன் கூடினாலும் அது சார்ப்ப தோஷம் என்று கூறுவார்கள். அதாவது சர்பத்தின் சாபத்தால் புத்திர தோஷம் உண்டாயிற்று. கேது இருந்தால் பிராமணசாபத்தால் புத்திர தோஷம் உண்டாயிற்று. நாம் இதுவரை மாந்தியைப் பற்றி எழுதவில்லை; கேரள ஜோதிடத்தில் மாந்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மாந்திக்கு நட்சத்திரங்களோ, தசா புக்திகளோ இல்லாததால் நாம் அவ்வளவு அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை; நாம் வரும் பாடங்களில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக அதைப் பற்றி விரிவாக எழுதுகின்றோம். நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். இப்போதைக்கு மாந்தி 5-ம் வீட்டில் இருப்பது நல்லது இல்லை என்று தெரிந்து கொள்ளுங்கள். 5-ம் வீட்டில் சந்திரன், சுக்கிரனுடன் மாந்தியும் இருந்தால் ஸ்திரிஹத்தி தோஷமும், பசுஹத்தி தோஷமும் ஏற்பட்டு புத்திர உற்பத்தி தடைப்படும். அதே போன்று புத்திர காரகனான குருவுடன் மாந்தி சேர்ந்து இருந்தால் பிராமண சாபத்தால் புத்திர உற்பத்தி தடையுறும். சரி! இவ்வாறு இருந்தால் என்ன பரிகாரம் செய்யலாம்? இவ்வாறு தோஷமுள்ளவர்கள் சேது ஸ்னானம், நாகப் பிரதிஷ்டை செய்தல், அரசமரப் பிரதஷ்ஷணம் செய்தல் போன்றவற்றைச் செய்ய வேண்டும். இவைகள்தான் இதற்குப் பரிகாரங்கள்.

 

பெண்ணில் ஜாதகத்தில் 5-ம் இடம்மிக முக்கியமானதாகும். ஏனெனில் குழந்தையைப் பெறப் போகிறவள் அவள்தான். அந்ட்த 5-ம் வீட்டிலே செவ்வாய் இருப்பதோ பார்ப்பதோ அவ்வளவு நல்லது இல்லை; செவ்வாய் ஆயுதங்களுக்கு அதிபதியல்லவா? ஆக குழந்தை பிறக்கும் சமயத்தில் ஆயுதம் உபயோகிக்க வேண்டியது இருக்கும். அதாவது இந்தக் காலத்திலே Scissorian - என்று சொல்லுகின்றார்களே அவ்வாறு குழந்தை பிறப்பு இருக்கும். பித்ருகாரகன் சூரியன். அவன் 5-ம் வீட்டில் நீச்சனாகி பாப கிரகங்களுடன் கூடியிருந்தால் பித்ரு சாபத்தால் குழந்தைகள் இருக்காது என்று "சராவளி" (ஒரு ஜோதிட நூல்). கூறுகிறது. சூரியன் 5-ம் வீட்டிற்குடையவனாகி இரண்டு பாபக்கிரகங்களுடன் சேர்ந்து இருந்தாலும் பித்ருசாபமாகும். 5-க் குடையவன் 9-ம் வீட்டிலும், 9-ம் வீட்டிற்குடையவன் 5-ம் வீட்டிலும் இருந்து பாபகிரகங்களின் சேர்க்கை பெற்றால் அதுவும் பித்ருசாபம்தான். 9-ம் வீடு பித்ரு ஸ்தானம் அல்லவா? ஆகவே பித்ருஸ்தானாதிபதி கெடக் கூடாது என்கிறது "சராவளி". இந்தப் பித்ரு சாபத்தைப் போக்க வேண்டுமென்றால் "கயா" வில் ஸ்ரார்த்தம் செய்ய வேண்டுமென்பது விதி. பொதுவாக புத்திர ஸ்தானத்தில் பாபகிரகங்கள் இருப்பது புத்திர உற்பத்தியைக் குறைக்கும்.

6-ம் வீடு என்றால் மறைவுஸ்தானம் என்றுதான் பலர் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். அது மறைவு ஸ்தானம் மட்டும் அல்ல; அதற்குப் பல காரகத்துவங்கள் உண்டு. அவற்றைப் பற்றிப் பார்ப்போம். முதலில் அது வியாதிகளைக் குறிக்கும் வீடு. மனிதன் என்று இருந்தால் வியாதி என்றும் ஒன்று உண்டு. வியாதிகளைக் குறிக்கும் வீடு அதுதான். 12-ம் வீடு என்பது மருத்துவமனையைக் குறிக்கும். 6-ம் வீட்டு அதிபதி 12-ம் வீட்டில் இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். உதாரணமாக புதன் 6-ம் வீட்டு அதிபதியாகி 12-ம் வீட்டில் இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். புதனானவர் 6-ம் வீட்டையும், 12-ம் வீட்டையும் குறிக்கிறார். புதன் தசை, அல்லது புக்திகளில் ஒருவர் வியாதியால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டியது இருக்கும். சரி! ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். எப்போது குணமடைவார்?

 

நாம் அதற்கும் பதில் சொல்ல வேண்டுமல்லவா? 11-ம் வீடு என்பது லாபத்தைக் குறிக்கிறது என்று நாம் கூறியிருந்தோம். அது வியாதி குணமடையும் காரகத்துவங்களையும் குறிக்கிறது. 12-ம் வீடு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுதலைக் குறிக்கிறது. 12-ம் வீட்டிற்குப் 12-ம் வீடு எது? 11-ம் வீடு. 12--ம் வீட்டிற்கு எதிர்மறையான பலன்களைக் கொடுக்க வேண்டுமல்லவா? ஆகவே 11-ம் வீடு வியாதி குணமாதலையும் குறிக்கிறது. அதேபோல் 6-ம் வீடு வியாதியைக் குறிக்கிறது. 6-ம் வீட்டிற்குப் 12-ம் வீடு வியாதி குணமாதலைக் குறிக்கிறது அல்லவா? 6-ம் வீட்டிற்குப் 12-ம் வீடு எது? 5-ம் வீடு. ஆக 5-ம் வீடு வியாதி குணமாதலையும் குறிக்கிறது. ஆக 6, 12-ம் வீடுகள் வியாதியும், அதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதையும் குறித்தால் 5-ம் வீடும் 11-ம் வீடும் வியாதி குணமாதலைக் குறிக்கிறது. 5-ம் வீட்டின் தசையின் போதோ அல்லது புக்தியின் போதோ ஒருவருக்கு வியாதி குணமாகும். அதேபோல் 11-ம் வீட்டின் தசையின் போதோ அல்லது புக்தியின் போதோ ஒருவருக்கு வியாதி குணமாகும். அடுத்ததாக 6-ம் வீடு என்பது நாம் செய்யும் அடிமைத்தொழிலைக் குறிக்கிறது. வேலைக்குச் செல்பவர் எல்லோரும் அடிமைத்தொழிலாளர்தான். ஆக 6-ம் வீடு நாம் செய்யும் தொழிலைக் குறிக்கிறது. 6-ல் ஒரு கிரகம் இருக்கிறது எனக் கொள்ளுங்கள். அதன் தசா புக்தி காலங்களில் ஒருவருக்கு வேலை கிடைக்கும். அல்லது பதவி உயர்வு கிடைக்கும். இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வந்து இருக்கும். 6-ம் வீட்டில் உள்ள ஒரு கிரகத்தின் தசா, புக்தி காலத்தில் ஒருவருக்கு வேலை கிடைக்குமா அல்லது உடல் நிலை பாதிக்கப் படுமா? எப்படிக் கூறுவது? 6-ம் வீட்டில் உள்ள கிரகம் இலக்கினமாகிய முதல் வீட்டுடன் சம்மந்தப் பட்டால்தான் உடல் நிலை பாதிக்கும். முதல் வீட்டுடன் சம்மந்தப் படவில்லையானால் உடல்நிலை பாதிக்காது. இலக்கினாதிபதியும், 6-ம் வீட்டில் உள்ள கிரகமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளலாம்; அல்லது சேர்ந்து இருக்கலாம். அவ்வாறு 6-ம் வீடும் 1-ம் வீடும் சம்மந்தப் பட்டால்தான் ஒருவரின் உடல்நிலை பாதிக்கப்படும்.

 

அடுத்ததாக ஒருவரின் வேலையாட்களைக் குறிப்பதும் இந்த வீடுதான். 6-ம் வீட்டில் சுபர்கள் இருந்தால் வேலையாட்கள் மூலமாக ஒருவர் பயனடைவார். பாப கிரகங்கள் இருந்தால் அவர்களால் செலவுதான். பயன் இருக்காது.

6-ம் வீடு நமக்குப் பிரியமான சாப்பாட்டையும் குறிக்கிறது. ஒருவரின் 6-ம் வீட்டில் சனியிருந்தால் போஷாக்கற்ற உணவுவகைகளை உட்கொள்ளுவார். போதுமான அளவு சாப்பாடும் கிடைக்காது. சுக்கிரன் இருக்குமேயாகில் வகை, வகையான உணவுவகைகளை உட்க்கொள்ளுவர். ஒரளவிற்கு மதுபானத்திலும் பிரியம் இருக்கும். சந்திரன் ஒரு நீர்க்கிரகம் அல்லவா? நீர்சம்மந்தப்பட்ட உணவுவகைகளை விரும்பி உட்கொள்ளுவார். அதுவும் 6-ம் இடம் நீர்ராசிகளாகிவிட்டால் கேட்க்கவே வேண்டாம். மதுபானப் பிரியராக இருப்பார். அதைத் தவிர பாட்டில்களில்வரும் குளிர்பானங்களையும் விரும்பிச் சாப்பிடுவார். குரு இருக்குமேயாகில் நல்ல உணவுவகைகளை உட்கொள்ளுவார். செவ்வாய் இருந்தால் தேவைக்கு அதிகமாக உட்கொள்வர். இவ்வாறாக கிரகங்களின் குணாதிசயங்களை வைத்துப் பலன் சொல்லவேண்டும்.

 

6-ம் வீடு கடன் என்றும் கூறுவார்கள். 6-ம் வீட்டின் அதிபதி 8-ம் வீட்டில் இருப்பாரேயானால் ஒருவருக்குக் கடன் தொல்லைகள் அதிகம் இருக்கும். 6-ம் வீட்ட்டின் அதிபதி 11-ம் வீட்டுடன் சம்மந்தப் பட்டால் கொடுத்த கடன் திரும்பி வரும். அல்லது உத்தியோகத்தில் பதவி உயர்வு தேடிவரும். 6-ம் வீடு 12-ம் வீட்டுடன் சம்மந்தப் பட்டால் நாம் வீங்கியகடனைக் கொடுப்போம். அதாவது 6-ம் வீடு கடனைக் குறிக்கிறது. 12-ம் வீடு செலவைக் குறிக்கிறது. 6-ம் 12-ம் சேர்ந்தால் நாம் வாங்கிய கடனைத்திருப்பிக் கொடுப்போம்.

 

சரி! நமக்கு வங்கியிலிருந்து பணம் கடனாகப் பெறவேண்டும். எப்படிப் பதில் சொல்வது? 7-ம் வீடு நாம் ஒருவருடன் செய்யும் Transaction-ஐக் குறிக்கிறது. அதாவது 7-ம் வீடு வங்கியைக் குறிக்கிறது. நமக்குப் பணம் கொடுப்பதென்றால் வங்கியின் பணம் குறைகிறது அல்லவா? நமது பணம் இருப்புக் கூடுகிறது. 7-ம் வீட்டிற்குப் 12-ம் வீடு வங்கியின் பண இழப்பையும் 11-ம் வீடு அல்லது 2-ம் வீடு நாம் பணம் பெறுதலையும் குறிக்கிறது. 6-ம் வீட்டு அதிபதி 2-ம் வீட்ட்டிலோ அல்லது 2-ம் வீட்டின் அதிபதி 6-ம் வீட்டிலோ இருக்குமேயாகில் ஒருவருக்கு வங்கியிலிருந்து பணம் கிடைக்குமெனக் கூறலாம்.

6-ம் வீடு நம்முடைய எதிரிகளைக் குறிக்கிறது அல்லவா? அதில் பாப கிரகங்கள் இருப்பார்களேயாகில் எதிரிகள் ஓரளவிற்குக் குறைவாகவே இருப்பர். நல்ல கிரகங்கள் இருந்தால் எதிரிகள் அதிகம் இருப்பர். 6-ம் வீட்டில் சூரியன் இருந்தால் ஒருவர் அரசியலில் பெயர் வாங்க முடியும். 6-ம் வீடு எதிராளியின் தோல்வியைக் குறிக்கும் வீடல்லவா? சூரியன் அரசியலுக்குண்டான கிரகம். 6-ம் வீட்டிலுள்ள சூரியனை சனி பார்த்தால் இருதய சம்மந்தமான நோய் வரக் கூடும். 6-ம் வீட்டில் சந்திரன் இருந்தால் இளம் வயதில் உடல் உபாதை நிறைய இருக்கும். அது சிலருக்கு பாலாரிஷ்டமாகக் கூட இருக்கும். சமையல்கலையில் வல்லவராக இருப்பர். 6-ம் வீட்டில் செவ்வாய் இருந்தால் எதிரிகளை எளிதாக வெல்லுவர். 6-ம் வீட்டில் புதன் இருந்து ராகு, சனி, செவ்வாய் போன்ற கிரகங்களின் சேர்க்கையோ அல்லது பார்வையோ இருக்குமேயாகில் நரம்புசம்மந்தமான வியாதிகளோ, சித்தப் பிரமையோ ஏற்படக் கூடும். குரு இருந்தால் மரியாதைக் குறைவு ஏற்படும். சிலர் துர்தேவதைகளை வசியம் செய்வதில் ஈடுபடுவர். சுக்கிரன் இருந்து கெட்ட கிரகங்களின் சேர்க்கையோ அல்லது பார்வையோ இருக்குமேயாகில் பிறபெண்களுடன் தொடர்பு இருக்கும். சனி இருந்தால் இவருக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள். 6-ம் வீடு செய்யும் வேலையையும் குறிக்கிறது அல்லவா? 6-ம் வீட்டில் சனி இருந்தால் இரும்புத் தொழில், சுரங்கவேலைகள் ஆகியவற்றில் வேலை செய்வர். ராகு பாபியருடன் சேர்ந்து இருந்தால் அந்தரங்க உறுப்புக்களில் வியாதி இருக்கும். ராகுவுடன் சனியும் சந்திரனும் சேர்ந்து இருந்தால் ஹிஸ்டீரியா நோயினால் அவதிப் படுவர். கேது 6-ம் வீட்டில் இருப்பது அவ்வளவு கெடுதல் இல்லை.

 

6-ம் வீட்டிற்கதிபதி இலக்கினத்தில் இலக்கினாதிபதியுடன் இருப்பாரேயாகில் அந்த ஜாதகர் நோயினால் அவதிப்படுவர். அவர்களுடன் ராகுவும் சேர்வாரேயாகில் அந்த ஜாதகர் வீட்டில் களவு போகும். 6-ம் வீட்டிற்கதிபதி 3-ம் வீட்டில் இருந்தால் அந்த ஜாதகருக்கும் அவர் இளைய சகோதரத்திற்கும் நல்லுறவு இருக்காது. காது, தொண்டை சம்மந்தமான வியாதி இருக்கும். பொதுவாக 6-ம் வீட்டை வைத்துத்தான் ஒருவருக்கு வரக்கூடிய வியாதிகளைச் சொல்ல வேண்டும்.

ஜாதகத்தில் முதல் வீட்டிற்கு இலக்கினம் என்று பெயரென்று உங்களுக்குத் தெரியும். முதல்வீடு, நாலாம் வீடு, ஏழாம் வீடு, பத்தாம் வீடு ஆகியவை கேந்திரஸ்தானங்கள் என்றழைக்கப்படும். அதேபோல் ஒன்று, ஐந்து, ஒன்பதாம் வீடுகள் திரிகோண ஸ்தானங்கள் என்றழைக்கப்படும். இந்த கேந்திரஸ்தானங்களும், திரிகோணஸ்தானங்களும் மிக நல்ல வீடுகளாக அழைக்கப் படுகின்றன. இங்கே நல்ல கிரகங்கள் தங்கி இருப்பார்களேயானால் அவைகள் நல்லவைகளையே செய்யும். கெட்ட கிரகங்கள் தங்கி இருந்தால் அவைகள் அந்த வீட்டைக் கெடுத்து விடுகின்றன. அதாவது அந்த வீட்டின் காரகத்துவம் கெட்டு விடும். உதாரணமாக ஒருவருக்கு 5-ம் வீட்டில் சனி இருக்கிறார் எனக்கொள்ளுங்கள். 5-ம் வீடு திரிகோணஸ்தானம் ஆகும். அந்த வீடு புத்திர பாக்கியத்தைக் குறிக்கிறது. அங்கு பாபக் கிரகமான சனி இருப்பதனால் அவருக்குப் புத்திர பாக்கியம் இல்லாமல் போகும். குழந்தையே இல்லாமலும் போகலாம். "5-ல் சனி தத்துப் பிள்ளை யோகம்" என்று கூறுவார்கள். அங்கு சுபக்கிரகமான சுக்கிரன் இருந்தால் அவருக்குப் புத்திர பாக்கியம் இருக்கிறது எனக் கூறலாம். எந்த வீடாக இருந்தாலும் அங்கு சுபக்கிரகங்கள் அந்த வீட்டின் காரகத்துவத்தை மேம்படுத்துகின்றன. ஆனால் கெட்ட கிரகங்களோ அந்த வீட்டின்காரகத்துவத்தைக் கெடுத்து விடுகின்றன. ஒருவருக்கு ஜாதகத்தில் கேந்தரஸ்தானாதிபதியும், திரிகோணஸ்தானாதிபதியும் சேர்ந்து இருப்பார்களேயானால் அவர்கள் ராஜ யோகத்தைக் கொடுப்பர்கள். உதாரணமாக கன்னியாஇலக்கினத்தை எடுத்துக்கொள்ளுங்கள். சுக்கிரனானவர் 9-ம் வீட்டிற்கு அதிபதி. அதாவது திரிகோணஸ்தானாதிபதி. புதன் 10-ம் வீட்டிற்கு அதிபதி. அதாவது கேந்திராதிபதி. இருவரும் சேர்ந்து ஒருவீட்டில் இருக்கிறார் எனக்கொள்ளுங்கள். 4-ம் வீட்டில் இருக்கிறார் எனக்கொள்ளுங்கள். இந்த சேர்க்கையானது இவருக்கு ராஜயோகத்தைக் கொடுக்கும். படிப்பு, வீடு, வாசல், யோகம் எல்லாம் இருக்கும். எந்த வீட்டில் ராஜயோக கிரகசேர்க்கை இருக்கிறதோ அந்த வீட்டின் காரகத்துவம் நன்றாக இருக்கும். 9-ம் வீடு, 10-ம் வீட்டின் அதிபதிகள் சேர்ந்தால் அது தர்ம, கர்மாதிபதியோகம் என அழைக்கப் படும். தர்மஸ்தானம் என்பது 9-ம் வீடு, கர்மஸ்தானம் என்பது 10-ம் வீடு. இருவீடுகளின்அதிபர் சேர்க்கை தர்ம, கர்மாதிபதி யோகம் என்றழைக்கப்படும்.

 

கடகஇலக்கினத்தை எடுத்துக் கொள்ளுங்கள். செவ்வாயானவர், 5-ம் வீட்டிற்கும், 10ம் வீட்டிற்கும் அதிபதி. அதாவது கோண, கேந்திர வீடுகளுக்கு அதிபதி. 5-ம் வீடு திரிகோணஸ்தானம், 10-ம் வீடு கேந்திரஸ்தானம் அல்லவா! ஆகவே செவ்வாயானவர் கடக இலக்கினத்திற்கு யோககாரகன் என்றழைக்கப் படுகிறார். அதேபோல் செவ்வாயானவர் சிம்மஇலக்கினத்திற்கும் 4-ம் மற்றும் 9-ம் வீடுகளுக்கு அதிபதியாகிறார். கேந்திர, கோண வீடுகளுக்கு அதிபதியாவதால் அவர் சிம்ம இலக்கினத்துக்கும் யோக காரகனாகிறார். அதே போல் மகர, கும்ப இலக்கினங்களுக்கு சுக்கிரனானவர், கேந்தரஸ்தானத்திற்கும், திரிகோணஸ்தானத்திற்கும் அதிபதியாவதால் அவர் இந்த இரண்டு இலக்கினங்களுக்கும் யோககாரகனாகிறார். ரிஷப இலக்கினத்திற்கு சனியானவர் 9-ம் வீட்டிற்கும், 10ம் வீட்டிற்கும் அதிபதியாவதால் அவர் யோககாரகனாகிறார். துலாஇலக்கினத்திற்கும் சனியானவர் 4-ம் வீட்டிற்கும், 5-ம் வீட்டிற்கும் அதிபதியாவதால் அவர் யோககாரகனாகிறார். இந்த யோக காரகர்கள் எந்த வீட்டில் இருந்தாலும் அந்த வீட்டின் காரகத்துவம் நன்றாக இருக்கும். அதேபோன்று 2, 6, 8, 11-ம் வீடுகள் பணபரம் என்றும், 3, 12 வீடுகள் ஆபோக்லிபம் என்றழைக்கப்படும். இந்த வீடுகளைப் பற்றிப் பின்னால் பார்ப்போம். சரி!இப்போது நாம் விட்ட இடத்திலிருந்து முதலாம் வீட்டிற்கு வருவோம்.

 

இலக்கினம், மூன்றாம் வீடு, எட்டாம் வீடு ஆகியவை ஒருவரின் ஆயுளைக் குறிக்கிறது. ஒருவரின் ஆயுளைக் கணிக்க இந்த மூன்று வீடுகளையும் ஆராய வேண்டும். ஒருவரின் ஆயுள் 30 வயதுக்குள் இருந்தால் அது அற்பாயுள் எனப்படும். 30முதல் 60 வயது முடிய நடுத்தர ஆயுள் எனப்படும். 60 வயதுக்குமேல் அது தீர்க்காயுள் எனப்படும். சரி! ஒருவரின் ஆயுளை எப்படித் தீர்மானிப்பது? இது மிகவும் கடினமான வேலை. ஜோதிடத்திலேயே மிகவும் கடினமானது இதுதான். கீழ்வரும் கிரக நிலைகள் தீர்க்க ஆயுளைக் காட்டுகின்றன.

 

1. இலக்கினதிபதி தன் சொந்த வீட்டிலோ, அல்லது உச்ச வீட்டிலோ இருத்தல்.

2. 8-ம் வீட்டில் சனியோ அல்லது குருவோ இருத்தல்.

3. இலக்கினமும், சந்திரனும் நல்லவர்கள் சேர்க்கை பெற்றிருத்தல்.

4. இலக்கினாதிபதியும், சந்திரனும் கேந்திரவீடுகளிலோ அல்லது திரிகோண வீடுகளிலோ இருத்தல்.

5. இலக்கினாதிபதி 8-ம் வீட்டில் இருத்தல்

6. எட்டாம் வீட்டிற்கதிபதி 8-ம் வீட்டிலோ அல்லது இலக்கினத்திலோ இருத்தல் அல்லது ல்க்கினத்தையோ அல்லது 8-ம் வீட்டையோ பார்த்தல்

7. சந்திரனும், இலக்கினாதிபதியும் சேர்ந்து இருந்தாலோ அல்லது குருவும் சேர்ந்து இருத்தல்.

8. குரு, சனியையோ அல்லது 8-ம் வீட்டையோ பார்த்தல்.

 

இதைப் போல் பல கிரக சேர்க்கைகளை நமது கிரந்தங்கள் கூறிருக்கின்றன. அவற்றுள் முக்கியமானவற்றை மட்டும் நாம் கூறியுள்ளோம். நமது வாசகர்கள் பலதீபிகை, பிருஹத் ஜாதகம் போன்ற நூல்களைப் பார்த்தால் ஆயுளைப் பற்றி விரிவாகக் கூறி இருப்பது தெரிய வரும்.

 

கீழே கூறியுள்ளவைகள் அற்ப ஆயுளைக் காட்டுகின்றன.

 

1. 8-ம் வீட்டில் சனியைத்தவிர பாபகிரகங்கள் இருந்தாலும், 6, 12 வீடுகளில் செவ்வாயும், சனியும் இருந்தாலும் அற்ப ஆயுள்தான்.

2. இலக்கினத்தில் சந்திரனோடு பாபிகள் சேர்ந்து இருத்தல்

3. இலக்கினத்தில் செவ்வாய் இருந்து சுபர் பார்வை இல்லாது இருந்தாலும்,

6, 8-ம் வீடுகளில் சனியிருந்து சுபர் பார்வை இல்லாதிருப்பதும்,

4. பொதுவாக இலக்கினம், மூன்றாம் வீடு, 8-ம் வீடு ஆகியவற்றில் பாவிகள்

 

இருந்து சுபர் பார்வை இல்லாவிட்டாலும் அற்ப ஆயுள்தான்.

நாம் பொதுவாக ஆயுள் தீர்க்காயுளா அல்லது அற்ப ஆயுளா என்பதைப் பற்றி மேலே கூறியிருந்தோம். சரி! ஒருவருக்கு எப்போது மரணம் ஏற்படும்? யார் மரணத்தைக் கொடுப்பார்கள். மரணத்தைக் கொடுக்கும் கிரகத்திற்கு மாரகன் எனப் பெயர். பொதுவாக எந்த வீட்டிற்கும் 12-ம் வீட்டதிபர் அந்த வீட்டிற்கு நன்மையைச் செய்யாது. நான்காம் வீடு தாயாரைக் குறிக்கிறது. நான்காம் வீட்டிற்குப் 12-ம் வீடு 3வது வீடு அல்லவா! 3-ம் வீட்டிலுள்ள கிரகங்களும், 3-ம் வீட்டின் அதிபதியும் தாயாருக்கு நன்மையைச் செய்யாது. கெடுதல்தான் செய்யும். 7-ம் வீடு திருமணத் தைக் குறிக்கிறது. 7-ம் வீட்டிற்குப் 12-ம் வீடு 6-ம் வீடு. 6-ம் வீட்டின் அதிபதியும் அதில் உள்ள கிரகங்களும் கணவன், மனவியரிடையே கருத்து வேற்றுமையும் , சில சமயம் விவாஹரத்தையும் கொடுத்துவிடும். எந்த வீட்டிற்கும் அதற்கு முந்தைய வீடு எதிர்மறையான பலன்களைக் கொடுக்கும்.

 

ஆயுளைக் குறிப்பது 1, 3, 8-வது வீடுகள் அல்லவா! இவற்றிற்கு முந்தையவீடு அல்லது 12-வது 12, 2, 7 வது வீடுகள் ஆகும். இவைகள் ஒருவரைக் கொல்லும் வல்லமை படைத்தவை. ஆகவே இவர்களை மாரகர்கள் என்றழைக்கலாம். 7-வது வீடு திருமணத்தைக் கொடுக்கும் என்று முன்பு கூறியிருந்தோம். இப்போது அதே 7-ம் வீடு மாரகத்தைக் கொடுக்கும் என்று எழுதுகின்றோம். கல்யாணவயதின் போது திருமணத்தைக் கொடுத்த 7-ம் வீட்டின் அதிபர் ஒருவருக்கு ஆயுளை முடிக்கும்போது அவர் மரணத்தையும் கொடுப்பார். ஒருவரின் ஜாதகத்தில் 2, 7, 12 க்கதிபர்கள், அதில் உள்ள கிரகங்கள் மாரகத்தைக் கொடுப்பார்கள் என்றும் எழுதி இருந்தோம். இவர்களைத்தவிர வேறு யாராவது மாரகத்தைக் கொடுப்பார்களா? இருக்கிறார்கள். அவர்களைக் கீழே பார்ப்போம்.

 

ராசிகளில் மேஷம், கடகம், துலாம் , மகரம்- ஆகியவை சரராசிகள் எனப்படும். இந்த சரரசிகளுக்கு 11-ம் வீடு பாதகத்தைக் கொடுக்கும். 11-ம் வீட்டு அதிபதியும், அதில் உள்ள கிரகங்களும் மரணத்தைக் கொடுக்கும். மேஷத்திற்குப் 11-ம் வீடு கும்பம்: அதன் அதிபதி சனி; ஆகவே மேஷத்திற்கு சனி பாதகாதிபதியாகிறார். இதேபோன்று கடகத்திற்கு சுக்கிரன், துலாத்திற்கு சூரியன், மகரத்திற்கு செவ்வாய் ஆகியோர் பாதகாதிபதியாகிறார்கள். பாதகாதிபதி என்றால் ஆயுள் முடியும் போது மட்டும் மரணத்தைக் கொடுப்பார்கள். மற்ற காலங்களில் அவர்கள் வேறெந்தக் கெடுதலையும் செய்ய மாட்டார்கள். உதாரணத்திற்குத் துலா ராசியை எடுத்துக் கொள்ளுங்கள். இதன் அதிபதி சூரியன். இவர் 10 வீட்டில் இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். 10-ம் வீடு ஜீவனஸ்தானம் அல்லவா! லாபாதிபதியான சூரியன் 10-ம் வீட்டில் இருந்தால் நல்ல வேலை கிட்டும். சிலருக்கு அரசங்க உத்தி யோகம் கிட்டும். சூரியன் அரசாங்கத்திற்குக் காரகம் வகிப்பவர். உத்தியோகத்தில் பதவி உயர்வுகள் எல்லாம் பெற்று நல்ல விதமாக வாழ்க்கை நடத்துவர். சூரியன் லாபாதிபதியாகி ஜீவனத்தில் அனர்ந்து அனைத்து நன்மைகளையும் செய்வார். சரி! அவருக்கு ஆயுள் 65 முடிய எனக்கொள்ளுங்கள். அப்போது சூரியதசையோ, அல்லது சூரியபுக்தியோ வருமாகில் அவர் அப்போது மாரகத்தைக் கொடுப்பார். அப்போது அவர் லாபாதிபதியாகச் செயல் படமாட்டார். பாதகாதிபதியாகச் செயல் படுவார். உத்தியோகத்தில் அவ்வளவு நன்மைகளைச் செய்த சூரியன் மாரகம் என்று வரும் போது மரணத்தைக் கொடுக்கவும் தயங்குவதில்லை. தன் கடமையைத் தவறாமல் செய்வார்.

 

ஸ்திர ராசிகளான ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியோருக்கு 9-ம் வீட்டிற் கதிபதிகளான முறையே சனி, செவ்வாய், சந்திரன், சுக்கிரன் ஆகியோர் பாதகாதிபதி ஆகின்றனர்.இவர்கள் ஆயுள் முடியும் போது தங்கள் தசா, புக்திக் காலங்களில் மரணத்தைக் கொடுப்பார்கள். ரிஷபத்திற்கு சனியோககாரகன் எனப் பெயர். அவர் தன் தசாபுக்தி காலங்களில் நன்மையைத்தான் செய்வார். இருப்பினும் ஆயுள்முடியும் போது அவர் தன் கடமையைச் செய்யாமலிருப்பதில்லை. அவர் மரணத்தைக் கொடுப்பார். ஆயுள் இருக்கும்போது நல்லவைகளையும், ஆயுள் முடியம்போது மாரகத்தையும் கொடுப்பார்.

