செவ்வாய், 27 மே, 2014

கொட்டிக் கிடக்கும் - சக்தி ரகசியம் !

ஓஷோவின் - மறைந்திருக்கும் உண்மைகள் படித்து இருக்கிறீர்களா? 
அவர் சொல்லிய ஒரு கருத்தை , மனதுக்குள் அசை போட்டு, அலசி ஆராய்ந்து - அப்புறம் நமக்கு உள்ளே தோணிய விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். 

ஒரு பேச்சுக்கு , ஏதோ ஒரு  அசம்பாவிதம்  , ஒரு மூன்றாம் உலக யுத்தம் மாதிரி ஒன்று நடந்து - இந்த உலகில் பேரழிவு நடக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.  நாம் இப்போது உபயோகிக்கும் - (satellite ) செயற்கைக்கோள்கள் எல்லாம் ஸ்தம்பித்துப் போய்விட்டது. செயல் இழந்து விட்டது.. உலகமே 90 %  அழிந்துவிட்டது. பெட்ரோல் எல்லாம் காலி. மின் உற்பத்தியே இல்லை .
உலகமே கற்காலம் போல் ஆகி விட்டது .. மக்கள் கோடிக்கணக்கில் மடிந்து விட்டனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் - மீதி இருக்கும் மக்கள் மன நிலை எப்படி இருக்கும்.. ? 

டிவி, கம்ப்யூட்டர், கார், ரேடியோ, மொபைல் போன்,  - எல்லாமே வேலை செய்யாது.. வெறுமனே டப்பா.. தான். பொம்மை மாதிரி தான். ஒன்னும் பிரயோஜனப் படாது .... இல்லையா? ஆனால், அதே சமயத்தில் - அதை உபயோகித்தவர்கள் - வெளியிலும் தூக்கி எறிய மாட்டார்கள்.. அது பாட்டுக்கு - வீட்டிலே இருக்கும். பரண் லே இருக்கும். ஊர்லே மூலையிலே இருக்கும்..  அடுத்த அடுத்த சந்ததிக்கு - அதோட பலன் தெரிய வந்தா பரவா இல்லை.. இல்லை நாளடைவிலே .. அப்படியே மறைஞ்சு போயிடும்.. திரும்ப என்னைக்கவாது ஒரு நாள், எத்தனையோ வருஷம் கழிச்சு - திரும்ப satellites கண்டுபிடிச்சா, எண்ணைக் கிணறு கண்டு பிடிச்சா  - இது எல்லாமே ,  திரும்ப உபயோகப்படும்.. ..

ஒத்துக்கிறீங்களா?
இதே மாதிரி தான்.. கோவில் ஒரு செல்போன் டவர் மாதிரி. கடவுள் ஒரு விண்ணில் இருக்கும் கோள் மாதிரி கற்பனை பண்ணிக்குவோம்.. அங்கே இருந்து சிக்னல் வாங்கி உங்களுக்கு தர்ற டவர் தான் ஆலயங்கள். ஜீவ  சமாதிகள்.. அதன் மூலமா எத்தனை எத்தனையோ ஆத்மாக்கள் பலன் அடைஞ்சு இருக்கலாம்.. அந்த கதிர் activation பலமா இருக்கிற ஆலயங்கள் இன்னும் இருக்கு. நீங்க - ஒரு மொபைல் போன் மாதிரி. நீங்க அந்த டவர்க் கிட்டே  எவ்வளவுக் கெவ்வளவு நெருக்கமா இருக்கிறீங்களோ, அந்த அளவு சிக்னல் கிளீயரா இருக்கும். அதனாலே பலனும் இருக்கும். இல்லை , சிக்னல் கிடைக்காது.. நாட் ரீச்சபிள் தான்.

அந்த ஆலயங்களுக்கு - சார்ஜ் பண்றதுக்கு தான் - கும்பாபிஷேகம் - அந்த கும்பம் இறைவனிடம் இருந்து - கதிர் அலைகளை , உள்ளே இருக்கிற கர்ப்ப கிரகத்துக்கு அனுப்புகிறது.. தீப ஆராதனை காட்டுறப்போ - அது இன்னும் தூண்டப்படும்.. அருள் அலைகள் உள்ளே இருக்கும் அனைவருக்கும் கிடைக்கும்.. கையை மேலே தூக்கி - அந்த நேரத்திலே வேண்டுவாங்க... இல்லையா? .. உயரமா இருக்கிற அந்த கைவிரல்கள் மூலம் உள்ளுக்குள்  அந்த அலைகள் உங்களுக்குள் இறங்கும்..

இதைப் போலே - ஏராளமான விஷயங்கள் , நம்மை அறியாமலே , நாம் செய்து கொண்டு தான் இருக்கிறோம்..அதற்கு பக்காவா விளக்கம் தான் தெரிவது இல்லை.. ஆனால் தொடர்ந்து செய்கிறோம்.. அதன் முழு பலன்களும், கண்டிப்பாக , நாம் உணரும் பொது தான் தெரிய வரும்..

satellite இருக்கு (ஆண்டவன் ) . செல் போன் டவர் (ஆலயம் ) இருக்கு. செல் போனும்  ( நாம் தான் ), சிம் கார்டும்  (மனசு)   இருக்கு. ஆனாலும், நமக்கு செல் போன் உபயோகம் தெரிஞ்சா தானே .. அதை உபயோகப் படுத்த முடியும்.. இல்லை , வெறுமனே பொம்மை தானே.

அதைப் போலே , பொம்மை மாதிரி தான் .. நாம் இருக்கிறோம்.. நம்மை உணரனும்.. இறையை உணரனும்.. பிறகு , நமக்கு எல்லாமே புரிய வரும்..
அதுவரை - சிக்னல் கிடைக்கவே வாய்ப்பு இல்லாத - பொம்மை தான் மனிதர்கள்..

இந்த கோட்பாடுகளை - தெளிவாக உணர்ந்து ,  நாம் நம்மை உணரும் வரை ... நமது சக்தி தெரியாதவர்கள் தான்.. மனம் என்னும் சாவி கொடுக்கும் , விசையால் சொடுக்கப்பட்டு நடமாடும் வெறும் பொம்மைகள்.


 நாம் காலை எழுந்தது முதல், இரவு வரையில், எத்தனையோ இடங்களுக்கு போகிறோம். இவைகளோடு, கோவிலுக்கு போவது என்ற பழக்கத்தையும் வைத்துக் கொள்வது நல்லது. பகல் முழுவதும் மனதில் என்னென்னவோ எண்ணங்கள் அலை மோதுகிறது. 

உங்களுக்கு விவரம் தெரிந்து , இன்றும்  சில கிராமங்களில்  - வயதான முதியவர்கள் - நாள் தவறாமல் ஆலயம் செல்லும் பழக்கம் வைத்து இருப்பார்கள். அவர் வயதை யொத்த இன்னும் முதியவர்கள் அந்த ஆலயங்களில் கூடி இருப்பர். பார்த்து இருக்கிறீர்களா?  இள வயது அன்பர்கள் ஏன் அவ்வாறு செல்வதில்லை..? வீட்டுக்கு வீடு TV , இன்டெர்நெட் வந்த பிறகு - நிறையப்பேர் வெளியில் தலை காட்டுவதேயில்லை. 

சில பெரியவர்கள், சாயந்திரம் அநுஷ்டானம் முடிந்ததும், “சந்திகாலம் ஆகிவிட்டது; கோவிலுக்குப் போய் சந்திகால தீபாராதனை பார்த்து விட்டு வந்து விடு கிறேன்…’ என்று சொல்லிவிட்டு, கோவிலுக்கு போய் தரிசனம் செய்துவிட்டு வருவர். ஒரு நாள் பொழுதை கழிக்கும் போது, கடைசியாக தெய்வ தரிசனத்தோடு முடித்தால், வாழ்நாளில் பெரும்பாலான புண்ணியத்தை அடையலாம்.

இரவு வந்ததும், கோவிலுக்குச் சென்று, பகவானிடம் மனதை வைத்து, சிறிது நேரம் தரிசனம் செய்யும் போது, மனம், மற்ற விஷயங்களை மறந்து, சில நிமிட நேரமாவது பகவானிடம் லயித்திருக்கும்; மனதுக்கும் அமைதி கிடைக்கும். அதே சந்தர்ப்பத்தில், பகவானிடம், “பகவானே… நான், பிறர் கையை எதிர்பாராமல், வாழ்நாளை போக்கி விட வேண்டும்!’ என்று பிரார்த்தித்து கொள்ள சொல்லியிருக்கிறது.

அதனால், தினமும் ஒரு முறையாவது, கோவிலுக்குச் சென்று வர வேண்டும். பிறருக்காக உழைக்கிறோம்; சம்பாதித்து போடுகிறோம்; குடும்பத்தை கவனிக்கிறோம். இதெல்லாம் ஒரு கடமை. அதேபோல தன் நன்மைக்கும், ஆத்ம லாபத்துக்கும், பரலோக சுகத்துக்கும் சுலபமான வழி, பகவானை வழிபடுவது தான்.

“பகவான் தான் எங்கும் இருக்கிறாரே… கோவிலுக்கு ஏன் போக வேண்டும்? வீட்டிலிருந்து கொண்டே அவரை நினைத்தால் போதாதா?’ என்று வேதாந்தம் பேசுவதில், பிரயோஜனமில்லை. 

பூமியின் அடியில் எங்கும் நீர் நிறைந்துள்ளது; ஆனால், நமக்கு தண்ணீர் வேண்டுமானால், ஒரு கிணற்றிலிருந்தோ, குளத்திலிருந்தோ தான் எடுக்க வேண்டியுள்ளது. 

பசுவின் மடியில் பால் உள்ளது. பால் வேண்டுமானால், அதன் மடியிலிருந்து தான் பால் கறக்க முடியும்; அதன் கொம்பை திருகினால், பால் வருமா? அதுபோல எங்கும் கடவுள் இருக்கிறார் என்றாலும், நாம் நாலு பக்கமும் சுற்றி, சுற்றிப் பார்த்தாலும், கடவுளைக் கண்டோம் என்று சொல்ல முடியாது. 

கோவிலுக்குப் போய், கடவுளை தரிசித்தால் தான், மன நிம்மதி கிடைக்கும். கோவிலுக்குள் உள்ள தெய்வம் வெறும் சிலையல்ல; அது மந்திர பூர்வமாக பிரதிஷ்டை செய்யப்பட்டு, தெய்வ சாந்நித்யம் கொண்டது. கண்ணுக்கு தெரியாத கடவுளை, அந்த விக்ரகத்தில் ஆவாகனம் செய்து வைத்திருக்கின்றனர்.

அதற்கு காலா காலத்தில் அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, தூப தீப நைவேத்தியம், கற்பூர ஆரத்தி என்று வரிசையாக உபசாரங்கள் உள்ளன. இது, ஒவ்வொரு நாளும் ஆறு காலம், நான்கு காலம், மூன்று காலம் என்று நியமனம் செய்து, அதன்படி நடந்து வருகிறது. அதனால், ஏதாவது ஒரு கால பூஜையையாவது பார்த்து, தரிசனம் செய்து வருவது நல்லது. 


சிந்து சமவெளி நாகரிகம் - என்று , தொல் பொருள் துறையினர் - சுமார் ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன் இருந்த, ஒரு நாகரீகம் மிக்க மனிதர்கள் வாழ்ந்து இருக்கக் கூடும் என்று நிருபித்து இருக்கின்றனர்.. யோசித்துப் பாருங்கள்.. அப்படிப் பட்ட ஒரு உலகம், ஏதோ ஒரு காரணத்தால் - கிட்டத் தட்ட ஒட்டு மொத்தமாக அழிந்து இருக்கிறது..

அதன் பிறகு - கொஞ்சம் கொஞ்சமாக , ஒரு இரண்டாயிரம வருடமாக , ஒரு வரலாறு - ஓரளவுக்கு தெரிந்து இருக்கிறது.. எந்த காலத்தில் இருந்தோ, நமது முன்னோர்களில் ஒருவர் , இந்த ஆலயங்களின் பயன்பாடுகள் தெரிந்து , அவர் சந்ததிக்கு சொல்லி , அதில் ஒரு 0 .0000001 % கருத்து உண்மையாய் இருந்ததால் , இன்றும் ஆலயங்கள், வழிபாடுகள், தியானங்கள்  கடை பிடிக்கப்பட்டு வருகின்றன..

எதுவும் கேலிப் பொருள் அல்ல.  அதை உணர நமக்கு நேரம் ஆகலாம்         இப்போது ஜப்பானில், சுனாமி - அதனால் - அணு உலைகள் வெடிப்பு.. விளைவு?
பார பட்சமே இல்லமால் , ஒவ்வொரு நாடும் அணு ஆயுதங்கள் செய்து /  வாங்கி குவித்து உள்ளன... கத்தியை கையாள்வது போல இது .. பிற நாடுகளுக்கு அச்சுறுத்த என ஆரமபித்த விஷயம் , உலகத்துக்கே - ஒரு முடிவாக கூட மாறலாம்.

பூமி அந்தரத்தில், ஏதோ ஒரு விசைக்கு கட்டுப் பட்டு - ஒரு குறிப்பிட்ட சாய்வில் - பந்து போல  , தானும் சுற்றிக் கொண்டு - ஒரு குறிப்பிட்ட பாதையில் - பயணித்துக் கொண்டும் இருக்கிறது...

ஒரு மேஜை இருந்தால்,  அதை செய்த ஒரு தச்சர் இருந்து தானே ஆக வேண்டும் . பூமி, சூரியன் , பிற கோள்கள் என்று இருந்தால் - அதைப் படைத்தவர் , ஒரு சக்தி இருந்து தானே ஆக வேண்டும்.. அந்த சக்தி , எந்த சக்திக்கு கட்டுப்பட்டு - இந்த பிரபஞ்சம் இயங்குகிறதோ, அந்த சக்தி -  கோடி சமுத்திரம் போன்றது.. அந்த சக்திக் கடலில் இருந்து, தெறித்த துளிகள் போல இயங்குபவை தான் உலகமும், நாமும்... நாமும் நம்மை உணரும் போது , அந்த சமுத்திரத்தில் நமது ஐக்கியம் புரிய வரும்..

ரஜினிகாந்த் நடித்த "பாபா" படம் பார்த்தீங்களா..? அங்கே , மகா அவதார்  பாபா சம்பந்தப்பட்ட காட்சிகள் - சுத்த ஹம்பக்.. உளறலின் உச்சம் .. கற்பனைன்னு ஒதுக்க முடியுமா? அப்படி ஒரு விஷயம் இல்லைனா.. அந்த மனுஷன் ஏன் , அங்கே போய் - தவமா கிடைக்கிறார்..? அவருக்கு இல்லாத வசதிகளா, ரசிகர் பட்டாளமா..? புகழா?  இது எல்லாம் தாண்டி , இது வேண்டாம்னு ஒதுக்க, ஒதுக்க , அவருக்கு இன்னும் கூடுது.. இல்லையா..?

நாமும், ஒவ்வொருத்தரும்  - இதே மாதிரி தான் .. பணம் , புகழ் , ஆசை எல்லாம் வைச்சுக்கிட்டு - அதையே தேடி ஓடுறோம்.. இது எல்லாம் கிடைச்ச பிறகு, அடுத்தபடி யோசிப்போம்.. .. அந்த நிலை வரும்போது தான் , நமது ஆன்மா பத்தி, முக்தி பத்தி, ஆண்டவன் பத்தி , ஞாபகம் வரும்... 

நான் ஏற்கனவே சொல்லி இருந்தது ஞாபகம் இருக்கா..? கடைசி காலத்துலே, ஆடி அடங்கி , நாடி தளர்ந்து - இறுதிக் கட்டத்திலே இருக்கிறப்போ - நாம சம்பாதிச்சதோ, எதுவுமே நம்ம கூட இருக்க போறது இல்லை.. நம் கூட இருப்பது ... வெறும் நினைவுகள்.. .. ஞாபகங்கள் மட்டுமே...  இருக்கிற கொஞ்ச நாட்களில் அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கை வாழ்வோம்.. சக மனித துவேஷம் இல்லாமல் வாழ்வோம்..


தினமும் , ஆலயம் செல்வதை உங்கள் அன்றாட கடமையாக கருதுங்கள்.. அதனால் , உங்களுக்கு , அபரிமிதமான பலன்கள் கிடைக்கலாம்.. உங்கள் வாழ்க்கை என்னும் ராஜ பாட்டையில் ஒளி மிகுந்த ஒரு பாதை  தெரிய வரும். - அதி விரைவில் உங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள்...!!

இப்படி ஏராளமான ரகசியங்களை, சக்தியை உள்ளடக்கி இருப்பவை தான் , சதுரகிரி, திருவண்ணாமலை, திருப்பதி, பழனி போன்ற மலைகளும், இதைப் போன்ற பிற ஆலயங்களும்...!!   மன நிம்மதி உங்களுக்கு கிடைப்பது உறுதி    .. 

இந்த கட்டுரை சம்பந்தமாக உங்கள் , மேலான விமர்சனகளையும், கருத்துக்களையும் , ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.. படிச்சு முடிச்ச ஒவ்வொருவரும், ஒரு நாலு வரி எழுதினா ரொம்ப சந்தோஷப்படுவேன்.       தகுதியுள்ள உங்கள் நட்பு வட்டத்திற்கு நமது இணைய தளத்தை அறிமுகப் படுத்துங்கள்.. 
இந்த கட்டுரையை படிக்கும் அன்பர்களில் யாரேனும் ஒருத்தருக்காவது , ஒரு சிறிய ஆன்மீக அதிர்வு ஏற்பட்டால், நமது இணைய தளத்தின், இந்த கட்டுரையை பிரசுரித்ததன் நோக்கம் நிறைவேறும்

வாஸ்து மனை அடி சாஸ்திரம் (குழி கணக்குடன்)


                                                                  


ஓலைச் சுவடிகள் :- அரசினர் சுவடி நூலகம், சென்னை -600 005. மனையடி சாஸ்திரம் R.3396, R.2678, R.3818, மனை சாஸ்திரம் R.165, R.195, மனை நூல் R.243
     
            இதை துணை நூலகக் கொண்டு எழுதப்பட்ட நூல்களைப்  பார்த்து இதில் உள்ள விபரங்கள்  தெரிவிக்கப் பட்டுள்ளது.

குழி கணக்கு சாஸ்திரம்  :- கட்டிடத்தின் வெளி பக்க அளவுகளை கணக்கிட்டு குழி கணக்காக மாற்றி 11 பொருத்தங்களில் எத்தனை பொருத்தங்கள் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். அதில் அதிக நன்மைகள் தரக்கூடிய  பொருத்தங்கள்   வரும்படியாக கட்டிடம் கட்ட வேண்டும்.  முக்கியமாக  கட்டிடத்திற்கு  அதிகமான வயது வரும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
            குழி என்பது 3 அடி அகலம் 3 அடி நீளம் கொண்ட 9 சதுரஅடிக் கொண்டது ஒரு குழி எனப்படும்.

உதாரணம் :-   இடத்தின் அகலம் 27 அடி, நீளம் 39 அடி என்றால் 
                                 27 * 39
                                     9               = 117  குழிகள் 
பொருத்தங்கள் மொத்தம் 11 அவைகள் 

  1. கருப்பம்
  2. வரவு 
  3. செலவு 
  4. யோனி 
  5. வயது 
  6. இராசி 
  7. இனம்
  8. அங்கிசம் 
  9. நட்சத்திரம் 
  10. திதி
  11. வாரம் 
[வகுக்கபடும் போது மீதி வர வில்லை என்றால் வகுக்கபடும் எண்ணை மீதி எண்ணாக கொள்ள வேண்டும்]
  1. 1. கருப்பம்  :- ஆதாயம், பலன், கற்பம் என்றுப் பொருள். இடத்தின் அளவுப் படி குழிகளை கணக்கிட்டு வந்த குழி எண்ணிக்கையை 8 ல் வகுக்க, வகுத்து மீதி வரும் எண் கற்ப எண் எனப்படும்.மீதி இல்லையானால் மீதி 8 என்று எடுத்துக்கொண்டு பலன் காண வேண்டும்.
சிறப்பான எண் - 1, 2, 3, 5, 7.

உதாரணம் :-  அகலம் 27 அடி,  நீளம் 39 அடி 

                               27 * 39
                                     9               = 117  குழிகள் 
மொத்த குழிகள் 117 ஐ   8 ல் வகுக்க வருவது 14 ம் மீதி 5 தும் இந்த 5 கற்ப எண் எனப்படும். இந்த 5 சிறப்பான எண்  (சிறப்பு 1,2,3,5,7)ஆகவே  கருப்பம்  பொருத்தம் உண்டு  என்றுக் கொள்ள வேண்டும் 
2.  வரவு பலன்  :-  மொத்தக் குழியை 8 ல் பெருக்கி பெருக்குத் தொகையை 12 ல் வகுக்க வந்த மீதி வரவு எனப்படும். மீதி இல்லையானால் மீதி 12 என்று எடுத்துக்கொண்டு பலன் காண வேண்டும் 
அனைத்து எண்களும் சிறப்பானவைகளே   ஆனால் இதில் பார்க்க வேண்டியது அடுத்து வரக்கூடிய செலவு எண்ணை விட இந்த எண் அதிகமாக வரவேண்டும்.
3. செலவு பலன் :- மொத்த குழியை  9 ல் பெருக்கி, பெருக்கி வந்த தொகையை 10 ல் வகுக்க வரும் மீதி எண் செலவு எண் எனப்படும். மீதி இல்லையென்றால் மீதி 10 செலவு எண்ணாக  கொள்ள வேண்டும் 
சிறப்பான எண்கள் - 3, 4, 6, 8, 10.
4. யோனி  பலன் :-  மொத்தக் குழியை 3 ல் பெருக்கி, பெருக்கி வந்த தொகையை 8 ல் வகுக்க வரும் மீதி யோனி எண் மீதி வரவில்லையானால் மீதி 8 ஆக கொள்ள வேண்டும்.
சிறப்பு எண்கள் - 1, 3, 5, 7.
5. வயது பலன் :-  மொத்தக் குழியை 27 ல் பெருக்கி, வந்தத் தொகையை 100 ல் வகுக்க மீதி வரும் எண் கட்டடத்தின் வயது ஆகும் மீதி வராவிடில் வயது எண் 100 ஆக கொள்ள வேண்டும்.
வயது எண்  45 க்கு மேல் வருவது நல்லது வயது எண் அதிகமாக, அதிகமாக சிறப்பானது 

6. இராசி பலன் :-  மொத்த குழியை  4 ல் பெருக்கி, பெருக்கி வந்த தொகையை 12 ல் வகுக்க மீதி வரும் எண் இராசி எண் ஆகும் 
சிறப்பான எண்கள் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 12.

7. இனம் பலன்கள் :-  மொத்தக் குழியினை 9 ல் பெருக்கி, வந்த தொகையை 4 ல் வகுக்க மீதி வருவது இன எண் ஆகும் 
சிறப்பான எண்கள் - 1, 2, 3.

8. அங்கிச பலன்கள் :-  மொத்தக் குழியை 4 ல் பெருக்கி வந்த தொகையை 9 ல் வகுக்க வரும் மீதி அங்கிசம் எண் ஆகும்.
சிறப்பான எண்கள் - 2, 3, 4, 5, 6, 8, 9.

9. நட்சத்திர பலன் :-  மொத்தக்  குழியினை 8 ல் பெருக்கி, பெருக்குத் தொகையினை 27 ல் வகுக்க மீதி வரும் எண் நட்சத்திர எண் ஆகும் .
சிறப்பான எண் - 1, 4, 6, 7, 10, 11, 12, 14, 15, 17, 21, 22, 24, 26.
10.  திதி பலன்கள் :-  மொத்தக் குழியினை 9 ல் பெருக்கி, பெருக்கி வந்த தொகையை 30 ல் வகுக்க மீதி வரும் எண் திதி எண் ஆகும் 
சிறப்பான எண்கள் - 1, 2, 3, 5, 6, 7, 10, 12, 13, 15, 16, 17, 18, 20, 21, 22, 25, 27, 28, 30

11.  வார  பலன்கள் :- மொத்த குழியினை 9 ல் பெருக்கி, பெருக்கி வந்த தொகையை 7 ல் வகுக்க  வரும் மீதி நாள் எண் ஆகும்.
சிறப்பான எண்கள் - 2, 4, 5, 6.

                                    *******************************

மனை  அடி சாஸ்திரம்  வீட்டின் அறைகளின் உள் அளவு அடி அதில் வாழ்பவரின் அம்சமாகும் அறைகளின் உள் அளவு நல்ல பலனுள்ள அளவுகளாக வரும்படி அமைக்க வேண்டும். அனைத்து அறைகளும் அப்படி அமைக்க முடியாது. அமைக்க முடியாத அந்த அறைகளுக்குள் ஒரு வரியோ அல்லது இரண்டு வரியோ செங்கல் வைத்து திட்டு கட்டி அந்த அடியை சரி செய்து கொள்ள வேண்டும்

வீட்டின் உள் அளவு   நீள அகல அடிகளில் சிறப்பான அடிகள் :- 

  6 - 8 - 10 - 11 -16 - 17 - 20 - 21 -22 - 26 -27 - 28 - 29 -  30 - 32 - 33 - 35 - 36 - 37 - 39 - 41 - 42 - 45 - 50 -  52 - 56 - 60 - 64 - 66 - 68 - 70 - 71 - 72 - 73 - 74 - 77 - 79 - 80 - 84 - 85 - 87 - 88 - 89 - 90 - 91 - 92 - 95 - 97 - 99 - 100.


                                                     *************************

 வாஸ்து நாட்கள் :-  

     சித்திரை -   10     நாழிகை     5     நேரம்-   காலை    8-54   முதல்  9-30   வரை

    வைகாசி  -    21            "             8            "                "          9-58         "      10-34         "

             ஆடி  -    11            "             2            "                "          7-44          "        8-20         "

     ஆவணி  -      6            "            21           "                 "          7-23         "        7-59         "

         ஐப்பசி  -    11            "              2           "                 "          7-44         "        8-20         "

கார்த்திகை  -     8            "             12           "                 "        11-29        "      12-05         "

              தை  -    12            "               8           "                 "        10-41        "      11-17         "

            மாசி  -    22            "               8           "                 "        10-32        "      11-08         "
                                        ******************************

வாஸ்து செய்யும் மாதம் :-  


  1. வடக்கு வாசல்     -------------     சித்திரை, வைகாசி 
  2. கிழக்கு வாசல்     -------------     ஆடி, ஆவணி 
  3. தெற்கு வாசல்      -------------     ஐப்பசி, கார்த்திகை
  4. மேற்கு வாசல்     -------------      தை,  மாசி 
                                        ***************************

வீடு கட்டுவதற்குரிய பலன் :-

  1. சித்திரை          ---------     செல்வம் குறையும் 
  2. வைகாசி         ----------    வெற்றி உண்டாகும் 
  3. ஆனி                 ----------    பகைவர் பயம், புத்திரருக்கு  ஆகாது 
  4. ஆடி                   ----------    பசுக்கள் நஷ்டம், செல்வம் அழியும் 
  5. ஆவணி          ----------     உறவினர் வருகை 
  6. புரட்டாசி       -----------     பல வகை பிணிகள் வருத்தும் 
  7. ஐப்பசி            -----------     கலகம், ஆடை அணிகள் சேதம் 
  8. கார்த்திகை  -----------     செல்வம் நிலைக்கும், தீங்கு ஏற்படாது 
  9. மார்கழி          -----------     பயம் மிகும் 
  10. தை                   -----------    மரணம் உண்டாகும் 
  11. மாசி                -----------     துன்பம் நீங்கும், செல்வம் உண்டாகும் 
  12. பங்குனி        -----------     ஆடை ஆபரணங்களும்,       
                                                      உள்ள  செல்வமும்  கொள்ளை   போகும்

                                ******************************

வீட்டுக்கு உரியவரின் இராசிக்கு ஏற்ற திசை :-    


  • கிழக்கு வாசல் -----------------விருச்சிகம், மீனம், கடகம் 
  • மேற்கு வாசல் ------------------துலாம், மிதுனம், கும்பம்
  • வடக்கு வாசல் ------------------தனுசு, மேஷம்,சிம்மம் 
  • தெற்கு வாசல் ------------------ரிஷபம், மகரம்,கன்னி              
இராசிக் காரர்களுக்கு இத்திசைகள் உயர்வைத் தரும்

                                       
************************

வாசற்கால் வைக்கும் பாகம் :-

           வாசற்கால் வைக்கும் திசையின் நீளம் அல்லது அகலத்தை அளந்து அதை 8 பாகங்களாக பகுக்க வேண்டும்.  அவற்றில் முதல் இரண்டு பாகம் மற்றும் கடைசி இரண்டு பாகங்களை தவிர்த்து இடையில் உள்ள  3, 4, 5,6 ஆகிய பாகங்களில் எங்கு வேண்டுமானாலும், வாசற்ப்படி அமைக்கலாம்.

வாசற்கால் வைக்க நவக்கிரக பலன் :-

             வாசற்படி வைக்கும் திசையின் நீளம் அல்லது அகலத்தை அளந்து  9  பாகங்களாக பகுக்க வேண்டும்.  முதல் பாகம் சூரியனிலிருந்து சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன்,
சனி, இராகு, ஒன்பதாவது பாகம் கேதுவாக கொள்ள வேண்டும். 

             இதில்  4, 5, 6, வது பாகமான புதன், குரு, சுக்கிரனில் வாசற்கால் வைக்கலாம் 

                                      **********************

வாசற்காலின் அளவுகள் :-

          9 : 5,  6  3/4 : 3  3/4,  ---   உயரம்  9 அடி, அகலம்  5 அடி அல்லது உயரம்  6  3/4  அடி, அகலம் 3  3/4  அடி.   இது வெளிபுற அளவு.
         
          கதவு ஒரே பலகையில் அமைவது சிறப்பு இல்லையெனில்  3, 5, 7, என்று ஒற்றைப்படை பலகைகளால் அமைக்கலாம். ஒரே மரத்தினுடைய பலகையாக இருக்க வேண்டும்.
          தலை வாசற்காலை விட உட்புற வாசற்கால்கள் படிப்படியாக சிறிது உயரமாக இருக்க வேண்டும். அதாவது தலை வாசற்கால் உயரம்  6 அடியானால் அடுத்தது 6 அடி 1 அங்குலம் அடுத்தது 6 அடி 2 அங்குலம் இருக்க வேண்டும். அதே போல தரை அமைப்பிலும் சிறிது உயர்வாகத்  தூக்கி வாசற்காலைப் பொருத்த வேண்டும்.

                                          ***********************
கிணறு :-  
   
வடக்கு, கிழக்கு வாசல் வீடுகளுக்கு தென்மேற்கு பகுதியிலும், 

தெற்கு, மேற்கு வாசல் வீடுகளுக்கு வடகிழக்கு பகுதியிலும் கிணறு எடுக்க வேண்டும்.

மாடி :-   கிழக்கு பக்கத்திலும், வடக்கு பக்கத்திலும் மேல் மாடி வீடு கட்டுவது நல்லது.
மாடிப்படி :-   வடக்கு, கிழக்கு நோக்கி ஏறுமாறு அமைப்பது சிறந்தது 

                                                ************************

சுப காரியங்கள் செய்யும் நட்சத்திரம் :-


      1. ரோகினி, ஆதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, திருவோணம், அவிட்டம்,            சதயம்.

பட்டாபிஷேகம் உத்தியோகம், இராஜதரிசனம், வியாபாரம், வீடு, ஆபரணம், சுப காரியங்கள் செய்யவும் அபிவிருத்தியாய் வருமென்று அறிக

       2.  அசுவினி,மிருகசீரம், புனர்பூசம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், கேட்டை, ரேவதி.

சுப காரியங்களுக்கு உத்தமம்.

திங்கள், 26 மே, 2014

சாயா கிரகங்களின் சூட்சும நிலைகள்

Date :26/05/2014


சாயா கிரகங்களின் சூட்சும நிலைகள்-1

நவக்கிரகங்களை ஜோதிட சாஸ்திரம் மூன்று வகையாகப் பிரிக்கிறது.
ஒளிக் கிரகங்கள்
பஞ்சபூதக் கிரகங்கள்
சாயா(நிழல்) கிரகங்கள்
சூரியனும் சந்திரனும் ஒளிக்கிரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இதன் காரணமும் உங்களுக்குத் தெரியும். நமக்கு கிடைக்கும் இந்த ஒளியின் மூல நாயகனான சூரியன் பகலிலும், இரவில் சூரியனால் சந்திரனும் ஒளிர்கின்றன என்பதனாலேயே அவை ஒளிக்கிரகங்கள் ஆயின.
குரு, சுக்கிரன், புதன், செவ்வாய், சனி ஆகியவை பஞ்சபூதங்களின் குறியீடுகளுக்கு ஒப்புமை ஆக்கப்பட்டதால் அவை பஞ்சபூதக் கிரகங்கள் ஆயின.
மூன்றாவதான இராகு கேதுக்கள் நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படுவதன் காரணம் அவை உண்மையில் பருப்பொருளுடைய கிரகங்களே அல்ல என்பதுதான்.
அதாவது இராகு கேதுக்கள் என்பவை வெறும் தோற்றங்கள் மட்டும்தான். அவற்றிற்கு ஒரு நிஜமான வடிவம் கிடையாது. அதோடு இராகு கேதுக்கள் நிழல்கள் என்று சொல்லப்பட்டாலும் நிதர்சனமாக அவைகள் இருட்டுகள் என்றுதான் நான் சொல்வேன்.
உண்மையில் இராகு கேதுக்கள் என்பவை பூமி மற்றும் சந்திரனின் நிழல்கள்தான். அதாவது பூமி, சூரியனைச் சுற்றிவரும் சூரியப்பாதையும், சந்திரன் பூமியைச் சுற்றிவரும் அதே போன்ற பாதையின் விரிவு படுத்தப்பட்ட நிலையும் சந்தித்துக் கொள்ளும் இரண்டு புள்ளிகள்தான் ராகு கேதுக்கள் என அழைக்கப் படுகின்றன.
இந்த இரண்டு புள்ளிகளையும் ஒரே நேர்கோட்டால் இணைக்க முடியும். அந்த வகையில் பார்த்தால் இரண்டும் ஒரே கிரகம்தான் என்று கூட நாம் சொல்ல முடியும்.
இராகு கேதுக்களை மிக நுட்பமாகவே பிரித்தறிய வேண்டும். சந்திரனின் ஏறு பாதையில் உள்ள இராகுவிற்கென்று சில தனிப்பட்ட குணங்களும், இறங்கு பாதையில் உள்ள கேதுவிற்கென்று சில குணங்களும் உள்ளன.
நம் ஜோதிடத்தின் நாயகனான சூரியன் உள்ளிட்ட ஏழு கிரகங்களையும் முற்றிலும் வலிமை இழக்கச் செய்யும் ஆற்றல் உள்ளவை இந்த இரண்டு இருள் கிரகங்கள் மட்டும்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதிலும் ஒரு கிரகத்தின் உண்மையான குணத்தையே நேர் எதிராக மாற்றிப் பாதிக்கும் வல்லமை இராகுவிற்கு மட்டுமே உண்டு.
என்னுடைய முப்பது ஆண்டுகளுக்கும் மேலான ஆய்வில் நான் அறிந்தவைகளில் ஒன்று கோட்சாரத்தில் ஏழரைச்சனியைப் போலவே மூன்று தொடர் இராசிகளைப் பாதிக்கும் திறன் இராகுவிற்கும் உண்டு என்பதுதான்.
அதாவது சனி என்பதும் இராகுவைப் போலவே இருள் கிரகம்தான். ஆனால் பருப்பொருள் உடைய வாயுக்கிரகம். அதாவது சனி திடப் பொருள்களான மண், பாறைகள் போன்றவைகளால் அமைந்த கிரகம் அல்ல. பஞ்சபூதக் கிரகங்களில் அவர் முற்றிலும் வாயுவினால் மட்டுமேயான எடையற்ற கிரகம் ஆவார்.
அதாவது சனியின் எடை நீரின் அடர்த்தியை விடக் குறைவு. சனியை நீங்கள் அதை விடப் பெரிய கடலில் தள்ளுவீர்களே ஆனால் அது அந்தக் கடலில் மிதக்கும். சூரியனிடமிருந்து அவர் வெகு தூரத்தில் இருப்பதால் அவருக்கு கிடைக்கும் சூரிய ஒளியும் குறைவு, அதனால் அவரின் பிரதிபலிப்புத் திறனும் குறைவு எனும் நிலையில் அவர் இருள் கிரகம் ஆகிறார்.
இருளாகிய சனி கோட்சாரத்தில் தான் இருக்கும் இராசியையும், அதன் முன்பின் இராசியையும் ஏழரைச்சனியாகி பாதிப்பது போல கோட்சாரத்தில் ஒரு இராசியில் தங்கி இருக்கும் இராகுவும் தன் முன்பின் ராசிகளைப் பாதிக்கவே செய்கின்றார்.
ஆனால் இராகுவின் கடுமை சனியைப்போல் இல்லாமல் சற்றுக் குறைவு. அதற்கு அவர் பருப்பொருள் அற்ற வெறும் நிழல் கிரகம் என்பதும் ஒரு காரணம்.
எதையுமே நேரிடையாகச் சொல்லாமல் மறைபொருளாகச் சொல்லும் நமது கிரந்தங்களில் ஞானிகள் 3,11 மிடங்களில் இருக்கும் இராகு கேதுக்கள் நன்மையைச் செய்வார்கள் என்று சொல்வதன் உண்மையான சூட்சுமம் என்னவெனில், மேற்சொன்ன இடங்களில் இராகுவோ கேதுவோ இருக்கும் நிலையில் இந்த பாவங்களின் நேர் எதிர் பாவமான இலக்கினத்தின் அதிர்ஷ்ட வீடுகள் ஐந்து மற்றும் ஒன்பதில் இதன் மறுமுனைக்கிரகம் இருந்து நல்ல பலன்களை மற்றொரு முனையான 3,11 மிடங்களுக்கு தரும் என்பதுதான்.
அதாவது மூன்றாமிடத்தில் ராகு இருக்கும் நிலையில் லக்னத்தின் அதிர்ஷ்ட பாவமான ஒன்பதில் கேது இருந்து ராகுவின் மூலமாக நல்ல பலன்களை எடுத்துத் தரும். பதினொன்றில் ராகு இருக்கும் நிலையில் இன்னொரு அதிர்ஷ்ட ஸ்தானமான ஐந்தாமிடத்தில் கேது இருந்து அந்த பாவ நன்மைகளைச் செய்யும்.
இன்னொரு சூட்சுமத்தையும் சொல்கிறேன்...
எப்பொழுதுமே இராகுவிற்கு பலன் கூறும் போது கேது இருக்கும் இடத்தின் தன்மையிலும், அதன் பார்வையிலும், கேதுவிற்கு பலன் சொல்லும் போது இராகு இருக்குமிடத்தின் தன்மையிலும், அதன் பார்வையிலும் பலன் சொல்லுங்கள். மிகச் சரியாக வரும்.
மற்ற ஏழு கிரகங்களும் அவை இருக்கும் நட்சத்திர நாதனின் அடிப்படையிலேயே தனது தசையில் முதன்மைப் பலன்களைச் செய்யும் நிலையில் இராகு கேதுக்கள் சார அடிப்படையில் முதன்மைப் பலன்களை செய்வது இல்லை. இது எனது நீண்ட ஆய்வில் கிடைத்த தீர்க்கமான முடிவாகும். இதனை நீங்கள் நன்கு அறிந்த ஜாதகங்களுடன் ஒப்பிட்டுப் பார்தால் உங்களுக்கும் இந்த உண்மை புரியும்.
இராகு கேதுக்கள் முதலில்...
தன்னுடன் இணைந்த கிரகம், பிறகு
தான் இருக்கும் வீட்டின் அதிபதி, அடுத்து
தன்னைப் பார்த்த கிரகம், பின்னர்
தான் பெற்ற சாரநாதன்,
இறுதியாக
தனக்கு கேந்திரங்களில் இருக்கும் கிரங்களின் தன்மை
அல்லது
தான் சாரமளித்த கிரகங்களின் தன்மை
என்ற வரிசைப்படியே தனது தசையில் பலன்களைச் செய்கின்றன.
மற்ற கிரகங்களின் இருப்பை நாம் எப்போதும் உணருகின்றோம். அவற்றை வெறுங்கண்ணால் பார்க்கவும் செய்கின்றோம் எனும் நிலையில் இராகு கேதுக்களை நாம் கிரகண காலங்களில் மட்டுமே பார்க்க முடியும்.
இன்னொரு வினோத விளைவாக திருக்கணித பஞ்சாங்கம் சரியா? வாக்கியப் பஞ்சாங்கம் சரியா? என்ற விவாதத்தில் பெரும்பாலானோரை திருக்கணிதத்தின் பக்கம் சாய வைத்ததும் இந்த இராகு கேதுக்கள் தான்.
எப்படி எனில் திருக்கணிதத்திற்கும், வாக்கியத்திற்கும் கிரகங்கள் அமைந்திருக்கும் டிகிரி அளவில் சில வித்தியாசங்கள் உள்ளன. இவற்றில் எது சரி என்பதைச் சரி பார்க்க, சாதாரண மனிதராகிய நாம் மகாவிஷ்ணுவைப் போல விஸ்வரூபம் எடுத்து வானத்துக்கு மேலே நின்று பார்த்துத்தான் கிரகங்களின் சரியான இருப்பிடத்தை அடிக்கணக்கில் துல்லியமாக அளவெடுக்க முடியும்.
ஆனால் சூரிய சந்திரர்களை மறைக்கும் இராகு கேதுக்களின் இருப்பு சிறிது மாறினாலும் குறிப்பிட்ட நேரத்தில் கிரகணம் வராது என்பது உண்மை.
இதன் அடிப்படையில் வாக்கியப் பஞ்சாங்க கணிப்புகள் சிறிது பிசகுவதால் சமீபத்திய வருடங்களில் திருக்கணித கிரகண நேரத்தையே வாக்கியப் பஞ்சாங்கங்கள் எடுத்து வெளியிடுகின்றன.
செவ்வாய், சனி ஆகிய இரு பாவக் கிரகங்களின் தொடர்பையோ இணைவையோ, பார்வையையோ பெற்ற இராகு கேதுக்கள் மிகக் கடுமையான பலன்களைச் செய்யும். ஆனால் இவ்விரு கிரகங்கள் நீசம் பெறும் நிலையில் மேஷ கடகத்தில் அவர்களுடன் இணைந்து இருக்கும் இராகு கெடுபலன்களைக் குறைத்துத்தான் செய்கிறார்.
மேலும் அஷ்டமாதிபத்தியம் பெற்ற பாவக் கிரகங்களின் இணைவைப் பெற்ற நிழல் கிரகங்கள் அல்லது எட்டாமிடத்தில் இருந்து பாவ கிரகங்களின் இணைவைப் பெற்ற இராகு கேதுக்கள் ஆகிய இரண்டு நிலையும் மிகக் கடுமையானவை.
இந்த அமைப்பில் இருக்கும் இராகு கேது தசைகள் மிகவும் மோசமான பலன்களைத் தரும். இந்த நிலைகள் இலக்கினத்திற்கு மட்டுமல்ல சந்திரனுக்கு எட்டு என்று இருந்தாலும் பொருந்தும் .
இன்னொரு சூட்சும நிலையாக ஒரு ஜாதகத்தில் இலக்கினாதிபதி கெட்டு அல்லது முற்றிலும் வலுவிழந்த நிலையில் இருந்து இராகு கேதுக்கள் இலக்கினாதிபதியோடு சம்பந்தப்படாமலேயே இலக்கினத்தில் இருக்கும் நிலையில் நிழல் கிரகங்களின் தசை நடைபெற்றால் ஜாதகரின் உடல் நலம் மற்றும் மனநலம் இரண்டையும் நாசமாக்கும்.
இலக்கினாதிபதி பாவ கிரகங்களோடு இணைந்து அவர்களது பிடியில் இருந்தால் நிலைமை இன்னும் மோசமாகும்.
மேலும் இலக்கினத்தோடும், அஷ்டமாதிபதியோடும் ஒரே நேரத்தில் இராகு சம்பந்தப்படும் நிலையில் ஜாதகரை சுயமரணம் எனும் முடிவைத் தேட வைக்கிறார். இப்படி ஒருவர் தற்கொலை முடிவெடுக்கும் நிலையில் அஷ்டமாதிபதியை இராகு பகவான் மிகவும் நெருங்கி முற்றிலும் பலவீனப்படுத்தி இருப்பார்.
மேற்கண்ட அமைப்பில் எட்டுக்குடையவன் பாவ கிரகமாக இருந்தாலோ இவர்களுடன் ஆறுக்குடையவரும் சம்பந்தப்பட்டிருந்தாலோ தற்கொலை என்பது கொடூரமான விபத்தாக மாறலாம்.
இன்னும் சில நிலைகளை அடுத்த மாதம் பார்க்கலாம்.....
சாயா கிரகங்களின் சூட்சும நிலைகள்-2

இராகு கேதுக்களைப் பற்றிய சில முக்கியமான சூட்சும நிலைகளை சென்ற மாதம் பார்த்தோம். அதன் தொடர்நிலையை இப்போது பார்க்கலாம்...
ஒரு பாவத்தில் இராகு கேதுக்கள் எப்போது அமர்கின்றனவோ, அது முதல் அந்த பாவ ஆதிபத்தியம், மற்றும் பாவாதிபதியின் தன்மைகள், அதன் காரகத்துவங்களை சாயாக்கிரகங்கள் ஆளுமை செய்கின்றன அல்லது கட்டுப்படுத்துகின்றன.
அதிலும் குறிப்பாக சில நிலைகளில் இராகு இருக்கும் பாவத்தின் அதிபதி தனது ஆதிபத்திய பலனையும், காரகத்துவங்களையும் தரும் வலிமையை இழந்து விடுறார்.
அதே நேரத்தில் அந்த வீட்டில் அமர்ந்த இராகு தனது தசையில் அந்த பாவத்தின் ஆதிபத்தியப் பலனையும், அந்த வீட்டின் அதிபதி கிரகத்தின் காரகத்துவப் பலனையும் செய்வார்.
மேலும் இராகு கேதுக்கள் அமர்ந்த இராசிநாதனின் தசை ஜாதகருக்கு வாழ்நாளில் வர இயலாத நிலை இருந்தால் முழுக்க முழுக்க அந்த பாவத்தில் அமர்ந்த நிழல் கிரகங்கள்தான் அந்த பொறுப்பை எடுத்துச் செய்கின்றன.
அதே போலத்தான் இராகுவுடன் இணைந்த கிரகத்தின் நிலையும்....! ராகுவுடன் இணைந்த கிரகத்தின் ஆதிபத்தியம் மற்றும் காரகத்துவங்களையும் இராகுதான் தனது தசையில் எடுத்துச் செய்வார்.
இன்னொரு நிலையாக இராகு அமர்ந்த பாவாதிபதி தனது தசையில் பலன்களை
மாற்றி மாறுபட்டதாகத் தருவார். அதாவது ஜோதிடரின் கணிப்பில் இந்த தசை நன்றாக இருக்காது எனும் நிலையில் அந்த தசை நற்பலன் தருவதும், நன்மைகள் செய்யும் என்ற கணிப்பில் கெடுதல்களைச் செய்து குழம்பச் செய்வதும் இராகு கேதுவின் வேலைதான்.
ஒரு கிரகத்தின் தசை எவ்வாறு பலன் தரும் என்று கணிக்கும் முன்பு அந்த கிரகத்தின் வீடுகளில் இராகு கேதுக்கள் அமர்ந்து அந்த பாவம் கெட்டுப் போயிருக்கிறதா என்பதைக் கவனித்த பின்னரே பிறகு அந்த தசையைப் பற்றிய பலன்களைச் சொல்ல வேண்டும்.
உதாரணமாக மிதுன இலக்கினத்திற்கு செவ்வாய் தசை நன்மைகளை அளிக்காது. மிதுனத்திற்கு செவ்வாய் 6, 11க்குடைய பாவி என்பதாலும், இலக்கினாதிபதி புதனுக்கு அவர் ஆகாதவர் என்பதாலும் தசையின் ஒரு பகுதியான மூன்றரை வருடங்கள் தன் ஆறாமிடத்துப் பலனை மிகக் கடுமையாகத் தந்து ஜாதகரை வாட்டி வதக்குவார்.
ஆனால் ஆறாமிடமான விருச்சிகத்தில் இராகுவும் சனியும் இணைவு பெற்றிருந்து, செவ்வாய் வேறு எங்கிருந்து தசை நடத்தினாலும் ஆறாமிட கொடிய பலன்கள் நடக்காது.
ஏனெனில், ஆறாமிட கெட்ட பலன்களை இராகு ஆளுமை செய்கிறார். மேலும் ஆறாமிடத்தில் இரண்டு பாவக்கிரகங்கள் இருந்து அந்த இடத்தைக் கெடுக்கிறார்கள். எனவே செவ்வாய் தசை நன்மை செய்யும்.
புரியவில்லையா? நிதானமாக ஒன்றுக்கு இரண்டு முறை திரும்பவும் படியுங்கள். புரியும்...!
அதே நேரத்தில் அடுத்து வரும் இராகு தசையில் முழுமையான கெடுபலன்கள் நடக்கும். ஜாதகரை இராகுதசை பிளாட்பாரத்திற்கு கொண்டு வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை.
ஏனென்றால், இராகு செவ்வாயின் வீட்டில் இருக்கிறார். விருச்சிகத்தில் அவர் உச்சபலம் பெறுவார். ( பாவக்கிரகங்கள் நன்மை செய்ய வேண்டுமானால் ஸ்தான பலம் மற்றும் நேர்வலு அடையக் கூடாது. எனது பாவக்கிரகங்களின் சூட்சுமவலுத் தியரிப்படி சூட்சுமவலு தான் பெற வேண்டும்.) அஷ்டமாதிபதி சனியின் இணைவு வேறு. அதாவது ஆறாமிட செவ்வாயின் பலனை இராகு முழுமையாகத் தன் தசையில் செய்வார்.
இன்னும் ஒரு சூட்சும நிலையாக ஆட்சி பெற்ற கிரகத்துடன் இருக்கும் இராகு கேதுக்கள் அது மூன்று பதினோராமிடங்களாக இருந்தாலும் நல்ல பலன்களைத் தருவது இல்லை.
அது ஏனெனில், இப்போது நீங்கள் உங்களின் சொந்த வீட்டில் வலுவாக இருக்கும் நிலையில் இன்னொருவர் உங்கள் வீட்டை ஆக்கிரமிக்க வருகிறார் என்றால் என்ன செய்வீர்கள்..?
எதிர்த் தாக்குதல் நடத்துவீர்கள்... இல்லையா...?
எதிரியும் வலுவானவராக இருந்தால் என்ன நடக்கும்...? சண்டையில் இருவருமே களைத்துப் போய் உங்களைச் ஜெயிக்க முடியாமல் அவரும், அவரைத் துரத்த முடியாமல் நீங்களும் அதே வீட்டில் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு குடியிருப்பீர்கள்.
அதுபோலத்தான்...
தான் ஆக்கிரமிக்கும் வீட்டின் அதிபதி அங்கேயே வலுவாக இருந்து தனக்கு எதிர்ப்புக் காட்டி நெருக்குதல் தருவதால், எதிர்ப்பு வலுத்த நிலையில் இராகு கேதுக்களும் நல்ல பலன் செய்யாது. நிழல்கிரக ஆக்கிரமிப்பால் ஆட்சி பெற்ற கிரகமும் அங்கே நல்ல பலன் செய்ய முடிவது இல்லை.
ஆனால் ஒரு நீசக்கிரகம் இராகுவுடன் இணையும் போது, ஏற்கனவே அந்தக் கிரகம் பலவீனம் பெற்றிருக்கும் நிலையில் முற்றிலுமாக இராகுவிடம் சரணடைந்து விடுவதால் அந்தக் கிரகத்தின் காரகத்துவங்களையும் ஆதிபத்தியங்களையும் முற்றிலுமாகக் கவர்ந்து, எதிர்க்க யாரும் இல்லாத நிலையில், தான் இருக்கும் பாவத்தின் தன்மைகளைப் பொறுத்து இராகு பலன்களைச் செய்கிறார்.
அடுத்த மாதமும் தொடருவோம்.....
சாயா கிரகங்களின் சூட்சும நிலைகள்-3

