திங்கள், 30 மே, 2016

வாழ்க்கை பயனம்

1. இதிகாசங்கள் லௌகிக வாழ்க்கையின் சகல பகுதிகளையும் உள்ளடக்கி, ஒரு பெருங்கை எழுதக்கூடிய சக்தி இன்று எந்த எழுத்தாளருக்காவது உண்டா? நாகரிகம் வளர்ந்துவிட்ட நிலையில், ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் இடையே உள்ள தூரம் குறைந்துவிட்ட நிலையில், பல நாட்டுக் கதைகளையும் படிக்கின்ற வாய்ப்பு அதிகப்பட்ட நிலையில், நம் மூதாதையர்களைவிட நாம் அறிஞர்கள் என்று கருதுகின்ற நிலையில், சகலவிதமான குணாதிசயங்களைக்கொண்டு பல பாத்திரங்களை உருவாக்கி ஒரே கதையாக எழுதுகின்ற சக்தி இன்று யாருக்காவது உண்டா? எனக்குத் தெரிந்தவரை இல்லை. நம்முடைய இதிகாசங்களை வெறும் கற்பனைக் கதைகள் என்றே வைத்துக்கொள்ளுங்கள். அந்தக் கற்பனைக்கு ஈடு கொடுக்க உலகத்தில் இன்னும் ஓர் எழுத்தாளன் பிறக்கவில்லை. பெருங்கதைகளும் அவற்றுக்குள் உப கதைகளுமாக எழுதப்பட்ட நமது இதிகாசங்களின் பாத்திரப் படைப்புத்தான் எவ்வளவு அற்புதம்! அவை கூறும் வாழ்க்கைத் தத்துவங்கள்தான் எத்தனை! நம்பிக்கை அவநம்பிகை ஆணவம் மீட்சி காதல் ராஜதந்திரம் குறுக்குவழி நட்பு அன்பு பணிவு பாசம் கடமை – இப்படி வாழ்க்கையில் எத்தனை கூறுகள் உண்டோ அத்தனையும் நமது இதிகாசங்கள் காட்டுகின்றன. மகாபாரதத்தை எடுத்துக்கொள்ளுங்கள். பொறுமைக்குத் தருமன் துடிதுடிப்புக்குப் பீமன் ஆண்மைக்கும் வீரத்திற்கும் அர்ச்சுனன். மூத்தோர் வழியில் முறை முறை தொடர நகுலன், சகாதேவன் பஞ்சபூதங்களையும் தன்னுள் அடக்கிக்கொண்ட சக்தி மிக்க ஆன்மாவாக, பாஞ்சாலி. உள்ளதெல்லாம் கொடுத்து, கொடுப்பதற்கு இல்லையே என்று கலங்கும் வள்ளலாகக் கர்ணன். நேர்மையான ராஜதந்திரத்திற்கு எடுத்துக்காட்டாகக் கண்ணன். குறுக்குவழி ராஜதந்திரத்திற்கு ஒரே உதாரணமாகச் சகுனி! தீய குணங்களின் மொத்த வடிவமாக கௌரவர்கள்! தாய்பாசத்திற்கு ஒரு குந்தி! நேர்மையான கடமையாளனாக விதுரன். பாத்திரங்களின் சிருஷ்டியிலேயே சம்பவங்கள் கருக்கொண்டுவிட்டன. இந்தப் பாத்திரங்களின் குணங்களை மட்டும் சொல்லி விட்டால் கதை என்ன என்பது தற்குறிக்கும் புரியும். இந்தக் கதை வெறும் ஆணவத்தின் அழிவை தருமத்தின் வெற்றியை மட்டும் குறிப்பதல்ல. லௌகிக வாழ்க்கையிலும் ஒவ்வொருவருக்கும் பயன்படக்கூடிய படிப்பினை இருக்கிறது. கதையின் இறுதிக் களமான குருஷேத்திரத்தில் கதையின் மொத்த வடிவத்திற்கும் தீர்ப்பு வழங்கப்படுகிறது. அதுவரை சொல்லி வந்த நியாயங்கள் தொகுத்து வழங்கப்படுகின்றன. பகவத் கீதை, மகாபாரதக் கதையின் சுருக்கமாகி விடுகிறது. அரசியல் சமுதாய நீதிக்கு அதுவே கைவிளக்காகி விடுகிறது. கண்ணனை நீ கடவுளாகக் கருத வேண்டாம். கடவுள் அவதாரம் எடுப்பார் என்பதையே நம்ப வேண்டாம். பரந்தாமன், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்டவன் என்றே எண்ணிப்பார். கீதையைத் தேவநீதியாக நீ ஏற்றுக்கொள்ளவில்லையென்றால், மனித நீதியாக உன் கண்முன்னால் தெரியும். கண்ணன் வெறும் கற்பனைதான் என்றால், கற்பனா சிருஷ்டிகளில் எல்லாம் அற்புத சிருஷ்டி, கண்ணனின் சிருஷ்டி. ஊழ்வினை பற்றித் தெரிய வேண்டுமா? – பாரதம் படி. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுமா? – பாரதம் படி. ஒன்றை நினைத்தால் வேறொன்று விளையுமா? – பாரதம் காட்டும். செஞ்சோற்றுக் கடனா? நன்றியறிதலா? – பாரதம் காட்டும். பெற்ற மகனைத் தன் மகன் என்று சொல்ல முடியாத பாசக்கொடுமையா? – குந்தியைப் பார். ரத்த பாசத்தால் உன் உள்ளம் துடிக்கிறதா? சொந்தச் சகோதரர்களை எதிர்த்துப் போராட வேண்டிவருகிறதா? அப்போது உனக்கு என்ன செய்வதென்று தோன்றவில்லையா? -கீதையைப் படி. ஏழைக்கும் பணக்காரனுக்கும் நட்பு இருக்கமுடியுமா? -கண்ணன் கதைக்கு உபகதையான குசேலன் கதையைப் படி. விஞ்ஞானம் வளராத காலத்தில், போர்த்துறையில் எத்தனை வகையான ராஜதந்திரங்கள் இருந்தன. அத்தனையும் ஒட்டுமொத்தமாக அறிந்துகொள்ள மகாபாரதம் படி. ஒரு பாத்திரத்திற்கு ஒரு குணம் விசேஷம் என்றால், அதைக் கதையின் இறுதிவரையில் கொண்டு செலுத்திய கறபனைச் சிறப்பை அளவிட வார்த்தைகள் இல்லை. ராம கதைக்கு வா! காதல் என்றால் என்ன என்பதைக் காட்டக் கூடிய இலக்கியம் அதற்குமேல் ஒன்றில்லை. சகோதரப் பாசம் ராமனுக்கும், லட்சுமணனுக்கும், பரதனுக்குமிடையே முழு வடிவில் சதுராடுகிறது. குகனைப்போல் ஒரு நண்பன் கிடைத்தால்,நான் இருந்த இடத்தில் இருந்தபடியே கோட்டைகளைப் பிடிப்பேன். அனுமானைப் போன்ற ஓர் ஊழியன் கிடைத்தால், அகிலத்தையே விலைக்கு வாங்குவேன். சீதையைப் போன்று ஒரு தேவதை கிடைத்தால், கம்பனோடும் போட்டி போடுவேன். விபீஷணனைப் போன்ற ஒரு நியாயவன் கிடைத்தால், இன்றைய ஜனநாயகத்திற்கு நான் மரியாதை செலுத்துவேன். பாரதத்திற்குக் கர்ணனைப்போல் இதிலே செஞ்சோற்றுக் கடன் கழிக்கும் கும்பகர்ணன், நன்றிகெட்ட உறவுகளுக்கு ஒரு சவால்! கோசலையைப் போல் ஒருதாயும், தசரதனைப்போல் ஒரு தந்தையும் யாருகும் அமைந்துவிட்டால், கொடிய வறுமைக்கூட தோன்றாது.! இவ்வளவு நல்லவர்களக் கொண்ட ராம காதையை இரண்டே தீயவர்கள் நடத்திச் செல்கிறார்கள். முதல் பகுதியைத் தள்ளிவிடுகிறாள் மந்தரை. இரண்டாவது பகுதியை ஏற்று நடத்துகிறான் ராவணன். ஆயிரம் நல்லவர்களுக்கு அவதியைத் தர, இரண்டு மூன்று தீயவர்கள் போதுமென்றது ராம காதை. மந்தரையும், சூர்ப்பநகையும், ராவணனுந்தாம் ராமனுக்குத் தெய் வடிவம் தருகிறார்கள். நிழல் அருமை வெயிலிலே நின்று அறியப்படுகிறது. வைணவ இதிகாச சிருஷ்டி இப்படி வானோங்கி நிற்பது கண்டு, சைவர்கள் சிருஷ்டித்ததே முருகன் கதை. அங்கே வில்; இங்கே வேல்! அங்கே ராமன்; இங்கே முருகன்! அங்கே ராவணன்; இங்கே சூரபத்மன்! அங்கே ராவணனுக்குச் சில தம்பிகள். இங்கே சூரபத்மனுக்குச் சில தம்பிகள். இரண்டிலும் ஏறத்தாழ ஒரே வகையான பாத்திரப் படைப்புகள். (விவரமாக் தெரிந்துகொள்ள திரு ரா.