 

உபய ராசிகளான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவற்றிற்கு 7-ம் வீட்டின் அதிபதி பாதகாதிபதியாகிறார். மிதுனத்திற்கு 7-ம் வீட்டின் அதிபதி குரு, கன்னிக்கு 7-ம் வீடான மீனத்திற்கதிபதி குரு பாதகாதிபதியாகிறார். தனுசுவிற்கும், மீனத்திற்கும் புதன் 7-ம் வீட்டிற்கதிபதியாகி அவர் பாதகாதிபதியாகிறார். இளமையில் திருமணத்தைக் கொடுத்த குருவும், புதனும் ஆயுள் முடியும்போது ஆயுளை முடித்துவைக்கவும் செய்வார்கள். இப்போது மாரகாதிபதிபதிகள், பாதகாதிபதிகள் யார் யார் எனத் தெரிந்து கொண்டீர்கள்

ஒரு கிரகம் எந்த நட்சத்திரச் சாரத்தில் அமர்ந்து இருக்கிறது என்பதையும் பார்த்துத்தான் பலன் சொல்ல வேண்டும். நட்சத்திரச்சாரம் மிகவும் முக்கியம். பலன் சொல்லும்போது ஒரு கிரகம் எந்த நட்சத்திரத்தின் காலில் அல்லது சாரத்தில் அமர்ந்துள்ளது எனப் பார்த்துப் பலன் சொல்ல வேண்டும். இப்போது ஒரளவிற்கு ஆயுள் பாவத்தைப் பற்றித் தெரிந்து கொண்டுள்ளீர்கள். பல ஜாதகங்களைவைத்துக் கொண்டு அவர்கள் எப்போது காலமானார்கள் எனப் பார்த்து பலன் சொல்லப் பழகிக் கொள்ளுங்கள்.

பல ஜாதகங்களைப் பார்த்து அவர்கள் எப்போது மரணமடைந்தார்கள் என்று பார்த்து அப்போது என்ன தசா, புக்தி என்று பார்க்க வேண்டும். ஆயிரம்பேரைக் கொன்ற வன் அரை வைத்தியன் என்பார்கள். அதே போல் நாமும் பல ஜாதகங்களைப் பார்த்துப் பழகினால்தான் பலன்களைக் கூறமுடியும். நாம் ஏற்கனவே எழுதி இருக்கிறோம், ஒரு வீட்டைப் பற்றிக் கூறவேண்டுமானால் அந்த வீட்டிலே சுப கிரகங்கள் இருக்கின்றார்களா அல்லது பாப கிரகங்கள் இருக்கின்றார்களா, அந்த வீட்டின் அதிபர் எங்கு இருக்கிறார், அந்த வீட்டை யார் பார்க்கிறார்கள், அந்த வீட்டின் அதிபர் யாருடன் சேர்ந்திருக்கிறார் என்று பார்த்துத்தான் பலன் சொல்ல முடியும். ஜாதகம் கணிப்பது எளிது. வெறும் கணக்குத்தான். ஆனால் பலன் சொல்லுவது இருக்கிறதே அது அவ்வளவு எளிது இல்லை. எளிதாக இருந்தால் எல்லோரும் ஜோதிடராக முடியும். நாம் இன்னும் முதல் வீடான இலக்கினத்தை இன்னும் முடிக்க வில்லை.

 

இலக்கினத்தில் நல்ல கிரகங்கள் இருக்கலாம். அவைகள் நல்லத்தையே செய்யும். அதேபோல் இலக்கினாதிபதி நல்ல கிரகத்துடன் சேர்ந்து இருக்கலாம். நல்லத்தையே செய்யும். இலக்கினாதிபதி ஒருபாப கிரகத்துடன் சேர்ந்து இருந்து, இலக்கினத்தில் ராகு இருப்பாரேயாகில் அவருக்கு தாழ்மை உணர்வு இருக்கும். சூரியன், சனி, செவ்வாய் ஆகியவை வரண்ட கிரகங்களாகும். இவை ஒருவரின் இலக்கினத்திலே இருப்பாரேயாகில் அவர் சற்று ஒல்லியான உருவம் கொண்டவராக இருப்பர். ஒருவரின் இலக்கினம் சரராசியாக இருந்து, அதன் அதிபர் சர ராசியில் இருந்தால் அவர் அதிகம் வெளியூர்ப்பயணம் செய்து பணம் சம்பாதிப்பார் எனக் கொள்ளலாம். இலக்கினம் சரராசியாகி, நவாம்ச இலக்கினமும் சர ராசியாகி, நவாம்சத்தில் இலக்கினாதிபதி சர இலக்கினத்தில் இருப்பாரே யாகில் அவரும் வெளியூர்ப் பயணம் மேற்கொண்டு ஜீவனம் செய்வார் எனக் கொள்ளலாம். ஒருவருக்கு இலக்கினத்தில் பல பாப கிரகங்கள் இருப்பாரேயாகில் அவர் வாழ்க்கையில் பல துக்ககரமான சம்பவங்களைச் சந்திக்க வேண்டியது இருக்கும். இலக்கினத்திற்கு இருபுறமும் ராகுவும், சனியும் அதாவது 12, 2 ஸ்தானங்களில் இருப்பார்களேயாகில் அவர்களுக்கு திருட்டு பயம் இருக்கும்.

அதேபோல் ராகுவும், செவ்வாயும் அல்லது சனியும் செவ்வாயும் இலக்கினத்திற்கு 2, 12 வீடுகளில் இருந்தால் திருட்டு பயம் இருக்கும். ஒருவரின் உறுவ அமைப்பைப் பற்றிப் பார்க்கும்போது சூரியன் இலக்கினத்தில் இருந்தால் நல்ல உடல் அமைப்பைக் கொடுப்பார். சந்திரன் இருந்தால் உடல் அமைப்பு நல்ல விகிதத்தில் இருக்கும். சிலரைப் பார்த்து இருப்பீர்கள். அவர்களுக்கு கை, அல்லது கால் நீண்டு இருக்கும். அல்லது முகம் மட்டும் நீண்டு இருக்கும். சந்திரன் இலக்கினத்தில் இருப்பாரேயாகில் உடல் அமைப்பு சரியாக இருக்கும். செவ்வாய் இருந்தால் நல்ல ஆரோக்கியமான, உறுதியான உஷ்ணப் பாங்கான உடல் அமைப்பைக் கொடுப்பார். புதனும் இலக்கினத்தில் இருந்தால் நல்ல உறுவமைப்பைக் கொடுப்பார். குரு இருப்பாரேயாகில் நல்ல மதிப்பை உண்டாக்கும் வகையில் உறுவ அமைப்பைக் கொடுப்பார். சுக்கிரன் இருப்பாரேயாகில் கவர்ச்சிகரமான உறுவ அமைப்பைக் கொடுப்பார். ஆனால் அந்த உறுவமைப்பில் பெண்மை கலந்து இருக்கும். சனி இருப்பாரேயாகில் நல்ல கறுமையான கூந்தலைக் கொடுப்பார். குருகிய மார்பு அமைப்புடன் சிறிது சோம்பேரித்தனமாக இருப்பார்.

 

ஒருவரின் மனதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் சந்திரனின் நிலையைத் தெரிந்து கொள்ள வேண்டும். சந்திரன்தான் மனதுக்குக் காரகம் வகிப்பவர். சந்திரன் சுபகிரகங்களான புதன், குரு, சுக்கிரனுடன் சேர்ந்து இருக்கலாம். புதனுடன் சேர்ந்து இருந்தால் நியாய உணர்வுடன் இருப்பர். நியாயத்தைப் பேசுபராக இருப்பர். புதன் அடிக்கடி மாறும் குணமுள்ளவரதலால் சந்திரனுடன் சேரும்போது இவர் தன் எண்ணங்களை மாற்றக் கூடியவராக இருப்பர். சனியும் சந்திரனும் சேர்ந்து இருந்தால் எப்போதும் கவலை கொண்டவராக இருப்பார். செவ்வாயும் சந்திரனும் சேர்ந்து இருந்தால் பெண்களாக இருப்பின் மாதவிலக்கு சம்மந்தமான பிரச்சனை இருக்கும். அவர்கள் மன உறுதியுடனும் தைரியத்துடனும் இருப்பர். சந்திரனும், ராகுவும் சேர்ந்து இருந்தால் அதுவும் இலக்கினத்தில் இருந்தால் Hysteria என்னும் மன நோய் இருக்கும். சந்திரனும் குருவும் சேர்ந்து இருந்தால் நல்ல எண்ணங்களோடு மன உறுதியுடன் இருப்பர். பொதுவாக சந்திரனும் ராகுவும், சனியுமோ அல்லது செவ்வாயுமோ இருக்குமேயாகில் அவர்கள் நிச்சயமாக ஒரு emotional Character ஆக இருப்பர். பாப கிரகங்கள் சந்திரனுடன் சேராமல் இருப்பது நல்லது. சந்திரனும் சூரியனும் சேர்ந்து இருந்தால் மிகவும் வலுவான மனதைக் கொண்டவராக இருப்பார். அதே சமயம் பிறர் பொருளை அபகரிக்கும் எண்ணம் கொண்டவராகவும் இருப்பார். அம்மாவாசை அன்றுதான் சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருக்கும். அப்போது பிறந்தவர் பிறர் பொருளை அபகரிக்கும் எண்ணம் கொண்டவராக இருப்பர்.

 

ஒருவரின் ஜாதகத்தில் ராகுவோ அல்லது கேதுவோ இலக்கினத்தில் இருக்குமேயாகில் அவர்களுக்கு நரம்பு சம்மந்தமான தொந்தரவுகளிருக்கும். சூரியன் உடலுக்கும், சந்திரன் மனதிற்கும் காரகம் வகிப்பவர்கள் என்று நாம் கூறி இருக்கிறோம். சூரியனோ அல்லது இலக்கினமோ வர்க்கோத்தமத்தில் இருந்தால் முதல் வீடு பலம் பொருந்தியதாகக் கருதப் படும். வர்க்கோத்தமம் என்றால் என்ன? வர்க்கோத்தமம் என்பது ராசியிலும், நவாம்சத்திலும் ஒரு கிரகமோ அல்லது வீடோ ஒரே இடத்தில் இருப்பது. ஒருவருக்கு சூரியன் ராசியில் மேஷத்தில் இருக்கிறார் எனக் கொள்வோம். நவாம்சத்திலும் மேஷத்தில் சூரியன் இருப்பாரேயாகில் அது வர்க்கோத்தமம் எனப்படும். அதாவது சூரியன் ராசியிலும், நவாம்சத்திலும் மேஷத்தில் இருக்கிறார். இது சூரியனுக்கு மட்டுமல்ல எந்த கிரகமாக இருந்தாலும் ராசியிலும், நவாம்சத்திலும் ஒரே வீட்டில் இருந்தால் அது வர்கோத்தமம் எனப்படும். இலக்கினம் வர்கோத்தமாக இருந்தால் ஆயுள் தீர்க்கம் என்று கூறலாம். சூரியன் வர்கோத்தமத்தில் இருந்தால் அவர் உடல் வலு உள்ளவராகக் கருதலாம்.

 

பொதுவாக நல்ல கிரகங்கள் இலக்கினத்தில் இருப்பது நல்லது. பாப கிரகங்கள் இருப்பது அவ்வளவு நல்லது இல்லை

இரண்டாம் வீட்டை அதன் அதிபதியைக் கொண்டும், அதில் இருக்கும் கிரகங்களை வைத்தும், அந்த வீட்டைப் பார்க்கும் கிரகங்களை வைத்தும் பலன் கூறவேண்டும். 2-ம் வீட்டை வைத்து எந்தெந்த பலங்களைக் கூறலாம் என்பதைப் பார்ப்போம். 2-ம் வீடு குடும்பத்தைக் குறிக்கிறது. குடும்பத்தில் அமைதி இருக்குமா அல்லது குழப்பம் இருக்குமா என்பதை இந்த வீட்டை வைத்துத்தான் சொல்ல வேண்டும். ஆகவே இதை குடும்பஸ்தானம் என்று நாம் குறிப்பிடுகிறோம். ஒருவருக்குக் குழந்தை பிறக்கிறது எனக் கொள்வோம். அதாவது அந்த வீட்டில் ஒரு நபர் கூடி இருக்கிறார் என்றுதானே இதற்குப் பொருள். அதனால்தான் குழந்தை பிறப்பை இந்த வீட்டை வைத்துக் கூறுகிறோம். அடுத்ததாக இதை தனஸ்தானம் என்று கூறுவார்கள். அதாவது ஒருவருக்குப் பணவரவு நன்றாக இருக்குமா அல்லது சொற்பமாக இருக்குமா என்பதையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூறவேண்டும். ஒருவரின் கண்பார்வை நன்றக இருக்குமா அல்லது பார்வையில் கோளாறு இருக்குமா என்பதையும் இந்த வீட்டையும் வைத்துத்தான் கூறவேண்டும். ஒருவரின் வாக்கு வன்மையையும் இதை வைத்துத்தான் கூறவேண்டும். ஒருவர் சிரிக்கச், சிரிக்கப் பேசுவர். ஒருவர் எப்போதுமே ஒருவரையும் மதியாமல் பேசுவர். சிலர் திக்கித்திக்கிப் பேசுவர். ஆக ஒருவரின் நாக்கு வன்மையை இதைவைத்துத்தான் கூறவேண்டும். ஒருவரின் வங்கியில் உள்ள பணம், Liquid Cash என்று சொல்லக் கூடிய கையிருப்புப் பணம், நகைகள், Investments ஆகியவற்றைக் குறிப்பதும் இந்த வீடுதான். ஒருவருக்குக் கல்யாணம் ஆகவில்லையா? ஏன் என்பதையும் நாம் இந்த இரண்டாம் வீட்டை வைத்துத்தான் ஆராய வேண்டும். இதைத்தவிர வேறொன்றும் கிடையாதா? உண்டு. இளைய சகோதரத்தின் மரணம், இளைய சகோதரத்தின் வீண் செலவுகள் ஆகியவற்றையும் கூறலாம். எப்படி? 3-ம் வீடு இளைய சகோதரத்தைக் குறிக்கிறது. 3-ம் வீட்டிற்குப் பன்னிரெண்டாம் வீடு 2-ம் வீடு அல்லவா? ஆக 2-ம் வீடானது இளைய சகோதரத்தின் மரணம், வீண் செலவுகள், ஆகியவற்றையும் இந்த வீடு குறிக்கிறது.

 

4-ம் வீடு தாயாரைக் குறிக்கிறது. 4ம் வீட்டிற்குப் 11-ம் வீடு 2-ம் வீடு அல்லவா? ஆக தாயாரின் லாபங்களையும் இது குறிக்கிற்து. ஒருவரின் 7-ம் வீடு கணவன் அல்லது மனைவியைக் குறிக்கிறது. 7-ம் வீட்டிற்கு 8-ம் வீடு 2-ம் வீடல்லவா? ஒருவருக்குக் கன்னியா இலக்கினம் எனக் கொள்ளுங்கள். இவருக்கு 7-ம் வீடு மீனம். இது இவருடைய மனைவியைக் குறிக்கிறது. 7-ம் வீட்டிற்க்கு 8-ம் வீடு எது? துலாம் அல்லவா? இந்த 8-ம் வீட்டில் குரு இருக்கிறார் எனக்கொள்ளுங்கள். அதாவது ஜாதகரின் தனஸ்தானத்தில் குரு இருக்கிறார். குரு எதையும் குறைவில்லாமல் கொடுப்பவர். ஆக இவருக்குப் பணம் குறைவில்லாமல் இருக்கும் எனக் கொள்ளலாம். இவருக்குக் குழந்தை பாக்கியமும் குறைவில்லாமல் இருக்கும் எனவும் கொள்ளலாம். இவரின் மனைவிக்கு இது 8-ம் இடம் என்றும் கூறினோமல்லவா? 8-ம் இடம் என்ன? ஆயுள் ஸ்தானம். ஆக இந்த 8-ம் இடத்தில் குரு இருப்பதால் இவரின் மனைவிக்கு நீண்ட ஆயுள் இருக்குமெனக் கூறலாம். இவ்வாறாக ஒரு வீட்டை வைத்து ஜாதகர் மட்டுமில்லாது மற்றவரின் பலன்களையும் கூறமுடியும். 2-ம் வீட்டை வைத்து ஒருவரின் மூத்த சகோதரத்தின் வீடு, வாசல் ஆகியவற்றைக் கூறமுடியும். மூத்த சகோதரத்தைக் குறிப்பது 11-ம் வீடு. 11-ம் வீட்டிற்கு 4-ம் வீடு ஜாதகரின் 2-ம் வீடல்லவா? ஆக 2-ம் வீட்டை வைத்து ஜாதகரின் ஸ்திரசொத்துக்கள், கல்வி ஆகையவற்றயும் கூறமுடியும்.

ஒருவரின் பொருளாதாரம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள 2-ம் வீடு, 6-ம் வீடு, 10ம் வீடு 11-ம் வீடு ஆகியவற்றை கவனமாகப் பார்க்க வேண்டும். 2-ம் வீடு ஒருவரின் தனஸ்தானம் என்று ஏற்கனவே கூறியிருக்கிறோம். 6-ம் வீட்டை ஏன் பார்க்க வேண்டும்? 6-ம் வீடு என்பது நாம் ஒருவரின் கீழ் வேலை செய்யும் அடிமைத் தொழிலைக் குறிக்கிறது. சிலர் 6-ம் வீடு என்பது ரோகம், ரணம், கடன் என்று மட்டும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அது தவறு. 6-ம் வீடு நாம் செய்யும் அடிமைத் தொழிலையும் குறிக்கிறது. நாம் செய்யும் வேலையின் மூலம் வருவதுதானே நமது வருமானம். ஆக 6-ம் வீட்டையும் பார்த்தால்தானே நம் வருமானம் தெரியும். ஆக 6-ம் வீட்டையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 10-ம் வீடு என்பது ஜீவன ஸ்தானம் ஆகும். ஜீவனம் என்பது ஒருவருக்கு வியாபாரமாக இருக்கலாம். மற்றொருவருக்கு உத்தியோகமாக இருக்கலாம். ஆக ஜீவனம் என்பது உத்தியோகத்தையோ அல்லது வியாபாரத்தையோ குறிக்கும் பொதுப்படையானவார்த்தை யாகும். ஆக ஒருவரின் பணநிலையைத் தீர்மானம் செய்ய 10-ம் வீட்டையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 11-ம் வீடு என்பது லாபஸ்தானம் ஆகும். நாம் சம்பாதித்து செலவு செய்தது போக மிச்சம்தான் லாபம் என்பது. இதைக் குறிப்பதுதான் லாபஸ்தானம் ஆகும். ஆக இந்த 4-வீடுகளையும் கவனமாக ஆராய்ந்தால்தான் ஒருவரின் பணநிலையை நாம் கூறமுடியும்.

 

இயற்கையிலேயே சுப கிரகங்களான குரு, சுக்கிரன், புதன், வளர் பிறைச்சந்திரன் ஆகியவை 2-ம் வீட்டில் இருப்பது நல்லது. பொருளாதாரம் நன்றாக இருக்கும். பணவரவு நன்றாக இருக்கும். சனி, ராகு, கேது போன்ற பாப கிரகங்கள் இருப்பது அவ்வளவு நல்லது இல்லை. பணவசதி குறைவாக இருக்கும். 2-ம் வீட்டின் அதிபதி உச்சமாகவோ அல்லது சொந்த வீட்டிலோ இருப்பது தாராளமான பொருளாதாரத்தைக் குறிக்கும். 2-ம் வீட்டை அதன் அதிபதியோ அல்லது மேற் கூறிய சுப கிரகங்களோ பார்த்தாலும் பொருளாதாரம் நன்றாக இருக்கும். 2-ம் வீட்டில் செவ்வாயோ அல்லது கேதுவோ இருப்பவர்கள் சற்றுக் கடினமான வார்த்தைகளால் பேசுபவர்களாக இருப்பார்கள். அவர்கள் பேச்சு மற்றவர்கள் மனதைப் புண்படுத்தும். 8-ம் வீட்டின் அதிபதி தனஸ்தானமான 2-ம் வீட்டில் இருந்தால் அவர்கள் பண நிலைமை நன்றாக இருக்காது. அதே போன்று 12-ம் வீட்டின் அதிபதியும் 2-ம் வீட்டில் இருந்தால் அவர்கள் பண நிலைமையும் நன்றாக இருக்காது.

 

இரண்டாம் வீட்டின் அதிபதி எந்தெந்த வீட்டில் இருந்தால் என்னென்ன பலன்கள் என்று பார்ப்போம். இலக்கினத்தில் இருந்தால் அவர் சொந்த முயற்சியில் பணம் சம்பாதிப்பார். அவருடன் 9-ம் வீட்டதிபதியோ அல்லது சூரியனோ இருப்பாரேயாகில் அவருக்குப் பிதுராஜித சொத்துக்கள் கிடைக்கும். 2-ம் வீட்டதிபதி சொந்த வீட்டிலேயே இருப்பாரேயாகில் பண நிலை சரளமாக இருக்கும். 3-ம் வீட்டிலிருந்தால் இளைய சகோதரத்திட மிருந்து பண உதவி கிட்டும். 3-ம் இடம் இளைய சகோதரத்தைக் குறிப்பது அல்லவா? 4-ம் இடத்திலிருந்தால் என்ன பலன்? 4-ம் வீடு வாகனங்களைக் குறிக்கிறது அல்லவா? வீடு, வாசல், தாய் வழி சொந்தங்கள் ஆகியவற்றையும் குறிக்கிறது அல்லவா? ஆகவே வாகனங்கள் மூலமாகவும், வீடு, வாசல் வாங்கி, விற்றுத் தொழில் செய்தும் பணம் சம்பாதிப்பர். 5-ம் வீடு என்பது கலைகள், Speculation துறைகள் ஆகியவற்றைக் குறிப்பது ஆகும். இதில் 2-ம் வீட்டிற்குடையவர் இருந்தால் கலைகள் மூலமாகப் பணம் சம்பாதிக்க முடியும். லாட்டரி, ரேஸ், போன்றவற்றிலிருந்தும் பணம் இயலும். அதாவது சிரமமின்றி பணம் சம்பாதிக்க இயலும். 6-ம் இடம் என்பது உத்தியோகத்தைக் குறிக்கிறது. அதில் 2-ம் வீட்டதிபர் இருந்தால் அவர் உத்தியோகம் செய்து பணம் சம்பாதிக்க முடியம் என்று கூறலாம். என்ன! எல்லோருமே உத்தியோகம் செய்துதானே பணம் சம்பாதிக்கிறார்கள் என்று நீங்கள் கூறலாம்.

ஒருவர் உங்களிடம் ஒருஜாதகத்தைக் காட்டி நான் வியாபாரம் செய்வேனா அல்லது வேலைக்குப் போவேனா? என்று கேட்க்கிறார் எனக் கொள்வோம். 10-ம் இடம் ஜீவன ஸ்தானம் அல்லவா? 10-ம் அதிபதி 6-ம் வீட்டிலோ அல்லது 6-ம் வீட்டின் அதிபதியுடனோ சேர்ந்து இருக்கிறார் எனக் கொள்வோம். நீங்கள் தைரியமாக அவர் வேலைக்குப் போவார் எனச் சொல்லலாம். அதேபோன்று 2-ம் வீட்டு அதிபர் 6-ம் வீட்டில் இருந்தாலும் உங்களுக்கு உத்தியோகத்தின் மூலமாகப் பணவரவு கிடைக்கும் என்றும் கூறலாம். 2-ம் வீட்டு அதிபர் 7-ம் வீட்டில் இருந்தால் அன்னிய நாட்டின் மூலமாகப் பணம் வரும் எனக்கொள்ளலாம்.8-ம் வீட்டில் 2-ம் வீட்டு அதிபர் இருப்பது அவ்வளவு நல்லது அல்ல. பணவிரயம் ஆகும் எனக் கொள்ளலாம். 9-ம் வீடு வெளிநாட்டுப் பயணத்தைக் குறிக்கிறது அல்லவா? அந்நியத் தொடர்புமூலமாப் பணம் கிடைக்கும் எனக் கொள்ளலாம். 11-வது லாபஸ்தானம் அல்லவா? அங்கு 2-ம் வீட்டு அதிபர் இருப்பது மிகவும் நல்ல பலனைக் கொடுக்கும். பணப் பெருக்கு இருக்கும். 12-ம் வீடு விரையஸ்தானம் என்று சொல்லுவார்கள். அந்த வீட்டை முதலீடு செய்யும் வீடு எனவும் கூறலாம். அதாவது ஒருவர் வீடு வாங்குகிறார் எனக் கொள்வோம். அது ஒரு முதலீடுதானே. 12-ம் வீட்டிலுள்ள கிரகத்தின் தசாபுக்திகளிலோ அல்லது 12-ம் வீட்டு அதிபரின் தசா, புக்தி களிலோ ஒருவர் வீடு வாங்க முடியும். ஏனெனில் 12-ம் வீடு முதலீட்டையும் குறிக்கும். 2-ம் அதிபர் 12-ல் இருந்தால் சிலசமயம் பணவிரயமோ அல்லது முதலீடு செய்யும் செலவோ இருக்கக் கூடும்.

 

2-ம்வீட்டில் சூரியனும், சந்திரனும் சேர்நது இருந்தால் கண் பார்வையில் குறை இருக்கும். 2-ம் வீட்டு அதிபர் 6 அல்லது 8 அல்லது 12-ம் வீட்டில் இருந்தாலும் கண்பார்வையில் தொந்தரவு இருக்கும். 2-ம் அதிபதி 8-ல் இருந்து அங்கு சூரியனும் இருந்தால் அரசாங்கத்தின் மூலமாகப் பண விரயம் இருக்கும். கிரகங்கள் 2-ம் வீட்டில் இருந்தால் என்ன பலன் என்பதைப் பார்ப்போம்.

 

சூரியன் : 2-ம் வீட்டில் சூரியன் இருப்பது அவ்வளவு நல்லது அல்ல: கஷ்டத்தின்பேரில்தான் பணம் சம்பாதிக்க முடியும். நல்ல கிரகங்கள் பார்வை இருந்தால்தான் பண வரவு சரளமாக இருக்கும்.

 

சந்திரன் : பெண்கள் மூலமாகப் பணவரவு இருக்கும். சந்திரன் பெண்கிரகம் அல்லவா? பணவரவு ஒரே மாதிரியாக இருக்காது. உயர்வும், தாழ்வும் இருந்து வரும்.

 

செவ்வாய் : இவர்கள் சண்டைக்காரர்களாக இருப்பார்கள். ஆனால் பேச்சுத் திறமை இருக்கும்.

 

புதன் : ஏஜென்சி தொழில் மூலமாகவோ, வியாபாரம் மூலமாகவோ பணம் சம்பாதிப்பர். சிலர் தான் கற்ற கல்வியைக் கொண்டு பணம் சம்பாதிப்பர். சிலருக்கு இரட்டை வருமானம் உண்டு; ஏனெனில் புத ஒரு இரட்டைக் கிரகம்.

குரு : பணப் புழக்கம் நன்றாக இருக்கும். குடும்பம் விருத்தியாகும். பொதுவாக 2-ம் வீட்டில் குரு நன்மையையே செய்யும்.

 

சுக்கிரன் : பணப் புழக்கம் நன்றாக இருக்கும். மிக இனிமையாகப் பேசுவார். சிலருக்குப் பெண்களாலும், வாகனங்களாலும் வருமானம் உண்டு.

 

சனி : பணப்புழக்கம் மிகக் குறைவாக இருக்கும்.வேலைக்கேற்ற ஊதியம் கிட்டாது. குடும்ப வாழ்க்கை சுகமாக இருக்காது. பலருடன் கலந்து பழகத்தெரியாதவர்.

 

ராகு : குடும்பத்தில் குழப்பம் இருக்கும். கண்பார்வையில் கோளாறு ஏற்படும். ராகுவுடன் நல்ல கிரகங்கள் சேர்ந்தாலோ அல்லது பார்த்தாலோதான் நன்மை ஏற்படும்.

 

கேது : கடுமையகப் பேசக் கூடியவர். பண நஷ்டம் ஏற்படக் கூடும்.

 

2-ம் வீட்டைப் பற்றி " ஜாதகதத்துவத்தில்" என்ன சொல்லி இருக்கிறது எனப்

 

பார்ப்போம். பணக்காரன் ஆகும் யோகம்:-

 

1. இலக்கினாதிபதியும் லாபாதிபதியும் சேர்ந்து தனஸ்தானத்தில் இருத்தல்.

 

2. 2-ம் வீட்டு அதிபரும், 10-ம் வீட்டு அதிபரும் சேர்ந்து கேந்திரஸ்தானத்தில் இருத்தல்.

 

3. 10-ம் வீட்டு அதிபரும், 11-ம் வீட்டு அதிபரும் சேர்ந்து இருத்தல்.

 

4. ஒரு ஜாதகத்தில் 4-கிரகங்கள் சொந்த வீட்டில் இருத்தல்.

 

5. 2-ம் வீட்டிற்குடையவன் 9, 10, 11- வது வீட்டில் இருத்தல்.

 

6. சந்திரனும், செவ்வாயும் சேர்ந்து ஒரே வீட்டில் இருத்தல். இதைச் சந்திரமங்கள யோகம் என்பார்கள்.

 

7. கேந்திரஸ்தானம் என்று சொல்லுகின்ற 1, 4, 7, 10-ம் வீடுகளில் சுபகிரகங்கள் இருத்தல்.

 

8. குரு தன் சொந்த வீட்டிலும், 5-ம் வீட்டில் சந்திரனும் இருத்தல்.

 

9. சூரியன் சிம்மத்திலும், குருவும், செவ்வாயும் 1-ம் வீட்டிலும் இருத்தல்.

 

10. கீழே புதையல் கிடைப்பதற்கான யோகத்தைக் கீழே கூறி இருக்கிறார்.

 

11-ம் வீட்டு அதிபதி இலக்கினத்திலும், இலக்கினாதிபதி 2-ம் வீட்டிலும், 2-ம் வீட்டு அதிபதி 11-ம் வீட்டிலும் இருந்தால் புதையல் கிடைக்கும். (இந்தக் காலத்தில் புதையல் கிடைப்பது என்பது அரிது. லாட்டரி, ரேஸ் போன்ற வற்றிலிருந்து பணவரவு இருக்குமெனக் கொள்ளலாம்)

 

இவ்வாறாக ஜாதக தத்துவம் பல்வேறு கிரக நிலைகளைக் கூறி இருக்கிறது. இரண்டாம் இடத்தை வாக்குஸ்தானம் என்று கூறி இருக்கிறோம் அல்லவா? 2-ம் வீடு ஊமை ராசிகளாகி (கடகம், விருச்சிகம், மீனம் ஆகியவை ஊமை ராசிகளாகும்) அதில் கேது இருப்பாரேயாகில் அந்த ஜாதகர் ஊமையாகப் போகக் கூடிய வாய்ப்பு உண்டு. 2-ம் வீட்டில் சந்திரன் இருந்து புதன் பார்ப்பாரேயாகில் அந்த ஜாதகர் மிகவும் தெளிவாகப் பேசுவார். சுக்கிரன் பார்ப்பாரேயாகில் சினிமா, டிராமா போன்ற பொழுதுபோக்கு அம்சங்களையும், மற்றும் பால் உறவினைப்பற்றியும் அதிகமாகப் பேசுவர். சனி பார்த்தாரேயாகில் சொற்பமாகப் பேசுவார். சூரியன் பார்த்தால் மிகவும் கண்ணியமாகப் பேசுவார்.