ராகு கேதுக்களின் நுண்ணிய செயல்பாடுகள் மற்றும் சூட்சுமங்களை இந்த மாதமும் தொடர்ந்து பார்க்கலாம் ............
நவக்கிரகங்களில் ராகுபகவான் மட்டுமே ஜோதிடர்களின் தலையைச் சுற்ற வைத்து திணற வைக்கும் கிரகம் ஆவார். ஏனெனில் ராகு இருக்கும் சில நிலைகளில் அவரது தசை நன்மையைச் செய்யுமா அல்லது தீமை தருமா என்று கணிப்பது ஜோதிடர்களுக்கு பெரும் சவாலாகவே அமையும்.
அதிலும் ராகுவோ, கேதுவோ சுயச்சாரத்தில் இருந்து விட்டால் வேறு வினையே வேண்டாம். பலன் சொல்லுவது குதிரைக் கொம்புதான்.........
மற்றுமொரு அமைப்பாக குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டோருக்கு ராகு தசை நடப்பில் இருந்தால் அக்குடும்பத்தில் பிரிவு, துயரம், மரணம், தரித்திரம் போன்ற பலன்கள் நடக்கும்.
ஏனெனில் ராகு என்பது ஒரு இருட்டு. குடும்ப உறுப்பினர்களில் பெரும்பாலோருக்கு ராகு தசை நடக்கிறது என்றால் குடும்பமே இருட்டில் இருக்கிறது என்றுதான் பொருள்.
இது போன்ற ஒட்டுமொத்த சூழ்நிலையில் ஜாதகத்தில் ராகு ஆமேடம் எருது சுறா எனப்படும் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், போன்ற ஸ்தானங்களில் இருந்தாலும் சரி, 3, 11 மிடங்களாக இருந்தாலும் சரி... கெட்ட பலன்கள்தான் நடக்கும்.
நம்முடைய மூல நூல்களில் ராகு நன்மை செய்வார் என்று கூறப்பட்டிருக்கும் அனைத்து அமைப்புகளும் ஒரு ஜாதகத்தில் இருந்து ராகு தசையில் ஜாதகர் கஷ்டப்படுகிறார் என்றால் உடனடியாக அவருடைய குடும்ப உறுப்பினர்களின் ஜாதகங்களை வாங்கிப் பாருங்கள். நிச்சயம் அவர்களில் வேறு எவருக்காவது ராகுதசை நடப்பில் இருக்கும்...
என்னுடைய அனுபவத்தில் தாய், தந்தை மற்றும் குழந்தைகளுக்கு ராகுதசை அல்லது புக்தி நடப்பில் இருந்த போது குடும்பமே வறுமை மற்றும் வேறு வகையான பிரச்னைகளில் சிக்கி சிதறுண்டு போன நிலைகளை பார்த்திருக்கிறேன்.
இந்தக் காரணத்தினால்தான் திருமணப் பொருத்தம் பார்க்கும் போது எதிர்காலத்தில் இருவருக்கும் ராகுதசை சந்திப்பு இருக்கக் கூடாது என்பதை நான் முக்கியமாகப் பார்க்கிறேன்.
அடுத்து இன்னொரு சூட்சுமத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்....
நமது கிரந்தங்களில் சொல்லப்படும் காரகன் காரக பாவத்தில் இருக்கும் �காரஹோ பாவ நாஸ்தி� எனும் நிலையை எடுத்துச் செயல்படுத்துவது பெரும்பாலும் ராகு கேதுக்கள் தான்.
உதாரணமாக, செவ்வாய் சகோதரகாரகன். அவர் சகோதர ஸ்தானமான மூன்றாமிடத்தில் வலுவுடன், சுபர் பார்வையின்றி இருந்து தசை நடத்தினால் நிச்சயம் சகோதரபிரிவு, சகோதர விரயம், உடன்பிறப்பால் தொல்லை போன்ற பலன்களைச் செய்வார்.
இதில் செவ்வாய் தசை ஏழுவருடம் என்ற நிலையில் மிகக் கடுமையான சகோதர பலனை ஏழு வருடங்களில் எப்போது செய்வார் என்று கணிப்பது மிகவும் கடினம்.
இந்த நிலையில் ராகுவோ கேதுவோ செவ்வாயின் வீடுகளில் இருந்தாலோ, அல்லது செவ்வாயின் பார்வையைப் பெற்றிருந்தாலோ, அல்லது வேறு ஏதேனும் ஒரு வகையில் செவ்வாயின் சம்பந்தத்தைப் பெற்றிருந்தாலோ அவர்களின் புக்திகளில் சகோதர விரயம் போன்ற கடுமையான பலன்கள் இருக்கும்.
அதிலும் ராகுவுக்கோ கேதுவுக்கோ ஆறு எட்டாமிட சம்பந்தம் இருந்தால் அவர்களது புக்திகளில் சகோதரனை மாரகம் செய்து �காரஹோ பாவ நாஸ்தி� யை செயல்படுத்துவார்கள்.
மேலும் குழந்தைப் பருவத்தில் வரும் ராகு தசை சிறுவயது சுக்கிர தசையைப் போலவே நன்மைகளைத் தராது.
�குட்டிச் சுக்கிரன் குடியைக் கெடுக்கும்� �குட்டிச் சுக்கிரன் கொட்டிக் கவிழ்க்கும்� என்பது போன்ற சிறுவயது சுக்கிர தசையைப் பற்றிய பழமொழிகளை நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள் .
அது ஏனெனில்...
சுக்கிரன் காமத்திற்கு காரணமான கிரகம். சிறு வயதில் உடல் ரீதியாக காமத்திற்கு தயாராகாத நிலையில் வரும் சுக்கிர தசையில் ஜாதகர் இனம் புரியாத பாலியல் உணர்வுகளால் தூண்டப்பட்டு மனரீதியாக அலைக்கழிக்கப் படுவார்.
காமத்திற்கு உடலும் தயாராகாமல் மனமுதிர்ச்சியும் இல்லாத இளம் பருவத்தில் வரும் சுக்கிரதசை ஜாதகரை காமத்தைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கத் தூண்டும் மற்றும் வேறுவழியில் இட்டுச் செல்லும் என்பதால்தான் நமது கிரந்தங்கள் சுக்கிரதசை நடுத்தர வயதில் அதாவது காமத்திற்கு அடிமையாகாத 32 வயதிற்கு மேல் வரவேண்டும் என்று குறிப்பிடுகின்றன.
அதுபோலவே ராகு என்பவன் ஒருநிலையில் ஞானகாரகனாகவும் இன்னொரு நிலையில் சாதுரியமாக ஏமாற்றும் கிரகமாகவும் செயல்படுவார். அதாவது தான் ஏமாறுகிறோம் என்பதே தெரியாமல் தன்னிடம் சந்தோஷமாக ஏமாந்து செல்பவர்களை உண்டாக்கும் திறமையை ராகு அளிப்பார்.
மேலே கண்ட ஞான, மற்றும் ஏமாற்றும் இரண்டு நிலைகளையுமே சிறு வயதில் செய்ய முடியாது என்பதும் ராகுதசை சிறு வயதில் பலனளிக்காது என்பதற்கு ஒரு காரணம்.
சிறு வயதில் நமக்கு பள்ளிப் படிப்பைத் தவிர வேறு எந்த வேலைகளும் இக்காலத்தில் இல்லை என்பதால்தான் அதற்கான முரண்பாடான ஞானகாரக ராகு தசை நடக்கும் போது கல்வியில் தடை, படிப்பு சரிவர வராதது போன்ற பலன்கள் நடக்கின்றன.
அடுத்து இன்னொரு நிலையாக இளம் பருவத்தில் காமத்தை அறிமுகப் படுத்துவதும், காதல் என்ற பெயரில் கற்பிழக்கச் செய்வதும் இந்த ராகு கேதுக்கள் தான்.
அதிலும் பருவ வயதுப் பெண்களுக்கு ராகுதசையோ புக்தியோ நடைபெறுமாயின் பெற்றோர்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும். ஆறு மற்றும் எட்டில் இருக்கும் ராகுதசை புக்தி அல்லது அஷ்டமாதிபதி தொடர்பை பெற்ற ராகு கேதுக்களின் தசை புக்திகளில் கண்டிப்பாக ஒரு இளம்பெண் காதல் என்ற பெயரில் ஏமாறுவார்.
தனக்கு முற்றிலும் பொருத்தமில்லாத, தன்னை விட அனைத்து தகுதிகளிலும் குறைந்த நேர்மாறன ஒருவரை ஒரு இளம் பெண் தேர்ந்தெடுத்து அவரிடம் தன் மனம், உடல் இரண்டையும் ஒப்படைப்பதும், அவருடன் ஓடிப் போய் வாழ்க்கையைத் தொலைப்பதும் இந்த ராகு கேதுக்களின் திருவிளையாடல் தான்....
நன்கு படித்த தகுதி வாய்ந்த ஒரு பெண் ஒரு குறைந்த படிப்பு மட்டுமே படித்த மெக்கானிக்கையோ, ஆட்டோ டிரைவரையோ அல்லது ஒன்றுமே செய்யாமல் ஊர் சுற்றித் திரிபவரையோ காதலிக்கிறாரா..? அந்த பெண்ணின் ஜாதகத்தை வாங்கிப் பாருங்கள். அதில் எட்டாமிடத்தின் சம்பந்தமோ அல்லது அஷ்டமாதிபதியின் சம்பந்தமோ பெற்ற ராகு கேதுக்கள் இருப்பார்கள்.
இன்னும் சில நிலைகளை அடுத்த மாதம் பார்க்கலாம்......
சாயா கிரகங்களின் சூட்சும நிலைகள்-4

ராகு கேதுக்களைப் பற்றிய மேலும் சில நிலைகளை இந்த மாதமும் தொடர்ந்து பார்க்கலாம்...
பொதுவாக ராகு சனியைப் போலவும் கேது செவ்வாயைப் போலவும் பலன் அளிப்பார்கள் என்று நமது மூல நூல்களில் ஞானிகளால் சொல்லப் பட்டிருக்கிறது.
இதில் மறைந்திருக்கும் சூட்சுமம் என்னவெனில்....
சனியின் நண்பர்களான சுக்கிரன் புதன் ஆகியோரின் லக்னங்களான ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மற்றும் மகரம், கும்பம் ஆகிய லக்னங்களில் பிறந்தவர்களுக்கு ராகு நன்மைகளைச் செய்வார்.
செவ்வாயின் நட்புக் கிரகங்களான சூரியன் சந்திரன் குரு ஆகியோரின் லக்னங்களான கடகம் சிம்மம் தனுசு மீனம் மற்றும் மேஷம் விருச்சிகம் ஆகிய ஆறு லக்னங்களில் பிறந்தவர்களுக்கு கேது நன்மைகளைச் செய்வார் என்பதுதான்.
மேற்படி இரு பிரிவு லக்னங்களில் பிறந்தவர்களுக்கும் அவரவர் லக்னங்களுக்கு ஏற்றபடி நல்ல அமைப்புகளில் ராகு கேதுக்கள் அமைந்து விட்டால் மிகப் பெரிய நன்மைகளைச் செய்கின்றன.
அதோடு இன்னும் ஒரு சூட்சுமமாக மிதுன லக்னத்திற்கு மட்டும் ராகுபகவான் கெடுதல்களைச் செய்யாத யோகர் எனும் நிலை பெறுவார்.
பொதுவாக மிதுனத்திற்கு சுக்கிரன் மட்டுமே சுபர் ஆகிறார். பாக்யாதிபதியான சனி பகவான் அஷ்டமாதிபத்தியமும் அடைவதாலும் லக்னாதிபதியான புதன் நான்காமிட கேந்திரத்திற்கு அதிபதியாகி கேந்திராதிபத்திய தோஷம் அடைவதாலும் இருவருமே சுபர் எனும் நிலை பெற மாட்டார்கள்.
அதோடு இயற்கைப் பாவக் கிரகமான சனிபகவான் மிதுனத்திற்கு ஒன்பதாம் பாவமான திரிகோணத்திற்கு அதிபதியாவதால் ராகு மட்டுமே மிதுனத்திற்கு யோகம் செய்வார். (சுபர் வேறு யோகர் வேறு என்பதை புரிந்து கொண்டு படியுங்கள்.)
என்னுடைய முப்பதாண்டு கால ஆராய்ச்சியில் மிதுன லக்னத்தவர்களுக்கு ராகு கெட்ட இடத்தில் இருந்தாலும் அல்லது பாவர்களுடன் கூடி தசை நடத்தினாலும் முற்றிலும் கெடுதல்கள் செய்வது இல்லை.
பெரும்பாலான வடமொழிக் கிரந்தங்கள் ராகுவிற்கு மிதுனம் உச்ச வீடு என்று சொல்கின்றன. இது கூட மிதுனத்திற்கு ராகு யோகம் செய்வதன் காரணமாக இருக்கலாம்.
மேலும் ராகு கேதுக்களின் ஆட்சி உச்ச நீச நிலைகளைப் பற்றி பல விதமான கருத்துக்கள் உள்ளன.
ராகு சனியைப் போல செயல்படுபவர் என்பதால் சனியின் ஸ்திர வீடான கும்பம் ராகுவின் ஆட்சி வீடு எனவும், கேது செவ்வாயைப் போல பலன்களைத் தருவார் என்பதால் செவ்வாயின் ஸ்திர வீடான விருச்சிகம் கேதுவிற்கு ஆட்சி வீடு எனவும் சில வடமொழி நூல்கள் குறிப்பிடுகின்றன.
ஆனால் ஏற்கனவே பருப்பொருளுடைய முழுமையான கிரகங்கள் ராசிமண்டலத்தில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தும் இடங்கள் நம் ஞானிகளால் அறிந்து பகுக்கப்பட்டு ஏழு கிரகங்களுக்குமான ஆட்சி வீடுகளாக பிரித்து ஒதுக்கப்பட்டு விட்ட நிலையில் பருப்பொருளே இல்லாத வெறும் நிழல்களான ராகு கேதுக்களுக்கு அவைகளில் இரண்டை ஒதுக்குவது அர்த்தமற்றதாகவும் நமது ஒப்பற்ற ஞானிகளன்றி வேறு எவரோ செய்த இடைச்சொருகலாகவும் எனக்குத் தோன்றுகிறது.
எனவே ராகு கேதுக்களுக்கு ஆட்சி வீடுகள் என்ற ஆராய்ச்சியே தவறு என்றும் சொல்லத் தோன்றுகிறது.
ஆனால், பராசர ஹோரையில் மகரிஷி பராசரர் ராகுவிற்கு ரிஷபம் உச்சவீடு, கடகம் மூலத்திரிகோணம், கன்னி ஆட்சி வீடு என்று கூறுகிறார். மகரிஷி காளிதாசரும் தனது உத்தர காலாம்ருதத்தில் ராகுவிற்கு ரிஷபம் உச்ச வீடு என்கிறார்.
பெரும்பாலான தென்னிந்திய மூல நூல்களில் ராகுவிற்கு விருச்சிகம் உச்சம் ரிஷபம் நீசம் என்றே சொல்லப்பட்டிருக்கிறது.
என்னுடைய நீண்ட கால அனுபவத்தின்படியும் பாவக் கிரகங்கள் நேர்வலுவடையக் கூடாது, அப்படி வலுவடைந்து ஸ்தான பலம் பெற்றால் கெடுப்பார்கள் என்ற எனது �பாவக் கிரகங்களின் சூட்சும வலு� தியரிப்படியும் ரிஷப ராகு எவரையும் கெடுத்தது இல்லை. நன்மைகள்தான் செய்கிறது.
அதே நேரத்தில் விருச்சிக ராகு தசையில் கெட்ட பலன்கள்தான் நடக்கின்றன என்பதால் விருச்சிகம் ராகுவிற்கு உச்சம்... ரிஷபம் ராகுவிற்கு நீசம் என்றே நான் கணிக்கிறேன்.
மேலும் கால புருஷ தத்துவத்தின்படி நமக்கு ஒளி வழங்கும் மூல ஒளிக் கிரகங்களான சூரியனுக்கும் சந்திரனுக்கும் கால புருஷனின் முதல் இரண்டு வீடுகளான மேஷமும் ரிஷபமும் உச்ச வீடுகளாயின.
இந்நிலையில் சந்திரனால் உருவாகும் நிழல் கிரகமான ராகுவிற்கும் சந்திரனின் உச்ச வீடான ரிஷபத்தை பங்கிட்டு அளிப்பது இருட்டுக்கும் வெளிச்சத்திற்கும் ஒரே இடம் என்ற நிலையில் பொருத்தமற்றது என்பது என் கருத்து.
அதே நேரத்தில் இருளும் ஒளியும் எதிர் எதிர் நிலை கொண்டவை என்பதாலும் விருச்சிகத்தில் வேறு எந்த கிரகமும் உச்சநிலை அடைவதில்லை என்பதாலும் ரிஷபத்தின் நேர் எதிர் வீடான விருச்சிகத்தை ராகுவிற்கு உச்ச வீடாகக் கொள்வதே பொருத்தமாகவும் இருக்கும். (இது பற்றிய இன்னும் சில சூட்சும விளக்கங்கள் இருக்கின்றன. அவற்றை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன்.)
அடுத்து ராகு கேதுக்களுக்கு 3 7 11 மிட பார்வை உண்டு என்று சிலர் கூறுகின்றனர். இதைப் பற்றியும் நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். கிரகங்களின் பார்வை என்பதே அவற்றின் ஒளி வீச்சுத்தான் என்பதை ஏற்கனவே நான் விளக்கியிருக்கிறேன்.
அதன்படி சுயஒளியும் இல்லாத, ஒளியை பிரதிபலிக்கவும் முடியாத வெறும் இருட்டுக்களான ராகு கேதுக்களுக்கு பார்வை பலம் உண்டு என்பது இயல்புக்கு மாறானது. எனவே ராகு கேதுக்களுக்கு பார்வை பலம் இல்லை என்பதே எனது கருத்து.
ஆயினும் ராகு கேதுக்கள் ஒருவருக்கு ஒருவர் நேர் எதிராக 180 டிகிரியில் சுற்றி வருபவை என்பதால் ஒன்று அடுத்ததை... அதாவது அது நிற்கும் ஏழாம் பாவத்தை நிச்சயம் பாதிக்கும். அதனை ஏழாம் பார்வை என்பது பொருத்தமற்றது.
ராகு கேதுவை ஏழாம் பார்வையாக பார்க்கிறது கேது ஏழாம் பார்வையாக ராகுவை பார்க்கிறது என்று சொல்லக் கூடாது. அது தவறு.
எனது இந்தக் கருத்தை மறுப்பவர்கள் ராகுவின் மூன்றாம் பார்வையில் இந்த பலன் நடந்தது, பதினோராம் பார்வையால் இந்த பாவம் பாதிக்கப்பட்டது என்று ஒரு ஜாதகத்தை உதாரணமாகச் சொல்வீர்களேயானால் நான் உங்களுக்கு சொல்வது...
அந்த ஜாதகத்தை இன்னும் நன்றாக கவனமுடன் பாருங்கள். அந்தச் செயலோ அந்த பாவமோ வேறு ஏதேனும் ஒரு வகையில் தான் பாதிக்கப் பட்டிருக்கும் என்பதை நீங்களே உணருவீர்கள். இது உறுதி.
நமது ஜோதிடத்தின் மூலநாயகனும், தன் நேர் எதிரில் வருபவர்களை அஸ்தமனமாக்கி வலுவிழக்க வைப்பவனும், நாம் அனைவரும் தோன்றக் காரணமான முழுமுதல் ஜோதியான சூரியனையே மறைத்து பலமிழக்க வைப்பவரான ராகு பகவானின் இன்னும் சில சூட்சுமங்களை அடுத்த மாதமும் பார்க்கலாம்.....
சாயா கிரகங்களின் சூட்சும நிலைகள்-5

நமது பூமி உள்ளிட்ட அனைத்துக் கிரகங்களும், பூமியில் உயிரினங்களும் தோன்றக் காரணமான சூரியனின் ஒளியையே சிறிது நேரம் மறைத்து பூமிக்கு கிடைக்காமல் தடுக்கும் ஆற்றல் ராகு கேதுக்களுக்கு இருப்பதாலேயே நமது மூல நூல்கள் ஒன்பது கிரகங்களின் வலிமையை கணக்கிடும்போது ராகு கேதுக்களுக்கு முதலிடம் அளிக்கின்றன.
ஒரு கிரகத்தின் காரகத்துவம் மற்றும் ஜாதகத்தில் அந்தக் கிரகம் ஏற்றுள்ள ஆதிபத்தியத்தின் தன்மைகளைத் தரவிடாமல் முழுமையாகத் தடுக்கும், அல்லது குறைக்கும் ஆற்றல் நவக்கிரகங்களில் ராகுவிற்கு மட்டுமே உண்டு.
சூரியனுக்கு அருகே ஒரு குறிப்பிட்ட டிகிரிக்குள் நெருங்கும் கிரகங்கள் அஸ்தங்கம் எனும் பெயரில் எவ்வாறு வலுவிழக்கின்றனவோ, அதே போல் ராகுவிடம் நெருங்கும் கிரகமும் வலுவிழக்கும். குறிப்பாக ராகுவிற்கு எட்டு டிகிரிக்குள் நெருங்கும் கிரகம் ராகுவினால் சுத்தமாக பலவீனமாக்கப்பட்டு தனது இயல்புகள் அனைத்தையும் பறி கொடுத்து விடும்.
அதாவது அதிக ஒளியையும், ஒளியே இல்லாத இருட்டையும் நெருங்கும் கிரகங்கள் தங்களின் சுயத்தன்மையை இழப்பார்கள்.
உதாரணமாக, ராகுவிடம் மிக நெருங்கும் குருபகவான் குழந்தைகளையும், அதிகமான பணவசதியையும், நேர்மையான குணத்தையும், ஆன்மீக ஈடுபாட்டையும் தரும் சக்தி அற்றவர்.
ராகுவுடன் நெருங்கி இணையும் சுக்கிர பகவான் பெண் சுகத்தையும், உல்லாசத்தையும், காதல் அனுபவம் மற்றும் சுக வாழ்வையும் தர மாட்டார்.
செவ்வாய் பகவான் தன் இயல்புகளான கோபம் வீரம் வெறித்தனம் கடின மனம் சகோதரம் போன்றவற்றை இழப்பார்.
ராகுவிடம் சரணடையும் சனியால் வறுமை, தரித்திரம், கடன், நோய், உடல் ஊனம் போன்றவற்றைத் தர இயலாது. சந்திரன் மனதிற்கும், மனம் எடுக்கும் முடிவுகளுக்கும் காரணமானவர் என்பதால் ராகுவிடம் நெருங்கும் போது மனதைக் கட்டுப்படுத்தும் ஆற்றலை ஜாதகர் இழந்து மனநலம் குன்றுவார். தாயன்பு பறிபோகும்.
புதனுடன் இணையும் ராகுவால் நிபுணத்துவம் குறையும். அறிவாற்றல் அளவோடுதான் இருக்கும். கணிதத்திறமை காணாமல் போகும். சூரியன் ஆன்ம பலத்தையும், அரசுத்தொடர்பு, அரசலாபம், தந்தையின் ஆதரவு போன்றவற்றைத் தரும் வலிமையை இழப்பார்.
ஒரு கிரகம் உச்சம் மூலத்திரிகோணம் ஆட்சி போன்ற எத்தகைய வலிமை நிலையில் இருந்தாலும் சரி. அது ராகுவுடன் மிகவும் நெருங்கினால் அத்தனை வலிமையையும் இழக்கும். நான் மேலே சொன்னவைகளை நீங்கள் நன்றாக அறிந்த ஜாதகத்தில் ஒப்பிட்டு ஆராய்ந்து பாருங்கள். மிகச் சரியாக இருக்கும்.
உதாரணத்திற்கு நம் காலத்தில் வாழ்ந்த தெய்வம், காமாட்சி என்ற பெயர் தவிர பெண்ணின் வாசனை கூட அறியாமல், துறவுக்கு உண்மை அர்த்தமாய் சொகுசு வாழ்க்கை தவிர்த்து, நம் கண்முன் நடமாடிய மகான் காஞ்சி மகாபெரியவரின் அவதார ஜாதகத்தில் மீனத்தில் உச்ச சுக்கிரனுடன் ராகு இணைந்ததைச் சொல்லலாம்.
சூரியனுடன் இணைந்து அஸ்தங்கம் பெற்றிருக்கும் நிலையில் கூட ஒரு கிரகம் பரிவர்த்தனை அடைந்திருந்தால் தன் சுயபலத்தை பெறும் என்றும் நமது கிரந்தங்களில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் ராகுவிடம் இணைந்த கிரகங்களுக்கு அவ்வாறு விமோசனம் கிடையாது.
(எப்போதும் சூரியனுடன் இணைந்தே இயங்குவதால் புதனுக்கு அஸ்தங்க தோஷம் இல்லை என்று மகாபுருஷர் காளிதாசர் சொல்லுகிறார். அதுபோல சுக்கிரனுக்கும் அஸ்தங்க தோஷம் இல்லை என்று வேறு சில மூலநூல்கள் சொல்லுகின்றன.)
நான் மேலே சொன்னவைகள் குறிப்பிட்ட கிரகங்களின் காரகத்துவங்கள் மட்டும்தான். ஜாதகத்தில் மேற்கண்ட கிரகங்கள் எந்த ஆதிபத்தியங்களுக்கு உரியனவோ அவைகளும் அந்தக் கிரகங்கள் வலுவிழந்ததால் பாதிக்கப்படும்.
அதாவது ஐந்துக்குடையவன் ராகுவுடன் நெருங்கினால் புத்திரபாக்கியமும், அதிர்ஷ்டமும், சிந்தனை மற்றும் செயல்திறனும் பாதிக்கப்படும். ஆறுக்குடையவன் இணைந்தால் ஜாதகர் நோயற்றநிலை, கடன் வாங்க அவசியமின்மை, எதிரிகளற்ற வாழ்வு போன்றவைகள் அமையப் பெறுவார்.
ஏழுக்குடையவனுடன் ராகு இணைவு பெற்றால் தாமததிருமணம் அல்லது திருமணமே இல்லாத நிலை, அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் போன்ற பலன்கள் நடைபெறும். அஷ்டமாதிபதி ராகுவுடன் மிக நெருங்கி இருந்தால் அந்த ஜாதகர் தீர்க்காயுள் வாழுவது கடினம்.
அதே நேரத்தில் இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். தன்னுடன் மிக நெருங்காமல் அதே ராசியில் குறிப்பிட்ட டிகிரி இடைவெளியில் இருக்கும் கிரகங்களின் இயல்பை ராகு பெறுவார் என்பதால், தன்னுடன் இணைந்த கிரகங்களின் காரக மற்றும் ஆதிபத்திய பலன்களை ராகுபகவான் தனது தசை புக்திகளில் செய்வார். அதாவது அவர்களிடமிருந்து பறித்ததை ராகு தனது தசையில் தருவார்.
உதாரணமாக, குருவுடன் இணைந்து நல்ல ஸ்தானங்களில் அமர்ந்த ராகு தசையில் மிகப்பெரிய தனலாபம், புத்திர பாக்கியம் போன்றவைகளும் சுக்கிரனுடன் இணைந்து நல்ல இடங்களில் அமர்ந்த ராகுதசையில் சொகுசு வாழ்க்கையும் பெண்களால் சுகமும் இருக்கும்.
அதே போல பாவக்கிரகங்களுடன் இணைந்த ராகு அவர்களின் கெட்ட காரகத்துவங்களை தனது தசையில் பிரதிபலித்து ஜாதகரை கஷ்டங்களுக்கு உள்ளாக்குவார். குறிப்பாக சனி செவ்வாயின் பார்வையைப் பெற்ற ராகு தன் தசையில் நல்ல பலன்களைச் செய்வது கடினம். மேற்கண்ட இருவரும் லக்ன சுபர்களாக இருந்தாலும் இதே நிலைதான்.
ஒரு கிரகம் ராகுவுடன் எத்தனை டிகிரியில் இணைந்திருக்கிறது, வேறு ஏதாவது பலவீனத்தை அந்தக் கிரகம் அடைந்திருக்கிறதா, அதோடு அவர்கள் இருக்கும் ராசி எப்படிப்பட்டது, லக்னத்திற்கு அந்த ராசி எத்தனையாவது பாவம், மற்றும் ராகுவிற்கு அந்த பாவம் வலிமையான இடமா என்பதோடு
வேறு யாருடைய பார்வை மற்றும் தொடர்பு ராகுவிற்கு இருக்கிறது.... ராகுவும் அவருடன் இணைந்த கிரகமும் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறார்கள்.... அந்த நட்சத்திர நாதன் லக்னத்திற்கு சுபரா அசுபரா என்ன பாவத்திற்கு உரியவர்.... போன்ற நுணுக்கமான விஷயங்களை உங்களால் சரியாகக் கணிக்க முடிந்தால் போதும். ஒருவருக்கு ராகுதசை எத்தகைய பலன் தரும் என்பதை நீங்கள் துல்லியமாகச் சொல்லி விட முடியும்.
மேலும் இந்த நூற்றாண்டின் ஜோதிடஞானி, குருநாதர், ஜோதிஷவாசஸ்பதி, தெய்வக்ஞசிரோமணி மு. மாதேஸ்வரன் அய்யா அவர்கள் தன்னுடைய ஆராய்ச்சியில் ராகுவிற்கு 3 6 10 11 மிடங்களைப் போலவே பனிரெண்டாமிடமும் நல்ல பலன்களைத் தரும் இடம்தான் என்று கூறுகிறார்.
அதைப் பற்றியும் கேந்திர கோணங்களில் இருக்கும் ராகு கேதுக்கள் என்ன பலன்களைத் தருவார்கள் என்பது பற்றியும் அடுத்த மாதம் பார்க்கலாம்......
சாயா கிரகங்களின் சூட்சும நிலைகள்-
இந்த நுற்றாண்டில் தமிழ் ஜோதிட உலகிற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம், குருநாதர், ஜோதிஷவாசஸ்பதி மு. மாதேஸ்வரன் அய்யா அவர்கள் தன்னுடைய மிகப் பெரிய அனுபவத்தின் கருத்தாக ராகுவிற்கு பனிரெண்டாமிடமும் மிக நல்ல ஸ்தானம்தான். விரயராகு கெடுதல்கள் செய்வதில்லை என்று கூறுகிறார்.
மிகப் பெரும்பாலான வி.ஐ.பி க்களின் ஜாதகங்களில் இந்த பனிரெண்டாமிட ராகுவை நான் பார்த்திருக்கிறேன். மேலும் குரு தசை மிகவும் யோகம் செய்வதற்கான அடிப்படை அஸ்திவாரங்களை பனிரெண்டாமிட ராகு செய்வார்.
பொதுவாக தான் இருக்கும் வீட்டை கெடுக்கும் இயல்புடையவரான ராகு பனிரெண்டாமிடம் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய வீடுகளாக அமையும் பட்சத்திலும், அங்கே சுபத்துவம் அடைந்தாலும் அதிகமான நன்மைகளைச் செய்வார்.
அதாவது முக்கியமாக பனிரெண்டாமிடத்தின் அசுப ஆதிபத்தியமான விரயங்களைத் தடுத்து சேமிக்கும் அளவிற்கு ஜாதகருக்கு வேறுவழிகளில் பண வரவை அளிப்பார்.
அடுத்து கேந்திர கோணங்களில் இருக்கும் ராகு தனது தசா புக்திகளில் அந்த பாவத்தைக் கெடுப்பார் என்பது பொதுவான ஜோதிட விதி.
ஆனால் இயற்கை சுபக்கிரகங்கள் கேந்திரங்களுக்கு அதிபதியாகக் கூடாது என்ற விதியின் மறைவில் இயற்கை பாவக் கிரகங்கள் திரிகோணத்திற்கு அதிபதியாகக் கூடாது என்ற சூட்சுமம் உள்ளது. இதுவே பாதகாதிபதிகளின் தத்துவம் என்ற எனது ஆய்வு முடிவினை ஒட்டியும், இயற்கை பாவரான ராகு தான் இருக்கும் வீட்டு அதிபதியின் தன்மையை பிரதிபலிப்பவர் என்பதாலும் சனி செவ்வாயின் வீடுகள் ஐந்து ஒன்பதாம் இடங்களாகி அந்த வீடுகளில் இருந்தால் மிகக் கடுமையான கெடுபலன்களைத் தருவார்.
இந்த அமைப்பின்படி கடகம், கன்னி, துலாம், தனுசு, ஆகிய லக்னக் காரர்களுக்கு ராகு ஐந்தாமிடத்தில் கெடுதல்களைச் செய்வார்.
மேற்கண்ட அமைப்பில் நடக்கும் ராகு தசை, புக்திகளில் குழந்தைகள் சம்பந்தப் பட்டவைகளில் கெடுபலன்களும், புத்திர சோகமும், வாரிசு விரோதம், அவர்களால் அவமானம், அதிர்ஷ்டக்குறைவு, பூர்வீக சொத்துக்கள் இழப்பு போன்ற பலன்கள் நடக்கும். மேலும் ஐந்தாமிட ஆதிபத்தியங்கள் அனைத்தும் பாதிக்கப்படும்.
அதேபோல ரிஷபம், மிதுனம், சிம்மம், மீனம் ஆகிய நான்கு லக்னத்தவர்களுக்கும் ராகு ஒன்பதாமிடத்தில் கெடுபலன்களை நடத்துவார். இந்த லக்னத்தவர்களின் ஒன்பதாமிட ராகு தசையில் தந்தையின் ஆதரவை இழத்தல், தந்தையின் மறைவு, விரோதம், பாக்யங்கள் பறிபோகுதல் போன்றவை நடக்கும்.
மேலே கண்ட எட்டு லக்னங்களுக்கும் திரிகோணங்களில் ராகு தனித்த நிலையில் இருந்தால் நான் சொன்ன பலன்களே நடக்கும். அதே நேரத்தில் ராகு இந்த இடங்களில் சுபர் பார்வை பெற்றோ வேறு ஒரு கேந்திராதிபதியுடன் இணைந்து இருந்தாலோ சிறிது மாறுபாடான பலன்களைத் தருவார். ஆனாலும் அடிப்படையில் கெடுபலன்கள்தான் என்பது மாறாதது.
என்னிடம் சனி, செவ்வாயின் உச்சநிலை மற்றும் திரிகோணாதிபத்தியம் பற்றிக் கேட்பவர்கள் கடந்த ஒரு வருட காலமாக நான் ஒரு ஜோதிட வாரப் பத்திரிகையில் எழுதிய தொடரை தேடிப் பிடித்துப் படியுங்கள்.. எல்லாம் புரியும்.
இதைப் போலவே சுபக்கிரகங்கள் கேந்திராதிபத்திய தோஷம் பெறும் கேந்திர ஸ்தானங்களில் தனித்து இருக்கும் ராகு அந்த பாவத்தை முழுமையாகக் கெடுப்பார்.
ஏற்கனவே நான் இந்த தொடரில் �காரஹோ பாவ நாஸ்தி� அமைப்பை செயல்படுத்துவது ராகு கேதுக்கள் தான் என்று எழுதியதைப் போலவே கேந்திராதிபத்திய தோஷத்தை எடுத்துச் செயல்படுத்துவதும் பெரும்பாலும் ராகு கேதுக்கள் தான்.
அதிலும் சந்திரன் பூரணத்தை நெருங்கும் சமயத்தில் வளர்பிறைச் சந்திரனாக இருக்கும் போது கடகத்தில் தனித்து அமரும் ஏழாமிட ராகு மிகவும் கடுமையானவர். இந்த அமைப்பில் மகரத்தில் சந்திரன் அமர்ந்து ராகுவைப் பார்க்கும் நிலையில் ராகுதசை புக்திகளில் வாழ்க்கைத் துணையைப் பாதிப்பார்.
அதாவது கேந்திராதிபத்திய தோஷம் பெற்ற கிரகங்களின் தொடர்பைப் பெற்ற ராகு கேதுக்கள் அவர்களின் செயல்களை தாங்களே எடுத்து நடத்துவார்கள். இது ராகுதசை கேதுபுக்தியிலோ அல்லது சம்பந்தப் பட்ட கிரகங்களின் புக்தியிலோ நடக்கும்.
மேலும் 4, 7, 10 மிடங்களில் தனித்து அமரும் ராகு மேற்கண்ட பாவங்களின் ஆதிபத்தியங்களில் முக்கியமான ஒன்றை நிச்சயம் பாதிப்பார். அதாவது நான்காமிட ராகுவால் கல்வி, வீடு, வாகனம் தாயார் இவைகளில் ஏதேனும் ஒன்று, ஏழாமிட ராகுவால் வாழ்க்கைத்துணை, நண்பர்கள், மணவாழ்வு, பங்குதாரர்கள் போன்றவைகளில் ஒன்று, பத்தாமிட ராகுவால் தொழில், வேலை, வியாபாரம், வாழ்வதற்கான வழிமுறை போன்றவைகளில் ஒன்று நிச்சயம் பாதிக்கப்படும்.
அதே நேரத்தில் இது தவிர்த்து கேந்திர ராகு மற்ற பிற நன்மைகளையும் பொருளாதார மேம்பாடுகளையும் கண்டிப்பாகத் தரும்.
மேலும் மேற்கண்ட கேந்திர ஸ்தானங்களில் இருக்கும் ராகு, அந்த லக்னங்களுக்கு திரிகோணாதிபதிகளான ஐந்து மற்றும் ஒன்பதுக்குடைய கிரகங்கள் குரு, சுக்கிரன், புதன், வளர்பிறைச் சந்திரன் போன்ற இயற்கைச் சுபர்களாக இருந்து அவர்களுடன் இணைவு பெற்றிருந்தால் தன்னுடன் இணைந்தவர்களின் ஆதிபத்திய மற்றும் காரகத்துவங்களைக் கெடுத்து, அதாவது அவர்களின் பலம் மற்றும் தன்மைகளைத் தான் ஏற்றுக் கொண்டு அபரிதமான சக்தி கொண்ட சுபராக மாறி தனது தசையில் மிகப்பெரும் நன்மைகளைச் செய்வார்.
இப்படிப்பட்ட அமைப்பில் மேற்படி ஜாதகருக்கு ராகுதசை தன் வாழ்நாளில் மறக்க முடியாத அளவிற்கு உயர்வானதாக இருக்கும்.
ஏதோ ஒரு விதத்தில்  என்னுடன் தொடர்பு கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதில் இருந்து தெரிகிறது.
என்னுடைய ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் நுணுக்கமான அர்த்தங்கள் இருப்பதாலும் வார்த்தைகளை மிகக்கவனமாக நான் தேர்ந்தெடுப்பதாலும் என்னுடைய எழுத்துக்கள் படிப்பவர்களுக்கு நன்கு புரியும் என்று இதுவரை நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
ஆயினும் ஆதிபத்தியங்களுக்கும் காரகத்துவங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் தெரியாமல் சிலர் குழம்புகிறீர்கள். அதோடு ஒரு செயல் என்பது ஒரே ஒரு கிரகம் சம்பந்தப்பட்டது மட்டும் அல்ல என்பதும் ஜோதிடத்தில் அடிப்படையான பால பாடம்.
ஒரு சம்பவம் அல்லது செயல் என்பது கிரகங்களின் சேர்க்கையால் நடத்தப் பெறுவது. தனி ஒரு கிரகத்தினால் அல்லவே அல்ல. ஒரு கிரகம் மட்டுமே தனித்து எந்த ஒன்றையும் செய்யவே முடியாது.
சென்ற மாதம் நான் எழுதிய கட்டுரையில் ராகுவுடன் மிக நெருங்கும் குரு பகவானால், குழந்தைகளையும், பணத்தையும், நேர்மையான குணத்தையும், ஆன்மிக ஈடுபாட்டையும் கொடுக்க இயலாது என்று குறிப்பிட்டிருந்தேன்.
ஜோதிடத்தில் தனக்கு ஐந்ந்ந்ந்ந்ந்து வருட அனுபவம்(!) என்று தன்னைக் குறிப்பிட்டுப் பேசிய வாசகர் தன்னுடைய ஜாதகத்தில் குரு ராகுவுடன் இரண்டு டிகிரியில் இணைந்திருந்தும் தான் மிகுந்த ஆன்மிக ஈடுபாட்டுடன் இருப்பதாக குறிப்பிட்டார்.
குரு தசையில் குழந்தைகளும், பொருளாதார வசதியும் இருந்ததா? என்று கேட்டேன்... �இல்லை... அனைத்தும் தற்போதைய சனிதசையில் தான் கிடைத்தன.� என்றார். அவருக்கு விருச்சிகம் லக்னமாகி ஏழாமிடத்தில் சுபரின் ரிஷப வீட்டில் நட்புடன் திக்பலமாகி அமர்ந்த சனிதான் ஆன்மிக ஈடுபாட்டுக்கான காரண கிரகம் என்பதை விளக்கினேன்.
ஆன்மிகம் என்பது குரு, சனி, கேது ஆகிய மூன்று கிரகங்களின் பங்களிப்புக் கலவை. அதுபோலவே எந்த ஒரு காரகத்துவமும் தனி ஒரு கிரகம் மட்டும் சம்பந்தப் பட்டதாக இருக்க முடியாது.
உதாரணமாக சனி உச்சம் பெற்றால் பூரண ஆயுள் என்று சொல்லி விடமுடியாது. ஆயுள் என்பது லக்னாதிபதியும், அஷ்டமாதிபதியும், சனியும் சேர்ந்த கலவையான விஷயம்.
ஜோதிடத்தில் ஐந்து வருட அனுபவம் என்பது ஆரம்பநிலைதான். அதாவது LKG யில்தான் இப்போது இருக்கிறீர்கள். இன்னும் MA M.Phil, போன்ற முதுகலைப் படிப்பு வரை தொடரும் பாக்கியம் உங்களுக்கு கிடைத்தால் ஓரளவு புரியும் நிலைக்கு உங்களால் வர முடியும்.
அதுபோல என்னுடைய முப்பது வருட அனுபவத்தை இங்கே ஒரு மூன்று பக்கம் எழுதுவதாலோ என்னிடம் நீங்கள் மூன்று நிமிடம் தொலைபேசியில் பேசுவதாலோ நான் உங்களுக்கு முழுமையாக விளக்கி விடமுடியாது.
நான் ஒரு சூட்சுமத்தை எளிமையாக விளக்கினாலும் புரியும் தகுதி நிலை உங்களுக்கு இருந்தால்தான் அந்த சூட்சுமம் உங்களுக்கு பிடிபடும். இல்லையெனில் மண்டையைப் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டியதுதான்.
ஆயினும் வருடங்கள் கடந்தபின் புரியும் நிலை வருகையில் இந்த எளியவனின் கருத்து ஒரு நாள் உங்களுக்குப் புரியும் ...........!
அடுத்த மாதமும் ராகுவுடன் பயணிப்போம் !
சாயா கிரகங்களின் சூட்சும நிலைகள்-7

சென்ற இதழில் கேந்திர கோணங்களில் இருக்கும் ராகு செய்யும் பலன்களைப் பற்றிப் பார்த்தோம்.
தற்போது கேந்திரத்திற்கும், கோணத்திற்கும் பொதுவானது எனப்படும் லக்னத்தில் இருக்கும் ராகு என்ன செய்வார் என்பதைப் பற்றிச் சொல்லும் முன் கேந்திரம், திரிகோணம் என்று சொல்லப்படும் 1, 4, 7, 10 மற்றும் 1, 5, 9 மிடங்கள் அவ்வளவு சிறப்பாகச் சொல்லப்படுவது ஏன்? அதன் சூட்சுமம் என்ன? என்று ஒரு வாசகர் (ரசிகர்!) கேள்வி எழுப்பி இருந்தார்.
திரிகோணங்கள் எனப்படுபவை ஒரே நட்சத்திரங்களை உள்ளடக்கிய மூன்று வித்தியாசமான ராசிகள். கேந்திரங்கள் எனப்படுவை ஒன்பது கிரகங்களின் ஆளுகைக்கு உட்பட்ட நட்சத்திரங்களை தொடர்ச்சியாகக் கொண்ட ஒரே தன்மை கொண்ட ராசிகள்.
அதாவது காலபுருஷனின் முதல் ராசியான மேஷத்திற்கு சிம்மமும், தனுசும் திரிகோணங்கள் (1, 5, 9, மிடங்கள்) ஆகும். இந்த மூன்று ராசிகளுக்குள்ளும் ஒரே கிரகத்தின் ஆளுமை கொண்ட நட்சத்திரங்களே இருக்கும்.
அதாவது மேஷத்திற்குள் இருக்கும் அசுவினி, பரணி, கிருத்திகை சிம்மத்திற்குள் அமைந்த மகம், பூரம், உத்திரம் மற்றும் தனுசுவில் அடங்கும் மூலம், பூராடம், உத்திராடம் ஆகிய மூன்றும் கேது, சுக்கிரன், சூரியன் ஆகிய கிரகங்களின் ஆளுமையைக் குறிப்பவை.
மேலும் மேஷம், சர ராசி, சிம்மம் ஸ்திரம், தனுசு உபயம் என திரிகோண ராசிகள் மூன்றும் வெவ்வேறு தன்மை கொண்ட ராசிகள். இதைப் போலவே ஒவ்வொரு ராசிக்கும் அதன் திரிகோண ராசிகள் ஒரே நட்சத்திரங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.
கேந்திரங்கள் எனப்படும் 1, 4, 7, 10 மிடங்களைக் கவனித்தால் மேஷத்தின் கேந்திரங்களாக கடகம், துலாம், மகரம் ஆகிய ராசிகள் அமையும். இவற்றில் மேஷத்தில் அசுவினி, பரணி, கிருத்திகை 1 ம் பாதம் என ஆரம்பித்து மகரத்தின் உத்திராடம் 2, திருவோணம், அவிட்டம் 2ல் தொடர்ந்து துலாத்தின் சித்திரை 3, சுவாதி, விசாகம் 3 ல் நீடித்து கடகத்தின் புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் என அனைத்துக் கிரக நட்சத்திரங்களையும் தொடர்ச்சியாக உள்ளடக்கி முடியும்.
அதோடு இந்த ராசிகள் அனைத்தும் சர ராசிகள் மட்டும் என்பதைப் போல் அனைத்துக் கேந்திர ராசிகளும் சரம், ஸ்திரம், உபயம் மட்டுமாகவே இருக்கும். கலந்து வராது. இவைதான் கேந்திர, கோணங்களின் சிறப்பு.
இதையும் தாண்டி திரிகோணாதிபதிகளாக இயற்கைப் பாவக் கிரகங்களான சனி, செவ்வாய் வரக்கூடாது என்று நான் அடிக்கடி எழுதுவதில் ஒரு மிகப்பெரிய சூட்சுமம் உள்ளது. அதை இங்கே விவரித்தால் இந்தக் கட்டுரை திசை மாறும் என்பதால் வேறொரு சந்தர்ப்பத்தில் அதை விளக்க முயற்சிக்கிறேன்.
அடுத்து லக்னம் என்பது ஜாதகரை, அதாவது உங்களைத்தான் குறிக்கிறது. ஒருவரது லக்னம் எது, லக்னாதிபதி யார்? லக்னத்தோடு சம்பந்தப்படும் கிரகங்கள் எவை? என்பதை வைத்து உங்களைப்பற்றி நூறு சதவிகிதம் துல்லியமாகச் சொல்ல முடியும்.
(என்னிடம் பலன் கேட்க வருபவர்களிடம் நான் முதலில் இந்த முறையைக் கையாண்டு ஜாதகரின் குண விசேஷங்களைச் சொல்லி விடுகிறேன். இவற்றைத் தெளிவாக உங்களால் சொல்ல முடிந்தால் பலன் கேட்பவருக்கு உங்கள் மேல் நம்பகத்தன்மை கூடும்.)
அதோடு ராகு என்பது ஒரு இருட்டு என்று நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். எனவே லக்னத்தில் ராகு என்றால் நீங்கள் இருளில் நிற்கிறீர்கள் என்று அர்த்தம். உங்களை, உங்கள் திறமைகளை யாரும் கவனிக்க முடியாது மற்றும் பார்க்க மாட்டார்கள் என்று அர்த்தம். எனவே லக்னத்தில் ராகு இருப்பது சிறப்பான நிலை அல்ல.
பாவக்கிரகங்களான செவ்வாய், சனியின் ராசிகள் லக்னங்களாகி அதில் ராகு இருந்து பாவிகளின் தொடர்பை அவர் பெற்றிருப்பின் அந்த ஜாதகர் முன்கோபம், பிடிவாதம், குறுகிய மனப்பான்மை, சுயநலம், தந்திரப்போக்கு, நன்றி மறத்தல், முட்டாள்தனம் போன்ற குணங்களைக் கொண்டிருப்பார்.
அதிலும் மேஷம் லக்னமாகி ராகு அதில் இருந்து, ராகு கேதுக்களுடன் இணையாத செவ்வாயின் பார்வையை ராகு பெற்றிருந்தால் அந்த ஜாதகர் கடுமையான முன் கோபக்காரராகவும், முரட்டுத்தனம் உடையவராகவும் இருப்பார்.
அதோடு விருச்சிகம், மகர, கும்பங்களில் ராகு இருந்து அஷ்டமாதிபதியின் இணைவை நெருக்கமாக பெற்றிருந்தால் தற்கொலை எண்ணத்தை ராகு தூண்டுவார். ராகு அல்லது எட்டுக்குடையவனின் தசாபுக்திகளில் ஜாதகர் தற்கொலை முயற்சிகளில் இறங்கி வெற்றி பெறக் கூடும்.
விஷமருந்தியோ, தூக்குப்போட்டுக் கொண்டோ தன் மரணத்தைக் தேடிக் கொள்ள வைப்பவர் ராகு பகவான். சில நேரங்களில் சிலர் கொடூரமான முடிவுகளைத் தேடிக் கொள்வதும் இவரால்தான். லக்னத்தில் சுபத்துவமோ சூட்சுமவலுவோ பெறாத ராகு இந்த வேலைகளைச் செய்வார்.
பாவிகளுடன் தொடர்பு கொண்ட ராகு லக்னத்தில் இருந்தால் உடல்நலம் மனநலம் இரண்டையும் தனது தசை புக்திகளில் பாதிப்பார். லக்னத்தில் இருந்து இயற்கைப் பாவியான ஆறாமிடத்தோனுடன் சம்பந்தப்படும் ராகு மனநோயாளிகளை உருவாக்குவார்.
ஆனால் லக்னத்தில் சுபருடன் இணைந்தோ சுபரால் பார்க்கப்பட்டோ, சுபரின் வீடுகள் லக்னமாகி அதில் அமர்ந்த ராகுவோ இதுபோன்ற கெடுபலன்களைச் செய்வது இல்லை.
அதாவது ராகு எப்போதுமேதான் இருக்கும் வீட்டின் அதிபதியையும் தன்னைப் பார்க்கும் மற்றும் தன்னோடு இணைந்தவர்களின் குணங்களையும் பிரதிபலிப்பவர் என்பதால் சுபரின் வீடுகளான ரிஷபம் துலாம் மீனம் தனுசு போன்ற ராசிகள் லக்னங்களாகி அதில் சுபரோடு இணைந்து அல்லது சுபரால் பார்க்கப்பட்டு இருந்தால் மிகப் பெரும் நன்மைகளைச் செய்வார்.
புதனும் சந்திரனும் கட்டுக்கு உட்பட்ட சுபர்கள் என்பதால் (அதாவது பாவிகளுடன் சேராத தனித்த புதனும், வளர்பிறை சந்திரனும் மட்டுமே சுபர்கள்.) அவர்கள் பரிபூரண சுபத்துவம் பெற்றிருக்கும் நிலையில் அவர்களின் வீடுகளான மிதுனம் கன்னி கடகத்தில் இருக்கும் ராகு மற்ற சுபர்களுடன் தொடர்பு கொண்டிருக்கும் நிலையில் நற்பலன்களைத் தருவார்.
ஆயினும் பொதுவாக ராகு லக்னத்தில் அமர்வது நல்ல நிலை அல்ல. லக்ன ராகு ஜாதகரை பிரகாசிக்க இயலாமல் செய்வார். இருட்டு உங்கள் மேல் கவிந்திருந்தால் என்ன ஆகும்..? நீங்கள் வெளியே தெரிய மாட்டீர்கள். உங்களுடைய திறமைகள் வெளி வர முடியாத சூழ்நிலை இருக்கும். மேலும் லக்ன ராகு உடல், மனம் இரண்டையும் பாதிப்பார். நல்ல குணங்களை தள்ளிப் போகச் செய்வார்.
இன்னும் ராகுவைப் பற்றி உள்ள சூட்சுமங்களை அடுத்த மாதம் பார்ப்போம்....
சாயா கிரகங்களின் சூட்சும நிலைகள்-8

சென்ற மாத கட்டுரையில் சனி, செவ்வாயின் திரிகோணாதிபத்தியம் பற்றிய சூட்சுமத்தை பின்னர் சொல்கிறேன் என்று எழுதியதற்கு இத்தனை கேள்விகள் உங்களிடமிருந்து வரும் என நான் உண்மையில் எதிர்பார்க்கவில்லை.
அதிலும் திருப்பூர் வாசகி ஒருவர் � சொல்லிக் கொடுக்க மறுக்கிறீர்கள் குருஜி...� என்றதோடு மட்டுமல்லாமல்.. இதே போல மார்ச் 2012 குருவருள் ஜோதிடம் இதழில் �சனி எப்படி ஆயுள்காரகன் ஆனார்..? � என்பதை பின்னர் விளக்குகிறேன் என்று சொல்லி இதுவரை அதைப் பற்றியும் சொல்லவில்லை என்றும் சுட்டிக் காட்டினார்.
அந்தக் கட்டுரை குருவருள் ஜோதிடத்தில் வெளிவந்த நேரத்தில் நான் ஜோதிட வாரப் பத்திரிகையான திரிசக்தி ஜோதிடத்தில் சனி, செவ்வாய் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்ததால் �சனி எப்படி ஆயுள் காரகன் ஆனார்� என்ற சூட்சுமத்தை அந்தத் தொடரில் எழுதினேன். அதனை குருவருள் ஜோதிடம் வாசகர்களுக்கு விளக்காதது எனது தவறுதான்.
என்னைப் பொறுத்தவரையில் இத்தனை ஆண்டு கால ஜோதிட அனுபவத்தில் பரம்பொருள் எனக்கு தெரிய அனுமதித்த எந்த ஒரு சூட்சுமத்தையும் நான் ஒளித்து வைத்ததே இல்லை. அனைத்தையும் பிறருக்கு விளக்கியிருக்கிறேன். இது என்னைத் தொடர்ந்து படிப்பவர்களுக்குத் தெரியும்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் எவருமே அறியாத, பரம்பொருள் என்னைத் தெரிந்து கொள்ள அனுமதித்த �குருபகவான் ஏன் சுபரானார்? சனி எப்படி பாவரானார்?� மற்றும் �சுபக்கிரக வரிசையை ஞானிகள் எப்படி ஏற்படுத்தினார்கள்?� போன்ற சூட்சுமங்களை நான் விளக்கமாக எழுதியதும் இதில் சேர்ந்ததுதான்.
அதோடு, எந்த ஒரு விஷயத்தையும் சுற்றி வளைக்காமல் நேரடியாகச் சொல்வது என் வழக்கம். சாயா கிரகங்களைப் பற்றிய இந்த தொடரில் சனி செவ்வாயை இழுத்தால் அது மகாபாரத கிளைக்கதை போல மாறி மூல விஷயத்தை விட்டு விட்டு வேறு எங்கேயோ போய் விடும் அபாயம் இருக்கிறது.
இன்னும் ராகு கேதுக்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சூட்சுமங்கள் இருக்கின்றன. அவைகளை முழுவதுமாக இந்த தொடரில் சொல்வேன். அடுத்த தொடரில் மற்ற விஷயங்களைப் பற்றி பார்க்கலாம்.....
மார்ச் 2012 குருவருள் ஜோதிடம் இதழில் நான் எழுதிய சனி எப்படி ஆயுள்காரகன் ஆனார்? என்ற சூட்சுமத்தை இப்போது தெரிந்து கொள்ளுங்கள்...
சனி பகவான் எப்படி ஆயுளுக்கு காரகன் ஆனார்..?
�ஜோதிடக்கலை அரசு� ஆதித்யகுருஜி
(பஞ்சமஹா புருஷ யோகங்களில் ஒன்றான சசயோகம் பற்றிய ஆய்வுக்கட்டுரையின் ஒரு பகுதி)
சில ஜோதிட ஆய்வாளர்கள் சனி பகவான் உச்சம் பெறுவது மிகுந்த அதிர்ஷ்டம் எனவும், தற்போது இன்னும் மூன்று வருடங்கள் சனி உச்சத்தில் இருப்பதால் இந்த வருடங்களில் பிறக்கும் குழந்தைகள் அதிர்ஷ்டசாலிகள் எனவும் எழுதுகிறார்கள். இது முற்றிலும் தவறு.
உச்சம் பெறும் அனைத்துக் கிரகங்களும் நன்மை செய்யும் என்றால் நமது ஞானிகள் சுபக் கிரகங்கள் பாவக் கிரகங்கள் என்று கிரகங்களை இரண்டு பிரிவாக பிரித்திருக்க வேண்டிய அவசியமே இல்லை.
கிரகங்களின் காரகத்துவங்களை சுபம், அசுபம் எனவும் நமக்கு வகைப்படுத்திக் காட்டியிருக்க வேண்டியதும் இல்லை. கிரகங்கள் வலிமை பெற்றால் நல்லது செய்யும் என்று பொதுவாக சொல்லிவிட்டுப் போயிருக்கலாம்.
நமது கிரந்தங்களில் ஞானிகள், வலுப்பெற்ற கிரகங்கள் மனிதனுக்கு நன்மையைக் செய்யும் என்று எந்த இடத்திலும் சொல்லவே இல்லை.
வலிமை பெற்ற ஒரு கிரகம் தனது காரகத்துவங்களை ஜாதகருக்கு வலுவுடன் தரும் என்றே சொல்லியிருக்கிறார்கள்.
அப்படியானால் ஆயுளைத் தவிர்த்து மனிதனுக்கு கெடுதல் செய்பவைகளான வறுமை, தரித்திரம், நோய், கடன் தொல்லை, அடிமைவேலை, உடல் உழைப்பை மட்டுமே நம்பி பிழைத்தல், உடல் ஊனம், அழுக்கு இடங்களில் இருக்கும் நிலை போன்றவற்றைத் தரும் சனிபகவான் உச்ச வலிமை பெற்றால் உங்களுக்கு என்ன பலன்களைத் தருவார்?
மற்ற சுபக் கிரகங்களான குரு, சுக்கிரன், புதன், வளர்பிறைச் சந்திரன் போன்ற கிரகங்களைப் போல தனித்து அதிர்ஷ்டம் தரும் அமைப்பு சனி, செவ்வாய் உள்ளிட்ட பாவக் கிரகங்களுக்கு கிடையாது.
தனித்து எவ்வித சுபத்தன்மையும் பெறாமல் வலிமை பெறும் நிலையில் சனி பகவான் தன் தசையில் தாங்க முடியாத கொடிய பலன்களைச் செய்வார்.
சனி நல்லது செய்ய வேண்டும் என்றால் அவர் குருவின் பார்வையையோ தொடர்பையோ அல்லது மற்ற சுபக்கிரகங்கள் அல்லது லக்ன சுபர்களின் சம்பந்தத்தையோ பெற்றிருக்க வேண்டும்.
உச்சத்தில் வக்ரம் போன்ற உச்சபங்கம் பெற்று முற்றிலும் நீச நிலையாக வலிமை இழந்து சுபர் பார்வை பெற்ற சனி மிகப் பெரிய சொகுசு வாழ்க்கையைத் தருவார்.
இத்தனை கொடுமையான பலன்களை காரகத்துவங்களாகப் பெற்ற சனி பகவானிடம் ஆயுள் எனும் விஷயம் எப்படி வந்தது என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம்.
அந்த சூட்சுமத்தையும் இப்போது விளக்குகிறேன்......
பொதுவாக நமது புனித நூல்கள் அனைத்துமே இனிமேல் பிறவாமை வேண்டும். பரம்பொருளின் காலடியில் முற்றிலுமாக சரணடைந்து அதனுடன் இணைய வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றன.
சித்தர்களும் ஞானிகளும் தங்களுக்கு எப்போது �முக்தி� கிடைக்கும் என்றே ஏங்குகிறார்கள். (அதாவது தாங்கள் விரைவில் இந்த பூமியிலிருந்து விடுபட வேண்டும் என்பதே முற்றும் துறந்தவர்களின் நோக்கம்.)
உண்மையான புரிதல் என்னவெனில் இந்த மனித வாழ்வே ஒரு சுமை என்பதுதான். மனிதனின் இறப்பிற்குப் பிறகு �ஏதோ ஒரு நல்லது� இருக்கிறது என்பதையே நமது ரிஷிகளும், சித்தர்களும் உணர்ந்து நமக்கும் சொல்லியிருக்கிறார்கள்.
விளங்கிக் கொள்ள முடியாத ஏதோ ஒரு விஷயத்திற்காகவே நாம் எங்கிருந்தோ இந்தப் பூமியின் பக்கம் தற்போது வந்திருக்கிறோம். இங்கே செய்யும் தவறுகளால் இங்கிருந்து விடுபட முடியாமல் மீண்டும் மீண்டும் இங்கேயே பிறக்கிறோம். இது ஒரு வழிப்போக்குப் பயணம் அவ்வளவே.
நாம் கிளம்பிய நல்ல இடத்திற்கு திரும்பிச் செல்லத் தடையாக, நம்மை இங்கேயே இருக்க வைக்கும் நமது �ஆயுள்� என்பது, பலரும் நினைப்பதைப் போல ஒரு சுபகாரகத்துவம் கொண்ட நல்லநிலை அல்ல என்பதே உண்மை.
அதனால்தான் அதுவும் மனிதனுக்கு வேண்டாத காரகத்துவங்களைக் கொண்ட சனியிடம் சேர்ந்தது.
சனி தரும் இன்னொரு கொடிய பலனான ஆயுள்... நம்மை பரம்பொருளிடம் சேரும் ஒரு நல்ல நிலையை, இனிமையான அனுபவத்தை இன்னும் சற்றுத் தள்ளி வைக்கும் ஒரு கெட்ட நிலைதான்.
ஜோதிடத்தில் எதுவுமே வெளிப்படையாக புரியும்படி ஞானிகளால் சொல்லப் படுவதில்லை. சொல்லப்படவும் மாட்டாது. அப்படிச் சொன்னாலும் அநேகருக்கு அது புரியாது.
ஆகவே புரியும் தகுதி நிலையை...
அதாவது பள்ளிகளில் முதலில் எல். கே. ஜி அடுத்து ஒன்று முதல் பனிரெண்டு வகுப்புக்கள் பிறகு கல்லூரி, எம். ஏ. போன்ற முதுநிலைப் படிப்புக்கள் போன்ற நிலையை படிப்படியாக நீங்கள் எட்டும் வரை சில நுணுக்கமான விஷயங்கள் உங்களுக்குப் புரியவே புரியாது.
அதுவே இந்த மகா கலையின் மகத்துவம்.
சாயா கிரகங்களின் சூட்சும நிலைகள்-9

