புதன், 17 செப்டம்பர், 2014

வாஸ்துகலை.சமையலறை

ஒருவர் எத்தனை பெரிய கோடீஸ்வராக நிகழ்ந்தாலும், பசி வந்து வாட்டினால் யாசகனை போல, கிடைப்பதை உண்டு மகிழ்வார். அது ஸ்டார் ஓட்டலா அல்லது சாலையோர ஓட்டலா? என்றெல்லாம் பசி எவரையும் சிந்திக்க விடுவதில்லை. ஒவ்வொரு அணுவுக்கும் இறைவன் ஏதேனும் ஆற்றலை தந்திருக்கும் போது உயிர் வாழ உறுதுணையாக இருக்கும் உணவு மட்டும் சாஸ்திர ரீதியாக சக்தி இல்லாமலா போகும்? உணவு சமைக்கும் போது நல்ல எண்ணத்துடனும் மகிழ்ச்சியான மனதுடனும் சமைக்க வேண்டும். துக்கம், துயரம், அழுகையோடு சமைக்கிற உணவு தோஷத்தையே தரும். இதனை ‘அன்னதோஷம்` என்கிறது சாஸ்திரம். ஆக இப்படி – சமைக்கப்படும் உணவுக்கே இத்தகைய முக்கியதுவம் என்றால், அந்த உணவு சமைக்கப்படுகிற இடம் எந்தளவு முக்கியத்துவம் பெற்றதாக இருக்க வேண்டும்.?
 இதற்கு வாஸ்துகலையில் நமக்கு பதில் கிடைக்கிறது. ஒரு மனையின் நான்கு திசைக்கும் அதன் நான்கு மூலைகளுக்கும் ஒவ்வோரு அதிபதிகள் ஆட்சி புரிகிறார்கள். வடகிழக்குக்கு ஈசான்யம், தென்கிழக்குக்கு அக்னிதேவன், வடமேற்குக்கு வாயுதேவன், தென்மேற்கில் நிருதிதேவன் ஆக இதனை மேலோட்டமாக பார்த்தாலே சமையலறைக்கு சிறப்பான இடம் எது என விளங்கும். அது – அக்னிதேவன் நிலைத்திருக்கும் தென்கிழக்கே சமையலறைக்கு ஏற்ற இடம் என்று. கிழக்கு பார்த்த மனை அல்லது வீடு, வடக்கு பார்த்த வீடு, மேற்கு பார்த்த வீடு இவைகளுக்கு அக்னிமூலை எனப்படும் தென்கிழக்கு மூலையை சமையலறைக்கென்று தேர்வு செய்யலாம். ஆனாலும் தெற்கு பார்த்த வீட்டுக்கு அக்னி மூலை சமையலறை சாத்தியமாகாது. தனி வீடு என்றால் எப்படியோ கட்ட வடிவமைப்பில் அக்னி மூலையில் சமையலறையாக அமைத்திடலாம். ஆனால் தெற்கு பார்த்த அடுக்கு மாடி வீட்டுக்கு அக்னி மூலை சமையலறை அமைக்க முடியாது. அப்படியே அமைத்துவிட்டாலும் தலைவாசல் தோஷமான இடத்தில் அமைந்துவிடும். இதனால் என்ன செய்யலாம்? தெற்கு பார்த்த வீட்டுக்கு என்று இல்லாமல் பொதுவாக அக்னி மூலையில் சமையலறை வைக்க இயலாவிட்டால் அதற்கென்று இருக்கும் மாற்று இடம் எங்கே? என்கிற கேள்விக்கு வாயுமூலை எனப்படும் வடமேற்கு மூலை, சமையலறைக்கு ஏற்ற இடமாக அமையும் என்று பதிலுரைக்கிறது வாஸ்துகலை. இருந்தாலும் - தென்கிழக்கு மூலையில் அமைக்கிற சமையலறைக்கும், வடமேற்கு மூலையில் அமைக்கிற சமையலறைக்கும் வேறுபாடு – தனித்தன்மை போன்றவை இருக்கிறதா? எனக் கேட்டால் நிச்சயமாக இருக்கிறது. அக்னி மூலையில் அமைக்கின்ற சமையலறையில் ஒரு சில சிறப்புகள், வாயுமூலை சமையலறையில் கிடைக்காது. வாயுமூலையில் அமைக்கின்ற சமையலறையின் ஒரு சில சிறப்புகள் அக்னிமூலை சமையலறையில் கிடைக்காது.   அது என்ன-ஏன்? என்று தெரிந்து கொள்வதற்கு முன்பாக ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். மனையடி சாஸ்திரம் – வாஸ்துகலை என்றெல்லாம் அழைக்கப்படுகிற இந்த கட்டிட சாஸ்திர கலையானது நேற்றோ இன்றோ அல்லது பல வருடங்களுக்கு முன்போ தோன்றியதில்லை. இது மனித நாகரீகம் பிறந்த போது, அவன் தனக்கென்று ஒரு இடத்தினை  தேர்வு செய்யும் போதே அது எப்படி அமைந்தால் வம்சவளர்ச்சிக்கு உதவும் என்று சிந்தித்து இறை அருளால் உருவாக்கிய சாஸ்திரம். இது யுகங்களை கடந்த ஒரு அற்புத கலை. அப்படி பார்க்கும் போது ஒரு