புதன், 26 பிப்ரவரி, 2014

பரமேஸ்வரன் !பிரமாண்டம், பேரதிசயம்,

கரவல்லி என்ற கானரா என்ற கடலோர கர்நாடகா - மங்களூரிலிருந்து கார்வார் வரையிலான கர்நாடக கடற்கரைப் பகுதிதான் இப்படி அழைக்கப்படுகிறது. இங்கே  பொதிந்து கிடக்கும் பொக்கிஷங்களில் ஒன்றான முர்டேஷ்வர் கோயில், இப்பகுதியில் ரயில் போக்குவரத்து வசதி வந்தபிறகு வெளிச்சத்திற்கு வந்த ஓர்  அற்புதம். மங்களூரிலிருந்து கோவா செல்லும் ரயிலில் ஏறி முர்தேஷ்வர் ஸ்டேஷனில் இறங்கலாம். நேர் எதிரே இருக்கும் கடற்கரையில், கன்துகா என்ற   குன்றின் மேல் அமைந்திருக்கிறது முர்டேஷ்வர் கோயில். கோயிலின் அருகிலேயே ஒரு மேட்டுப் பகுதியில் 123 அடி உயரத்தில் சிவன் சிலை   பிரமிக்கவைக்கிறது.

உலகத்திலேயே இரண்டாவது மிக பெரிய சிவன் சிலையாம் இது. கடற்கரையை நோக்கியபடி பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார் இந்த ஈசன். அந்த ஊரில்  எவ்வளவு தொலைவிலிருந்து, எந்தப் பக்கத்திலிருந்து பார்த்தாலும் இந்த சிவனை தரிசிக்கலாம். எதிரே நந்தியின் சிலை. கோயில் சற்று தாழ்வான பகுதியில்  அமைந்துள்ளது. கோயிலுக்கு முன்னால் பிரமாண்டமான ராஜ கோபுரம். நன்கு  செப்பனிடப்பட்ட சாலை நம்மை மென்மையாக அழைத்துச் செல்கிறது. கோயில்  முழுவதுமாக கிரானைட் கற்களால் இழைக்கப்பட்டுள்ளது.

கோபுரம் மற்றும் சில இடங்களில் தங்க கவசங்கள் மின்னுகின்றன. உள்ளே மூலவர் அகோர மூர்த்தியாய் காட்சி தருகிறார். கீழே மிகத்  தொன்மையான  லிங்கமும் ஆவுடையாரும் அமைந்திருக்கின்றன. முர்டேஷ்வர் இங்கே கோயில் கொண்டதற்கு ஒரு புராணக்கதை ஆதாரமாக விளங்குகிறது. கடுந்தவம் இருந்து  சிவனிடமிருந்து ஆத்ம லிங்கத் தைப் பெற்றான் ராவணன். அவன் இலங்கைக்கு அதைக் கொண்டு செல்லும்போது வழியில் எங்கும் வைத்துவிடக்கூடாது என்று  நிபந்தனை  விதித்தார் பரமேஸ்வரன்.

ராவணனும் மிகுந்த பக்தியுடன் லிங்கத்தை எடுத்துக் கொண்டு சென்றான். இதைக் கண்ட தேவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். இந்த ஆத்ம லிங்கம் இலங்கையில்  பிரதிஷ்டை செய்யப்பட்டால், ராவணன் பெரிய பராக்கிரமசாலியாகிவிடுவான்; அவனை யாரும் வெல்ல முடியாது என்று புரிந்தது அவர்களுக்கு. அப்படி ஒரு  நிலைமை ஏற்பட்டுவிடாதிருக்க அவர்கள் திட்டமிட்டார்கள். அதன்படி, ராவணன் கோகர்ணா என்ற இடத்தை அடைந்த போது திருமால் தன்னுடைய  சக்கராயுதத்தினால் சூரியனை மறைத்தார். பொழுது சாய்ந்து விட்டது என்று நினைத்து ராவணன் மாலைக் கடனை நிறைவேற்ற முற்பட்டான்.

ஆனால் லிங்கத்தைக் கீழே வைக்க முடியாதே! சற்றுத் தொலைவில் ஒரு சிறுவன் வந்துகொண்டிருந்தான். அவனை அழைத்த ராவணன், தன் தர்மச்சங்கடத்தைச்  சொன்னான். அந்தச் சிறுவனும்  அவனுக்கு உதவ அந்த லிங்கத்தை அவன் வரும்வரைத் தான் தாங்கியிருப்பதாகவும், நேரம் தாழ்த்தக்கூடாது என்றும், அப்படி  நேரமானால் தான் மூன்று முறை அழைப்பேன், அப்படியும் வராவிட்டால் லிங்கத்தைக் கீழே வைத்துவிடுவேன் என்றும் சொல்லிவிட்டான். ராவணனும்   சம்மதித்துச் சென்றான்.

இதற்காகவே காத்திருந்ததுபோல, சிறுவனாக வந்த விநாயகர் மூன்று முறை ராவணனை அழைக்க, அவன் வராது போகவே லிங்கத்தை பூமியில் வைக்க அது  அங்கேயே நிலைகொண்டுவிட்டது. இந்த விஷயத்தில் தேவர்களோடு கடவுளர்களும் சேர்ந்து தனக்கு எதிராக செயல்பட்டதை உணர்ந்து ஏமாற்றமடைந்தான்.  ஆவேசமடைந்ததுடன் லிங்கத்தைச் சுற்றியிருந்த வஸ்திரத்தை உருவி, வீசி எறிந்தான். அப்படி வஸ்திரம் விழுந்த இடத்தில் ஓரு லிங்கம் உருவாகியது!  அதுதான் முர்டேஷ்வர். கோயிலில் கணபதி, அனுமன், சுப்பிரமணியர், நவகிரகங்கள் ஆகியோர் தனித்தனி சந்நதி கொண்டிருக்கிறார்கள்.

ஆலயத்திற்குப் பின்னால் இரு அழகான தீர்த்தங்கள் உள்ளன. 249 அடி உயரமுள்ள பிரமாண்ட ராஜகோபுரம் வழியாக உள்ளே செல்லலாம். இந்த கோபுரத்துக்கு  மேலே செல்வதற்கு லிஃப்ட் வசதி உள்ளது. மேல் தளத்திற்குச் சென்று பார்த்தால்,  எல்லையற்ற கடற்பரப்பும், விரிந்த கடற்கரையும் இறைவனின் அதிசயத்தை  அழகுற எடுத்து ரைக்கின்றன. மலையின் அழகைப் பல்வேறு கோணங்களில் ரசிக்க வேண்டுமானால், அதற்குப் படகு வசதியும் உண்டு. அலை புரளும் கட லும்  அதன் கரையில் அருட்கடலான ஈசனின் தோற்றமும் மனதை கொள்ளை கொள்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

நவ கிரக பாதிப்பு தீர பல பரிகாரம் உள்ளது

 இதில் முதல் தர பரிகாரம் ஒன்று உள்ளது  புது வருட பஞ்சாங்கம் வாங்கி அதை உங்களுக்கு தெரிந்த நபர்களுக்கு ஒரு ரூபாய் மற்றும் வெற்றிலை பாக்கு வைத...