நம்முடைய கிரந்தங்கள் அனைத்தும் �நானாவித வேடத்தொழில்� மற்றும் �சாதுர்யமாக ஏமாற்றுதல்� ஆகிய இரண்டு விஷயங்களை ராகுவிற்குரிய முக்கியமான காரகத்துவங்களாக சொல்லுகின்றன.
நவீனயுகத்தில் சினிமாவில் நடித்தல், மற்றும் தொலைக்காட்சி போன்ற நேரடி ஊடகங்களில் தோன்றுதல் போன்றவைகளைச் செய்ய வைப்பவர் ராகுதான். ஒருவருக்கு ராகு, சுக்கிரன் மற்றும் சந்திரனைத் தொடர்பு கொண்டு அவர்கள் சம்பந்தம் பெற்று அல்லது ராகு அவருக்குரிய நல்ல பாவங்களில் அமர்ந்திருந்தால் ராகு தசையில் பொதுமக்கள் மத்தியில் தோன்றி பிரபலமடையும் யோகம் நடக்கும்.
அதோடு �ஒயிட் காலர் கிரைம்� எனப்படும் நாகரிக குற்றங்களை செய்ய வைப்பவர் ராகு பகவான்தான். சாதுரியமாக ஏமாற்றுதல் எனும் பிரிவில் லாட்டரி சீட்டுகளையும் மற்ற பிற சூதாட்டங்களையும் சேர்க்கலாம் என்பதால் இது போன்ற துறைகளில் நல்ல பாவங்களில் அமர்ந்த ராகு பகவான் தனது தசையில் ஏராளமான பண லாபத்தை அள்ளித் தருவார்.
ஸ்பெகுலேஷன் துறை எனப்படும் பங்குச் சந்தையிலும் பொருள் சேர்க்க வைப்பவர் ராகுதான். தற்போது புதிது புதிதாக கிளம்பும் ஈமு கோழி வளர்ப்பு, அதிக வட்டி தருகிறோம் என ஆசை காட்டுதல், மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் பணம் தருகிறோம் என ஏமாற்றுதல், தேக்குமரம் மூலிகைச் செடி வளர்ப்பு போன்ற குறுக்குவழி சிந்தனைகள் அனைத்திற்கும் காரணகர்த்தா ராகு பகவான்தான்.
அதேநேரத்தில் இப்படிப்பட்ட சிந்தனைகளையும் செயல் திட்டங்களையும் தருகின்ற ராகு பகவானுக்கு சுபர்களின் பார்வையும் தொடர்பும் இருக்கும் பட்சத்தில் சிறிய தண்டனையோடு சட்டத்தின் பிடியில் இருந்தும் ஜாதகர் தப்பித்து விடுவார்.
அதோடு ராகு தசை நடக்கும்போது ஒரு நபருக்கு ஜோதிடம் ஆன்மிகம் போன்றவைகளிலும் ஈடுபாடு உண்டாகலாம். சிலருக்கு ராகு புக்திகளில் ஜோதிடம் மற்றும் அந்நிய மொழி கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
குறிப்பாக சிலருக்கு பிளாக் மேஜிக் எனப்படும் மந்திரதந்திரங்கள், மாந்திரீகம் போன்றவைகளையும் ராகு கற்க வைப்பார். சுபரோடு சேர்ந்து சுபர் வீட்டில் இருக்கும் ராகு ஒருவரை தனது தசையில் ஜோதிடராக புகழ் பெற வைப்பார்.
ஒரு சர ராசியில் (மேஷம் கடகம் துலாம் மகரம்) ராகு இருந்து, அந்த பாவம் லக்னத்திற்கு 3, 11 மிடங்களாக அமைந்து, அந்த ராகுவுக்கு வீடு கொடுத்த கிரகம் உச்சம் பெற்று, ஐந்து அல்லது ஒன்பதுக்குடையவன் சாரத்தில் இருக்கும் ராகுவின் தசை வருமானால் ஜாதகர் ஏழ்மையான நிலையில் பிறந்திருந்தாலும் மறைமுகமான வழியில் நூற்றுக்கணக்கான கோடிகளை சம்பாதிப்பார் என்பது உறுதி.
இது போன்ற அமைப்பில் ராகுதசை சுயபுக்தியில் சாதாரண தொழிலாளியாக அதிகார உச்சத்தில் இருக்கும் குடும்பத்திற்கு அறிமுகம் ஆகி இன்று கோடிகளை குவித்து வைத்திருக்கும் சில ஜாதகங்களை நான் ஆரம்பம் முதலே ஆராய்ந்திருக்கிறேன்.
அதே போல ராகு தனது தசை புக்திகளில் அந்நிய தேசம் சென்று பொருள் தேட வைப்பவர். ஜோதிடக்கலை உருவான காலத்தில் நமது இந்தியா ஐம்பத்தியாறு தேசங்களாக பிரிக்கப்பட்டு இருந்ததால் ஹைதராபாத் மும்பை டெல்லி போன்ற வட மாநிலங்கள் கூட ஜோதிடப்படி வெளிதேசங்கள்தான்.
சர ராசிகளில் வலுவாக அமர்ந்த ராகு கேதுக்கள் தங்களது தசா புத்திகளில் ஜாதகரை நிச்சயமாக வெளியிடங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். மேலும் ஒரு முக்கியமான காரகத்துவகமாக அந்நிய மொழிகளை கற்றுக்கொள்ளுதல் குறிப்பாக ஆங்கிலம் ஹிந்தி மற்றும் வேற்று மதத்தவரை விரும்புதல், நட்பு கொள்ளுதல் போன்றவைகளையும் நடத்துபவர்கள் ராகு கேதுக்கள்தான்.
சில நிலைகளில் எனது அனுபவத்தில் ராகு பகவான் இஸ்லாமிய மதத்தையும் கேது பகவான் கிறிஸ்துவ மதத்தையும் சுட்டிக் காட்டுவார்கள்.
நிறைவாக ராகுதசை பற்றி எனக்குத் தெரிய பரம்பொருளால் அனுமதிக்கப்பட்ட ஒரு சூட்சுமத்தை சொல்லி இம்மாதக் கட்டுரையை முடிக்கிறேன்.
எப்போதுமே ராகு தசை நடந்து கொண்டிருக்கும் பொழுது, ராகு தசை சுக்கிர புக்தியில் இருந்து ஒரு திருப்பம் இருக்கும். ஒரு ஜாதகருக்கு ராகு தசை நல்ல பலன்களைத் தந்து கொண்டிருந்தால் சுக்கிரபுக்திக்கு பிறகு வரும் கடைசி மூன்று புக்திகளில் அதாவது சூரிய, சந்திர, செவ்வாய் புக்திகளில் மாறுபாடான கெடுபலன்களைச் செய்வார்.
ஏற்கனவே ராகுதசையில் கெடுதலான பலன்கள் நடந்து கொண்டிருந்தால் மேற்கண்ட மூன்று புக்திகளிலும் சற்று மூச்சு விட்டுக் கொள்ளும்படியான ஒரு சுமுக நிலையை ராகு தருவார்.
ராகுதசையில் மேற்கண்ட அந்தரங்களிலும் இதை உணரலாம். இதற்கு ராகுவிற்கு சூரிய , சந்திர , செவ்வாய் , மூவரும் கொடிய பகைவர்கள் என்பது காரணமாக இருக்கலாம் .
ராகு எப்பொழுதுமே சூரிய சந்திரர்களை கடும் பகைவராக எண்ணுபவர். கிரகணம் உண்டாவதே ராகு கேதுக்களால்தான். அதாவது மூல ஒளிக் கிரகங்களை மறைத்து இருளாக்கும் தன்மை ராகு கேதுக்களுக்கு மட்டுமே உண்டு என்பதால்தான் சூரிய சந்திரர்களுக்கும் ராகு கேதுக்களுக்கும் பகை என்பது உண்டாயிற்று.
இதைப் புரியும்படி விளக்கவே நமது ரிஷிகள் பாற்கடலில் பிறந்த அமுதத்தை உண்ணும் போது ராகு கேதுக்கள், சூரிய சந்திரர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டு தலைவேறு உடல் வேறு ஆனார்கள் என்ற கதையினைச் சொன்னார்கள்.
அடுத்த மாதம் இன்னும் சில சூட்சுமங்களைப் பார்க்கலாம்.......
சாயா கிரகங்களின் சூட்சும நிலைகள்-10

ஆமேடம் எருது சுறா நண்டு கன்னி
ஐந்திடத்தில் கருநாகம் அமர்ந்து நிற்கில்
பூமேடை தனில் துயிலும் ராஜயோகம்
போற்றிடுவர் வேறு இன்னும் புகலக் கேளாய்
ஏமாறாதே நான்கு கேந்திரத்தும்
இடைவிடாமற் கிரகம் இருந்தாகில்
தேமேவு பர்வதமா யோகமாகும்
சீமான் ஆகுவான் ராஜயோகஞ் செப்பே...
தமிழ் ஜோதிட நூல்களில் மிகவும் மதிப்பு வாய்ந்ததான �ஜாதக அலங்காரம்� ராகுவைப் பற்றி குறிப்பிடும் மேற்கண்ட பாடல் ஏறத்தாழ அனைத்து ஜோதிடர்களும் அறிந்த ஒரு புகழ் பெற்ற பாடல்.
இந்த பாடலின் முதல் மூன்று வரிகள் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ஐந்து ராசிகளில் ராகு இருந்து அதனுடைய தசை வரும் போது அந்த ஜாதகருக்கு � பூப்படுக்கையில் படுக்கும் ராஜயோகம்� எனச் சொல்லுகிறது.
அடுத்த வரிகள் நான்கு கேந்திரங்களிலும் தொடர்ந்து கிரகங்கள் இருந்தால் சிறப்பான பர்வத யோகத்தை தரும் எனக் குறிப்பிடுகிறது.
மேலே சொல்லப்பட்ட இந்த �நான்கு கேந்திரங்களில் கிரகங்கள்� எனும் அமைப்பை மேற்கண்ட ஐந்து ராசிகளில் இருக்கும் ராகுவிற்கு நான்கு கேந்திரங்களில் கிரகங்கள் இருந்தால் இந்த யோகம் என்று சிலரும், இந்த ராசிகளில் ராகு இருக்கும் நிலையில் லக்னத்திற்கு நான்கு கேந்திரங்களில் கிரகங்கள் இடைவிடாமல் இருந்தால் இது போன்ற சிறந்த பர்வதயோகம் என்று சிலரும் கருத்து வேற்றுமை கொள்கின்றனர்.
ஜாதக அலங்காரத்திலேயே இப்பாடலுக்கு லக்னத்திலிருந்து இடைவிடாமல் நான்கு கேந்திரங்களிலும் கிரகங்கள் இருந்தால் என்றுதான் விளக்கம் சொல்லப் பட்டிருக்கிறது.
என்னுடைய முப்பதாண்டு கால ஆய்வில் நான் உணர்ந்த உண்மை என்னவெனில் மேற்கண்ட மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய இடங்களில் ராகு அமர்ந்து இந்த பாவங்களில் இருக்கும் ராகுவிற்கு கேந்திரங்களில், அதாவது ராகுவின் முதலாம் கேந்திரமான அவர் இருக்கும் வீட்டில் அவருடன் இணைந்து ஒரு கிரகம், அடுத்து ராகுவிற்கு நான்கில் ஒன்று, அடுத்ததாக ராகுவிற்கு எதிரில் இருக்கும் கேதுவுடன் இணைந்து ஒரு கிரகம், அடுத்து ராகுவிற்கு பத்தாமிடத்தில் ஒரு கிரகம் என இடைவிடாமல் கிரகங்கள் இருந்தால் மிகப்பெரிய ராஜயோகத்தை ராகு தன் தசையில் செய்யும்.
இதுபோன்ற அமைப்பில் ராகு பதினொன்றில் இருந்தாரெனில் மற்ற அனைத்துக் கிரகங்களும் பணபரஸ்தானங்கள் என்று சொல்லப்படும் இரண்டு ஐந்து எட்டு பதினொன்றில் இருக்கும். அப்போது பாக்யாதிபதி இரண்டில் இருக்கலாம். ஜீவனாதிபதி ஐந்தில் அமர்ந்து ராகுவைப் பார்க்கலாம். தனாதிபதி எட்டில் அமர்ந்து தன் வீட்டைப் பார்க்கலாம். பஞ்சமாதிபதி ராகுவுடன் இணைந்திருந்து ஜீவனாதிபதியைப் பார்க்கலாம்.
இந்த கேந்திர அமைப்பில் ராகு அனைத்துக் கிரகங்களின் இணைப்பினால் அவர்களின் பலத்தைக் கவர்ந்து தன் தசையில் மிகப் பெரிய தனலாபத்தை பொருளாதார மேன்மையைத் தரும்.
அதேபோல ராகு மூன்றாமிடத்தில் இருந்தாரெனில் மற்ற கிரகங்கள் ஆபோக்லிய ஸ்தானங்கள் என்று சொல்லப்படும் மூன்று ஆறு ஒன்பது பனிரெண்டு ஆகிய இடங்களில் இருக்கும். இந்த அமைப்பிலும் பாக்யாதிபதி தன் வீட்டிலோ அல்லது ராகுவுடன் இணைந்து தன் வீட்டைப் பார்வையிட்டோ மற்ற துர்ஸ்தானாதிபதிகள் ஒருவருக்கொருவர் மாறி அமர்ந்தோ இருந்தார்கள் எனில் ராகு யோகம் செய்வார்.
அதே நேரத்தில் ராகுவுக்கு நான்கு கேந்திரங்களிலும் இடைவிடாமல் கிரகங்கள் இருக்கும் நிலையில் யோகம் பூரணமாகக் கிடைக்கும். ஏதேனும் ஒரு இடத்திலோ அல்லது ராகு கேதுவுடன் கிரகங்கள் இணையாமல் ராகுவிற்கு இரண்டு பக்கங்களில் மட்டும் கிரகங்கள் இருந்தாலும் யோக அமைப்புத்தான்.
ஆனால் இந்த யோகம் செயல்பட வேண்டுமெனில் ராகுதசை வர வேண்டும். புக்திகளில் இந்த அமைப்பு பலன் அளிக்காது.
ஒரு வகையில் ராகு பகவானை நான் இராமாயணத்தில் ராமபிரானால் மறைமுக வழியால் வீழ்த்தப்பட்ட வாலியுடன் ஒப்பிடுவேன். எப்படியெனில் ராமாயணத்தில் வரும் கதாபாத்திரமான வாலி தன் எதிரில் நின்று சண்டையிடுபவர்களின் பலத்தை தன்வசமாக்கிக் கொள்ளும் திறமை படைத்தவர். அதனாலேயே ஸ்ரீராமர் வாலியை மறைந்திருந்து அம்பெய்தி வீழ்த்தினார்.
அதுபோவே ராகுவும் தன் எதிரில் அமர்ந்து தன்னைப் பார்க்கும் கிரகங்களின் பலத்தை முற்றிலும் தனதாக்கிக் கொண்டு அந்த கிரகங்களை ஒன்றுமில்லாமல் செய்து விடுவார்.
உதாரணமாக கேதுவுடன் இணைந்து ராகுவைப் பார்க்கும் செவ்வாயின் தசையில் நல்ல, கெட்ட பலன்கள் எதுவும் முழுமையாக இருக்காது. ஆனால் அடுத்து நடைபெறும் ராகு தசையில் ராகு, செவ்வாயின் பலன்களை முழுமையாகச் செய்வார். அதேபோல் கேதுவுடன் இணைந்து கேளயோகத்தில் இருக்கும் குருபகவானின் பலனை ராகு முழுக்க தனது தசையில் செய்து விடுவார். குருதசை ராகு தசையின் பலன்களின் தொடர்ச்சியாகத்தான் இருக்கும்.
அதே நேரத்தில் தனக்கு எதிரில் இல்லாமல், தன்னை தனது சிறப்புப் பார்வைகளால் பார்க்கும் குருபகவானின் முழுபலத்தையும் ராகுவால் பறிக்க முடியாது. அதாவது ராகுவிற்கு திரிகோணங்களில் இருந்து தனது ஐந்து, ஒன்பதாம் பார்வைகளால் ராகுவைப் பார்க்கும் குரு தனது பலத்தை இழக்க மாட்டார்.
இன்னொரு நிலையாக சிறப்பு கேந்திரப் பார்வைகளைப் பெற்ற சனியும், செவ்வாயும் குறிப்பிட்ட ஒரு நிலையில் ராகுவை பார்ப்பது நல்ல பலன்களைத் தராது.
அதாவது செவ்வாய் நான்காம் பார்வையையும் சனி பத்தாம் பார்வையையும் சிறப்பு கேந்திரப் பார்வைகளாகக் கொண்டவர்கள். இவர்கள் இருவரும் ராகுவிற்கு கேந்திரங்களில் அதாவது ராகுவிற்கு நான்கில் சனியும், பத்தில் செவ்வாயும் இருந்தால் இருவருமே ஒரு சேர ராகுவைப் பார்ப்பார்கள்.
(ஏற்கனவே இந்த தொடரில் நான் ராகுபகவான் செவ்வாய், சனி தொடர்பை பெறக்கூடாது என்று சொல்லி இருக்கிறேன்)
இது போன்று அமைப்பில் ராகு இருக்கும் பட்சத்தில் ராகு அந்த ஜாதகத்தில் சனியும் செவ்வாயும் எந்த ஆதிபத்தியங்களுக்கு உரியவர்களோ அந்த ஆதிபத்தியங்களையும் இருவரின் காரகத்துவங்களையும் தனது தசை புக்தி அல்லது அவர்களின் தசை புக்திகளில் கெடுப்பார்.
குறிப்பாக இதுபோன்று கேந்திர அமைப்பில் சனி செவ்வாய் இருந்தால் ராகு தசை சனிபுக்தி அல்லது சனிதசை ராகு புக்திகளில் சனி அடிமைவேலை மற்றும் தொழில்காரகன் என்பதால் ஜாதகருக்கு வேலையிழப்பு, தொழில்சரிவு போன்றவைகளும் செவ்வாய் சகோதரகாரகன் என்பதால் ராகு தசை செவ்வாய் புக்தி அல்லது செவ்வாய் தசை ராகு புக்திகளில் சகோதர இழப்பு, சகோதரவிரோதம் போன்ற பலன்களும் மேற்படி கிரகங்களின் ஜாதக ஆதிபத்தியங்களில் கெடுதல்களான நிகழ்வுகளும் நடக்கும்.
இதே அமைப்பு தலைகீழாக அதாவது ராகுவிற்கு நான்கில் செவ்வாயும் பத்தில் சனியும் இருந்தால் இருவரும் ஒரு சேர கேதுவைப் பார்ப்பார்கள். அப்போது நான் மேற்சொன்ன பலன்கள் கேதுதசை சனிபுக்தி அல்லது சனிதசை கேது புக்தி மற்றும் கேதுதசை செவ்வாய் புக்தி அல்லது செவ்வாய் தசை கேது புக்திகளில் நடக்கும்.
பொதுவான இன்னொரு கருத்தையும் சொல்லி விடுகிறேன்...
சந்திரனின் ஏறுகணு ராகு, இறங்குகணு கேது என்பதால் அதாவது சந்திரனின் சுற்றுப்பாதையில் ஏறுபாதை ராகு, இறங்குபாதை கேது என்பதால் ராசிச் சக்கரத்தின் முதல் ஆறு ராசிகளான மேஷம் முதல் கன்னி வரையில் ராகு இருந்தால் நல்ல பலன்களையும் அடுத்த ஆறு ராசிகளான துலாம் முதல் மீனம் வரை கேது இருந்தால் நல்ல பலன்களையும் செய்வார்கள்.
அடுத்த இதழில் சந்திப்போம் ......
சாயா கிரகங்களின் சூட்சும நிலைகள்-1
நிழல் கிரகங்களான ராகு,கேதுக்களைப் பற்றிய இந்த தொடரை ஆரம்பத்திலிருந்து படித்து வரும் வாசகர்கள் ஒரு விஷயத்தை கவனித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இதைக் குறிப்பாக கண்டுணர்ந்து என்னிடம் கேட்ட சேலம் ஓய்வு பெற்ற இன்ஜினியரிங் கல்லூரி பேராசிரியரையும், உடுமலைப்பேட்டை மற்றும் தூத்துக்குடி வாசகர்களையும் நான் பாராட்டுகிறேன்.
அதாவது பெரும்பாலான நமது கிரந்தங்கள் ராகுவிற்கு 3, 6, 11 மிடங்கள் நல்ல இடங்கள், இந்த ஸ்தானங்களில் இருக்கும் ராகு நன்மைகளைச் செய்வார் என்று சொல்லும் நிலையில் இந்த தொடரில் நான் 3, 11 மிடங்களில் மட்டுமே ராகு நன்மைகளைச் செய்வார் என்றே சொல்லி வந்திருக்கிறேன்.
அது ஏனெனில் நமது மூலநூல்கள் யாவும் பெரும்பாலான நுணுக்கங்களை பொதுவாகவும், குறிப்பால் உணர்த்தியும் சொல்லும் தன்மை கொண்டவை. இதைப் பற்றி நான் ஏற்கனவே �பாதகாதிபதி பற்றிய ரகசியங்கள்� கட்டுரையில் நமது ஞானிகள் ஒன்றும் கணக்கு வாத்தியார்கள் அல்ல....... உங்களின் காதுகளைப் பிடித்துத் திருகி ஜோதிட ரகசியங்களை கற்றுத் தருவதற்கு என்று குறிப்பிட்டிருக்கிறேன்.
ஜோதிடக்கலை என்பது அனுபவத்தில் படிப்படியாக உணர்ந்து முன்னேற வேண்டிய ஒரு கலை. நெஞ்சில் குத்தி குத்தி மனப்பாடம் செய்யும் பள்ளிக்கூட கலை அல்ல. இங்கு அடிப்படை விஷயங்கள்தான் தெளிவாக்கப்படும். அதன் மேல் நீங்கள்தான் உங்களின் அனுபவத்தைக் கொண்டு கட்டிடம் எழுப்பிக் கொள்ள வேண்டும். அதுதான் நீடித்தும் இருக்கும்.
எப்படி LKG மாணவனுக்கு MA பாடத்தை நடத்த முடியாதோ அது போல ஆரம்ப நிலையில் உள்ளவருக்கு சூட்சுமங்களை சொன்னாலும் புரியாது என்பதால் பல விஷயங்கள் இங்கே நீங்கள் படிப்படியாக ஒவ்வொரு நிலையாகக் கடக்கும் போது மட்டுமே புரியும்படியாக ஞானிகளால் சொல்லப்பட்டன. அதன்படியே அமைக்கப்பட்டன.
அதன்படி மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய இடங்கள் ஜாதகத்திற்கு எந்த பாவமாக இருந்தாலும் அதில் இருக்கும் ராகு மிக மோசமான கெடுதல்களை செய்ய மாட்டார் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருந்தீர்களேயானால்,
இந்த ஐந்து இடங்களைத் தவிர மற்ற இடங்கள் ஜாதகருக்கு ஆறாம் இடமானால் அதில் இருக்கும் ராகு ஜாதகருக்கு கெடுதல்களைச் செய்வார் என்பதையும் உங்களால் புரிந்து கொண்டிருக்க முடியும்.
உத்தரகாலாம்ருதத்தில் 3, 6, 11 மிடங்களை ராகுவிற்கு நன்மை தரும் இடங்களாகக் கூறும் மகாபுருஷர் காளிதாசரே இன்னொரு சுலோகத்தில் 6, 8, 12ல் இருக்கும் ராகு கேதுக்கள் ஜாதகனுக்கு முதலில் நன்மையைச் செய்து பிறகு அவனுக்கு மாரகம் அல்லது மரணத்திற்கு நிகரான துன்பத்தை தருவார்கள் என்று சொல்லுகிறார்.
ஆறாமிடம் என்பது வழக்கு, வம்பு, விபத்து, நோய், கடன், எதிரி இவைகளுக்கான ஸ்தானம் என்பதால்தான், இருக்கும் வீட்டை கெடுக்கும் இயல்புடைய பாவக்கிரகமான ராகு அங்கே அமரும் போது மேற்படி ஆறாம் பாவத்தின் கெட்ட ஆதிபத்தியங்களை கெடுத்து நல்ல பலன்களைத் தருவார் என்பதன் அடிப்படையில் ராகுவிற்கு ஆறாம் பாவம் நன்மைகளைத் தரக்கூடிய இடம் என்று சொல்லப்பட்டது.
ஆனால் ஒரு சுபகிரகம் தான் இருக்கும் பாவத்தை வலுவாக்கும் என்பதன் அடிப்படையில் சில நிலைகளில் ராகு சுபர்களின் பார்வை தொடர்பு இவைகளைப் பெற்று முழு சுபத்தன்மை அடையும் நிலையில் ஆறாம் பாவத்தில் அமர்ந்தால் அந்த பாவத்தை வலிமை பெறச் செய்து வம்பு வழக்கு விபத்து கடன் நோய் போன்ற கெடுபலன்களைச் செய்வார்.
மிதுனம் துலாம் தனுசு மீனம் போன்ற சுபராசிகள் ஆறாம் இடமாகி, இந்த பாவங்களின் அதிபதிகளான குரு சுக்கிரன் புதன் ஆகியோர் உச்சம் போன்ற வலிமை பெற்று அந்த பாவம் வலுப்பெற்ற நிலையில் அங்கே ராகு அமர்ந்து சுபர்களின் தொடர்பையும் பெற்றிருந்தால் ராகுதசை நல்ல பலன்களைச் செய்வது கடினம்.
பெரும்பாலும் ஆறாமிடத்தில் இருக்கும் ராகு தனது தசை புக்திகளில் தன்னுடன் இணைந்திருப்பவரின் நெருக்கத்தையும் இணைந்திருக்கும் தூரத்தையும் பொறுத்து உடன் இருப்பவரின் காரகத்துவத்தையும் அழிப்பார்.
உதாரணமாக மிதுனம் ஆறாமிடமாகி புதன் சுபத்துவம் பெற்று ராகு சுக்கிரனுடன் இணையும் நிலையில் ராகுதசை புக்திகளில் வாழ்க்கைத் துணையைப் பாதிப்பார். இதே போன்ற நிலையில் ஆறாமிடம் சுபரின் வீடாகி வலுப் பெற்ற நிலையில் செவ்வாயுடன் இருந்தால் சகோதரனையும், சனியுடன் இருந்தால் ஜாதகரின் ஆயுளையும் பாதிப்பார்.
அதே நேரத்தில் இன்னொரு நிலையாக இத்தகைய சுபர் வீடுகளில் தனித்து இருக்கும் ராகுவும் தான் இருக்கும் வீட்டில் அதிபதியான அந்த சுபக்கிரகம் வலிமை பெறும் நிலையில் ஆறாம் வீட்டின் கெடுபலன்களைத்தான் செய்வார். நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது. (சொல்வது புரியவில்லையா? திரும்பத் திரும்ப படியுங்கள். புரியும்.)
ராகு என்பவர் ஏமாற்றும் தன்மை கொண்ட, எந்த வழியிலாவது ஏராளமான வருமானத்தை தரும் ஒரு இயற்கை பாவக்கிரகம். அவர் கெட்ட நிலைகளில் இருந்தால்தான் நல்ல பலன்கள் இருக்கும். முற்றிலும் சுபத்தன்மை அடைந்தால் தன் இயல்புக்கு மாறான தன்மைகளை அளிக்க முடியாமல் ராஜபக்சே முன் பிரபாகரன் இப்போது தோன்றினால் எப்படி குழம்பிப் போவாரோ அதுபோல குழம்பி அந்த பாவத்தின் தன்மைகளை மட்டும் செய்ய ஆரம்பித்து விடுவார்.
அதேபோல தன் காரகத்துவங்களை (முறைகேடான வழியில் பணம் சம்பாதித்தல், சுலபமான முறைகளில் வருமானம் பெறுதல், சாதுர்யமாக ஏமாற்றுதல் ) அவர் முழுமையாக எவர் தயவும் இன்றி, யாருடைய தலையீடும் இல்லாமல் ஜாதகருக்கு தர வேண்டுமெனில் அவர் மேஷம் ரிஷபம் கடகம் கன்னி மகரம் ஆகிய வீடுகளில் மட்டுமே இருக்க வேண்டும்.
மேற்படி பாவங்களில் தனித்தோ அல்லது வேறு எவருடன் சேர்ந்தோ இருக்கும் ராகு மட்டுமே சுயமாக எவருடைய கட்டுப்பாடும் இன்றி தன் விருப்பப்படி இயங்க கூடிய அதிகாரம் படைத்தவர்.
அதே நேரத்தில் 3, 11 மிடங்களில் இருக்கும் ராகு கேதுக்கள் அத்தனை சிறப்பாக சொல்லப்படுவதன் சூட்சுமத்தை இந்த தொடரின் ஆரம்பத்திலேயே நான் உங்களுக்கு விளக்கியது நினைவிருக்கும்.
அதாவது மேற்படி இரண்டு பாவங்களில் ராகுவோ அல்லது கேதுவோ இருக்கும் நிலையில், அதன் இன்னொரு மறுமுனைக் கிரகம் அந்த லக்னத்தின் யோக திரிகோண பாவங்களான ஐந்து அல்லது ஒன்பதாமிடத்தில் இருந்து அந்த பாவத்தின் நன்மைகளை எடுத்துக் கொடுக்கும் என்பதால்தான் 3, 11 மிடங்கள் ராகு கேதுக்களுக்கு சிறப்பாகச் சொல்லப்படுகின்றன.
இந்த தொடரின் மூலம் ராகுவைப் பற்றிய பெரும்பாலான சந்தேகங்கள் உங்களுக்கு தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறேன்.
ராகுவைப் பற்றி குருவருள் ஜோதிடத்தில் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே வெளியிடக் கூடிய ஒரு கட்டுரையை நான் எழுதியிருந்த நிலையில் உங்களுடைய ஏராளமான கேள்விகளும், தொலைபேசி பேச்சுக்களுமே இத்தனை மாத தொடராக இதனை மாற்றியது.
இன்னும் காலசர்ப்ப தோஷம், ஆழ்வார்கள் நாயன்மார்கள் போன்ற ஆன்மீகத் திருவுருக்கள் பெரும்பாலும் ராகுகேதுக்களின் நட்சத்திரங்களில் அவதரிப்பது ஏன்? என்பது போன்றவைகளும், கேதுவின் தனிப்பட்ட சிறப்பியல்புகளும் எழுதுவதற்கு இருக்கின்றன.
ஆயினும் என்னுடைய அதிகமான வேலைப்பளுவினால் இத்தொடரை இத்துடன் முடித்துக் கொள்கிறேன். மீதமுள்ள சூட்சுமங்களையும் என்றேனும் ஒருநாள் உங்களுக்குச் சொல்ல பரம்பொருள் என்னை அனுமதிக்கும் என்று நம்புகிறேன்.
வணக்கம்.

19.6.2014 குருப்பெயர்ச்சி பலன்கள்

குருபகவான் திருக்கணிதம் பஞ்சாங்கத்தின்படி 19.6.2014 வியாழக்கிழமை காலை 8.31 மணிக்கு மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சியாகிறார். குரு பகவானுக்கு உகந்த குரு வாரத்தில் (வியாழக்கிழமை) குரு பெயர்ச்சியாவது விசேஷமானதாகவே கருத வேண்டும். கடகத்தில் உச்சம் பெற்ற குரு, நன்மை செய்ய தயங்க மாட்டார்.
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி குருபகவான் 13.06.2014 வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணிக்கு கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இரு பஞ்சாங்கங்களின் படி குரு பெயர்ச்சியாகும் வீடு ஒன்றாக இப்பதுடன் பெயர்ச்சியாகும் தினமும் அங்கு தங்கும் காலமும் சிறிது வித்தியாசமாக உள்ளது.

பொதுவான பலன்கள்: கடகத்தில் இருக்கும் குருவை, சனி 10-ம் பார்வையாக பார்ப்பதால், நாட்டு மக்களுக்கு தெய்வ பக்தி அதிகரிக்கும். ஆலயங்கள் புதுபிக்கப்படும். தொழில் கூடங்கள் நல்ல லாபகரமாக நடக்க ஏதுவாகும். மத ஒற்றுமை ஓங்கும். அன்னிய நாட்டவர் பிரச்னை அடக்கப்படும். ரயில், விமானம் போன்ற வாகனங்களில் பயணம் செய்யும்போது கவனத்துடன் இருக்க வேண்டும்.
கல்வித்துறையில் முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழிற்சாலைகள் உருவாகும். பங்கு சந்தை லாபகரமாக நடக்க வாய்ப்புள்ளது. நவதானியங்கள் விலை குறையும். பொன் ஆபரணங்கள் விலை ஏறும். இரும்பு, எண்ணை பொருட்கள் விலை அதிகரிக்கும். கடக குருவாக இருப்பதால், உலகில் சில பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கடல் சீற்றம், வெள்ளப் பெருக்கும் ஏற்படலாம். பொதுவாக உச்ச குரு நன்மைகளை செய்வார். ஒருவரின் ஜாதகத்தில் எப்பேர்பட்ட தோஷங்களையும் தன் பார்வையால் நிவர்த்தி செய்பவர் குரு பகவான். “குரு பார்க்க கோடி புண்ணியம்” என்பார்கள்.
குரு பகவான் நம்மை பார்த்தால் மட்டுமல்ல, குரு பகவானை ஆலயம் தேடி சென்று நாம் கண்டு தரிசித்தாலும் கோடி புண்ணியம்தான். உங்கள் வீட்டின் அருகேயே இருக்கும் ஆலயத்தில், நவகிரக சந்நதியில் வீற்றிருக்கும் குருபகவானுக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து வணங்கலாம். மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வணங்கினால் மலையளவு உள்ள துயரம் கடுகளவாக குறைந்து விடுவதுடன் மட்டுமல்லாமல், குரு பகவானின் பரிபூரண அருளாசியும், நன்மைகளும் தேடி வரும். துன்பங்கள் நீங்கி இன்பங்களை பெறலாம்.
பன்னிரெண்டு இராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்களை குரு பகவான் தந்தருளுவார் என்பதை இப்போது நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.

மேஷம்: (அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய) 13.06.2014 வெள்ளிக்கிழமை முதல்
மேஷ ராசி அன்பர்களே!
கடந்த காலத்தில் மேஷ ராசிக்கு 3-ல் இருந்த குரு இப்போது 4-ஆம் இடத்துக்கு- கடகத்துக்கு மாறியிருக்கிறார். "3-ல் குரு வந்தபோது துரியோதனன் படை மாண்டதும், 4-ல் வந்தபோது தரும புத்திரர் வனவாசம் போனதும்' என்பது பாடல். அப்படியானால் கடந்த ஓராண்டு அனுபவித்த கஷ்டங்கள் தொடர்ந்து நீடிக்குமோ? விமோசனமே இல்லையோ என்று சந்தேகம் வரலாம்.

ஏற்கெனவே குரு இருந்த இடம் 3-ஆம் இடம் மோசமான இடம்தான். மேஷ ராசிக்கு 9, 12-க்குடையவர் 3-ல் இருந்ததால் தகப்பனார் வகையிலும் உடன்பிறந்த சகோதர- சகோதரி வகையிலும் தவிர்க்கமுடியாத செலவுகளை சந்தித்திருக்கலாம். என்றாலும் மிதுன குரு 7-ஆம் இடம், 9-ஆம் இடம், 11-ஆம் இடங்களைப் பார்த்த பெருமையால் திருமணத் தடை விலகி ஆண்கள் அல்லது பெண்களுக்கு திருமண சுபகாரியங்கள் நடந்தன. அது சுபவிரயம்!
9-ஆம் இடம்- தகப்பனார், பிதுரார்ஜிதம், பூர்வபுண்ணிய ஸ்தானம். அந்த வீட்டுக்குடையவரே அந்த இடத்தைப் பார்த்த காரணத்தால், 9-ஆம் பாவப் பலன் எல்லாம் திருப்தியாக நடந்தது எனலாம். பாகப்பிரிவினைகள் திருப்தியாக மனம்போல நடந்தது எனலாம்.
3-ஆம் இடம் என்பது 4-ஆம் இடத்துக்கு 12-ஆம் இடம்- விரயஸ்தானம். 10-ஆம் இடத்துக்கு 6-ஆம் இடம்- சத்ரு ஸ்தானம். அதனால் மிதுன குரு தாயின் உடல்நலத்தைக் கெடுத்தது. தாய்க்கு உதவியாக இருந்ததால் அவர்களின் சுகமும் பாதித்தது. பூமி, வீடு, வாகனம் சம்பந்தமான செலவுகளையும் நஷ்டங்களையும் சிலர் சந்தித்திருக்கலாம்.
படிக்கும் மாணவர்களில் சிலருக்கு பாடத்தில் அரியர்ஸ் ஏற்பட்டிருக்கலாம். அல்லது விரும்பிய சப்ஜக்ட் கிடைக்காமல் அல்லது விரும்பிய பள்ளியில் இடம் கிடைக்காமல் போயிருக்கலாம். ஒரு சிலருடைய அனுபவம்- விரும்பிச்சேர்ந்த பள்ளியில் விரும்பி ஏற்றுக் கொண்ட சப்ஜக்டே சேர்ந்த சில மாதத்திலேயே பிடித்தமில்லாமல் மாற்றம் தேடுகிற நிலை ஏற்பட்டிருக்கும். அதற்குரிய காரணமும் சொல்லத்தெரியாது. தகப்பனாருக்கும் பிள்ளைக்கும் தர்க்கம் உண்டாகி, கட்டிய பணம் வீணாகிவிடுமே என்ற வாதம் ஏற்பட்டிருக்கும்.
8-ஆம் இடத்துக்கு 8-ல் மிதுன குரு இருந்த காரணத்தால் ஆயுள் குற்றமில்லை. ஆனாலும் "மயிரிழையில் உயிர்தப்பினார்” என்ற மாதிரி விபத்தில் உயிர்தப்பி ஊமைக்காயம் ஏற்பட்டது சிலருடைய அனுபவம்! 3-ஆம் இடத்துக்கு குரு பாதகாதிபதி என்பதால், உடன்பிறந்தோர் வகையிலும் கடன்கொடுத்தார் வகையிலும் விரும்பத்தகாத சம்பவங்களும் வேண்டாத விமர்சனங்களும் ஏற்பட்டிருக்கலாம்.
10-க்கு 6 என்பதால் தொழில், வருமானத்தில் சிலருக்குத் தடை, சிலருக்கு தொழிலுமில்லை- வருமானமுமில்லை என்ற நிலை! இன்னும் சிலர் சோறு கண்ட இடம் சொர்க்கம்- திண்ணை கண்ட இடம் தூக்க மென்று, கொள்கை- கோட்பாடு- குறிக்கோளில்லாத வாழ்க்கை வாழ்ந்தார்கள். அரசுப் பணியில் பணம்கொடுத்துச் சேர்ந்தும் நிரந்தரமாகாமல், என்.எம்.ஆர் வேலை- சங்கத்தின் மூலமாக ஏற்பாடு செய்தும், சீக்கிரம் பெர்மனன்ட் ஆகிவிடும் என்று சொல்லிக் கொண்டேயிருப்பார்கள்! "கஞ்சி வருதப்பா- எங்கே வருதப்பா' என்ற கதைதான்!
தொழில் நன்றாக நடந்த தொழிலதிபர்கள் புதிய அனுபவமாக போட்டி, பொறாமைகளைச் சந்தித்திருக்கலாம். தன்னிடம் வேலைபார்த்தவரே ரகசியமாகத் திருடிச்சேர்த்த பணத்தைக்கொண்டு, தனக்கு எதிரில் போட்டியாகக் கடை ஆரம்பித்ததை ஜீரணிக்க முடியாமல் ஒரு அவஸ்தை!
இவையெல்லாம் குரு 3-ல் நின்ற அனுபவங்கள். இப்போது கடகத்துக்கு (4-ல்) வந்துள்ள குரு அங்கு உச்சமென்பது பிளஸ் பாயின்டு தான். மேலும் மேஷ ராசிக்கு 9-க்குடைய குரு 4-ல் உச்சம்பெற்று 10-ஆம் இடத்தைப் பார்ப்பது தர்மகர்மாதிபதி யோகம்! எனவே 9-ஆம் இடத் துக்கு 8-ல் மறைந்தாலும் பூர்வபுண்ணியம், பாக்கியம், தொழில் யோகம், வாழ்க்கை அமைப்பு ஆகியவற்றுக்கு எந்தக் குறையும் குற்றமும் ஏற்படாது.
பாவம், பாவாதிபதி, பாவகாரகன் இவர்கள் ஆட்சி, உச்சம், நட்பு, கேந்திரம், திரிகோணமாக இருந்தாலும் மறைவு தோஷத்துக்கு விதிவிலக்கு உண்டு என்பது விதி!
4-ஆம் இடத்தில் உச்சம்பெற்ற பாக்கியாதிபதி 8-ஆம் இடம், 10-ஆம் இடம், 12-ஆம் இடங்களைப் பார்க்கிறார். அந்த 4-ஆம் இடத்துக்கு (கடகத்துக்கு) குரு 6, 9-க்குடையவர். "சந்திரகாவிய'த்தின் விதிப்படி, "அஞ்சு ஒன்பதுக்கு அதிபதி (திரிகோணாதிபதி) பாவர் சுபரானாலும் சுபபலனே தருவார்'.
எனவே இதுவரை சொந்த வீடு இல்லாதவர்கள் குரு கடகத்தில் உச்சம் பெறும் ஒரு வருடத்துக்குள் சொந்த வீடு அல்லது மனை வாங்கலாம். வாடகை வீட்டிலிருப்போர் ஒத்திவீடு (போக்கியத்துக்கு) போகலாம். போக்கியத்தில் இருப்போர் சொந்த வீட்டுக்குப் போகலாம். அதற்காக மனைவியின் நகைகளை அடகு வைத்துப் பணம் புரட்டலாம். அல்லது வங்கிக் கடன் வாங்கலாம். சிலசமயம் பட்ஜெட் எஸ்ட்டிமேட்டுக்குமேல் கட்டட செலவு அதிகமாவதால், தவணைத் தொகையும் அதிகமாவதால் கடன்- வட்டித்தொகையை நாணயமாகக் கட்டிவிடமுடியுமா என்ற கவலையும் சந்தேகமும் ஏற்படலாம். (இது 8-ஆம் இடத்தை குரு பார்க்கும் பலன்).
12-ஆம் இடத்தை குரு பார்க்கும் பலன், வரக்கூடிய வருமானத்தை யெல்லாம் வாங்கியுள்ள கடனுக்கு- அசலுக்கும் வட்டிக்கும் கொடுக்க வேண்டியிருக்கிறதே என்ற கவலை- விரயம்- செலவு! வீட்டுச்செலவுக்கும் வாழ்க்கைச்செலவுக்கும் அன்றாட அவசிய செலவுக்கும் வெளியில் கைமாற்றுக் கடன் வாங்கவேண்டிய நிலை.
என்றாலும், மேஷ ராசிக்கு 9-க்குடைய குரு 10-க்கு 7-ல் உச்சம் பெற்று 10-ஆம் இடத்தை (மகரத்தை) பார்ப்பதாலும், 10-க்குடைய சனி 10-க்கு 10-ல் உச்சமாக நின்று 9-க்குடைய குருவைப் பார்ப்பதாலும்- கடந்த காலத்தில் தொழில்துறையில் ஏற்பட்ட நஷ்டத்தையும் இழப்பையும் ஏமாற்றங்களையும் ஈடுகட்டிவிடலாம். தொழில், வியாபாரம் விருத்தி யடையும். எதிர்பார்த்த முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும். சிலர் புதிய தொழில் தொடங்கலாம். 7-ஆம் இடமென்பது மனைவியையும் குறிக்கும். மனைவி வழி உறவினர்களையும் கூட்டாளிகளையும் குறிக்குமென்பதால், மனைவி பேரில் அல்லது மனைவி வழி உறவினர்களோடு சேர்ந்து கூட்டுத் தொழில் ஆரம்பிக்கலாம். ஏற்கெனவே செய்துவரும் தொழிலை விரிவாக்கலாம். அல்லது வேறு இடங்களில் கிளைகளைத் தொடங்கலாம்.
10-க்கு 12-க்குடையவர் குரு ராசிக்கும் 12-க்குடையவர் என்பதாலும், அவர் 10-க்கு 6-ல் மறைந்து 10-க்குடைய சனியால் பார்க்கப்படுவதாலும், தனியார் அல்லது அரசுப்பணியில் இருப்போர் சிலர் வி.ஆர்.எஸ். கொடுத்து வெளியேறி புதுவருமானத்துக்கு வழிதேடலாம். சிலர் இருக்கும் வேலையை விட்டுவிட்டு அதிக சம்பளத்துக்கு வேறு நல்ல வேலைக்கு மாறலாம். படித்த இளைஞர்கள் வெளிநாட்டுக்குப் போய் நல்ல சம்பாத்தியத்தில் செட்டிலாகலாம். உள்ளுரில் வேலை பார்ப்பவர்களும் பதவி உயர்வு, சம்பள உயர்வு பெற்று பெருமையாக வாழலாம். சொந்தத் தொழில் நடத்துகிறவர்களும் முன்னேற்றமும் லாபமும் அடையலாம்.
இன்றைக்கு பலசரக்கு கடை, சலூன் தொழில், ஹோட்டல், மெடிக்கல், ஜவுளிக்கடை என எந்தத் தொழிலானாலும் ஆடம்பரம், அலங்காரம், ஷோ கேஸ் செட்டப் இருந்தால்தான் மக்களைக் கவரமுடிகிறது. மினி பஸ்ஸில் கூட டி.வி., காய்ன்பாக்ஸ் போன் எல்லாம் அமைத்திருக்கிறார்கள். காய்கறி வியாபாரத்தில்கூட ஏ.ஸி. வசதி அமைக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் தொழில்வகை சுபமுதலீடு- சுபவிரயம்! இப்படி இருந்தால்தான் மக்கள் பேரம் பேசாமல் பொருள்மீது எழுதப்பட்டுள்ள கிரயத்தை வாட் வரியோடு கொடுத்து வாங்கிப் போவார்கள். எல்லா வியாபார ஸ்தாபனங்களிலும் கம்ப்யூட்டரும் அதை ஆபரேட் செய்ய ஊழியரும் இருப்பார்கள்!
ஆக, விஞ்ஞானம் முன்னேற முன்னேற நாகரிகமும் முன்னேறுகிறது. அதேயளவு எதிர்மறை விளைவுகளும் ஆபத்துகளும் அதிகமாகிறது. காய்கறி, வெங்காயம் விற்கும் பெண்ணிலிருந்து கல்லூரியில் படிக்கும் ஆண்- பெண் வரை எல்லார் கையிலும் செல்போன் இருக்கிறது. இது விஞ்ஞான வளர்ச்சிதான்! அதேசமயம் காதில் வைத்த செல்போனை எடுக் காமல் பேசுவதால் காது சீக்கிரம் கேளாமல் போகிறது; இதயத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அதைவிட ஆபத்து படிக்கும் பெண்களும் ஆண் களும் வீட்டுக்குத் தெரியாமல் எப்போது சந்திக்கலாம், எங்கே சந்திக் கலாம், எந்த சினிமாவுக்குப் போகலாம் என்று ரகசியம் பேசி, அல்லது எஸ்.எம்..எஸ் அனுப்பி பாதை தவறிப்போகவும் வாய்ப்பிருக்கிறது. இந்த நாகரிகமும் விஞ்ஞான வளர்ச்சியும் எங்கே போய் முடியப்போகிறதோ!
4-ஆம் இடம் பூமி, வீடு, கட்டடம், வாகன யோகத்தைக் குறிக்குமிடம். 2014 ஜூன் முதல் துலா ராசியிலிருந்து சனியை விட்டுவிலகும் ராகு 4-ஆம் இடத்தையும் குருவையும் பார்க்கக்கூடும். 2014- டிசம்பர் வரை சனியும் குருவைப் பார்க்கக்கூடும். உச்சனை உச்சன் பார்ப்பது பொதுவாக கெடுதல் என்றாலும், இங்கு மேஷ ராசிக்கு விதிவிலக்கு. ஏனென்றால் குருவும் சனியும் தர்மகர்மாதிபதியாவார்கள். பூமி, கட்டடம், வீடு போன்ற திட்டங் களிலும், ரியல் எஸ்டேட் தொழில்துறையிலும் தடை, தாமதங்கள் ஏற்பட் டால் பொன்னமராவதி- புதுக்கோட்டை பாதையில் (செவலூர் பிரிவு ஸ்டாப்) மெயின் ரோட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவி லுள்ள செவலூர் சென்று பூமிநாத சுவாமியையும் ஆரணவல்லியம்மனையும் வழிபடவும். ராஜப்பா குருக்கள், செல்: 98426 75863-ல் தொடர்புகொள்ளலாம்.
13-6-2014 முதல் 29-6-2014 வரை தனது சாரத்தில் (புனர்பூசம்) குரு சஞ்சாரம்
குரு தனது சுயசாரத்தில் சஞ்சாரம். ராசி, நவாம்சத்தில் வர்க்கோத்தமம்- உச்சம்! மேஷ ராசிக்கு 9, 12-க்குடையவர் 9-ஆம் இடத்துக்கு 8-ல்- 12-ஆம் இடத்துக்கு 5-ல் நின்று 12-ஆம் இடத்தையே பார்ப்பார். குரு தான் நின்ற இடத்துக்கு (கடகத்துக்கு) 6, 9-க்குடையவர். 6-க்கு 8-லும், 9-க்கு 5-ல் திரிகோணமும் பெற்று மீனத்தைப் பார்க்கிறார். பொதுவாக இக்காலம், உங்கள் நீண்டகாலத் திட்டங்களும் கனவுகளும் நிறைவேறும். நல்ல காரியங்களுக்காக கடன் வாங்கும் அமைப்பும் உண்டாகும். அது சுபக்கடன்தான். சிலர் சீட்டு போட்டு சேமிப்பு வைத்தாலும், இடையில் அதை எடுக்கும் வாய்ப்புண்டாகும். 10-ஆம் இடம் தொழில் ஸ்தானம். அதற்கு 12-க்குடையவரும் ராசிக்கு 12-க்குடையவருமான குரு 10-க்கு 7-ல் நின்று உச்சம் பெற்று 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால் வெளிநாட்டு வேலை யோகம் உண்டாகும்.

பரிகாரம்: கும்பகோணம் அருகில் ஆலங்குடி சென்று தட்சிணா மூர்த்தியை வியாழக்கிழமை வழிபடவும்.

29-6-2014 முதல் 28-8-2014 வரை பூச நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்
பூசம் சனியின் நட்சத்திரம். சனி 10, 11-க்குடையவர். 2014- டிசம்பர் வரை சனி 7-ல் உச்சம். சனி குருவைப் பார்க்கிறார். தர்மகர்மாதிபதி யோகம். எனவே தொழில், வாழ்க்கை எல்லாவற்றிலும் முன்னேற்றமான திருப்பங்கள் உண்டாகும். சிலருக்கு புதிய தொழில் முயற்சிகள் கைகூடும். பழைய தொழில் விருத்தியும் சீர்திருத்தமும் உண்டாகும். மனைவி அல்லது மனைவி வகை உறவினர்களோடு சேர்ந்து தொழில் கூட்டு ஏற்படுத்தலாம்.

2014 டிசம்பரில் மேஷ ராசிக்கு அட்டமச் சனி ஆரம்பிக்கும். அக்காலம் தொழில்கூட்டில் மாற்றம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்போருக்கு இடப்பெயர்ச்சிக்கான சூழ்நிலை உருவாகலாம். அல்லது குடியிருப்பு மாற்றம் வரலாம். படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி மாற்றம் ஏற்பட இடமுண்டாகும்.
பரிகாரம்: மாற்றம் நல்ல மாற்றமாக அமைய ராஜபாளையம் அருகில் கிருஷ்ணாபுரம் ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சனேயரை வழிபடவும்.
28-8-2014 முதல் 3-12-2014 வரை முதல்கட்டமாகவும்; 22-12-2014 முதல் 5-7-2015 வரை இரண்டாம் கட்டமாகவும் ஆயில்ய நட்சத்தில் குரு சஞ்சாரம்
ஆயில்யம் புதன் நட்சத்திரம். இதில் முதல்கட்டமாக 28-8-2014 முதல் 3-12-2014 வரை குரு சஞ்சாரம். பிறகு சிம்ம ராசிக்கு அதிசாரமாகப் போய்- சிம்மத்தில் வக்ரமடைந்து மீண்டும் 22-12-2014-ல் கடகத்துக்கு மாறி அடுத்த குருப்பெயர்ச்சி வரை 5-7-2015 வரை 2-ஆவது முறையாக ஆயில்யத்தில் சஞ்சாரம்.