 

2-ம் இடத்தைவைத்து ஒருவரின் 2-ம் கல்யாணத்தைப் பற்றிக் கூறவேண்டும். திருமணத்தைப் பற்றி எழுதும்போது நாம் 2-ம் கல்யாணத்தைப் பற்றி எழுதுவோம்.

இதுவரையில் 2-ம் வீட்டைப் பற்றிப் பார்த்தோம். இந்தப் பாடத்தில் 3-ம் வீட்டைப் பற்றிப் பார்ப்போம். 3-ம் வீட்டை வைத்து என்னவெல்லாம் கூறலாம்?

 

மூன்றாம் வீட்டை வைத்து ஒருவர் தைரியமானவரா, இல்லையா என்றும் கூறலாம். ஆகவே இந்த வீட்டை தைரிய ஸ்தானம் என்று கூறுவர். ஒருவரின் வலது காதையும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். காது கேட்குமா அல்லது காதில் ஏதாவது தொந்தரவு இருக்குமா என்றும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். ஒருவரின் இளைய சகோதரத்தையும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். ஒருவருக்குப் படிப்பதற்கு ஆசை இருக்கிறதா அல்லது இல்லையா என்பதையும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். ஒருவருக்குப் 10-ம் வீட்டதிபர் 3-ம் வீட்டிலோ அல்லது 3-ம் வீட்டதிபர் 10-ம் வீட்டிலோ அல்லது 3-ம் வீட்டதிபரும், 10-ம் வீட்டதிபரும் சேர்ந்திருந்தாலும் ஒருவர் போலீஸ் வேலைக்கோ அல்லது ராணுவத்திலோ வேலை செய்வார் என்று கூறலாம். ஏன்? 3-ம் வீடு தைரியத்தைக் குறிக்கிறது. 10-ம் வீடு ஜீவன ஸ்தானம் அல்லவா? போலீஸ், ராணுவம் இவற்றிற்கு மிக முக்கியமானது தைரியம் அல்லவா? ஆக இந்த சேர்க்கை இத்தகைய வேலையைக் குறிக்கிறது. செவ்வாய் கிரகம் தைரியத்திற்குக் காரகம் வகிப்பவர். அவரும் 10ம் வீட்டிலோ அல்லது 10-ம் வீட்டதிபருடன் சேர்ந்தோ அல்லது இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலோ போலீஸ் அல்லது ராணுவ வேலைக்குப் போவார் என்று கூறலாம். 3-ம் வீடு குறுகிய பிரயாணத்தைக் குறிக்கிறது. ஒருவர் சென்னையிலிருந்து திருச்சிக்குப் போகிறார் எனக் கொள்ளுங்கள். இது ஒரு குறுகிய பயணம். இந்தப் பயணத்தைக் குறிப்பது 3-ம் வீடு. ஒருவர் சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்கிறார் எனக்கொள்ளுங்கள். இது நீண்ட பயணம் அல்லவா? இந்த நீண்ட பயணத்தைக் குறிப்பது 9-ம் வீடு. ஆக 3-ம் வீடு Short Journeys என்று கூறப்படுகிற குறுகிய பயணத்தையும், 9-ம் வீடு Long journey என்று கூறப் படுகிற நீண்ட பயணத்தையும் குறிக்கும்.

 

என் நண்பர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு வங்கியில் வேலை செய்து கொண்டிருந்தார். அவருக்கு வங்கியில் Inspection செய்யக் கூடிய வேலை. அது சம்மந்தமாக அவர் அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டியது இருக்கும். அவர் என்னிடம் "நான் எப்போது உள்ளூரிலேயே இருப்பேன்? அடிக்கடி வெளியூர் செல்ல முடியவில்லை" என்று கேட்டார். அவர் ஜாதகத்தைப் பார்த்த போது அப்போது நடக்கும் தசா, புக்திகள் 3-ம் வீட்டைக் குறிப்பனவாக இருந்தது. அதாவது அவர் மிதுன இலக்கினம். 3-க்குடைய சூரியனின் புக்தி நடந்து கொண்டிருந்தது. அடுத்த புக்தியின் அதிபதியான சந்திரன் 9-ம் வீட்டில் இருந்தார். அதற்கும் அடுத்த செவ்வாயானவர் 4-ம் வீட்டில் இருந்தார். நாம் "தற்போது சூரியனின் புக்தி நடந்து கொண்டிருக் கிறது. சூரியன் 3-ம் வீட்டிற்கதிபதி. ஆகவே வெளியூர்ப் பயணத்தைத் தவிர்க்க முடியாது. தற்போது பக்கத்திலுள்ள ஊர்களுக்குச் சென்று கொண்டு இருக்கிறீர்கள். இந்த சூரியன் புக்தி முடிந்து சந்திர புக்தியின்போது இன்னும் தூரத்திலுள்ள ஊர்களுக்குச் சென்றுவருவீகள். அடுத்தபுக்தியான செவ்வாய் 4-ம் வீட்டில் இருக்கிறார். அப்போதுதான் நீங்கள் உள்ளூரிலேயே தங்கி இருக்க முடியும்" என்று கூறினோம். அதன்படியே சூரியபுக்தியின் போது தமிழ் நாட்டிற்குள் பயணம் செய்து கொண்டிருந்த அவர் சந்திர புக்தியின்போது பக்கத்திலுள்ள அண்டை மாநிலங்களுக்கெல்லாம் பயணம் செய்ய ஆரம்பித்தார். சந்திரன் 9-ம் வீட்டில் இருப்பதால் நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டியது இருந்தது.

4-ம் வீடு என்பது தற்போது குடியிருக்கும் ஊரைக் குறிக்கும். ஆகவே செவ்வாய் புக்தியில் பழையபடி சொந்த ஊரிலேயே வேலைசெய்யும்படியாக மாற்றல் ஆகிவிட்டது. ஆக இப்போது 3-ம் வீடு எப்படி பயணத்தைக் கொடுக்கிறது என்பது விளங்கி இருக்கும். 3-ம் இடம் என்பது தைரியஸ்தானம் அல்லவா? 3-ல் சனி இருந்தால் அவர் மிக நிதானமாகச் செயல்படுவார். அதே இடத்தில் செவ்வாய் இருந்தால் மிக துணிச்சலாக நிதானமிழந்து அவசரப்பட்டு செயல் படுவார்.

 

இளைய சகோதரம், பக்கத்து வீட்டுக்காரர்கள், ஆகியவற்றைக் குறிப்பதும் இந்த 3-ம் வீடுதான். கடிதப் போக்குவரத்து, எல்லாவிதமான செய்திகள், ஆகியவற்றைக் குறிப்பதும் இந்த 3-ம் வீடுதான். உங்களுக்கும் இளைய சகோதரத்திற்கும் நல்லுரவு இருக்குமா அல்லது இருக்காதா என்பதையும் 3-ம் வீட்டை வைத்துச் சொல்லலாம். 3-ம் வீட்டில் சனி இருப்பாரேயாகில் உங்களுக்கும் உங்கள் சகோதரத்திற்கும் திருப்தியான உறவு இருக்காது; குரு இருந்தால் நல்லுறவு; செவ்வாய் இருந்தால் சண்டை; இவ்வாறாகப் பலன் கூறலாம். 3-ம் வீடு ஏஜென்சித் தொழிலையும் குறிக்கும். 3-ம்வீடும் 2-ம்வீடான தனஸ்தானத்துடனோ, அல்லது 6-ம் வீடான தொழில் ஸ்தானத்துடனோ, அல்லது 10ம் வீடான ஜீவனஸ்தானத்துடனோ சம்மநதப்பட்டு இருந்தால் ஒருவர் Agency தொழில், Broker ஆகிய தொழில் செய்வர். 3-ம் வீட்டில் ஒருவருக்கு கேது இருப்பாரேயாகில் அவரை நாரதர் என்று கூறலாம். ஏனெனில் அவரால் அவர் உண்டு அவர் வேலையுண்டு என்று இருக்க முடியாது.

 

நீங்கள் ஒரு வீட்டில் இருக்கிறீர்கள். அந்த வீட்டைக் காலி செய்ய வேண்டுமென்றால் 3-ம் வீட்டின் தசை, அல்லது புக்தி காலங்களில்தான் செய்ய முடியும். 4-ம் வீடு என்பது தற்போது குடிருக்கும் வீட்டைக் குறிக்கிறது. 4-ம் வீட்டிற்குப் 12-ம் வீடு 3-ம் வீடல்லவா? ஆக 3ம் வீட்டக் குறிக்கும் தசை அல்லது புக்தியின் போதுதான் நாம் வேறு வீடு குடி செல்ல முடியும்.

 

உடல் உறுப்புக்களில் காது, கை, தொண்டை, தோள்பட்டை ஆகியவற்றைக் குறிப்பதும் இந்த 3-ம் வீடுதான். 3-ம் வீட்டில் பாப கிரகங்கள் இருந்தால் மேற்கண்ட உறுப்புக்களில் ஏதாவது தொந்தரவு இருக்கும்.ஒருவர் மருத்துவராக இருக்கிறார் எனக்கொள்ளுங்கள். மருத்துவத்திற்குக் காரகம் வகிப்பவர் சூரியன். அதனால்தான் அவர் தன்வந்திரி என்று அழைக்கப் படுகிறார். அவர் 10-ம் வீட்டுடன் சம்மந்தப் பட வேண்டும். அப்போதுதான் ஒருவர் மருத்துவராக முடியம். சரி! ஒருவர் மருத்துவராகிவிட்டார். 10-ம் வீட்டதிபதி 3-ம் வீட்டுடன் சம்மந்தப்பட்டால் அவர் எந்தத் துறையில் மருத்துவராக முடியும். சொல்லுங்கள் பார்ப்போம்? 3-ம் வீடு காதைக் குறிக்கிறது அல்லவா? அவர் E.N.T டாக்டராக இருப்பார். நாம் சொல்லும் விளக்கம் உங்களுக்கு இப்போது புரிந்து இருக்குமென நினைக்கிறோம். ஜீவன, மற்றும் தொழில் ஸ்தானத்தைப் பற்ரிப் பார்க்கும்போது இன்னும் விளக்கமாகப் பார்ப்போம்.

 

ராசிகளில் ஆண்ராசி, பெண்ராசி என்று உண்டென்பது உங்களுக்குத் தெரியும். அதேபோல் கிரகங்களிலும் ஆண் கிரகங்கள், பெண் கிரகங்கள், அலி கிரகங்கள் என்று உண்டு. அவையாவன...

 

ஆண்கிரகங்கள் : சூரியன், செவ்வாய், குரு ஆகிய மூன்றும் ஆண் கிரகங்கள் எனப்படும்.

 

பெண் கிரகங்கள் : சந்திரன், சுக்கிரன், ராகு ஆகிய மூன்றும் பெண் கிரகங்கள் எனப்படும்.

 

அலி கிரகங்கள் : புதன், சனி, கேது ஆகிய மூன்றும் அலிக்கிரகங்கள் எனப்படும்.

3-ம் வீட்டதிபர் ஆண் ராசியில் இருப்பாரேயாகில் அவருக்கு ஆண் சகோதரர்கள் அதிகமிருப்பர் எனக்கொள்ளலாம். அதேபோன்று 3-ம் வீட்டுக்காரர் பெண் ராசியில் இருப்பாரேயாகில் சகோதரிகள் அதிகம் இருப்பார்கள் எனக் கொள்ளலாம்.

 

ஒருவருக்கு எவ்வளவு சகோதர, சகோதரிகள் இருப்பார்கள் என்று எப்படிக் கூறுவது? இதற்கு ஒருவழி இருக்கிறது. அது எப்படி எனப் பாருங்கள்.

 

ஜாதகத்தைக் குறித்துக் கொள்ளுங்கள்.

 

ராசி : கன்னியில் இலக்கினம். தனுசில் சுக்கிரன், புதன், சந்திரன், மகரத்தில் கேது, சூரியன்; ரிஷபத்தில் சனி, செவ்வாய்; கடகத்தில் ராகு; சிம்மத்தில் கேது.

 

நவாம்சம் : மீனத்தில் இலக்கினம், சூரியன்; மேஷத்தில் சுக்கிரன், செவ்வாய், குரு ரிஷபத்தில் கேது, கடகத்தில் சந்திரன், சிம்மத்தில் புதன், கன்னியில் சனி; விருச்சிகத்தில் ராகு.

 

இதுதான் ஜாதகம்; இவர் இலக்கினம் கன்னி. சகோதரனுக்குக் காரகம் வகிப்பவர் செவ்வாய்; அவரே 3-ம் வீட்டிற்கும் உடையவர் ஆகிறார். 3-ம் வீட்டதிபர் நவாம்சத்தில் எவ்வளவு நவாம்சம் சென்றிருக்கிறார் எனப்பாருங்கள். அதை எப்படிக் கண்டு பிடிப்பது? ராசியில் செவ்வாய் ரிஷபத்தில் இருக்கிறார். நவாம்சத்தில் மேஷத்தில் இருக்கிறார். அதாவது 4-வது நவாம்சத்தில் இருக்கிறார். ரிஷபத்தில் ஒன்பது நட்சத்திரப் பாதங்கள் அல்லவா? கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்; ரோகிணி 1, 2, 3, 4 பாதங்கள்; மிருகசீரிஷம் 1, 2, பாதங்கள். செவ்வாய் ரோகிணி 1-ம் பாதத்தில் இருப்பதால் நவாம்சத்தில் மேஷத்தில் இருக்கிறார். அதாவது கார்த்திகை மூன்றுபாதங்கள், ரோகிணி 1-ம் பாதத்தையும் சேர்த்து மொத்தம் 4 பாதங்கள் சென்று விட்டன; அதைத்தான் நாம் 4 வது நவாம்சத்தில் இருக்கிறார் என மேலே குறிப்பிட்டுள்ளோம். 3-ம் வீட்டிற்கதிபதி 4 நவாம்சம் சென்று இருப்பதால் இவரையும் செர்த்து மொத்தம் 4 பேர்கள் இவருடன் கூடப்பிறந்தவர்கள். இது கூடப் பிறந்தவர்களைக் கண்டுபிடிப்பதற்கு ஒரு வழி. முன்பு குழந்தை பிறப்பதைக் கட்டுப் படுத்த வழி கிடையாது. இப்போதோ கட்டுப்படுத்துவதற்கு வழிகள் பிறந்து விட்டன். இப்போது ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை, அல்லது இரண்டு குழந்தைகள் என்ற அளவில் கட்டுப்பாடு வந்து விட்டது. குழந்தை பிறப்பை செயற்கை முறையில் கட்டுப் படுத்துகிறோம். ஆகவே நாம் மேற்கூறிய விதி இந்தக் காலத்துக்கு ஒத்து வராமல் போகலாம். இருப்பினும் வாசகர்கள் தெரிந்து கொள்ளட்டுமே என்ற எண்ணத்தில் எழுதலானோம்.

 

பொதுவாக மூன்றாம் வீட்டில் சுப கிரகங்கள் இருப்பின் அந்த பாவம் நன்றாக இருக்கும். மாறாக பாவ கிரகங்கள் இருந்தால் அந்த பாவம் பெரிதும் பாதிக்கப்படும். அதேபோல் மூன்றாம் வீட்டை சுபகிரகங்கள் பார்த்தால் அந்த வீடு பலம் பெற்று நன்றாக இருக்கும். பாவ கிரகங்கள் பார்வை இருப்பின் அந்த வீடு கெட்டு விடும். மூன்றாம் வீட்டு அதிபர் 6, 8, 12 வீடுகளில் இருந்தாலோ அல்லது 3-ம் வீட்டு அதிபர் பாவர்களின் சேர்க்கை பெற்று இருந்தாலோ அந்த வீடு கெட்டு விடும். இத்துடன் நாம் மூன்றாம் வீட்டைப் பற்றிக் கூறுவதை நிறுத்திக் கொள்வோம். மற்றவைகளை அடுத்தபாடத்தில் படிப்போம். நாம் ஏற்கனவே கூறி இருக்கிறோம், நீங்கள் இன்னும் பல ஜோதிடப் புத்தகங்கள் படிக்க வேண்டுமென்று. படித்தால்தான் மேலும்பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும். பலாதீபிகை, ப்ருஹத் ஜாதகம், உத்திரகாலாம்ருதம் ஆகியவை மிகவும் பயனுள்ள ஜோதிட நூல்கள். இவைகள் எல்லாம் வடமொழியில் இருந்தாலும் இவைகளின் மொழிபெயர்ப்புக்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் கிடைக்கின்றன. அவைகளை வாங்கிப் படியுங்கள். உங்கள் ஜோதிட அறிவு வளரும்.

ஒருவர் மருத்துவராக வேண்டுமென்றால் சூரியன் ஜீவன ஸ்தானத்துடன் சம்மந்தம் பெற வேண்டும். ஏனெனின் சூரியன்தான் தன்வந்திரி என்றழைக்கப் படுகிறார். ராணுவம் அல்லது போலீஸ் வேலைக்குப் போக வேண்டுமென்றால் செவ்வாய் ஜீவனஸ்தானத்துடன் சம்மந்தம் பெறவேண்டும். கலைத் தொழிலில் ஒருவர் இருக்க வேண்டுமென்றால் சுக்கிரன் சம்மந்தப்பட்டு இருக்க வேண்டும். ஏனெனில் சுக்கிரன்தான் கலைக்கு அதிபதி. இவ்வாறாக ஒவ்வொரு துறைக்கும் ஒரு கிரகம் இருக்கிறது. ஜோதிடத்திற்கு எந்த கிரகம் காரகம் வகிக்கிறது? "புதன்". இவர்தான் ஜோதிடத்திற்குக் காரகம் வகிக்கிறார்.

 

1. ஜோதிடராக விரும்புகிறவர்கள் ஓரளவிற்குக் கணிதம் தெரிந்தவராக இருக்க வேண்டும். கணிதமென்றால் Algebra, Geometry என்றல்ல; அடிப்படைக் கணிதத்தில் தவறு செய்யாதவறாக இருக்க வேண்டும். ஏனெனில் ஜாதகம் தவறு இல்லாது கணிக்க வேண்டுமல்லவா?

 

2. நமது முன்னோர்கள் எழுதியுள்ள ஜோதிட நூல்களைப் படிக்க வேண்டும்.

 

3. அதில் கூறப்பட்டுள்ள விதிகளை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

4. ஜோதிடர்களுக்கு தெய்வபக்தி மிக அவசியம். அந்த பக்தி இருந்தால்தான் பலன்களைச் சரியாகச் சொல்லமுடியும்.

 

ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு துறைக்கும் ஒரு எல்லை இருக்கிறது. அந்த எல்லை வரையிலும்தான் நாம் செல்ல முடியும். அதேபோல் ஜோதிடத்திற்கும் எல்லை உண்டு. அந்த எல்லைக்குள் இருந்து நாம் பலன் சொல்ல முடியும். புதன் ஒருவரின் ஜாதகத்தில் 1, 4, 7, 10 கேந்திர ஸ்தானங்களிலோ, அல்லது வாக்கு ஸ்தானமான 2-ம் வீட்டிலோ இருக்க வேண்டும். புதன் ஜாதகத்தில் கெட்டுப் போகாது இருக்க வேண்டும். புதனும், சந்திரனும் ஒரு ஜாதகத்தில் சேர்ந்து இருந்தாலோ, அல்லது பார்த்துக் கொண்டாலோ ஒருவர் ஜோதிடத்தில் தேர்ச்சி பெற முடியும். சந்திரன் மனதுக்குக் காரகம் வகிப்பவர் அல்லவா? புதன் ஒருவரின் அறிவுத்திறனுக்குக் காரகம் வகிப்பவர். ஆக இருவரின் சேர்க்கையும் தெளிவான சிந்தனைக்கும், அறிவு பூர்வமான சிந்தனைக்கும் வழிவகுக்கும். ஆக வலுவான புதன் தீர்க்கமாகச் சிந்தித்துப் பலன் சொல்ல உதவுவார். அந்த புதனுக்கு குருவின் பார்வையும் இருக்குமேயாகில் தெய்வ அனுகிரகம் கிட்டி பலன் சொல்ல உதவி கிடைக்கும். அதைத் தவிரவும் குருவின் பார்வை ஜோதிடத்தில் ஆழ்ந்த அறிவையும் கொடுக்கும். ஜோதிடராகும் யோகத்தைப் பற்றி ஒரு தமிழ் நூல் கீழ்க் கண்டவாறு கூறுகிறது:-

 

"ஆட்சி நல் உச்சத்தோடே

அருள் குரு பார்வை பெற்று

மாட்சிமை உடைய வாக்கில்

மாபுதன் நிற்பாரேயாகில்

சூட்சும புத்தியோடே

சோதிடக் கலைகள் கற்றே

பேச்சினில் ஞானம் சொட்டும்

பெரும் புகழ் சோதிடன் காண்"

அதாவது 2-ம் வீடான வாக்கு ஸ்தானத்தில் புதன் உச்சம் அல்லது ஆட்சி பெற்று இருந்து குருவின் பார்வையும் இருக்குமேயாகில் அந்த ஜாதகர் ஜோதிடக் கலையில் சிறந்து விளங்குவர். இதுதான் இந்தப் பாடலின் பொருள். ஜோதிடத்தில் தேர்ச்சி பெற என்ன கிரக அமைப்புக்கள் வேண்டும் என்பதைப் பார்த்தீர்கள்.

 

நாம் இப்போது மற்றொறு முக்கியமான விஷயத்தைப் பற்றி விவாதிக்கப் போகிறோம். ஒருவருக்குக் கல்யாணம் ஆகவில்லை; தாமதம் ஆகிறது எனக் கொள்ளுங்கள். உடனே அவர் எதாவது பரிகாரம் செய்யலாமா? எனக் கேள்வி கேட்ப்பார். பரிகாரம் செய்தால் அவர் திருமணம் ஆகிவிடும் என்பது அவர் எண்ணம். நாம் இப்போது இந்தப் பரிகாரத்தைப் பற்றித்தான் விவாதிக்கப் போகிறோம். பரிகாரம் என்பது எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு ஆகுமா? பரிகாரம் செய்தால் நாம் விருப்புவது எல்லாம் நடைபெறுமா? இதுதான் இந்தப் பாடத்தின் மிக்கியமான விவாதம் ஆகும்.

 

நாம் போன ஜென்மத்தில் செய்த காரியங்களின் பலனைத்தான் இப்போது இந்த ஜென்மத்தில் அனுபவித்து வருகிறோம். போன ஜென்மத்தில் நல்லவை செய்தோமேயானால் இந்த ஜென்மத்தில் நன்றாக இருப்போம். பாவங்கள் செய்தோமேயானால் அதற்கேற்ற பலனை அனுபவிப்போம். நாம் நல்லது செய்தோமா அல்லது தீயவை செய்தோமா என்பதை ஜாதகத்தைப் பார்த்தால் தெரியும். நாம் செய்யும் பாபங்கள் பலவகைப் படும்.

 

1. மிகக் கொடூரமான பாபங்கள் செய்தோர்; இத்தகைய பாபங்கள் செய்தோருக்கு என்ன பரிகாரம் செய்தும் பலன் இருக்காது. எவ்வளவுதான் பணம் செலவழித்துப் பரிகாரங்கள் செய்தும் பலனே இருக்காது. கொலை, கொள்ளை செய்தோர், வயதான தாய், தந்தைகளைக் கைவிட்டோர் இம்மாதிரிக் குற்றங்கள் செய்தோர்களுக்கு மன்னிப்பே கிடையாது. இவர்கள் செய்த பாபங்களுக்கு "துருத கருமம்" எனப் பெயர். போனஜென்மத்தில் செய்த பாபத்தின் பலனை இந்த ஜென்மத்தில் இவர்கள் அனுபவிக்கிறார்கள். இந்தப் பாபங்களுக்கு என்ன பரிகாரம் செய்தும் பலனே இருக்காது. ஒருவர் ஜாதகத்தில் இலக்கினத்திற்கோ, அல்லது சந்திரனுக்கோ அல்லது தற்போது நடக்கும் தசா, புக்தி நாதர்களுக்கோ குருவின் பார்வையோ அல்லது 9-ம் வீட்டிற்குடையவன் பார்வையோ இருக்காது. அவர்கள் பார்த்தால்தான் செய்கின்ற பரிகாரங்களுக்குப் பலன்கள் இருக்கும். அதனால்தான் சிலர் என்ன பரிகாரம் செய்தும் பலன்கள் கிடைப்ப தில்லை.

2. சிலர் மன்னிக்கக்கூடிய சிறிய குற்றங்கள் செய்து இருப்பர். அம்மாதிரிக் குற்றங்கள் செய்திருப்போருக்கு அவர்கள் செய்யக்கூடிய பரிகாரங்களுக்குப் பலன் கிட்டும். அவர்களுக்கு இலக்கினத்திற்கோ, சந்திரனுக்கோ அல்லது தசாபுக்தி நாதர்களுக்கோ குருவின் பார்வையோ அல்லது 9-ம் வீட்டுக்காரரின் பார்வையோ இருக்கும். அவ்வாறு இருப்பவர்களுக்கு அவர்கள் செய்யக் கூடிய பரிகாரங்களுக்குப் பலன் கிட்டும். இத்தகைய பாபங்களுக்கு "துருத-அத்ருத கருமம்" எனப்பெயர்.

 

3. சிலர் மிகச் சிறிதளவு குற்றங்கள் புரிந்திருப்பர். அச்செயல்களால் யாரும் பாதிக்கப்படாதிருந்திருப்பர். அவ்வாறு செய்த தவறுக்கு "அத்ருத கருமம்" எனப் பெயர். அவர்கள் எந்தவிதப் பரிகாரமும் செய்யாமலே அவர்களுக்கு அனுகூலமாகக் காரியங்கள் நடக்கும். அப்படிப் பட்டவர்களுக்கு இலக்கினத்திலோ, அல்லது சந்திரனுடனோ குருவோ அல்லது 9-ம் வீட்டிற்காரரோ சேர்ந்திருப்பார்.

 

இதிலிருந்து என்ன தெரிகிறது ? ஒருவர் ஜாதகத்தில் இலக்கினத்துடனோ அல்லது சந்திரா இலக்கினத்துடனோ குருவோ அல்லது 9-ம் வீட்டிற்குடையவனோ சேர்ந்திருப்பது அல்லது பார்ப்பது மிக நல்லது என்று தெரிகிறது அல்லவா? இப்போது நீங்கள் ஒருவர் ஜாதகத்தைப் பார்த்து அவர் பரிகாரம் செய்ய வேண்டுமா அல்லது வேண்டாமா என்று சொல்ல முடியும் அல்லவா? ஆகவே எல்லோருக்கும் பரிகாரங்கள் தேவையில்லை.

இந்தப் பாடத்தில் நாம் 4-வது வீட்டைப் பற்றிப் பார்க்கப் போகிறோம். நாலாம் வீட்டை வைத்து என்னவெல்லாம் கூறலாம்? ஒருவர் நிரந்தரமாகக் குடியிருக்கும் வீட்டைக் குறிக்கிறது. ஒருவருக்கு சொந்த வீடு இருக்குமா? அல்லது இருக்காதா? என்பதும் இந்த வீட்டை வைத்துக் கூறிவிடலாம். வீடுமட்டுமல்ல; ஸ்திர சொத்துக்களான நில, புலன்கள் ஒருவருக்குக் கிட்டுமா? அல்லது கிட்டாதா? என்பதையும் இந்த வீட்டை வைத்துக் கூறி விடலாம். சரி! எப்படி கூறுவது? செவ்வாயானவர் ஸ்த்ர சொத்துக்களுக்கு அதிபதி அல்லவா? அவர் 4-ம் வீட்டில் இருந் தாலோ அல்லது 4-ம் வீட்டைப் பார்த்தாலோ அல்லது 4-ம் வீட்டின் அதிபதியுடன் சேர்ந்து இருந்தாலோ அல்லது பார்த்தாலோ ஒருவருக்கு ஸ்திர சொத்துக்கள் வாங்கயோகம் உண்டு என்று கூறலாம்.

 

4-ம் வீட்டுடன் சுக்கிரன் சம்மந்தப் பட்டால் என்ன கிடைக்கும்? சுக்கிரன் வாகனகாரகன் அல்லவா? அவர்களுக்கு வாகனம் கிட்டும். வாகனம் என்றால் அது நான்கு சக்கரங்களுள்ளகாராக இருக்கலாம்; அல்லது மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் போன்ற இரண்டு சக்கர வாகனங்களாகவும் இருக்கலாம்; எப்படி இருப்பினும் அவர்களுக்கு வாகன யோகம் உண்டு. படிப்பை பற்றிக் கூற வேண்டுமானால் 4-ம் வீட்டுடன் புதன் சம்மந்தப்பட்டுள்ளாரா? எனப்பார்ப்பது அவசியம். புதன் சம்மந்தப்பட்டு இருப்பாரேயாகில் அவர் ஒரு பட்டப்படிப்பு முடியப் படிப்பார் எனக் கொள்ளலாம். 4-ம் வீடென்பது பட்டப் படிப்பு வரையிலான படிப்பைக் குறிக்கிறது. அதற்கு மேலுள்ள படிப்பை 9-ம் வீடு குறிக்கிறது. சூரியனும், புதனும் ஒரு வீட்டில் சேர்ந்து இருப்பார்களேயாகில் அவர் படிப்பில் கெட்டிக்காரராக இருப்பார் எனக்கொள்ளலாம்.

 

சூரியனுடன் எந்த கிரகம் சேர்ந்து இருந்தாலும் அந்த கிரகத்தின் காரகத்துவம் மிகச்சிறந்து விளங்கும். உதாரணமாக புதன் கல்விக்குக் காரகம் வகிப்பவர். அவர் சூரியனுடன் சேர்ந்து இருந்தால் அவர் கல்வியில் சிறந்து விளங்குவார். சுக்கிரன் கலைகளுக்குக் காரகம் வகிப்பவர் அல்லவா? சுக்கிரனும், சூரியனும் சேர்ந்து இருந்தால் அவர் கலைகளில் திறமை உள்ளவராக இருப்பார். சிலர் சூரியனுடன் ஏதாவது கிரகம் சேர்ந்து இருந்தால் அந்த கிரகம் சூரியனால் எறிக்கப் பட்டுவிடும் எனக் கூறுவர். அது தவறான கருத்து. அந்தக் கிரகத்தின் காரகத்துவம் சூரியனால் அதிகரிக்கப்படும் என்பதுதான் உண்மை. 4-ம் வீடு மறைத்து வைக்கப் பட்டு இருக்கும் சொத்துக்களைக் குறிக்கிறது. ஒருவருக்குப் புதையல் கிடக்குமா? அல்லது கிடைக்காதா? என்பதை இந்த வீட்டை வைத்துக் கூறலாம்.