சில காலங்களுக்கு முன்பு வாஸ்து என்ற இந்த சாஸ்திரத்தை, கட்டடத்தை வடிவமைப்பவர்கள் மட்டும் அறிந்து வைத்திருந்தனர். அன்று அவர்கள் காலத்தில் கட்டப்பட்ட வீடுகளில் அமையப்பெற்றிருந்த சமையலறை, அநேகமாக கிழக்கு திசையில் இருக்கும். காரணம்  சமைக்கப்படும் உணவில் சூரிய கதிரின் ரேடியேஷன்(தாக்கம்) உடலுக்கு நன்மை என்று அறிந்திருந்தார்கள். ஆனாலும் அந்த ரேடியேஷனில் கூட நல்லவை-தீயவை என்கிற இருவேறு நிலைகள் இருக்கிறது. காலையில் வாக்கிங் சென்றால் உடலுக்கு நல்லது. அதுவே உச்சி வெயிலில் நடந்தால்? அதே சூரியன்தான் அதே வாக்கிங்தான். ஆனாலும் கதிரவனின் தாக்கம் மாறுபட்டால் பாதிப்பு உண்டாகிறது. அதுபோல. அன்றைய கட்டட சாஸ்திர வல்லுனர்கள், கிழக்கு திசையில் சமையலறை நல்லது என அறிந்து, அந்த கிழக்கு திசையிலேயே வடகிழக்கு-கிழக்கு மையம் அல்லது தென்கிழக்கு என வசதிக்கேற்ப அமைத்து விட்டார்கள். அதனால் – நான் சொன்னதைபோல ஒரே சூரியன்தான், இருந்தாலும் சமையலறை அமைக்கப்படுகிற பகுதிகள் மாறுப்படுகிறது. பலன்களும் வேறுப்படுகிறது. இதில் தென்கிழக்கில் சமையலறையாக அமையப்பெற்றவர்கள் நல்ல பலன்களை பெற்றிருப்பார்கள். கிழக்கு மையத்தில் அமையப்பெற்றவர்கள் சுமாரான பலன்களை பெற்றிருப்பார்கள். வடகிழக்கில் சமையலறையாக அமையப்பெற்றவர்கள் சோதனையான பலன்களை பெற்றிருப்பார்கள். இதே அணுகுமுறை தொடர தொடர பிறகு ஒரு சமயம் ”கிழக்கு திசை சமையலறை நல்லது என்றார்கள் ஆனால் எந்த பலனும் இல்லையே” என புலம்பி, இந்த சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை இழந்து தங்கள் மனப்போக்கின்படி இல்லம் அமைத்தார்கள். அதில் சிலருக்கு அவர்களை அறியாமலே சாஸ்திர சிறப்புடன் அமைந்துவிடும். சிலருக்கு இருந்ததும் போன கதையாகும். இது அவர்களின் தவறான வாஸ்து அணுகுமுறையால் வந்த வினையே தவிர கட்டட சாஸ்திரத்தின் மீது குற்றம் சொல்வது சரியாகாது. ஒருவர் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்தான் நீங்களும் பயன்படுத்துகிறீர்கள். ஆனால் அவரை விட உங்களுக்கு கம்ப்யூட்டரின் நுணுக்கங்கள் தெளிவாக தெரிந்திருக்கிறது. அதனால் நல்ல வேலை வாய்ப்பும் பயனும் பெறுகிறீர்கள். அந்த நுணுக்கங்கள் சிலருக்கு தெரியாததால் ஒட்டு மொத்தமாக கம்ப்யூட்டர் கல்வியே வீணானது என்று புலம்புவது எப்படி சரியாகும்.? மனையடி சாஸ்திரத்தில் ஒரு செய்யுள் வருகிறது. அதில் “ஈசான்யம் என்னும் வடகிழக்கில் சமையலறை அமைந்தால் மன்னருக்கு இணையான வாழ்க்கை அமையும் என்றும், பாக்கியங்கள் பல சேரும்” என்றும் அதன் பொருள் சொல்கிறது. இது மட்டுமல்ல இதைபோன்ற பல கட்டடகலை சாஸ்திர விஷயங்கள் செய்யுள் வடிவில் நூல்களாக வெளிவந்திருக்கிறது. அவர்கள் சொன்னதை அப்படியே ஏற்று கொள்ள வேண்டும் என்றில்லை. அனுபவ ரீதீயாக ஆராய்ந்தும் சிலர் திருத்தி உள்ளனர். ஆனால் அன்றைய காலத்தில் புதிய திருத்தங்களை ஏற்றுகொள்ளாமல் அனுபவப்படி ஆராய்ந்து செய்யாமல் கடைப்பிடித்து வந்தனர். அவ்வளவு ஏன், மயன் நூலிலேயே வடகிழக்கில் சமையலறை வைக்கலாம் என சொல்லி இருக்கிறார். ஆகவே வீட்டை கட்டுபவர்கள் அங்கேதான் சமையலறை வைக்கவேண்டும் என்பார்கள். ஆனால் வடகிழக்கில் சமையலறை அமைப்பது முற்றிலும் தவறு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...