புதன், 15 பிப்ரவரி, 2017

சாபங்கள் நீங்க வேண்டுமா?

❋ ஒவ்வொரு மனிதனின் ஜாதகத்திலும் கிரகங்களின் பலன் என்பது அவனது முன்ஜென்ம வினை, அவனது முன்னோர்களின் வினை பொறுத்தே அமைகிறது. முற்காலத்தில் முனிவர்கள் கோபத்தினால் சாபம் கொடுத்தனர். ஆனால் இக்காலத்தில் மனிதர்களே சாபம் கொடுக்கின்றனர். ஒவ்வொரு சாபத்திற்கும் ஒவ்வொரு விதமான வழிபாடு உண்டு.

❋ ஒரு சாதாரண மனிதன் இன்னொரு மனிதனால் தேவையற்ற முறையில் அல்லது அதர்ம வழியில் தாக்கப்படும் போது தன்னையும் மீறிய சோகத்திற்கு ஆட்படுகிறான். அந்த நேரம் அவன் மனது நிகழ்ந்த நிகழ்ச்சியிலேயே நிலைத்து விடுகிறது. சுற்றுப் புறச் சூழல்கள் அனைத்தும் மறந்து தனக்கு ஏற்பட்ட அநியாயத்தை மட்டுமே நினைத்து நினைத்து மனம் உருகி ஒருநிலைப் பட்டுவிடுகிறது. அப்போது அவனிடமிருந்து வருகின்ற வார்த்தை அடிவயிற்றில் இருந்து ஒரு ஓநாயின் ஓலம் போல வெளிப்பட்டு எதிராளியை தாக்குகிறது. எதிரியை மட்டும் அல்ல எதிரியின் வம்சத்தை கூட தாக்குகின்ற அளவிற்கு அந்த வார்த்தை சக்தி மிகுந்த சாபமாகி விடுகிறது. இதனால் பல தலைமுறைகள் காரணமே இல்லாத சோதனைகளைச் சந்தித்து வாழ்வில் பல இன்னல்களை அனுபவிக்க வேண்டிய நிலை உள்ளது.

❋ ஒரு சிலருக்கு வயது அதிகமாகியும் திருமணம் கைகூடி வந்திருக்காது. அவர்களுக்கு முன்னோர்கள் சாபத்தினால் தடை ஏற்படுகிறது என்று சொல்வர். ஒரு சிலருக்கு குடும்பத்துடன் ஆரோக்கியப் பாதிப்புகள் வந்து கொண்டேயிருக்கும். யாருடைய சாபமோ என்று சொல்வர். ஒரு சிலருக்கு கோபம் வந்தால் உடனே சாபம் விடுவர்.

❋ கற்றறிந்த பெரியவர்கள், வயோதிகர்கள் விடும் சாபம் சிலரை பாதிக்கலாம். எனவே தான் பிறர் கோபப்படும்படி நாம் நடந்து கொள்ளக்கூடாது என்று கூறுவார்கள். அங்ஙனம் ஏற்படும் சாபங்கள் விலக இறை வழிபாடுதான் தீர்வு. தந்தையின் சாபம் விலக, பிரதமை திதியில் சண்டிகேஸ்வரருக்கு சாந்திப் பரிகாரம் செய்யவேண்டும்.

❋ தாயின் சாபம் விலக, ஏகாதசி திதியில் ஏகாம்பரேஸ்வரரை முறையாக வழிபாடு செய்ய வேண்டும். சகோதர சாபம் விலக, அஷ்டமி திதியில் நந்திகேஸ்வர வழிபாடு செய்ய வேண்டும். சுமங்கலி பெண்களின் சாபம் விலக, அதிகார நந்தியை திருதியை திதியில் வழிபாடு செய்ய வேண்டும். ஆசிரியர் சாபம் விலக சப்தமி திதியில் துவார பாலகர்களை வணங்க வேண்டும்.

சாபம் நீங்க செல்ல வேண்டிய கோவில்கள் :

➽ கோகிலேஸ்வரர் - திருக்கோழம்பியம் (தஞ்சாவூர்)
➽ தர்ப்பாரண்யேஸ்வரர் - திருநள்ளாறு (புதுச்சேரி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...