மேஷ ராசிக்கு  புதன் 3, 6-க்குடையவர். அங்கு தங்குவதால் சகோதரர்கள், நண்பர்கள் வகையில் நன்மைகளும் உதவிகளும் உண்டாகும். குரு நின்ற வீட்டுக்கு (கடகத்துக்கு) புதன் 3, 12-க்குடையவர் என்பதால், அனுகூலமும் ஆதாயமும் உண்டாகும். அவர்கள் வகையில் சுபமங்கள விரயச் செலவுகளும் எதிர்பார்க்கலாம்.
இரண்டாம் கட்டமாக ஆயில்யத்துக்கு வரும் காலம் ஜாதக தசாபுக்திகளை அனுசரித்து நற்பலனோ அல்லது துர்ப்பலனோ நடக்கும். முதல்முறையில் நற்பலன் நடந்தால் இரண்டாவது முறையில் துர்ப்பலனும்; முதல் முறையில் கெட்ட பலன் நடந்தால் இரண்டாவது முறையில் நல்ல பலனும் நடக்கும்.
பரிகாரம்: விழுப்புரம் அருகேயுள்ள பரீக்கல் லட்சுமி நரசிம்மரை வழிபடலாம். புதன்கிழமை வழிபடுதல் நல்லது.
குருவின் வக்ரகதி பலன்
17-12-2014 முதல் 22-12-2014 வரை கேதுவின் நட்சத்திரமான மகத்தில் (சிம்மத்தில்) குரு வக்ரம். இது நற்காலம்- பொற்காலம். பழம் நழுவிப் பாலில் விழுந்த மாதிரி எல்லாம் எளிதாக நிறைவேறும். பிள்ளையார்பட்டி சென்று வடக்கு நோக்கிய கற்பக விநாயகருக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்யவும்.

22-12-2014 முதல் 26-3-2015 வரை புதன் நட்சத்திரமான ஆயில்யத்தில் குரு வக்ரம். இக்காலமும் வக்ரத்தில் உக்ரபலம் என்பதற்கிணங்க தேக சுகம், ஆரோக்கியவிருத்தி, கல்வி மேன்மை, பூமி, வீடு, வாகன க்ஷேமம், தாயன்பு ஆகிய நற்பலன்களை எதிர்பார்க்கலாம்.
பரிகாரம்: காரைக்குடி அருகில் தென்திருப்பதி எனப்படும் அரியக்குடி சென்று வெங்கடாசலபதியை வழிபடவும்.
அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த குருப்பெயர்ச்சி 2014 ஜூன் வரை கௌரவப் போராட்டம், காரியத்தடை, தொழில் கவலை, பொருளாதாரச் சிக்கல் போன்ற பலன்களைத் தரும். ஜூன் 21-ல் ராகு- கேது பெயர்ச்சிக்குப் பிறகு மீன கேதுவுக்கு கடக குரு பார்வை கிடைப்பதால் குடும்பத்தில் சுபமங்கள நிகழ்ச்சிகள் இடம்பெற்று சுபவிரயச் செலவுகள் ஏற்படும்.

பரிகாரம்: பூம்புகார் அருகில் கீழ்ப்பெரும்பள்ளம் சென்று கேது பகவானை வழிபடவும்.
பரணி நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த குருப்பெயர்ச்சி வருடம் முழுவதும் யோகமானதாக அமையும். தேக சுகம், தாயன்பு, குடியிருப்பு மாற்றம், பிள்ளைகளின் நற்கல்வி, கணவன்- மனைவிக்குள் அன்யோன்யம், தாம்பத்திய ஒற்றுமை- எல்லாம் இனியதாக அமையும்.

பரிகாரம்: கும்பகோணம்- ஆடுதுறை அருகில் கஞ்சனூர் சென்று சுக்கிர பகவானை வழிபடவும்.
கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த குருப்பெயர்ச்சி முழுக்க முழுக்க யோகமாகவும் நன்மையாகவும் அமையும். தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, வரவேண்டிய பணம் வந்து சேருதல், எதிர்காலத்துக்காக இன்சூரன்ஸ், எப்.டி-ஆர்.டி. டெபாசிட் செய்வது போன்ற சுபமுதலீடு செய்யலாம். இது சுபவிரயம்.

பரிகாரம்: திருச்சி- துறையூர் பாதையில் மண்ணச்சநல்லூரையடுத்து திருவெள்ளறையில், சிவப்பிரகாச சுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபடவும். ஒவ்வொரு கார்த்திகை மாதமும் கடைசி திங்கட்கிழமையன்று குரு பூஜை, அன்னம் பரிபாலிப்பு நடக்கும். தனலட்சுமியம்மாள், கடை எண் 6 (சித்த வைத்தியசாலை), வடக்கு சித்திரை வீதி, ஸ்ரீரங்கம் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். செல்: 94435 91030, 98943 60335.


ரிஷபம்: (கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
13.06.2014 வெள்ளிக்கிழமை முதல்
ரிஷப ராசி அன்பர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 2-ல் இருந்த குரு இப்போது 3-ஆம் இடத்துக்கு மாறியுள்ளார். ஏற்கெனவே குரு இருந்த 2-ஆம் இடம் சிறப்பான இடம். இப்போது மாறியுள்ள 3-ஆம் இடம் சிறப்பான இடமென்று கூறமுடியாது. "தீதிலாதொரு மூன்றில் துரியோதனன் படை மாண்டது' என்பது பாடல். கடந்த காலத்தில் குரு 2-ல் மிதுனத்தில் இருந்தபோது, சனி ராசிக்கு 6-ல் இருந்தார். ராகுவும் சனியுடன் சேர்ந்து 6-ல் இருந்தார். அவர்களுக்கு 9-ல் அட்டமாதிபதி குரு இருந்து அவர்களைப் பார்த்தார். அத்துடன் 10-ஆமிடத்தையும் குரு பார்த்தார். எனவே தொழில் நடந்தது; வேலையில் வேதனையில்லை; பணியில் பாதிப்பில்லை; தன வருமானத்திற்கும் குறைவில்லை; கௌரவம், அந்தஸ்துக்கும் பிரச்சினையில்லை.

அதேசமயம் ரிஷப ராசிக்கு குரு 8, 11-க்குடையவர் என்பதாலும், 8-ஆமிடத்தையே பார்த்ததினாலும் தேவையற்ற குழப்பங்களும் கற்பனை பயங்களும் காணப்பட்டன எனலாம். தனக்கு வரவேண்டிய பதவி உயர்வு அல்லது முன்னேற்றம் போன்றவையும் தடைப்பட்டன எனலாம்.
10-க்குடைய சனி ராகு- கேது சம்பந்தம் பெற்றதால், தொழில்துறையில் அல்லது உத்தியோகத்தில் மறைமுகக் கெடுதல்களும் போட்டி, பொறாமைகளும் ஏற்பட்டிருக்கலாம். உண்மையாக உழைத்தும் நன்மையில்லையே என்ற கவலையும், திருப்தியற்ற நிலையும் ஏற்பட்டிருக்கலாம். சிலருடைய அனுபவத்தில், உங்களுக்கு ஆதரவாக இருப்பதுபோல பேசி, மறைமுகமாக எதிரிக்கு விசுவாசமாகச் செயல்பட்டு சிலர் உங்களுடைய முன்னேற்றத்திற்குக் கெடுதல் விளைவித்திருக்கலாம். இதைத்தான் அனுகூல சத்ரு என்று சொல்வார்கள். அரசு வேலையில் இருந்தவர்களில் சிலர் உங்களிடம் காபி வாங்கிக் குடித்துவிட்டு, மேலதிகாரிகளிடம் உங்களைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி இடையூறு செய்திருக்கலாம். சொந்தத் தொழில் செய்தவர்கள் யாரை நம்பிப் பொறுப்பில் வைத்தீர்களோ, அவர்களே மறைமுகமாகக் கெடுதல் செய்து ரகசியமாகக் களவாடினார்கள். அப்படி திருடிச் சேர்த்த பணத்தைக் கொண்டு, கருவாட்டுக் கடைக்கு எதிர்கடை போட்ட மாதிரி போட்டித் தொழில் ஆரம்பித்தவர்களும் உண்டு.
எனக்குத் தெரிந்த ஒரு பலசரக்குக் கடை அதிபர், உள்ளூர்க்காரர் ஒருவரை கஷ்டப்படுகிறாரே என்று வேலையில் அமர்த்தினார். ஆரம்பத்தில் மிகவும் விசுவாசமாக வேலை பார்ப்பதுபோல் தெரிந்தது. கடைசியில் பார்த்தால் தினசரி வருமானத்தில் 100, 200 என்று ரகசியமாகக் கையாடல் செய்து ஒதுக்கிவிட்டார். கடை சொந்தக்காரருக்கு சந்தேகம் வந்து திடீரென்று அவரை விலக்கிவிட்டார். அடுத்து அவர் பழைய டூவிலரை வாங்கி, ஒவ்வொரு கடைக்கும் போய் பலசரக்குப் பொருட்களையும் பால், தயிர், மோர் போன்றவற்றையும் சப்ளைசெய்து, சிறிது நாளில் தனி பலசரக்குக் கடையே போட்டுவிட்டார். இதெல்லாம் நம்பிக்கை துரோகம். சிலரை சில நாள் ஏமாற்றலாம்; பலரை பலநாள் ஏமாற்ற முடியாது. மனித தண்டனைக்குத் தப்பினாலும், காலத்துக்கும் கடவுள் தண்டனைக்கும் தப்பமுடியாது.
இன்னொரு அனுபவம் வெளிநாட்டில் வேலைக்குப் போன தம்பி கடுமையாக உழைத்துச் சம்பாதித்து, சொந்த வீடு வாங்கவும் தங்கை திருமணத்துக்கு நகை வாங்கவும் அண்ணனுக்குப் பணம் அனுப்பினார். கூட்டுக்குடும்பம்! அண்ணன் அந்த பணத்தைக்கொண்டு தன் பேரில் வீடு வாங்கிவிட்டார். தன் மனைவிக்கு நகைகள் வாங்கி சேமித்துக்கொண்டார். தாயாருக்கும் தங்கைக்கும், சாப்பாடு வசதிகளுக்கும் துணிமணிகளுக்கும் குறையில்லாமல் அவர்களை சந்தோஷமாகப் பார்த்துக் கொண்டார். தாயகம் திரும்பிய தம்பி அண்ணனைக் கேட்டபோதுதான் அண்ணனின் சுயநலம் தெரிந்தது. அண்ணன் தன் மனைவியுடன் தனிக்குடித்தனம் போய்விட்டார். இது பங்காளி துரோகம்!
இப்போது 3-ஆம் இடத்துக்கு வந்துள்ள குரு, தொழில் ஸ்தானமான 10-ஆம் இடத்துக்கு 6-லும், சுக ஸ்தானமான 4-ஆம் இடத்துக்கு 12-லும், ரோக, ருண, சத்ரு ஸ்தானமான 6-ஆமிடத்துக்கு 10-லும் இருப்பதால், சிலருக்கு தொழில் மாற்றம், இடமாற்றம் ஏற்படலாம். சிலருக்கு ஆரோக்கியம் பாதிக்கலாம். 6-க்கு 4-ஆமிடம் 10 என்பதால், கடன் நிவர்த்தி, நோய் நிவர்த்தி சத்ரு ஜெயம் ஆகிய நற்பலனை அடையலாம்.
ரிஷப ராசிக்கு குரு 8, 11-க்குடையவர் என்பதால், அவர் 3-ல் நிற்கும் காரணத்தால் சகோதர வகையிலும் நண்பர் வகையிலும் தடைகளும் உண்டு; நன்மைகளும் உண்டு. 3-ஆம் பாவத்திற்கு அவர் 8-க்குடையவர் என்பதால் அது கெடுதல், ஏமாற்றம், இழப்பு; 11-க்குடையவர் என்பதால் ஒரு கதவு அடைபட்டால் இன்னொரு கதவு திறக்கும் என்ற விதிப்படி லாபம், நன்மை.
எவ்வளவு அன்யோன்யமாகப் பழகினாலும் பணவிஷயத்தில் கவனமாக நடந்துகொள்ள வேண்டும். பத்தாயிரம் இருபதாயிரம் என்று கடன் உதவி செய்தால் பிறகு மனவருத்தம் வந்துவிடும். தட்டமுடியாத சூழ்நிலையென்றால் நூறு இருநூறு கொடுத்து உதவலாம். திரும்ப வந்தாலும் சரி; வராவிட்டாலும் சரி- போனால் போகட்டுமென்று விட்டுவிடலாம். அதேபோல யாருக்காகவும் ஜாமீன் பொறுப்பு ஏற்கக் கூடாது. தாட்சண்யம் தனநாசம். கொடுத்து பொல்லாப்பு ஏற்படுவதைவிட, கொடுக்காமலே பொல்லாப்பு ஏற்றுக்கொள்ளலாம்.
அதேபோல தந்தையில்லாத குடும்பத்தில் நீங்களே தந்தை ஸ்தானத்திலிருந்து உங்கள் தம்பி, தங்கைகளை, அம்மாவை கவனிக்கவேண்டும். அவர்கள் விசுவாசமாக இருந்தாலும் சரி; விசுவாசம் இல்லாவிட்டாலும் சரி- உங்களால் முடிந்ததை அல்லது உங்கள் சக்திக்கு உட்பட்ட வரை உதவலாம். பனை மரம் ஏறுகிறவரை எட்டும் அளவுதான் தாங்கமுடியும். அதற்குமேல் அவரவர் பாடு என்று விட்டுவிட வேண்டியதுதான்.
கடக குரு ரிஷப ராசிக்கு 7-ஆமிடத்தையும், 9-ஆமிடத்தையும், 11-ஆமிடத்தையும் பார்க்கிறார். குரு நிற்குமிடம் மோசமான இடம் என்றாலும் பார்க்குமிடம் நல்லதாக அமைவதால் உங்களுக்கு நல்ல பலன்கள் நடக்கும்.
7-ஆமிடத்தைப் பார்ப்பதால் திருமணத் தடை விலகும். "எத்தனையோ பெண்களைப் பார்த்தாச்சு; எத்தனையோ மாப்பிள்ளைகளைப் பார்த்தாச்சு; வயதுதான் ஏறிக்கொண்டே போகிறது. இன்னும் கல்யாணம் கைகூடவில்லையே' என்று பெண்ணைப் பெற்றவர்களும் பையனைப் பெற்றவர்களும் கலங்கிக் கண்ணீர் வடிக்கும் நிலைக்கு இந்த குருப்பெயர்ச்சி முற்றுப்புள்ளி வைத்துவிடும். சுபமங்கள நிகழ்ச்சியை நிறைவேற்றி வைப்பார். மனசுக்கேற்ற மனைவி அல்லது கணவர் அமைவார். பல ஆண்டுகளாக கல்யாணக் கனவு கண்டவர்களுக்கு மனம்போல் மாங்கல்யம் அமைந்துவிடும்.
10-க்கு 6-ல் குரு உச்சம் பெறுவதாலும், 10-க்கு 12-க்குடைய சனி குருவைப் பார்ப்பதாலும், இருவரும் கேந்திர பலம் பெறுவதாலும், உச்சனை உச்சன் பார்ப்பதாலும்- சிலருக்கு வேலை பார்க்க உடல்நிலை இடம்தராத காரணத்தினால் அல்லது தவிர்க்க முடியாத சுபவிரயங்களால் பிள்ளைகள் வகையில் கடன் ஏற்பட்டு, அதை அடைப்பதற்காக சிலர் விருப்பு ஓய்வு (வி.ஆர்.எஸ்.) பெற்று, வரும் தொகையினால் கடன் பிரச்சினைகளைத் தீர்க்கலாம் அல்லது சுயதொழில் ஆரம்பிக்கலாம்.
9-ஆம் இடத்தை குரு பார்ப்பதும் சிறப்பு. தகப்பனார் ஆசியும் பணஉதவியும் கிடைக்கும். பூர்வீகச் சொத்துகளை மாற்றியமைத்து புதுமைப் பொலிவோடு செயல்படலாம். 3-ல் குரு நிற்பதால் சகோதர வகையில் நிலவிய பிரச்சினைகள் நீங்கி சமரச உடன்பாடு ஏற்படும். குலதெய்வ வழிபாடும் இஷ்ட தெய்வ வழிபாடும் உங்களை வழிநடத்தும். பிரார்த்தனைக் கடன்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றலாம்.
ரிஷப ராசிக்கு 3-ல் உச்சம் பெற்ற குரு 9-ஆமிடத்தைப் பார்ப்பதால், தெய்வீகப் பேரருள் கிடைக்கும் காலம். ரிஷப ராசியின் தர்மகர்மாதிபதியான சனியின் பார்வையை குரு பெறுவதால், இக்காலம் நற்காலம்; பொற்காலம். உங்களுக்கு எப்போது எது தேவையோ அப்போது அது கிடைத்தால் போதாதா? அதற்குமேல் என்ன வேண்டும்? சிலசமயம் சில காரியம் தாமதமாகும். அதற்கும் ஒரு காரணம் இருக்கும். அதன் ரகசியம் இப்போது நமக்குத் தெரியாது; பிறகு புரியும்.
"வாயானை மனத்தானை மனத்துள் நின்ற கருத்தானை; கருத்தறிந்து முடிப்பான்தன்னை; தூயானை தூவெள்ளையேற்றான் தன்னை சுடர்த் திங்கட் சடையானை; தொடர்ந்து நின்றென் தாயானை தவமாய தன்மையானை; தலையாய தேவாதி தேவர்க்கென்றும் சேயானை; தென்கூடல் திருவாலவாய் சிவனடியை சிந்திக்கப் பெற்றேனே' என்று அல்லும் பகலும் சொக்கநாதப் பெருமானை நினைத்துக்கொண்டே இருங்கள். அவன் உங்கள் தேவைகளையெல்லாம் பூர்த்தி செய்வான். கேட்ட வரமெல்லாம் கொடுப்பான்.
13-6-2014 முதல் 29-6-2014 வரை தனது சாரத்தில் (புனர்பூசம்) குரு சஞ்சாரம்
புனர்பூசம் குருவின் நட்சத்திரம். 4-ஆம் பாதம். ராசி அம்சத்தில் கடகத்தில் வர்க்கோத்தமம்- உச்சம்! ரிஷப ராசிக்கு 8, 11-க்குடையவர். 8-க்கு 8-லும், 11-க்கு 5-லும் உச்சமென்பதால் ஆயுள் தீர்க்கம்- ஆரோக்கிய விருத்தி. தொட்டதெல்லாம் லாபம்! தொடுத்த காரியங்கள் எல்லாம் வெற்றி! எடுத்த முயற்சிகளும் ஈடேறும்!

பரிகாரம்: திருச்செந்தூர் சென்று வியாழக்கிழமை தட்சிணா மூர்த்தியை வழிபடவும்
29-6-2014 முதல் 28-8-2014 வரை பூச நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்
பூசம் சனியின் நட்சத்திரம். ரிஷப ராசிக்கு சனி ராஜயோகாதிபதி. 2014 டிசம்பர் வரை உச்சம் பெற்ற சனி கடக குருவைப் பார்ப்பதால் உச்சனை உச்சன் பார்க்கும் பலனாகும்! ஆனாலும் ரிஷப ராசிக்கு 9, 10-க்குடைய சனி 11-க்குடைய குருவைப் பார்ப்பதால் தோஷம் நிவர்த்தி. எதிர்பாராத தனப்ராப்தி, வில்லங்கம்- விவகாரத்தில் வெற்றி, சத்ருஜெயம், போட்டி- பொறாமைகளுக்கு முற்றுப்புள்ளி ஆகிய நற்பலனை எதிர்பார்க்கலாம். சின்னமனூர் அருகில் குச்சனூர் சென்று சனீஸ்வரரையும் வழிபட்டு அருகில் வடகுரு ஸ்தலம் சென்று குருவையும் வழிபடவும்.

28-8-2014 முதல் 3-12-2014 வரை முதல் கட்டமாகவும்; 22-12-2014 முதல் 5-7-2015 வரை இரண்டாம் கட்டமாகவும் ஆயில்ய நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் ஆயில்யம் புதன் சாரம். புதன் ரிஷபத்துக்கு 2, 5-க்குடையவர். குரு 8, 11-க்குடையவர். இந்தக் காலம் எதிர்பாராத வருமானம், பொதுக்காரியங்களில் வெற்றி, புகழ், பெருமை, தொழில் லாபம், எல்லாக் காரியங்களிலும் அனுகூலம் உண்டாகும். குரு நேர்கதியிலும் வக்ரகதியிலும் நன்மைகளே நடக்கும். இழந்த செல்வாக்கு மீண்டும் உண்டாகும். பெருமையும் புகழும் ஏற்படும்.
பரிகாரம்: பூம்புகாருக்கு முன்னால் திருவெண்காடு சென்று வழிபடவும். மயிலாடுதுறையிலிருந்து பஸ் வசதி உண்டு.
குருவின் வக்ரகதி பலன்
17-12-2014 முதல் 22-12-2014 வரை கேதுவின் சாரமான மகத்திலும், பிறகு 22-12-2014 முதல் 26-3-2015 வரை புதனின் சாரமான ஆயில்யத்திலும் குரு வக்ரமாக இருப்பார். பொதுவாக வக்ரம்- உக்ரபலம் என்பார்கள். சில காரியங்கள் உடனுக்குடன் நிறைவேறும். சில காரியங்கள் தாமதமாக நடக்கும். விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் வெற்றி தரும்.

பரிகாரம்: விழுப்புரம் அருகில் சங்கராபுரத்தில் ஆதிரெங்கநாதர் கோவில் (திருவரங்கம்) இருக்கிறது. அங்கு சென்று வழிபடலாம்.
கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த குருப்பெயர்ச்சி ஆரோக்கியத்தைத் தெளிவுபடுத்தும். சிலருக்கு வாகன யோகத்தை ஏற்படுத்தும். திருமணமாகாதவர்களுக்கு திருமண யோகத்தையும், வாரிசு இல்லாதவர்களுக்கு வாரிசு  யோகத்தையும் உண்டாக்கும். சிலருக்கு குடியிருப்பு மாற்றம் ஏற்படலாம்.

பரிகாரம்: திருச்சி- துறையூர் பாதையில் மண்ணச்சநல்லூரை அடுத்து திருவெள்ளறையில் சிவப்பிரகாச சுவாமிகள் ஜீவசமாதி இருக்கிறது. ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடைசி திங்கட்கிழமை குரு பூஜை, அன்னம் பரிபாலிப்பு நடக்கும். அங்குசென்று வழிபடலாம். தொடர்புக்கு அலைபேசி: 94435 91030.
ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த குருப்பெயர்ச்சி முழுக்க முழுக்க நன்மை தரும். ரோகிணி சந்திரனின் நட்சத்திரம். குரு கடகத்தில் சந்திரன் வீட்டில்தான் உச்சம். குருவும் சந்திரனும் சேர்ந்தால் குருச்சந்திர யோகம் என்பார்கள். அதே போல சந்திரனுக்கு கேந்திரத்தில் குரு இருந்தால் கெஜகேசரி யோகம் எனப்படும். சந்திரன் மனோகாரகன் என்பதாலும், குரு புத்திரகாரகன் என்பதாலும்- உங்கள் மனதில் எழும் எண்ணங்கள் ஈடேறும். பிள்ளைகள் வகையில் நல்லவை நடக்கும். மனம்போல் வாழ்வு!

பரிகாரம்: மதுரை மாவட்டம், அம்மையநாயக்கனூரில் 1939- ஆவணி ரோகிணியில் பிறந்து, 17-9-1970 ஆவணி ரோகிணியில் சமாதியடைந்தவர், சாது கருணாம்பிகை. இவரது ஜீவசமாதி திண்டுக்கல் கிழக்கு, கோவிந்தபுரம் காமராஜ் தெருவில் இருக்கிறது. திடஉணவு சாப்பிடாமல், இரண்டு பழம்- சிறிது பால் மட்டும் சாப்பிட்டு தவமிருந்தவர். வெண்ணிற ஆடை அணிந்து வள்ளலாரின் வழியைப் பின்பற்றியவர். அங்குசென்று வழிபடலாம்.
மிருகசீரிட நட்சத்திரக்காரர்களுக்கு:
மிருகசீரிடம் செவ்வாய் நட்சத்திரம். ரிஷப ராசிக்கு செவ்வாய் 7, 12-க்குடையவர். சிலருக்கு சுபவிரயச் செலவுகள், வீண் விரயச் செலவுகள், சிலருக்கு பயணச் செலவுகள் ஏற்படும். என்றாலும் 7-ஆமிடத்துக்கு குரு பார்வை இருந்தால் செலவுக்கேற்ற வருமானமும் உண்டாகும்.

பரிகாரம்: சீர்காழி- சிவாலயத்தில் சட்டநாதரை வழிபடவும். ஆவணி மாதம் மிருகசீரிடம் 3-ஆம் பாதத்தில் அவதரித்தவர்.

மிதுனம்: (மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய) 13.06.2014 வெள்ளிக்கிழமை முதல்

மிதுன ராசி அன்பர்களே!
இதுவரை ஜென்ம ராசியிலிருந்த குரு இப்போது 2-ஆம் இடத்துக்கு மாறியிருக்கிறார். அது அவருக்கு உச்ச வீடு. மிதுன ராசிக்கு 7, 10-க்குடைய ஆதிபத்தியம் பெற்றவர். 7 மனைவி ஸ்தானம்; 10 தொழில் ஸ்தானம். அவர் குடும்ப ஸ்தானத்தில் உச்சமென்பது மிகமிகச் சிறப்பு!

குருப்பெயர்ச்சியால் அதிக நன்மையும் யோகமும் அடையப்போகும் ராசிக்காரர்கள் ஐந்து பேர். மிதுன ராசிக்காரர்கள், கன்னி ராசிக்காரர்கள், விருச்சிக ராசிக்காரர்கள், மகர ராசிக்காரர்கள், மீன ராசிக்காரர்கள் ஆகியோர் ஆவார்கள். அந்த ஐந்து ராசிக்காரர்களுள் நீங்களும் ஒருவர். அதாவது குருவுக்கு யோகமான இடங்கள் 2, 5, 7, 9, 11-ஆம் இடங்கள்தான்!
ஏற்கெனவே குரு இருந்த இடம் ஜென்ம ராசி! "ஜென்ம ராமர் சீதையை சிறைவைத்தது' என்பது பாடல். வேலை, தொழில், வருமானமில்லாமல் சிலரை வீட்டிலேயே முடக்கிவைத்தது. வேலை அல்லது தொழில் இருந்தவர்களுக்கு அதில் முன்னேற்றமோ திருப்தியோ இல்லாமல், விரக்தி ஏற்பட்டது. சிலருக்கு கழுத்துக்குமேல் வெள்ளம் போனமாதிரி வரவுக்கு மேல் செலவும், குடும்பச்சுமையும் தாங்கமுடியாத தலைவலியாக- பெரும்பாரமாக அமைந்தது. சிலர் குடும்பம் ஓரிடம் தான் ஓரிடமென்று, உத்தியோகம் சம்பந்தமாகப் பிரிந்துவாழ நேர்ந்தது. வேறு சிலர் கடன்காரர்களுக்கு பயந்து தலைமறைவாக ஓடி ஒளிந்தார்கள். அதிகாரம், பதவி, செல்வாக்கு, அடியாள், கட்டப்பஞ்சாயத்து, அடாவடி வசூல் என்று தனி ராஜாங்கம் நடத்தி ஆனந்தமாக இருந்தவர்கள் சிலரை, கடைசி நேரத்தில் திடீர் வீழ்ச்சியையும் திருப்பத்தையும் தந்து வழக்குகளில் சிக்கவைத்து சிந்திக்க வைத்தது.
யாரோ சிலர் கடத்தல் பொருள் அல்லது சட்டவிரோதமான பொருட்களைக் கொண்டுவந்து, "நல்ல விலைக்கு விற்று கமிஷன் எடுத்துக்கொள்ளுங்கள்' என்று ஆசைகாட்ட, திடீர் குபேரனாகும் ஆசையில் சிலர் அதில் ஈடுபட்டு, விலையும் போகாமல் விற்பனையும் ஆகாமல் கற்பனைக் கனவுகளில் மிதக்கவைத்தது. இதெல்லாம் குரு ஜென்மத்தில் நின்றபோது நடந்த அனுபவங்கள்!
இப்போது குரு 2-ஆம் இடத்துக்கு மாறியிருப்பதோடு அங்கு உச்சபலமாகவும் இருக்கிறார். 2-ஆம் இடத்துக்குரிய வாக்கு, வித்தை, தனம், குடும்பம் ஆகிய பலன்களை சீரும் சிறப்புமாகச் செயல்படுத்துவார். திருமணத் தடை விலகும். குடும்பம் அமையும். பொறுப்புகளும் கடமை உணர்வுகளும் ஏற்படும். வரவேண்டிய பாக்கிசாக்கிகள் வசூலாகும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வமும் அக்கறையும் உண்டாகும். சொல்வாக்கு செல்வாக்குப் பெறும். உயர்படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். வாக்கு வண்மையாலும் வாக்கு சாதுரியத்தாலும் நன்மைகள் விளையும்.
மிதுன ராசிக்கு 7, 10-க்குடையவர் 7-ஆம் இடத்துக்கு 8-லும், 10-ஆம் இடத்துக்கு 9-லும் உச்சம் பெற்று 10-ஆம் இடத்தையே பார்க்கிறார். 7 என்பது  மனைவியையும் குறிக்கும். உபதொழிலையும் குறிக்கும். அவர் அதற்கு 8-ல் மறைந்தாலும் உச்ச பலம் பெற்று 7-க்கு 2-ஆம் இடத்தைப் பார்ப்பதால், மனைவி பேரில் தொழில் ஆரம்பிக்கலாம். மனைவியைக் கூட்டாளி ஆக்கலாம். அல்லது மனைவி வகை உறவினர்களோடு கூட்டுத்தொழில் ஆரம்பிக்கலாம். ஏற்கெனவே நடந்த தொழிலுக்கு உபதொழில்- கிளைகளை உருவாக்கலாம்.
கடகத்தில் உச்சம்பெறும் குரு மிதுன ராசிக்கு 6-ஆம் இடத்தையும், 8-ஆம் இடத்தையும், 10-ஆம் இடத்தையும் பார்க்கிறார். 6-ஆம் இட மென்பது ரோகம், ருணம், சத்ரு எனப்படும். 8-ஆம் இடமென்பது விபத்து, பீடை, ஏமாற்றம் ஆகியவற்றைக் குறிக்குமிடம்.
6-ஆம் இடத்துக்கு 2, 5-க்குடையவர் ராசிக்கு 2-ல் உச்சம் பெறுவதால் எதிரி, கடன், வைத்தியச் செலவு போன்ற கெடுபலன்களெல்லாம் சுபபலன்களாக மாறிவிடும். எதிரியால் அனுகூலம் உண்டாகும். எதிரிக்கு எதிரி தனக்கு நண்பன் என்ற பாலிஸியால் அனுகூலம் உண்டாகும். கடன் ஏற்பட்டாலும் சுபக்கடன்தான். 8-ஆம் இடத்தைப் பார்ப்பதால் எதிர்பாராத அதிர்ஷ்டம், தனப்ராப்தி உண்டாகும்.
8-க்குடைய சனி 5-ல் உச்சம் பெற்று 2-ல் உள்ள உச்ச குருவைப் பார்க்கிறார். மறைபொருளான வருமானம் சிலருக்கு உண்டாகும். ஒரு அன்பர் தன் ஒரே பையனைப் படிக்கவைத்தார். பிளஸ் டூ படிக்கும்போது பஸ் விபத்தில் சிக்கி அந்தப் பையன் ஒரு காலை இழக்கும்படியாகி விட்டது. பத்து லட்ச ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்தார். இரண்டு வருடம் கேஸ் நடந்தது. பையனுடைய வயது, எதிர்காலம் கருதி கோர்ட் நான்கு லட்ச ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்கும்படி தீர்ப்பு சொன்னது. அந்தப் பணத்தைக் கொண்டு ஒரு பெட்டிக் கடை வைத்தும், பையனை மேற்கொண்டு படிக்க வைத்தும், ஊனமுற்றோர் சலுகையால் அரசு வேலையும் வாங்கிக் கொடுத்துவிட்டார் தந்தை.
அதேபோல- மதுரையில் ஒரு பத்திரிகை அலுவலகத்தின்மீது சிலர் தாக்குதல் நிகழ்த்தியதில், அந்த அலுவலகம் தீப்பிடித்தது. அதில் மூன்று பேர் இறந்தார்கள். அரசு தலா இரண்டு லட்ச ரூபாய் தந்தது. ஆனால் ஸ்தாபன உரிமையாளர்கள் ஆளுக்கு 15 லட்ச ரூபாய் தந்தனர். விபத்து என்பது விரும்பத்தகாத ஒரு நிகழ்ச்சிதான் என்றாலும், அதற்கு நஷ்ட ஈடு என்பது எல்லாருக்கும் கிடைப்பதில்லையே. அப்படியே கிடைத்தாலும் அது திருப்தியாக அமைவதில்லையே!
சில வருடங்களுக்கு முன்பு அரசு ஊழியர்கள் எல்லாம் தமிழ்நாடு முழுவதும் ஸ்டிரைக் செய்தார்கள். ஒரு குருப்பெயர்ச்சியையொட்டி இந்த சம்பவம் நடந்தது. அன்றைய ஆட்சியாளர்கள் ஸ்டிரைக் செய்தவர்களை யெல்லாம் பணிநீக்கம் செய்துவிட்டு, புதியவர்களை நாலாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு நியமித்தார்கள். அதுவே அந்த ஆட்சி மாற்றத்துக்கும் வீழ்ச்சிக்கும் காரணமாக அமைந்துவிட்டது. அடுத்துவந்த புதிய அரசு தற்காலிகப் பணியாளர்களுக்கு டெஸ்ட் வைத்து, பாஸ் செய்தவர்களை நிரந்தரமாக்கியது. இந்த ஸ்டிரைக் நடக்காமலிருந்தாலும்- ஸ்டிரைக் செய்தவர்கள் சஸ்பெண்ட் ஆகாமலிருந்தாலும் புதியவர்களுக்கு அரசு வேலைக்கு வாய்ப்பிருந்திருக்காதல்லவா! ஆக, ஒரு கெடுதலிலும் இன்னொரு நல்லது. இதுதான் 6, 8-ன் யோகம்.
சொந்தத் தொழில் செய்கிறவர்கள் தொழிலுக்காக கடன் வாங்கலாம். அல்லது தனியார் வேலைக்கோ அல்லது சர்க்கார் வேலைக்கோ அல்லது வெளிநாட்டு வேலைக்கோ முயற்சிப்பவர்கள், அதற்கு லஞ்சம் கொடுத்து செலவழிக்க கடன் வாங்கலாம். நல்ல தசாபுக்தி யோகமிருந்தால் செலவு செய்தாலும் ஏமாற்றமில்லாமல் வேலையை வாங்கிவிடலாம். மோசமான தசாபுக்தி நடந்தால் வேலையும் கிடைக்காமல், கொடுத்த பணமும் திரும்பக் கிடைக்காமல் நஷ்டமும் ஏமாற்றமும் அடையலாம்.
எனக்குத் தெரிந்த நண்பரின் மகன் இரண்டு லட்ச ரூபாய் செலவு செய்து வெளிநாட்டுக்குப் போனான். அவன் தகப்பனார் கடன் வாங்கித்தான் அந்தப் பணத்தைக் கொடுத்தார். வெளிநாடு போன பையன் அந்த ஊர் "கிளைமேட்'  பிடிக்காமல் இரண்டு மாதத்தில் பிறந்த ஊருக்குத் திரும்பிவிட்டான். பணமும் போச்சு; கடனும் ஆச்சு.
குரு மிதுன ராசிக்கு 6, 8-ஆம் இடங்களைப் பார்த்தாலும், 10-க்குடையவர் அதற்கு 5-ல் உச்சம் பெற்று 10-ஆம் இடத்தையே பாôப்பதால், இவ்வளவு கஷ்ட நஷ்டங்களுக்கும் ஆறுதலளிக்கும் வகையில் நன்மையாக அமையும். ஒரு ஹோட்டலில் போய் சிற்றுண்டி சாப்பிடும்போது சட்னி, சாம்பார் எல்லாம் வாய்க்கு ருசியாக இல்லாவிட்டாலும், கடைசியில் காபி மட்டும் டிகிரி காபியாக- ஐந்து நிமிடம் காபியின் சுவை நாக்கில் ஒட்டிக்கொண்டிருக்கும்பட்சத்தில் திருப்தி ஏற்படுவதுபோல, உச்சம்பெற்ற குருபார்வை 10-ஆம் இடத்தை சமப்படுத்திவிடும்.
10-க்குடையவரே 10-க்கு திரிகோணத்தில் உச்சம்பெற்று 10-ஆம் இடத்தையே பார்ப்பது யோகம்தான். பொது வேலைநிறுத்தம் நடக்கும் சமயம் எல்லாக் கடைகளும் அடைத்திருக்கும்போது, எங்கேயாவது ஒரு சந்துக்கடையில் மட்டும் ரகசியமாக பலகாரம், காபி, டீ, சிகரெட் விற்பனை செய்தால் எல்லாம் விற்றுத் தீர்ந்துவிடுமல்லவா! காபி, டீ, உணவு டேஸ்ட் இருக்கிறதோ இல்லையோ யாரும் விமர்சனம் செய்யமாட்டார்கள். அப்படி உங்களுடைய தொழிலும் ஓஹோ என்று சிறப்பாக இருக்கும். வாழ்க்கையும் ஆஹா என்று அமைந்துவிடும். கையில் தாராளமாக காசு புரளும்போது- வரவு வரும்போது தவணைக் கடன்களையும் அடைத்துவிடலாம். மனதில் மகிழ்ச்சியும் நிறைவும் கிளுகிளுப்பும் உற்சாகமும் வந்துவிடுமே! அப்போது குரு 6-ஆம் இடம், 8-ஆம் இடங்களைப் பார்த்ததைப் பற்றி கவலையும் ஏற்படாதல்லவா!


13-6-2014 முதல் 29-6-2014 வரை - தனது சாரத்தில் (புனர்பூசம்) குரு சஞ்சாரம்
குரு புனர்பூசம் 4-ல் சஞ்சரிக்கும் இக்காலம் உச்சம் மட்டுமல்ல; ராசியிலும் நவாம்சத்திலும் வர்க்கோத்தமம். எனவே தொழில் மேன்மை, வாழ்க்கை மேன்மை, பொருளாதார உயர்வு, தாராளமான வரவு- செலவு, கொடுக்கல்- வாங்கலில் வாக்குநாணயம் காப்பாற்றப்படுதல் ஆகிய எல்லா நன்மைகளும் உண்டாகும். சொல்வாக்கு செல்வாக்குப் பெறும். படிக்கும் மாணவர்களுக்கு மேற்படிப்பு யோகம், விரும்பிய பாடம் கிடைத்தல் போன்ற யோகமும் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு பதவி யோகம், செல்வாக்கு, கீர்த்தி, கௌரவம் உண்டாகும்.

பரிகாரம்: ராஜபாளையம் அடுத்து வாசுதேவநல்லூரிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் தாருகாபுரம் இருக்கிறது. அங்கு மிகப் பழமை யான சிவன் கோவில் உள்ளது. அம்பாள் அகிலாண்டேஸ்வரி; சுவாமி மத்தியஸ்தநாதர். ஒரு காலத்தில் சேரனுக்கும் பாண்டியனுக்கும் ஏற்பட்ட வழக்கில், சுவாமி மத்தியஸ்தம் செய்ததாக வரலாறு. பிராகாரத்தில் நவகிரக தட்சிணாமூர்த்தி சந்நிதி இருக்கிறது. சனகாதி முனிவர்களோடு நவகிரகங்களும் பாதத்தைச் சுற்றி தோற்றமளிப்பார்கள். ஒவ்வொரு பௌர்ணமியன்றும் இரவு அந்த ஊரில் கிரிவலம் நடக்கும். தலைவன்கோட்டை ஜமீனுக்குப் பாத்தியதைப்பட்ட கோவில். விவரங்களுக்கு டிரஸ்டி ரமேஷ்ராஜா, அலைபேசி: 99766 49048; அர்ச்சகர் குப்புசாமி அய்யர், அலைபேசி: 94861 20469; அர்ச்சகர் சீனிவாசன், அலைபேசி: 77080 35322; முருகேசன், அலைபேசி: 91594 35735. இவர் களில் ஒருவரை தொடர்புகொள்ளலாம்.
29-6-2014 முதல் 28-8-2014 வரை பூச நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்
பூசம் சனியின் நட்சத்திரம். சனி மிதுன ராசிக்கு 8, 9-க்குடையவர்; 5-ல் உச்சம். (2014 டிசம்பர் வரை). குருவைப் பார்க்கிறார். 2014 டிசம்பருக்குப் பிறகு சனி 6-ல் விருச்சிகத்துக்கு மாறும்போது, சனியை குரு பார்க்கக்கூடும். ஆக 9-க்குடைய சனிக்கும் 10-க்குடைய குருவுக்கும் தொடர்பிருப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படும். அதனால் சனிக்கு அட்டமாதிபத்திய தோஷம் நீங்கிவிடும். எனவே உங்கள் வாழ்வும் தொழிலும் யோகமாக அமையும். எல்லாப் பிரச்சினைகளையும் எளிதாக சமாளித்துவிடலாம். பேரும் புகழும் பாராட்டும் தேடிவரும். கும்பிடப் போன தெய்வம் எதிரில் வந்து அருள்பாலிப்பதுபோல எல்லாம்  இனிதாகும்.

பரிகாரம்: நாமக்கல் அருகில் (12 கிலோமீட்டர்) சேந்தமங்கலத்தில் (சாமியார் கரடு ஸ்டாப்) தத்தாத்ரேயர் சந்நிதியும், அதன்கீழ் குருநாதர் ஸ்வயம்பிரகாச சுவாமிகளின் ஜீவசமாதியும் உள்ளது. புதுக்கோட்டை ஜட்ஜ் சுவாமிகளின் சீடர்- சாந்தானந்த சுவாமிகளின் குருநாதர். (சாந்தானந்த சுவாமிகள் சேலம் ஸ்காந்தஸ்ரமத்தை நிறுவியவர்.) இங்கு ஏழரை அடி உயரத்தில் சனீஸ்வரரும், எதிரில் ஒன்பதடி உயரத்தில் பஞ்சமுக ஆஞ்சனேயர் சந்நிதியும் உண்டு. அபிஷேகம் செய்ய அர்ச்சகர் பாலசுப்ரமணியம் அல்லது அவர் மகன் ஸ்ரீராமை தொடர்புகொள்ளவும். அலைபேசி: 93454 38950.


28-8-2014 முதல் 3-12-2014 வரை முதல் கட்டமாகவும்; 22-12-2014 முதல் 5-7-2015 வரை இரண்டாம் கட்டமாகவும் ஆயில்ய நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்
ஆயில்யம் புதனின் நட்சத்திரம். புதன் உங்கள் ராசிநாதன்; 1, 4-க்குடையவர். குரு ராசிக்கு 7, 10-க்குடையவர். எனவே இக்காலம் முழுவதும் உங்களுக்கு மிகச் சிறப்பான பலன்களாகவே நடக்கும். கௌரவம், கீர்த்தி, புகழ், அந்தஸ்து உண்டாகும். பூமி, வீடு, வாகன யோகம் அமையும். திருமணமாகாதவர்களுக்குத் திருமண யோகமும்; புதன் 5-ஆம் இடத்துக்கு பாக்கியாதிபதி என்பதால் புத்திர யோகமும் உண்டாகும். இதில் 22-12-2014  முதல் 26-3-2015 வரை ஆயில்யத்தில் குரு வக்ரமாக இருந்தாலும், உங்களுக்கு அனுகூலமான- ஆதாயமான பலன் களாகவே நடக்கும். குறிப்பாக புதன் தசா புக்தி நடப்பவர்களுக்கு, வக்ரம் அற்புதப் பலன்களைச் செய்யுமென்று எதிர்பார்க்கலாம்.

பரிகாரம்: திண்டிவனம்- புதுச்சேரி பாதையில் (மைலம் வழி) திருவக்கரை இருக்கிறது. அங்கு வக்ரகாளி, சந்திரமௌலீஸ்வரர், அம்பாள், பெருமாள் சந்நிதிகள் உண்டு. சிவனும் விஷ்ணுவும் உள்ள ஸ்தலம். அத்துடன் குரு மாமுண்ட முனிவர் ஜீவசமாதியும் உண்டு. அங்கு சனீஸ்வரரும் வக்ரமாக இருப்பார். அந்த எல்லைக்குப்போய் அர்ச்சனை செய்தால், இக்காலம் நற்காலமாக அமையும்.
குருவின் வக்ரகதி பலன்
3-12-2014-ல் குரு சிம்ம ராசி, மக நட்சத்திரத்தில் பிரவேசமாகி, 22-12-2014 வரை இருப்பார். இதில் 17-12-2014 முதல் 22-12-2014 வரை ஆறு நாட்கள் மக நட்சத்திரத்தில் குரு வக்ரம். அடுத்து கடக ராசிக்கு ஆயில்ய நட்சத்திரத்தில் வக்ரமாகத் திரும்பி,  26-3-2015 வரை வக்ரமாகவே சஞ்சரிப் பார். பொதுவாக சிம்மத்தில் குரு வக்ரமாக நிற்கும் ஆறு நாட்களில் பெரிய மாறுதல் ஏதும் ஏற்படாது. மீண்டும் கடகத்துக்கு மாறி ஆயில்யத்தில் வக்ரமாக இருக்கும் காலகட்டத்தில் (26-3-2015 வரை) குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். முயற்சிகளில் படிப்படியான வளர்ச்சியும், வாழ்க்கையில் தளர்ச்சியில்லாத முன்னேற்றமும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்குத் தகுந்த ஊதியமும் உயர்வும் உண்டாகும். வியாபாரிகள் கவனமாக- ஆர்வமாக இருந்தால் எதிர்பார்த்த லாபமும் முன்னேற்றமும் அடையலாம.

பரிகாரம்: கும்பகோணம் அருகில் சுவாமிமலை போகும் பாதையில், திருவலஞ்சுழி சிவாலயத்தில் ஸ்வேத விநாயகர் சந்நிதி உண்டு. பாற் கடலைக் கடையும்போது காரியசித்திக்காக கடல் நுரையில் அமைக்கப் பட்டு, தேவர்களும் மற்றவர்களும் வழிபட்டதாக புராணம்! இவருக்கு எல்லா இடங்களைப் போல தண்ணீர், பால்போன்ற எந்த அபிஷேகமும் கிடையாது. இவரை வழிபட்டால் குருவின் வக்ரம் பிரமாதமாக அமையும்.
மிருகசீரிட நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு கடன், எதிர்ப்பு, வைத்தியச் செலவுகளையும் தரும்; எதிலும் வெற்றி, லாபம், ஜெயத்தையும் தரும். செவ்வாய் மிதுன ராசிக்கு 6, 11-க்குடையவர். முதலில் 6-ஆம் இடத்துப் பலனையும் பிறகு 11-ஆம் இடத்துப் பலனையும் அனுபவிக்கலாம்.

பரிகாரம்: சீர்காழி- சிவன் கோவிலில் சட்டநாதருக்கு தனிச்சந்நிதி உண்டு. ஆவணி மாதம் மிருகசீரிட நட்சத்திரத்தில் அவதரித்தவர். அவரை வழிபடுவதால் ஆறாமிடத்துக் கெடுபலன்கள் வேறாகி விலகியோடிவிடும்.
திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த குருப்பெயர்ச்சி அற்புதமாக இருக்கும். திருவாதிரை- ராகுவின் நட்சத்திரம். ராகு குருவைப் பார்க்கிறார்.

பரிகாரம்: கும்பகோணம் அருகில் திருநாகேஸ்வரம் சென்று வழிபட வேண்டும். ராகு மிதுன ராசிக்கு 4-ல் அமர்ந்து குருவைப் பார்ப்பதால் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். அல்லது பூமி, வீடு, வாகன சம்பந்தமான செலவுகளைத் தரலாம். சங்கரன்கோவிலிலிருந்து புளியங்குடி போகும் பாதையில், பெட்ரோல் பங்க் எதிரில் பாம்பாட்டி சித்தர் கோவில் (ஜீவசமாதி) உள்ளது. அங்கு சென்று வழிபட்டால் சுகமுண்டாகும்.
புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்கு:
புனர்பூசம் குருவின் நட்சத்திரம். (சுயசாரம்). எனவே இந்த குருப் பெயர்ச்சி எல்லா வகையிலும் உங்களுக்கு வளமும் நலமும் பலமும் தரும். செல்வாக்கு, பதவி யோகம், பேரும் புகழும் ஏற்படுத்தும். குருப் பெயர்ச்சியை வாழ்த்தி வரவேற்போம்.

பரிகாரம்: மயிலாடுதுறை அருகே கூறைநாடு பகுதியில், காவிரியின் தென்கரையில் மணிவாசக சுவாமி ஜீவசமாதி உள்ளது. காளி, வித்யா, பைரவர் உபாசகர். கூறைநாடு அய்யனார் கோவிலில் தங்கித் தவம்புரிந்தவர். 1-1-1972-ல் மார்கழி மாதம் புனர்பூச நட்சத்திரத்தன்று பரிபூரணமானவர். சமாதிமீது தட்சிணகாளி பிரதிஷ்டை. தினசரி பூஜை உண்டு. அங்கு சென்று வழிபடலாம். தமிழக- ஆந்திர எல்லையில் சுருட்டப்பள்ளி சென்று (பெரியபாளையம் அருகில்) தாம்பத்திய தட்சணாமூர்த்தியை வழிபடலாம்.

கடகம்: (புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய) 13.06.2014 வெள்ளிக்கிழமை முதல்
கடக ராசி அன்பர்களே!
இதுவரை கடக ராசிக்கு 12-ல் இருந்த குரு இப்போது ஜென்ம ராசியான கடகத்துக்கு மாறியிருக்கிறார். "ஜென்ம ராமர் வனத்திலே சீதையைச் சிறை வைத்தது' என்பது பாடல். "பன்னிரண்டினில் இராவணன் முடியற்று வீழ்ந்தது” என்பது பாடல். ஏற்கெனவே இருந்த 12-ஆம் இடமும் சரியல்ல; இப்போது மாறியுள்ள ஜென்மமும் சரியில்லாத இடம்தான் என்றாலும், கடகத்தில் குரு உச்சம்! 9-க்குடையவர் 9-ஆம் இடத்தை (மீனத்தை) பார்க்கிறார்! பாக்கியாதிபதி பாக்கிய ஸ்தானத்தைப் பார்ப்பது நன்மைதானே! தூக்கு தண்டனை பெற்று சிறையிலுள்ள கைதிகளின் தூக்குத்தண்டனையை ரத்துசெய்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு சொன்ன மாதிரி; அதற்குமேல் தமிழக அரசு அவர்களை விடுதலை செய்யவும் தயாராக இருப்பது மாதிரி!