சனியானவர் எதையும் ஒளித்து வைக்கும், மறைத்து வைக்கும் குணம் கொண்டவர். அவர் தனஸ்தானத்தையோ அல்லது ஜீவனஸ்தானத்தையோ குறிப்பவராகி 4-ம் வீட்டுடன் சம்மந்தப் பட்டால் அந்த ஜாதகர் கறுப்புப் பணம் வைத்து இருப்பர் எனக் கொள்ளலாம். உதாரணமாக மேஷ இலக்கினக் காரரான ஒருவருக்கு சனியானவர் 10-ம் வீட்டிற்கும், 11-ம் வீட்டிற்கும் அதிபதி. அவர் கடகத்தில் இருப்பாரேயாகில் அந்த ஜாதகர் கறுப்புப் பணம் வைத்திருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம். 4-ம் வீட்டில் இல்லாமல் பார்த்தாலும் அதே பலன்தான். காளிதாசன் "உத்திர காலாம்ருதத்தில்" கால்நடை கல், நிலங்களிலிருந்து கிடைக்கும் அரிசி, கோதுமை போன்ற தானியங்கள், எண்ணை வித்துக்கள் ஆகியவற்றையும் 4-ம் வீட்டை வைத்துத்தான் கூறவேண்டுமெனக் கூறுகிறார். 4-ம் வீடு தாயாரையும் குறிக்கிறது. சந்திரனும் தாயருக்குக் காரகம் வகிப்பவர்தான். 4-ம் வீட்டில் சுபக்கிரகங்கள் இருந்து, சந்திரனும் சுபர்களின் சம்மந்தம் பெற்றால் அந்த ஜாதகருக்கு நீண்ட ஆயுளுடன் கூடிய தாயார் அமைவார் எனக் கூறலாம்.

 

நான்காம் வீட்டு அதிபதி ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்பதைப் பார்ப்போம்.

 

முதல் வீட்டில் : மிகுந்த படித்தவராக இருப்பர்.

 

இரண்டாம் வீட்டில் : தாய் வழிச்சொத்து இவருக்குக் கிடைக்கும். கிண்டலாகப் பேசும் சுபாவம் கொண்டவராக இருப்பார்.

 

மூன்றாம் வீட்டில் : நான்காம் வீட்டு அதிபதி 3-ம் வீட்டில் இருப்பது அவ்வளவு நல்லது அல்ல; நான்காம் வீடு குறிக்கின்ற காரகத்துவங்களெல்லாம் சரியாக இருக்காது.

 

நான்காம் வீட்டில் : தன் சொந்த மதத்தின்மேல் நம்பிக்கை உள்ளவராக இருப்பார். குடும்பத்தில் மிக்க அக்கரை உள்ளவராக இருப்பார்.

 

5-ம் வீட்டில் : இவருடைய தாயார் வசதி உள்ள வீட்டிலிருந்து வந்தவராக இருப்பார். மற்றவர்களால் மதிக்கப் படுவராக இருப்பார்.

 

6-ம் வீட்டில் : முன்கோபியானவர். நல்ல எண்ணங்கள் இல்லாதவர்.

 

7-ம் வீட்டில் : வீடு, வாசலுடன் இருப்பவர். 7-ம் வீடு சராசியாக இருந்தால் வெளியூரிலும், ஸ்திர ராசியாக இருந்தால் உள்ளுரிலும் சம்பாத்தியம் செய்வர்.

 

8-ம் வீட்டில் : இது துஸ்தானம் அல்லவா? மறைவிடமும் ஆகும். செவ்வாயும் கெட்டிருந்தால் ஸ்திர சொத்துக்களுக்குப் பங்கம்.

 

9-ம் வீட்டில் : ஸ்திர சொத்துக்களால் மன நிறைவு உண்டாகும். தகப்பனாராலும் அனுகூலம்.

 

10-ம் வீட்டில் : அரசியலில் புகழ் பெறுவர். பலர் மதிக்கும் வண்ணம் வாழ்வர்.

 

11-ம் வீட்டில் : ஸ்திர சொத்துக்கள் மற்றும் கால் நடைகள் விற்பனையில் முன்னேற்றம். தாயாரால் அனுகூலம்.

 

12-ம் வீட்டில் : ஸ்திர சொத்துக்களால் துன்பம். இளம் வயதிலேயே தாயார் மரணம்.

 

இப்போது 4-ம் வீட்டில் இருக்கும் கிரகங்களுக்கு என்ன பலன் என்று பார்ப்போம்.

சூரியன் : பிதுராஜித சொத்துக்கள் கிடைக்க வழியுண்டு. வேதாந்தத்திலும், மற்றும் புதிய விஷயங்களிலும் ஆர்வம் உண்டு.

 

சந்திரன் : சுற்றத்தாரால் மகிழ்ச்சியுண்டு. சிற்றின்பங்களில் பிரியம் அதிகம். சந்திரன் ஓர் நீர்க் கிரகமாதலால் வீட்டிலே நீர் வசதியுண்டு.

 

செவ்வாய் : வீடு கட்டும் யோகமுண்டு. தாயார் மூலமாக அனுகூலமில்லை. அரசியலில் முன்னேற்றமுண்டு. தாயாருடன் சண்டை போடக் கூடிய நிலை இருக்கும். ராகுவோ அல்லது கேதுவோ கூட இருக்குமேயாகில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் இருக்கும்.

 

புதன் : படிப்பில் தேர்ச்சி இருக்கும். பாட்டு மற்றும் கலைகளில் ஆர்வம் இருக்கும்.

 

குரு : படிப்பில் தேர்ச்சி, வேதாந்தத்தில் ஆர்வம், அரசாங்கத்தின் உதவி, நல்ல சுமுகமான குடும்பச் சூழ்நிலை, தன் சொந்த மதத்தில் தீவீர நம்பிக்கை.

 

சுக்கிரன் : வாகன யோகம், தாயின் மீது தீவீரபக்தி, அமைதியானகுடும்ப வாழ்க்கை, நினைத்த காரியம், ஆசைகள் நிறைவேறுதல்

 

சனி : சிறிய வயதில் தாயாரிடமிருந்து பிரிவு, வாயு உபத்திரவம், வீட்டாலும் வாகனத்தாலும் தொந்தரவு, சோம்பேரித்தனமான குணம், சொந்தக் காரர்கள் நடுவில் மரியாதை குறைவு, தனிமையை விரும்பும் குணம், பிதுரார்ஜித சொத்துக்கள் கிடைக்காமை ஆகியவை.

 

ராகு : முட்டாள்தனமான காரியங்கள் செய்வர், நம்பகத்தன்மை இல்லாது நடந்து கொள்வர்.

 

கேது: தாயாரால் அனுகூலமில்லை; வெளி நாட்டில் வாழக் கூடிய சூழ்நிலை; வழ்க்கையில் பலதரப் பட்ட அனுபவங்கள்;

மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியவை சர ராசிகளாகும். ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியவை ஸ்திர ராசிகளாகும். மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவை உபய ராசிகளாகும். சரராசி என்றால் என்ன பொருள்? சரம் என்றால் இயங்கிக் கொண்டே இருப்பது என்று பொருள். ஸ்திரம் என்றால் ஒரே நிலையில் இருப்பது எனப் பொருள். உபயம் என்றால் ஒரேநிலையில் இல்லாது அசைந்தும் அசையாமலும் இருப்பது எனப் பொருள். இவைகள் எல்லாம் பலன் சொல்ல எப்படிப் பயன்படுகின்றன? உதாரணமாக ஒருகிரகம் ஒருவருக்கு உடல் உபாதையைக் கொடுக்கக் கூடிய கிரகமாக இருக்கிறது எனக் கொள்ளுவோம். அந்த கிரகம் சர ராசியில் இருந்தால் பரம்பரை நோய் வரக் கூடும். ஸ்திர ராசியில் இருந்தால் குணப்படுத்தாத முடியாத நோயாக வரக் கூடும். உபய ராசியில் இருக்கும் கிரகங்கள் மூலமாக அவ்வப்போது வந்து போகும் நோய் வரக்கூடும். இவ்வாறு இந்த ராசிகளின் தன்மைகள் பலன் சொல்லப் பயன்படுகின்றன. ஒருவர் ஜாதகத்தில் 4-ம் இடம் சர ராசியாக இருந்து அதன் அதிபதியும் சரராசியில் இருந்தால் அந்த ஜாதகருக்குப் பல இடத்தில் வீடுகள் இருக்கும். இது வீட்டுயோகம் உள்ளவர்களுக்குப் பொருந்தும். வீடுயோகம் இல்லாதவர்களுக்கு 4-ம் வீட்டு அதிபர் சரராசியிலும், 4-ம் வீடு சர ராசியிலும் இருந்தால் அவர் பல வீடுகளில் வசிப்பர் எனக் கொள்ளலாம். ஸ்திர ராசியில் இருந்தால் ஒரே வீட்டில் வசிப்பர் எனக் கொள்ளலாம்.

 

4-ம் வீட்டு அதிபர் 3-ம் வீட்டிலோ அல்லது 3-ம் வீட்டதிபருடனோ சேர்ந்து இருப்பாரேயாகில் அவருக்கு சகோதரன் மூலமாக ஸ்திர சொத்துக்கள் கிடைக்கும். அதேபோல இலக்கினாதிபதி பலம் பெற்று 4-ம் இடத்திலும், 4-ம் வீட்ட்டதிபர் பலம் பெற்று இலக்கினத்திலும் இருந்தால் அவர் சுய முயற்சியில் வீடு கட்டுவர். சிலருக்கு மனைவி மூலமாக வீடு கிடைக்கிறது அல்லவா? அதற்கு எத்தகைய கிரக நிலைகள் இருக்க வேண்டும்? களத்திர காரகனான சுக்கிரன் 4-ம் இடத்திலும், 4-க்குடையவன் 7-ம் இடத்திலும் இருப்பார்களேயானால் களத்திரம் மூலம் வீட்டு லாபம் உண்டாகும். சத்துருக்கள் மூலம் எப்படி பூமி லாபமுண்டாகுமெனப் பார்ப்போம். 6-ம் இடம் சத்துரு ஸ்தானம் அல்லவா? 6-ம் வீட்டதிபன் 4-ம் வீட்டிலோ அல்லது நாலாம் வீட்டதிபன் 6-ம் வீட்டிலோ இருந்து 4-ம் வீட்டதிபன் 6-ம் வீட்டதிபனை விட பலம் பொருந்தி இருந்தால் அவருக்கு விரோதிகளிடமிருந்து பூமிலாபம் கிடைக்கும்.

 

ஒருவருக்கு மாடி வீடு எப்படிக் கிடைக்குமெனப் பார்ப்போம்? நவாம்ச இலக்கினத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நவாம்ச இலக்கினத்திற்கு 4-ம் வீட்டில் சந்திரன், சுக்கிரன் இவர்களிருந்தால் மாடி வீடு கட்டுவர். அல்லது நவாம்ச இலக்கினத்திற்கு 4-ம் வீட்டில் உச்சமடைந்த கிரகமிருக்குமேயகில் அவருக்கும் மாடி வீட்டு யோகம் உண்டு. நாம் இதுவரையில் வீட்டு யோகத்திப் பற்றிப் பார்த்தோம். காரகத்துவங்களையும் இனிப் பார்ப்போம். தாயாரைக் குறிப்பதும் 4ம் வீடு அல்லவா? 4-ம் வீட்டிற்கதிபதி இலக்கினாதிபதியினால் பார்க்கப் பட்டு கேந்திரத்தில் இருந்தாலும், அல்லது சுபகிரகங்களினால் பார்க்கப் பட்டு இருந்தாலும் தாயரிடத்தில் மிக்க அன்புடன் இருப்பர். மாதுர்காரகனான சந்திரன் இரண்டு பாப கிரகங்களின் நடுவில் இருந்தால் அல்லது சேர்ந்து இருந்தால் மாதாவிற்குக் கெடுதல் உண்டாகும்.

4-ம் வீட்டதிபதி பாவிகள் சம்மந்தமில்லாமல் கேந்திரஸ்தானத்திலோ, திரிகோண ஸ்தானத்திலோனைருந்தால் பந்துக்களை விரும்புபவனாக அந்த ஜாதகன் இருப்பான். 4-க் குடையவன் பாபக் கிரகத்துடன் சேர்ந்தாலும், பாபர்கள் வீட்டிலிருந்தாலும் நீச வீடு, சத்துருக்கள் வீட்டிலிருந்தாலும் பந்துக்களோடு சேர்ந்து இருக்க மாட்டான். 4-ம் வீடு படிப்பு ஸ்தானமல்லவா? 4-ம் வீட்டிற்குடையவனும் சுக்கிரனும் சேர்ந்து கேந்திர ஸ்தானத்திலிருந்தாலும், புதன் உச்ச ராசியில் இருந்தாலும் ஜாதகன் படிப்பு மிகுந்தவனாவான். நாம் ஏற்கனவே கூறிருக்கிறோம், நாலாம் இடம் என்பது கல்லூரிவரையிலான படிப்பு வரையிலும்தான். அதற்கு மேற்பட்ட படிப்பை 9-ம் வீட்டைக் கொண்டுதான் தீர்மானிக்க வேண்டும். ஒருவர் ஜோதிடராக வேண்டுமென்றால் புதன் கேந்திரஸ்தானங்களுடன் சம்மந்தப் பட்டு இருக்க வேண்டும். அதைத் தவிரவும் சுக்கிரன் 2 அல்லது 5 அல்லது 9-ம் வீட்டுடன் சம்மந்தப் பட்டு இருக்க வேண்டும். அவ்வாறு இருப்பவர்கள்தான் ஜோதிடத்தில் வல்லவராக இருக்க முடியும். சரி! ஒருவர் கணிதத்தில் வல்லவராக இருக்க எந்த கிரகம் நன்றாக இருக்க முடியும். கணிதத்திற்கு அதிபதி புதன். அவர் ஜாதகத்தில் கெடாமல் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் அவர் கணிதத்தில் வல்லவராக இருக்க முடியும். சட்டப் படிப்புப் படிக்க எந்த கிரகம் உதவும்? சட்டத்திற்குக் காரகன் குரு. அவர் ஜாதகத்தில் நல்ல விதமாக அமைந்தால்தான் ஒருவர் வழக்கறிஞ்கராக முடியும். இப்போது எல்லோரும் Engineering படிக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். அதற்கு எந்த கிரகம் உதவி செய்யும்? Engineering படிப்பவர்களுக்குக் கணிதம் மிக முக்கியம். அவர்கள் Drawing, Plan போடுவதில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இவற்றிற்கெல்லாம் அதிபதி புதன். இயந்திரங்களுக்கு அதிபதி செவ்வாய். கட்டிடத் தொழிலுக்கு அதிபதி செவ்வாய். புதனும், செவ்வாயும் படிப்பு சம்மந்தமான நாலாம் வீட்டுடனோ அல்லது 9-ம் வீட்டுடனோ சம்மந்தப் பட்டால் ஒருவர் Civil அல்லது Mechanical Engineer ஆக முடியும். Chemical - க்கு அதிபதிசுக்கிரன். அவரும் புதனும் சேர்ந்து ஒருவரை Chemical Engineer -ஆக ஆக்க முடியும். ஆதாவது படிப்பு ஸ்தானத்துடன் சம்மந்தப் பட வேண்டும். அப்போதுதான் அவர் Chemical Engineer ஆக முடியும். சந்திரன் நீருக்கு அதிபதியல்லவா? அவரும் புதனும் Textile Engineer களை உருவாக்க முடியும். பூமியிலுள்ள கனி வளங்களைக் குறிப்பது சனி. பூமியைக் குறிப்பது செவ்வாய். சனி-செவ்வாய்-புதன் - இந்தச் சேர்க்கை Mines Engineer-ஐக் குறிக்கிறது.

 

சரி! மருத்துவராக எந்த கிரகச் சேர்க்கை இருக்க வேண்டும். சூரியனுக்குப் பெயர் தன்வந்திரி. அவர் படிப்பு ஸ்தானத்துடன் சமமந்தப் பட்டால்தான் ஒருவர் மருத்துவராக முடியும். இப்போது எந்தெந்த கிரக சேர்க்கை பெற்றால் ஒருவர் என்ன படிக்க முடியும் என்று தெரிந்து கொண்டீர்கள்.

சரி! ஒருவர் நான் இப்போது பட்டப் படிப்பு முடித்து விட்டேன். மேற்கொண்டு படிக்க முடியுமா? எனக் கேட்க்கிறார் எனக் கொள்ளுங்கள்? எப்படி பதில் சொல்வது? தற்போது நடக்கும் தசா, புக்திகளைப் பாருங்கள். அவை படிப்புக்கு உண்டான 4 அல்லது 9 அல்லது 11-ம் வீடுகளைக் குறித்தால் அவர் மேற்கொண்டு படிப்பார் எனக் கொள்ளலாம். குறிக்க வில்லை என்றால் அவருக்கு மேற்கொண்டு படிப்பு இல்லை எனக் கூறிவிடலாம். 4, 9 தானே படிப்பு ஸ்தானம். 11-ம் வீட்டை ஏன் பார்க்க வேண்டும் எனக் கேட்க்கலாம்? 11-ம் வீடு லாபஸ்தானம் அல்லவா? உங்கள் ஆசைகளை நிறைவேற்றுகின்ற வீடு அல்லவா? ஆகவே 11-ம் வீட்டையும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருவருடைய படிக்க வேண்டுமென்ற ஆசையும் நிறைவேற வேண்டுமல்லவா? ஆகவே 11-ம் வீட்டையும் எடுத்துக் கொண்டு பலன் சொல்லுங்கள்.

 

7-ம் வீடு என்பது களத்திரஸ்தானம் என்று முன்பே எழுதி இருக்கிறோம். அதைத் தவிர

 

ஒருவர் வியாபாரம் செய்வாரா அல்லது மாட்டாராஎன்றும் 7-ம் வீட்டைக் கொண்டுதான்

 

சொல்ல வேண்டும். நாம் வங்கியிடம் கடனுக்கு முயற்சி செய்கிறோம் எனக்

 

கொள்ளுங்கள். அந்த வங்கியைக் குறிப்பது 7-ம் வீடு. அதாவது நாம் யாருடனாவது

 

ஏதாவது Transaction வைத்துக் கொண்டால் அந்த நபரைக் குறிப்பது 7-ம் வீடு. ஒருவர் கல்லூரியில் அல்லது பள்ளியில் Scholarsship-க்கு முயற்சி செய்கிறார் எனக் கொள்ளுங்கள். Scholarship கொடுப்பது அந்தக் கல்வி நிலையம்தானே. அந்தக் கல்வி நிலையத்தைக் குறிப்பது 7-ம் வீடு. இதையெல்லாம் எதற்கு எழுதுகிறோம் என்றால் ஒருவர் Scholarship-ல் படிப்பாரா? என்ற கேள்வி எழுந்தால் எப்படி பதில் சொல்லுவது என்பதற்காகத்தான். சரி! கல்வி நிலையம் ஸ்காலர்ஷிப் கொடுக்கிறது எனக்கொள்ளுங்கள். அதாவது அதற்கு வரவேண்டிய பணம் குறைகிறது என்பதுதானே பொருள். அதாவது அந்த அளவிற்கு அந்தக் கல்வி நிலையத்திற்குப் பண நஷ்டம் என்பதுதானே பொருள். அந்தப் பண நஷ்டத்தைக் குறிப்பது எந்த வீடு? 7-ம் வீட்டிற்குப் 12-ம் வீடான 6-ம் வீடுதான். ஆக 6-ம் வீடு என்பது உங்களுடன் Transaction வைத்து இருப்பவரின் நஷ்டத்தைக் குறிக்கிறது. 11-ம் வீடு உங்களின் லாபத்தைக் குறிக்கிறது. Scholarship கிடைத்தால் உங்களுக்கு லாபம் தானே! ஆக ஒருவர் "எனக்கு படிப்பதற்கு "ஸ்காலர்ஷிப்" கிடைக்குமா? என்று கேள்வி கேட்டால் 4ம் வீடு 6-ம் வீட்டுடனும் 11-ம் வீட்டுடனும் சம்மந்தம் உள்ளதா? எனப் பாருங்கள். அப்படி இருந்தால் அவருக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்குமெனப் பொருள்

 

உதாரணத்திற்கு ஒரு ஜாதகத்தைப் பாருங்கள். இவருக்கு மேல் படிப்பிற்கு ஸ்காலர்ஷிப் கிடைத்தது. ஜாதகத்தைக் குறித்துக் கொள்ளுங்கள்.

 

இலக்கினம் : மீனம், சந்திரன் மீனத்தில்;

3-ம் வீடான ரிஷபத்தில் கேது;

4-ம் வீடான மிதுனத்தில் சனி, சுக்கிரன்;

5-ம் வீடான கடகத்தில் சூரியன், புதன்;

6-ம் வீடான சிம்மத்தில் செவ்வாய்;

9-ம் வீடான விருச்சிகத்தில் ராகு;

12-ம் வீடான கும்பத்தில் குரு.

 

நவாம்சம்:

 

விருச்சிகத்தில் இலக்கினம்;

 

3-ம் வீடான மகரத்தில் ராகு, சூரியன்;

4-ம் வீடான கும்பத்தில் சந்திரன்;

6-ம் வீடான மேஷத்தில் சனி, குரு;

8-ம் வீடான மிதுனத்தில் சுக்கிரன்;

9-ம் வீடான கடகத்தில் கேது;

10-ம் வீடான சிம்மத்தில் செவ்வாய்;

12-ம் வீடான துலாத்தில் புதன்.

 

இவர் பிறந்தது 08-08-1974. இவர் ஸ்காலர்ஷிபில் மேற்படிப்புப் படித்தார். மேற்படிப்பிற்குண்டான 9-ம் வீட்டின் அதிபதி செவ்வாய் 6-ம் வீட்டில்; அந்தச் செவ்வாய் லாபாதிபதியான சனியால் பார்க்கப் படுகிறார். ஆக இவருக்கு மேற்படிப்புப் படிக்க Scholarship கிடைத்தது. இந்த ஜாதகத்தில் இன்னும் ஒரு வேடிக்கை இருக்கிறது. 7-ம் இடம் களத்திரஸ்தானம் அல்லவா? களத்திர ஸ்தானாதிபதி புதன் 5-ம் வீட்டில், 6-ம் வீட்டு அதிபனான சூரியனுடன் இருக்கிறார். கணவன் மனைவிக்குப் பிரிவை உண்டாக்கும் வீடு 6-ம் இடமல்லவா! ஏன்? 7-ம் வீட்டிற்குப் 12-ம் வீடு 6-ம் வீடு. ஆக7-ம் வீடு திருமணத்தைக் கொடுத்தால் 6-ம் வீடு பிரிவைக் கொடுக்கும். இவர் திருமணமாகி மனைவியைப் பிரிய வேண்டிய நிலை இருந்தது. சூரியன் யார்? அவர் தகப்பனாருக்குக் காரகம் வகிப்பவர் அல்லவா? ஆக இந்தப் பிரிவிற்கு அவர் தகப்பனாரே காரணமானார். வேடிக்கையைப் பார்த்தீர்கள? படிப்பிற்கு உதவி செய்த 6-ம் வீடு எப்படித் திருமண வாழ்க்கையில் விளையாடி விட்டது பார்த்தீர்களா?

 

ஒருகிரகம் சில காரியங்களுக்கு நல்லவராக இருப்பார். அதே சமயத்தில் வேறு சில காரியங்களுக்குத் தொந்தரவு கொடுப்பவராக இருப்பார். இதுதான் கிரகங்களின் கண்ணாமூச்சி விளையாட்டு. நாம் இத்துடன் 4-ம் வீட்டை முடித்துக் கொள்வோம்

7-ம் வீட்டிற்குப் பல காரகத்துவங்களுண்டு. அதில் தலையானது விவாஹம். அதனால் தான் 7-ம் வீட்டை களத்திரஸ்தானம் என்பார்கள். முதலில் நாம் திருமணத்தைப் பற்றி விவாதிப்போம். திருமணம் என்றால் என்ன? அதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். திருமணமென்பது ஒரு சட்டபூர்வமான பிணைப்பு. அதாவது கணவன் - மனைவி என்ற உறவு சட்டபூர்வமாக்கப்படுகிறது. இந்த சட்டபூர்வமான பிணைப்பைக் குறிப்பது 7-ம் வீடு. இந்த திருமணம் என்ற பந்தத்தால் குடும்பத்தில் ஒரு நபர் கூடுகிறார். ஒருவராக இருந்தவர் மனைவியால் இருவராகிறார். இந்த நபர் அதிகரிப்பதைக் குறிப்பது 2-ம் வீடு. அந்த தம்பதியினர் திருமணத்தால் கூடி மகிழ்கின்றனர். அந்த தம்பதியினர் கூடி மகிழ்தலைக் குறிப்பது 11-ம் வீடு. ஆக 2, 7, 11-ம் வீட்டைக் குறிக்கின்ற கிரகங்கள் தசா, புக்திக் காலத்தில்தான் ஒருவருக்குத் திருமணம் ஆகிறது. முதலில் நாம் திருமணத்தைப் பற்றி விரிவாக விவாதித்த பின்னர் மற்ற காரகத்துவங்களைப் பற்றிப் பார்ப்போம்.

 

நமது கிரந்தங்கள் ஒருவருக்குத் திருமணம் ஆவதற்கு என்னென்ன கிரக சேர்க்கைகளை கூறுகின்றனவென்று பார்ப்போம்.

 

1. சந்திரனும், சுக்கிரனும் fruitful signs - என்று சொல்லப் படுகின்ற கடகம், விருச்சிகம், மீனம், ரிஷபம் ஆகியவற்றில் இருத்தல்.

 

2. 7-ம் வீட்டின் அதிபதி மேற்கண்ட வீடுகளில் இருத்தல்.

 

3. குரு அல்லது சுக்கிரன் 2 அல்லது 7 அல்லது 11-ம் வீடுகளில் இருத்தல்.

 

4. இலக்கினாதிபதியும் 7-க்குடையவனும் சேர்ந்து இருத்தல்.

 

5. சுப கிரகங்கள் 2 அல்லது 7 அல்லது 11-ம் வீடுகளில் இருத்தல்.

 

இவ்வாறாகப் பலகிரக சேர்க்கைகளை நமது கிரந்தங்கள் சொல்லுகின்றன. அதாவது திருமணத்திற்குண்டான வீடுகளான 2, 7, 11 வீட்டில் நல்ல கிரகங்கள் அல்லது அந்த வீட்டதிபர்கள் நல்லவருடன் சேர்க்கை பெற்றிருப்பின் திருமணம் ஆகுமென்பது உறுதி.

 

திருமணம் தாமதமாவதற்கான காரணங்கள்

 

1. சனி 1 அல்லது 5 அல்லது 7-ம் வீட்டில் இருத்தல். சனி இலக்கினத்தில் இருந்தால் 7-ம் பார்வையாக 7-ம் வீட்டைப் பார்க்கிறார் அல்லவா? அதனால் திருமணம் தாமதம் ஆகும்.

 

2. 5-ம் வீட்டில் சனி யிருந்தால் அவர் திருமணத்திற்குண்டான வீடுகளான 2, 7, 11 ஆகிய வீடுகளை பார்க்கிறார். ஆகவே திருமணம் தாமதம் ஆகிறது.

 

3. சனி களத்திரமான 7-ம் வீட்டில் இருந்தால் திருமணம் தாமதம் ஆகத்தான் செய்யும்.

 

4. களத்திரஸ்தானமான 7-ம் வீட்டில் ராகு, செவ்வாய் போன்ற பாபக் கிரகங்கள் இருத்தல் திருமணத்தைத் தாமதப் படுத்தும்.

இதைத்தவிர 7-ம் வீடு விட்டு, விட்டுச் செல்லும் பயணத்தைக் குறிக்கிறது. 3-ம் வீடு குறுகிய பயணத்தையும், 9-ம் வீடு நீண்ட பயணத்தையும் குறிப்பதுபோல் 7-ம் வீடு விட்டு விட்டுச் செல்லும் பயணத்தையும் குறிக்கிறது. இன்னும் விளக்கமாகச் சொல்லப் போனால் ஒருவர் சென்னையிலிருந்து டெல்லி செல்கிறார் எனக் கொள்ளுங்கள். இது பயணத்தைக் குறிக்கிறது. இந்த மாதிரிப் பயணம் செய்வதை 3-ம் வீடும் 9-ம் வீடும் குறிக்கும். எப்படி? 3-ம் வீடு சொந்த வீட்டிலிருந்து இடம் பெயர்தலைக் குறிக்கிறது. 9-ம் வீடு நீண்ட பயணத்தைக் குறிக்கிறது. சரி! ஒருவர் நேராக டெல்லி செல்லாமல் 4 அல்லது 5 இடங்களைப் பார்த்துவிட்டு டெல்லி செல்கிறார் எனக் கொள்ளுங்கள். அப்போது 7-ம் வீடு சம்மந்தப் பட்டு இருக்கும். சிலர் ஊர் ஊராக தெய்வ தரிசனம் செய்வார்கள். அவர்களுக்கு அப்போது 3, 7, 9-ம் வீடுகளைக் குறிக்கின்ற தசா, புக்தி, அந்தரங்கள் நடந்து கொண்டிருக்கும். அப்போதுதான் அந்த மாதிரி ஊர், ஊராகப் பயணம் செய்ய முடியும்.

 

7-ம் வீடு மாரகத்தையும் குறிக்குமென நாம் ஏற்கனவே எழுதி இருக்கிறோம். ஒருவருக்கு ஆயுள் முடியும்போது 7-ம் வீட்டின் அதிபதியின் தசையோ அல்லது 7-ல் உள்ள கிரகங்களின் தசையோ, புக்தியோ நடந்து கொண்டிருந்தால் அவர் மரணத்தைக் கொடுப்பார். இதைப் போன்று பல காரகத்துவங்கள் 7-ம் வீட்டிற்கு இருக்கின்றன.

7-ம் வீட்டு அதிபதி ஒவ்வொரு வீடுகளிலும் இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.

 

* இலக்கினத்தில் இருந்தால் ஜாதகர் தமக்கு நன்றாகத் தெரிந்தவரை மணம் முடிப்பர்.

 

* 2-ம் வீட்டில் இருந்தால் தமது கணவன் அல்லது மனைவி மூலம் பண வரவு இருக்கும். பணவரவு என்றால் சொத்துடன் வர வேண்டும் என்று எண்ன வேண்டாம். வேலையிலிருந்தாலும் பண வரவுதான். சரி! இரண்டாம் வீடு தனஸ்தானம்; 7-வது வீடு கணவன் அல்லது மனைவியைக் குறிக்கிறது. ஆகக் கணவன் அல்லது மனைவி மூலமாகப் பண உதவி கிடைக்கும் எனக் கூறிவிட்டோம். அவ்வாறு 7-ம் வீட்டதிபனை பாவக்கிரகங்கள் பார்த்தாலோ அல்லது சேர்ந்து இருந்தாலோ ஒருவர் மனைவியை தவறான வழியில் பணம் சம்பாதிக்கும்படி செய்யலாம்.