ஏற்கெனவே 12-ல் நின்ற மிதுன குரு 4-ஆம் இடம், 6-ஆம் இடம், 8-ஆம் இடங்களைப் பார்த்ததால் கடக ராசிக்காரர்களில் பலருக்கு ஆரோக்கியக் குறைவு, ஆபரேஷன், வைத்தியச் செலவு, அதற்காக நகைகளை அடகு வைத்து கடன் வாங்கியது, அலோபதி வைத்தியத்தால் முழுகுணம் ஏற்படாமல் சித்த வைத்தியமா- ஹோமியோபதியா என்று பலவகையிலும் பலரையும் சந்தித்து உடம்பை ரணவேதனையாக்கிக் கொண்டது போன்ற அவஸ்தைகளை சந்தித்தார்கள். ஒருசிலர் வேலையில்லாமல் சோகத்தை தழுவியவர்கள், வேலை வந்த சமயம் அதை முழுமையாக கவனிக்க வழியில்லாமல் உடல்நலம் கெடுத்த நிலை. அதனால் கவலை! வேறு சிலருக்கு பொருளாதாரம், வருமானத்தில் குறையில்லை என்றாலும் விபத்து, பொருளிழப்பு அல்லது உயிரிழப்பு, அபகீர்த்தி, பதவியிறக்கம், வியாபாரத்தில் நஷ்டம், குடும்பத்தில் பிரிவு, நெருங்கிப் பழகிய நண்பர்கள் வட்டாரத்தில் முறிவு- இப்படிப்பட்ட துன்பங்களையும் துயரங்களையும் அடுக்கடுக்காக அடுத்தடுத்து அனுபவித்த நிலை.
குரு 12-ல் விரய ஸ்தானத்தில் இருந்தது மட்டுமல்ல; கெட்ட இடங்களைப் பார்த்த விளைவு (சுபகிரகம் கெட்ட இடங்களைப் பார்த்ததால்) எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியதுபோல கெடு பலனை அதிகப்படுத்தினார். அத்துடன் கடக ராசிக்கு 4-ல் சனியும் ராகுவும் நிற்க, கடக ராசியை சனி பார்த்தார். 10-ஆம் இடத்தை சனியும் ராகுவும் பார்த்தார்கள். இவையெல்லாம் உங்கள் வாழ்க்கை, தொழில், பணி எல்லாவற்றிலும் மனநிம்மதிக்குறைவை ஏற்படுத்தக் காரணமானது.
இப்போது ஜென்ம ராசியில் உச்சமாக வந்துள்ள குரு 5-ஆம் இடம், 7-ஆம் இடம், 9-ஆம் இடம் ஆகிய சுப ஸ்தானங்களைப் பார்ப்பதோடு, குருப்பெயர்ச்சியை அடுத்து எட்டுநாளில் ராகு- கேது பெயர்ச்சியும் வந்துவிடும். கடக ராசிக்கு 3-ல் ராகு மாறி  குருவைப் பார்க்கக்கூடும். 3-ஆம் இடம் ராகுவுக்கு யோகமான இடம்! அதனால் குருவுக்கு ராகுவும் தன் பலத்தைக் கொடுப்பதோடு, 2014- டிசம்பர் வரை (சனிப்பெயர்ச்சி வரை) 4-ஆம் இடத்து உச்ச சனியும் கடக ராசியையும் உச்ச குருவையும் பார்த்து, தன் பலத்தையும் குருவுக்கு சேர்க்கிறார். பொதுவாக உச்சனை உச்சன் பார்ப்பது ஆகாது என்றாலும், பாராளுமன்றத் தேர்தலில் தேசிய அளவில் பலமான கட்சியோடு- உள்ளூர் பலமான கட்சி கூட்டணி வைத்துக்கொள்வதுபோல பலம் சேர்ந்துவிடும்!
ஜென்மத்தில் உச்சம்பெற்ற குரு- யோகமான ஸ்தானங்களையும் பார்த்த குரு- உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகளை உருவாக்குவார்.  புற்றில் உறங்கிக்கிடக்கும் பாம்பு சீறி வெளிவருவதுபோல உங்களுக்குள் புதைந்துகிடக்கும் அறிவாற்றலும் சாமர்த்தியமும் வேகத்தோடு வெளிப்படும்; சோதனைகளைக் கடந்து சாதனைகளைப் படைக்கலாம். அதனால் பேரும் புகழும் சீரும் சிறப்பும் அடையலாம். கௌரவம், கீர்த்தி ஏற்படும்; அந்தஸ்து உயரும். செயல்பாடுகள் புயல்வேகமாகி மேன்மையடையும்.
"பைத்தியக்காரனுக்குப் பின்னால் பத்துப்பேர்- பணக்காரனுக்குப் பின்னாலும் பத்துப் பேர்' என்பதுபோல, பதவியாளர்களின் பின்னாலும் பத்துப்பேர் அமைவார்கள். அந்த அளவுக்கு உங்களுக்கு பதவியோகம் அமையும். "ஆணையிடுங்கள் தலைவா அடிபணிகிறோம்' என்று, எள் என்பதற்குள் எண்ணெயோடு நிற்பதற்கும், உங்கள் கண்ணசைவுக்கும் கையசைவுக்கும் காத்திருக்கும் அன்பர்கள் சேர்க்கை வரிசையில் நிற்கும். அதற்காக நீங்கள் தாதாக்களின் தலைவராகிவிடமாட்டீர்கள். விசுவாசிகளின் விரும்பத்தக்கவராக விளங்குவீர்கள். நல்லதுக்குக் குரல்கொடுக்க நாலு பேர் கூடுவார்கள்.
குரு தான் நிற்கும் ராசியைவிட தான் பார்க்கும் ராசிக்குதான் பெருமை சேர்ப்பார்; சிறப்பைச் செய்வார். அதனால்தான் "குரு பார்க்க கோடி நன்மை' என்பார்கள்.
கடக குரு 5-ஆம் இடம், 7-ஆம் இடம், 9-ஆம் இடங்களை 5, 7, 9-ஆம் பார்வையாகப் பார்க்கிறார்.
5-ஆம் இடம் புத்திர ஸ்தானம்; குரு புத்திரகாரகன் புத்திர ஸ்தானத் தைப் பார்ப்பதால், நீண்டகாலமாக வாரிசு இல்லாமல் வருத்தப்பட்ட வர்களுக்கு வாரிசு உருவாகிவிடும். புத்திரகாரகன் புத்திர ஸ்தானத்தில் இருந்தால்தான் தோஷம். காரகன் பாவ நாசம். ஆனால், காரகன் பாவகத்தைப் பார்ப்பது யோகம்.
5-ஆம் இடம் மனசு, இதயம், திட்டம், எண்ணம், மகிழ்ச்சி, குரு உபதேசம் ஆகியவற்றையும் குறிக்கும். அதனால் உங்கள் நீண்டகால திட்டங்கள் நிறைவேறும்; எண்ணங்கள் ஈடேறும்; மனதில் மகிழ்ச்சியும் திருப்தியும் உண்டாகும். ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இருந்தாலும், 5, 9-க்குடைய சம்பந்தம் பெற்றிருந்தாலும், ராகு- கேது சம்பந்தம் இருந்தாலும் ஆன்மிகம், குரு உபதேசம், ஜோதிடம், மருத்துவம், யோகா, தியானம் போன்ற ஆன்மிக ஈடுபாடும் பயிற்சிகளில் நாட்டமும் ஏற்படும்.
ராகு குருவைப் பார்க்க- குரு கேதுவைப் பார்ப்பதால் சிலர் அருள்வாக்கு சொல்லுவார்கள். சனி சம்பந்தம் இருப்பதால் சிலர் மாந்திரீகம் அல்லது மயான பூஜையிலும் ஈடுபடலாம். என்ன இருந்தாலும் சுத்த பூஜையால் எப்போதும் கெடுதல் ஏற்படாது. மற்ற மயான பூஜைகளும், உயிர்பலி பூஜைகளும் ஒரு நேரம்போல இன்னொரு நேரம் இருக்காது.
கேரளாவில் ஒரு மாந்திரீகவாதியின் மனைவி கர்ப்பவதியானாள். அப்படி மனைவி கர்ப்பமானால் யோகமான வாரிசு பிறக்க, தகப்பன் புண்ணிய ஸ்தல யாத்திரை போய்வருவதுண்டு. அப்படிப் போகும்போது தன் வீட்டுக்கு காவலாக ஒரு யட்சினியை ஏவி நியமித்துவிட்டுப் போனார். இரவில் அகால நேரங்களில் அனுமதி பெறாமல் வீட்டுக்குள் யாரும் போகமுடியாது. மாந்திரீகவாதி ஒரு குறிப்பிட் நாளில் இரவில் வீடுதிரும்பினார். அப்போது காவலுக்கு வைத்த யட்சினி தேவதையை மறந்துவிட்டார். ஆர்வக்கோளாறில் வீட்டுக்குள் நுழையும்போது அந்த யட்சினி தேவதை அவரையே அடித்துவிட்டது.
சனி பொய்மை கிரகம். கடக ராசிக்கு 7, 8-க்குடையவர். குரு 6-க்குடையவர். அவரை சனி பார்ப்பது 6, 8 சம்பந்தம் என்பதால், பெரும் பாலும் விபரீத ஆசைகள் உண்டாகலாம். ஆசை பேராசையாகும். பேராசை அழிவைத் தரும். என்றும் நல்லது நல்லதையே செய்யும். கெட்டது நல்லதைச் செய்தாலும் முடிவில் பசுத்தோல் போர்த்திய புலிமாதிரி கெடுதலையே முடிவில் செய்யும். பொய்மையினால் பொருள் (காசுபணம்) சேர்க்கலாம். இருந்தாலும் அது நிலைக்காது. கூடவே பாவமும் சேர்க்கும்.
வக்கீல் தொழிலுக்கு சனி 2-ல், 10-ல் வலுப்பெற வேண்டும். அப்போது நன்றாகப் பொய்சொல்லி வாதிட்டு, குற்றவாளியை நிரபராதியென்று விடுதலை வாங்கித்தரலாம். அதேசமயம் நிரபராதியின் வயிற்றெரிச்சல் அந்த வக்கிலை பாதிக்கத்தான் செய்யும்.
ஆங்கிலேயேர் ஆட்சிக்காலத்தல் ஒரு தமிழக ஆன்மிகவாதி ஜட்ஜ் பதவி வகித்தார். அவர்முன்பு ஒரு கொலை வழக்கு வந்தது. அப்போதெல்லாம் ஜூரிகள் என்று ஒரு குழு இருக்கும். சாட்சிகள், வக்கீல்கள் வாதங்களை எல்லாம் கேட்டு ஜூரிகள் குற்றவாளி தான் என்று முடிவு செய்யவேண்டும். அதை வைத்து ஜட்ஜ் தீர்ப்பு கூறவேண்டும். இந்நிலையில் சாட்சிகளும் ஜூரிகளும் ஒருவரை குற்றவாளியென்று மரணதண்டனை விதிக்க சிபாரிசு செய்தார்கள்.
ஆனால் அந்த ஜட்ஜுக்கு குற்றம்சாட்டப்பட்டவர் நிரபராதி என்பது நன்றாகத் தெரிந்தது. மனசாட்சிக்கு விரோதமாக தண்டனை கொடுப்பது பாவம் என்று கருதி, நீதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அந்த ஸ்தானத்துக்கு வேறு புது நீதிபதி வர சுமார் ஆறுமாதம் ஆகிவிட்டது. அதற்குள் உண்மைக் குற்றவாளியை போலீஸார் கண்டுபிடித்து கோர்ட்டில் ஒப்படைக்க, நிரபராதி விடுதலையாகிவிட்டார். நிர்வாகம்- மறுபடியும் பழைய நீதிபதியை வேலையில் சேர வற்புறுத்தியது. ஆனால் அவரோ பதவியே வேண்டாம் என்று முழுமையாக ஆன்மிகத்தில் ஈடுபட்டுத் துறவியாகிவிட்டார். அவர்தான் புதுக்கோட்டையில் புவனேஸ் வரி கோவிலில் ஜீவசமாதியாக விளங்கும் ஜட்ஜ் சுவாமிகள். அவருடைய சீடர்தான் சேந்தமங்கலத்தில் ஜீவசமாதியாக விளங்கும் ஸ்வயம்பிரகாச சுவாமிகள். அவருடைய சீடர்தான் சேலம் உடையார் பாளையத்தில் ஸ்கந்தாஸ்ரமத்தில் சமாதியாக விளங்கும் சாந்தானந்த ஸ்வாமி!
இதேபோல ஜோதிடம், நியூமராலஜி, வாஸ்து, ஜெம்ஸ், அருள்வாக்கு என்பதெல்லாம் புனிதமான தெய்வீகக் கலைகள். வினைப்பயனால் வீழ்ந்தவர்களுக்கும் வாழ்ந்துகாட்ட வழிசொல்லும் கலை. அதை ஒருசிலர் தொழிலாக்கி வியாபாரமாகி சம்பாதிக்க ஆசைப்படுகிறார்கள். "பாலஜோதிடம்' கேள்வி- பதில் பகுதியில் "முதல் இல்லாத தொழில் ஜோதிடம்தானே! அது எனக்கு வருமா' என்று பலர் கேட்கிறார்கள். அசல் எது, போலி எதுவென்று மக்களுக்கும் தெரிவதில்லை.
7-ஆம் இடத்தை குரு பார்ப்பதால் திருமணத்தடை விலகும். நல்ல முறையில் திருமணம் கூடும். திருமணமான தம்பதிகளுக்கு வாரிசு கிடைக்கும். சொத்துகள் சேரும். தொழில் ஆரம்பிக்கலாம். புதிய வேலை வாய்ப்பும் உத்தியோக வாய்ப்பும் அமையும். உபதொழிலும் செய்யலாம்.
9-ஆம் இடத்தை குரு பார்ப்பதால் பூர்வீகச் சொத்துகளிலுள்ள பிரச்சினைகளும் சிக்கல்களும் விலகும். பங்கு பாகங்களும் முறையாகப் பிரிக்கப்படும். அதுமட்டுமல்ல; வெகுகாலமாக குலதெய்வக் கோவிலுக்குப் போகமுடியாதவர்கள் அங்குபோய் சாமி கும்பிடலாம். குலதெய்வமே தெரியாதவர்களுக்கும்- குலதெய்வ எல்லையே தெரியாதவர்களுக்கும் அந்த குலதெய்வமே யார் ரூபத்திலாவது வந்து உணர்த்தி, எல்லைக்கு வந்து கும்பிட உத்தரவு கொடுக்கும். அதுதான் குருவருள்- திருவருள்! அதன் படி பங்காளிகளுடன் போய் முறைப்படி வழிபட்டு, குலதெய்வக் குற்றத்திலிருந்து விடுபட்டு குலதெய்வ அருளுக்குப் பாத்திரமாகலாம். பொதுவாக ஆண் தெய்வமாக இருந்தால் திருவண்ணாமலைக்கும், பெண்தெய்வமாக இருந்தால் காஞ்சிபுரம் சென்றும் வேண்டலாம்.
குரு பார்க்கும் இடத்துக்குத்தான் பெருமை சேர்ப்பார் என்பதில்லை. குரு நிற்கும் இடத்துக்கும் நன்மை சேர்ப்பார். ஒருசமயம், தேவலோகத்தில் தேவர்களின் தலைவன் தேவேந்திரனின் மகன் திருமணத்துக்கு, தேவகுருவான பிருகஸ்பதி முகூர்த்த லக்னம் அமைக்க கிரக ஆராய்ச்சி செய்தபோது குரு பார்வையுள்ள சுத்த லக்னம் அமையவில்லை. அப்போது அங்குவந்த அசுரகுரு சுக்ராச்சாரியார், "நீங்கள் இருக்கும் லக்னமே உத்தம லக்னம்தானே' என்று எடுத்துக்காட்டினார். குரு பகவான் பார்க்கும் லக்னம்போல- குரு உச்சமாகவோ ஆட்சியாகவோ இருக்கும் லக்னமும் சிறப்பானதுதான்! எனவே ஜென்ம குரு என்ற பயத்தையும் சந்தேகத்தையும் விட்டுவிடலாம். ஜென்மம் என்பது லக்னம்தான். கௌரவம், புகழ், கீர்த்தி, அந்தஸ்து, ஆற்றல், திறமை, பெருமை ஆகியவற்றைக் குறிக்கும்.
இதுவரை குடத்துக்குள் வைத்த விளக்காக இருந்த நீங்கள், இனிமேல் குன்றின்மேல் ஏற்றி வைத்த தீபமாகப் பிரகாசிக்கப் போகிறீர்கள். ஒரு குறுகிய வட்டத்துக்குள் இருந்த உங்கள் திறமை, ஆற்றல் எல்லாம் இனிமேல் ஊரறியும்; புகழ் பரவும். வி.ஐ.பி. அந்தஸ்துக்கு உங்கள் செல்வாக்கு உயரப்போகிறது. ஆகவே ஜென்மம் பாதகமான இடமல்ல! ஜாதகரீதியாக யோகமான தசாபுக்திகள் நடந்தால் ஜென்ம குருவும் அதோடு சேர்ந்து யோகத்தைச் செய்யும்.
13-6-2014 முதல் 29-6-2014 வரை தனது சாரத்தில் (புனர்பூசம்) குரு சஞ்சாரம்
கடக ராசிக்கு குரு 6, 9-க்குடையவர். 6-க்கு 8-ல் மறைவு; 9-க்கு 5-ல் திரிகோணமென்பதால், பாக்கிய ஸ்தானத்தையும் பார்ப்பதால் உங்களுக்கு 6-ஆம் இடத்துக் கெடுபலன்களெல்லாம் விலகி 9-க்குடைய சுபபலன்களெல்லாம் பிரமாதமாக நடக்கும். தகப்பனாரின் ஆதரவு, தெய்வ உபாசனையில் சித்தி, குரு உபதேசம், ஆன்மிகத் தொடர்பு, தெய்வ ஸ்தல யாத்திரை, பூஜை, வழிபாடு எல்லாம் கைவரப்பெறும். 10-ஆம் இடம் மேஷத்துக்கு குரு பாக்யாதிபதி என்பதால், கட்டட காண்ட்ராக்ட், திரவப் பொருள் சம்பந்தமான தொழில், ரியல் எஸ்டேட் போன்ற தொழில் முயற்சிகளும்; பேன்ஸி ஸ்டோர் தொழில்களும் சிறப்பாக இருக்கும்.

பரிகாரம்: தமிழக- ஆந்திர எல்லையில் பெரியபாளையம் அடுத்து சுருட்டப்பள்ளி சென்று தாம்பத்திய தட்சிணாமூர்த்தியை வழிபடவேண்டும். ராமருக்கு தனிச்சந்நிதி உண்டு. வால்மீகி வழிபட்ட ஸ்தலம்.
29-6-2014 முதல் 28-8-2014 வரை பூச நட்சத்திரத்தில்     குரு சஞ்சாரம்
பூசம் சனியின் நட்சத்திரம். கடக ராசிக்கு 7, 8-க்குடைய சனி 4-ல் உச்சம் பெற்று 10-ஆம் இடத்தையும், கடக ராசியையும், அங்குள்ள குருவையும் பார்க்கிறார். சிலருக்கு தொழில் பிரச்சினை, சிலருக்கு வாழ்க்கைப் பிரச்சினை, சிலருக்கு எதிர்காலம் பற்றிய கவலை ஏற்படலாம். என்றாலும் ராகு 3-ல், கேது 9-ல் நிற்பதால் தைரியம், வைராக்கியத்தால் பிரச்சினைகளை சமாளிக்கலாம்.

பரிகாரம்: சனியின் குருநாதர் பைரவர். அவரை வழிபடுவதால் சனி கிரகம் அனுக்கிரகம் பண்ணுவார். திருவிசைநல்லூர் அருகில் சிவன் கோவிலில் சதுர்கால பைரவர் சந்நிதி உண்டு. நான்கு பைரவர். அவரை வழிபடலாம்.
28-8-2014 முதல் 3-12-2014 வரை முதல் கட்டமாகவும்; 22-12-2014 முதல் 5-7-2015 வரை இரண்டாம் கட்டமாகவும் ஆயில்ய நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்
ஆயில்யம் புதன் சாரம். புதன் கடக ராசிக்கு விரயாதிபதி. 22-12-2014 முதல் 26-3-2015 வரை ஆயில்யத்தில் குரு வக்ரகதியாக இருப்பார். குரு நேர்கதியிலும் சரி; வக்ரகதியிலும் சரி- ஒரேமாதிரியான பலன்களையே செய்வார். பொதுவாக நேர்கதிக்கும் வக்ரகதிக்கும் பலன்கள் வித்தியாசப்படுமென்றாலும், குரு உச்சம் பெற்றதால் மாறுபட்ட பலனுக்கு இடமில்லை. வேறுபாட்டுக்கும் இடமில்லை. சுபவிரயங்கள், நண்பர்கள்- உடன்பிறப்புக்கள் வகையில் உதவி, ஒத்தாசை, புதியவர்களின் நட்பு, புதிய தொழில் ஒப்பந்தங்கள் போன்ற பலன்களை எதிர்பார்க்கலாம்.

பரிகாரம்: திருப்பட்டூர் சென்று தலையெழுத்தை மாற்றியெழுதிய பிரம்மாவை வணங்கவும். பிரம்மாவுக்கு கோவில் இல்லையென்பார்கள். ஆனால் ராஜஸ்தானில் புஷ்கரில்- திருக்கண்டியூரில்- திருக்கரம்பனூரில்- திருச்சி உத்தமர் கோவிலில்- திருப்பிடவூர் எனும் திருப்பட்டூரில் பிரம்மாவுக்கு தனிச்சந்நிதி உண்டு. இது பதஞ்சலி, வியாக்ரபாதர், காசிபர் ஆகியோருக்கு பிரம்மா தரிசனம் தந்து முக்தி அடைந்த பிரம்மாவின் தலம். கோவில் அருகில் வரதராஜப்பெருமாள் அருள்பாலிக்கிறார். ஈஸ்வரன் இத்தலத்து புருஷோத்தமனை (பெருமாளை) பிரார்த்தனை செய்து தன் விதியை மாற்றிக் கொண்டதால் விதியை மாற்றும் பெருமான் எனப்படுவார். இங்கு கிருஷ்ண பகவான் அன்ன வாகனத்தில் வந்து பிரம்மாவுக்கு பழமையான வேதங்களை ஓதினார். பதஞ்சலி முனிவருக்கு தனிச்சந்நிதி உண்டு. சைவமும் வைணவமும் இணைந்த தலம் எனலாம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து பஸ் வசதி உண்டு. திருச்சி- மண்ணச்சநல்லூர்- அகரம் கைகாட்டி வழி திருப்பட்டூர் போகலாம். மண்ணச்சநல்லூரில் இருந்து 16 கிலோமீட்டர். அகரம் கைகாட்டியிலிருந்து 4 கிலோமீட்டர். சிவகானூரில் இருந்து 4 கிலோமீட்டர்.
குருவின் வக்ரகதி பலன்
17-12-2014 முதல் 22-12-2014 வரை கேதுவின் மக நட்சத்திரத்தில் குரு வக்ரம். அடுத்து 22-12-2014 முதல் 26-3-2015 வரை ஆயில்யத்தில் குரு வக்ரம். (புதன் சாரம்). கேது குரு வீட்டில் 9-ல் இருப்பதால் அனுகூலமும் வெற்றியும் லாபமும் பெருகும். புதன் 3, 12-க்குடையவர். இதிலும் சுபவிரயம். குலதெய்வக்கோவில் போய்வரலாம். சிலர் அங்கு அன்னதானம் செய்யலாம்.

பரிகாரம்: சென்னை அருகில் ஸ்ரீபெரும்புதூர் சென்று (ராமானுஜர் பிறந்த தலம்) 36 விளக்கேற்றி வழிபடவும். ஆதிசேஷனின் மறுஅவதாரம் ராமானுஜர். ஸ்ரீரங்கத்தில் இவர் ஸ்தூல சரீரம் உள்ளது. (உடையவர் சந்நிதி). ராமானுஜரின் நட்சத்திரமான திருவாதிரையன்று கல்கண்டு நைவேத்தியம் வைத்து அர்ச்சனை செய்வது சிறப்பு.
புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த குருப்பெயர்ச்சி அற்புத யோகப் பலனைத் தரும். ஆனந்தம் உண்டாகும்.

பரிகாரம்: கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில், முள்ளங்காட்டில் வெள்ளியங்கிரி சுவாமி சமாதி சென்று வழிபடவும். 21-2-1986-ல் புனர்பூசத்தன்று சமாதியானவர். மயிலாடுதுறை- கூறைநாடு  காவிரி தென்கரையிலுள்ள மணிவாசகசுவாமி ஜீவசமாதியையும் வழிபடவும்.
பூச நட்சத்திரக்காரர்களுக்கு:
எதிர்ப்புகளும் இடையூறுகளும் இருந்தாலும் அவற்றைக் கடந்து முன்னேறலாம். கிருஷ்ண பகவான் அசுரனை வதம் செய்ய பாமா உதவியதுபோல, உங்கள் முயற்சிகளுக்கு உங்கள் வாழ்க்கைத்துணைவி உதவியாக- பக்கபலமாக இருப்பார். திருமணமாகாதவர்களுக்கு தாயார் அருளாசி கிடைக்கும்.

பரிகாரம்: நெல்லை- பாளையங்கோட்டை வழியாக வல்லநாடு சென்று, சிதம்பரசுவாமி ஜீவசமாதியை வழிபடவும். 1961, வைகாசி பூசத்தில் சமாதியானவர். சித்துக்களால் பல அற்புதங்கள் செய்தவர். வள்ளலாரின் கொள்கைப்படி அன்னதானம் செய்தார். யானையை வழிபட்டவர். மன்னார்குடி பைபாஸ் ரோட்டில் சூட்டுக்கோல் ராமலிங்கசாமி ஜீவசமாதியையும் வழிபடலாம்.

ஆயில்ய நட்சத்திரக்காரர்களுக்கு:
புதன் 3, 12-க்குடையவர். சிலருக்கு சகோதர உதவியும் சகாயமும் கிடைக்கும். சிலருக்கு சகோதர வகையில் சுபவிரயமும் செலவும் உண்டாகும். அவரவர் ஜாதகத்தைப் பொறுத்தும் தசாபுக்தியை அனுசரித்தும் மேற்கண்ட பலன்களை எடுத்துக்கொள்ளலாம். மொத்தத்தில் குருப்பெயர்ச்சி இனிய பெயர்ச்சியாக இருக்குமென்பதில் சந்தேகமில்லை.

பரிகாரம்: வாலாஜாபேட்டை- சோளிங்கர் பாதையில் கொடைக்கல் கூட்டு ரோட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலுள்ள கொடைக்கல் கிராமத்தில், சுப்பிரமணியசாமி ஜீவசமாதி- நூலகம் இருக்கிறது. சித்திரை மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் குரு பூஜை. அங்குசென்று வழிபடலாம். நாகர்கோவில் ஆதிசேஷன் வழிபட்ட ஸ்தலம். அவர் நட்சத்திரம் ஆயில்யம். அங்கும் போய் வழிபடலாம்.

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய) 13.06.2014 வெள்ளிக்கிழமை முதல்
சிம்ம ராசி அன்பர்களே!
இதுவரை நல்ல இடமான 11-ஆம் இடத்திலிருந்த குரு, இப்போது விரய ஸ்தானமான 12-ஆம் இடத்துக்கு மாறியிருக்கிறார். 11-ஆம் இடத்தைவிட 12-ஆம் இடம் சிறப்பான இடமில்லை என்று சொன்னாலும், 12-ல் குரு உச்சமென்பதால் பயப்படத் தேவையில்லை. சந்தேகப்படத் தேவையில்லை.

11-ஆம் இடத்தில் சிறப்பான இடத்திலிருந்த குரு எல்லாருக்கும் யோகத்தையும் லாபத்தையும் நன்மைகளையும் செய்தாரா என்றால், அது ஒரு கேள்விக்குறிதான். எனக்குத் தெரிந்த பல சிம்ம ராசிக்காரர்கள், லாப ஸ்தானத்துக்கு வந்த குரு லாபத்தையும் யோகத்தையும் செய்யப்போகிறார் என்று கனவு கண்டு, கடைசியில் ஏமாற்றத்தையே சந்தித்தார்கள். ஒரு அன்பர் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு பிள்ளைகளை (நான்கு ஆண்கள்) நன்றாகப் படிக்க வைத்தார். மூத்த மகன் இராணுவத்தில் சேர்ந்து கைநிறைய சம்பாதித்து பெற்றோருக்கு அனுப்பிவந்தார். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக ஒரு மகன் மின்சாரம் தாக்கி பலியாகிவிட்டான். அந்த விரக்தியில் தினசரி குடிக்கு அடிமையாகி, எந்த வேலைக்கும் தொழிலுக்கும் போகாமல், வீட்டில் மனைவி, மக்களுடன் விவகாரம் பண்ணிக்கொண்டே பொழுதைக் கழித்தார். இவ்வளவுக்கும் அவரும் ஜோதிடர். சின்மயானந்தாவின் பக்தர்! சிம்ம ராசிக்கு 5-க்குடையவர் 5-ஆம் இடத்தை பார்த்தும் பலனில்லை. அதற்குக் காரணம் 5-ஆம் இடத்தை சனியும் ராகுவும் பார்த்தனர். குடும்பத்தில் சமராகு தோஷம்!

பொதுவாக ஜெனன ஜாதகத்தில் யோகமான தசாபுக்திகள் நடந்தவர்களுக்கு மட்டுமே மிதுன குரு- 11-ஆம் இடத்து குரு நல்லது செய்தார். மற்றவர்களையெல்லாம் ஏமாற்றிவிட்டார். கல்யாண பந்தியில் கடைசி பந்தியில் உட்கார்ந்தவர்கள் அப்பளம் இல்லை- வடை இல்லை- பாயசம் இல்லை- விஜிடபிள் பிரியாணி இல்லை என்று இருப்பதை மட்டும் சாப்பிட்டு எழுந்த கதைதான்!
கடந்தகாலத்தில் "தான் உண்டு- தன் வேலையுண்டு' என்று இருந்த ஒருசிலரை, அரசியலிலும் பொதுப்பணியிலும் சங்க நடவடிக்கைகளிலும் கூட்டுறவு சொசைட்டிகளிலும், கோவில் திருப்பணி கமிட்டி போன்ற நிர்வாகத்திலும் வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டு, பொறுப்பான பதவிகளையும் தலையில்சுமத்தி பெருமை தேடித்தந்தது. அப்படி பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட பெருமைக்காக எந்தவிதமான சுயநல ஆதாயமும் கருதாமல், தொண்டு மனப்பான்மையோடு ஊருக்கும் மக்களுக்கும் நல்லதே செய்தார்கள். ஆனால் பொதுப்பணத்தில் வயிறு வளர்த்த சில ஊழல் பேர்வழிகளுக்கும் பழம் பெருச்சாளிகளுக்கும் இடமில்லாமல் போனதால் பொறாமைப்பட்டு, நேர்மையான முறையில் நேருக்கு நேர் போட்டியிட்டு ஜெயிக்கமுடியாமல்- ஜாதி சமயவெறி யாளர்களைத் தூண்டிவிட்டு எதிர்ப்புகோஷம் போட்டு இடையூறு செய்ய ஆரம்பித்தார்கள். அதனால் நன்றிகெட்ட ஜனங்களுக்கு  நாம் ஏன் கஷ்டப்படவேண்டும்; ஏன் நல்லது செய்ய வேண்டுமென்று விரக்தி ஏற்பட்டு பதவிகளைத் தூக்கியெறிந்த நிலையும் ஏற்பட்டது.
ஏற்கெனவே 11-ஆம் இடத்து குரு உங்களுக்கு நன்மைகளைச் செய்யத் தவறிவிட்டாலும், இப்போது 12-ஆம் இடத்துக்கு வந்தவர் அங்கு உச்சம் பெற்றதால் 11-ஆம் இடத்து யோகத்தைச் செய்வாரென்று எதிர்பார்க்கலாம்.  அது எப்படி சாத்தியமென்று சந்தேகப்படக்கூடாது. கடந்த பா.ஜ.க. ஆட்சியில் திட்டமிட்டு ஆரம்பித்த நான்கு வழிப்பாதை- தங்கக்கடற்கரைச் சாலை திட்டங்களையெல்லாம், அடுத்துவந்த கட்சியின் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றவில்லையா? அதுமாதிரி 11-ல் செய்யத் தவறிய குரு 12-ல் செய்யலாமல்லவா? சிம்ம ராசிக்கு 5, 8-க்குடையவர் 11-ல் நின்று, 6-க்குடைய உச்ச சனியைப் பார்த்ததாலும், சனி, ராகு சம்பந்தம் பெற்று கேதுவால் பார்க்கப்பட்டதோடு கேதுவும் குருவைப் பார்த்ததாலும், குருவின் நற்பலன்களையெல்லாம் கட்டிவைத்த மாதிரி ஆகிவிட்டது. அத்துடன் சனியும் ராகுவும் 5-ஆம் இடத்தைப் பார்த்து உங்கள் எண்ணங்களுக்கும் திட்டங்களுக்கும் செஸ் ஆட்டத்தில் செக் வைத்த மாதிரி தடை ஏற்படுத்திவிட்டது.
இப்போதும் சனி 5-ஆம் இடத்தைப் பார்த்தாலும், 5-க்குடைய குரு 12-ல் உச்சம்பெற்று சனியின் பார்வையைப் பெறுவதால் திருப்பம் உண்டாகும். மேலும் கன்னி ராகு குருவைப் பார்க்க, கடக குரு மீன கேதுவைப் பார்க்கிறார். அதுவும் ஒரு திருப்பம்தான்! 11-ஆம் இடமான லாப ஸ்தானத்துக்கு (மிதுனத்துக்கு) 2-ல் அதற்கு 7, 10-க்குடையவர் உச்சம்பெறுவது நல்லது.
சிம்ம ராசிக்கு 4-ஆம் இடத்தையும், 6-ஆம் இடத்தையும், 8-ஆம் இடத்தையும் கடக குரு பார்க்கிறார். 12-ல் இருக்கும் குரு இந்த இடங்களைப் பொறுத்த செலவுகளைத் தரலாம்.
4-ஆம் இடம் பூமி, வீடு, வாகனம், சுகம், கல்வி, தாய் ஆகியவற்றைக் குறிக்கும். அந்த 4-ஆம் இடத்தை குரு 9-ல் உச்சம் பெற்றுப் பார்க்கிறார். 4-ஆம் இடத்துக்கு (விருச்சிகத்துக்கு) குரு 2, 5-க்குடையவர். எனவே பூமி, வீடு, வாகன வகையில் முதலீடும் சுபச்செலவுகளும் செய்யலாம். விவசாயம் செய்யலாம். பால்பண்ணை, கோழிப்பண்ணை, மீன் பண்ணை, தென்னந்தோப்பு, வாழைத்தோப்பு போன்ற வகையில் முதலீடு செய்யலாம். சிலர் டூவீலர் வாங்கலாம். அல்லது கார் வாங்கலாம். விவசாயத்துக்குரிய டிராக்டர் போன்ற வாகனங்களும் வாங்கலாம். சிலர் வீடு கட்டலாம். இதுபோன்ற வகைக்காக கடன் வாங்கலாம். இது 6-ஆம் இடத்தை குரு பார்த்த பலன்.
தேக ஆரோக்கியத்தில் தெளிவும் முன்னேற்றமும் தெரியும். முழுமையான சுகம் உண்டாகும். தாயாருக்கு கண் ஆபரேஷன் செய்து பார்வை குணம் ஏற்படும். சிலருக்கு முழங்கால் வலி, மூட்டுவலி இருந்தால் அலோபதி, ஹோமியோபதி சிகிச்சையைவிட ஆயுர்வேத வைத்தியம், கேரள சிகிச்சை உத்தமம்!
படிப்பில் "அரியர்ஸ்' வைத்திருப்பவர்கள் இக்காலம் பாக்கிப் பாடங்களையெல்லாம் எழுதி பாஸ் செய்து, மேற்படிப்பையும் தொடங்கலாம். 4-ஆம் இடத்துக்கு இப்போது ஏழரைச் சனி நடப்பதால், சிலர் பெற்றோரை விட்டுப்பிரிந்து வெளியில் ஹாஸ்டலில் சேர்ந்து படிக்கலாம். சிலர் வெளிநாட்டுக்குப் போய் படிக்கலாம். படிப்புக்காகவும் சிலர் வங்கிக்கடன் வாங்கலாம்.
எந்த ஒரு இடத்துப் பலனை நிர்ணயிக்கும்போதும் அந்தந்த இடத்துக்கு 7-ஆம் இடத்தையும், அதன் 5, 9 என்ற திரிகோணத்தையும் பார்க்க வேண்டும். அதேமாதிரி அந்த வீட்டுக்கு அது எத்தனையாவது இடமோ அதன் அத்தனையாவது இடத்தையும் பார்க்கவேண்டும். உதாரணமாக 2-ஆம் இடத்துக்கு 2-ஆம் இடம்- 10-ஆம் இடத்துக்கு 10-ஆம் இடம்- 5-ஆம் இடத்துக்கு 5-ஆம் இடமென்று பார்க்கவேண்டும். "பலதீபிகையில் இது பாவாத்பாவம் என்று சொல்லப்படும்.
அந்த அடிப்படையில் 4-ஆம் இடம் விருச்சிகம். அதற்கு 4-ஆம் இடம் கும்பம். அதற்குடைய சனி 4-க்கு 12-ல் உச்சம். அவர் 4-க்கு 9-ல் உள்ள குருவைப் பார்ப்பதால், 4-ஆம் இடத்துப் பலன்களில் சிறுசிறு இடையூறுகளும்  விரயங்களும் செலவுகளும் உண்டானாலும், முடிவில் அனுகூலமாகவும் பிளஸ் பாயிண்டாகவும் மாறும்.
அடுத்து 4-ஆம் இடமென்பது  10-ஆம் இடத்துக்கு (ரிஷபத்துக்கு) 7-ஆம் இடம். அதற்கு குரு பார்வை இருப்பதால் தொழில் சம்பந்தமான சுபவிரயத்துக்கும் இடமுண்டு. 4 என்பது தாயார் ஸ்தானம்! ஒரு மாமிக்கு கணவருமில்லை; மகனுமில்லை. மகள் வீட்டில் மருமகனோடு இருக்க சங்கடப்பட்டு தனியாகவே வாழ்ந்தார். அங்கு சும்மா இருக்க மனமில்லாமல் ஊறுகாய், அப்பளம், வடகம், சீடை, முறுக்கு போன்ற உணவுப் பண்டம் தயாரித்து கடைகளுக்கு விற்பனை செய்துவந்தார். அவருக்கு உதவியாக, பிள்ளைகளிருந்தும் ஒதுக்கப்பட்ட சில மூதாட்டிகளும் வந்துசேர்ந்தார்கள். வங்கியில் சிறுதொழில் முதலீட்டுக் கடனும் வாங்கி சிறுதொழில் பெரிதாக வளர்ந்துவிட்டது. திரைப்படங்களில் வருவதுபோல லாபம் பெருகி குடியிருந்த வீட்டையும் கிரயம்முடித்து மகள் வயிற்றுப் பேரனுக்கு உயில் எழுதிவிட்டார்.
6-ஆம் இடத்தை 8-க்குடைய குரு 12-ல் உச்சம்பெற்றுப் பார்ப்பது ஒரு ஆய்வுக்குரிய பலனாகும். 6-ஆம் இடத்துப் பலன் கடன், எதிரி, போட்டி, பொறாமை, வைத்தியச் செலவு என்பது உங்களுக்குத் தெரியும்.
வாகனம், வீடு, நிலம் போன்ற ஸ்தாவர சங்கம சொத்துகளுக்காக கடன் வாங்குவதும் வட்டி கட்டுவதும் இயற்கையான செலவு. இயற்கையான கடன்! இயற்கையான சுமை! அது இயற்கையாக வரும் 6-ஆம் பாவப் பலன்.
அடுத்தவருக்காக ஜாமீன் பொறுப்பேற்று, அவர் பட்ட கடனையும் வட்டியையும் நீங்கள் அடைக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் அது தானாகத் தேடிக்கொள்ளும் 6-ஆம் பாவப்பலன்.
இதேமாதிரி இயற்கையில் நோய் வருவதென்பது ஒருவிதம். தானாகத் தேடிக்கொள்வது ஒருவிதம்! குடித்துக்குடித்து குடலைப் புண்ணாக்கிக் கொண்டு, அறுவை சிகிச்சைக்குப் போவது தானாகத் தேடிக்கொள்வது. சூது- மாது- மது என்று மனம்போன வழியில் போய், பின்விளைவு களுக்கும் பக்க விளைவுக்கும் ஆளாகி அவதிப்படுவது தானாகத் தேடிக்கொள்வது.
குரு 8-ஆம் இடத்தையும் பார்க்கிறார். (9-ஆம் பார்வை). விபத்து, மரணம், கேவலம், அவமானம் ஆகியவற்றைக் குறிக்குமிடம்.
போக்குவரத்து நிறைந்த வீதியில் இரண்டு பேர் ஆயுதத்தை வைத்துக்கொண்டு சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்தும் பார்க்காதமாதிரி பலரும் ஒதுங்கிப் போய்விட்டார்கள். ஒரு நபர் மட்டும் அனுதாபப்பட்டு அவர்களை சமாதானப்படுத்தி விலக்கிவிடப் போனார். அவர்கள் சண்டையில் சமாதானம் செய்யப்போனவருக்கு கத்தி வெட்டுக்காயம் ஏற்பட்டு, ஆஸ்பத்திரியில் சேர்த்து தையல் போடும்படி ஆகிவிட்டது. இது அவர் தானாகத் தேடிக்கொண்ட பிரச்சினை.
ஒரு டீக்கடைக்காரர். கேஸ் சிலிண்டர் மாற்றும்போது பக்கத்தில் கரிஅடுப்பு இருந்ததை கவனிக்கத் தவறிவிட்டார். சிலிண்டரில் கேஸ் லீக்கேஜ் இருந்திருக்கிறது. குனிந்து மாட்டும் போது நெருப்பு பற்றி உடம்பெல்லாம் தீக்காயம். இது தானாகத் தேடிக்கொண்டதென்றும் சொல்லமுடியாது- இயற்கையாக அமைந்ததென்றும் சொல்லமுடியாது. கவனக்குறைவா? விதி வசமா? பல லட்சம் செலவு செய்தும் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
இறந்தவருக்கு ஒரு மகன்- 27 வயது. அவர் மனைவி இரண்டு மூன்று லட்ச ரூபாய் சேமிப்பு வைத்திருந்தார். ஜாதகம் பார்த்தபோது, "உடனே திருமணத்தை முடித்துவிடுங்கள்; சுபச்செலவு செய்யுங்கள்' என்றேன். அந்த அம்மாள் சொந்தவீடு வாங்கிய பிறகுதான் பையன் திருமணமென்று சொல்லி வந்தார். முடிவில் வீடும் வாங்கவில்லை. பையன் திருமணமும் ஆகவில்லை. ஆஸ்பத்திரி செலவில் கையிருப்பு முழுவதும் காலியானதுதான் பலன்.
இதுதான் "ஒன்று நினைக்கின் அது ஒழிந்து மற்றொன்றாகும்' என்பது!
13-6-2014 முதல் 29-6-2014 வரை தனது சாரத்தில் (புனர்பூசம்) குரு சஞ்சாரம்
குரு தனது சொந்த நட்சத்திரமான புனர்பூசத்தில் 4-ஆம் பாதத்தில் இருக்கிறார். ராசி- அம்சக் கட்டத்தில் வர்க்கோத்தமம். அத்துடன் இரண்டிலும் உச்சம்! எனவே இக்காலம் எல்லா வகையிலும் உங்களுக்கு நற்பலனாகவும் யோகப் பலனாகவும் நடக்கும். வெற்றிமேல் வெற்றி, முயற்சிகளில் நற்பலன், சுபச்செலவு, குடும்பத்தில் மங்களச் செலவு, மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம், ஆர்வம், அக்கறை ஆகிய பலன் உண்டாகும்.

பரிகாரம்: திருவாரூர்- மடப்புரம் பகுதியில் தட்சிணாமூர்த்தி சுவாமி ஜீவசமாதி உள்ளது. அவருடைய பக்தர் ஒருவர் வெளியில் கோவில் கோபுர வேலை செய்தபோது, கைதவறிக் கீழே விழுந்தார். அப்போது திருவாரூரில் இருந்தபடியே ஞானதிருஷ்டியில் உணர்ந்த சுவாமிகள், அவரை கையேந்தி தாங்கி மெதுவாகக் கீழே வைத்தமாதிரி பாவனை செய்தார். வெளியூரில் கோபுரத்திலிருந்து விழுந்தவரை யாரோ கையேந்தி தாங்கிப் பிடித்து தரையில் வைத்தமாதிரி உணர்ந்தார். ஆவணி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று குரு பூஜை. அங்குச் சென்று வழிபடலாம்.

29-6-2014 முதல் 28-8-2014 வரை பூச நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்
பூசம் சனி நட்சத்திரம். சிம்ம லக்னத்துக்கு 6, 7-க்குடையவர் சனி. அவர் 3-ல் உச்சம் பெற்று 12-ல் குருவைப் பார்க்கிறார். இங்கு 6-க்குடையவர் (சனி- 8-க்குடையவரை (குருவை) பார்ப்பதால் எதிர்பாராத காரியத்தடை, குறுக்கீடு, கௌரவப் போராட்டம், வெட்டிச் செலவு, வில்லங்கம், விவகாரம், உறவில் விரிசல் ஆகிய பலனைச் சந்திக்கலாம். அடுத்து 7-க்குடையவர் 5-க்குடையவரைப் பார்க்கும் பலனாக திருமணம், புத்திர பாக்கியம், பிள்ளைகள் வகையில் நல்ல செலவு போன்ற பலன்களும் நடக்கும். சுற்றியுள்ளவர்களால் சில சங்கடங்களும் உண்டாகலாம்.

பரிகாரம்: ஸ்ரீவில்லிபுத்தூரில்- மடவார் விளாகம் என்ற பகுதியில் வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு சனி பகவான் தனிச் சந்நிதி யில் தெற்கு பார்த்தவராக உள்ளார். அங்குசென்று வழிபடுவது சிறப்பு.
28-8-2014 முதல் 3-12-2014 வரை முதல் கட்டமாகவும்; 22-12-2014 முதல் 5-7-2015  வரை இரண்டாம் கட்டமாகவும் ஆயில்ய நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்
ஆயில்யம் புதனின் நட்சத்திரம். புதன் சிம்ம ராசிக்கு 2, 11-க்குடையவர். எனவே குடும்பத்தில் அமைதியையும் ஆனந்தத்தையும் குரு தருவார். முயற்சிகளில் வெற்றி, வழக்குகளில் வெற்றி, தொழில்துறையில் லாபம், அனுகூலம் போன்ற பலன்கள் நடக்கும். குருவின் நேர்கதியிலும் சரி; வக்ரகதியிலும் சரி- கேடு கெடுதிக்கு இடமில்லை. ஆரோக்கியம் தெளிவாக இருக்கும். பொருளாதாரமும் தாராளமாக அமையும்.

பரிகாரம்: சீர்காழியில் இருந்து 11 கிலோமீட்டரிலும், திருவெண்காட்டிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலும் திருபார்த்தன்பள்ளி என்ற ஊர் உள்ளது. மூலவர் தாமரைகேசவன். வருணன் தேவகுருவான பிரகஸ்பதியின் யானையைத் திருடியதால், பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட, இத்தலம் வந்து பிரார்த்தித்து தோஷம் நீங்கப்பெற்றான். பெருமாள் அர்ச்சுனனுடன் காட்சியளித்ததால் இந்த ஊர் பார்த்தன்பள்ளி என்ற பெயர் பெற்றது. அங்கு சென்று வழிபடலாம்.
குருவின் வக்ரகதி பலன்
17-12-2014 முதல் 22-12-2014 வரை ஆறு நாட்கள்  மக நட்சத்திரத்தில் குரு வக்ரம். அடுத்து 22-12-2014 முதல் 26-3-2015 வரை ஆயில்யத்தில் குரு வக்ர கதி. கேது சாரத்தில் ஆறு நாட்கள் என்பதால், பெரும் விளைவுக்கு இடமில்லை. அடுத்து புதன் சாரத்தில் குரு வக்ரம்- உக்ர பலன். உங்கள் கனவுகளும் திட்டங்களும் படிப்படியாக நாளுக்கு நாள் முன்னேற்றமும் வெற்றியும் அடையும். வைத்தியச் செலவு விலகும். நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினரின் ஆதரவு பெருகும். சிலர் கடல் கடந்து திடீர்ப்பயணம் போகலாம்.

பரிகாரம்: சென்னையில், நான்கு குன்றுகள் அரணாக விளங்க ஈஸ்வரன் குடிகொண்டுள்ள தலம் திரிசூலம். குரு சாபம், பெண் சாபம், பூர்வ ஜென்ம தோஷம், புத்திர தோஷம், குரு நீசம், மறைவு, வக்ரம் போன்ற தோஷம் நீக்கும் தலம். வேதங்கள் நான்கும் மலைகளாக உள்ளதால் சதுர்வேதிமங்கலம் என்றும் கூறுவர். இங்குள்ள கணபதி நாக யக்ஞோபவீத கணபதி- அதாவது நாகத்தை பூணூலாக அணிந்தவர். சுவாமி பிரம்மபுரீஸ்வரர். அங்குசென்று வழிபடலாம்.
மக நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த குருப்பெயர்ச்சி அடுத்தடுத்து முன்னேற்றத்தையும் யோகத்தையும் கொடுத்தாலும், ராஜ காரியங்களில் தோல்வி, ஏமாற்றமும்; வழக்கு விவகாரங்களில் எதிர்மறைப் பலனும் உண்டாகும்.

பரிகாரம்: வடலூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் முருகானந்த அடிகள் ஜீவசமாதி உள்ளது. பிரம்மச்சாரி. 108 சன்மார்க்க சங்கங்களை நிறுவி வள்ளலாரின் கொள்கைகளைப் பின்பற்றியவர். 4-3-1964-ல் மாசி மகத்தில் சித்தியானவர். அங்குசென்று வழிபடலாம்.
பூர நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த குருப்பெயர்ச்சி லாபம், வெற்றியைத் தந்தாலும், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேக நலனுக்கு ஆகாத பழக்கவழக்கங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும்.

பரிகாரம்: கஞ்சனூர் மணியாக்குளத்தின் தென்புறம் வைத்தியலிங்க சுவாமி சமாதிக்கோவில் உள்ளது. இவர் பிறந்ததும் பூரம்- சமாதியானதும் பூரம். கைவல்ய நவநீதம், ஞானவாசிட்டம், திருவருட்பா, தேவாரம், திருவாசகம் போன்ற நூல்களை மக்களுக்கு போதித்தார். சமாதிக்கோவில் விமானத்துடன் விளங்கும். அங்குசென்று வழிபடலாம். ஆடுதுறையிலிருந்து செல்லலாம்.
உத்திர நட்சத்திரக்காரர்களுக்கு:
உத்திரம் சூரியன் நட்சத்திரம். உங்கள் ராசிநாதன். இதற்கு 12-ல் குரு இருந்தாலும் உச்சம்! ஆயுள், ஆரோக்கியம், தெளிவு. பொருளா தாரத்திலும் குறையில்லை. குடும்பத்தில் சுபமங்களச் செலவுகள் இடம்பெறும். தொழில் மேன்மையடையும். முயற்சிகள் பலிதமாகும். குருப்பெயர்ச்சி வரவேற்கத்தக்க பெயர்ச்சியே!

பரிகாரம்: கும்பகோணத்தில் மௌனசாமி மடம் இருக்கிறது. கும்பேசுவரர் கோவிலுக்கு சற்று தொலைவில், மேற்கே கம்பட்ட விஸ்வநாதர் கோவில் அருகே- வடக்கு வீதியும் கிழக்கு வீதியும் சந்திக்கும் சந்திப்பு அருகில் மௌன சுவாமி மடத்தில் மௌனசுவாமி சமாதி! விவேகானந்தர், ரிஷிகேசம் சிவானந்தர், அருண்டேல், அன்னிபெசண்ட் அம்மையார் இவரை தரிசித்து அளவளாவியுள்ளார்கள். சித்திரை மாதம் உத்திர நட்சத்திரத்தில் பரிபூரணமானவர். அங்குசென்று வழிபடலாம்.

கன்னி: (உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
13.06.2014 வெள்ளிக்கிழமை முதல்
கன்னி ராசி அன்பர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 10-ல் மிதுன ராசியிலிருந்த குரு இப்போது 11-ஆம் இடம் லாபஸ்தானத்துக்கு மாறியுள்ளார். பொதுவாக குரு நற்பலன்தரும் யோகமான இடங்கள் 2, 5, 7, 9, 11 ஆகிய ஐந்து இடங்கள் தான். அப்படி உங்கள் ராசிக்கு யோகமான இடத்துக்கு வருகை புரிந்துள்ள குருவை வாழ்த்தி வரவேற்கத்தான் வேண்டும்.

கடந்த காலத்தில் 10-ல் இருந்த குரு கேந்திர தோஷத்துக்கும் ஆளானார். கேந்திராதித்திய தோஷத்துக்கும் ஆளானார். கன்னி ராசிக்கு குரு 4, 7-க்குடையவர். அதனால் கேந்திராதிபத்திய தோஷம். அவர் 10-ல் மிதுனத்தில் இருந்தார். அதனால் கேந்திர தோஷம். அத்துடன் குரு கன்னி ராசிக்கு- உபய ராசிக்கு 7-க்கு உடையவர். அதனால் தெய்வபாதகாதிபதி தோஷமும் அடைந்தவர். அதனால் அவர் நின்ற இடம், பார்த்த இடம் எல்லாமே சிறப்பாக இல்லை என்பது பலருடைய அனுபவம்.
யாரோ சிலருக்கு வேண்டுமானால் சில நன்மைகள் நடந்திருக்கலாம். மிதுன குரு 5-ஆம் பார்வையாக 2-ஆம் இடத்தையும், 7-ஆம் பார்வையாக 4-ஆம் இடத்தையும், 9-ஆம் பார்வையாக 6-ஆம் இடத்தையும் பார்த்த விளைவு, குடும்பத்தில் பிள்ளைகளுக்கு அல்லது ரத்தபந்த சொந்தங் களுக்கு சுபமங்கள காரியங்களும் நல்ல காரியங்களும் நடந்திருக்கலாம். என்றாலும் ஏழரைச் சனியின் காரணமாக ரத்தபந்த சொந்தங்களில் ஒருசிலரைச் சேர்த்தும், ஒருசிலரை விலக்கியும் விசேஷங்களை நடத்திய நிலை. இன்னும் சிலரின் அனுபவம்- ஆலோசனை கூறிய குருவுக்கு சமமானவர்களையும், வழிபடத்தக்க பெரியோர்களையும் மூத்தவர் களையும்கூட புறக்கணித்து அவர்களைப் புண்பட வைத்ததுமட்டு மல்லாமல், அவர்களின் கோபதாப சாபங்களுக்கும் ஆளாகவைத்தது. இது சிலரின் அனுபவம்.
சிலர் வீடு, தொழில் ஸ்தாபனம் போன்ற திட்டங்களை ஆரம்பித்து லட்சக்கணக்கில் கடன்வாங்கவும் வைத்தது. இப்படி பெரிய லட்சாதிபதி, கோடீசுவரத் திட்டம் போட்ட காரணத்தால் பணமே பிரதானம் என்று உறவைக் கண் மறைத்தது எனலாம்: ஒதுக்கிவைத்தது எனலாம்.
மிதுன குரு- கன்னி ராசிக்கு 6-ஆம் இடத்தைப் பார்த்தவிளைவு கடனையும் தந்தது- பகையையும் உருவாக்கியது. சிலருக்கு மேஜர் வைத்தியச் செலவையும் தந்தது. வைத்தியச் செலவென்றால் தனக்கும் வந்திருக்கலாம்; அல்லது மனைவிக்கும் வந்திருக்கலாம்; அல்லது குடும்ப அங்கத்தினர்களுக்கும் வந்திருக்கலாம். குரு 2-ஆம் இடத்தையும், 4-ஆம் இடத்தையும், 6-ஆம் இடத்தையும் பார்த்தவிளைவு, மூன்றையும் இணைத்து ஏதோ ஒருவகையில் பாதிப்பான செலவுகளைத் தந்தது. போட்டி, பொறாமைகளும் உருவானது. உத்தியோகத்தில் எவ்வளவு உண்மையாகப் பாடுபட்டாலும், மேலிடத்திலும் நிர்வாகத்திலும் நல்லபெயர் எடுக்கமுடியவில்லை. பாராட்டைப் பெறமுடியவில்லை. உழைத்தது நீங்கள்; பெயர் வாங்கியது வேறு ஒருவர். காவல் துறையில் கீழதிகாரிகள் கஷ்டப்பட்டு குற்றவாளிகளைக் கண்டுபிடித்தாலும், மேலதிகாரிகள் அந்தப் புகழுக்கும் பேருக்கும் ஆளாகி பத்திரிகை களுக்குப் பேட்டி கொடுப்பார்கள். நிர்வாகத்தில் மெடல் வாங்கி விடுவார்கள். இதெல்லாம் கடந்தகால அனுபவம்!
இப்போது 11-ஆம் இடத்துக்கு வந்துள்ள குரு நீங்கள் உழைத்த உழைப்புக்கும், விசுவாசத்துக்கும் வேறுவகையில் பரிசும் கிடைக்கும்; பாராட்டும் கிடைக்கும். உங்கள் ராசிக்கு 7-ஆம் இடம் மீனத்தை- தன் ராசியை குரு பார்க்கிறார்.
7- என்பது திருமணத்தையும் குறிக்கும். கணவன்- மனைவி உறவையும் குறிக்கும். 10-க்கும் 10-ஆம் இடம் என்பதால் (பாவாத்பாவம்) தொழில் ஸ்தானத்தையும் குறிக்கும்.
எனவே திருமணமாகாதவர்களுக்குத் திருமணம் கூடும். பிரிந்திருந்த கணவன்- மனைவி இணைந்து வாழலாம். புதிய தொழில்களை ஆரம்பிக்கலாம். கூட்டுத் தொழிலும் செய்யலாம்.
கடக குரு 3-ஆம் இடம், 5-ஆம் இடம், 7-ஆம் இடங்களைப் பார்ப்பதால், சகோதர- சகோதரி வகையில் சகாயமும் நன்மையும் உண்டாகலாம். ஒருசிலரின் அனுபவம்- தகப்பனார் வகை சொத்துகள் பிரச்சினையில், பங்கு பாகம் முறையாக நடக்கவில்லையென்று வழக்குத் தொடரப்பட்டு, நீதிமன்ற அலைச்சலைத் தவிர்க்க- ஏதாவது செட்டில் செய்து சமாதானத்துக்கு முயற்சி நடக்கும். ஐந்து வயதுவரை அண்ணன் தம்பி- அதற்குமேல் பங்காளி என்ற சொல்லைப் பொய்யாக்கி, "தம்பியுடையான் படைக்கஞ்சான்' என்ற மொழியை உண்மையாக்கலாம். புது எதிரியை அல்லது பொது எதிரியைப் போராடி ஜெயிக்க சகோதரர்களின் ஒற்றுமை தேவை என்பதை உணர்ந்து நேசக்கரங்கள் நீட்டலாம்.
பண்டித நேரு பிரதமராக இருந்த காலத்தில்- நட்பு நாடிவந்த சீனப் பிரதமர் நன்றி மறந்து இந்தியாமீது படையெடுத்தபோது, இந்தியாவில் உள்ள எல்லாரும்- காங்கிரஸ் கட்சியுடன் கருத்துவேறுபாடு கொண்டி ருந்த எதிர்கட்சிகள் அனைத்தும் ஜாதி சமயபேதமின்றி தங்கம், பொன், பொருள் உதவிசெய்து நேருவின் கரத்தை பலப்படுத்த ஒற்றுமையாக நின்று, பொது எதிரி சீனாவுக்கு எதிர்க்குரல் கொடுத்தார்கள். இது வயதானவர்களுக்குத் தெரியும். (இன்றைய வாலிபர்களுக்குத் தெரியாது).
ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் 3-ஆம் இடத்தை குரு பார்த்தும் பலனிருக்காது. உடன்பிறந்தவர்களாலும் நண்பர்களாலும் பிரச்சினைகளும் தொல்லைகளும் உண்டாகலாம். சகோதர வகையில் சஞ்சலமும் அவமானமும் அடையலாம். சிலருக்கு சகோதர வர்க்கமே சத்ரு வர்க்கமாக மாறலாம்.
ராமாயணத்தில் இராவணன் போக்கு அவனுடைய தம்பிகள் விபீஷணனுக்கும் கும்பகர்ணனுக்கும் பிடிக்கவில்லை. அவனுடைய மாமன் மாரீசனுக்கும் பிடிக்கவில்லை. மாரீசனிடம் இராவணன், "மாய மானாக மாறி ராமனை திசைமாற்றி அழைத்துப்போனால் சீதையை சிறையெடுக்கலாம்' என்றான். மாரீசனுக்கு இது நியாயமாகப் பிடிக்க வில்லையென்றாலும், போகாவிட்டால் இராவணன் கொல்வான்; போனால் ராமன் கொல்லுவது நிச்சயம். இராவணனிடம் பகையாகி உயிர்மாள்விதைவிட, ராமன் கையால் பலியாவது மேலென்று மாரீசன் போனான். அதேபோல கும்பகர்ணனும் அண்ணன் கட்டளையை சிரமேற்கொண்டு, ராமனோடு போர்புரிந்து உயிர்த்தியாகம் செய்தான். ஆனால் விபீஷணனோ இராவணனைவிட்டு விலகி ராமனோடு நட்புறவு கொண்டு, இராவணனுக்கு எதிராக வேலை செய்தான். இராவணனைச் சார்ந்தோர் விபீஷணனை துரோகி என்றாலும், ராமன் விபீஷண ஆழ்வார் பட்டம் தந்து இலங்கைக்கு அரசனாக்கினார். விபீஷணனோ அதர்மத்தைவிட்டு தர்மத்துக்குத் துணைநின்றதாக தன் நிலையை நியாயப்படுத்தினான்.
கன்னி ராசிக்கு 7-ல் கேது. அதற்கு குருபார்வை. 5-க்குடைய சனி 2-ல் உச்சம். ராகு சம்பந்தம். சனி குருவைப் பார்க்கிறார். அதனால் களஸ்திர தோஷம், புத்திர தோஷம் என்பார்கள். ஆனால் இரண்டு ஸ்தானங்களையும் உச்சகுரு பார்ப்பதால் தோஷம் நிவர்த்தியாகிறது.
குழந்தையே இல்லாமல் இருப்பது புத்திர தோஷம். பிறந்துபிறந்து அழிவது புத்திர சோகம். ஒரே ஒரு குழந்தை மட்டும் இருப்பது கதலிவந்தியா தோஷம் எனப்படும். இந்த மூன்றும் கன்னி ராசிக்கு இருக்காது. தோஷ நிவர்த்தியாகும். ஏழரைச் சனி இருப்பதால் தாமத திருமணம்- தாமத வாரிசு என்பதாகும்.
4, 7-க்குடையவர் 11-ல் உச்சம்; 5, 7-க்குப் பார்வை; 5-க்கு சமசப்தமம்; 7-க்கு திரிகோணம். எனவே எண்ணம், திட்டம் ஆகியவை நிறைவேறும். பிள்ளைகள் வகையில் நல்லவை நடக்கும். பிள்ளைகளின் உதவியால்- அவர்களின் ஒத்துழைப்பால் உங்கள் எண்ணங்களும் திட்டங்களும் நிறைவேறும்.
நீண்டகாலமாக புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கும் புத்திரபாக்கியம் உண்டாகும். வாரிசு வேண்டுவோர் கும்பகோணம் குடவாசல் அருகில் சேங்காலிபுரம் சென்று பிரார்த்தனை, அபிஷேகம் செய்யவேண்டும். கார்த்திகை மாதம் அங்கு தத்த ஜெயந்தி நடக்கும். அப்போது கடைசி நாளில்  தொட்டில் உற்சவம் என்றும், பால் புகட்டும் உற்சவம் என்றும் நடக்கும். அதில் சுமங்கலிப் பெண்கள் கலந்துகொண்டால் நிச்சயம் வாரிசு கிடைக்கும். என் சொந்த அனுபவத்தில், பல பெண்கள் அங்குசென்று பூஜையில் கலந்து கொண்டு தாயாகி இருக்கிறார்கள். பத்துப்பதினைந்து வருடங்களுக்குப் பிறகு புத்திரபாக்கியம் கிடைத்திருக்கிறது. டிரஸ்டி. நாகசுப்பிரமணியன், அலைபேசி: 94872 92481-ல் தொடர்பு கொள்ளலாம்.
பிரசவ காலத்தில் திருச்சி தாயுமானவ சுவாமிக்கு காணிக்கை முடிந்து வைத்தால், ஆபரேஷன் இல்லாமல் நார்மல் டெலிவரி ஏற்படும். அதே போல புலியூரான் சித்தர்கோவிலுக்கும் நேர்ந்துகொண்டால் சுகப் பிரசவம் ஏற்படும். அருப்புக்கோட்டையிலிருந்து திருச்சுழி போகும் பாதையில், ஜெயவிலாஸ் கட்டடத்துக்கு எதிரில் வடக்கே செம்பட்டி வழியில் போகவேண்டும். அருப்புக்கோட்டையிலிருந்து டவுன் பஸ்- மினிபஸ் போகும். பூசாரி சித்து சுந்தரம், அலைபேசி: 99657 89200-ல் தொடர்புகொள்ளலாம்.
7-ஆம் இடத்தில் கேது நிற்பது தோஷம்; ஜென்ம ராசியில் ராகு நிற்பது தோஷம்; ராசிக்கு 2-ல் சனி நிற்பது தோஷம். அதனால் ஆண் களுக்கும் பெண்களுக்கும் திருமணம் தடையாகும்; தாமதமாகும். இதே போல ஜனன ஜாதகத்தில் இருந்தாலும் திருமணத்தடை. அதனால் 30வயது வரைகூட திருமணம் தாமதமாகலாம். அப்படிப்பட்டவர்கள் ஆண்கள் கந்தர்வராஜ ஹோமமும், பெண்கள் பார்வதி சுயம்வரகலா ஹோமமும் செய்துகொள்ளவேண்டும். இதில் செவ்வாய், சனி சம்பந்த மிருந்தால் கலப்புத் திருமணம், காதல் திருமணம் நடக்கும். அந்த எண்ணம் மாறவேண்டுமானால் காமோகர்ஷண ஹோமம் செய்ய வேண்டும். இந்த காமோகர்ஷண ஹோமம் செய்வதற்குமுன்பு ஆணோ பெண்ணோ முழுமையான வைராக்கியத்தோடு இருந்தால்- அதைத் தடுப்பது கஷ்டம்!
எனக்குத் தெரிந்த நண்பரின் மகள் வேறுஜாதிப் பையனை விரும்பி னாள். அவள் படித்தவள்; அவன் படிக்காதவன். எப்படியோ அவர் களுக்குள் காதல் புகுந்துவிட்டது. பெண்ணைப் பெற்றவர்கள் பெண்ணை இடம் மாற்றி வைத்தும், செல்போனை பிடுங்கியும், காவல் போட்டும் பார்த்தார்கள். "ஜாதகரீதியாக அவளுக்கு கலப்புத்திருமணம் தான் நடக்கும்' என்றேன். பெற்றவர்கள் மனம் ஏற்றுக்கொள்ளாமல், காமோகர்ஷண ஹோமம் செய்தார்கள். ஆனால் அந்த ஹோமம் பலன் தரவில்லை. ஒருநாள் வீட்டைவிட்டு அந்தப் பெண் அந்தப் பையனோடு ஓடிவிட்டாள். ஜாதக அமைப்பு எதிர்மறையாக இருந்தால் எந்த ஹோமமும் பலன்தராது.
மேற்படி ஹோமங்களை முறையாகச்செய்ய விரும்புபவர்கள் காரைக்குடியில் சோமு குருக்கள், அலைபேசி: 99438 19133; பள்ளத் தூரில் சிவமணி குருக்கள், அலைபேசி: 99446 62238; தேவிபட்டினத்தில் மொட்டையர் மகன் சக்தி சீனிவாச சாஸ்திரி, அலைபேசி: 99435 46667; கோவையில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் அர்ச்சகர் சுகேஷ், அலைபேசி: 94430 64265-ல் தொடர்பு கொள்ளலாம். யாருக்கு எது அருகிலோ அங்குசெய்யலாம். 
ஏற்கெனவே திருமணமாகி மனைவி கொண்டுவந்த சீர் சீதன நகைகளை விற்றுச் செலவு செய்தவர்களும், கணவன்- மனைவி வகையில் வியாதிக்காக ஆயிரக்கணக்கில் வைத்தியச் செலவு செய்து வெந்துவேதனைப்பட்டு நொந்து நூலாகிப்போனவர்களும், இனி 7-ஆம் இடத்தை குரு பார்ப்பதால் நலமடைவார்கள்; வளமடைவார்கள். அதிர்ஷ்டவசமாக சம்பாத்தியம் செய்து இழந்த பொருள்களை மீட்டு இன்பமடையலாம்.
11-ஆம் இடம் லாபஸ்தானம், மூத்த சகோதர ஸ்தானம். ஜனன ஜாதகத்தில் களஸ்திர தோஷமும் இருதார யோகமும் இருந்தால், இக்கால கட்டத்தில் மறுமணம் நடக்கும். சிலர் மூத்த தாரத்துக்கு வாரிசு இல்லாததால், அவர் சம்மதத்துடன் இரண்டாம் தாரம் கட்டிக் கொள்ளலாம். சிலர் ரகசியமாக சின்னவீடு செட்டப் செய்துகொள் வார்கள். இன்று நாட்டில் ரொம்ப பேருக்கு மனைவி இருக்கும்போதே மற்ற பெண்கள்மீது சபலம் வருகிறது. கிளிபோல பெண்டாட்டி இருந்தாலும் குரங்குபோல வைப்பாட்டிவைத்துக் கொள்வார்கள். சிலர் சபலமும் ஆசையும் ஏற்பட்டாலும் வெளியுலக மரியாதைக்கு பயந்து மனதுக்குள்ளேயே அதைப் புதைத்துவிடுவார்கள். சிலர் எந்த விமர்சனத்துக்கும் பயப்படாமல் பகிரங்கமாக தப்பு செய்வார்கள். கேட்டால் "மனைவி, மக்களைக் கைவிடாமல் அவர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்கிறேனே' என்று நியாயம் கற்பிப்பார்கள். சிலர் வேலைக்காரியோடு பழகி காசை விரயமாக்குவார்கள். இதையெல்லாம் சபலபுத்தி என்பதா? ஊழ்வினைப் பயன் என்பதா? விட்டகுறை தொட்ட குறை என்பதா?
மனைவியை மறந்துவிட்டு மற்ற பெண்மீது மையல் கொண்டு திரிகிற வர்களை, அந்தப் பெண் வசியம் வைத்துவிட்டாள்- மருந்து வைத்து விட்டாள் என்று நம்புவதும், அதற்காக போலி மந்திரவாதிகளிடம் போய் பெண்கள் காசு பணத்தைக் கொடுத்து ஏமாறுவதுமான செய்தி களை அடிக்கடி கேள்விப்படலாம். வசியம், மருந்து எல்லாம் உண்மை யல்ல! சபலமும் ஆசையும்தான் பேய் உரு எடுக்கிறது. "திருடராய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது' என்று பட்டுக்கோட்டையார் பாடியமாதிரி, மனிதர்கள் மனக்கட்டுப் பாட்டுடன் ஒழுக்கமாக வாழவேண்டும். மனிதன் மதிபோன வழி தவறுகள் செய்தால், பின்னால் விதி என்ற பெயரில் கிரகங்கள் ரூபத்தில் விரட்டி வந்து பழிவாங்கும். அடுத்துவரும் விதி நல்லதாக அமைய வேண்டுமானால் மதியை நல்ல வழியில் திருப்பி நடக்கவேண்டும்.

13-6-2014 முதல் 29-6-2014 வரை தனது சாரத்தில் குரு சஞ்சாரம்
இக்காலம் குரு தனது நட்சத்திரமான புனர்பூசத்தில் சஞ்சாரம்! ராசி அம்சத்தில் கடகத்தில் வர்க்கோத்தம், உச்சம்! ஆகவே குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கேட்கும் இடத்தில் பணம் வரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்லசேதி கிடைக்கும். உங்கள் சொல்லுக்கு மதிப்பு உண்டாகும். மதிப்பும் மரியாதையும் செல்வாக்கும் பெருகும். திருமணப் பேச்சுவார்த்தை கைகூடிவரும். தேக ஆரோக்கியத்தில் தெளிவு எதிர்பார்க்கலாம்.

பரிகாரம்: சிவகங்கையில் பஸ் நிலையம் பின்புறம் திருக்குளமருகில் சசிவர்ணேசுவரர் திருக்கோவில் இருக்கிறது. சந்திரன் ஈஸ்வரனை வழிபட்டு சாபவிமோசனம் பெற்ற தலம். குரு- ராசியிலும் நவாம்சத்திலும் சந்திரன் வீட்டில் இருப்பதால், இங்குசென்று வழிபட தங்கு தடையில்லாத மங்களம் பொங்கும். அம்மன் பெரியநாயகி.

29-6-2014 முதல் 28-8-2014 வரை பூச நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்
பூசம் சனியின் நட்சத்திரம். சனி 5, 6-க்குடையவர் 2-ல் உச்சம். 11-ஆம் இடத்து உச்ச குருவைப் பார்க்கிறார். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் தேடிவரும். பயன்படுத்திக்கொள்வது உங்கள் பொறுப்பு. வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தி யோகத்தில் நல்ல திருப்பம் எதிர்பார்க்கலாம். தைரியம், தன்னம்பிக் கையால் எதையும் சாதிக்கலாம்.

பரிகாரம்: மதுரை அருகில் திருவாதவூர் உள்ளது. மாணிக்கவாசகர் பிறந்த ஊர். அங்கு திருமறைநாதர் சிவன்கோவிலில் சனீஸ்வரருக்கும், அவர் குருநாதர் காலபைரவருக்கும் தனிச்சந்நிதி உண்டு. சனி பகவானுக்கு வாதநோயை குணப்படுத்திய தலம். அங்குசென்று வழிபடுதல் உத்தமம்.

28-8-2014 முதல் 3-12-2014 வரை முதல் கட்டமாகவும்; 22-12-2014 முதல் 5-7-2015 வரை இரண்டாம் கட்டமாகவும் ஆயில்ய நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்
ஆயில்யம் புதன் சாரம். புதன் உங்கள் ராசிநாதர்; 10-க்குடையவர் எனவே இக்காலம் தொழில் முன்னேற்றம், லாபம், பதவி உயர்வு, வேலையில் நிம்மதி, மேலிடத்தாரின் பாராட்டு, வாழ்க்கையில் நிம்மதி, நிறைவு, ஆனந்தம் ஆகிய பலன்களைச் சந்திக்கலாம்.

பரிகாரம்: மயிலாடுதுறை அருகில் (4.கி.மீ) வானமுட்டிப் பெருமாள் ஸ்தலம் சென்று வழிபடவும்.
குரு வக்ரகதி பலன்
3-12-2014 முதல் குரு சிம்மத்தில் மக நட்சத்திரத்தில் 19 நாட்கள் சஞ்சாரம். (22-12-2014 வரை). இதில் 17-12-2014 முதல் 22-12-2014 வரை மக நட்சத்திரத்தில் வக்ரம். பிறகு ஆயில்ய நட்சத்திரத்தில் 26-3-2015 வரை வக்ரம். இந்த இரண்டு நட்சத்திரத்திலும் குருவின் வக்ரம் ஒரே மாதிரியான பலனாகத்தான் அமையும். வேறுபாடு தெரியாது. கேது குரு வீட்டில் ரேவதியில் நுழைவதால் அது புதன் சாரம். புதன் ராசிநாதன். ஆகவே இக்காலமும் உங்களுக்கு நற்காலமே! குடும்பத் தாரின் விருப்பங்களை நிறைவேற்றலாம். புதியவர்களின் நட்பால் ஆதாயம் அடையலாம். திருமண ஏற்பாடுகள் கைகூடும். ஆபரணங்கள், நகை சேரும்.

பரிகாரம்: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகில் திருவோத்தூர் உள்ளது. இது பாலகுஜாம்பிகையுடன் உறையும் வேத புரீஸ்வரர் ஆலயம். பஞ்சபூதங்களின் ஒரே ஸ்தலம். திருவானைக்காவல்- நீர்; காஞ்சிபுரம்- மண்; காளஹஸ்தி- வாயு; திருவண்ணாலை- அக்னி; சிதம்பரம்- ஆகாயம். இந்த 5-ம் சேர்ந்த ஒரே தலம் திருவோத்தூர். தொண்டைநாட்டு பாடல்பெற்ற தலங்கள் 32-ல் இது 8-ஆவது தலம் தேவர்களுக்கு இறைவன் வேதம் ஓதுவித்த ஊர். பிராகார வலம் வரும்போது 108 சிவலிங்கத்தை தரிசிக்கலாம்.
உத்திர நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த குருப் பெயர்ச்சி சொல்வாக்கையும் செல்வாக்கையும் தரும். சுபமங்கள செலவுகளும் ஏற்படும். ஆயுள், ஆரோக்கியம் தெளிவு.

பரிகாரம்: கும்பகோணத்தில் கம்பட்ட விஸ்வநாதர் கோவில் அருகில் மௌனகுரு சாமி மடம் சென்று வழிபடவும். (சிம்மராசியில் உத்திர நட்சத்திரப் பலனைக் காண்க).
அஸ்த நட்சத்திரக்ôகாரர்களுக்கு:
இந்த குருப் பெயர்ச்சி லாபமும் வெற்றியும் தரும். வழக்குகள் சாதகமாகும். முன்னோர் அருளாசி கிடைக்கும்.

பரிகாரம்: கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் கருவூரார் சித்தர் ஜீவசமாதி உள்ளது. சித்திரைமாத அஸ்த நட்சத்திரத்தில் குருபூஜை. அங்குசென்று வழிபடலாம்.
சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த குருப் பெயர்ச்சி தவிர்க்கமுடியாத வைத்தியச் செலவுகளையும் சஞ்சலங்களையும் தந்தாலும், குரு பலத்தால் சமாளிக்கலாம். குல தெய்வப் பிரார்த்தனை துணைநிற்கும்.

பரிகாரம்: சென்னிமலை முருகன்கோவிலில் புண்ணாக்கு சித்தர் ஜீவசமாதி இருக்கிறது. வைகாசி சித்திரை நட்சத்திரத்தில் அவதரித்தவர். மலைக்கோவில். 1,300 படிகள். (பெருந்துறையிலிருந்து 15 கி.மீ). அங்குசென்று வழிபடலாம்.              துலாம்: (சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய).. 13.06.2014 வெள்ளிக்கிழமை முதல் துலா ராசி அன்பர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 9-ல் இருந்த குரு இப்போது 10-ஆம் இடத்துக்கு மாறியுள்ளார். 9-ஆம் இடம் மிகமிக நல்ல இடம். யோக ஸ்தானம். 10-ஆம் இடம் சுமாரான இடம். "ஈசனார் ஒரு பத்திலே தலையோட்டிலே இரந்துண்டது என்பது பாடல்.

கடந்த காலத்தில் குரு 9-ல் நல்ல இடத்திலிருந்தும் அந்த நன்மைகளை அடைந்தவர்கள் நூற்றுக்கு 25 பேர்தான். மீதி 75 பேரும் ஜென்ம ராகு, ஜென்மச் சனி பலனாக, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதையாக கடன்பட்டும் பட்டினி- கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி என்ற நிலையில்தான் பலனை அனுபவித்தார்கள். ஒருசில துலா ராசி குடும்பஸ்தர்கள், சீட்டாட்டத்தில் விட்டதைப் பிடிக்கிறேனென்று மேலும் மேலும் கடனை வாங்கி கடன் சுமையை தலைச்சுமையாகத் தாங்கினார்கள். ஒருசிலர் வருமானம் சம்பாதிக்கும் மனைவியின் கட்டளைக்கு அடிபணிந்து, தங்கள் சுதந்திரத்தை இழந்தார்கள். என்றாலும் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லையென்று வறட்டுக் கௌரவத்தோடு, வெளித்தோற்றத்தில் நடிக்கவேண்டி யிருந்தார்கள். ஆன்மிகத்துறையில் ஈடுபட்ட சில துலா ராசியினர் நிர்வாகத்தைப் பெரிதாக்கி  அதன் செலவுகளை சரிக்கட்ட பலவகை யிலும் வருமானத்தைப் பெருக்க நினைத்தார்கள். அதற்காக சில வரை முறைகளையும் மீறினார்கள். அத்துடன் கஷ்ட காலத்தில் உடனிருந்த நல்லவர்களையெல்லாம் விட்டு விலகவேண்டிய கட்டாயத்துக்கும் ஆளானார்கள். ஸ்தாபன வளர்ச்சிக்கு அரசியல்வாதிகளையும் அரசாங்க அதிகாரிகளையும் எதிர்பார்த்து, அவர்கள் தேவைகளையும் பூர்த்தி செய்யவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானார்கள்.

இப்படி 9-ஆம் இடத்து குரு வருமானப் பெருக்கம், வசதி வாய்ப்புகள் பெருக்கம், புகழ், பெருமை கொடுத்தாலும், வேறொரு வகையில் சக்திக்கு மீறிய கடனாளியாக்கிவிட்டது. ஆலய அர்ச்சகர்கள் சிலர் தட்டில் 100 ரூபாய் காணிக்கை போட்டவருக்கு மாலை மரியாதை, ஒரு ரூபாய் போட்டவருக்கு ஒரு மரியாதை, ஒன்றும் போடாதவருக்கு அலட்சியமென்று நடப்பதுபோல, வந்த அன்று வாழை இலை- மறுநாள் தையல் இலை- கடைசிநாள் கையிலே என்று உபசாரம் நடந்தது.
ஒருசிலர் ரத்தபந்த சொந்தம், உறவினர்களுக்கு எல்லா உதவிகளையும் ஒத்தாசைகளும் செய்துகொடுத்தாலும், தங்களைமீறி அவர்கள் வளர்ந்துவிடக்கூடாது என்பதிலும், எதையும் தங்களைக் கேட்டுத்தான் செய்யவேண்டும் என்ற கட்டுப்பாட்டுக்குள்ளும் மற்றவர்களை வைத்திருந்தார்கள்.
9-ல் இருந்த குரு துலா ராசிக்கு 5-ஆம் இடத்தையும், ஜென்ம ராசியையும், 7-ஆம் இடத்தையும் பார்த்ததால் சிலர் மனைவிபேரில் வீடு, வாசலை ஏற்படுத்தினார்கள். சிலர் பிள்ளைகளின் திருமணங்களை ஆடம்பரமாக நடத்தினார்கள். சிலருக்கு மாலை மரியாதை, கௌரவப் பட்டம் கிடைத்தது. (சிலர் பணம் கொடுத்து கௌரவப் பட்டத்தை விலைக்கு வாங்கினார்கள்). சிலர் காசை செலவழித்தால் எல்லாரும் தன் கட்சியில் வந்து துதிபாடுவார்களென்று செயல்பட்டார்கள். இப்படி 9-ல் யோகத்தில் ஆனந்தப்பட்டோருக்கு மட்டுமே இப்போது 10-ஆம் இடத்து குரு பதவி இறக்கம், குடும்பத்தில் குழப்பம், கௌரவப் பிரச்சினை, ஈசன் தலையோட்டிலே இரந்ததுபோல கௌரவப்பிச்சை என்ற பலன்கள் நடக்கும்.
9-ஆம் இடத்து குரு பெரும்பான்மையினக்கு பணக்கஷ்டம், மனக்கஷ்டம், தொழில் நஷ்டம், சௌக்கியக்குறைவு, கடன்காரர்களின் தொல்லை, கடன் வேதனை, காரியத்தடை, சக்திக்கு மீறிய வைத்தியச் செலவு போன்ற கெடுபலன்களை நடத்தியிருந்தால் ஏற்படலாம். 10-ஆம் இடத்து குரு அதற்குப் பரிகாரம் செய்வதுபோல நிவர்த்திசெய்து நன்மையான பலன்களைத் தரும் என்பது உண்மை! இதற்கு என்ன காரணம்? துலா ராசிக்கு 10-ஆம் இடம் கடகத்துக்கு 12-ல் மறைந்தது ஒரு காரணம். துலா ராசிக்கு 3, 6-க்குடையவர் ஜென்ம ராசியைப் பார்த்தது மற்றொரு காரணம்! 10-ஆம் இடம் தொழில், வாழ்க்கை ஸ்தானத்துக்கு 6-ஆம் இடம், 8-ஆம் இடங்களைப் பார்த்ததும் இன்னொரு காரணம். அதாவது குரு சுபகிரகம் என்பதால், அவர் எந்த இடத்தைப் பார்க்கிறாரோ அந்த இடத்துப் பலன் விருத்தியடையும்.
ஒரு கிரகம் நல்ல இடத்தில் இருந்தால் மட்டும் நல்லது நடந்துவிடுமென்று அர்த்தமல்ல; எந்தெந்த இடங்களுக்கு அவர் 6, 8, 12-ல் இருப்பாரோ அந்த இடங்களையெல்லாம் கெடுக்கும். அத்துடன் சுபகிரகம் கெட்ட இடத்தைப் பார்த்தால் கெட்டதை வளர்க்கும். அசுப கிரகம் (கெட்ட கிரகம்) பார்த்தால் கெட்டதை அழிக்கும்.
இப்போது 10-ஆம் இடத்துக்கு வந்துள்ள குரு அங்கு உச்சம். அவருடைய பார்வை 2-ஆம் இடம். 4-ஆம் இடம், 6-ஆம் இடங்களுக்குக் கிடைக்கும். இதில் 2-ம், 4-ம் நல்ல இடம். 6 மோசமான இடம்.
2-ம், 4-ம் கல்வியைக் குறிக்கும். 2- வாக்கு, வித்தை ஸ்தானம். 4- கல்வி ஸ்தானம். 2 என்பது இயற்கை ஞானம், அனுபவக்கல்வி; 4- பள்ளிக்கல்வி. கடந்தகாலத்தில் மிதுன குரு 2-ஆம் இடத்துக்கு 8-லும், 4-ஆம் இடத்துக்கு 6-லும் மறைவென்பதால், மாணவர்களின் படிப்பில் தடையும் தோல்வியும் அரியர்ஸும் ஏற்பட்டிருக்கலாம். ஆடிட்டிங் பரீட்சையில் இறுதிப் படிப்பில் ஒரு மார்க் அல்லது இரு மார்க்கில் தோற்றுப்போனவர்களும் உண்டு. அப்படிப்பட்டவர்களுக்கெல்லாம் இந்த குருப்பெயர்ச்சி அனுகூலப் பெயர்ச்சியாக அமையும். விட்டுப்போன பாடத்திட்டத்தையும் பூர்த்தி செய்யலாம். பட்டப்படிப்பையும் முடிக்கலாம். குரூப்-1, குரூப்-2 தேர்வும் எழுதி பாஸாகலாம்.
4-ஆம் இடம் தாயார், தன் சுகம், பூமி, வீடு, வாகன ஸ்தானம். அதற்குடைய சனி ஜென்ம ராசியில் உச்சம்! அவர் உச்ச குருவைப் பார்க்கிறார். எனவே தாயன்பு பெருகும். புது இடத்தில் வீடு கட்டும் முயற்சியின்போது பக்கத்து வீட்டுக்காரன் பொறாமையால் சில கெடுதல்களைச் செய்வான். அதனால் ஆயிரக்கணக்கில் வீண் விரயம், நஷ்டம் ஏற்படலாம். சிலர் தவணைக்கடன் வாங்கி புதுக்கார் எடுக்கலாம். சிலருக்கு அக்கம் பக்கத்தாரின் திருஷ்டியால் தேவையற்ற விரயச் செலவுகள் ஏற்படலாம். சிலருக்கு வைத்தியச் செலவு ஏற்படலாம். ஒருவர் வண்டியை நிறுத்திவிட்டு கோவிலுக்குப் போய் சாமி கும்பிட்டுத் திரும்புவதற்குள் வண்டியைக் காணவில்லை. திருடுபோய்விட்டது.
இப்போது  10-ல் வந்துள்ள குரு காணாமல்போன டூவீலரையும் கண்டுபிடித்துத் தருவார். தேகநலமும் தெளிவாகிவிடும். வீடுகட்டும் முயற்சியில் உங்களுக்கு இடையூறும் கெடுதல்களும் செய்தவர்கள் "கெடுவான்- கேடு நினைப்பான்' என்ற சொல்லுக்கிணங்க உயிர் நஷ்டம், பொருள் நஷ்டங்களை அனுபவிப்பார்கள். இதற்கு உதாரணமாக ஒரு சம்பவம். நான் வீடு கட்டும்போது சிமெண்ட் மூட்டைகளையெல்லாம் அடுக்கி ரோட்டில் ஒரு சிறு ஷெட் போட்டேன். ஒரு செட்டியார் பக்கத்துவீட்டை குறைந்த விலைக்கு வாங்கி, சில மாற்றம் செய்து கூடுதல் விலைக்கு விற்க முயற்சியெடுத்தார். என் இடத்தின்முன்பு கட்டிய ஷெட்- அந்த வீட்டுப் பார்வையை மறைப்பதாகக் கருதி தன் செல்வாக்கினால் மாநகராட்சிக்கு புகார் செய்து, நான் போட்ட ஷெட்டைப் பிரித்து ஓலை, கிடுகு எல்லாவற்றையும் லாரியில் எடுத்துப்போய்விட்டார்கள்.
பத்தாயிரம் ரூபாய் வரை எனக்கு நஷ்டம்! என்னிடம் நேரில் வந்து, தனக்கு எதுவும் சம்பந்தமில்லையென்று என்னை சமாதானம் பண்ணி நடித்தார். "கடவுளுக்கே வெளிச்சம்' என்று சாமியின்மேல் பாரத்தைப் போட்டுவிட்டேன். வேறொரு நண்பரிடம் அனுமதி பெற்று அவர் இடத்தில் ஷெட்போட்டு கட்டட வேலையைத் தொடங்கினேன். செட்டியாரின் அண்ணன் ஒருவருக்கு கேன்ஸர் வந்து, இரண்டு லட்ச ரூபாய் செலவு செய்தும் அண்ணனைக் காப்பாற்றமுடியாமல் இறந்துவிட்டார். அடுத்து செட்டியார் வேறிடத்தில் ஒரு கம்பெனி ஆரம்பிக்க, ஒரு முஸ்லிம் அன்பரிடம் கூட்டுச் சேர்ந்து பத்து லட்ச ரூபாய் முதலீடு செய்தார். அந்த முஸ்லிம் அன்பர் சட்டவிரோதச் செயலில் சிக்கி சிறைக்குப் போய்விட்டார். செட்டியாருக்கு 10 லட்சம் நஷ்டம்! அதாவது "ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளுக்குச் சமம்' என்பதுபோல, "வல்லான் வகுத்ததே வாய்க்கால்' என்று நல்லோரை நோகடித்தால், இறைவன் வல்லவனுக்கும் வல்லவனாக வந்து நல்லது செய்வார். தர்மத்தை நிலைநாட்டுவார். அதனால்தான் பாரதியார் "தர்மமிகு வாழ்வுதனை சூதுகவ்வும்; ஆனாலும் தர்மமே முடிவில் வெல்லும்' என்று பாடினார்.
6-ஆம் இடத்தை குரு பார்த்த பலனாக, சில சமயம் மேலே எழுதியபடி சில இடையூறுகளையும் சங்கடங்களையும் சந்தித்தாலும், குரு உச்சம் என்பதால் முடிவில் சத்ரு ஜெயம், கடன் நிவர்த்தி, பீடை நிவர்த்தி ஆகிய நன்மையும் நடக்கும். மகாபாரதத்தில், நல்லவர்களான பாண்டவர் களுக்காக கண்ணபரமாத்மா வக்காலத்து வாங்கி, கெட்டவர்களான கௌரவர்கள் அழிய துணை நின்றார். ஆகவே எளியாரை வலியார் வதைத்தால் வலியாரை காலம் அழிக்கும். (காலம் தெய்வ ரூபம்).
13-6-2014 முதல் 29-6-2014 வரை தனதுசாரத்தில் (புனர்பூசம்) குரு சஞ்சாரம்
குரு தனது சொந்த நட்சத்திரமான புனர்பூசம் 4-ல் நிற்கிறார். ராசிக்கட்டத்திலும் நவாம்ச கட்டத்திலும் குரு கடகத்தில் வர்க்கோத்தமம், உச்சம்! குரு ராசிக்கு 6-க்குடையவர் என்றாலும் 10-ஆம் இடம் தொழில் ஸ்தானத்துக்கு பாக்கியாதிபதி என்பதால், தொழில் வளர்ச்சி, வாழ்க்கை மகிழ்ச்சி, நல்ல காரியங்களுக்காக கடன்வாங்கும் நிகழ்ச்சி! எல்லாம் சுபக்கடன்தான்.

பரிகாரம்: கும்பகோணம் அருகில் திருச்சேறை உள்ளது. கடன் நிவர்த்தி தலம். 11 திங்கட்கிழமை அர்ச்சனை செய்து பிரசாதம் அனுப்ப ஏற்பாடு செய்யலாம். நேரில் போவதானாலும் போகலாம். சுந்தரமூர்த்தி குருக்கள், செல்: 94437 37759-ல் தொடர்புகொள்ளலாம்.
29-6-2014 முதல் 28-8-2014 வரை பூச நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்
துலா ராசிக்கு சனி, ராஜ யோகாதிபதி. 2014 டிசம்பர் வரை உச்சம்! 10-ல் உள்ள குருவைப் பார்ப்பார். எனவே தொழில், வாழ்க்கை எல்லா வகையிலும் முன்னேற்றம் ஏற்படும். கருதியவை கைகூடும். நினைத்தது நிறைவேறும். எண்ணங்கள் ஈடேறும். விரும்பியவை தேடிவரும். தேவைகள் பூர்த்தியடையும்.

பரிகாரம்: ஆரணியில் ஏரிக்குப்பம் என்ற பகுதியில் யந்திர வடிவில் சனியை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்குமுன் எந்திர சிலை கண்டெடுக்கப்பட்டு அதில் வசிய மந்திரம்- ஷடாட்சர மந்திரம்- மகாலட்சுமி யந்திரம்- ஷட்கோணம் ஆகியவை அமைத்துள்ளனர். அங்கு சென்று வழிபடலாம்.


28-8-2014 முதல் 3-12-2014 வரை முதல் கட்டமாகவும்; 22-12-2014 முதல் 5-7-2015 வரை இரண்டாம் கட்டமாகவும் ஆயில்ய நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்
மேற்கண்ட தேதிகளில் இரண்டு முறையாக ஆயில்ய நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம். ஆயில்யம் புதனின் நட்சத்திரம். புதன் துலா ராசிக்கு 9, 12-க்குடை யவர். தெய்வ ஸ்தல யாத்திரையும், குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வ வழிபாடு அமையும். முன்னோர்கள் வழி சொத்து பாகங்கள் கிடைக்கும்.

பரிகாரம்: திருநெல்வேலி- திருச்செந்தூர் பாதையில் ஸ்ரீவைகுண்டம் இருக்கிறது. குமரகுருபரர் அவதரித்த தலம். வைகுண்டநாதர் கண்ணபிரான் என்று பெருமாளுக்கு நாமம். அகோர வீரபத்திரர்  சந்நிதியும் உண்டு. அருகில் கைலாசநாதர் கோவில் உள்ளது. இது தென்கயிலாயம் ஆகும். நவகயிலாயத்தில் ஒன்று. அங்குசென்று வழிபடலாம்.
குருவன் வக்ரகதி பலன்
17-12-2014 முதல் 22-12-2014 முடிய கேது சாரத்திலும் (மகம்), 22-12-2014 முதல் 26-3-2015 வரை புதன் சாரத்திலும் (ஆயில்யம்) குரு வக்ரம்! இக்காலம் சிறுசிறு தடைகளும் விரயங்களும் ஏற்பட்டாலும், முடிவில் அவை ஈடுசெய்யப்படும். விடாமுயற்சியும் வைராக்கியமும் தேவைப்படும். "எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர் திண்ணியராகப் பெறின்' என்ற குறளுக்குத் தக்கவாறு உங்கள் எதிர்காலப் பலன்கள் அமையும்.

பரிகாரம்: சிவகாசியில் பத்ரகாளியம்மன், கோவிலில் பஞ்சமுக விநாயகர் சந்நிதி உள்ளது. அங்குசென்று வழிபடலாம்.
சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த குருப்பெயர்ச்சி சிறுசிறு தடைகளையும் தாமதங்களையும்  தந்தாலும், முடிவில் அனுகூலமாகவும் ஆதாயமாகவும் அமைந்துவிடும். சிலருக்கு கௌரவப் போராட்டப் பிரச்சினை ஏற்பட்டு விலகும்.

பரிகாரம்: திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில், அண்ணாசாலையி லிருந்து ஓயாமரி (சுடுகாடு) செல்லும் சாலையில் இடதுபக்கம் காவிரிக்கரையில் மாக்கான் சுவாமி மடமும் சமாதிக் கோவிலும் உண்டு. வாசலில் பெயர்ப்பலகை உண்டு. 26-9-1954 புரட்டாசி 11-ஆம் தேதி சித்திரை நட்சத்திரத்தில். பரிபூரணம் அடைந்தவர். அங்குசென்று வழிபட லாம். சென்னிமலை முருகன் கோவிலில் புண்ணாக்கு சித்தர் சமாதியையும் வழிபடலாம்.
சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு:
பொருளாதாரத்தில் குறையேதுமில்லை. ஆரோக்கியத்திலும் பிரச்சினையில்லை. சில காரியம் உடனே நடக்கும்; சில காரியம் தாமதமாகும். வரவுக்குமேல் செலவுகள் இடம்பெறும். சிலருக்கு கௌரவப் போராட்டம் காணப்படும்.

பரிகாரம்: சந்தானக் குரவரில் ஒருவர்- சிவஞானபோதத்தை தமிழில் மொழிபெயர்த்து பொழிப்புரை எழுதியவர் மெய்கண்டார் ஆவார். திருவெண்ணெய்நல்லூரில் வடக்கு வீதி கடைசியில் சமாதிக்கோவில் இருக்கிறது. ஐப்பசி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் பரிபூரணமானவர். அங்கு சென்று வழிபடலாம்.
விசாக நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த குருப்பெயர்ச்சி அற்புதப் பெயர்ச்சியாக அமையும். எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறலாம். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வரவேண்டிய பணத்தைப் போராடி வசூலிப்பீர்கள்.

பரிகாரம்: காரைக்குடி கோட்டையூரில் ஆறுமுகசாமி ஜீவசமாதி இருக்கிறது. 1982-ல் வைகாசி விசாகத்தில் பரிபூரணம் அடைந்தவர். அம்பாள்- முருகன் உபாசகர். அண்ணமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த அழ. சிதம்பரம், சுவாமியின் அணுக்கத்தொண்டர். அவரே ஜீவசமாதிக் கோவிலைக் கட்டினார். அங்குசென்று வழிபடலாம்.

விருச்சிகம்: (விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய) 13.06.2014 வெள்ளிக்கிழமை முதல்
விருச்சிக ராசி அன்பர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 8-ல் இருந்த குரு இப்போது 9-ஆம் இடத்துக்கு வந்திருப்பது மட்டுமல்ல; அங்கு உச்ச பலமாகவும் இருக்கிறார். குருவுக்கு 2, 5, 7, 9, 11-ஆம் இடங்கள்தான் யோகமான இடங்கள். "அகப்பட்டவனுக்கு அட்டமச் சனி- ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்து குரு' என்பது பழமொழி. அதாவது 9-ல் குரு இருப்பவன் உண்மையிலேயே தவறு செய்திருந்தாலும் அவன் செய்திருக்க மாட்டான் என்றும், நிரபராதி என்றும் தண்டனையிலிருந்து தப்பிக்க வாய்ப்புண்டு.

கடந்த காலத்தில் 8-ல் குரு மறைந்தபோது கௌரவப் போராட்டம், எதிர்பாராத ஏமாற்றம், வருமானத்தடை, எதிர்காலம் பற்றிய ஏக்கம், கவலை, வரவில்லாமல் செலவு, தவிர்க்கமுடியாத விரயங்கள் ஆகிய பலன்களைச் சந்தித்தீர்கள். சிலருக்கு தொழில் மாற்றம், குடியிருப்பு மாற்றம், பதவி ஓய்வு போன்ற பலன்களும் நடந்திருக்கலாம்.
8-ல் குரு இருந்தபோது சனியும் ராகுவும் 12-ல் இருந்தார்கள். விருச்சிக ராசிக்கு விரயச் சனி நடந்தது. 3-ஆம் இடத்துக்கு 6-ஆவதாகவும், 9-ஆம் இடத்துக்கு 12-ஆவதாகவும் இருந்த காரணத்தால் உடன்பிறப்புகளோடு பகை அல்லது உடன்பிறந்தவர்களால் கடன், தகப்பனார் அல்லது பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்சினை, சிக்கல், வழக்கு ஆகிய பலன்களையும் சந்திக்கச் செய்தது. பாதிக்கப்பட்ட ஒருவருக்கு உதவி செய்யப்போய், பலருடைய எதிர்ப்பையும் பகையையும் சமாளிக்கநேர்ந்தது. பாரதக் கதையில் இரண்டு பகைவர்களில் ஒருவர் அர்ஜுனனிடமும், இன்னொருவர் கிருஷ்ணரிடமும் அடைக்கலம் புகுந்து காப்பாற்றும்படி  வேண்ட- கிருஷ்ணரும் அர்ஜுனரும் தங்களிடம் அபயம்கேட்டு வந்தவர்களுக்காக நேரடியாக மோதிக்கொண்டதாக ஒரு நிகழ்ச்சி! அதேபோல குருநாதர் துரோணரை சீடன் அர்ஜுனன் எதிர்த்துப் போரிடத் துணிந்த நிலை! இப்படி உங்கள் வாழ்க்கையிலும் 8-ஆம் இடத்து குரு குடும்பத்துக்குள்ளேயே பகையை உருவாக்கியது. அம்மாவுக்கும் பிள்ளைக்கும் ஆகாமல்போனது. நீங்கள் அம்மா பக்கம் பேசுவதா பிள்ளை பக்கம் பேசுவதா என்ற தர்மசங்கடத்தை உருவாக்கியது.
இப்படி 8-ஆம் இடத்தில் இருந்த குருவால் ஏற்பட்ட கஷ்டங்களை யெல்லாம் போக்கி கண்ணீரைத் துடைத்து 9-ஆம் இடத்து குரு உங்களைக் காப்பாற்றுவார். 9-ல் குரு இருந்தால் குருவருளும் திருவருளும் பெருகும். இதுவரை நீங்கள் செய்த வழிபாடு, பிரார்த்தனை, பூஜை, ஜெபம், தியானம், தான- தருமம் எல்லாம் இனிமேல்தான் வட்டியும் முதலுமாகப் பலன்தரும்.
கடக குரு 2, 5-க்குடையவர். 2-க்கு 8-ல் இருந்தாலும் 5-க்கு 5-ல் திரிகோணம் பெற்று உச்சமாக நின்று உங்கள் ராசியைப் பார்ப்பதால், உங்கள் எண்ணங்களும் திட்டங்களும் நூற்றுக்கு நூறு வெற்றியடையும். ஜென்ம ராசியான விருச்சிகத்தையும் பார்க்கிறார்.
ஜென்ம ராசியைப் பார்ப்பதால் உங்கள் செல்வாக்கு உயரும்; மதிப்பு, மரியாதை, கௌரவம் உயரும். உங்களைப் பார்த்து கடந்த காலத்தில் "அவ்வளவுதான்- ஆட்டம் குளோஸ்- இனி எழுந்திருக்க முடியாது' என்று எடை போட்டவர்களும் ஏளனமாகப் பேசியவர்களும், "எப்படியோ தப்பி மேலே வந்துவிட்டாரே' என்று ஆச்சரியப்பட்டு மூக்கின்மேல் விரலை வைக்குமளவு உங்களுக்கு வளர்ச்சியும் முன்னேற்றமும் யோகமும் அமைவது உறுதி!
கடந்த காலத்தில் கண்டபடி கைநீட்டிய இடமெல்லாம் கடனை வாங்கி, அசலும் அடைக்க முடியாமல் வட்டியும் கட்ட முடியாமல் ஊரைவிட்டு ஓடிவிடுவதா அல்லது மானத்துக்கு அஞ்சி உயிரை மாய்த்துக்கொள்வதா என்று மயங்கித் தயங்கித் தவித்தவர்களுக்கு, 9-ஆம் இடத்து குரு தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் தருவது உறுதி. வாழ்வுண்டு; வளமுண்டு; நலமுண்டு; நல்ல காலமுண்டு. பைசா பாக்கி இல்லாமல் கடன்களையெல்லாம் பைசல் செய்து நாணயத்தைக் காப்பாற்றி நல்ல பேர் எடுத்துவிடலாம்.
3-ஆம் இடம் சகோதர ஸ்தானம்; சகாய ஸ்தானம்; தைரிய ஸ்தானம். குரு 8-ல் இருக்கும்போது, உங்களுடைய பணக்கஷ்டத்தைப் பார்த்து ஒட்டி உறவாடினால் எங்கே கைமாற்றுக் கடனோ- உதவியோ கேட்டுவிடுவீர்களோ என்று பார்த்தும் பார்க்காமல்போன உடன் பிறப்புகளும் நண்பர்களும், இப்போது 9-ல் குரு மாறியபிறகு வலிய வந்து நலம் விசாரிப்பார்கள். தங்கள் சுயகாரியத்தேவைக்காக உங்களைத் தேடி வருவார்கள். அன்று நீங்கள் வசதியற்றவராக இருந்தீர்கள். இன்று வசதிவாய்ப்பு யோகத்தோடு அதிர்ஷ்டமும் தேடி வருவதால், பசையுள்ளவர்களிடம் இசைவாக எல்லாரும் வந்து ஒட்டிக்கொள்வது இயல்புதானே!
மேலும் 3-ஆம் இடம் மகரத்தை மீன கேது பார்ப்பதால், தன்னம்பிக்கையும் தைரியமும் ஏற்படும். மேலும் அது மோக ஸ்தானம்- காம ஸ்தானம்! கேது கிறிஸ்துவ கிரகம்- ராகு முஸ்லிம் கிரகம். இருவரும் 5-ஆம் இடத்துக்கு சம்பந்தப்படுவதால் பிள்ளைகள் வகையில் கலப்புத் திருமண அமைப்பு உண்டாகும். ஒரு அன்பருக்கு இரண்டு மகன்கள். ஒரு மகன் கிறிஸ்துவப் பெண்ணையும் இன்னொரு மகன் முஸ்லிம் பெண்ணையும் காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டார்கள். அவரும் (தகப்பனாரும்) அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் பெற்றவர்கள் பச்சைக்கொடி காட்டிவிடுவதுதான் பிரச்சினைக்கு நல்ல தீர்வாகும். ஜாதி, கௌரவம், அந்தஸ்து என்று பிள்ளைகளின் சந்தோஷத்தை சாகடிக்கவேண்டாம்.
எனது நண்பரின் மகள் டாக்டர். தன்னுடன் படித்த வேறொரு ஜாதிப் பையனை விரும்பினாள். பெண்ணைப் பெற்றவர்களிடம், "மகள் ஜாதகத்தில் கலப்புத் திருமண யோகம்தான் இருக்கிறது. மறுக்காமல் கட்டி வையுங்கள்' என்றேன். அவர்கள் கூட்டுக் குடும்பமாக வசிப்பவர்கள். இந்தப் பெண் இப்படி முறைதவறி நடந்துகொண்டால் மற்ற பெண்களுக்கும் ஆண்களுக்கும் திருமணம் முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுவிடும் என்று பயந்தார்கள். அவர்கள் திருப்திக்காக அந்தப் பெண் மனம்மாற காமோகர்ஷண ஹோமம் செய்யச் சொன்னேன். அதன்படி ஹோமத்துக்கு ஏற்பாடு செய்தார்கள். ஆனால் கடைசி நேரத்தில் அந்தப் பெண் ஹோமத்தில் கலந்துகொள்ளாமல், விரும்பிய பையனையே ரிஜிஸ்டர் மேரேஜ் செய்துகொண்டு வீட்டைவிட்டு வெளியேறிவிட்டாள்.
இன்னும் ஒரு இருபது வருடங்களுக்கு பிறகு கலப்புத் திருமணம், காதல் திருமணம் எல்லாம் சர்வ சாதாரணமாகிவிடும். அதாவது பெற்று வளர்த்து படிக்க வைத்து வேலையும் வாங்கிக்கொடுப்பதோடு பெற்றவர்கள் கடமை முடிந்துவிடும். அவரவர்கள் விரும்பியவர்களைத் திருமணம் செய்துகொண்டு வீட்டுக்கு வந்து பெற்றோர்களிடம், "உங்களுக்குச் சிரமம் தராமல் திருமணம் செய்துகொண்டோம். ஆசீர்வாதம் செய்யுங்கள்' என்று கூறுவார்கள். அந்த அளவுக்கு நாகரிகம் வளர்ந்துவிடும்.
5-ஆம் இடம் புத்திர ஸ்தானம். அதில் கேது நிற்க கன்னி ராகு பார்க்கிறார். கடக குருவும் 5-க்குடையவரும் பார்க்கிறார்கள். 5-ஆம் இடம் மகிழ்ச்சி, திட்டம், தாய்மாமன், பாட்டனார், மந்திர உபதேசம் ஆகியவற்றையும் குறிக்கும். சந்திரன் ராசியில் நின்று குரு உச்சம் பெற்று மேற்படி 5-ஆம் இடத்தைப் பார்ப்பதால், பிள்ளைகளால் பெருமையும் பாராட்டும் உண்டாகும். உங்களுடைய நீண்டகால திட்டங்கள் நிறைவேறும். பாட்டனார், தகப்பனார் வழி பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் தீர்க்கப்படும். சொத்து சுகங்கள் இருந்தும்- அனுபவிக்க முடியாமலும், விற்கவும் முடியாமலும், பூதம் காத்த புதையல்போல யாருக்கும் எந்த நன்மையும் இல்லாமல் வெட்டியாகக் கட்டிக்காத்துவந்த நிலை மாறும். உங்கள் கஷ்டத்துக்கு கைகொடுக்கும்விதமாக அந்த சொத்தை நல்ல விலைக்கு விற்கலாம். அல்லது பரிவர்த்தனை பண்ணலாம். இவையெல்லாம் குரு கடகத்தில் இருக்கும்போது சனி மாறுவதற்குள் (2014 டிசம்பருக்குள்) நடந்துவிடும்.
சொத்து அல்லது கட்டடம் விற்கவும் வாங்கவும் நினைத்தால் பொன்னமராவதி- திருச்சி பாதையில் செவலூர் சென்று பூமிநாதரை வழிபடலாம். ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறவர்களும் போகலாம். ஒவ்வொரு வாஸ்து நாளிலும் அங்கு வாஸ்து ஹோமமும்,  பூமிநாத சுவாமிக்கும் ஆரணவல்லியம்மனுக்கும் அபிஷேக பூஜையும் நடக்கும். அதில் கலந்துகொள்ளலாம். சாதாரண நாளிலும் போகலாம். அர்ச்சகர் ராஜப்பா குருக்கள், அலைபேசி: 98426 75863-ல் தொடர்புகொள்ளலாம்.
வாஸ்து சம்பந்தமான சைவக்கோவில் செவலூர்- அதேபோல விஷ்ணு சம்பந்தப்பட்டவர்கள் வழிபடவேண்டிய கோவில் விருத்தாசலம் அருகில் ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி ஆலயம். மூலவர் வராஹமூர்த்தி. பெருமாள் ஸ்வயம்புமூர்த்தி. அதேபோல ஸ்ரீவைகுண்டம் அருகில் கைலாசநாதர் கோவில்- இந்திர விமானம் உள்ள கோவில்- பூமியில் புதையுண்டு கிடந்தவரை கண்டெடுத்து புனருத்தாரணம் செய்ததால், பூமி யோகமும் உண்டாகும்.
13-6-2014 முதல் 29-6-2014 வரை தனது சாரத்தில் (புனர்பூசம்) குரு சஞ்சாரம்
விருச்சிக ராசிக்கு 2, 5-க்குடைய குரு உங்கள் ராசிக்கு 9-ல் உச்சமாக அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்கிறார். சவாலான வேலைகளையும் சாமர்த்தியமாக செய்துமுடிக்கலாம். குடும்பத்தில் அன்யோன்யமும் நட்புறவும் மலரும். புதிய திட்டங்கள் நிறைவேறும். குலதெய்வக் கோவில் அல்லது இஷ்ட தெய்வக் கோவிலில் உங்கள் பங்கினைச் செலுத்தி சிறப்பு பூஜைகள் செய்வீர்கள். முதியோர் இல்லம், ஊனமுற்றவர்கள் பராமரிப்பு இல்லங்களில் அன்னதானம், வஸ்திரதானம் செய்வீர்கள்.

பரிகாரம்: கடலூர் மாவட்டம் பண்ருட்டியிலிருந்து வடக்கே எட்டு கிலோமீட்டர் தொலைவில், சிஷ்ட குருநாதர் கோவில் உள்ளது. சிவலோக நாயகி சமேதரராக சிஷ்டகுருநாதர் அருள்பாலிக்கிறார். சுந்தரமூர்த்தி நாயனாருக்கு இறைவன் இறைவியுடன் காட்சிகொடுத்த தலம். வியாழக்கிழமை தரிசனம் செய்தால்- நிரந்தரப் பதவி, குழந்தை பாக்கியம், வழக்கு வெற்றி, திருமணம் கூடும். நெய்தீபம், கொண்டைக்கடலை மாலை, மஞ்சள் வஸ்திரம், முல்லைப்பூ உகந்தது. எல்லாவிதமான குருசாபதோஷமும் நீங்கும்.
29-6-2014 முதல் 28-8-2014 வரை பூச நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்
2014 டிசம்பர் வரை சனி 12-ல் உச்சம். சனியும் குருவும் கேந்திரம். விருச்சிக ராசிக்கு 3, 4-க்குடையவர். 3-ஆம் பாவம், 4-ஆம் பாவம் சம்பந்தமான சுபவிரயங்கள் நடக்கும். சகோதரர், நண்பர்கள், தாயார், கல்வி, பூமி, வீடு, வாகனம், தாய்வழி உறவினர் வகையில் வரவும் உண்டு; செலவும் உண்டு. சகாயமும் நன்மையும் உண்டு. பொதுவாக இக்காலம் அனுகூலமான காலம்தான். நற்காலம்; பொற்காலம்!

பரிகாரம்: கும்பகோணம்- நன்னிலம் வழி- திருவாஞ்சியம் (ஸ்ரீவாஞ்சியம்) சென்று வழிபடவேண்டும். சனி பகவானின் சகோதரன் யமனுக்கு இங்கு தனிச் சந்நிதி உண்டு. காசிப்புண்ணியத்தில் இது வீசம் அதிக புண்ணியம் என்பார்கள். சனி ஆயுள் காரகன். யமன் ஆயுளைப் பறிப்பவன். அர்ச்சகர் ராஜராஜ குருக்கள், அலைபேசி: 94424 03926-ல் தொடர்புகொள்ளலாம். இங்கு ஆயுஷ் ஹோமம் செய்வது சிறப்பு.
28-8-2014 முதல் 3-12-2014 வரை முதல் கட்டமாகவும்;
22-12-2014 முதல் 5-7-2015 வரை இரண்டாம் கட்டமாகவும் ஆயில்ய நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்

விருச்சிக ராசிக்கு புதன் 8, 11-க்குடையவர். இவருடைய சாரத்தில் குரு நேர்கதியாகவும் வக்ரகதியாகவும் சஞ்சாரம். புதன்- குருவின் வீடான மீனத்தில்தான் நீசம்! எனவே இக்காலம் எதையும் சாதிக்கும் நம்பிக்கையும் துணிவும் ஏற்படும். ஏற்கெனவே உங்களால் பயனடைந்தவர்கள் இடைநடுவில் உங்களைக் கண்டுகொள்ளாமல் இருந்திருப்பார்கள். இப்போது அவர்களுக்கு ஏதாவது சிக்கல் ஏற்பட்டு, உங்கள் உதவி தேவைப்படும். அதனால் உங்களைத் தேடிவரலாம். நீங்களும் பழையதை மறந்து நாடிவந்தோருக்கு நன்மை செய்வீர்கள்.