 

* 7-ம் வீட்டதிபன் 3-ல் இருந்தால் இளைய சகோதரத்தினர் வெளிநாட்டில் இருக்கலாம். பாவக் கிரகங்களின் சேர்க்கை இருந்தால் இளைய சகோதரத்தின் கணவனுடனோ அல்லது மனைவியுடனோ தொடர்பு வைத்து இருப்பர்.

 

* 4-ல் இருந்தால் மிக சந்தோஷமான குடும்ப வாழ்க்கை அமையும். ஜாதகரே நன்கு படித்து இருப்பர்.

 

* 5-ல் இருந்தால் காதல் திருமணம் அமைய வாய்ப்பு உண்டு. நல்ல வசதியான இடத்திலிருந்து கணவனோ அல்லது மனைவியோ அமைவர்.

 

* 6-ம் வீட்டில் 7-ம் வீட்டு அதிபதி இருப்பது அவ்வளவு நல்லதல்ல; திருமண வாழ்க்கை சந்தோஷமாக அமையாது. ஏனெனில் 7-ம் வீட்டிற்கு மறைவு ஸ்தானம் 6-ம் வீடல்லவா? மாமன் மகள் அல்லது மகனை மணம் செய்து கொள்ளக் கூடும். 6-ம் வீடு தாய் மாமனை குறிக்கிறது அல்லவா?

 

* 7-ம் வீட்டில் இருந்தால் கணவன் அல்லது மனைவி நல்ல விதமாக அமைவாள்.

 

* 7-ம் வீட்டின் அதிபதி குரு, சுக்கிரனாக இருந்து 8-ம் வீட்டில் இருந்தால் ஜாதகரை விட உயர்வான இடத்திலிருந்து பெண் அல்லது பையன் கிடைக்கும். பொதுவாகத் திருமணவாழ்க்கை நன்றாக இருக்காது. ஏனெனில் 8-ம் இடம் மறைவு ஸ்தானம் அல்லவா?

 

* 7-ம் வீட்டிற்கதிபதி 9-ம் வீட்டில் இருந்தால் ஜாதகருடைய தகப்பனர் வெளிநாட்டில் இருக்கலாம். அல்லது ஜாதருக்கு வெளிநாட்டுத் தொடர்புகாரணமாக அதிர்ஷ்டம் அடிக்கலாம். 9-ம் வீடு வெளி நாட்டுப் பயணத்தைக் குறிக்கிறது அல்லவா? 9-ம் வீடு தர்மத்தையும், ஒரு நெறியான வாழ்க்கையும் குறிக்கிறது அல்லவா? ஆகவே தெய்வ நம்பிக்கையுடன் மதத்தில் பற்றுள்ள வாழ்க்கைத் துணை அமையக் கூடும்.

 

* 10-ம் வீட்டில் இருந்தால் ஜாதகர் வெளி நாட்டில் உத்தியோகம் கிடைத்து பெயருடனும், புகழுடனும் இருப்பர். அல்லது மிகவும் நல்ல கெளரவத்துடன் கூடிய வாழ்க்கைத் துணை அமையும். வாழ்க்கைத் துணையால் வசதியும் பெருகும்.

 

* 11-ம் வீட்டில் இருந்தால் நல்ல பண வசதியுள்ள வாழ்க்கைத்துணை அமையும். இன்னும் சிலருக்கு அவர்கள் நண்பர்களே வாழ்க்கைத்துணையாக அமையும். 11-ம் வீடு நண்பர்களைக் குறிக்கும் வீடு அல்லவா!

 

* 12-ம் வீட்டில் இருந்தால் வாழ்க்கை கசக்கும். வாழ்க்கை சுகமிருக்காது. பொதுவாக 7-ம் வீட்டில் 9-ம் வீட்டு அதிபதியோ அல்லது நல்ல கிரகங்களோ இருக்குமேயாகில் வாழ்க்கை இனிக்கும். மனதுக்கொத்த தம்பதி கிடைக்கும். ஒருவருக்கு 7-ம் வீட்டு அதிபதியும், சுக்கிரனும் பெண்ராசியில்

7-ம் வீட்டில் சனி, ராகு, செவ்வாய் போன்ற பாப கிரகங்கள் இருப்பது விரும்பத்தக்கது அல்ல; ஒருவர் ஜாதகத்தில் சனியும், சந்திரனும் சேர்ந்து இருந்தால் அதற்கு "புனர்ப்பூ" என்று பெயர். இது ஒரு தோஷம் ஆகும். இது கல்யாணம் ஆவதற்குப் பல தடங்கல்களைக் கொடுக்கும். நிச்சயம் ஆனால்கூட திருமணம் ஆவதற்குப் பல தடங்கல்களைக் கொடுக்கும். சனியும் புதனும் 7-ம் வீட்டில் இருந்தால் ஒரு விதவையோ அல்லது மனைவி இறந்த ஆண்மகனோ வாழ்க்கைத் துணைவராக அமைவர். 7-ம் வீடு பார்களால் பாதிக்கப்பட்டு அங்கு புதனும் இருப்பாரேயாகில் 2 தாரம் அமையும். பொதுவாக 7-ம் வீட்டில் 6-ம் வீட்டு அதிபதியோ அல்லது 8-ம் வீட்டு அதிபதியோ இருப்பது அமைதியான வாழ்க்கைக்குக் குந்தகம் விளைவிக்கிறது. அதேபோண்று 6-ம் வீட்டு அதிபதியும் 7-ம் வீட்டு அதிபதியும் சேர்ந்து இருந்தால் அவர்கள் மனத்தாங்கலினால் பிரியும் சூழ்நிலை ஏற்படுகிறது. திருமண வாழ்க்கை சோபிப்பது இல்லை.

 

ஒரு ஜாதகத்தைக் குறித்துக் கொள்ளுங்கள். கன்னியா இலக்கினம். இலக்கினத்தில் சனியும் ராகுவும்; 3-ம் வீடான விருச்சிகத்தில் சூரியன், சுக்கிரன், புதன்; 4-ம் வீட்டில் செவ்வாய்; 7-ம் வீட்டில் குரு; 7-ம் வீட்டில் சந்திரன், ராகு. 7-ம் வீட்டின் அதிபதி 6-ம் வீட்டில் இருக்கிறார். 7-ம் வீட்டிற்கு எதிமறையான பலன்களைக் கொடுக்கும் வீடல்லவா? 8-ம் வீட்டில் அதிபதியான் செவ்வாய் தனுசிலிருந்து 7-ம் வீட்டைப் பார்க்கிறார். 6-ம் வீட்டின் அதிபதியான சனியும் இலக்கினத்திலிருந்து 7-ம் வீட்டைப் பார்க்கிறார். 7--ம் வீட்டிற்கு இவ்வளவு பாதகம் இருப்பதனால் அவர்கள் திருமண வாழ்வு அமைதியாக இல்லை; பிரிய நேரிட்டது.

 

7-ம் வீட்டிற்கு 6-ம் வீட்டின் சம்மந்தமில்லையென்றால் திருமணவாழ்க்கை மிக மோசமாக இருப்பதில்லை; 8-ம் வீடு சம்மந்தப் பட்டால் சண்டை பூசலுடன் வாழ்க்கையை ஓட்டுகின்றார்கள்.

 

பெண்கள் ஜாதகத்தில் 7-ம் வீட்டைப் போலவே 8-ம் வீடும் மிக முக்கியமானதாகும். ஏனெனில் 8-ம் வீட்டை மாங்கல்ய ஸ்தானம் என்றழைப்பர். 7, 8 வீடுகளில் செவ்வாய், ராகு, சனி ஆகியவை மூன்றும் இருக்குமேயாகில் அப்பெண்விதவையாவாள். செவ்வாய் மட்டும் 7-ல் இருந்து சுபர்களின் பார்வை இல்லையென்றால் அந்தத் தம்பதியினர் சண்டையிட்டுக் கொள்வார்கள்.

 

7-ம் வீட்டின் அதிபதி 5-ல் இருந்தால் காதல் திருமணத்திற்கு வாய்ப்பு அதிகமென்று மேலே எழுதியிருந்தோம். 7-ம் வீட்டின் அதிபதி 5-ம் வீட்டில் இருந்தால் சந்தோஷமான குடும்ப வாழ்க்கையைக் கொடுப்பதில்லை; 7-ம் வீட்டில் அதிபதி 5-ம் வீட்டிலும் 5-ம் வீட்டு அதிபதி 7-ம் வீட்டிலும் பரிவர்த்தனை யோகமாகும். யோகமென் றால் அதிர்ஷ்டம் என்று அர்த்தமில்லை. மரண யோகத்தையும் யோகமென்றுதான் குறிப்பிடுகிறோம். யோகமென்றால் கிரகச் சேர்க்கை என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். கீழே ஒரு ஜாதகத்தைக் கொடுத்துள்ளோம். இவர்கள் திருமண நாளிலிருந்து சண்டைதான் போட்டுக் கொள்கிறார்கள். திருமணம் நடந்து 2 - வருஷம்தான் ஆகிறது. அடிதடி - சண்டை; போலீஸ் ஸ்டேஷன் வரையிலும் போய்விட்டது. இப்போது இருவரும் Divorce - க்கு மனுச் செய்துள்ளார்கள். ஜாதகத்தைப் பாருங்கள்.

 

ரிஷபம் இலக்கினம்; 4-ம் வீட்டில் (சிம்மத்தில்) சந்திரன், கேது; 5-ல் செவ்வாய்; 6-ம் வீட்டில் ( துலாத்தில்) குரு, சுக்கிரன் ; 7-ல் சூரியன், புதன்; 10-ல் (கும்பத்தில்) ராகு.

7-ம் வீட்டின் அதிபதி செவ்வாய் புதனுடைய வீட்டிலும் அதாவது கன்னியிலும், 5-ம் வீட்டின் அதிபதி புதன் 7-ம் வீட்டிலும் பரிவர்த்தனை ஆகி யிருக்கிறார்கள் பார்த்தீர்களா! இந்த தோஷமானது அவர்களை விவாகரத்துவரைக்கும் கொண்டுபோய் விட்டது. இதில் இன்னொன்று கவனிக்க வேண்டிய விஷயம். புதனானவர் 7-ம் வீட்டுடன் நிறைய சம்மநதப் பட்டு விட்டார். 7-ம் வீட்டில் இருப்பதோடு 7-ம் வீட்டின் அதிபதியும் புதன் வீடான கன்னியில் இருக்கிறார். ஆகவே 7-ம் வீடானது புதனுடன் நிறைய சம்மந்தப் பட்டு விட்டது. புதன்தான் இரட்டைக் குணம் உடைய வராயிற்றே. ஆக இரண்டு திருமணத்தைக் கொடுக்கும் யோகத்தை அளிக்கிறார். 7-ல் சூரியன் இருந்தாலும் திருமணவாழ்க்கை சுகப்படாது என்ற கருத்தும் உண்டு. இனி 7-ம் வீட்டில் கிரகங்கள் இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.

 

சூரியன் : திருமண வாழ்க்கை சுகப்படாது. பெண்களுக்கு இருந்தால் இந்த மனக்கசப்பு விவாக ரத்து வரைக்கும் போய்விடும்.

 

சந்திரன் : காமம் மிகுந்து இருப்பார். வாழ்க்கைத் துணைவர் அல்லது துணைவி அழகாக இருப்பார்.

 

செவ்வாய் : திருமணவாழ்க்கை சண்டை நிறைந்ததாக இருக்கும்.

 

புதன் : பாபருடன் இருந்தால் 2-வது திருமணம் உண்டு. வாழ்க்கைத் துணை கெட்டிக்காரத்தனம் மிகுந்தவராக இருப்பர்.

 

குரு : நல்ல குணமுள்ள வாழ்க்கைத் துணை கிடைக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

 

சுக்கிரன் : மனதுக்கு இனிமையான வாழ்க்கை அமையும். காமம் மிகுந்தவர்.

 

சனி : திருமணம் தாமதமாகும். திருமண வாழ்க்கையும் திருப்திகரமாக இருக்காது.

 

ராகு : திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்காது. மனைவி வியாதி உள்ளவளாக இருப்பாள். ஆணாக இருந்தால் கள்ளத்தனமான தொடர்பு இருக்கும்.

 

கேது : திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்காது. ஆணாக இருந்தால் கள்ளத்தனமான தொடர்பு இருக்கும்.

 

இதுவரையில் 7-வது வீட்டைப் பற்றிப் பார்த்தோம். இனி 8-ம் வீட்டைப், பற்றி அடுத்த பாடத்தில் பார்ப்போம்.

இதுவரையில் 7 வீடுகளைப் பற்றித் தெரிந்து கொண்டீர்கள். இப்போது 8-ம் வீட்டைப் பற்றிப் பார்க்கலாம். பொதுவாகவே 8-ம் வீடு என்பது துஸ்தானம் என்று கூறுவார்கள். 8-ம் வீட்டை வைத்து ஒருவரின் ஆயுள், தோல்விகள், துன்பங்கள், அகெளரவமான செயல்கள், தடைகள், அபகீர்த்தி ஆகியவற்றைக் கூறலாம். பெண்களுக்கு 8-ம் வீடென்பது மாங்கல்யஸ்தானம் ஆகும். ஒருபெண் தீர்க்க சுமங்கலியாக இருப்பாளா அல்லது விதவையாக ஆவாளா என்றும் 8-ம் வீட்டை வைத்துக் கூறலாம். ஒருவரின் ஆயுளைக் கூறும்போது 8-ம் வீட்டுடன் இலக்கினத்தையும், 3-ம் வீட்டையும் பார்த்துத்தான் கூறவேண்டும். அப்போதுதான் சரியாக வரும்.

 

இவைகளைத்தவிர மூதாதையர் சொத்துக்கள் கிடைக்குமா அல்லது கிடைக்காதா என்பதையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூறவேண்டும். மற்றும் உயில்கள், இன்ஷ¥ரன்ஸ், பிராவிடண்ட் பண்டு (Provident Fund), Gratuity, ஆகியவைகள் கிடைக்குமா அல்லது கிடைக்காதா என்பது பற்றியும் இந்த வீட்டை வைத்துத்தான் கூறவேண்டும்.

 

ஒருவருக்கு மரணம் இயற்கையானதா அல்லது துர்மரணமா என்பது பற்றியும் இந்த வீட்டை வைத்துத்தான் கூறவேண்டும். ஒருவருடைய ஜாதகத்தில் இலக்கினாதிபதி 8-ல் இருந்தாலோ அல்லது 8-ம் வீட்டின் அதிபதியுடன் சேர்ந்து இருந்தலோ அல்லது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலோ அவரின் மரணத்திற்கு அவரே காரணமாகிறார். ஒருவர் ஜாதகத்தில் 3-ம் வீட்டு அதிபர் 8-ம் வீட்டில் இருக்கிறார் எனக்கொள்ளுங்கள். 3-ம் வீடு என்பது என்ன? 3-ம் வீடு குறுகிய பயணத்தைக் குறிக்கிறது அல்லவா? ஆகவே அவர் பயணம் செய்யும் போது மரணம் சம்பவிக்கலாம். 12-ம் வீட்டின் அதிபதி 8-ல் இருக்கிறார் எனக்கொள்ளுங்கள். 12-ம் வீடு என்பது அயலூரினையோ அல்லது அயல் நாட்டைனையோ அல்லது மருத்துவமனையையோ குறிக்கிறது அல்லவா? ஆகவே அந்த இடத்தில் மரணம் சம்பவிக்கலாம். 9-ம் வீட்டுக்காரர் 8-ம் வீட்டில் இருந்தால் நீண்ட பயணம் செய்யும்போதோ அல்லது அயல் நாட்டிலோ மரணம் சம்பவிக்கலாம்.

 

மரணத்திப் பற்றிக் கூற முதலில் இவர் எவ்வளவு ஆண்டுகள் வாழ்வார் என்று கண்டு பிடிக்க வேண்டும். இது அவ்வளவு எளிதான காரியமல்ல; இதற்குப் பல கணித முறைகள் இருக்கின்றன. அவைகளை நாம் இப்போது சொல்லிக் கொடுக்க இயலாது. பாடம் முழுவதையும் முடித்தபின் அவைகளைப் பார்ப்போம். 8-ம் வீடு ஜல ராசியில் வருமானால் ஒருவருக்கு நீரால் மரணம் வரக் கூடும். நெருப்பு ராசியாக வருமேயானால் நெருப்பால் அபாயமுண்டு. துர்மரணமும் சம்பவிக்கும்.

பொதுவாக சனியானவர் எதையுமே மெதுவாகக் கொடுக்கக் கூடியவர். அவர் 8-ல் இருந்தால் ஆயுள் தீர்க்கமென்று கூறலாம். மரணமென்று வரும்போது மிகவும் கஷ்டத்தைக் கொடுத்துவிட்டுக் கொஞ்சம், கொஞ்சமாகத்தான் கொல்வார். சிலர் வெகு நாட்கள் படுத்த படுக்கையாக இருப்பர். அவர்களுக்கெல்லாம் சனி 8-ம் வீட்டுடன் சம்மந்தப் பட்டு இருப்பார். குரு 8-ல் இருந்தால் மரணம் இயற்கையானதாக இருக்கும். கஷ்டப் படாமல் இறப்பர். செவ்வாய் இருந்தால் அது துர்மரணமாக இருக்கும். விபத்தில் காலமாகலாம். அதனால்தான் 8-ல் செவ்வாய் இருந்தால் தோஷம் என்று கூறுகிறார்கள். பெரியம்மையால் முன்பெல்லாம் மரணமடைவார்கள் தெரியுமா? 8-ம் வீட்டுடன் செவ்வாய் சம்மந்தப் பட்டால் அம்மை நோயால் மரணம் சம்பவிக்கக் கூடும். ஒருவருக்கு நெருப்பு ராசி 8-ம் வீடாக வருகிறது எனக்கொள்ளுங்கள். அங்கு செவ்வாய் இருந்தால் செருப்பினாலோ அல்லது கலகங்களினாலோ அல்லது வெடிமருந்துகளினாலோ மரணம் சம்பவிக்கும். அதே வீடு ஜலராசியாகி அங்கு செவ்வாய் இருந்தால் நீரில் மூழ்கி மரணம் சம்பவிக்கும். பொதுவாக ஆயுளைப்பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள C.G.ராஜன் அவர்கள் எழுதிய "ஜாதக ராஜ பாவ இருவாஷி - பாகம் நெ. 1 என்னும் ஆயுள் பாவம்" என்ற புத்தகத்தைப் படிக்கவும். நாம் எல்லவற்றையும் இங்கு எழுதிவிட முடியாது. அதில் விரிவாக மரணத்தைப் பற்றி எழுதி இருக்கிறார்கள்.

 

மரணம் என்பது ஒருவரின் வாழ்வின் முடிவில் வருவது. அதற்குமுன் அவர் வாழ்ந்தாக வேண்டும். ஆகவே 8-ம் வீட்டின் மற்ற காரகத்துவங்களையும் பார்ப்போம். நாம் வியாபாரம் செய்கின்றோம் என்று கொள்ளுங்கள். ஒருவரிடம் வாங்கி மற்றொரு வருவரிடம் விற்பனை செய்கிறோம். நாம் வாங்குபவரையும், நம்மிடம் வாங்குபவரையும் குறிப்பது 7-வது வீடு. அவருடைய தனஸ்தானத்தைக் குறிப்பது 7-க்கு 2-ம் வீடான 8-ம் வீடு. 8-ல் நல்ல கிரகங்கள் இருந்தால் அவருடைய பொருளாதாரம் நன்றாக இருக்குமென்றும் 8-ல் பாப கிரகங்கள் இருந்தால் அவருடைய பொருளாதாரம் வளமற்று இருக்குமென்றும் கூறலாம். நீங்கள் ஒருவருடன் கூட்டு வியாபரம் செய்ய விரும்புகிறீர்கள் எனக் கொள்ளுங்கள். உங்கள் பாகஸ்தரைக் குறிப்பது 7-ம் வீடு. அவருடைய தனத்தைக் குறிப்பது 7-க்கு இரண்டாம் வீடாகிய 8-ம் வீடு. 8-ம் சுபக்கிரகங்கள் இருந்தால் அவர் இந்த கூட்டு வியாபாரத்தால் நன்மை பெறுவார் எனக் கொள்ளலாம். கெட்ட கிரகங்கள் இருந்தால் இந்த வியாபாரத்தால் அவருக்கு அனுகூலமில்லை எனக் கூறிவிடலாம்.

 

8-ம் வீடு என்பது இந்த பிரபஞ்சத்திலுள்ள மறைந்திருக்கும் உண்மைகளைக் குறிக்கிறது. அங்கு குருவோ அல்லது சனியோ ( இரண்டும் வேதாந்தத்தைக் குறிக்கின்ற கிரகங்கள்) இருக்குமேயானல் இந்தப் பிரபஞ்சத்திலுள்ள உண்மைகளைக் கண்டறிய முற்படுவார். புதனும் அப்படித்தான். புதன் மிகவும் புத்திசாலித்தனமான கிரகம் அல்லவா? 8-ல் புதனிருக்க அவரும் பிரபஞ்ச ரகசியங்களைக் கண்டறிய முற்படுவார். ஜோதிட சாஸ்த்திரமும் பிரபஞ்ச ரகசியம் தானே. அதில் உள்ள ரகசியங்களையும் கண்டறிய முற்படுவார்.

 

4-வது வீடென்பது ஒருவரின் பூர்வீக சொத்தைக் குறிக்கிறது. அதில் சுபக்கிரகங்கள் இருந்தால் பூர்வீக சொத்துக் கிடைக்கும். எப்படி? ஒருவர் ஜாதகத்தில் 9-ம் வீடு தகப்பனாரைக் குறிக்கிறது அல்லவா? 8-ம் வீடென்பது பூர்வீக சொத்தையும் குறிக்குமென்று கூறினோம். 9-ம் வீட்டிற்கு 8-ம் வீடு எது? 4-ம் வீடல்லவா? ஆகவே 4-ம் வீட்டில் சுபக் கிரகங்கள் இருந்தால் ஒருவருக்கு பூர்வீக சொத்துக் கிடைக்குமென்று கூறலாம்.

9-ம் வீடு தகப்பனாரைக் குறிக்கிறது அல்லவா? தகப்பனார் தன் பணத்தை Shares, Securities போன்றவற்றில் முதலீடு செய்து இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். 12-ம் வீடு என்பது Investments - களைக் குறிக்கிறது. தகப்பனாரின் Investments - களைக் குறிப்பது எந்த வீடு? 9-ம் வீட்டிற்குப் பன்னிரண்டாம் வீடு. அதாவது 8-ம் வீடு. ஆக 8-ம் வீட்டில் சுபக்கிரகங்கள் இருந்தால் ஒருவர் தன் தகப்பனார் செய்து வைத்திருந்த Investments அவருக்குக் கிடைக்குமென்று கூறலாமல்லவா? ஆக 8-ம் வீட்டை துஸ்தானமென்று கூறி ஒதுக்குதல் எவ்வாறு பொருந்தும்? 8-ம் வீட்டில் சுபக்கிரகம் இருந்தால் அந்த கிரகம் மறைவு ஸ்தானத்தில் இருக்கிறது என்று கூறி அந்த கிரகம் அந்த தசாகாலங்களில் நல்லதைச் செய்யாது என்று கூறுவார்கள். அந்த வாதம் சரியல்ல என்பது நமது வாதம். அதேபோல் ஒருவருக்கு 8-ம் வீட்டில் பாப கிரகங்கள் இருந்தால் அந்த கிரகத்தின் தசா, புக்திக் காலங்களில் அவருடைய பிதுராஜித சொத்துக்கள் அழியக் கூடும்.

 

தாயாரைக் குறிப்பது 4-ம் வீடு. 5-ம் வீடென்பது லாட்டரி, ரேஸ், Speculation துறை ஆகியவற்றைக் குறிக்கிறது என்றும் முன்பே எழுதி இருக்கிறோம். 4-ம் வீட்டிற்கு 5-ம் வீடு என்பது எது? 8-வது வீடு. ஆக ஒருவர் ஜாதகத்தில் 8-ம் வீட்டின் அதிபதியின் தசையோ அல்லது புக்தியோ அல்லது 8-ல் உள்ள கிரகத்தின் தசையோ அல்லது புக்தியோ நடக்கும்போது ஒருவரின் தாயாருக்கு லாட்டரி, ரேஸ் போன்ற வற்றிலிருந்து பணம் கிடைக்க வழியுண்டு. ஆக 8-ம் இடம் என்பது துஸ்தானமென்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது

எட்டாம் வீட்டதிபதி ஒவ்வொருவீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.

 

முதல் வீட்டில் : கடன் தொல்லையால் அவர் அவதிப் படுவார். துரதிஷ்டசாலி. உடல் மிகவும் பலகீனமாக இருக்கும்.

 

2-ம் வீட்டில் : பலவிதமான தொந்தரவுகள் இருந்து வரும். கண், மற்றும் பல் தொந்தரவுகள் இருந்து வரும். குடும்பத்தில் சண்டையும். சச்சரவுகளும் இருந்து வரும்.

 

3-ம் வீட்டில் : காது சம்மந்தமான பிரச்சனைகள் இருந்துவரும். இளைய சகோதரத்துடன் மனஸ்தாபங்களும், சண்டையும் இருந்து வரும்.

 

4-ம் வீட்டில் : இருந்தால் மனதின் நிம்மதி பாதிக்கப்படும். பணப்பிரச்சனையுடன் மற்ற பிரச்சனைகளும் இருந்து வரும். தாயாரின் உடல் நிலையில் பாதிப்பு இருந்து வரும். ஸ்திர சொத்துக்களினாலும் தொந்தரவு இருந்து வரும். 8-ம் வீட்டின் அதிபதியுடன் இன்னும் சில பாபக் கிரகங்கள் சேர்ந்தால் ஸ்திரசொத்துக்கள் விற்க வேண்டிய நிலை உண்டாகும். 4-ம் வீடு ஒருவரின் வளர்ப்பு மிருகங்களையும் குறிக்கிறது அல்லவா? அவைகளுக்கும் வியாதி வந்து தொந்தரவு ஏற்படும். 4-ம் வீட்டில் பாப கிரகங்கள் இருந்தால் அவைகள் ஜீவன ஸ்தானமான 10-ம் வீட்டைப் பார்க்கும் அல்லவா? பாப கிரகங்கள் பார்த்தால் என்னவாகும்? தொழிலில் தொந்தரவுகள் இருந்து வரும்.

 

5-ம் வீட்டில் : 8-ம் வீட்டிற்குடைய கிரகம் இருந்தால் என்னவாகும்? 5-ம் வீடு புத்திர ஸ்தானமல்லவா? புத்திரர்களுக்குத் தொல்லையும் தீங்கும் ஏற்படும். 5-ம் இடம் புத்திஸ்தானம் அல்லவா? 8-ம் வீட்டு அதிபரும் இன்னும் சனி, செவ்வாய் போன்ற பாபக் கிரகங்களும் சேர்ந்தால் Hysteria போன்ற மன நோய்கள் வரக்கூடும். சிலருக்கு நரம்புத்தளர்ச்சி போன்ற நோய்களும் வரக் கூடும்.

 

6-ம் வீட்டில் : இது ஒரு நல்ல கிரக ஸ்தானம் அல்ல; அந்த கிரகத்தின் தசா, புக்திக் காலங்களில் உடல் நிலை பாதிப்பினால் பண விரையம் ஆவதுடன், அவகீர்த்தியான காரியங்களும் நடந்து வரும். கெளரவமும் பாதிக்கப் படும். 6-ம் வீடு தாய் மாமன் வீடல்லவா? தாய் மாமனுக்கு பலவகையிலும் பாதிப்பு இருந்து வரும்.

 

7-ம் வீட்டில் : ஆயுள் பாவம் பாதிக்கப் படும். 7-ம் இடம் களத்திர ஸ்தானம் அல்லவா? கணவன் அல்லது மனைவிக்கு உடல் பாதிப்பு இருக்கும். கணவன் - மனைவி உறவு பாதிக்கப்படும். 7-ம் இடமானது வெளி நாடு செல்லுதலையும் குறிக்கிறது அல்லவா? வெளிநாட்டிலும் பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும்.

 

8-ம் வீட்டில் : ஆயுள் தீர்க்கமாக இருக்குமெனக் கூறலாம். 8-ம் வீடென்பது தகப்பனார் ஸ்தானமான 9-ம் வீட்டிற்குப் 12-ம் வீடல்லவா! ஆகவே அந்த கிரகத்தின் தசா, புக்தி காலங்களில் தகப்பனருக்கு உடல் நிலை பாதிக்கும். தகப்பனாருக்கு வீண் செலவுகள் இருந்து வரும். ஜாதகருக்கும் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வரும்.

 

9-ம் வீட்டில் : ஜாதகருக்குத் தகப்பனார் அனுகூலமாக இருக்க மாட்டார்.

உதாரணத்திற்கு ஒரு ஜாதகத்தைக் குறித்துக் கொள்ளுங்கள். ஜாதகரின் இலக்கினம்

 

 

கன்னி; 4-ம் வீடான தனுசில் சந்திரன், புதன், சுக்கிரன். 5-ம் வீட்டில் கேது, சூரியன். 9-ம் வீடான ரிஷபத்தில் செவ்வாய், சனி. 11-ம் வீடான கடகத்தில் ராகு. 12-ம் வீடான சிம்மத்தில் கேது. தகப்பனார் ஸ்தானமான 9-ம் வீட்டில 8-ம் வீட்டிற்குடைய செவ்வாயும், 6-ம் வீட்டிற்குண்டான சனியும், இரண்டு பாபிகள் இருப்பதைப் பாருங்கள். தகப்பனார் இவருக்கு விரோதி என்றே கூறலாம். இவருடைய நலனில் சிறிதும் அக்கரை காட்டாதவர்; தன்னுடய வெறுப்புக்களைத் தவிர வேறெதையுமே தன் மகனுக்குக் காட்டாதவர். இந்த ஜாதகர் முன் ஜென்மத்துப் பாபம் இப்படி ஒரு தகப்பனார் இவருக்கு வாய்த்திட்டார். 9-ம் வீடு மேற்படிப்பைக் குறிக்கிறது அல்லவா? மேற்படிப்பும் பாதிக்கப்படும். 9-ம் வீடு நீண்ட பயணத்தைக் குறிக்கிறது அல்லவா? நீண்ட பயணத்தின்போது பிரச்சனைகள் உறுவாகும். 9-ம் இடம் தர்மஸ்தானம் அல்லவா? அவர் செய்யும் தர்மங்கள், உதவிகள் ஆகியவற்றிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்காது.

 

10-ம் வீடென்பது ஒருவரின் ஜீவனஸ்தானமாகும். ஜீவனஸ்தானத்தில் 8-ம் வீட்டதிபர் இருந்தால் தொழிலில் முன்னேறுவது சிரமமாக இருக்கும். போட்டிகள் நிறைய இருக்கும். இவருக்குப் பின்னால் வேலையில் சேர்ந்தவருக்குப் பதவி உயர்வு கிட்டும். இவருடைய கெளரவத்திற்குப் பங்கம் விளைகின்றது போன்ற காரியங்கள் நடக்கும். 8-ம் வீடென்பது தகப்பனாரின் Investments, உயில் ஆகியவற்றையும் குறிக்கிறது என இதற்கு முந்தைய பாடங்களில் எழுதி இருக்கிறோம். ஆக தகப்பனாரின் இத்தைகைய சொத்துக்கள் இந்த ஜாதருக்குக் கிட்டும்.

 

11-ம் வீட்டில் : 11-ம் வீடு மூத்த சகோதரத்தின் வீடல்லவா! 8-ம் வீட்டின் அதிபர் 11-ல் இருந்தால் மூத்த சகோதரத்திற்குத் தொந்தரவுகள் இருந்து வரும். அல்லது மூத்த சகோதரத்தால் ஜாதகருக்குத் தொந்தரவுகள் இருந்து வரும். 11-ம் வீடு நண்பர்களைக் குறிக்கிறது அல்லவா? நண்பர்களாலும் தொந்தரவு இருந்து வரும். 8-ம் வீடு Insurance, P.F., Gratuity, உயில் ஆகியவற்றையும் குறிக்கிறது எனக் கூறி இருந்தோம். ஆக 8-ம் வீட்டதிபர் 11-ல் இருந்தால் அந்த கிரகத்தின் தசா, புக்தி காலங்களில் மேற்கண்டவைகளிலிருந்து பணம் கிடைக்கும்.

 

12-ம் வீட்டில் : 8-ம் வீட்டின் அதிபதி 12-ல் இருந்தால் அந்த கிரகத்தின் தசா, புக்திகாலங்களில் வீண் தண்டச் செலவுகளும், விரயங்களும் இருந்து வரும். பல விதக் கஷ்டங்கள் இருக்கும். பொதுவாக 8-ம் வீட்டின் அதிபதி 12-ல் இருப்பது விரும்பத்தக்கது அல்ல.

: இனி 8-ம் வீட்டில் கிரகங்கள் இருந்தால் என்ன பலன்கள் என்று பார்ப்போம்.

 

சூரியன் : 8-ம் வீடு மறைவு ஸ்தானமாதலால் சூரியன் அங்கு மறைந்து விடுகிறார். ஆயுள் குறைவு, அரசாங்கத்திடமிருந்து உதவியின்மை, தகப்பனாருக்குத் தோஷம், கண் நோய், மனக் குழப்பம், செலவு ஆகியவை ஏற்படும்.

 

சந்திரன் : நீரில் கண்டம், கப நோய், ஆகியவை ஏற்படும். சந்திரன் மனதுக்குக் காரகம் வகிப்பவர் அல்லவா? மனபிராந்தி, மனது சம்மந்தமான நோய்கள் ஏற்படக்கூடும். சந்திரன் தாயாருக்குக் காரகம் வகிப்பவர் அல்லவா? தாயாரால் இந்த ஜாதகருக்கு அனுகூலங்கள் மிகவும் குறைவாக இருக்கும். பிதுரார்ஜித சொத்துக்கள் எளிதாக கைக்கு வந்து சேரும். சந்திரனுடன் செவ்வாயும், சனியும் சேர்வார்களேயாகில் கண்பார்வை பாதிக்கப்படும்.

 

செவ்வாய் : விபத்துக்களால் மரணம் ஏற்படுக்கூடும்; பண நாசம் ஏற்படும்; குடும்பத்தில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு குடும்ப நிம்மதி பாதிக்கப் படும்.பைல்ஸ் போன்ற இரத்த சம்மந்தமான நோய்களால் அவதிப் படுவர்.

 

புதன் : மந்திர தந்திரங்களில் சிறந்து விளங்குவர்; கணித சாஸ்த்திரம், சட்ட நுணுக்கம், வியாபாரம் முதலியவற்றில் சிறந்து விளங்குவர்.

 

குரு : குரு எங்கு இருந்தாலும் அந்த வீட்டின் காரகத்துவத்தை அதிகரிக்கச் செய்வார் அல்லவா? 8-ம் வீடு ஆயுள்ஸ்தானமாகையால் அவர் ஆயுளை அதிகரிக்கச் செய்வார். உபாதையற்ற மரணம் ஏற்படும். புத்திர தோஷம் உண்டாகும்.

 

சுக்கிரன் : சுக்கிரன் 8-ம் வீட்டில் இருப்பது நல்லதே. செல்வம் உண்டாகும். வாழ்க்கைக்குத் தேவையான சகல செளக்கியங்களும் கிடைக்கும். ஜாதகருடைய கணவன் அல்லது மனைவிக்குப் பண நிலைமை நன்றாக இருக்கும். இளம்வயதில் பல ஏமாற்றங்கள் ஏற்பட்டு அதன் காரணமாக பக்தி மார்க்கத்தை நாடுவார்.

 

சனி : நீண்ட ஆயுள் உண்டு. ஜாதகரின் கணவன் அல்லது மனவிக்குப் பொருளாதாரம் சுகப்படாது. சொற்பக் குழந்தைகள். வாயுத் தொந்தரவு இருக்கும்;

 

ராகு : ராகு இருந்தால் பல தொந்தரவுகள் இருந்து வரும். பொதுவாழ்வில் நற்பெயர் இருக்காது. ராகுவுடன் சந்திரனும் கூட இருந்தால் மன நோயால் பீடிக்கப்படுவர்.

 

கேது : கேதுவுக்கு சுபர்கள் பார்வையோ அல்லது சுபர்களோ சேர்ந்து இருந்தால் தொந்தரவு எதுவுமில்லை. கெட்டவர்கள் சேர்க்கைஇருப்பின் நற்பயன் எதுவுமில்லை. சமயத்தில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தைக் கொடுப்பார்.

மிக முக்கியமானவீடான 9-ம் வீட்டைப், பற்றி நாம் இப்போது பார்க்கப் போகிறோம். ஒருவருடைய குருவைப் பற்றிக் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். போன ஜென்மத்து அதிர்ஷ்டத்தையும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். பொதுவாக இதைப் பிதா ஸ்தானமென்றுதான் கூறுவோம். அதாவது ஒருவரின் தகப்பனாரை இந்த வீட்டை வைத்துத்தான் கூற வேண்டும். கிரகங்களில் சூரியனை வைத்து எப்படி தகப்பனாரைக் கூறுகின்றோமோ அதைப் போல் 9-ம் வீட்டை வைத்து தகப்பனாரைப் பற்றிக் கூறவேண்டும். ஒருவருடைய நீண்ட பயணத்தைக் குறிப்பதும் இந்த வீடுதான். ஒருவர் செய்கின்ற தர்மத்தையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூற வேண்டும். 9-ம் வீட்டில் சுப கிரகங்கள் இருந்தால் அவர் செய்கின்ற தருமங்கள் எல்லோராலும் போற்றப்படும். பாப கிரகங்கள் இருப்பின் அவர்கள் செய்யும் தர்மம் எடுபடாமல் போய்விடும். சனி, செவ்வாய், ராகு போன்ற பாப கிரகங்கள் இருந்தால் அவர்கள் செய்யும் தர்மம் எடுபடாமல் போய்விடும்.

 

5-ம் வீடும் பூர்வபுண்ணிய ஸ்தானம் என்றுதான் அழைக்கப் படுகிறது. 9-ம் வீடு போன ஜென்மத்து அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது. ஆக திரிகோண ஸ்தானமான 5-ம் வீடும் 9-ம் வீடும் கெடாமல் இருந்தால் ஒருவர் போன ஜென்மத்தில் புண்ணியம் செய்தவர் எனக் கொள்ளலாமல்லவா? அதாவது சுபக் கிரகங்களான குரு, சந்திரன், புதன் சுக்கிரன் போன்ற கிரகங்கள் இருந்து அல்லது 9-ம் வீட்டைப் பார்த்தால் அவர் போன ஜென்மத்தில் புண்ணியம் செய்தவர் எனக் கொள்ளலாம். அதாவது போன ஜென்மத்தில் புண்ணியங்கள் செய்து அதன் விளைவாக இந்த ஜென்மத்தில் நல்ல பலன்களை அனுபவிக்கப் போகின்றார் எனக் கூறலாம்.

 

9-ம்வீடு ஒருவரின் மத நம்பிக்கை, வேதாந்தங்கள் ஆகியவற்றைக் குறிக்கிறது. குருவானவர் வேதாந்தத்தைக் குறிக்கும் கிரகம். 9-ம் வீட்டில் குரு இருந்தால் ஒருவர் மதம், வேதாந்தங்கள் ஆகியவற்றில் நம்பிக்கை உள்ளவராக இருப்பார். சனி இருந்தாலும் அவ்வாறே மத சம்மந்தமான விஷயங்களில் நம்பிக்கை உள்ளவராக இருப்பார். கோவில்கள், சத்சங்கங்கள் மற்றும் தெய்வ தரிசனங்கள் ஆகியவற்றைக் குறிப்பதும் இந்த வீடுதான். கல்லூரிக்கு மேற்பட்டப் படிப்பையும் குறிப்பது இந்த வீடுதான். இதில் சுப கிரகங்கள் இருந்து நடப்பு தசா, புக்திகளும் 9-ம் வீட்டைக் குறித்தால் அவர் கல்லூரிப் படிப்பிற்கு மேற்பட்டப் படிப்பைப் படிப்பார் எனக் கொள்ளலாம்.

 

சட்டப் படிப்பைக் குரிப்பதும் இந்த வீடுதான். (கிரகங்களில் குருவானவர் சட்டப் படிப்பைக் குறிப்பார்.) ஆன்மீக சிந்தனைகள், உபாத்தியாயர் தொழில், புரோஹிதம் தொழில் ஆகியவற்றையும் இந்த வீடுதான் குறிக்கும். தேவதைகளை வசியம் செய்தலையும் இந்த வீடுதான் குறிக்கும்.

நீண்டபயணத்தைக் குறிப்பதும் இந்த வீடுதான். ஒருவர் வெளிநாடு செல்கிறார் என்றால் 9-ம் வீட்டின் தொடர்பு இன்றி அவர் வெளிநாடு செல்ல முடியாது. அதாவது 9-ம் வீட்டின் அதிபதி அல்லது 9-ம் வீட்டிலுள்ள கிரகங்களின் தசா, புக்திகளில்தான் ஒருவர் வெளிநாடு செல்ல முடியும். ஒருவர் "உங்களிடம் நான் வெளிநாடு செல்ல முடியுமா?" எனக் கேட்கிறார் எனக் கொள்வோம். இதற்கு நாம் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். வெளி நாடு செல்வது என்றால் என்ன?

 

1. நாம் இருக்கும் இடத்திலிருந்து பிரிந்து செல்ல வேண்டும்.

 

2. நீண்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

 

3. சற்றும் பழகாத முன், பின் தெரியாத இடத்தில் இருக்க வேண்டும். இவைதான் வெளிநாடு செல்லுதலைக் குறிக்கிறது.

 

நாம் தற்போது இருக்கும் வீட்டை/ நாட்டைக் குறிப்பது 4-ம் வீடு. அந்த வீட்டிற்குப் 12-ம் வீடான 3-ம் வீடு தான் இடம் பெயர்தலைக் குறிக்கிறது.

 

நீண்ட பயணம் மேற்கொள்ளுவதை 9-ம் வீடு குறிக்கிறது. சற்றும் பழகாத, முன் பின் தெரியாத இடத்திற்குச் செல்வதை 12-ம் வீடு குறிக்கிறது. ஆக 3, 9, 12-ம் வீட்டைக் குறிக்கின்ற கிரகங்களின் தசாபுக்திகாலங்களில்தான் ஒருவர் வெளி நாடு செல்ல முடியும். ஆக 9-ம் வீட்டின் உபயோகம் வெளிநாடு செல்ல எப்படிப் பயன் தருகிறது பார்த்தீர்களா?

 

சற்றும் முன்பின் தெரியாதவர்களையும் வெளி நாட்டவர்களையும் இந்த வீடுதான் குறிக்கும். ஒருவர் தனக்கு சொந்தத்தில் திருமணமாகுமா? அல்லது அந்நியத்தில் திருமணமாகுமா? எனக்கேட்கிறார் எனக் கொள்ளுங்கள். 7-ம் வீடு திருமணத்தைக் குறிக்கிறது அல்லவா? 7-ம் வீடும் சந்திரனும் சம்மந்தப் பட்டால் தாயார் வழி உறவில் திருமணமாகுமென்று கூறலாம். சூரியன் சம்மந்தப்பட்டால் தகப்பனார் வழி உறவில் திருமணமாகுமெனக் கூறலாம். புதன் சம்மந்தப்பட்டால் தாய் மாமன் உறவில் திருமணமாகுமெனக் கூறலாம். 9-ம் வீட்டுடன் சம்மந்தப்பட்டல் அந்நியத்தில் திருமணமாகும் எனக்கூறலாம். ஏன் அந்நிய நாட்டினராகக் கூட இருக்கலாம்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒருகுலதெய்வம் உண்டு. அந்த குலதெய்வம் அனுகூலமாக உள்ளதா இல்லையா என்பது பற்றியும் நாம் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். இயற்கையிலேயே உள்ள சுபக்கிரகங்கள் 9-ம் வீட்டில் இருந்தால் குலதெய்வத்தின் ஆதரவு இருக்கிறது எனப் பொருள். 9-ம் வீட்டின் அதிபதியும் நல்ல இடத்தில் இருப்பாரேயாகில் குல தெய்வத்தின் ஆதரவு இருக்கிறது எனப் பொருள். நல்ல இடமென்றால் கேந்திர ஸ்தானங்களிலோ அல்லது திரிகோண ஸ்தானங்களிலோ அல்லது லாப ஸ்தானமான 11-ம் வீட்டிலோ இருந்தால் குலதெய்வம் கைகொடுக்கு மெனக் கூறலாம்.

 

3-ம் இடமானது புத்தகங்கள், பத்திரிக்கைகள் வெளியிடுதலைக் குறிக்கிறது. அதாவது பொழுது போக்கு அம்சமான புத்தகங்களையும், பத்திரிக்கைகளையும் தான் குறிக்கிறது. ஆனால் 9-ம் இடமோ மதம் சம்மந்தமான புத்தகங்கள், ஆன்மீக சம்மந்தமான புத்தகங்கள், வெளிநாட்டு சம்மந்தமுள்ள புத்தகங்கள் ஆகியவற்றைக் குறிக்கிறது. 9-ம்வீடு அதிபதியானவர் இலக்கினத்தையோ அல்லது சந்திரனையோ பார்ப்பாரேயாகில் அந்த ஜாதகர் செய்யும் பரிகாரகங்களுக்குப் பலன் இருக்கும். 9-ம் வீடு குலதெய்வத்தைக் குறிக்கிறது அல்லவா? ஆகவே குல தெய்வத்தின் பக்கபலம் அந்த ஜாதகருக்குக் கிடைக்கும்.

9-ம் வீட்டிற்குடைய கிரகம் இலக்கினத்தில் இருந்தால் பெரியவர்களிடமும், குரு, தெய்வம் ஆகியோரிடம் நம்பிக்கையுடையவராக இருப்பர். தருமங்கள் செய்பவராகவும் இருப்பர். தெய்வ வழிபாடு நிரம்ப இருக்கும்.

 

9-ம் வீட்டதிபதி 2-ம் வீட்டில் இருந்தால் அயல் நாட்டுத் தொடர்பு மூலம் பணவரவு இருக்கும். தகப்பனாரின் மூலமாகவும் பணவரவு இருக்கும்.

 

3-ம் வீட்டில் இருந்தால் இளைய சகோதரர், சகோதரிகளின் ஆதரவு இருக்கும். 4-ம் வீட்டில் இருந்தால் தாயின் ஆதரவு இருக்கும். நல்ல செல்வாக்குடன் இருப்பார்கள்.

 

5-ம் வீட்டில் இருந்தால் புத்திரர்கள் சகல செளபாக்கியத்துடன் இருப்பார்கள். தெய்வீக வழிபாட்டினால் குடும்பம் பிரகாசமாக இருக்கும்.

 

6-ம் வீட்டில் இருந்தால் வெளிநாட்டில் வேலைவாய்ப்பிற்கு யோகமுண்டு. உத்தியோக சம்மந்தமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள வேண்டியதுவரும். தகப்பனார் உடல் நிலை பாதிக்கக் கூடும்.

 

7-ம் வீட்டில் இருந்தால் நல்ல தெய்வபக்தியுள்ள பெண்கிடைக்கும். அந்நியத்திலிருந்து பெண் கிடைக்கும். வெளிநாட்டுப் பயணமும் கிடைக்கும்.

 

8-ம் வீட்டில் இருந்தால் தகப்பனாருக்குக் கண்டம் எனக் கொள்ளலாம். பிதாவின் உடல் நிலையும் பாதிக்கப்படும்.

 

9-ம் வீட்டில் இருந்தால் தகப்பனார் நீண்ட ஆயுளுடன் இருப்பார். தான, தருமங்களும், தெய்வீக வழிபாடுகளும் நிறைந்து இருக்கும். தகப்பனார் சொத்துக்கள் ஸ்திரமாக இருக்கும்.

 

10-ம் வீட்டில் இருந்தால் அரசாங்கத்தில் உயர் பதவியில் இருப்பர். தகப்பனாருடைய சொத்துக்கள் சிறந்த முறையில் விருத்தியாகும். பெரிய மனிதர்களின் நட்புக் கிடைக்கும்.

 

11-ம் வீட்டில் இருந்தால் தகப்பனாரால் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சகல செல்வங்களும் நிறைந்து இருக்கும். தெய்வ காரியங்கள் வீட்டில் நிறைந்து இருக்கும். அயல் நாட்டுத் தொடர்பு மூலம் லாபம் உண்டாகும்.

 

12-ம் வீட்டில் இருந்தால் தகப்பனாருக்குக் கெடுதி உண்டாகும். தகப்பனாரின் சொத்துக்கள் நிலைக்காது. வெளிநாட்டுப் பயணம் உண்டாகும்.

இனிமேல் 9ம் வீட்டில் கிரகங்கள் நின்ற பலனைப் பார்ப்போம்.

 

சூரியன் : பொதுவாக ஒரு கிரகம் எதற்குக் காரகம் வகிக்கிறதோ அந்தக் காரகத்தைக் குறிக்கும் வீட்டில் அந்த கிரகம் இருப்பது நல்லது அல்ல என்று ஜோதிட

உலகம் கூறுகிறது. உதாரணமாக தாயாரைக் குறிப்பது சந்திரன்; 4-ம் வீடும் சந்திரனைக் குறிக்கிறது. ஆக தாயாரைக் குறிக்கின்ற கிரகமான சந்திரன், தாயாரைக் குறிக்கின்ற 4-ம் வீட்டில் இருப்பது தாயாருக்கு நல்லது அல்ல என்று கூறுவார்கள். இதைத்தான் "காரகோ பாவன சாய" என் சமஸ்கிருதத்தில் கூறுவார்கள். அதேபோன்று சகோதரத்தைக் குறிக்கும் கிரகமான செவ்வாய், சகோதரத்தைக் குறிக்கும் 3-ம் வீட்டில் இருப்பது நல்லது அல்ல; களத்திரத்தைக் குறிக்கும் வீடான சுக்கிரன், களத்திரஸ்தானமான 7-ம் வீட்டில்; இருப்பது நல்லது அல்ல; அதேபோல் தகப்பனாருக்குக் காரகம் வகிப்பவரான சூரியன், 9-ம் வீட்டில் இருப்பது நல்லது அல்ல; அதாவது தகப்பனாருக்கு தோஷம் என்றும் கூறலாம். ஆனால் இந்த விதிக்கு ஒரு விதிவிலக்கு உண்டு. ஆயுள்காரகனான சனி, ஆயுள்ஸ்தானமான 8-ம் வீட்டில் இருந்தால் தீர்க்க ஆயுள் உண்டு என்று ஜோதிட உலகம் கூறுகிறது. குரு பணத்திற்கு அதிபதி. 2-ம் வீடு தனஸ்தானத்தைக் குறிக்கிறது. "காரகோ பாவன சாயன" விதியின்படி குரு, 2-ம் வீட்டில் இருக்கக் கூடாது அல்லவா? ஆனால் அனுபவபூர்வமாகப் பார்க்கும்போது குரு 2-ம் வீட்டில் இருக்கப் பிறந்தவர்கள் நல்ல பண வசதியுடன் இருந்து வருகிறார்கள். இது அனுபவபூர்வமான உண்மை. சரி! நமது பாடத்துக்கு வருவோம்; 9-ம் வீட்டில் சூரியன் இருப்பது தகப்பனாருக்கு நன்மை அல்ல; இதைப் பிதுர் தோஷம் என்றும் கூறலாம். 9-ம் வீடு உயர் படிப்பைக் குறிக்கிறது அல்லவா? இங்கு சூரியனும் புதனும் சேர்ந்து இருக்கப் பிறந்தவர்கள் மிகுந்த புத்திகூர்மை உள்ளவர்களாக இருப்பார்கள். படிப்பில் அவர்கள் எதேனும் ஒரு Professional Course-ல் வல்லமை பெற்று இருப்பார்கள். சுறுக்கமாகச் சொல்லப் போனால் 9-ல் சூரியன், புதன் இருக்கப் பிறந்தவர்கள் படிப்பில் வல்லவர்களாக இருப்பார்கள்.

 

சந்திரன் : இங்கு சந்திரன் இருப்பது நல்லது அதுவும் தாயாருக்கு. நல்ல மனம் படைத்தவர்களாக இருப்பார்கள். இங்கு செவ்வாயும் சந்திரனும் சேர்ந்து இருந்தால் தாயாருக்கு காயம்படும்.தாயாரை கடும் வார்த்தைகளால் பேசுவர்.

செவ்வாய் : தகப்பனாருக்கு உபாதைகளைக் கொடுக்கும். குருவோ அல்லது புதனோ இருக்கப் பிறந்தவர்கள் படிப்பில் கெட்டிக்காரர்களாகவும், மத விஷயங்களில் நம்பிக்கை உடையவர்களாகவும் இருப்பார்கள்.

 

புதன் : இங்கு இருப்பது ஒருவரை மிக அறிவாளியாக ஆக்கும்.எதையும் அலசி, ஆராய்ந்து பார்க்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். குருவும் சேர்ந்து கொண்டால் மிக வேடிக்கையாகவும், கெட்டிக்காரத்தனமாகவும் பேசுவர்.

 

குரு : சட்டப் படிப்பில் முன்னேற்றம் காணமுடியும். தன் சொந்த சகோதரர்களுடன் மிகவும் பிரியமாக இருப்பர். மிகவும் தெய்வபக்தியுடன் வாழ்க்கை நடத்துவர். வெளிநாடு செல்லும் யோகம் இவருக்கு இருக்கும். ஒரு குறிக்கோளுடைய வாழ்க்கை இருக்கும்.

 

சுக்கிரன் : மிக செளக்கியமான வாழ்க்கை நடத்துவர். அதிர்ஷ்டசாலியாகவும் இருப்பர். கலைகளில் திறமைசாலியாக இருப்பர்.

 

சனி : ஒரு தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை இருக்கும். தகப்பனருடன் நல்ல உறவு இருக்காது. மேல் படிப்பில் மந்தத்தன்மை இருக்கும். புதனும், சனியும் சேர்ந்தால் இவர் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக இருக்கமாட்டார்.

 

ராகு : தகப்பனாரை தூஷிப்பர். கடவுள் மேலும், அவர் சார்ந்துள்ள மதத்தின் பேரிலும் அவ்வளவு நம்பிக்கை இருக்காது.

 

கேது : தகப்பனாருடன் நல்லுறவு இருக்காது. மிக்க தைரியம் உள்ளவராக இருப்பர்.

 

இத்துடன் 9-ம் வீட்டைப் பற்றி முடித்துக் கொள்வோம்.                                                             10-ம் வீட்டைப் பற்றிப் பார்ப்போம்.                                                                                                                      இது மிகவும் முக்கியமான வீடாகும். இது ஒரு கேந்திரஸ்தானம் ஆகும். இதை ஜீவன ஸ்தானம் என்றழைப்பார்கள். ஒருவருக்கு மதிப்பு, கெளரவம் ஆகியவற்றையும் கொடுப்பது இந்த வீடுதானாகும். ஒருவரின் தொழிலைக் குறிப்பதும் இந்த வீடுதான். ஒருவருடைய பொதுவாழ்வைக் குறிப்பதும் இந்த வீடுதான். (Public Life). ஒருவரின் மதிப்பு, மரியாதை, உலகத்திலுள்ள சுகங்கள், இவைகளையெல்லாம் குறிப்பதும் இந்த வீடுதான். ஒருவரின் பதவி உயர்வு, வியாபார விருத்தி ஆகியவற்றைக் குறிப்பதும் இந்த வீடுதான். ஒருவரின் ஜாதகத்தில் 10-ம் வீட்டில் சனியிருந்து சுபரால் பார்க்கப்பட்டால் ஒருவரின் வாழ்க்கை உயர்வு மெதுவாகவும், நிரந்தரமாகவும் இருக்கும். உயர்வு மெதுவாகத்தான் இருக்கும். சனி சுபரால் பார்க்கப் படாமல் இருந்தால், வலுவில்லாமலும் இருந்தால் மிகச் சாதாரணமான பதவியே வகிப்பர். உயர் நிலைக்கு வருவது கடினம்.

 

சூரியன் : சூரியன் ஒருவருக்கு நல்லவிதமாக அமைந்துவிட்டால் மதிப்பு, மரியாதை ஆகியனவெல்லம் கிட்டும். அரசாங்க உத்தியோகம் கிடைக்கும். ஏனெனில் அரசாங்கத்தைக் குறிப்பவர் அவர்தான். சூரியன் சம்மநதப் பட்டால் செய்யும் தொழிலில் மரியாதை அல்லது கெளரவம் கிட்டும். சூரியன் மேலதிகாரிகளுக்குக் காரகம் வகிப்பவர் அல்லவா? அவர்கள் துணையுடன் பதவி உயர்வு பெற்று முன்னேற முடியும். சூரியன் தொழிலில் நிரந்திரத்தைக் கொடுப்பவர். அரசியலுக்கும் இவர் காரகம் வகிப்பதனால் அரசியலில் இவர் முன்னேற முடியும். மற்றவர்கள் இவர்மேல் வைத்துள்ள நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்து கொள்வார்.

 

சந்திரன் : பொதுவாக சந்திரனானவர் நிலையில்லாத தன்மை கொண்டவர். அவர் எங்கு இருந்தாலும் மாற்றத்தைக் கொடுப்பார். அதையும் தவிர மக்கள் தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுப்பவர். நல்ல கிரகங்கள் சேர்க்கையோ அல்லது பார்வையோ இருப்பின் மக்கள் தொடர்பு காரணமாக மிகவும் பிரபலமானவராக இருப்பர். பாவர் சேர்க்கை பெற்றிருப்பின் பொதுவாழ்க்கையில் கெட்ட பெயரே வந்து சேரும். வியாபரத்தில் ஏற்றதாழ்வுகள் இருக்கும். தொழிலில் இருந்தாலும் வருமானத்தில் ஏற்றதாழ்வுகள் இருக்கும். அடிக்கடி பிரயாணம் செய்ய வேண்டியதுவரும். சந்திரன் சரராசியில் இருந்து 10-ம் வீட்டுடன் சம்மந்தப் பட்டால் தொழில் சம்மந்தமாகப் பிரயாணம் செய்ய வேண்டியது வரும். இதை நீர்க்கிரகம் என்பார்கள். நீர் சம்மந்தப்பட்ட தொழிலைக் கொடுப்பார். சிலர் கப்பல் சம்மந்தப்பட்ட தொழிலில் பணிபுரிவர்.

 

செவ்வாயானவர் தைரியத்தைக் குறிக்கும் கிரகம். போலீஸ், ராணுவம் போன்றவற்றில் தொழில் இருக்கும். தொழிற்சாலைகள், இயந்திரங்கள் போன்றவற்றையும் இவர் குறிப்பதால் இது சம்மந்தமான வேலையையும் இவர் கொடுப்பார். நெருப்புக்கும் இவர் அதிபதியாவதால் நெருப்பு சம்மந்தமான வேலையையும் இவர் கொடுப்பார். நிலம், வீடு போன்ற ஸ்திர சொத்துக்களுக்கும் இவர் அதிபதியாவதால் இது சம்மந்தமான வேலைகளிலும் இந்த ஜாதகர் ஈடுபடுவர். செவ்வாய் நன்கு இருக்கப் பிறந்தவர்கள் வீடு வாங்கி விற்பது போன்ற Real Estate - Business-ல் இருப்பார். செவ்வாய் வலுவற்று இருப்பவர்கள் வீட்டு வீலை செய்யும் தொழிலாளியாக இருப்பார்.

புதன் பத்தாம் வீட்டுடன் சம்மந்தப் பட்டால் கமிஷன் வியாபாரம், ஏஜென்சித் தொழில் ஆகியவற்றில் இருப்பார். புதன் அறிவு கூர்மையைக் குறிக்கும் கிரகம் அல்லவா? புத்திகூர்மையைக் கொண்டுள்ள தொழில்களில் எல்லாம் இவர் சிறந்து விளங்குவார். ஆலோசனைத் தொழில், ஜோதிடம், மாந்திரீகம் போன்றவற்ரில் இவர் சிறந்து விளங்குவர். புதன் இரட்டைக் கிரகம் அல்லவா? சிலருக்கு இரண்டுவிதமான தொழில் செய்ய முடியும். பொதுவாக புதன் 10-ம் இடத்துடன் சம்மந்தப் பட்டவர்கள் எஜமானராக இருப்பதைவிட ஒருவருக்குக் கீழ் இருப்பதையே விரும்புவார்கள்.

 

குரு ஒரு சுபக் கிரகம். அவர் 10-ம் வீட்டில் இருந்தால் புகழையும், பதவியையும் கொடுப்பார். அவர் தனகாரகன் அல்லவா? பணம் புழங்குகின்ற இடத்தில் வேலை கிடைக்கக் கூடும். பேங்குகள், கருவூலங்கள், போன்ற பணம் புழங்குகின்ற இடங்களில் வேலை கிடைக்கும். மிகவும் நியாயமான முறையில் சம்பாதிப்பார். குரு வேதாந்தம், மதங்களைக் குறிக்கிறது அல்லவா? இது சம்மந்தமான வேலையும் கிடைக்கும். பொதுவாக குருவானவர் உயர்ந்த பதவியைக் கொடுப்பார். இவருக்குப் பாவரின் சேர்க்கையோ அல்லது பார்வையோ இருப்பின் மிகச் சாதாரண பதவியிலேயே இருப்பார்.