பரிகாரம்: விருத்தாசலம் ஈஸ்வரன் விருத்தகிரீஸ்வரர், பழமலைநாதர் எனப்படுவார். இக்கோவிலில் குடிகொண்ட பிந்துமாதவப்பெருமாள் காசிக்கு சமமான புண்ணியம் தரும் பெருமாள். இங்குசென்று வழிபடுவதால் எல்லா தோஷமும் விலகி வளம்பெறலாம்; நலம்பெறலாம்.
குருவின் வக்ரகதி பலன்
17-12-2014 முதல் 22-12-2014 வரை குரு கேதுவின் நட்சத்திரமான மகத்தில் அதிசாரமாகி பிறகு அதிலேயே வக்ரம் அடைவார். பிறகு ஆயில்ய நட்சத்திரத்தில் 22-12-2014-ல் பிரவேசமாகி, 26-3-2015 வரை வக்ரமாக இருந்து, பிறகு 5-7-2015 வரை நேர்கதியாக சஞ்சாரம் செய்வார். குருவின் இந்த வக்ரகதி (மகம், ஆயில்யம் ஆகிய இரண்டு நட்சத்திரங்களிலும்) உங்களுக்கு கெடுதல் வராது. கணவன்- மனைவிக்குள் சிறுசிறு கருத்து வேறுபாடுகளும் பிணக்குகளும் வந்து விலகும். தொழில், உத்தியோகத்தில் முக்கியமான பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். நீங்களும் சாதனை படைப்பீர்கள்.

பரிகாரம்: அரியலூர் மாவட்டத்தில் கங்கைகொண்ட சோழபுரம் இருக்கிறது. தஞ்சை அல்லது கும்பகோணத்திலிருந்து பஸ் வசதி உண்டு. தஞ்சை பெரிய கோவிலைக்கட்டிய ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திரசோழன், தஞ்சை கோவிலுக்குச் சமமாக இங்கு கோவில் எழுப்பினான். 13 அடி உயரம் கொண்ட சிவலிங்கம். பிரகதீஸ்வரர் என்று நாமம். 12 நிலை கோபுரம். இந்தக் கோவில் சந்திரகாந்த கல்லினாலும், கங்கை நீரைக் கொண்டுவந்து கட்டியதாலும் எப்போதும் குளிர்ச்சி நிலையில் (ஏ.சி. போல) இருக்கும். சகவாச தோஷம், கெட்ட பெண்கள் தொடர்பு, சந்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு சென்றுவந்தால் தோஷம் விலகும். குறிப்பாக வழிதவறி நடக்கும் கணவர்களை திருத்த இந்த ஆலயம் சென்று மனைவிகள் பூஜை செய்வது விசேஷம்.
விசாக நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த குருப்பெயர்ச்சி அற்புதப் பெயர்ச்சியாகவும் அமையும்; ஆனந்தப் பெயர்ச்சியாகவும் அமையும். எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறலாம். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வசூலாகும். அதாவது இருந்து கொடுத்துவிட்டு நடந்து (அலைந்து) வாங்க வேண்டி வரும். அசல் வந்துவிடும். வட்டியில் கொஞ்சம் பாக்கி நிற்கும். போனால் போகட்டும் என்று விட்டுவிடுவீர்கள்.

பரிகாரம்: காரைக்கடி அருகில் கோட்டையூரில் ஆறுமுகசாமி ஜீவசமாதி இருக்கிறது. 1982-ல் வைகாசி விசாகத்தில் பரிபூரணமானவர். அம்பாள், முருகன் உபாசகர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த அழ. சிதம்பரம்- சுவாமியின் அனுக்கத் தொண்டராக இருந்தார். அவரே ஜீவசமாதிக் கோவில் கட்டினார். அங்கு சென்று வழிபடலாம்.
அனுஷ நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்தக் குருப்பெயர்ச்சியில் பொருளாதாரத்தில் முன்னேற்றம் தெரியும். பெரும் செல்வந்தரின் தொடர்பு ஏற்பட்டு, அவர் உதவியால் உங்கள் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும். வாழ்க்கையில் வசதிகளும் அத்தியாவசியத் தேவைகளும் பூர்த்தியடையும்.

பரிகாரம்: கரூருக்கு வடக்கே பத்து கிலோமீட்டர் தொலைவில் கடமன்குறிச்சி கிராமத்தில் ஒத்தைவேட்டி சுவாமி 1895-ல் பிறந்தார். அமராவதி ஆற்றில் ஜலஸ்தம்பனம் செய்தார். 1955-ல் ஆனி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் சமாதி அடைந்தார். கரூரில் அமராவதி ஆற்றன் வடகரையில், பாலத்துக்கு மேற்கே நஞ்சப்பன் படிக்கட்டுத்துறையில் இவரது சமாதி உள்ளது. குரு பூஜை நடக்கிறது. அங்குசென்று வழிபடலாம்.
கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்தக் குருப்பெயர்ச்சியில் நயமாகப் பேசி காரியங்களை கச்சிதமாகச் செய்து முடிப்பீர்கள். வேலை வாய்ப்பை இழந்தவர்களுக்கு உபரி வருமானம் ஏற்படுமளவு மாற்று வழிகள் உண்டாகும். திருமணம், வாரிசுத்தடை விலகும். பேரன்- பேத்தி யோகம் ஏற்படும்.

பரிகாரம்: மதுரை- திருப்பரங்குன்றத்தில் கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகளின் ஜீவசமாதி இருக்கிறது.  செல்லப்பா சுவாமிகளை குருவாகக் கொண்டு துறவு பூண்டார். 1909 முதல் திருக்கூடல்மலைக் குகையில் தங்கி அன்பர்களின் நோய்களையும் குறைகளையும் போக்கினார். 1930-ல் புரட்டாசி 11-ல் கேட்டை நட்சத்திரத்தில் பரிபூரணம் அடைந்தார். சமாதிமேல் விநாயகர் பிரதிஷ்டை. ஆங்கிலேயர் காலத்தில் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் உட்கார்ந்தபோது, வெள்ளைக்கார அதிகாரி அவரைக் கீழே இறக்கிவிட, ரயில் புறப்படாமல் நகராமல் இருந்தது. ஒரு அன்பர் டிக்கெட் எடுத்து அவரை ரயிலில் ஏற்றியதும் ரயில் கிளம்பியது. அங்குசென்று வழிபடலாம்.

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய) 13.06.2014 வெள்ளிக்கிழமை முதல்
தனுசு ராசி அன்பர்களே!
இதுவரை 7-ல் இருந்த குரு இப்போது 8-ஆம் இடத்துக்கு மாறுகிறார். ஏற்கெனவே இருந்த 7-ஆம் இடம் குருவுக்கு அதியற்புத இடம்; ஆனந்தமான இடம்! இப்போது மாறும் இடம் மோசமான இடம்! "இம்மை எட்டினில் வாலி பட்டமிழந்தது' என்பது பாடல்.

விபத்து, கண்டம், அபகீர்த்தி, அவமானம், மலையேறி வீழ்தல், சஞ்சலம் ஆகிய பலன்களைக் குறிக்கும் இடம்தான் 8-ஆம் இடம்! இயற்கையில் சுபகிரகமான குரு 8-ஆம் இடத்துக்கு வருவதால், 8-க்குரிய கெட்டபலன்களை அதிகப்படுத்தலாம். அதாவது ஒரு பாபகிரகம் கெட்ட இடத்தில் இருந்தால் அந்தக் கெட்டபலனை நாசமாக்குவார்- சுபகிரகம் இருந்தால் அந்தக் கெட்ட பலனை அதிகப்படுத்தலாம். ஆனால் தனுசு ராசிநாதன் குரு 8-ல் கடகத்தில் உச்சம் என்பதால், மற்ற ராசிக்காரர்களுக்கு 8-ஆம் இடத்து குரு செய்யும் கெடுபலன்களைப்போல, தனுசு ராசிக்கு கெடுதல்செய்யாதென்பது உங்களுக்கு ஆறுதலான சமாச்சாரம்தான்.
கடந்த காலத்தில் 7-ல் இருந்த குரு உங்களுடைய ஜென்ம ராசியைப் பார்த்ததால், உங்களுடைய மதிப்பு, மரியாதை, செல்வாக்கு, கௌரவம், திறமை ஆற்றல் ஆகியவற்றுக்குக் குறைவில்லை. வேலை செய்யும் இடத்திலும் உங்கள் சின்சியாரிட்டிக்கு பாராட்டும் கிடைத்தது; பதவி, அந்தஸ்துக்கும் பாதிப்பில்லை. அதே குரு 10-ஆம் இடம் தொழில் ஸ்தானமான கன்னிக்கு 6-ஆம் இடமான கும்பத்தையும் பார்த்ததால், ஊதிய உயர்வுக்கும் இடமில்லை. முன்னதாக வாங்கிய ஊக்கத் தொகையையும் (இன்சென்டிவ்) நிறுத்திவிட்டார்கள். கம்பெனி லாப கரமாக இல்லையென்றும், பின்னால் கவனிக்கலாமென்றும் கூறிவிட்டார்கள். 5-ல் கேது நிற்க, சனியும் ராகுவும் அதைப் பார்த்ததால் மனதில் ஒரு குறை. தொழில்துறையில் இழந்தவற்றை மீண்டும் பெற முடியுமா என்ற கவலை!
3-ஆம் இடத்தை குரு பார்த்த பெருமையால் உடன்பிறந்தோர் வகையில் நிலவிய வருத்தங்களும் பிரச்சினைகளும் விலகியது. அன்பும் ஆதரவும் பெருகியது! நண்பர்களின் நல்லுதவியும் கிடைத்தது. அதுமட்டுமல்ல; 10-க்கு 10-ல் (ராசிக்கு 7-ல்) நின்ற குரு 10-க்கு 2-ஆம் இடத்தைப் பார்த்த காரணத்தால், உங்கள் திறமையை உணர்ந்த சிலர் வெளியிடத்தில் வேறு கம்பெனிக்கு அழைப்புவிடுத்திருக்கலாம். என்றாலும் வெண்ணெய் திரண்டு வரும்போது பானை உடைந்த கதையாகிவிடக்கூடாது என்று, இருக்கும் வேலையிலேயே முன்னேற்றம் சீக்கிரம் வரும்போது இன்னொரு இடத்தில் போய் ஏ.பி.ஸி.டி. ஆரம்பிப்பதா என்று அரைகுறை மனதாக இருக்கும்!
இப்போது குரு ராசிக்கு 8-ல் வரும்போது, 10-ஆம் இடத்துக்கு 11-ல் உச்சம். 2-ஆம் இடம் தன ஸ்தானத்துக்குப் பார்வை. 4-ஆம் இடத்துக்குப் பார்வை. ராசிக்குப் 11-ஆம் இடத்துக்கும் பார்வை. ஏற்கெனவே அடிக்கடி எழுதுவேன். 8-ஆம் இடம் என்பது அதிர்ஷ்ட ஸ்தானம் ஆகும்! 8-ஆம் இடம் 2, 11, 9-ஆமிட சம்பந்தப்படும்போது, 8- நிரத ஸ்தானம்- அதிர்ஷ்டஸ்தானமாகும். விபத்தும் மரணமும் கண்ணுக்குத் தெரியாதது. திருஷ்டிக்குப் புலப்படாதது. அதுபோல அதிர்ஷ்டமும் யோகமும் கண்ணுக்குப் புலப்படாதது. அதாவது திருஷ்டாந்தமாகத் தெரியாது. திருஷ்டாந்தத்துக்கு எதிர்ப்பதம் அதிருஷ்டாந்தம்- அதிர்ஷ்டம்!
எனவே குரு 8-ல் இருக்கும்போது ராசிநாதன் உச்சம்பெற்று 2-ஐப் பார்ப்பதால் எதிர்பாராத தனலாபமும் யோகமும் வரும்! 10 தொழில், வாழ்க்கை ஸ்தானம். இதற்கு 11-ல் உள்ள குரு தொழில் துறையிலும் வாழ்க்கை அமைப்பிலும் வெற்றியையும் லாபத்தையும் குவிக்கும். கணவன்- மனைவி, குடும்பத்தில் அன்யோன்யம், நல்லுறவு, நெருக்கம், இணைப்பு, பிணைப்பு ஏற்படும்.
ஒருசிலர்- குறிப்பாக உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்- எதிர்பாராதவிதமாக உதவிசெய்யச் சென்றோ அல்லது சபலத்தாலோ சின்ன வீடு செட்டப்பில் மாட்டிக்கொண்டு, அதைவிட்டு வெளியேறவும் முடியாமலும் அதைக் கட்டிக்காத்துப் பராமரிக்க முடியாமலும் தவித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு குரு கடகத்தில் இருக்கும் காலம் அதற்கு ஏதாவது ஒருவகையில் நிரந்தர நிதியுதவி செய்து, தன்னைத் தேடாமல் வாழ வழிவகை செய்து, அந்தப் பெண்ணுக்கு தையல்கடை வைத்துக்கொடுத்து விடுதலையாகலாம்.
8-ஆம் இடத்து குரு தனுசு ராசிக்கு 12-ஆம் இடம், 2-ஆம் இடம், 4-ஆம் இடங்களைப் பார்க்கிறார். 12 என்பது பயணம், வெளியூர் வாசம், அயன சயன போகம், விரயம், செலவு, மாற்றம் இவற்றைக் குறிக்கும். அதனால் வீடு மாறலாம். வேலையில் அல்லது தொழில் துறையில் மாற்றம் ஏற்படலாம். ஊர் மாறலாம். வெளியூர் போகலாம். 10-ல் ராகு, 4-ல் கேது நிற்பதாலும், குருவை ராகு பார்க்க கேதுவை குருவும் (ராசிநாதன்) பார்ப்பதாலும், அதிக சம்பளம் கருதி சிலர் வெளிநாட்டு வேலைக்குப் போகலாம். அல்லது வெளிநாட்டு வர்த்தகத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளலாம். ஜாதக தசாபுக்திகள் சரியில்லையென்றால் (6, 8, 12 சம்பந்தப்பட்ட தசாபுக்திகள் நடந்தால்) வெளிநாடு போனபிறகு எதிர்மறைப் பலனாக சம்பளக்குறைவு அல்லது கௌரவமில்லாத வேலை அல்லது கஷ்டமான வேலை என்று பிடிக்காமல் போகலாம். நிர்வாகத்திடம் பாஸ்போர்ட் சிக்கிக்கொண்டதால் வேலையை விடமுடியாமலும், வேறிடம் போகமுடியாமலும், சொந்த நாடு திரும்ப முடியாமலும் இக்கட்டான நிலையில் நிம்மதியில்லாமல் தவிக்கலாம்.
ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இருந்தால் வெளிநாட்டிலும் சரி அல்லது உள்நாட்டிலும் சரி- உயர்ந்த சம்பளத்தில் மனதுக்கு நிறைவான வேலையும் நிர்வாகம் பாராட்டுமளவு திறமையை வெளிக்காட்டவும் சந்தர்ப்பம் அமையும். அதேபோல வாடகை வீட்டில் இருந்தவர்கள் சொந்த வீட்டுக்கு மாறலாம். அல்லது ஒத்திவீட்டுக்கு (போக்கியம்) மாறலாம். ஜாதக தசாபுக்தி யோகமாக அமைந்தவர்கள் மேற்படிப்பு படித்து பட்டம் பெறலாம். சிலர் பி.எச்.டி. ஆராய்ச்சிப் படிப்பு படிக்கலாம். சிலர் மாஸ்டர் டிகிரி முடிக்கலாம். மேற்படிப்பில் அரியர்ஸ் வைத்திருப்பவர்களும் இக்காலகட்டத்தில் குறைபாடத்தை முடித்து நிறைவடையலாம். சிலர் வேலை பார்த்துக்கொண்டே "பார்ட் டைம்' படித்து பாஸ் பண்ணலாம். கடந்த காலத்தில் பரீட்சைக்குப் பணம் கட்டியும் எழுதமுடியாமல் போனவர்களும் இப்போது முறையாக எழுதி வெற்றிபெறலாம். இப்படி கல்வித்தடை உள்ளவர்கள் கடலூர் அருகில் திருவந்திபுரம் சென்று ஹயக்ரீவரை வழிபடலாம்.
12-ஆம் இடத்தைப் பார்க்கும் குரு உங்களுக்குத் தவிர்க்கமுடியாத விரயத்தையும் செலவையும் ஏற்படுத்தினாலும், 2-ஆம் இடத்தையும் பார்ப்பதால் தனவரவுக்கும் வழிவகுப்பார். செலவழிக்கும் யோகம் இருக்கிறது என்றால் வரவுக்கும் வழியிருக்கிறது என்றுதானே அர்த்தம்! குறிப்பு பேரேடு புத்தகத்தில் பற்று வரவு கணக்குப் புத்தகத்தில் வரவு வைத்தால்தான் பற்று காலத்தில் செலவு எழுதமுடியும். வரவு வைக்காமல் செலவு மட்டும் எழுத முடியாதென்பது அக்கவுண்டன்சி முறை! அப்படி வரும் வரவு லாப வரவாகவும் இருக்கலாம். ஆதாய வரவாகவும் இருக்கலாம். அல்லது நமக்கு வரவேண்டிய பழையபாக்கி வரவாகவும் இருக்கலாம். இது எதுவுமே இல்லையென்றாலும் கடன் வாங்கும் வரவாகவும் இருக்கலாம். இறைக்கிற கிணறுதான் ஊறும் என்பதுபோல செலவு இருந்தால் வரவும் உண்டு.
8-ஆம் இடத்து குரு 2, 4-ஐப் பார்ப்பதால் பூமி, வீடு, வாகனம், மனை யோகம் அமையும். ஜாதக அமைப்பிலும் அதற்கான அடிப்படை யோகம் அமையவேண்டும். "பாலஜோதிட'த்தில் கேள்வி கேட்கும் அன்பர்கள் பெரும்பாலும் 100-க்கு 98 பேர் "எனக்கு சொந்த வீடு அமையுமா?' என்றுதான் கேட்கிறார்கள். தொழில் சரியில்லை; வருமானம் போதவில்லை; கடன் தலைக்குமேல் இருக்கிறது என்றெல்லாம் சொல்லிவிட்டு, சொந்த வீடு எப்போது வாங்குவேன் என்கிறார்கள். சொந்த வீடு என்ன- கடைத்தெருவில் விற்கும் விளையாட்டுப் பொருளா? பிள்ளைக்கு 100 அல்லது 200 ரூபாயில் பொம்மை வாங்கித்தருவது மாதிரியா? குறைந்தது 10 லட்சம் அல்லது 15 லட்சமாவது வேண்டாமா? அடுத்த நாள் குடும்பம் நடத்துவதற்கே வசதிவாய்ப்புக்கு கஷ்டப்படுகிறவர் களுக்கும் சொந்த வீடு கனவு மட்டும் இருக்கிறது. கடன் உடன் வாங்கி வீடுவாங்குவது பெரிதல்ல; அந்தக் கடனை முறையாக அடைத்து வீட்டைக் காப்பாற்ற வேண்டாமா?
என் மைத்துனர் ஒருவர் டெய்லர். நான்கு லட்சம் ரூபாய்க்கு அவுட்டரில் ஒரு சிறுவீடு வாங்கினார். நான்கு லட்சமும் கடன்தான். தினசரி உழைத்த வருமானத்தில் முக்கால் பங்கை கடனுக்கு அடைத்தார். இரண்டு லட்சம் தவணைக்கடன், இரண்டு லட்சம் சொசைட்டி கடன். ஒரு காலகட்டத்தில் சொசைட்டி கடன் கட்டமுடியாமல் வீடு ஏலத்துக்கு வந்தவுடன், வீட்டை ஒருவருக்கு இரண்டு லட்சம் ஒத்திக்கு வைத்து, சொசைட்டி கடனில் ஒரு பாதியும்- வெளிக்கடனில் பாதியும் அடைத்து வாடகை வீட்டுக்குப் போய்விட்டார். மூன்று பையன்கள். மூவரும் வேலைக்குப் போய் சம்பாதித்தார்கள். ஒத்தியையும் திருப்பமுடியவில்லை. இதற்கிடையே சொசைட்டி கடன் அசல், வட்டி சேர்த்து ஐந்து லட்சம் ஆகிவிட்டது. இந்த நிலையில் வீட்டுக்கடனில் ஒரு பங்கு செலுத்தினால்போதும் என்று அரசின் சலுகை அறிவிப்பு வந்தது. பையன்களிடம் சொல்லி அந்தத் தொகையை செலுத்தி, வட்டிக்கடனை தள்ளுபடி செய்து அசலைக்கட்டி பத்திரத்தை மீட்டார். இதற்கிடையில் வாஸ்து கோவிலுக்கு (செவலூருக்கு) எட்டு முறை போய் வந்தார். வீடும் காப்பாற்றப்பட்டது. ஒத்திக்கு இருந்தவரையும் பணத்தைக் கொடுத்து காலிசெய்தாகிவிட்டது. இப்போது வீட்டின் மதிப்பு 10 லட்சம் உயர்ந்துவிட்டது. அவர் பிள்ளைகள் ஜாதகத்திலும் சொந்த வீட்டு யோகம் இருந்தது.
8-ஆம் இடம் என்பது 9-ஆம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானத்துக்கு 12-ஆம் இடம். என் நண்பர் ஒருவர் அரிசி வியாபாரி. அவருக்கு உடன்பிறப்புகள் நான்கு பேர். அவர்களின் தகப்பனார் ஜகதலப்பிரதாபன். குறுக்கு வழியில் சம்பாதித்து இடங்களை வாங்கிப்போட்டார். ஆனால் எந்தப் பிள்ளையும் அவரோடு ஒட்டவில்லை. அவர் ஒரு சின்ன வீடு வைத்திருந்தார். அவர்கள்தான் அதை அனுபவித்தார்கள். தகப்பனார் திடீரென்று இறந்துவிட்டார். பிள்ளைகள் நால்வரும் அவருக்கு இறுதிக்கடன் செய்து அவர் சொத்துகளை பகிர்ந்துகொண்டார்கள். பெரியவரின் சின்ன வீட்டு அம்மாவுக்கும் ஒரு பங்குகொடுத்து செட்டில் செய்து வெளியேற்றிவிட்டார்கள். இப்படி தந்தை வகையிலும் சிலருக்கு நன்மைகள் உண்டாகும். இதேபோல தாயார் வகையிலும் ஒருசிலருக்கு அனுகூலமும் ஆதாயமும் உண்டாகும்.
ஒரு அம்மாளுக்கு பல வருடங்கள் அரசு பென்ஷன் வந்தது. அதையெல்லாம் தன் ஒரே மகன் பேரில் டெபாசிட் செய்துவந்தார். சாப்பாடு மகன் ஆதரவில் நடந்தது. அந்த அம்மாள் காலத்துக்குப் பிறகு அந்த டெபாசிட் பணம் மொத்தமாக மகனுக்கு பல லட்சம் வந்தது.
13-6-2014 முதல் 29-6-2014 வரை தனது சாரத்தில் (புனர்பூசம்) குரு சஞ்சாரம்
குரு தன் சொந்த சாரத்தில் சஞ்சாரம்; உச்சம்; வர்க்கோத்தமம். ராசிநாதன் என்பதால் உங்கள் செல்வாக்கு, கடமை, காரியங்கள் எல்லாம் கச்சிதமாக நிறைவேறும்! எதிலும் தொலைநோக்கு சிந்தனையோடு திட்டமிட்டும் செயல்பட்டும் வெற்றியடைவீர்கள். இனி பொருளாதாரத்தில் "மைனஸ்' என்பதில்லாமல் எல்லாமே "ப்ளஸ்' பாயிண்டாக அமையும். உத்தியோக முன்னேற்றம், தொழில் உயர்வு உண்டாகும்.

பரிகாரம்: தஞ்சை மாவட்டத்தில் திருலோக்கி என்ற தலத்துக்குச் சென்று வழிபட வேண்டும். ஒருமுறை குரு (பிரகஸ்பதி) ஒரு சாபத்தால் பேசும் திறன் இழந்தார். நிவர்த்தி தேடி திருவிடைமருதூரில் மகாலிங் கேஸ்வரரை வழிபட, சுவாமி உத்தரவுப்படி அவ்வூருக்கு ஈசான்யத்தில் திருலோக்கியில் சரக்கொன்றை மரத்தின்கீழ் தவமிருந்தார். மார்கழி திருவாதிரை நாளில் சுந்தரேஸ்வரர் அகிலாண்டேஸ்வரியை ஆலிங்கனம் செய்தவாறு குருவுக்கு காட்சி கொடுத்தார். குருவுக்கு சாபவிமோசனம் கிடைத்தது. ரிஷபாரூடருக்கு எதிரில் அஞ்சலி செய்தவாறு குருவின் சிலையைக் காணலாம். குரு, ரதிதேவி, பிருகுமுனிவர், சுகேது, தருமன், கருவூர்த்தேவர் வழிபட்ட தலம். சுகேது இங்கு வழிபட்டு, நீங்காத தலைவலி நீங்கப்பெற்றான்.
29-6-2014 முதல் 28-8-2014 வரை பூச நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்
இக்காலகட்டத்தில் குரு- சனியின் பூச நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதோடு, சனியின் பார்வையையும் பெறுவார். சனி தனுசு ராசிக்கு 2, 3-க்குடையவர் 11-ல் உச்சம்! இக்காலம் குடும்பத்தில் அமைதியும் ஆனந்தமும் உண்டாகும். ஒருவருக்கொருவர் அனுசரணையும் ஆதரவுமாக இருக்கலாம். உத்தியோகத்தில் புதுப்பொலிவு ஏற்படும். வீட்டிலும் வெளியிலும் உங்கள் கை ஓங்கும். குருப்பெயர்ச்சி வரவேற்கத்தக்க பெயர்ச்சியே.

பரிகாரம்: தென்காசி- கடையநல்லூர்- செங்கோட்டை பாதையில் இலத்தூர் என்ற கிராமம் உள்ளது. அகத்தியர் வழிபட்ட மதுநாதர் சிவன் கோவிலில், அபயஹஸ்த நிலையில் சனீஸ்வரருக்கு தனிச்சந்நிதி உண்டு. தெற்கு நோக்கியுள்ளார். 5,000 வருடப் பழமைவாய்ந்த கோவில். அங்கு சென்று வழிபடலாம். தொடர்புக்கு: அலைபேசி: 94870 58606.

28-8-2014 முதல் 3-12-2014 வரை முதல் கட்டமாகவும்;
22-12-2014 முதல் 5-7-2015 வரை இரண்டாம் கட்டமாகவும் ஆயில்ய நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்

மேற்கண்ட காலகட்டத்தில் இரண்டுமுறை குரு- புதன் சாரத்தில் (ஆயில்ய நட்சத்திரத்தில்) சஞ்சாரம் செய்வார். புதன் 7, 10-க்குடையவர். எனவே திருமணத்தடை விலகும். தொழில் சிக்கல் தீரும். இனிய செய்தி இல்லம் தேடிவரும். மனைவிவர்க்கத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நாவண்மையால் நன்மைகள் உண்டாகும்.

பரிகாரம்: திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் (18  கிலோமீட்டர்) கருங்குளம் என்னும் பகுதியில் ஸ்ரீவேங்கடாசலபதி திருக்கோவில் உள்ளது. வகுளாத்திரிமலையில் சுபகண்டன் என்ற மன்னன் கட்டிய கோவில். அவனது கண்டமாலை நோய் நிவர்த்தியானது. 200 ஆண்டுகளுக்கு முந்தைய கோவில். உறங்காப் புளிய மரமும், ஊறாத கிணறும் உள்ளன. இதயநோயும் தீரும். கழுத்து நோயும் தீரும். சென்று வழிபடலாம்.
குருவின் வக்ரகதி பலன்
17-12-2014 முதல் 22-12-2014 வரை குரு கேது சாரத்தில் (மகம்) சிம்ம ராசியிலும், பிறகு 22-12-2014 முதல் 26-3-2015 வரை ஆயில்ய சாரத்திலும் வக்ரமாக இருப்பார். (3-12-2014 முதல் 22-12-2014 வரை குரு கேது சாரம்). பொதுவாக குருவின் வக்ரகதி உங்களுக்கு நல்லதாகவே அமையும். ஒரு வகையில் சிக்கனமாக இருந்தாலும், இன்னொரு வகையில் சுபச்செலவுகள் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் சிறு தடைகளைச் சந்தித்து பிறகு நிறைவேற்றலாம்.

பரிகாரம்: தேனி மாவட்டம், பெரியகுளம் வராக நதிக்கரையில் ராஜேந்திர சோழீஸ்வரர்- தர்மசம்வர்த்தனி என்ற அறம்வளர்த்த நாயகி சமேதரராக சந்நிதி கொண்டிருக்கிறார். இங்கு சிவனைக்காட்டிலும் முருகன்தான் பிரசித்தம். இங்குள்ள முருகன் பாலசுப்பிரமணியன் என்று அழைக்கப்படுகிறார். ராஜேந்திரன் என்ற சோழ மன்னன் வேட்டையாடும்போது, எந்த மிருகமும் அகப்படாமல், ஒரு காட்டுப்பன்றி குரல் கேட்டு அத்திசை நோக்கி அம்பு எய்தான். அம்பு பட்டு குட்டிகளுக்குப் பாலூட்டிய தாய்ப் பன்றி இறந்துவிடவே, பசியால் கதறிய குட்டிகளைக் கண்டு பரிதாபப்பட்ட மன்னன் இறைவனை வேண்டினான். அப்போது முருகப்பெருமான் தோன்றி பன்றிக் குட்டிகளுக்குப் பாலூட்டிப் பசியைப் போக்கியதால், மன்னன் அங்கே கோவில் எழுப்பினான். அங்குசென்று வழிபடலாம்.
மூல நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த குருப்பெயர்ச்சி இடப்பெயர்ச்சி, தொழில் மாற்றம், அதிக சம்பளம், குடியிருப்பு மாற்றம் போன்ற யோகங்களைத் தரும் பெயர்ச்சியாக அமையும். சிலருக்கு ஊர் மாற்றமும் அமையும். சிலர் வெளிநாட்டுக்கும் போகலாம். 8-ல் உள்ள குரு அதிர்ஷ்டத்தைத் தரும்.

பரிகாரம்: திருக்கடையூர் அருகில் அனந்தமங்கலம் என்ற ஊரில் பெருமாள் கோவிலில் திரிநேத்ர தசபுஜ ஆஞ்சனேயர் சந்நிதி இருக்கிறது. ஒரு அசுரனை சம்ஹாரம் செய்ய மும்மூர்த்திகளுடன் ஆஞ்சனேயருக்கு தமது பலத்தையும் ஆயுதங்களையும் வழங்கியதாக ஐதீகம். அங்கு சென்று வழிபடலாம்.
பூராட நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த குருப்பெயர்ச்சி நீண்ட காலமாக கனவு கண்டு வந்த திட்டங்களை நிறைவேற்றும். மலேசியா, சிங்கப்பூர் போன்ற சுற்றுலாத் திட்டம்; காசி போன்ற புண்ணிய ஸ்தல யாத்திரை ஆகிய யோகங்களைச் செய்யும். குடும்பத்தில் விசேஷ நிகழ்ச்சிகள் நடக்கும்.

பரிகாரம்: சென்னை- திருவள்ளூரிலிருந்து திருத்தணி போகும் வழியில், ஆற்காடு குப்பம் என்ற பகுதியில் (நான்குவழிச் சாலையோரம்) ஜெயராம் சுவாமிகள், அனுமந்த சுவாமிகள் ஜீவசமாதிகள் உள்ளன. அற்புத சித்துக்கள் செய்தருளியவர். அங்குசென்று வழிபடலாம். தொடர்புக்கு: அலைபேசி: 96266 48022.
உத்திராட நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த குருப்பெயர்ச்சி வாழ்க்கையில் மறுமலர்ச்சியையும்- புதிய வேகத்தையும் தரும். சுபமங்களச் செலவுகளையும் புதிய முயற்சிகளையும் உருவாக்கும். சிலருக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும்.

பரிகாரம்: மன்னார்குடி- நீடாமங்கலம் சாலையில், ராஜாப் பையன் சாவடி ஸ்டாப்பில் இறங்கி கிழக்கே ஒரு கிலோமீட்டர் நடந்தால், வடகரை வயல் கிராமத்தை அடையலாம். அங்கு நாகமாரியம்மன் கோவிலுக்கு வடக்குப் பக்கத்தில் முத்தையா சித்தரின் சமாதி இருக்கிறது. பௌர்ணமியில் சிறப்பு வழிபாடு, மாசி மாதம் உத்திராடத்தில் குருபூஜை நடக்கும். அங்குசென்று வழிபடலாம்.

மகரம்: (உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய) 13.06.2014 வெள்ளிக்கிழமை முதல்

மகர ராசி அன்பர்களே!
இதுவரை மகர ராசிக்கு 6-ல் இருந்த குரு இப்போது 7-ஆம் இடம் கடகத்துக்கு மாறுகிறார்; அங்கு உச்சமாக இருந்து உங்கள் ராசியை நேரடியாகப் பார்க்கிறார். குருவுக்கு யோகமான இடங்கள் 2, 5, 7, 9, 11-ஆம் இடங்கள்தான். இந்தக் குருப்பெயர்ச்சியின் மூலமாக உன்னத ராஜயோகத்தையும் நன்மையையும் அடையப்போகும் ராசிக்காரர்கள் ஐவர். அதில் நீங்களும் ஒருவர்.

குருப்பெயர்ச்சியால் 100-க்கு 100 யோகம் அனுபவிக்கப்போகிற மிதுனம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்களில் நீங்களும் அடக்கம்.
கடந்த காலத்தில் 6-ல் இருந்த குரு உங்களில் பலரை கடன்காரர் ஆக்கியது. காரணகாரியம் இல்லாமலேயே பலரின் வெறுப்புக்கும் விரோதத்துக்கும் ஆளாக்கியது. தேவையில்லாமல் வைத்தியச் செலவை உண்டாக்கியது.
ஒருவரிடம் சரக்கு வாங்கி விற்று, அந்தப் பணத்தில் வேறொருவரிடம் பட்ட கடனை அடைத்து- அவரிடம் வாங்கிய சரக்கை காசாக்கி முதல் நபருக்குக் கொடுத்துவிட்டு, மூன்றாவது புது நபரிடம் சரக்காகவோ ரொக்கமாகவோ வாங்கி இரண்டாவது நபருக்குக் கொடுத்து- இப்படியே கடந்த பலவருடங்களாக "ரொட்டேஷனிலேயே' காலத்தை ஓட்டி- நடுவில் உங்கள் தேவைகளையும் நிறைவேற்றிக்கொண்டீர்கள்.
இப்படி இங்கே வாங்கி அங்கே கொடுத்து, அங்கே வாங்கி இங்கே கொடுத்து நடந்த வரவு செலவில், குடும்பத்து சுபமங்கள நிகழ்ச்சிகளையும் நடத்திமுடித்து கடன் சுமையைத் தலைக்குமேல் மலைச்சுமையாக சுமந்தீர்கள். சமயத்தில் இது என்ன பிழைப்பு என்ற வேதனைக்கும் விரக்திக்கும் ஆளானீர்கள். இன்னும் சிலர், சொந்தக்காரர்கள் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்வோம் என்று, சும்மா இருந்த உங்களைத் தூண்டிவிட்டு கொஞ்சம் தொகையைக் கொண்டுவந்து கொடுக்க, அவர்களை நம்பி சில இடத்தை முடித்துவிட்டு மீதித்தொகையை அவர்கள் தராமல் தாமதப்படுத்த- உங்கள் நாணயத்தைக் காப்பாற்ற வெளியில் கடன்பட்டு பேசிமுடித்த இடத்துக்கு பட்டுவாடா செய்து, அதற்கு வட்டியும் நீங்களே கட்டுகிற நிலையும் ஏற்பட்டது.
இந்த குருப்பெயர்ச்சி இதற்கெல்லாம் மாற்று மருந்தாகி உங்களுக்கு சத்து டானிக் கொடுத்து உற்சாகமூட்டப்போகிறது.
7-ஆம் இடம் மனைவி, திருமணம், உபதொழில் ஆகியவற்றைக் குறிக்குமிடம். மகர ராசிக்கு 12-க்கு உடையவர் 7-ல் அமர்ந்து உச்சம் பெற்று ஜென்ம ராசியைப் பார்ப்பதால், 35 வயதாகியும் திருமணமாகாமல் காலம் கடந்த ஆண்கள் அல்லது பெண்களுக்கு எந்தவிதமான பரிகாரமும் தேவையில்லாமல் திருமணம் கூடிவரும். ஜாதகரீதியாகவும் செவ்வாய், சனி, ராகு- கேது தோஷமிருந்தால் ஆண்கள் கந்தர்வ ராஜயோகமும், பெண்கள் பார்வதி சுயம்வரகலா ஹோமமும் செய்துகொண்டால் திருமணத்தடையும் விலகும்; நல்ல வாழ்க்கைத் துணையும் அமையும்.
அதேபோல 40- 45 வயதாகியும் நிலையான தொழிலோ, நிரந்தரமான வருமானமோ இல்லாமல் அல்லல்பட்டவர்களுக்கும் இந்த குருப் பெயர்ச்சிக்கு பிறகு நிலையான தொழிலுக்கும் நிரந்தர வருமானத்துக்கும் வழிவகை செய்யும்.
திருமணமாகி 15, 16 ஆண்டுகளாகியும் வாரிசு இல்லாதவர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி வம்சம் தழைக்க வாரிசை வழங்கும். ஜாதகரீதியாக புத்திரதோஷம் தெரிந்தால் வாஞ்சாகல்பகணபதி புத்திரப்ராப்தி ஹோமம், சந்தானபரமேசுவர ஹோமம், சந்தான கோபால கிருஷ்ண ஹோமம் செய்து, தம்பதிகள் இருவரும் கலச அபிஷேகம் செய்துகொள்ள வேண்டும். மேற்படி ஹோமம் காரைக்குடி சோமு குருக்கள், பள்ளத்தூர் சிவமணிக்குருக்கள், தேவிப்பட்டினம் மொட்டையர் மகன் சீனிவாச சாஸ்திரி, கோவை சேரன் மாநகர் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் அர்ச்சகர் சுகேஷ் இவர்களிடம் செய்துகொள்ளலாம். அல்லது உங்கள் பகுதியில் தெரிந்தவர்களிடம் செய்துகொள்ளலாம்.
கடக குரு 5-ஆம் பார்வையாக மகரத்துக்கு 11-ஆம் இடம் விருச்சிகத்தையும், 7-ஆம் பார்வையாக ஜென்ம ராசியான மகரத்தையும், 9-ஆம் பார்வையாக 3-ஆம் இடம் மீன ராசியையும் பார்க்கிறார்.
11-ஆம் இடம் என்பது லாபஸ்தானம், வெற்றிஸ்தானம், ஜெயஸ்தானம், மூத்த சகோதர ஸ்தானம், உபயகளஸ்திர ஸ்தானம். (மறுமணம்). இதற்கு குருபார்வை அனுகூலப் பார்வையாக அமைவதால் தொழிலதிபர்களுக்கு எதிர்பாராத லாபம் உண்டாகும். வேலையில் இருப்பவர்களுக்கு பிரமோஷன், ஊதிய உயர்வு கிடைக்கும். ஊக்கத்தொகையும் (இன்சென்டிவ்) கிடைக்கும். யோகமான தசாபுக்தி நடந்தால் விசேஷ வெகுமதி, போனஸ் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு தன லாபம் உண்டாகும்.

சுக்கிர தசாபுக்தி நடந்து, ஜாதகத்தில் களஸ்திரஸ்தானம் பலக்குறைவாக இருந்தால் சிலருக்கு மறுமணம் நடக்கும். அதாவது 7-ஆம் இடம் மனைவி அல்லது கணவன் ஸ்தானம். அந்த இடத்துக்கு குரு 6, 9-க்குடையவர். அத்துடன் 7-ஆம் இடத்துக்கு (கடகத்துக்கு) 7, 8-க்குடைய சனி 7-க்கு 4-ல் உச்சம்பெற்று 7-ஆம் இடத்தைப் பார்ப்பதாலும், கன்னி ராகுவும் 7-ஆம் இடத்தைப் பார்ப்பதாலும் மறுமண வாய்ப்புண்டு. அது ஆணுக்கும் பொருந்தும்; பெண்ணுக்கும் பொருந்தும். சிலர் சின்னவீடு செட்டப்பில் மாட்டிக்கொள்ளலாம். இதெல்லாம் விட்டகுறை தொட்டகுறை சமாச்சாரம். அதற்கெல்லாம் யோகம் வேண்டும். வெறும் ஆசையும் நினைப்பும் இருப்பவர்களுக்கெல்லாம் அது நிறைவேறாது.
செவ்வாய் தசாபுக்தி அல்லது ராகு தசாபுக்தி நடந்தால் மூத்த சகோதர- சகோதரி வகையில் பிரச்சினைகளையும் பகை, வருத்தங்களையும் சந்திக்கக்கூடும். அல்லது அவர்கள் வகையில் ஏமாற்றங்களையும் இழப்புகளையும் நஷ்டங்களையும் சந்திக்க நேரிடும்.
குரு தசாபுக்தி அல்லது சந்திர தசாபுக்தி நடந்தால் சகோதர வழியில் சகாயமும், உதவி, ஒத்தாசை, அனுகூலமும் உண்டாகும். மற்றவர்களுக்கு பிரச்சினையில்லை. அப்படி ஏதாவது பிரச்சினை உடையவர்கள் குலசாமி கோவிலுக்கும், பழனி அல்லது குருவாயூர் அல்லது உடுப்பி கிருஷ்ணர் கோவிலுக்கும் போய் பிரார்த்தனை செய்தால், பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.
குரு ஜென்ம ராசியைப் பார்ப்பதால் செல்வாக்கு, அந்தஸ்து உயரும். கௌரவம், மதிப்பு, மரியாதை உயரும். பொதுநலம், அரசியல் கட்சி ஈடுபாடு உடையவர்களுக்கு பட்டம், பதவிகள் தேடிவரும். சிலர் அரசியலில் கட்சிவிட்டு கட்சி மாறுவதன்மூலம் தன் எதிர்காலத்தை அதிர்ஷ்டமாக்கிக் கொள்ளலாம்.
இராவணன் சீதையை சிறையெடுத்தது அதர்மமென்று விபீஷணன் அண்ணனைவிட்டு விலகி, பகைவனாகிய ராமனோடு போய்ச்சேர்ந்தான். இராவணனைச் சேர்ந்தவர்கள் விபீஷணன் பங்காளித் துரோகி என்றார்கள். ஆனால், ராமனோ விபீஷணனுக்கு மகுடம் சூட்டி, விபீஷண ஆழ்வார் பட்டம் சூட்டினார். ஆக, கட்சி மாறுவதென்பது ராமாயண காலத்திலேயே இருக்கிறது. ஒரு கட்சியில் உள்ளவர்களைத் தவறாக விமர்சித்துப் பேசியவர்களே, கட்சி மாறி அவர்களிடமே சேர்ந்து பொன்னாடை போர்த்தி பாராட்டுவதும் இன்றைய அரசியல் நாகரிகமாகிவிட்டது.
3-ஆம் இடம் குரு ஸ்தானம்; சகோதர, சகாய, தைரிய, வீரிய, போக, மோக ஸ்தானம். அந்த வீட்டுக்குடைய குரு- அந்த வீட்டுக்கு 5-ல் திரிகோணமாகவும், ராசிக்கு 7-ல் கேந்திரமாகவும் இருப்பதோடு, உச்சமாக இருக்கிறார். உச்சகுரு மேற்படி இரண்டு இடங்களையும் ஜென்ம ராசியையும், 3-ஆம் இடத்தையும் பார்க்கிறார். அந்த குருவை துலாத்தில் உச்சம்பெற்ற சனி (ராசிநாதன்) பார்க்கிறார். சகோதர வகையிலும் நண்பர்கள் வகையிலும் இதுவரை இருந்த சச்சரவுகளும் பிரச்சினைகளும் விலகும். பங்காளிப் பகையும் விவகாரமும் தீரும். அந்நியர்களின் விரோதமும், அக்கம்பக்கத்தாரின் அங்கலாய்ப்புகளும் மாறும். வருங்காலம், எதிர்காலம் பற்றிய உங்கள் கனவுகளும் கற்பனைகளும் திட்டங்களும் நிச்சயமாய் நிறைவேறும் என்ற நம்பிக்கையும் ஆர்வமும் ஏற்பட்டு, உற்சாகமாகச் செயல்படுவீர்கள். உங்கள் உள்ளத்திலும் வைராக்கியமும் தைரியமும் உருவாகும். "உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா- கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா' என்று "கர்ணன்' திரைப்படத்தில் கிருஷ்ணர் பாடிய மாதிரி, எதையும் தாங்கும் இதயமாகமாறி செயல்படலாம்.
நீங்கள் வாழ்க்கையின் உச்சக்கட்டத்துக்கு வந்தால்- செல்வாக்கான ஸ்தானத்துக்கு உயர்ந்தால் தங்களுக்கு நல்லதென்ற சுயநலத்தோடு உங்களைச் சார்ந்தவர்களும் வேண்டியவர்களும் உங்களுக்கு சரீர உதவியும் பண உதவியும் செய்யலாம். ஒருவரைச் சார்ந்துதான் இன்னொருவருக்கு ஆதாயம்! தொன்னைக்கு நெய் ஆதாரம்! நெய்க்கு தொன்னை ஆதாரம்! எதிரிக்கு எதிரி தனக்கு நண்பன் என்பது ஒரு பாலிஸி! நல்ல நேரமிருந்தால் அப்படிப்பட்ட புது நட்பும் புது உறவும் தேடிவரும்.
11-ஆம் இடத்துக்கு 11-ல் ராகு (ஜூன்- 21) பெயர்ச்சி. அவர் 7-ஆம் இடத்தைப் பார்க்கக்கூடும். அக்காலம் மறுமணம் அல்லது விதவைத் திருமணம் நடக்கலாம். அவர்கள் மூலமாகவே உங்களுக்கு லாபமும் ஆதாயமும் உண்டாகலாம். 7-ஆம் இடத்தை சனி பார்ப்பதால் (2014 டிசம்பர் வரை), உச்சனை உச்சன் பார்ப்பதால் (குரு உச்சம், சனி உச்சம்) மனைவியின் டைரியில் உங்கள்மேல் கரும்புள்ளி (பிளாக் டாட்) ஏற்படவும் இடமுண்டு. அந்தப் புள்ளியை அகற்றுவதும் மாற்றுவதும் அல்லது அப்படியே விட்டுவைப்பதும் உங்கள் நடவடிக்கையைப் பொறுத்த விஷயம்! ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் கலப்புத் திருமணம் அல்லது காதல் திருமணம் நடக்கவும் இடமுண்டு. அப்படி எதுவும் விரும்பத்தகாத திருமணமாகத் தெரிந்தால் அதை மாற்றியமைக்க காமோகர்ஷண ஹோமம் செய்யவேண்டும். சம்பந்தப்பட்டவர்களுக்கு கலச அபிஷேகம் செய்யவேண்டும்.
இதில் ஒரு சிக்கல் உண்டு. சம்பந்தப்பட்ட ஆணோ, பெண்ணோ உண்மையான காதலில் வைராக்கியமாக இருந்தால், ஹோமத்தால் அவர்களைப் பிரித்து வைக்க முடியாது. இருவரும் ஆன்மார்த்தமான காதல் வயப்படாமல், சபலக் காதல் அல்லது கவர்ச்சிக் காதலாக இருந்தால்தான் ஹோமத்துக்கு பவர்- பலன் உண்டு.
எனக்குத் தெரிந்த ஒரு அய்யர் மெஸ் நடத்திவந்தார். 60 வயதிருக்கும். மனைவியில்லை. அவரிடம் ஒரு 50 வயது அம்மாள் வேலை பார்த்துவந்தார். அந்த அம்மாளுக்கும் கணவரில்லை. ஒரே மகன் அவன் ஊர்சுற்றி. அந்த அம்மாள் தன் மகளின் வயிற்று ஜீவனத்துக்காக மெஸ்ஸில் வேலை பார்த்தார். எப்படியோ அந்த அம்மாளுக்கும் அய்யருக்கும் தொடர்பு ஏற்பட்டுவிட்டது. ஆரம்பத்தில் அதை அவர்கள் பெரிதாக நினைக்கவில்லை. நாளாவட்டத்தில் அய்யரிடம் அடிக்கடி பணம்கேட்டு வாங்கி மகளிடம் சேமிக்கக்கொடுத்தார். அய்யருக்கு "ஏண்டா இந்த சனியனிடம் மாட்டிக்கொண்டோம். இதைவிட்டு வெளியேற என்ன வழி?' என்று என்னிடம் வந்தார். நான் என் குருநாதரிடம் அழைத்துப்போய் காமோகர்ஷண ஹோமம் செய்து அபிஷேகம் செய்துவைத்தேன். ஆறு மாதத்துக்குள் மகளுக்குத் திருமணமாகி, மகளுடன் அந்த அம்மாள் வேறு ஊருக்குப் போய்விட்டார். அய்யரும் தொட்ட பாவத்துக்கு மகள் கல்யாணச் செலவுக்கு கணிசமான தொகையைக் கொடுத்தனுப்பி பெரிய கும்பிடு போட்டார்.
13-6-2014 முதல் 29-6-2014 வரை தனது சாரத்தில் (புனர்பூசம்) குரு சஞ்சாரம்
குரு தன் சொந்த நட்சத்திரமான புனர்பூசம் 4-ல் சஞ்சாரம். ராசியிலும் நவாம்சத்திலும் வர்க்கோத்தமம் என்பதோடு உச்சம்! எனவே இக்காலம் உங்களுக்கு யோகமான காலம்தான்! திருமணமாகாதவர்களுக்குத் திருமண யோகமும், குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர யோகமும் உண்டாகும். திருமணமானவர்களுக்கும் பிள்ளைகள் இருப்போருக்கும் அவர்கள் பேரில் பேங்க் டெபாசிட் (த.உ அல்லது எ.உ), இன்சூரன்ஸ் பாலிஸி போன்ற சுபமுதலீடு செய்யலாம். (குரு 12-க்குடையவர்). அல்லது அவர்கள் பேரில் இடம், தொழில், மனை, வாகனம் இவற்றில் சுபமுதலீடு செய்யலாம். பிள்ளைகளின் மேற்படிப்பு அல்லது வேலைக்காகவும் செலவு பண்ணலாம்.

பரிகாரம்: கும்பகோணம்- மயிலாடுதுறை பாதை- திருவாவடுதுறைக்கு வடகிழக்கே (ஒரு கி.மீ.) திருவாலங்காடு உள்ளது. வடவாரண்யேசுவரர்- வண்டார்குழலி சமேதரராக அருள்பாலிக்கிறார். தேவேந்திரன் விருத்தாசுரனைக் கொன்ற பாவம் நீங்க இங்குவந்து வழிபட்டு, ஜெயந்தனைப் பெற்றான். பிரம்மா இத்தலத்தில் தீர்த்தமாடி 10 புதல்வர்களைப் பெற்றார். பிராகாரத்தில் புத்திரகாமேசுவரர் சந்நிதியும், 63 நாயன்மார்கள் சந்நிதியும், யமன், சித்திரகுப்தன் சந்நிதியும் உண்டு. சுந்தரமூர்த்தி நாயனார் பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியாரோடு அருளுகிறார்.
29-6-2014 முதல் 28-8-2014 வரை பூச நட்சத்திரத்தில்     குரு சஞ்சாரம்
ராசிநாதனான சனியின் சாரத்தில் (பூசம்) குரு பகவான் சஞ்சரிப்பார். மேலும் கடகத்தில் உள்ள குருவை துலாத்திலுள்ள சனி பார்க்கிறார். (2014 டிசம்பர்வரை). பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் பந்த பாசங்களுக்கு குறைவிராது. உடல்நலத்திலும் பாதிப்பிருக்காது. விருந்தினர்கள் வருகையால் குடும்பச்செலவுகள் அதிகமானாலும், கலகலப்பிருக்கும். மனதுக்கு ஆறுதலாக இருக்கும். அந்த மகிழ்ச்சியால் வயதானவர்களும் இளைஞர்களாக- வயது குறைந்தவர்களாக மாறி உற்சாகத்தோடு செயல்படுவார்கள்.

பரிகாரம்: திருவள்ளூர்- திருத்தணி பாதையில் ஆற்காடு குப்பம் அருகில் நாபளூர்  என்ற ஊரில் அகத்தியர் வழிபட்ட சிவாலயம் உண்டு. (4-வழி பைபாஸ் சாலையிலிருந்து 1 கி.மீ.) அங்கு சனிபகவானின் குருநாதர் பைரவருக்கு தனிச்சந்நிதி உண்டு. ஒவ்வொரு புரட்டாசி மாதமும் இங்கு 64 குண்டம் அமைத்து, 64 பைரவருக்கு ஹோமம் செய்து சிறப்பு பூஜை நடக்கும். தொடர்புக்கு: சிவாச்சாரியார் சுவாமிநாத குருக்கள்  அலைபேசி : 96551 11424.
28-8-2014 முதல் 3-12-2014 வரை முதல் கட்டமாகவும்; 22-12-2014 முதல் 5-7-2015 வரை இரண்டாம் கட்டமாகவும் ஆயில்ய நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்
இக்காலம் முதலில் ஆயில்யத்தில் பயணித்து, 3-12-2014 சிம்ம ராசிக்கு (மக நட்சத்திரத்தில்) மாறி, அங்கு 17-12-2014-ல் வக்ரமடைந்து மீண்டும் 22-12-2014 கடகத்துக்கு (ஆயில்யத்தில்) மாறி 5-7-2015 வரை கடகத்தில் இருப்பார். இக்காலம் புதன் 6, 9-க்குடையவர் என்பதால் முதல் கட்டத்தில் கடன், போட்டி, பொறாமை, வைத்தியச் செலவு போன்ற பலன்களையும்; இரண்டாவது கட்டத்தில் பாக்கியாதிபதியம், யோகம், செல்வாக்கு, தெய்வ கைங்கர்யம், பூஜை போன்ற பலன்களையும் சந்திக்கலாம். சிலருக்கு ஜோதிடம், வைத்தியத்தில் ஆர்வம் ஏற்படலாம்.

பரிகாரம்: திருநெல்வேலி- தூத்துக்குடி சாலையில் (16 கி.மீ.) முறப்பநாடு உள்ளது. இங்குள்ள கைலாசநாதரை வழிபடவும். இங்கு தாமிரபரணி கங்கையைப்போல வடக்கு நோக்கிப் பாய்வதால், தட்சிண கங்கை எனப்படும். நவ கைலாயத்தில் இது 5-ஆவது தலம். இங்குள்ள நந்திதேவருக்கு குதிரைமுகம். ஸ்ரீராமபிரான் இங்குவந்து வழிபட்ட பிறகே, இராவணன் சீதையை சிறைவைத்திருந்த இடம் தெரிந்ததாம். ஆற்றின் மறுகரையில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட திருமாலின் தசாவதாரக் காட்சியை தரிசிக்கலாம்.
குருவின் வக்ரகதி பலன்
17-12-2014 முதல் 22-12-2014 வரை மக நட்சத்திரத்திலும், 22-12-2014 முதல் 26-3-2015 வரை ஆயில்ய நட்சத்திரத்திலும் குரு வக்ரமாக இருப்பார். வக்ரத்தில் உக்ர பலம். இக்காலம் அதிகமான நன்மைகளை எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெற்றோரால் பிள்ளைகளுக்கும், பிள்ளைகளால் பெற்றோருக்கும் நல்லது நடக்கும். இயந்திர சம்பந்தமான அல்லது கட்டட சம்பந்தமான அல்லது கம்ப்யூட்டர் சம்பந்தமான பணியாளர்களுக்கு தனித்தன்மையும் அனுகூலமான பலனும் உண்டாகும். பொருளாதாரம் சீராக இருக்கும்.