 

சுக்கிரன் : கலைக்கு அதிபதியான கிரகம். 10-ம் வீட்டுடன் சம்மந்தப்பட்டால் கலைத் தொழில் சம்மந்தப் பட்ட துறையில் பணிபுரியலாம். வண்டி, வாகனங்களைக் குறிப்பதும் சுக்கிரன்தான். வாகனங்கள் சம்மந்தப்பட்ட துறையிலும் பணிபுரியலாம். சுக்கிரன் பெண்களுக்குக் காரகம் வகிப்பவர். சுபர்கள் சேர்க்கையோ அல்லது பார்வையோ பெற்றிருப்பின் பெண்களால் அனுகூலம் அடைவர். இரண்டாம் வீட்டுடனும் சம்மந்தப்பட்டால் தேனொழுகப் பேசி காரியத்தை முடிப்பர். அழகு சாதனங்களை குறிப்பவரும் அவரே. ஆக அழகு சாதனங்கள் சம்மந்தப் பட்ட தொழிலிலும் இருப்பர்.

நாம் இதுவரையில் 10-ம் வீட்டை தொழில் ஸ்தானம் என்றும், ஜீவன ஸ்தானமென்றும் கூறி வந்தோம். 10-ம் வீட்டில் என்னென்ன கிரகங்கள் இருந்தால் எப்படித் தொழில் அமையும் எனவும் பார்த்தோம். இந்த வீட்டைக் கர்மஸ்தானமென்றும் கூறுவார்கள். அதாவது தாயார், தகப்பனருக்குக் கர்மம் செய்யும் வீடாகும். எப்படி? 9-ம் வீடு தகப்பனாரைக் குறிக்கிறது அல்லவா? 10-ம் வீடு என்பது 9-ம் வீட்டிற்கு 2-ம் வீடு. 2-ம் வீடு மாரகத்தைக் கொடுக்குமன்றோ! ஆகவே இந்த வீடு தகப்பனாருக்கு மாரகத்தைக் கொடுக்கும் வீடாக அமைந்து விடுகிறது. அதேபோல் 4-ம் வீடு தாயாரைக் குறிக்கிறது அல்லவா? 10-ம் வீடு என்பது 4-ம் வீட்டிற்கு 7-ம் வீடல்லவா? 7-ம் வீடும் மாரக ஸ்தானமன்றோ! ஆக 10-ம் வீடு தாயாருக்கு மாரகஸ்தானமாக அமைந்து விடுகிறது. ஒருவருக்கு 10-ம் வீட்டிலுள்ள கிரகத்தின் தசையோ அல்லது புக்தியோ அல்லது 10-ம் வீட்டிற்குடையவனின் தசையோ அல்லது புக்தியோ நடக்கும் போது அவரின் தாயோ அல்லது தந்தையோ மரணமடையலாம். அப்போது அவருக்குக் கர்மம் செய்ய நேரம் வந்து விட்டது எனக் கூறுவார்கள். ஆக 10ம் இடம் ஜீவனத்தை மட்டும் குறிக்கவில்லை. தாய், தகப்பனாரின் மாரகத்தையும் அது குறிக்கிறது. ஆக ஒருவரின் 10-ம் வீட்டைக் குறிக்கின்ற கிரகங்களின் தசா, புக்திகளில் தாய் அல்லது தந்தையை இழக்க நேரிடும் எனத் தெரிந்து கொண்டீர்களல்லவா?

 

ஒருவருக்குப் "பதவி உயர்வு கிட்டுமா?" - என்ற கேள்வி எழலாம். அதற்கு 10-ம் வீட்டை மட்டும் வைத்துப் பதில் சொல்ல முடியாது. 2-ம் இடமான தன ஸ்தானம், 6-ம் வீடான தொழில் ஸ்தானம், 10-ம் வீடான ஜீவன ஸ்தானம், 11-ம் வீடான லாபஸ்தானம் ஆகியவற்றை வைத்துத்தான் கூறமுடியும். இந்த நான்கு வீட்டையும் குறிக்கின்ற கிரகங்களின் தசா, புக்திக் காலங்களில்தான் ஒருவருக்குப் பதவி, உயர்வோ அல்லது வேலையோ கிட்டும்.

 

10-ம் வீடென்பது 9-ம் வீட்டிற்கு 2-ம் வீடு என்று மேலே கூறி இருந்தோம். 2-ம் வீடு தனஸ்தானம் அல்லவா? ஆக தகப்பனாரின் பொருளாதாரம், பணவசதி, குடும்ப வாழ்க்கை ஆகியவற்றையும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம்.

பத்தாம் வீட்டைப் பற்றி ஓரளவிற்கு நாம் தெரிந்து கொண்டோம். இப்போது மீதமுள்ளவற்றைப் பார்ப்போம். முதலில் ஒருவரின் "தொழிலை நிர்ணயிப்பது எப்படி?" எனப் பார்ப்போம்.

 

10-ம் வீட்டிலுள்ள கிரகம், 10ம் வீட்டைப் பார்க்கும் கிரகம், 10-ம் வீட்டின் அதிபதி, 10-ம் வீட்டின் அதிபதி இருக்கும் நவாம்சாதிபதி ஆகியவற்றை வைத்துத்தான் ஒருவரின் தொழிலை நிர்ணயம் செய்ய முடியும். உதாரணத்திற்கு சில ஜாதகங்களை கீழே கொடுத்துள்ளோம். அவைகள் உங்களுக்கு மிக்க உதவியாக இருக்கும். ஜாதகத்தைக் குறித்துக் கொள்ளுங்கள்.

 

ராசி : இலக்கினம்-தனுசு; மகரம்-சூரியன், சந்திரன், புதன்; மீனம்-கேது; மேஷம்- குரு, சனி; கன்னி-ராகு; விருச்சிகம்- செவ்வாய்;

 

நவாம்சம் : இலக்கினம்-தனுசு; மகரம்-செவ்வாய்; மேஷம்-ராகு; ரிஷபம்-சூரியன்; கடகம் - சந்திரன்; சிம்மம் - சனி, புதன், குரு; துலாம் - கேது; விருச்சிகம் - சுக்கிரன்.

 

10-ம் வீட்டின் அதிபதியார்? புதன்; அவர் நவாம்சத்தில் சூரியனின் வீட்டில் இருக்கிறார்;

 

10-ம் வீட்டில் ராகு; ராகுவுக்கு சொந்த வீடு எதுவும் கிடையாது. ஆகவே வீட்டின் அதிபதியான புதனின் பலனைத்தான் கொடுப்பார். ஆக புதன், சூரியன் சார்ந்த தொழிலைத்தான் கொடுக்க முடியும்.

 

1. சூரியன் சம்மந்தப் பட்டதால் அரசு சம்மந்தமான துறையில் வேலை செய்ய முடியும். ஏனெனில் சூரியன் அரசுத்துறைகளுக்குக் காரகம் வகிப்பவர் அல்லவா? புதன் Accounts சம்மந்தமான தொழிலைக் கொடுப்பவர். ஆக புதனும் சூரியனும் சேர்ந்து இவரை அரசாங்கத்தில் Accounts சம்மந்தமான தொழிலைக் கொடுத்து இருக்கலாம்.

 

அல்லது

 

2. புதன் கமிஷன் தொழிலுக்கு அதிபதி. சூரியன் அரசாங்கத்திக் குறிப்பவர் அல்லவா? ஆக இவர் அரசாங்கம் சம்மந்தப்பட்ட சிறு சேமிப்பிலோ அல்லது பங்குகளிலோ வியாபாரம் செய்து அதற்குண்டான கமிஷன் பெறலாம்.

 

அல்லது

 

3. சூரியன் தன்வந்திரி என்றழைக்கப் படுகிறார். அவர் மருத்துவத் தொழிலுக்கு அதிபதி. புதன் எதையும் ஆராய்ந்து முடிவெடுக்கும் புத்தி கூர்மையைக்கொடுக்கின் றவர். ஆக இருவரின் சேர்க்கை இவரை ஒரு மருத்துவராக ஆக்கி இருக்கலாம்.

 

அல்லது

 

4. சூரியன் தங்கம், தாமிரம் போன்ற உலோகங்களுக்கு அதிபதி. ஆக இவர் தங்க வியாபாரமோ அல்லது தாமிர வியாபாரமோ செய்பவராக இருக்கலாம்.

 

இவ்வாறாக பலவிதமான தொழில்களைச் சொல்லலாம். ஆக ஒருவரின் தொழிலைக் கூறுவது என்பது மிகவும் கடினமான காரியம். உண்மையில் இவர் ஒரு அரசாங்க வங்கியில் பணி புரிந்தார். ஆக 10-ம் வீட்டிற்குடைய புதன், நவாம்சாதிபதி சூரியனுடன் சம்மந்தப்பட்டதால் அரசாங்க சம்மந்தமுடைய தொழில் செய்து வந்தார். வங்கித் தொழிலுக்கு வருவதற்கு முன்பு அரசாங்கப் பள்ளிகளில் கணித ஆசிரியராகத் தன்வாழ்க்கையைத் தொடங்கினார். புதன் கணிதத்திற்கும் அதிபதியல்லவா? ஆக இவர் அரசாங்கப் பள்ளிகளில் கணித ஆசிரியராகப் பணிபுரிந்தார். புதனும், சூரியனும் எப்படி இவர் ஜீவனத்தைக் கொடுத்தது பார்த்தீர்களா?

இன்னும் ஒரு ஜாதகத்தைக் குறித்துக் கொள்ளுங்கள்.

 

ராசி : இலக்கினம் - மகரம்; இலக்கினத்தில் கேது, சந்திரன்; கும்பத்தில் செவ்வாய்; கடகத்தில் சுக்கிரன், ராகு; சிம்மத்தில் சூரியன், புதன்; துலாத்தில் சனி; விருச்சிகத்தில் குரு;

 

நவாம்சம் : இலக்கினம்-மிதுனம்; இலக்கினத்தில் புதன், சந்திரன்; கன்னியில் சுக்கிரன், கேது; விருச்சிகத்தில் சூரியன்; தனுசில் செவ்வாய், சனி; மகரத்தில் குரு; மீனத்தில் ராகு.

 

இவர் தொழில் என்னவாக இருக்குமென உங்களால் யூகிக்க முடிகிறதா? 10-ம் வீட்டின் அதிபதி சுக்கிரன்; 10-ம் வீட்டில் சனி; 10-ம் வீட்டிற்குடைய சுக்கிரன் நவாம்சத்தில் கன்னியில்; கன்னிக்கு அதிபதி புதன். ஆக இவருக்கு சுக்கிரன், சனி, புதன் சம்மந்தப்பட்ட தொழில்தான் அமையும். சரி! பலவித சாத்தியக் கூறுகளைப் பார்ப்போம்.

 

1. சுக்கிரன் காரகம் வகிக்கும் தொழில்களான கலைத் தொழில், வாகனங்கள் சம்மந்தமான தொழில்கள், பெண்கள் உபயோகிக்கும் வாசனைத் திரவியங்கள், ஆகியவற்றில் வேலையில் இருக்கலாம். சுக்கிரன் ஜாதகத்தில் கடகத்தில் ஜலராசியில் இருக்கிறார். சுக்கிரன் வாகனக்களுக்கு அதிபதி; ஜலராசியில் இருப்பதால் ஜலம் சம்மநதப்பட்ட தொழிலில், அதாவது கப்பலில் இருக்கலாம். சுக்கிரன் கால்நடைகளுக்கு அதிபதி. அவர் ஜல ராசியில் இருப்பதால் நீர் சம்மந்தப்பட்ட அதாவது பால் வியாபாரத்தில் இருக்கலாம்.

 

சுக்கிரன் புதன் நவாம்சத்தில் இருப்பதால் சுக்கிரனும், புதனும் சம்மந்தப்பட்ட தொழிலில் இருக்கலாம். சுக்கிரன் ராசியில் சர ராசியில் இருக்கிறார். சரம் என்றால் நகர்ந்து கொண்டே இருக்க வேண்டுமல்லவா? வாகனங்கள் நகர்ந்து கொண்டே இருப்பன அல்லவா? சுக்கிரன் வாகனத்திற்குக் காரகம் வகிப்பதனாலும், புதன் கணக்கு மற்றும் Accounts களுக்குக் காரகம் வகிப்பதனாலும் இவர் Transport சம்மந்தமான தொழிலில் கணக்கராக இருக்கலாம்.

10-ம் இடத்தில் சனி. சனி பூமியில் புதைந்து இருக்கும் கனிமங்களைக் குறிக்கிறது. சுக்கிரன் ஜலராசியில் இருப்பதனால் இவர் Petrol போன்ற திரவியங்கள் சம்மந்தப்பட்ட தொழிலில் இருக்கலாம். அதாவது Madras Refineries, Indian Oil Corporation போன்ற நிறுவனங்களில் பணிபுரியலாம்.

 

இவ்வாறு பல தொழில்கள் நமக்குக் கிடைப்பதால் ஒருவரின் தொழிலைத்துல்லியமாகக் கூறுதல் மிகவும் கடினம். இதற்கு அனுபவம்தான் கைகொடுக்க வேண்டும். மேலா கூறிய ஜாதகத்தில் அவர் Transport Department - ல் கணக்கராகப் பணிபுரிகிறார்.

 

இந்த ஜாதகத்திக் குறித்துக் கொள்ளுங்கள்.

 

ராசி : சிம்ம இலக்கினம்; இலக்கினத்தில் குரு, சந்திரன்; 3-ம் வீட்டில் அதாவது துலாத்தில் செவ்வாய்; 4-ம் வீட்டில் அதாவது விருச்சிகத்தில் சூரியன், சனி, புதன், ராகு; 5-ல் அதாவது தனுசில் சுக்கிரன்; ரிஷபத்தில் அதாவது 10-ல் கேது.

 

நவாம்சம் : இலக்கினம் - ரிஷபம்; மிதுனத்தில் குரு; கடகத்தில் சனி; சிம்மத்தில் சுக்கிரன், கேது. 7-ம் வீட்டில் அதாவது விருச்சிகத்தில் சந்திரன்; மகரத்தில் சூரியன், புதன், செவ்வாய்; 10-ல் அதாவது கும்பத்தில் ராகு.

 

இவர் தொழிலக் கூற முடியுமா? 10-ம் வீட்டு அதிபது சுக்கிரன். அவர் நவாம்சத்தில் சூரியனின் வீட்டில் இருக்கிறார். ஆக சூரியன், சுக்கிரன் சம்மந்தப் பட்ட தொழிலாகத்தான் இருக்க வேண்டும். சூரியன் தனவந்த்ரி என்றழைக்கப் படுகிறார். அதாவது மருத்துவத்திற்கு அதிபதி. இந்த ஜாதகர் ஒரு மருத்துவர். மருத்துவத்தில் பல துறைகள் இருக்கிறது அல்லவா?. இவர் எந்தத் துறையைச் சேர்ந்தவர் ? 10-ம் வீட்டிற்கதிபதி சுக்கிரன்; இவர் பெண்களைக் குறிக்கிறார். சுக்கிரன் 5-ம் வீட்டைக் குறிக்கிறது. 5-ம் வீடு மகப்பேற்றைக் குறிக்கிறது அல்லவா? இவர் மகப்பேரு பார்க்கும் மருத்துவர். என்ன விளக்கம் புரிகிறதா? இவ்வாறாக ஒவ்வொரு ஜாதகத்தையும் ஆராய வேண்டும். இத்துடன் இதை நிறுத்திக் கொள்வோம்.

நம்மிடம் பலர் தொழில் சம்மந்தமான கேள்விகளைக் கேட்ப்பதுண்டு. அத்தகைய கேள்விகளை உங்கள் முன் வைத்துவிட்டு அதற்கு பதிலும் அளிக்கப் போகின்றோம்.

 

கேள்வி : ஒருவர் துணி வியாபாரம் செய்ய எத்தகைய கிரக நிலைகள் இருக்க வேண்டும்?

 

பதில் : சுக்கிரன் துணிகளுக்குக் காரகன். புதன் வியாபரத்திற்கு அதிபதி. ஆக புதனும், சுக்கிரனும் 10-ம் வீட்டுடன் சம்மந்தப்பட்டவர்களுக்கு துணி வியாபாரம் அமையும்.

 

கேள்வி : கட்டிடம் Contract எடுத்துத் தொழில் செய்ய எத்தகைய கிரக நிலைகள் இருக்க வேண்டும்?

 

பதில் : கட்டிடங்களுக்கு அதிபதி செவ்வாய். புதன் Contract அல்லது Agency-க்கு அதிபதி. ஆக செவ்வய்-புதன் சேர்க்கை இந்தத் தொழிலுக்குத் தேவை.

 

கேள்வி :தையல் தொழில் செய்யத் தேவையான கிரகங்கள் என்ன?

 

பதில் : இதில் மூன்று வித கிரக் சேர்க்கை இருக்க வேண்டும். துணிகளுக்கு சுக்கிரன் காரகம் வகிக்கிறார். செவ்வாயானவர் மிஷின் சம்மந்தப் பட்ட தொழிலைக் குறிக்கிறார். சனி உடல் வருத்திச் செய்யும் தொழிலைக் குறிப்பார். ஆகவே சுக்கிரன், செவ்வய், சனி சம்மந்தப் பட்டவர்கள் தையல் சம்மந்தமான தொழிலில் இருப்பார்கள்.

 

கேள்வி :சுறுக்கெழுத்தாளராக என்ன சேர்க்கை இருக்க வேண்டும்?

 

பதில் : புதன் புத்தகங்களையும், Clerical work - களையும் குறிக்கிறது. செவ்வாய் மெஷினரிகளைக் குறிக்கிறது. சனி எதையும் சுறுக்கமாகத் தெரிவிப்பதைக் காட்டுகிறது. Short-hand என்பதே எதையும் சுறுக்கமாகத் தெரிவிப்பது அல்லவா? ஆக புதன், செவ்வய், சனி சம்மந்தப்பட்டால் ஒருவர் சுறுக்கெழுத்தாளராக முடியும்.

 

கேள்வி : போலீஸ் அல்லது ராணுவத்திற்கு ஏந்த கிரக சேர்க்கை இருக்க வேண்டும்?

 

பதில் : செவ்வாய். அவர்தான் ஒருவருக்கு தைரியத்தைக் கொடுப்பவர். ஒருவரின் ஜீவனஸ்தானத்துடன் செவ்வாய் சம்மந்தப் பட்டால்தான் ஒருவர் போலீஸ் ஆக முடியும். செவ்வாயுடன் சுக்கிரனும் சம்மந்தப் பட்டால் ஒருவர் போக்குவரத்துத் துறையைச் சேர்ந்தவராக இருப்பார். ஏனெனில் சுக்கிரன் வாகனங்களுக்குக் காரகம் வகிப்பவர். குரு சம்மந்தப் பட்டால் சட்டம், ஒழுங்கைப் பராமரிப்பவராக இருப்பார். குரு சட்டம், ஒழுங்குகளுக்குக் காரகம் வகிப்பவர் அல்லவா!

 

கேள்வி : விவசாயக் கருவிகளை விற்பனை செய்ய என்ன கிரகச் சேர்க்கை இருக்க வேண்டும்?

பதில் : விவசாயத்திற்குக் காரகம் வகிப்பவர் சுக்கிரன். மெஷினரிகளுக்குக் காரகம் வகிப்பவர் செவ்வாய். ஏஜென்சிகளுக்குக் காரகம் வகிப்பவர் புதன். இந்த மூவர் சேர்க்கை இருக்க வேண்டும்.

 

கேள்வி : "எவர் சில்வர்" பாத்திரங்களை விற்பனை செய்ய என்ன கிரகச் சேர்க்கை இருக்க வேண்டும்?

 

பதில் : துருப்பிடிக்காத இரும்புதான் எவர்சில்வர் என்பது. இரும்பைக் குறிப்பது சனி. சுத்தம் செய்து பொலிவுபடுத்துதலைக் குறிப்பது சுக்கிரன். ஆக இந்த இரண்டு கிரகச் சேர்க்கைதான் எவர்சில்வர் வியாபாரத்தைக் குறிக்கிறது.

 

கேள்வி : இனிப்புப் பண்டங்களை வியாபாரம் செய்ய எந்த கிரகச் சேர்க்கை இருக்க வேண்டும்?

 

பதில் : இனிப்புக்களுக்குக் காரகம் வகிப்பவர் சுக்கிரன். அவர் ஜீவன ஸ்தானத்துடன் சம்மந்தப்பட வேண்டும்.

 

கேள்வி :பெட்ரோல் சம்மந்தமான தொழிலைக் குறிப்பது எந்த கிரகம்?

 

பதில் : சனியானவர் பூமிக்கு அடியில் இருக்கும் பொருள்களைக் குறிக்கிறார். பெட்ரோல் என்பது நீர்சம்மந்தமானது அல்லவா? ஆக நீர்க் கிரகமான சந்திரனும் சம்மந்தப்பட்டு இருக்க வேண்டும். சுத்தீகரிக்கப்பட்ட எண்ணெய் அல்லவா பெட்ரோல் என்பது; ஆக சுக்கிரனும் சேர்ந்திருக்க வேண்டும்.சனி-சந்திரன் -சுக்கிரன் சேர்ந்ததுதான் பெட்ரோல் என்பது.

 

கேள்வி :ஒருவர் பத்திரிகை நடத்த வேண்டுமென்றால் அதற்கு என்ன கிரகச் சேர்க்கை இருக்க வேண்டும்?

 

பதில் : ஒருவர் அச்சு ஆபீஸ் வைத்து பத்திரிகை நடத்தலாம். பத்திரிகைகளுக்குக் காரகம் வகிப்பவர் புதன். அச்சு அடிக்கிற மெஷினைக் குறிப்பது செவ்வாய். ஆக செவ்வாய், புதன் சேர்க்கை அச்சு அடிக்கும் மெஷின் வைத்து பத்திரிகை நடத்துபவர்களைக் குறிக்கிறது. ஒருவர் எந்த மாதிரியான பத்திரிகை நடத்துவர் என்று கூடக் கூறலாம். செவ்வாய், புதனுடன் சுக்கிரன் சம்மந்தப் பட்டால் பெண்கள் சம்மந்தமான அல்லது சினிமா சம்மந்தமான பத்திரிகை நடத்தலாம். இல்லை ஆபாசப்புத்தகங்கள் கூட வெளியிடலாம். சூரியன் சம்மந்தப்பட்டால் அரசியல் அல்லது மருத்துவப் பத்திரிகை நடத்தலாம். குருவாக இருந்தால் குழந்தைகள் அல்லது ஆன்மீகப் பத்திரிகை அல்லது சட்டம் சம்மந்தமான பட்த்திரிகை நடத்தலாம். பாடப் புத்தகங்கள் அல்லது ஜோதிடப் பத்திரிகை நடத்துவதற்கு புதனின் சேர்க்கையும் இருக்க வேண்டும். சனி சேர்ந்தால் தொழிலாளர் சம்மந்தமான பத்திரிகை நடத்தலாம்.

 

கேள்வி : தோல் வியாபாரம் செய்ய எந்த கிரகச் சேர்க்கை இருக்க வேண்டும்?

பதில் :கால் நடைகளைக் குறிப்பது சுக்கிரன். தோலைக் குறிப்பது சனி. தோல்பதனிடும் இயந்திரங்களைக் குறிப்பது செவ்வாய். ஆக இந்த மூன்றின் சேர்க்கைதான் ஒருவருக்கு தோல் பதனிடும் வேலையைக் கொடுக்க முடியும்.

 

கேள்வி : இப்போது எல்லோரும் Engineering College -ல் சேர்ந்து படிக்கிறார்கள். அப்படிப் படிக்க என்ன கிரகச் சேர்க்கை இருக்க வேண்டும்?

 

பதில் :பொதுவாக Engineering என்றாலே புதன்தான் அதற்குக் காரகம் வகிக்கிறார். Mechanical Engineering என்றால் புதனுடன் செவ்வாயும் சேர வேண்டும். Marine Engineering என்றால் புதன், செவ்வாயுடன் சந்திரனும் சேர வேண்டும்.

 

நாம் மேலே பல தொழில்களுக்குண்டான கிரகச் சேர்க்கையைக் கூறி இருந்தோம். உங்களுக்கு பல தொழில்களை எப்படி கிரகச் சேர்க்கை மூலம் தேர்ந்தெடுப்பது என்பதை விளக்குவதற்காகவே கூறி இருந்தோம். ஒருவரின் தொழிலைக் கூறுவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஏனெனில் ஒரு கிரகத்துக்குப் பல காரகத்து வங்கள் இருப்பதால் அதைக் கூர்ந்து கவனித்துக் கூற வேண்டும். இல்லையென்றால் நகைப்புக்குள்ளாவீர்கள்.

 

இப்போது ஒரு ஜாதகத்தைக் குறித்துக் கொள்ளுங்கள்:

 

ராசி : தனுர் இலக்கினம்; இலக்கினத்தில் சுக்கிரன்; 2-ம் வீட்டில் சந்திரன்; 4-ம் வீட்டில் கேது; 5-ம் வீட்டில் செவ்வாய்; 10-ம் வீட்டில் ராகு; 11-ம் வீட்டில் குரு; 12-ம் வீட்டில் சூரியன், புதன், சனி;

 

நவாம்சம் : ரிஷப இலக்கினம்;இலக்கினத்தில் சுக்கிரன்; 2-ல் குரு;4-ல் சிம்மத்தில் சந்திரன், ராகு; 6-ல் புதன்; 8-ல் செவ்வாய்;10-ல் கேது; 11-ல் சூரியன், சனி;

 

இவர் என்ன தொழில் என்று கூற முடியுமா? 10-ம் வீட்டிற்கு அதிபதி புதன்; அவர் சுக்கிரன் நவாம்சத்தில் இருக்கிறார்; புதன் ராசியில் செவ்வாய் வீட்டில் இருக்கிறார். ஆக புதன், செவ்வாய், சுக்கிரன் இவருக்கு தொழிலைக் கொடுக்க வேண்டும். நாம் சாத்தியக் கூறுகளைப் பார்ப்போம்.

 

1. புதன் Engineering கல்விக்கு அதிபதி; கூட செவ்வாயும் சேர்ந்து இருப்பதால் இவர் ஒரு Mechanical Engineer- ஆக இருக்கக் கூடும். சுக்கிரனும் சேர்ந்து இருப்பதால் போக்குவரத்து சம்மந்தமான துறையில் இவர் Engineer ஆக இருக்கக்கூடும்.

 

2. புதன் புத்தகங்களுக்கு அதிபதி; அவர் செவ்வாய் வீட்டில் இருப்பதால் புத்தகம் அச்சிடும் வேலையில் இருக்கலாம்; சுக்கிரனும் சம்மந்தப் பட்டுள்ளதால் பெண்கள் சம்மந்தமான புத்தக வெளியீடுகளிலோ அல்லது சினிமா சம்மந்தப் பட்ட புத்தகங்களிலோ இருக்கலாம்; இவ்வாறு பல தொழில்களைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். இருப்பினும் இவர் எங்கு வேலை பார்த்தார் என்று சொல்லிவிடுகிறோம்.

 

புதன் அதிபதியாக இருக்கும் Accounts - தொழிலில் B.Com பட்டதாரியானார். சுக்கிரன் சம்மந்தப்பட்ட Fertiliser-களைத் தயாரிக்கும் அலுவலகத்தில் பணிபுரிந்தார். ஒருகிரகம் பல தொழில்களைக் குறிப்பதால் ஒருவர் தொழிலைக் குறிப்பிடுவது மிக சிரமமான காரியம். அனுபவம்தான் எல்லாவற்றையும் கற்றுத் தர வேண்டும்.

ஒருவர் எந்த மாதிரியான தொழில் செய்ய முடியும் என்பதைப் போன பாடத்தில் பார்த்தீர்கள். பலவகைப் பட்ட கிரகங்களின் சேர்க்கையால் எந்தத் தொழில் செய்ய முடியும் என்பதையும் விளக்கி இருந்தோம். ஒருவருக்கு எப்பொழுது பதவி உயர்வு கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம். பதவி உயர்வு கிடைக்க நாம் 2, 6, 10 மற்றும் 11-ம் வீடுகளை ஆராய வேண்டும். இந்த வீட்டைக் குறிக்கும் கிரகங்களால்தான் பதவி உயர்வைக் கொடுக்க முடியும். ஏன்? இரண்டாம் வீடென்பது பண வரவைக் குறிக்கிறது. பதவி உயர்வென்றால் பண வரவும் இருக்க வேண்டுமல்லவா? பணவரவைக் குறிப்பது 2-ம் வீடல்லவா? ஆக இரண்டாம் வீட்டைக் குறிக்கின்ற கிரகங்களின் தசாபுக்திக் காலத்தில் ஒருவருக்குப் பதவி கிடைக்கும். 6-ம் வீடென்பது நாம் செய்யும் தொழிலைக் குறிக்கிறது. நாம்செய்யும் தொழிலிலிருந்துதானே நாம் பதவி உயர்வை எதிர்பார்க்கிறோம். ஆக நாம் 6-ம் வீட்டையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.10-ம் வீடென்பது ஜீவனஸ்தானம். ஜீவனமென்பது தொழிலாக இருக்கலாம். அல்லது உத்தியோகமாக இருக்கலாம். அதில் உயர்வு பெற வேண்டுமென்றால் அந்த வீட்டைக் குறிக்கின்ற கிரகங்களின் தசா, புக்திக் காலங்களில் தானே முடியும். ஆக 10-ம் வீட்டையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். 11-ம் வீடென்பது லாப ஸ்தானம். அதாவது நம் ஆசைகளை நிறைவேற்றிக் கொடுக்கின்ற வீடாகும். ஆக 11-ம் வீட்டையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த நான்கு வீடுகளைக் குறிக்கும் தசாபுக்தி காலங்களில்தான் ஒருவர் பதவி உயர்வு பெற முடியும்.

 

6-ம் வீடென்பது, ரண, ரோகம், வியாதி, கடன் ஆகியவற்றைத்தான் குறிக்குமென்று என்று சிலர் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். அது தவறு. 6-ம் வீடு ஒருவருக்கு வெற்றியையும் கொடுக்கும் வீடாகும். 7-வது வீடு நம்முடன் போட்டி போடுபவரைக் குறிக்கிறது. அவருக்கு தோல்வியைக் கொடுப்பது 12-ம் வீடல்லவா?

 

7-க்குப் 12-ம் வீடு எது? 6-ம் வீடல்லவா? ஆக ஒருவர் 6-ம் வீடு குறிக்கின்ற தசாபுக்திக் காலங்களில் எடுத்த முயற்சியில் வெற்றி பெற முடியும். உதாரணத்திற்கு ஒரு ஜாதகத்தைக் குறித்துக் கொள்ளுங்கள்.

 

மிதுன இலக்கினம்.

கடகத்தில் சூரியன், சுக்கிரன்; சிம்மத்தில் புதன்;

துலாத்தில் ராகு;

தனுசில் சந்திரன்;

மகரத்தில் செவ்வாய்;

மீனத்தில் குரு;

மேஷத்தில் சனி, கேது;

இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு செவ்வாய் தசை அப்போதுதான் ஆரம்பமாயிற்று; செவ்வாய் 6-ம் வீட்டிற்கு அதிபதி; 8-ம் வீட்டில் இருக்கிறார்; ஆகக் கடனால் கஷ்டப்படுவார் என்று பலர் ஆரூடம் கூறினார்கள். அப்பொழுது அவருடைய கம்பெனியில் பதவி உயர்வுக்கு பலரைப் பரிசீலனை செய்தார்கள். இவரைக் காட்டிலும் அனுபவத்தில் அதிகமுள்ள அதிகம் படித்த பலர் இருக்க இவரைத் தேர்வு செய்தார்கள்.