பரிகாரம்: கும்பகோணத்திலிருந்து (10 கி.மீ.) திருப்புறம்பியம் கோவிலிலுள்ள விநாயகர், பிரளயவெள்ளத்தை ஒரு கிணற்றுக்குள் அடக்கி மக்களைக் காத்தார். எனவே பிரளயம் காத்த பிள்ளையார் என்று பெயர். சங்கு, நத்தைக்கூடு, கிளிஞ்சல், கடல்நுரை ஆகியவற்றால் வருணன் இவரை உருவாக்கியதாகச் சொல்லுவர். விநாயகசதுர்த்தியன்று இரவு முழுவதும் இந்தப் பிள்ளையாருக்கு தேனாபிஷேகம் நடக்கும். அந்தத் தேன் முழுவதும் இவரது திருமேனிக்குள் உறிஞ்சப்படுமாம்.
உத்திராட நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த குருப்பெயர்ச்சி வாழ்க்கையில் மறுமலர்ச்சியையும் புதிய வேகத்தையும் தரும். சுபமங்களச் செலவுகளையும் புதிய முயற்சிகளையும் உருவாக்கும். சிலருக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும்.

பரிகாரம்: மன்னார்குடி- நீடாமங்கலம் சாலையில் ராஜாப்பையன் சாவடி பஸ்ஸ்டாப்பில் இறங்கி கிழக்கே ஒரு  கி.மீ. நடந்தால், வடகரை வயல் கிராமத்தை அடையலாம். அங்கு, நாகமாரியம்மன் கோவிலுக்கு வடக்குப் பக்கத்தில் முத்தையா சித்தரின் சமாதி இருக்கிறது. பௌர்ணமியில் சிறப்பு வழிபாடு, மாசி மாதம் உத்திராடத்தில் குருபூஜை நடக்கும். அங்கு சென்று வழிபடவும்.
திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த குருப்பெயர்ச்சியில் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், தொழில் துறையில் முன்னேற்றமும், பொருளாதாரத்தில் சேமிப்பும், தாராளமான பணப்புழக்கமும், தடையில்லாத வரவுசெலவும் நடக்கும்.

பரிகாரம்: திண்டுக்கல் மலைக்கோட்டை பின்புறம் (மேற்குப் பகுதி) முத்தழகுப்பட்டிக்குச் செல்லும் வழியில் ஓதசுவாமி- சுப்பையா சுவாமி ஜீவசமாதி உள்ளது. குகையில் வருடக்கணக்கில் தவமிருந்து சித்திகள் கைவரப்பெற்றவர். 10-10-1906, புரட்டாசி திருவோணத்தில் சமாதி! ரமணமகரிஷியை ஆன்மிகத்துக்கும், சுப்பிரமணிய சிவாவை அரசியலுக்கும் அனுப்பிய மகான். அங்கு சென்று வழிபடலாம். தொடர்புக்கு: அலைபேசி: 85260 41396.
அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த குருப்பெயர்ச்சி குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் துணையாக இருக்கும். அரசு ஒப்பந்தக்காரர்களுக்கும் ரியல் எஸ்டேட், கட்டடக்கலைஞர்களுக்கும் அற்புதப் பெயர்ச்சியாக அமையும். ஆனந்த வெள்ளம் பெருக்கெடுத்தோடும்.

பரிகாரம்: குளித்தலையில், கடம்பவனேஸ்வரர் கோவிலுக்கு வடபுறம், ஆற்றங்கரையில் திருப்பதி சுவாமி ஜீவசமாதி கோவில் இருக்கிறது. 72 ஆண்டுகளாக தினசரி பூஜை நடக்கிறது. ஐப்பசி மாத அவிட்ட நட்சத்திரத்தில் குருபூஜை. வேதாந்த நூல்களை போதித்தவர். பிரம்மசாரியாகவே வாழ்ந்தவர். அங்குச் சென்று வழிபடலாம்.

கும்பம்: (அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய) 13.06.2014 வெள்ளிக்கிழமை முதல்
கும்ப ராசி அன்பர்களே!
இதுவரை கும்ப ராசிக்கு 5-ல் இருந்த குரு இப்போது 6-ஆம் இடத்துக்கு மாறுகிறார். ஏற்கெனவே இருந்த 5-ஆம் இடம் மிகமிக நல்ல இடம். ஆனால் தற்போது மாறியுள்ள 6-ஆம் இடம் மோசமான இடம்தான். "சத்திய மாமுனி ஆறிலே இரு காலிலே தலைபூண்டதும்' என்பது பாடல். பொதுவாக 3, 6, 8, 12-ஆம் இடங்கள் குருவுக்கு துர்ப்பலன் தரும் இடங்கள். ஜோதிடர்களும் ஜோதிடப் பத்திரிகைகளும் கும்ப ராசிக்கு குருப்பெயர்ச்சிப் பலனை பயமுறுத்தியே எழுதுவார்கள்; சொல்லுவார்கள். அவர்கள் எழுதுவதும் சொல்லுவதும் தவறில்லை. "தானப்பா ஆறுக்கு தோஷமுண்டு; தார் வேந்தர் பகையுண்டு; தோஷமுண்டு' என்று புலிப்பாணி 6-ஆம் இடத்துப் பலனை விளக்கியுள்ளார். என்றாலும் எந்த ஒரு நல்லதிலும் ஒரு கெடுதல் உண்டு. எந்த ஒரு கெடுதலிலும் ஒரு நல்லது உண்டு.

கூர்மையான கத்தி- பழம் நறுக்கப் பயன்படும். கவனக்குறைவாக இருந்தால் கையை நறுக்கி காயத்தையும் உண்டாக்கிவிடும். தீக்குச்சி தீபமேற்றவும் பயன்படும்; குடிசையைக் கொளுத்தவும் பயன்படும். ஒன்று ஆக்கல்- இன்னொன்று அழிவு! இப்படி எல்லா வகையிலும் எல்லா விஷயத்திலும் நல்லதும் உண்டு; கெட்டதும் உண்டு. அந்த அடிப்படையில் கெட்ட இடத்தில் வந்துள்ள குரு நல்லது செய்யவும் இடமுண்டு!
ஏற்கெனவே நல்ல இடமான 5-ல் இருந்த குரு கும்ப ராசிக்காரர்கள் எல்லாருக்கும் நல்லது செய்தாரா என்று புள்ளி விவரம் எடுத்தால், பெரும்பாலான கும்ப ராசிக்காரர்கள் இல்லையென்றே சொல்லுவார்கள். கும்ப ராசிக்கு 2, 11-க்குடைய குரு 5-ல் நின்று உங்கள் ராசியைப் பார்த்ததால்  உங்களுடைய வாழ்க்கை வசதிகள், சௌகர்யங்கள் அடிப்படைத் தேவைகளுக்குக் குறையில்லாமல் காப்பாற்றப்பட்டது. ஆனால் ராசிநாதன் சனி, ராகுவோடு சேர்ந்திருந்ததால் பூர்வ புண்ணிய பாக்கியத்துக்கும் தெய்வ வழிபாட்டுக்கும் சோதனையும் வேதனையும் ஏற்பட்டது! சிலர் குலதெய்வக் கோவிலுக்கே போகமுடியாமல் தடை ஏற்பட்டது. அப்படியே போனாலும் ஏதாவது அசம்பாவிதங்களும் அல்லது கௌரவப் போராட்டங்களும் விவகாரங்களும் விளைந்தன என்பது ஒரு அனுபவம்.
அதேபோல 10-ஆம் இடம் தொழில், வாழ்க்கை ஸ்தானம். அதற்கு 8-ல் குரு மறைந்ததால், வாழ்க்கையிலும் தொழில்துறையிலும் எதிர்நீச்சல் அடிக்கும் நிலையுடன் கவலையும், பிரச்சினைகளும் ஏற்பட்டு சஞ்சலம் உண்டானது. 2-க்குடையவர் 2-ஆம் இடத்துக்கு 12-ஆம் இடத்தைப் பார்த்த விளைவு, தேவையற்ற செலவுகளும் குடும்பத்தில் வாக்குவாதங்களும் தர்க்கவாதங்களும் ஏற்பட்டு சந்தோஷத்தைக் கெடுத்தது. பெரும்பாலான குடும்பத்தில் வியட்நாம் வீடு மாதிரி விவகாரங்களாக நடந்தன! ஏட்டிக்குப் போட்டியான சம்பவங்கள் மனதை வாட்டிவதைத்தன.
ஒரு அன்பர்- சொந்தக்காரர் கஷ்டப்படுகிறாரே என்று அழைத்துவந்து தனது கடையில் பொறுப்பாக உட்கார வைத்தார். அது பேக்கரி, ஸ்வீட் ஸ்டால். உரிமையாளர் அவரை நம்பி கடையை முழுமையாக ஒப்படைத்துவிட்டார். அவர் வியாபாரத்தில் மிச்சம் மீதி லாபம் என்று கணக்கு காட்டாமல் சரிக்குசரியாக வந்தது. உரிமையாளர் கடை வாடகை, மின்சாரச் செலவு போன்ற உபரிச் செலவுக்கு தன் கையிலிருந்தே கொடுத்து வந்தார். வந்தவர் ரகசியமாக வியாபாரத்தில் பெரும்பணத்தை ஒதுக்கிக்கொண்டு, சரக்கு மாஸ்டரோடு கூட்டுசேர்ந்து தான் ஒதுக்கிய பணத்தைக்கொண்டு பக்கத்து கடையைப் பேசிமுடித்து, சரக்கு மாஸ்டரையும் அழைத்துப் போய் தனியாக வியாபாரம் ஆரம்பித்துவிட்டார். கடைக்காரர் வேறொரு மாஸ்டரை ஏற்பாடு செய்து நம்பிக்கையான புதுமனிதரையும் பொறுப்பில் அமர்த்தினார். அதன்பிறகு தினசரி லாபம் கிடைத்தது. அப்போதுதான் ஏற்கெனவே இருந்தவர் ஊழல் பண்ணிய சமாச்சாரம் தெரிந்தது. அவர் மனது இந்த நம்பிக்கைத் துரோகத்தை மன்னிக்கவில்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் 2, 11-க்குடைய குரு கும்ப ராசிக்கு 6-ல் மறைந்தாலும், 10-ஆம் இடம் விருச்சிகத்தைப் பார்க்கப்போவதால், போட்டிக் கடைக்காரர் கூட்டாளிகளுக்குள் பிரச்சினையாகி சீக்கிரம் கடையை மூடிவிட்டுப் போய்விடலாம். உங்களுக்கு புதுமாஸ்டர் ஒத்துழைப்பால், முதலில் இருந்த டேஸ்ட்டைவிட அதிஉன்னத ருசியாக பண்டங்களைச் செய்த காரணத்தால், வியாபாரமும் சூடுபிடித்துவிடும். 2-ஆம் இடத்தை உச்ச குரு பார்ப்பதாலும் தனவரவு கூடிவிடும். செலவெல்லாம் போக சேமிப்பும் அதிகமாகிவிடும்.
கடக குரு 5-ஆம் பார்வையாக 10-ஆம் இடத்தையும், 12-ஆம் இடத்தையும், 2-ஆம் இடத்தையும் பார்க்கிறார். எனவே கடந்த காலத்தில் தொழில்துறையிலும் வியாபாரத்திலும் ஏற்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்படுவதோடு- புதிய மாறுதலும் புதிய முயற்சிகளும் வளர்ச்சியடையும். வேலை தேடியலைந்து, ஒவ்வொரு ஸ்தாபனமாக ஏறியிறங்கி சலித்துப் போனவர்களுக்கு, அந்த முயற்சிகளுக்கு இனி முறையான பலன்கள் உண்டு; நிலையான வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
2-க்குடையவர் 6-ல் உச்சம் பெற்று 12-ஆம் இடத்தையும், 2-ஆம் இடத்தையும் பார்ப்பதால் தொழில், வேலை, உத்தியோகத்துக்காக சிலர் கடன் வாங்கலாம். இது வரவு! வாங்கிய கடனுக்காக தவணையும் வட்டியும் கட்டுவது செலவு! குரு நிற்கும் கடகம் சந்திரன் வீடு என்பதால், அரசு வங்கி, சொசைட்டிக் கடன், எல்.ஐ.ஸி கடன் வாங்கலாம்.
2-க்குடையவரே 2-ஆம் இடத்தைப் பார்ப்பதால் பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். வரவுக்குப் பஞ்சமில்லை. அது தனவரவோ, லாபவரவோ, வரவேண்டிய வரவோ, கடன் வரவோ எதுவானாலும் சரி- வரவுதான்! அதேபோல வாக்கு நாணயம் கெடாதவகையில் காப்பாற்றப்படும். கடந்த பல வருடங்களாகவே கும்ப ராசிக்காரர்களுக்கு நிலையான தொழிலும், நிரந்தரமான வருமானமும் இல்லாமல் எப்படியோ தேவைகள் ஓடியடைந்தன. யார் வீட்டுப் பணமோ கையில் புரள, அதை வைத்து பிரச்சினைகளை பூர்த்தி செய்துகொண்டார்கள். அதாவது ஆட்டைத் தூக்கி மாட்டில் போட்டு- மாட்டைத் தூக்கி ஆட்டில் போட்டு என்று சொல்லுவார்களே, அதுமாதிரி உருட்டு புரட்டுபண்ணி காலம் ஓடியது. இப்போதுதான் முறையான வருமானத்துக்கு வழியமைந்திருக்கிறது. குரு கடகத்தில் உச்சம்பெறும் இந்த காலகட்டத்தில் நீங்கள் செட்டில் ஆகிவிடலாம். 8-ஆம் இடத்துக்கு குரு 11-ல் உச்சம் பெற்று- 9-ஆம் இடத்து உச்ச சனியின் பார்வையைப் பெறுவதோடு, 8-ல் உள்ள ராகுவின் பார்வையையும் பெறுகிறார். எனவே புதையல் யோகத்துக்கு சமமான திடீர்த் தனப்ராப்தி யோகம் அமையும். தமிழ்நாட்டில் லாட்டரி இல்லையென்றாலும், சிலருக்கு வெளிமாநில லாட்டரி அல்லது வெளிநாட்டு லாட்டரி யோகம் அமையும். சிலருக்கு என்.ஆர்., ஆர்.பி. என்று சொல்லுகிற வழியிலும் எதிர்பாராத தனப்ராப்தி கிடைக்கும்.
அரசு வேலையில் இருப்போருக்கு 10-க்கு 12-ல்- ராசிக்கு 12-க்குடையவர் சனி உச்சமாக இருப்பதால், பதவி உயர்வு அல்லது வெளியூர் மாற்றம் ஏற்படலாம். 12-ஆம் இடம் மாறுதலுக்குரிய இடமாகும். தொழில் காரகன் சனி என்பதால் வேலை, உத்தியோகம், தொழில்ரீதியாக இந்த மாற்றம் ஏற்பட இடமுண்டு. சனிப்ரீதியாக குச்சனூர் சனீஸ்வரரையும், அருகில் வடகுரு ஸ்தலத்துக்கும் போய் தரிசனம் செய்யலாம். தென்காசிப் பாதையில் கடையநல்லூர் அருகில் ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சனேயரை வழிபடலாம். நாமக்கல் அருகில் சேந்தமங்கலம் சென்று ஏழரை அடி உயர சனீஸ்வரரையும், எதிரில் பஞ்சமுக ஆஞ்சனேயரையும் வழிபடலாம். விழுப்புரம் மாவட்டம், கல்பட்டு கிராமத்தில் 21 அடி உயர சனீஸ்வரரை வழிபடலாம். சங்ககிரி பஸ் நிலையம் அருகில் பழைய இடைப்பாடி பாதையிலுள்ள சிவன் கோவிலில் சனீஸ்வரர் தம்பதி சகிதம்      அருள்பாலிக்கிறார். அங்கும் வழிபடலாம்.
13-6-2014 முதல் 29-6-2014 வரை தனது சாரத்தில் (புனர்பூசம்) குரு சஞ்சாரம்
குரு புனர்பூசம் 4-ல் தனது சொந்த சாரத்தில் இருப்பதால், இக்காலம் உங்களுக்கு இனிமையான காலமாக அமையும். அதிலும் குரு ராசியிலும் அம்சத்திலும் கடகத்தில் வர்க்கோத்தமம்- அத்துடன் உச்சம்! எனவே அவர் கும்ப ராசிக்கு 6-ல் மறைவு பெற்றாலும், 6-க்குடைய கெடுதல் பலன் நடக்காது. மேலும் குரு தான் நின்ற இடத்துக்கு 6, 9-க்குடையவர். 9-ஆம் இடத்தை (மீனத்தை) 9-க்குடையவரே பார்க்கிறார். அது கும்ப ராசிக்கு 2-ஆம் இடமாகும். எனவே குடும்பத்தில் அமைதி, ஆனந்தம், மகிழ்ச்சி தாண்டவமாடும். ஒருசிலருடைய உடன்பிறப்புகள், "மனதில் ஒன்று- வார்த்தையில் ஒன்றாக' நடந்துகொண்டாலும், நீங்கள் பெரும் போக்காகவும் பெருந்தன்மையாகவும் நடந்துகொள்வீர்கள். "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்' என்ற குறளின் தத்துவப்படி நடந்துகொள்வீர்கள். அதனால் உடன்பிறப்புகளும் உங்கள் அருமை பெருமைகளை உணர்ந்து உங்களோடு நட்புறவாக நடந்துகொள்வார்கள்.

பரிகாரம்: மயிலாடுதுறையிலிருந்து சிதம்பரம் போகும் பாதையில், வள்ளலார் கோவில் என்ற பகுதிலுள்ள சிவன் கோவிலில் மேதா தட்சிணாமூர்த்தி சந்நிதி இருக்கிறது. நந்திவாகனத்தில் தட்சிணாமூர்த்தி இருப்பார். வியாழக்கிழமை சென்று வழிபடவும்.
29-6-2014 முதல் 28-8-2014 வரை பூச நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்
குரு- சனியின் நட்சத்திரத்தில் (பூசத்தில்) சஞ்சாரம் செய்கிறார். சனி ராசிநாதன் ஆவார். குருவும் உச்சம்; சனியும் உச்சம். உச்ச குருவை உச்சனான சனி பார்க்கிறார். பொதுவிதிப்படி உச்சனை உச்சன் பார்த்தால் கெடுதல்- பிச்சை எடுப்பார்! ஆனால் இங்கு உங்கள் ராசிக்கு சனி ராசிநாதன் என்பதால் விதிவிலக்குண்டு. கௌரவப் பிச்சையாக எல்லாரிடமும் கடன் வாங்குவீர்கள். சிலர் சொந்தத் தேவைக்காக யாரிடமும் போய் கடன் கேட்காவிட்டாலும், பொதுக்காரியத்துக்காக- கோவில் திருப்பணிக்காக- அல்லது பொதுநல ஹோமத்துக்காக (உதாரணமாக மழைக்காக ஹோமம் செய்ய) எல்லாரிடமும் வசூல் பண்ண வேண்டிய சூழ்நிலையும் ஏற்படலாம். அது கௌரவப் பிச்சைதான். சனி ராசிநாதனுமாவார்; விரயாதிபதியும் ஆவார். எனவே நல்ல காரியத்துக்காக பத்து பேரிடம் நன்கொடை வாங்கி செலவு செய்யலாம். அதுவும் கௌரவப் பிச்சைக்குச் சமம்தான்.

பரிகாரம்: திருச்சியிலிருந்து கிழக்கே 19 கிலோமீட்டர் தூரத்தில் திருநெடுங்களம் திருத்தலம் உள்ளது. திருச்சி- தஞ்சாவூர் சாலையில், துவாக்குடியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரம். சுவாமி நித்ய சுந்தரேஸ்வரர்- அம்பாள் மங்களநாயகி. குறிப்பாக இங்குள்ள ஜேஷ்டா தேவியை வழிபட்டால் விபத்து, ஆபத்துகள் நீங்கும். பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகளும் அகலும்.
28-8-2014 முதல் 3-12-2014 வரை முதல் கட்டமாகவும்; 22-12-2014 முதல் 5-7-2015 வரை இரண்டாம் கட்டமாகவும் ஆயில்ய நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்
இரண்டு கட்டமாக புதன் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம். கும்ப ராசிக்கு புதன் 5, 8-க்குடையவர். குரு முதற்கட்டத்தில் 5-க்குடைய யோக பலனைச் செய்வார். தொழில், வியாபாரத்தில் யோகம் உண்டாகும். பிறர் கருத்தறிந்து காரியமாற்றி மகிழ்ச்சியடையலாம். இரண்டாம் கட்டத்தில் காரியத்தடை, மந்தநிலை, ஒட்டிக்கு ரெட்டி வேண்டாத செலவுகள் நடக்கும். ஆனாலும் உற்சாகம், ஆர்வம், அக்கறை உண்டாகும். வழக்கு, விவகாரத்தில் அனுகூலமான தீர்ப்பு கிடைக்கும்.

பரிகாரம்: சென்னை- வேலூர் சாலையில் பாலுசெட்டி சத்திரம்- தாமல்- பனப்பாக்கம் செல்லும் வழியில், பனப்பாக்கத்திலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் மேல்வெண்பாக்கம் உள்ளது. இங்கு சதுர்யுக ஸ்ரீலட்சுமிநாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. பெருமாள் சுயம்புத்திருமேனி. இராமாயண காலத்தில் பிரம்மஹத்தி தோஷமடைந்த ஹனுமான் இந்தப் பெருமாளை வழிபட்டு தோஷம் நீங்கப்பெற்றதாக ஐதீகம். அங்குசென்று வழிபடலாம்.
குருவின் வக்ரகதி பலன்
17-12-2014 முதல் 22-12-2014 வரை மக நட்சத்திரத்தில் வக்ரமாகவும், 22-12-2014 முதல் 26-3-2015 வரை ஆயில்ய நட்சத்திரத்தில் வக்ரமாகவும் இருப்பார். குருவின் வக்ரகதி முழுவதுமே உங்களுக்கு ராஜயோகப் பலனையே தரும். வெற்றி, லாபம், முன்னேற்றம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல், வரவு- செலவு திருப்தியாக நடக்கும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். மனதில் மகிழ்ச்சி நிலவும்.

பரிகாரம்: கும்பகோணம் அருகில் சுவாமிமலையிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில், புள்ளங்குடி என்ற திருப்புள்ளம் பூதங்குடி கிராமம் உள்ளது. இங்கு ஸ்ரீவல்வில் ராமன் திருக்கோவில் உள்ளது. பித்ருக்களுக்குப் பரிகாரத் தலம். சங்கு சக்கரத்துடன் ஸ்ரீராமபிரான் காட்சி தருகிறார். அங்குசென்று வழிபடலாம்.
அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த குருப்பெயர்ச்சி குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் துணையாக நிற்கும். அரசு ஒப்பந்தக்காரர்களுக்கும், ரியல் எஸ்டேட், கட்டடக் கலைஞர்களுக்கும் அற்புதப் பெயர்ச்சியாக அமையும். ஆனந்தவெள்ளம் பெருக்கெடுத்தோடும்.

பரிகாரம்: குளித்தலையில்- கடம்பவனேஸ்வரர் கோவிலுக்கு வடக்கே ஆற்றங்கரையில் திருப்பதி சுவாமி ஜீவசமாதிக் கோவில் இருக்கிறது. 72 ஆண்டுகளாக குரு பூஜை நடக்கிறது. தினசரி பூஜையும் நடக்கிறது. ஐப்பசி மாத அவிட்ட நட்சத்திரத்தில் குரு பூஜை. வேதாந்த நூல்களை போதித்தவர்- பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தவர். அங்குசென்று வழிபடலாம்.
சதய நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த குருப்பெயர்ச்சி புதிய வாழ்வும் மறுமலர்ச்சியும் பெருமையும் தரும். சங்கடங்களும் சஞ்சலங்களும் விலகி சந்தோஷமும் சாதுர்யமும் உண்டாகும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். பொருளாதாரம்தானே எல்லாவற்றுக்கும் ஆதாரம்.

பரிகாரம்: திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகில் மகான் சுப்பையா சுவாமி ஜீவசமாதி உள்ளது. மார்கழி, சதய நட்சத்திரத்தில் சமாதி கூடினார். 47 ஆண்டுகளுக்கு மேலாக குரு பூஜை நடக்கிறது. (3-1-1960-ல் சமாதி). திருக்கழுக்குன்றம் மலைக்குகையில் தவம் இருந்தவர். வள்ளலார் கொள்கையைப் பின்பற்றியவர். அங்குசென்று வழிபடலாம்.
பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த குருப்பெயர்ச்சியில் அன்னிய நாடுகளில் வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். உறவினர்களுக்கு உதவுவீர்கள். அதனால் அவர்களால் பாராட்டு கிடைக்கும். ஆடம்பர சௌகர்யங்களுக்காக அனாவசியமாக செலவு செய்வீர்கள். அதை சரிக்கட்ட ரகசியமாக கடன்வாங்குவீர்கள். சிலர் குடும்பப் பொறுப்பை சுமந்து செயலாற்றினாலும், பெற்றோர் அல்லது பெரியோர்களின் பாராட்டைப் பெறமுடியாது.

பரிகாரம்: மதுரை- திருப்பரங்குன்றத்தில், தியாகராஜர் இஞ்சினீயரிங் கல்லூரி போகும் வழியில் ஓம் சிவப்பிரகாச சுவாமி ஜீவசமாதி இருக்கிறது. பங்குனி மாதம் பூரட்டாதியில் குருபூஜை. 1944-ல் பரிபூரணம் அடைந்தவர். மாதந்தோறும் பூரட்டாதி நட்சத்திரத்தன்று மாத பூஜை நடக்கும். அங்குசென்று வழிபடலாம்.

மீனம்: (பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
13.06.2014 வெள்ளிக்கிழமை முதல்
மீன ராசி அன்பர்களே!
இதுவரை மீன ராசிக்கு 4-ல் இருந்த குரு- இப்போது 5-ஆம் இடம் கடகத்துக்கு மாறுகிறார். அங்கு அவர் உச்சமாக இருப்பதோடு- வர்க்கோத்தமமாகவும் இருக்கிறார். அதாவது ராசிச் சக்கரத்திலும் நவாம்ச சக்கரத்திலும் ஒரே இடத்திலிருந்தால் வர்க்கோத்தமம் என்று பெயர். வர்க்கம் + உத்தமம்= வர்க்கோத்தமம். உத்தமம் என்ற சொல்லே இது ஒன்றுக்குத்தான் உண்டு. அதனால் அந்த கிரகம் (வர்க்கோத்தமம். பெற்ற கிரகம்) எந்த நிலையில் இருந்தாலும் எந்த ஆதிபத்தியம் பெற்றாலும் தன் பலனை நல்ல பலனாகச் செய்வார்.

கடந்த காலத்தில் மீன ராசிக்கு 4-ல் மிதுனத்தில் இருந்த குரு நல்ல வருமானம்; வறுமை, தரித்திரமில்லாத வாழ்க்கையைத் தந்தபோதிலும் ஏதோ ஒரு குறை இருப்பதாக உணர்ந்திருப்பீர்கள். குறிப்பாக 5-ஆம் இடம் புத்திர ஸ்தானத்துக்கு 12-ல் மிதுனத்தில் இருந்ததால், பிள்ளைகள் வகையில் தவிர்க்க முடியாத செலவுகளும் அவர்களின் எதிர்காலம் பற்றிய கவலைகளும் இருந்தது எனலாம். அத்துடன் அட்டமச் சனியின் பாதிப்பும் உங்களை வந்துசேர்ந்தது. இங்குமங்கும் அலைச்சல், பயணம், அதனால் உடல்நலக்குறைவு, சோர்வு ஆகிய பலனைச் சந்தித்தீர்கள்.
அட்டமச் சனியால் சிலர் குடியிருப்பு மாறினார்கள். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கு மாறினார்கள். சிலர் உத்தியோகரீதியாக இடம் மாறினார்கள். சிலர் உத்தியோகத்தில் இடப்பெயர்ச்சி வந்துவிடுமோ என்ற சந்தேகத்தோடு நாளையும் பொழுதையும் தள்ளிவந்தார்கள். சனியோடு ராகுவும் சேர்ந்து கேதுவைப் பார்த்ததால், எந்த வேலையைத் தொட்டாலும் உடனுக்குடன் முடிக்கமுடியாமல் விரக்தியடைந்தீர்கள்.
ஒருசிலருக்கு அட்டமச் சனியாலும் 4-ஆம் இடத்துக் குருவாலும் விபத்து, வைத்தியச் செலவு, ஆரோக்கியக் குறைவு ஏற்பட்டது. எனக்குத் தெரிந்த மதுரை அன்பரும்- சென்னை அம்மாளும் திருச்செந்தூருக்கு முருகனைக் கும்பிடப் போனார்கள். கடலில் குளித்துவிட்டுத் திரும்பியபோது அலைவந்து இழுத்துச்சென்று தள்ளிவிட்டது. அன்பருக்கு கால் சுளுக்கு- ரத்தக்கட்டுதான். அந்த அம்மாளுக்கு கால் எலும்பு முறிவு. அன்பர் மதுரை வந்து எளிய முறையில் வர்மக்கலை வைத்தியரிடம் காண்பித்தார். அந்த அம்மாள் சென்னைக்குப் போய் ஆபரேஷன் செய்துகொண்டார். காலில் பிளேட் வைத்தார்கள். இரண்டு லட்சம் ருபாய் செலவு. அன்பர் குறைந்த வருவாய் உடையவர். அந்த அம்மாள் வசதி படைத்தவர். இருவரும் வெவ்வேறு நபர்கள் என்றாலும், இருவரும் உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி. அட்டமச்சனி, அட்டம ராகு ஒரே மாதிரி இடத்தில் (கடலில்) விபத்தை ஏற்படுத்தி- சனி என்றாலே முழங்கால்- காலில் பிரச்சினையை உண்டுபண்ணிவிட்டது. குரு ராசிநாதன் என்பதால், அவரவர் வசதி, தகுதிகேற்ப வைத்தியச் செலவை உண்டுபண்ணிவிட்டார்.
ஆக கிரகம் அது செய்யவேண்டிய வேலையைத் தவறாமல் செய்யும். ஆனால் அவரவர் வழிபாடும் தெய்வமும் பூஜையும் காத்து நிற்கும். சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன மாதிரி, கெட்டவர்களுக்கு கடவுள் அள்ளிக்கொடுப்பார்; ஆனால் கைவிட்டுவிடுவார். நல்லவர்களுக்கு சோதனை வரும். ஆனால் கைவிடமாட்டார்.
இதேபோல இன்னொரு நிகழ்ச்சி! ஒரு அன்பர் வேலை, வருமானம் இல்லாமல் கஷ்ட ஜீவனம். ஆனால் தெய்வ பக்தியானவர். அவர் மனைவி எதற்குமே ஆசைப்படாதவர். அஸ்வினி நட்சத்திரத்தில் கோடி உடுத்தினால் வசதிவாய்ப்பு பெருகும் என்பது சாஸ்திரம். அதேபோல ஒரு வியாழக்கிழமை அஸ்வினி கூடிய நாளில் இரண்டு சேலை, அரை டஜன் ரவிக்கைத் துணி, அவருக்கு வேஷ்டிச் சட்டை எடுத்துக்கொடுத்து மனைவியையும் கட்டிக்கொள்ளச் சொன்னேன். அவரும் மனைவியிடம் துணிகளைக் கொடுத்தார். அந்த அம்மாள் ஒரு சேலை, ஒரு ரவிக்கை துணியை மட்டும் எடுத்துக்கொண்டு, மீதியைத் திருப்பிக்கொடுத்து விட்டார். அவர், "அடி அசடே! எல்லாம் உனக்குத்தானே!' என்றபிறகு வாங்கிக்கொண்டார். அவ்வளவு யதார்த்தவாதி.  அந்த அம்மாள் கருவுற்றிருந்த காலம் அரசு இலவச மருத்துவமனையில்தான் பார்த்து வந்தார். 10-ஆவது மாதம்- அதிகாலை இடுப்பு வலி வந்துவிட்டது. ஆஸ்பத்திரிக்குப் போக ஆட்டோவை அழைத்து வரும்படி சொல்ல, அவர் கையில் இரண்டு ரூபாய் மட்டுமே இருந்ததால் ""கொஞ்சம் பொறுத்துக்கொள். விடியட்டும். தெரிந்த ஆட்டோவை அழைத்து வருகிறேன்'' என்றார். அந்த அம்மாளும் கடவுளை தியானித்தபடியே பொறுத்துக்கொண்டார். வலி அதிகமாகவே பக்கத்துவீட்டு அம்மாளை அழைத்துவந்து துணைக்கு வைத்துவிட்டு ஆட்டோவை அழைத்து வரப்போய்விட்டார் கணவர். அவர் திரும்புவதற்குள் ஆண் குழந்தை பிறந்துவிட்டது. கடவுள் கருணாமூர்த்தி! சோப்பு, விளக்கெண்ணை இரண்டு ரூபாய் செலவிலேயே பிரசவம் பார்த்துவிட்டார். இதுவே பணக்காரர்களாக இருந்தால் பத்தாயிரம் இருபதாயிரம் செலவு செய்து சிசேரியன்மூலம் பேறு காலம் பார்க்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். ஆக சுவாமி தாயுமானவர்- ஏழைப் பங்காளன். அதனால்தான் "வாயானை- மனத்தானை- மனத்துள் நின்ற கருத்தானை- கருத்தறிந்து முடிப்பான் தன்னை' என்று நால்வரில் ஒருவர் பாடினார்.
இப்போது 5-ஆம் இடத்துக்கு வந்திருக்கும் குரு உங்கள் ராசி மீனத்தைப் பார்க்கிறார். 11-ஆம் இடம் மகரத்தைப் பார்க்கிறார். 9-ஆம் இடம் விருச்சிகத்தையும் பார்க்கிறார். மேலும் குருவுக்கு அதிர்ஷ்டமும் யோகமுமான இடம் 2, 5, 7, 9, 11-ஆம் இடம்தான். அப்படிப்பட்ட 5-ல் குரு உச்சம்! வர்க்கோத்தமம் என்பதாலும், நல்ல இடங்களைப் பார்ப்பதாலும் இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு யோகப் பெயர்ச்சியாகும். இதுவரை அட்டமத்துச் சனியும் மங்குசனியுமாக இருந்தவர், இனி பொங்குசனியாக மாறிப் பொலிவைத் தருவார்.
5-ஆம் இடம் என்பது புத்திர ஸ்தானம், மகிழ்ச்சி, திட்டம், எண்ணம், குரு உபதேசம், பக்தி, பூர்வ புண்ணியம் ஆகியவற்றை குறிக்கும் இடம். அங்கு புத்திரகாரகனும் தனகாரகனுமான குரு, அத்துடன் ராசிநாதனுமான குரு உச்சமாக அமர்ந்திருப்பது யோகம்தான். மக்கள்பேறு, மகிழ்ச்சி, உண்மையான நண்பர்கள், விசுவாசமான வேலையாட்கள், சகலவிதமான சம்பத்து, செல்வம், பாக்கியம், மந்திர உபதேசம், பக்தி வழிபாடு, இஷ்ட தெய்வ- குலதெய்வ வழிபாடு, பூஜை, தாய்மாமன் ஆதரவு, பாட்டனார் அல்லது முன்னோர் சொத்துக்கிடைத்தல் ஆகிய பலன்கள் நடக்கும். உங்களுடைய நீண்டகாலக் கனவுகளும் திட்டங்களும் நிறைவேறும். ஆசைகளும் ஈடேறும்.
திருமணமாகி பல ஆண்டுகளாக வாரிசு இல்லாமல் எதிர்பார்த்து ஏங்கியவர்களுக்கு ஆண் வாரிசும் பெண் வாரிசும் உண்டாகும். திருமண வயதில் காத்திருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணம் நிறைவேறும். பருவ வயதுடைய பெண்களுக்கும் பூப்பெய்தல் சடங்கு போன்ற சுபமங்கள காரியங்களும் நிறைவேறும்.
படித்த பிள்ளைகளுக்கு தகுதிக்கேற்றபடி தரமான வேலைவாய்ப்பும் முன்னேற்றமும் ஏற்படும். பதவியில் இருப்போருக்குப் பதவி உயர்வும், விரும்பிய இடப்பெயர்ச்சியும், ஊதிய உயர்வும் எதிர்பார்க்கலாம்! வாழ்க்கை தரத்தில் மேன்மையும் மனநிறைவும் உண்டாகும். "ஏனோ மனிதன் பிறந்துவிட்டான். அவன் வீணேமரம்போல் வளர்ந்துவிட்டான்' என்றில்லாமல், வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது; வாழ்வதிலும் ஒரு அர்த்தம் இருக்கிறது என்று மீன ராசிக்காரர்கள் சாதனை படைக்கலாம்.
கட்டிக்கொடுத்த பெண் பிள்ளைகள் வகையில் சிலருக்குப் பிரச்சினைகள் ஏற்பட்டு, மாமியார் அல்லது நாத்தனார் பிடுங்கல் தாங்காமல் புக்ககத்தில் இருந்து பிறந்தகத்துக்கு வந்துவிட்ட பெண்களின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படும் பெற்றோர்களுக்கு, குருப்பெயர்ச்சி மாறுதலையும் ஆறுதலையும் தரும்.
9-ஆம் இடம் தகப்பனார், பூர்வபுண்ணியம், பாக்கிய ஸ்தானம் ஆகும். பூர்வீகச் சொத்துகளை அல்லது தனது சுயசம்பாத்திய சொத்துகளை இதுவரை அனுபவிக்கமுடியாத நிலை இனி மாறிவிடும்.
பெரியோர்களாலும் பிள்ளைகளாலும் உங்கள் கருத்துக்கு ஆதரவில்லாத வகையில், சொத்துகளை அனுபவிக்க முடியாமலும் விற்க முடியாமலும், கையில் வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்த கதையாக அவதிப்பட்டவர்களுக்கு, இந்த குருப்பெயர்ச்சி ஒரு நல்ல திருப்பத்தையும் அனுகூலத்தையும் ஏற்படுத்திக்கொடுக்கும். தெய்வத் திருவருளினாலும் குருவருளினாலும் எல்லாவிதமான சௌகர்யங்களும் நன்மைகளும் பாக்கியங்களும் வசதிகளும் ஏற்படும். சொத்துப் பிரச்சினைகளில் உங்கள் முயற்சிகளில் தளர்ச்சி காணப்பட்டால், திருச்சி- பொன்னமராவதிப் பாதையில் (புதுக்கோட்டை வழி) செவலூர் பிரிவு ஸ்டாப் இறங்கி- 2 கிலோமீட்டர் நடந்தால் செவலூரை அடையலாம். அங்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான சிவாலயம் உள்ளது. சுவாமி பூமிநாதர்; அம்மன் ஆரணவல்லி. அங்குசென்று ருத்ராபிஷேகம் அல்லது சங்காபிஷேகம் பூஜை செய்யவும். சுவாமி லிங்கத் திருமேனி. 16 பட்டைகள் கூடியது. அபிஷேகத் திரவியங்கள் எல்லாம் வெளியில் சிந்தாது; சிதறாது. பூமிக்குள் போய்விடும். அம்பாள் மகாலட்சுமி சொரூபமாக கையில் பதுமம் (தாமரை) வைத்திருப்பார். தொல்பொருள் ஆராய்ச்சி நிர்வாகத்தின்கீழ் உள்ளது. அந்த எல்லைக்குப் போய் வந்தபிறகுதான் நானே 70 ஆண்டுகளுக்குப் பிறகு இடம் வாங்கினேன். வீடு கட்டினேன். என்னுடைய பல நண்பர்களும் அந்த எல்லைக்குப் போய் பூஜை செய்த பிறகு வீடு, கட்டடம், பிளாட் போன்ற நன்மைகளை அடைந்தனர் என்பது அனுபவ உண்மை. அர்ச்சகர் ராஜப்பா குருக்கள், அலைபேசி: 98426 75863-ல் விவரம் அறியலாம்.
9-ஆம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானம். 5-ஆம் இடமும் பூர்வ புண்ணிய ஸ்தானம். (5-க்கு 5 =9-ஆம் இடம்) அதற்கு ராசிநாதனான குரு பார்ப்பது சிறப்பு. அத்துடன் அவர் 10-க்குடையவர்- அவர் 9-ஆம் இடத்தைப் பார்ப்பது தர்மகர்மாதிபதி யோகம். ஆன்மிக கிரகம் ராகு கன்னியிலிருந்து குருவையும் 5-ஆம் இடத்தையும் பார்க்க, கேதுவும் மீனத்தில் நின்று குருவின் பார்வையைப் பெறுவதால் ஆலய வழிபாடு, ஆன்மிகத் தொடர்பு, மகான்களின் ஆசீர்வாதம்  கிடைக்கும். தெய்வப் பிரார்த்தனைகளையும் நேர்த்திக்கடன்களையும் நிறைவேற்றலாம். குலதெய்வத்தின் அருளுக்கும் பாத்திரமாகலாம். சிலருக்கு ஜோதிடம், கைரேகை, ஆரூடம், பிரஸ்னம், அருள்வாக்கு சொல்லும் வாய்ப்பும் உண்டாகும்.
அந்தக் காலத்தில் ஒரு ஊரில்- குறிப்பிட்ட வட்டத்துக்குள்- அங்காளி பங்காளி எல்லாம் ஒரு குரூப்பாக அடுத்தடுத்து வாழ்ந்தார்கள். அதனால் எல்லாரும் முறையாக குலதெய்வ வழிபாட்டுக்கு தலைக்கட்டு வரி செலுத்தி சேர்ந்து கும்பிட்டார்கள். அதெல்லாம் மூன்று தலைமுறைக்கு முன்பு அல்லது 80-100 ஆண்டுகளுக்கு முந்திய சமாச்சாரம். இப்போது பல இடங்களுக்குப் பறந்துசென்ற பறவைகள்போல படிப்பு, வேலை, வெளிநாடு என்று ஆங்காங்கே சிந்திச் சிதறிப் போய் செட்டிலாகி விட்டார்கள். விவரமறிந்த முதியோர்களும் பெரியோர்களும் காலாவதி ஆகிவிட்டார்கள். அதனால் இப்போது உள்ளவர்களுக்கு (பலருக்கு) குலதெய்வமும் தெரியாது; எல்லையும் தெரியாது; வழிபாட்டு முறையும் தெரியாது. கோடாங்கி குறி கேட்கலாம் என்றாலும், அதற்குரிய உண்மையான, திறமையான ஆட்கள் இல்லை. "ஒட்டி அடிடா உள்ளூர்க் கோடாங்கி' என்ற மாதிரி வியாபார நோக்கோடு பிஸினஸ் செய்கிறவர்கள்தான் இருக்கிறார்கள். எனவே அவரவர் இஷ்டதெய்வத்தையும் மனம்விரும்பும் தெய்வத்தையும் பிடித்த தெய்வத்தையும் வழிபட வேண்டியதுதான். "யாதொரு தெய்வம் கொண்டீர்- அத்தெய்வமாகி யாதொரு பாகனார் தாம் வருவார்' என்பதும்; "எத்தெய்வம் கொண்டாடினாலும் அது முக்கண் ஆதியைப் போய் அடையும்' என்பதும் சிவஞான போதம். ஆகவே நாமம் போடுகிறவர்கள் திருப்பதி வெங்கடாஜலபதியையும் விபூதி பூசுகிறவர்கள் திருவண்ணாமலை ஈஸ்வரனையும், அம்பாளைக் கும்பிடுகிறவர்கள் காஞ்சி காமாட்சியையும் வழிபடலாம்.
11-ஆம் இடத்தை 10-க்குடையவரும் ராசிநாதனுமான குரு பார்ப்பதால், தொட்டதெல்லாம் தோல்வியின்றி ஜெயமாகும். நீண்ட நெடுங்காலமாக நடந்துவந்த வில்லங்கம், விவகாரத்தில் சாதகமான திருப்பமும் நல்ல தீர்ப்பும் எதிர்பார்க்கலாம். மூத்த சகோதர- சகோதரி வகையிலும் சகாயமும் அனுகூலமும் எதிர்பார்க்கலாம்.
கடக குரு உங்கள் ஜென்ம ராசியைப் பார்க்கிறார். அவர் ராசிநாதனும் ஆவார். உச்சம்! உங்கள் செல்வாக்கு, திறமை, செயல்பாடு, ஆற்றல், கீர்த்தி, பெருமை, அந்தஸ்து ஆகியவையெல்லாம் உயர்வடையும். உழைப்பிற்கேற்ற ஊதியமும், திறமைக்கேற்ற பெருமையும், பண்புக்கேற்ற பாராட்டும் கிடைக்கும். இதுவரை பட்டபாட்டுக்கு பலன் உண்டாகும். சமூக நற்பணி மன்றங்களிலும் லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப், அறக்கட்டளை, ட்ரஸ்ட் போன்ற ஸ்தாபனங்களில் முக்கிய பொறுப்புகளும் பதவிகளும் தேடிவரும். பட்டம், பதவி, அந்தஸ்து வந்ததும், இதுவரை உங்களை உதாசீனப்படுத்தி ஓரம் கட்டி ஒதுக்கிவைத்த உற்றார்- உறவினர்களும் உங்களைத் தேடிவந்து பொன்னாடை போர்த்தி பாராட்டுவார்கள்.
இதுவரை எந்தக் காலத்திலும் அன்ன ஆடை தரித்திரம் இல்லையென்றாலும், குடியிருப்புக்கு குறைவில்லையென்றாலும், எந்தவிதமான சேமிப்பும் இல்லாமல் வரவுக்கும் செலவுக்கும் சரிக்கட்டி வறட்டுக் கௌரவமான வாழ்க்கைதான் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள். சிலர் பிள்ளைகளைக் கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கி நல்ல வேலையில் அமர்த்தி, அவர்கள் சம்பாத்திய நிழலில் "ரிட்டையர்டு லைப்' வாழ்ந்து வரலாம். அப்படிப்பட்டவர்களும் இந்த குருபெயர்ச்சியில் ஓய்வு காலத்திலும் ஏதாவது உபவருமானம் பார்க்கும் வழிமுறைகளைத் தேர்ந்தெடுத்து சம்பாதிக்கலாம். சம்பாதியத்தில் ஒரு பகுதி கடனுக்கும் வட்டிக்கும்- ஒரு பகுதி குடும்பச் செலவுக்கும், ஒரு பகுதி எதிர்காலத்திட்டத்துக்கும் (எல்.ஐ.ஸி- ஆர்.டி., எப்.டி போன்ற வகையில்) என்று சேமித்து பட்ஜெட் போட்டு பக்குவமாக வாழலாம். இதற்காகவே குருப்பெயர்ச்சிக்கு ஒரு "ஓ' போடலாம்! "ஓ'.
13-6-2014 முதல் 29-6-2014 வரை தனது சாரத்தில் (புனர்பூசம்) குரு சஞ்சாரம்
குரு தன் சொந்த நட்சத்திரமான புனர்பூசத்தில் உச்சமாகவும் வர்க்கோத்தமமாகவும் சஞ்சரிக்கிறார். இக்காலம் குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். அதிகாரப்பதவியாளர்களின் ஆதரவும் நட்பும் கிடைப்பதால், உங்கள் கனவுத் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். எதிர்ப்புகள் விலகும். வசந்தமான வாழ்க்கை சொந்தக்காரர்கள் மத்தியில் மதிப்புக்குள்ளாக்கும்! சேமிப்புகள் பெருகும்!

பரிகாரம்: கும்பகோணத்திலிருந்து காரைக்கால் செல்லும் வழியில் எஸ்.புதூர் என்ற செங்கரங்குடிப்புதூர் உள்ளது. ஒரு காலத்தில் குபேரன் தன் செல்வங்களை இழந்து, சப்த ரிஷிகள் தயவால் இங்குவந்து ஸ்ரீசனத்குமரேஸ்வரர், தாயார் ஸ்ரீசௌந்திர நாயகி அம்மனையும் வழிபட்டு இழந்த செல்வங்களை மீண்டும் பெற்றதாக வரலாறு. இங்கு தட்சிணாமூர்த்தி நவகிரகங்களைப் பீடமாக அமைத்து அதன்மீது இருக்கிறார். அங்கு சென்று வழிபட்டால் சிறப்புகள் அடையலாம்.
29-6-2014 முதல் 28-8-2014 வரை பூச நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்
குரு சனியின் சாரம். (பூச நட்சத்திரம்). சனி லாப விரயாதிபதி என்பதால் லாபமும் உண்டு; நஷ்டமும் உண்டு. வரவும் உண்டு; செலவும் உண்டு. என்றாலும் எல்லாம் ஆதாய விரயம், சுபவிரயம்தான். சிலருக்குப் பெண்களால் பிரச்சினை ஏற்பட்டு நிவர்த்தியாகும். உடல்நலம், ஆரோக்கியம் திருப்தியாக இருக்கும்.

பரிகாரம்: கும்பகோணம் அருகில் நாச்சியார்கோவில் என்ற ஊரில் திருநறையூர் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவிலுக்கும் சித்தநாதசாமி கோவிலுக்கும் இடையில், ஸ்ரீபர்வதவர்த்தனி உடனுறை ஸ்ரீஇராமநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு மங்கல சனீஸ்வரர் சந்நிதி உள்ளது. அருகில் தசரதர் சனீஸ்வரரை வணங்கியபடி இருக்கிறார். சனிக்கிழமை காலை 6.00 மணி முதல் 7.30-க்குள் மாந்திக்கும், 9.00 மணி முதல் 10.30 மணிக்குள் சனி பகவானுக்கும் அபிஷேகம் நடக்கும். சனி பகவான் மந்தாதேவி- ஜேஷ்டாதேவி, மகன் மாந்தி சமேதரராக அருள்கிறார்.
28-8-2014 முதல் 3-12-2014 வரை முதல் கட்டமாகவும்;
22-12-2014 முதல் 5-7-2015 வரை இரண்டாம் கட்டமாகவும் ஆயில்ய நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்

புதன் நட்சத்திரமான ஆயில்யத்தில் இரண்டு கட்டமாக குரு சஞ்சாரம் செய்யும் இக்காலம் நற்காலம். கடந்த கால கசப்பான அனுபவங்களெல்லாம் மாறி இனிப்பான அனுபவங்களாக மாறிவிடும். வாயில் போட்ட நெல்லிக்கனி உமிழ்நீர் பட்டதும் துவர்ப்புச் சுவை மாறி இனிப்புச் சுவையாக மாறுவதுபோல! மற்றவர்களுக்காக- பெருமைக்காக செலவு செய்வதை குறைத்துக்கொண்டு, குடும்பத்தினருக்காக செலவு செய்யுங்கள். குடும்பத்தாரின் தேவைகளை நிறைவேற்றலாம். ஊனமுற்றோர் அல்லது முதியோர் இல்லங்களுக்கு அன்னதானம், ஆடை  தானம் செய்தால் நவகிரக தோஷம் நம்மைவிட்டு அகலுவது உறுதி.

பரிகாரம்: கும்பகோணம்- குடவாசல் வழியில் (7 கிலோமீட்டர்) நாச்சியார் கோவில் இருக்கிறது. அங்கு சீனிவாசப் பெருமாள் கோவிலில், பெருமாள் இரண்டு கரங்களுடன் காட்சி தருகிறார். இங்கு கல் கருடன் சந்நிதியில், கருடன் கல்விக்கிரகமாக அருள்பாலிக்கிறார். அவர் திருமேனியில் ஒன்பது இடங்களில் நவநாகர் உருவம் உண்டு. வருடத்தில் இருமுறை கல்கருடனே உற்சவராக புறப்பாடாகி வெளியே வரும்போது, முதலில் 4 பேர், பிறகு 8 பேர், பிறகு 16 பேர், அடுத்து 32 பேர், தூக்குமளவு எடை கூடிக்கொண்டே போகும். உலா முடிந்து வந்ததும் முன்போல 32 பேர், 16 பேர், 8 பேர் என்று தூக்கி முடிவில் 4 பேர் விக்கிரகத்தை யதாஸ்தானத்தில் வைக்கும்படி எடைகுறைந்து கொண்டே வரும். வியாழக்கிழமைதோறும் கல் கருடனுக்கு சிறப்பு பூஜை நடக்கும். 11 வாரம் தொடர்ந்து அர்ச்சனை செய்தால் வேண்டியது நிறைவேறும்.
குருவின் வக்ரகதி பலன்
17-12-2014 முதல் 22-12-2014 வரை குரு- கேது  சாரத்திலும், 22-12-2014 முதல் 26-3-2015 வரை புதன் சாரத்திலும் சஞ்சாரம். இக்காலத்தில் 17-12-2014 முதல் 26-3-2015 வரை குரு வக்ரகதி. இதில் சிலருக்கு நற்பலனும். சிலருக்கு துர்ப்பலனும் நடக்கலாம். வக்ரம் எல்லாருக்கும் கெடுதல் இல்லை. பாடம்பிடிக்காத மாணவனை ஆசிரியர்கள் கண்டிப்பதுபோல திருத்தலாம். அதை ஏற்றுக்கொள்வது நல்லது.

பரிகாரம்: காளஹஸ்தி சென்று வழிபடலாம். அல்லது உத்தமபாளையம் (தென்காளஹஸ்தி) சென்று வழிபடலாம். அல்லது மாயவரம் அருகில் பேரளம் வழி திருப்பாம்புரம் சென்று வழிபடலாம்.
பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த குருப்பெயர்ச்சி சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் சாதிக்கச் செய்யும். குடும்பத்தில் நல்லவை நடக்கும்.

பரிகாரம்: மதுரை திருப்பரங்குன்றத்தில் இஞ்சினீயரிங் கல்லூரி போகும் வழியில், ஓம் சிவப்பிரகாசர் ஜீவசமாதி சென்று வழிபடவும். பூரட்டாதியில் குரு பூஜை.
உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த குருப்பெயர்ச்சி போட்டி, பொறாமைகளை வென்று முன்னணியில் வெற்றி நடை போடச்செய்யும். தொழில், வாழ்க்கை, பொருளாதாரம் எல்லாம் திருப்தியளிக்கும்.

பரிகாரம்: கம்பர் காலத்தில் வாழ்ந்த அருட்கவிஞர் ஒட்டக்கூத்தர்- தக்கயாகபரணி பாடி புகழ் பெற்றவர். தாராசுரம் வீரபத்திரன் கோவிலுக்கு பின்புறம் இவரது சமாதி உள்ளது. (கும்பகோணத்திலிருந்து 2 கிலோமீட்டர் தாராபுரம்) சென்று வழிபடலாம்.
ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த குருப்பெயர்ச்சி குடும்ப ஒற்றுமை, செல்வச் செழிப்பு, நூதன பொருள் சேர்க்கை, ஆடை, அணிகலன் சேர்க்கை ஆகிய பலன்களைத் தரும்.

பரிகாரம்: தஞ்சாவூருக்கு வடக்கே 12 கிலோமீட்டரில் திருவையாறு உள்ளது. இந்தக் கோவிலில், சண்டேசர் சந்நிதி பக்கம் அகப்பைச் சித்தர் புற்று மூடிய நிலையில் அருந்தவம்  இயற்றினார். திருவையாறு சிவலிங்கப் பெருமான் இவர் மூலம்தான் தன் இருப்பிடம் காட்டி, கரிகால்சோழனால் இக்கோவில் எழுப்பப்பட்டது.

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...