 

அதற்கான காரணங்களைப் பார்ப்போம். செவ்வாயானவர் 6-ம் வீட்டிற்கும் 11-ம் வீட்டிற்கும் அதிபதி. 6-ம் வீடு என்பது நாம் மேலே கூறியதுபோல் மற்றவருக்குத் தோல்வியையும், ஜாதகருக்கு வெற்றியையும் கொடுக்கும் வீடல்லவா? 6-ம் வீடென்பது செய்யும் தொழிலைக் குறிக்கும் வீடல்லவா? 11-ம் வீடு லாபத்தைக் குறிக்கும் வீடு. ஆக செவ்வாய் தசை சுய புக்தியில் இவருக்குத் தொழிலில் பதவி உயர்வைக் கொடுத்தது. பார்த்தீர்களா 6-ம் வீடு எப்படித் தொழிலில் வெற்றியைக் கொடுத்தது என்று! அதேபோன்று 10-ம் இடத்தைக் குறிக்கின்ற தசா, புக்திக் காலங்களில் ஒருவருக்குப் பதவி உயர்வு கிட்டும்.

 

5ம் வீட்டையும் 9-ம் வீட்டையும் திரிகோண ஸ்தானமென்று கூறுவார்கள். ஆகையால் இந்த வீடுகள் மிக உயர்வாகக் கருதப்படுகின்றன. ஆனால் செய்யும் தொழிலைப் பொருத்தவரையில் 5-ம் வீடும் 9-ம் வீடும் நன்மை பயக்காதவை. ஏனெனில் 5-ம் வீடு என்பது 6-ம் வீட்டிற்குப் 12-ம் வீடு; 9-ம் வீடென்பது 10-ம் வீட்டிற்குப் 12-ம் வீடு. எந்த வீட்டிற்கும் அதற்குப் 12-ம் வீடு நன்மை பயக்காதவை அல்லவா!உதாரணத்திற்கு கீழே கொடுத்துள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.

 

ராசி :

 

தனுசு இலக்கினம்;

4-ம் வீடான மீனத்தில் செவ்வாய், கேது;

6-ம் வீடான ரிஷபத்தில் குரு, சனி;

7-ம் வீடான மிதுனத்தில் சூரியன், புதன்;

8-ம் வீடான கடகத்தில் சுக்கிரன்;

9-ம் வீடான சிம்மத்தில் சந்திரன்;

10-ம் வீடான கன்னியில் ராகு;

 

நவாம்சம்:

 

இலக்கினம்: மேஷம்;

2-ம் வீடான ரிஷபத்தில் குரு;

4-ம் வீடான கடகத்தில்

கேது, சுக்கிரன்;

5-ம் வீடான சிம்மத்தில் செவ்வாய்;

7-ம் வீடான துலாத்தில் புதன்;

8-ம் வீடான விருச்சிகத்தில் சனி, சந்திரன்;

10ம் வீடான மகரத்தில் ராகு;

11ம் வீடான கும்பத்தில் சூரியன்.

 

ஜெனன காலத்தில் இருப்பு தசை சுக்கிரன்: 3 வருஷம்; 2 மாதம் 7 நாள்

இவர் ஒரு Chartered Accountant. கல்விக்கு அதிபதியாகிய புதன் தன் சொந்த வீட்டில் சூரியனுடன் இருப்பது இவருக்கு ஒரு நல்ல கல்வியைக் கொடுத்துள்ளது. 4-ல் செவ்வாய். பூமிகாரகனாகிய செவ்வாய், ஸ்திர சொத்துக்களைக் குறிக்கும் 4-ம் வீட்டில் இருப்பதால் இவருக்கு சொந்தத்தில் வீடு உள்ளது. 8-ம் வீட்டில் சுக்கிரன். 8-ம் வீடு என்பது இவருடைய வாழ்க்கைத் துணைவியின் தன ஸ்தானம் அல்லவா! மனைவியினுடைய தன ஸ்தானத்தில் சுக்கிரன் இருப்பதால் ஒரு வசதியான வீட்டிலிருந்து ஒரு பெண் மனைவியாக வாய்த்தாள். 10-வது வீட்டின் அதிபதியான புதன் சூரியனுடன் சேர்ந்து இருப்பதால் இவர் தொழிலில் சேரும் போதே ஒரு அதிகாரியாகவே சேர்ந்தார். Sun Gives authority and Power. இதெல்லாம் இவருடைய ஜாதகத்தைப் பற்றிய விளக்கங்கள். இவருக்கு ராகு தசை, செவ்வாய் புக்தி நடந்து கொண்டிருந்த போது இவர் வேலையை இழக்க நேரிட்டது. ராகு 10-ல் இருந்தாலும் 9-ம் வீட்டிற்குடைய சூரியனின் சாரத்தில் அதாவது உத்திர நட்சத்திரத்தில் இருக்கிறார். புக்தி நாதனாகிய செவ்வாய் 5ம் வீட்டிற்கும், 12-ம் வீட்டிற்கும் அதிபதி. ராகு 9-ம் வீட்டுப் பலனையும், செவ்வாய் 5-ம் வீட்டுப் பலனையும் கொடுத்து விட்டார்கள். நாம் மேலே கூறியதுபோல் 9-ம் வீடும், 5-ம் வீடும் செய்கின்ற தொழிலுக்கு எதிர் மறையான பலனைக் கொடுக்கக் கூடிய வீடுகள் அல்லவா? ஆகவே அவர் தன்னுடைய வேலையை இழக்க நேரிட்டது. எப்படி 5-ம் வீடும், 9-ம் வீடும் வேலை செய்கின்றனவென்று பார்த்தீர்களா?

 

இதைப்போல் பல ஜாதகங்களை நம்மால் உதாரணம் காட்ட முடியும். அவைகளைப் பற்றி விளக்கமாகப் "பலன் சொல்வது எப்படி?" என்று எழுதும் போது உதாரணமாக அளிப்போம். நாம் இப்போது 12- பாவங்களையும் பற்றி விளக்கமாக எழுதி வருகிறோம். இதை முடித்தபின்பு பலன் எப்படிச் சொல்வது என்று எழுதப் போகின்றோம். அப்போது இதைப்போல் பல ஜாதகங்களை விளக்கமாக எடுத்துக் கொண்டு எழுதுவோம். 5-ம் வீடும் 9-ம் வீட்டினுடைய மறு பக்கத்தைத்தான் நாம் மேலே எழுதியுள்ளோம்.

நாம் இதுவரையில் எந்தெந்த கிரகச் சேர்க்கை இருந்தால் எந்த மாதிரியான தொழில் அமையும் என்றும், பதவி உயர்வு எப்போது வரும் என்றும், பதவிக்கு எப்போது பங்கம் வரும் என்றும் எழுதி இருந்தோம். நீங்களும் ஓரளவிற்குப் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறோம். சிலருக்கு இரண்டுவிதமான வருமானம் வரும். அதாவது ஒரு தொழிலில் இருப்பார். மாலை நேரங்களில் அல்லது நேரம் கிடைக்கும்போது வேறு வேலை செய்வர். சிலர் வேலை செய்து கொண்டே L.I.C Agent, அல்லது அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள சிறு சேமிப்புத் திட்டங்கள் ஆகியவற்றிற்கு Agent ஆக இருப்பர். மருத்துவரை எடுத்துக் கொள்ளுங்கள். அரசாங்க மருத்துவ மனைகளில் மருத்துவராக இருந்து அரசாங்க ஊதியம் பெறுவர். காலை அல்லது மாலையில் தனிப்பட்ட முறையில் மருத்துவம் பார்த்து சம்பாதிப்பர். இந்த மாதிரி சம்பாதிக்க Professional - ஆகப் படித்து இருக்க வேண்டும். ஒரு டாக்டர் அல்லது Engineer அல்லது வக்கீலால் மட்டுமே இவ்வாறாக சம்பதிக்க இயலும். சிலர் வேலையில் இருந்துகொண்டே பகுதி நேரத்தில் வேறொரு இடத்தில் கணக்கெழுதிப் பணம் சம்பாதிப்பர். இவ்வாறு இரண்டு விதவருமானத்தைத்தான் இரட்டை வருமானம் என்று கூறுகிறோம். சிலரின் மனைவி வேலை பார்த்து சம்பாதிப்பர். இதுவும் ஒரு விதத்தில் இரட்டை வருமானம்தான். இவ்வாறாக இரண்டு வித சம்பாதியத்திற்கு எப்படிப்பட்ட கிரக அமைப்பு இருக்க வேண்டுமென்பதைப் பார்ப்போம்.

 

புதனுக்கு இரட்டைக் கிரகமென்று பெயர். உபய ராசிகளான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவைகளுக்கு இரட்டை ராசிகளென்று பெயர். புதன் வருமானத்தைக் கொடுக்கக்கூடிய 2-ம் வீடு அல்லது 10-ம் வீட்டுடன் சம்மந்தப்பட்டு இருப்பாரேயாகில் அவருக்கு இரட்டை வருமானத்திற்கு யோகமுண்டு. உதாரணத்திற்கு ஒரு ஜாதகத்தைக் குறித்துக் கொள்ளுங்கள். புதன் எதையும் இரண்டாகக் கொடுக்கக் கூடியவர்.

 

தனுர் இலக்கினம்;

இலக்கினத்தில் சூரியன், புதன்;

3-ல் அதாவது கும்பத்தில் குரு;

மீனத்தில் சனி;

மேஷத்தில் கேது;

கடகத்தில் சந்திரன்;

துலாத்தில் செவ்வாய், ராகு;

12-ல் சுக்கிரன்.

 

தனுர் இலக்கினத்திற்கு 7-ம் வீட்டின் அதிபதி புதன்; அதாவது அவர் மனைவியைக் குறிப்பது புதன்; அவரே 10-ம் வீட்டிற்கும் அதிபதியாகி இலக்கினத்தில் இருக்கிறார். இவர் மனைவி இவர் வேலை பார்க்கும் அலுவலகத்திலேயே பணி புரிகிறார். ஆக இவருக்கு இரட்டைக் கிரகமான புதன் இரட்டை வருமானத்திக் கொடுத்து விட்டார்.

இன்னும் ஒரு ஜாதகத்தை குறித்துக் கொள்ளுங்கள்.

 

மிதுன இலக்கினம்;

கன்னியில் ராகு;

10-ல் சந்திரன், கேது;

11-ல் சூரியன், புதன், குரு, சனி;

12-ல் செவ்வாய், சுக்கிரன்;

 

இவருக்கு 7, 10-க் குடையவன் குரு லாப ஸ்தானமான மேஷத்தில்; குருவுடன் புதன்; ஆக இவருக்கும் மனைவி மூலமாக வருமானம் உண்டு. ஆக இவருக்கும் இரட்டை வருமானம் கிடைக்கிறது. இதுவரையில் மனைவி மூலமாக வருமானம் வருபவரின் ஜாதகங்களைப் பார்த்தோம்.

 

சிலர் அரசாங்கத்தில் வேலை பார்ப்பர். சம்பளம் என்று மாதம் பிறந்தால் வாங்குவர். மேஜைக்கு அடியிலும் தினமும் பணம் வாங்குவர். இதுவும் ஒரு வகை வருமானம்தானே. நிரந்தரமான சம்பளம். அதைத்தவிர தினமும் மேல் வரும்படி. ஆக இரண்டு வகையில் வருமானம். இவருக்கு எப்படிப் பட்ட கிரக அமைப்பு இருக்க வேண்டும்? 10-ம் வீடு என்பது ஜீவனஸ்தானம் ஆகும். 2-ம் வீடு தன ஸ்தானம் ஆகும். 6-ம் வீடு நீங்கள் செய்யும் தொழிலைக் குறிக்கிறது. இந்த மூன்று வீடுகளில் ஒன்றுடன் சனி சம்மந்தப்பட்டு இருப்பர். சனிதான் எதையும் ரகசியமாகச் செய்பவராயிற்றே! மேஜைக்கு அடியிலும் வாங்க வேண்டுமென்றால் ரகசியமாகத்தானே வாங்க வேண்டும். ஆக சனி இந்த வீடுகளுடன் சம்மந்தப்பட்டு இருப்பர். சனிமட்டும் போதுமா? போதாது. இந்த வீடுகளுடன் இரட்டை ராசிகளான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய ராசிகளோ அல்லது இரட்டை ராசியான புதனோ சம்மந்தப்பட்டு இருக்க வேண்டும். உங்களுக்குத் தெரிந்தவர்கள் இந்த மாதிரியான வருமானம் உள்ளவர்கள் இருப்பார்கள். அவர்கள் ஜாதகத்தை வாங்கிப் பாருங்கள். நாம் மேலே கூறியபடி கிரக நிலகள் இருக்கின்றனவா என்று பாருங்கள். உண்மை விளங்கும்.

 

நம்முடைய வாசகர்களில் ஒருவர் திடீரென்று ஒரு கேள்வி கேட்டார். நீங்கள் 6-ம் வீடு ரணம், ரோகம், வியாதி, கடன், செய்யும் உத்தியோகம், மனவியிடமிருந்து பிரிந்து இருத்தல், போட்டியில் வெற்றி பெறுதல் ஆகியவற்றைக் குறிக்கிறது என்று கூறுகின்றீர்கள். ஒருவருக்கு 6-ம் வீட்டு அதிபதியின் தசை நடக்கிறது எனக் கொள்ளுங்கள். இதில் எது நடக்கும்? அவர் உடல் நிலை பாதிக்கப் படுமா? வேலை கிடைக்குமா? இல்லை போட்டியில் வெற்றி பெறுவாறா? இல்லை மனைவியுடன் சண்டை போட்டுக் கொண்டு Divorce செய்வாறா? எப்படிப் பலன் சொல்வது? எனக் கேட்டார்.

 

மிகவும் நியாயமான கேள்வி? நாம் பதில் சொல்லியே தீர வேண்டும். ஒருவருக்கு 6-ம் வீட்டின் அதிபதி தசையோ அல்லது 6-ல் உள்ள கிரகத்தின் தசையோ நடக்கிறது எனக்கொள்வோம். தசை முழுவதும் உடல் நிலை பாதிக்காது. இலக்கினத்தைக் குறிக்கும் கிரகத்தின் புக்தியோ அல்லது இலக்கினத்தில் உள்ள கிரகத்தின் புக்தியோ நடக்க வேண்டும். அப்போதுதான் உடல் நிலை பாதிக்கப்படும்.

இலக்கினம் என்பது ஒருவரின் உடலைக் குறிக்கிறது அல்லவா? அப்போது உடல் நிலை பாதிக்கப்படும். உதாரணமாக ஒருவருக்குக் கன்னியா இலக்கினம் எனக்கொள்ளுங்கள். 6-ம் வீட்டிற்கு அதிபதியான சனியின் தசை நடைபெறுகிறது எனக்கொள்ளுவோம். 19-ஆண்டுகளுமா உடல் நிலை பாதிக்கப்படும். புதனானவன் இலக்கினாதிபதி. ஆக புதன் புக்தியில் உடல் நிலையில் பாதிப்பு இருக்கும். அப்போது உடல் நிலை குன்றும். இலக்கினத்தில் வேறு ஏதாவது கிரகம் இருந்தாலும், உதாரணமாக கேது இருக்கிறது எனக் கொள்ளுங்கள். கேது புக்தியிலும் உடல்நிலையில் பாதிப்பு இருக்கும். அதாவது எந்த கிரகம் இலக்கினத்தைக் குறிக்கிறதோ அந்த கிரகத்தின் புக்தியில் உடல் பாதிப்பு இருந்துவரும். சரி! புதனானவர் 12-ம் வீட்டில் இருக்கிறார். என்ன பலன்?

 

புதன் இலக்கினாதிபதி; 12-ம் வீட்டில் இருக்கிறார். ஆக புதன் 1ம்வீட்டையும் 12ம் வீட்டையும் குறிக்கிறார். 12-ம் வீடு மருத்துவமனையைக் குறிக்கிறது அல்லவா? தசாநாதன் உபாதையையும் புக்தி நாதன் அதனால் மருத்துவமனையில் இருத்தலையும் குறிக்கிறார். ஆக சனிதசை, புதன் புக்தியில் ஒருவர் நோய்வாய்ப் பட்டு மருத்துவமனையில் இருப்பார்.

 

சரி! புதன் 12-ம் வீட்டில் இல்லாமல் 8-ம் வீட்டில் இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். 8-ம் வீடு தண்டச் செலவுகளைக் குறிக்கிறது அல்லவா? ஆக சனிதசை, புதன்புக்தியில் உடல் உபாதைகாரணமாக தண்டச் செலவு செய்வார்.

 

சுக்கிரன் புக்தி நடக்கிறது எனக் கொள்ளுங்கள். கன்னியா இலக்கினத்திற்கு சுக்கிரன் 2-ம் வீட்டிற்கு அதிபதி அல்லவா? சரி! அப்போது அவர் வங்கியில் கடன் வாங்க மனுச் செய்து இருக்கிறார் எனக் கொள்ளுங்கள். 7-ம் வீடு என்பது நாம் மனுச்செய்துள்ள வங்கியைக் குறிக்கிறது. நமக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றால் வங்கியில் உள்ள பணம் குறைகிறது அல்லவா? பணம் கொடுப்பதை அல்லது பணம் குறைவதைக் குறிப்பது 7-க்குப் 12-ம் வீடான 6-ம் வீடல்லவா? ஆக 6-ம் வீட்டைக் குறிக்கின்ற தசா, புக்திக்காலத்தில் ஒருவருக்குப் பணம் கிடக்கும். நாம் மேற்கூறிய உதாரணத்தில் சனி 6-ம் வீட்டின் அதிபதி. அவர் தசையில் பணம் கிடைக்கும். எந்த புக்தியில் கிடைக்கும். தனவரவைக் குறிக்கின்ற 2-ம் வீட்டைக் குறிக்கின்ற கிரகத்தின் புக்தியிலோ அல்லது லாபத்தைக் கொடுக்கும் 11-ம் வீட்டைக் குறிக்கின்ற கிரகத்தின் புக்தியிலோ பணம் கிடைக்கும். இங்கு சுக்கிரன் 2-ம் வீட்டின் அதிபர். ஆக சனிதசை, சுக்கிர புக்தியில் ஒருவருக்கு எதிர்பார்த்த கடன் கிடைக்கும். அதேபோல் இந்த தசை, புக்தியில் ஒருவருக்கு வேலை கிடைக்கும். அல்லது வேலை செய்து கொண்டிருப்பவராக இருந்தால் பதவி உயர்வு கிடைக்கும். 6-ம் வீடு உத்தியோகத்தையும் 2-ம் வீடு பணவரவையும் குறிக்கிறது அல்லவா?

 

சரி! இவருக்கு குரு புக்தி நடக்கிறது எனக் கொள்ளுங்கள். குரு 9-ம் வீட்டில் இருக்கிறார் எனவும் கொள்ளுங்கள். 7-ம் வீடு மனைவியையும் 9-ம் வீடு அயல் நாட்டுப்பயணத்தையும் குறிக்கிறது அல்லவா? 6-ம் வீடு கணவன் மனைவி பிரிதலைக் குறிக்கிறது. ஆக இவர்மனைவி இவரை விட்டு அயல் நாட்டுப் பயணம் செய்வார் எனக்கொள்ள வேண்டும். சரி! குருவானவர் 12- வீட்டில் இருக்கிறார் எனக் கொள்வோம். 6-ம் வீடும் 12-ம் வீடும் கணவன்-மனைவி பிரிதலைக் குறிக்கிறது. ஆக குருபுக்தியில் கணவன்-மனைவி பிரிந்து இர்ப்பார்கள். ஏன் இது Divorce வரை கூடப் போகலாம்.

 

சரி! குரு 12-ம் வீட்டிற்குப் பதிலாக 11-ம் வீட்டில் இருக்கிரார் எனக் கொள்ளுங்கள். இப்போது 6, 7, 11-ம் வீட்டின் பலன்கள் நடைபெறும். சரி! இவர் பதவி உயர்வுக்கோ அல்லது வேறு எதற்கோ போட்டி போடுகிறார் எனக் கொள்ளுங்கள். அல்லது தேர்தலுக்கோ போட்டி இடுகிறார் எனக் கொள்ளுங்கள். இவர் அந்தப் போட்டியில் வெற்றி பெறுவார். 7-ம் இடம் போட்டி போடுபவரையும், 6-ம் இடம் அவருடைய தோல்வியையும் 11-ம் வீடு இந்த ஜாதகருடைய வெற்றியையும் குறிக்கிறது. ஆக சனிதசை, குரு புக்தியில் அவர் போட்டியில் வெற்றி பெறுவார்.

 

சரி! சனிதசை சனி புக்தி. சனியானவர் 12-ம் வீட்டில்; இப்போது என்ன பலன் கிட்டும்? சனி 5-ம் வீட்டிற்கும், 6-ம் வீட்டிற்கும் அதிபதி. 12-ம் வீட்டில் இருக்கிறார். 6-ம் வீடு உங்கள் வேலையாளர்களைக் குறிக்கிறது. 12-ம் வீடு உங்களுக்கு நஷ்டம். ஆக உங்கள் வேலையாளர்கள் உங்களுக்குப் பண நஷ்ட்டத்தைக் கொடுக்கலாம். அல்லது 5-ம் வீடு உங்க குழந்தைகளைக் குறிப்பதனால் குழந்தைகள் மூலமாகச் செலவு இருக்கலாம்.

நாம் ஜீவனபாவமான 10-ம் வீட்டைப் பற்றி எழுதி கொண்டு இருக்கிறோம். ஜீவனம் என்றால் வேலைதான் பார்க்க வேண்டுமென்பதில்லை. வியாபாரமும் செய்யலாம். வியாபாரம் செய்வதென்றால் ஒருவரிடமிருந்து பொருளை வாங்கி மற்றோருவரிடம் விற்க வேண்டும். விற்பதிலே லாபம் வர வேண்டும். இதுதான் வியாபாரம். நாம் சாமான் வாங்குபவரையும், விற்பவரையும் குறிப்பது 7-ம் வீடு. (7th house indicates the persons with whom one is transacting). அதாவது 7-ம் வீடு வியாபாரத்தைக் குறிக்கிறது. நாம் வங்கியில் கடனுக்கு மனுச் செய்துள்ளோம் எனக் கொள்ளுங்கள். அந்த வங்கியைக் குறிப்பது 7-ம் வீடு. கல்லூரியில் படிக்கும் மாணவன் கல்லூரியில் Scholarship எதிர்பார்க்கிறான் எனக் கொள்ளுங்கள். அந்தக் கல்லூரியைக் குறிப்பது 7-ம் வீடு. ஒருவர் திருமணம் செய்துகொள்ளும் பெண்ணைக் குறிப்பது 7-ம் வீடு. இவ்வாறாக நாம் யாருடன் எல்லாம் தொடர்பு வைத்துள்ளோமோ அவர்களை எல்லாம் குறிப்பது 7-ம் வீடு. சரி! நமது வியாபாரத்திற்கு வருவோம்.

 

கிரகங்களிலே வியாபாரத்திக் குறிப்பது புதன். இவர் 7-ம் வீட்டில் இருப்பரேயாகில் வியாபாரம் நல்லவிதமாக நடக்கும். புதன் இருந்தால் விற்பனை அமோகமாக இருக்கும். வியாபாரத்திற்கு அனுகூலமில்லாத கிரகம் சனியாகும். அவர் இருப்பாரேயாகில் வியாபாரம் மந்தமாகும். 7-ல் சனி இருக்கப் பிறந்தவர் வியாபாரம் செய்யமலே இருத்தல் நல்லது ஆகும். பொதுவாக சுபகிரகங்கள் 7-ம் வீட்டில் இருத்தல் வியாபார அபிவிருத்தியைக் கொடுக்கும்.

 

அடுத்து தற்போது நடக்கும் தசா, புக்திக் காலங்களையும் மனத்தில் கொள்ள வேண்டும். 5, 12-ம் வீட்டைக் குறிக்கும் தசா, புக்திக் காலங்களில் வியாபாரத்தில் நஷ்டம்தான் இருக்கும். லாபம் இருக்காது. ஏன்? 5-ம் வீடன்பது 7-ம் வீட்டிற்குப் 11-ம் வீடு. 7-ம் வீடன்பது உங்களுடன் Transaction செய்பவரைக் குறிக்கிறது என்று மேலே கூறி இருக்கின்றோம். ஆக அவர்களுக்கு லாபம் என்றால் இந்த ஜாதகருக்கு நஷ்டம்தானே. 12-ம் வீடென்பது ஜாதகரின் நஷ்டத்திக் குறிக்கும் வீடு. ஆக 5, 12-ம் வீட்டைக் குறிக்கும் தசா, புக்திக் காலங்களில் ஒருவருக்கு வியாபா ரத்தில் லாபம் கிடைப்பது கடினம். அதேபோன்று 6, 11-ம் வீட்டைக் குறிக்கும் தசா, புக்திகாலங்களில் ஒருவருக்கு லாபம் கிடைக்கும். 6-ம் வீடென்பது 7-ம் வீட்டிற்குப் 12-ம் வீடல்லவா? 11-ம் வீடென்பது ஜாதகரின் லாபத்தைக் குறிக்கும் வீடல்லவா. ஆக 6, 11 வீடுகளிக் குறிக்கும் கிரகங்களின் தசா, புக்திக் காலங்களில் ஒருவருக்கு லாபம் கிடைக்கும். உதாரணத்திற்கு ஒரு ஜாதகத்தைக் குறித்துக் கொள்ளுங்கள்.

 

ராசி:

 

இலக்கினம் விருச்சிகம்;

இலக்கினத்தில் சனி, கேது, சூரியன்;

2-ம் வீட்டில் சுக்கிரன்;

5-ம் வீட்டில் சந்திரன்;

6-ல் குரு;

7-ல் ராகு;

8-ல் செவ்வாய்; 12-ல் புதன்;

 

நவாம்சம்:-

 

கும்ப இலக்கினம்; இலக்கினத்தில் சனி, செவ்வாய்;

மீனத்தில் ராகு;

ரிஷபத்தில் புதன்;

மிதுனத்தில் குரு;

சிம்மத்தில் சுக்கிரன்;

கன்னியில் சூரியன், கேது;

மகரத்தில் சந்திரன்;

இவர் சூரிய தசை நடக்கும்போது வியாபாரம் செய்ய ஆரம்பித்தார். சூரியன் லாபாதிபதி. இலக்கினத்தில் அமர்ந்து 7-ம் வீட்டை பார்க்கிறார். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைத்தது. வியாபாரமும் நல்லபடியாக நடந்து வந்தது. சந்திரதசை ஆரம்பித்தது. சந்திரன் மீனத்தில் புதனுடைய நட்சத்திரமான ரேவதியில் இருக்கிறார். புதன் 12-ம் வீட்டில் இருக்கிறார் அல்லவா? ஆக சந்திரன் தான் இருக்கும் வீடான 5-ம் வீட்டின் பலனையும், 12-ம் வீட்டில் உள்ள புதனின் பலனையும் கொடுத்து விட்டார். ஆக வியாபாரத்தில் பெருத்த நஷ்டம். சூரியதசையில் சேர்த்ததையெல்லாம் சந்திர தசையில் விட்டுவிட்டார்.

 

மற்றும் ஒரு ஜாதகத்தைக் குறித்துக் கொள்ளுங்கள்.

 

ராசி : மிதுன இலக்கினம்;

இலக்கினத்தில் சனி;

2-ம் வீட்டில் சூரியன், சுக்கிரன், சந்திரன், செவ்வாய்;

3-ல் ராகு, புதன்;

5-ல் குரு;

9-ல் கேது;

 

இந்த ஜாதகர் சுக்கிர தசை ஆரம்பமான உடன் தான் வேலை செய்த கம்பெனியில் இருந்து ஓய்வு பெற்றார். பின் வியாபரம் செய்ய எண்ணினார். வியாபாரத்தைத் தொடங்கினார். சுக்கிரன் 5, 12 வீடுகளுக்கு அதிபதியல்லவா? வியாபாரத்தில் நஷ்டத்தைக் கொடுத்து விட்டார்.

 

ராசிகளில் நிலராசிகள் என்று சொல்லக் கூடிய ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய ராசிகள் வியாபாரத்திற்கு உதவாதவை. அங்கு இருக்கும் கிரகங்களும் வியாபாரத்திற்கு அனுகூலமாக இருக்காது.

 

வியாபாரம் செய்வதற்கு முதலில் ஒருவருக்கு தைரியம் வேண்டும். தைரியம் இருந்தால்தான் வியாபாரம் செய்ய முடியும். தைரியத்தைக் கொடுப்பவர் செவ்வாய் அல்லவா? அவர் தசாநாதனுடனாவது அல்லது புக்தினாதனுடனாவது சம்மந்தப்பட வேண்டும். அப்போதுதான் ஒருவர் வியாபாரம் செய்ய முடியும்.

10-ம் இடத்தைக் கர்மஸ்தானம் என்று கூறுவார்கள். அதாவது தாய், தந்தையருக்கு ஒருவர் செய்யக் கூடிய கடைசிக் காலக் கருமங்களிக் குறிப்பது இந்த இடம்தானாகும். 4-ம் இடம் என்பது தாயாரைக் குறிக்கிறது அல்லவா! 4-ம் வீட்டிற்கு 7-ம் வீடு பாதகஸ்தானம் அல்லவா? ஆக 10-ம் வீடு தாயாரின் மரணத்தைக் குறிக்கிறது அல்லவா? அதேபோன்று 9-ம் வீடு தகப்பனாரைக் குறிக்கிறது அல்லவா? 10-ம் இடம் என்பது 9-ம் வீட்டிற்கு 2-ம் வீடு அதாவது மரணத்தைக் குறிக்கும் வீடல்லவா? அதனால்தான் 10-ம் இடம் என்பது கர்மஸ்தானம் என அழைக்கப்படுகிறது. ஒருவருக்கு 10-ம் வீட்டு அதிபதியின் தசையோ அல்லது 10-ல் உள்ள கிரகத்தின் தசையோ அல்லது புக்தியோ நடக்கும்போது அவருடைய தாயோ அல்லது தந்தையோ மரணமடையக்கூடும். ஒருவருக்குக் கருமத்திற்குக் காலம் வந்துவிட்டது என்பதை 10-ம் வீட்டை வைத்துத்தான் கூற வேண்டும்.

 

ஒருவரின் மனைவிக்கு ஸ்திர சொத்துக்கள், வாகனங்கள், மனைவியின்கல்வி ஆகியவற்றைக் குறிப்பதும் இந்தப் 10-ம் வீடுதான். ஏனெனில் 7-க்கு 4-ம் வீடு இந்த வீடுதானே. இத்துடன் இந்த வீட்டைப் பற்றி நிறுத்திக் கொள்வோம்.

 

அடுத்த பாடத்தில் 11-ம் வீட்டைப் பற்றிப் பார்ப்போம்.   

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...