பி. சேதுப்பிள்ளையின் ‘வேலும் வில்லும்ய படியுங்கள்) ஆயினும், வைணவர்களின் அற்புதக் கற்பனையைச் சைவர்கள் வெல்ல முடியவில்லை! சைவர்கள் பெரும்பாலும் நாமாவளியாகவே பாடி இருக்கிறார்கள். “ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று” என்று இருக்கின்ற முகங்களுக்குக் கணக்குக் சொன்னார்களே தவிர ஆழ்ந்த த்த்துவங்களை அதன்மூலம் உணர்த்த வில்லை. ஆண்டாள் திருப்பாவையைப் படித்தாற்கூட நமக்கு மெய்சிலிர்க்கிறது. மனித ஆன்மாவின் தெய்வீக ராகத்தை அது மெய் சிலிர்க்கக் காட்டுகிறது. அஃதன்றியும், கடவுளைக் காதலனாக பாவிப்பது என்ற சம்பிரதாயத்தை முதலில் துவக்கியது வைணவந்தான். பிறகு சைவமும் அதைப் பின்பற்றியது. சைவத்திலும், முருகனையும் பரமசிவனின் வேறு சில வடிவங்களையும், காதலனாகப் பாவிப்பது வழக்கில் வந்தது. ஆனால், சக்தியையோ,பிற பெண் தெய்வங்களையோ காதலியாகப் பாவிப்பதாக இல்லை. அங்கேயும் இந்துக்கள் பண்பாடு கார்த்தார்க்க். காதல் என்பது பாசத்தின் முதிர்ச்சியாகவே காட்டப்பட்டது. சில இடங்களில் காம உணர்ச்சி அதிகரித்து இருந்தால் அது பரிபூரண நிலையைக் குறிக்கும். ஆதிமூலத்தோடு இரண்டறக் கலந்துவிட்ட தெய்வீக நிலையைக் குறிக்கும். வேறு எந்த மதத்தவரும், இந்துக்களைப் போல் இறைவனோடு நேரடியாகப்பேசுவதில்லை. உனக்கு ஏன் மாடு என்றும், வீடு கிடையாதா என்றும், தாய் தகப்பன் இல்லையா என்றும், அதனால் தான் ஒருவன் வில்லால் அடித்தானா என்றும், ஏதோ நீண்ட நாள் பிரிந்திருந்த சொந்தக்கார்களைக் கேட்பது போல, இறைவனைக்கேட்பவர்கள் இந்துக்கள்தான். இறைவனுக்கும் மனிதனுக்கும் அதிக இடைவெளியில்லாமல் சிருஷ்டித்தவர்களும் இந்துக்கள்தான். மூலமாக முளைத்தெழுந்தவனை உறவின்ன் ஆக்கிக் கொண்டவர்களும் இந்துக்கள்தான். காதல் வாழ்க்கையையும் திருமண வாழ்க்கையையும் கடவுளிடம் கண்டவர்களக் இந்துக்கள்தான். ஸ்தூலத்தை சிவமாகவும் ஆன்மாவை சக்தியாகவும் கண்டவர்கள் இந்துக்கள்தான். கடைசி ஏழைக்கும் கடவுளைச் சொந்தக்காரனாக அவனை ஆண்டியாகக் கொண்வர்களும் இந்துக்கள்தான். அந்தத் தமிழக இந்துக்களிலே சைவர்கள், முருகனைத் தமிழனாக் கண்டார்கள். சைவர்கள் அவனைத் தமிழனாக்க் கண்டபோது, வைணவர்கள் திருமாலைத் தமிழாலேயே அழைத்தனர். சைவர்கள் ‘ஸ்ரீரங்கம்’ என்று சொன்னால், வைணவர்கள் அதைத் தமிழில் ‘திருவரங்கம்’ என்று சொல்லுவார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, ஆன்மாவும் ஆதூலமும் ஆனந்தமாக ஆடிப்பாட வேண்டம் என்பதே இந்துக்களின் நோக்கமாக இருந்தது. அந்த நோக்கத்தின் வடிவங்கள்தான் சைவ நடராஜரும் வைணவக் கண்ணனும். எங்கே தொட்டாஉம், எதைப் படித்தாலும், இந்துக்கள் உருவாக்கிய பாத்திரங்கள் நம்மை வெறும் அதீத உலகத்திற்கு கொண்டு போகவில்லை. லௌகிக உலகத்தை எடுத்துக் காட்டுகின்றன. கதைகளைப் பொய் என்று சொல்ல்லாம். அந்தக் கற்பனையின் சிறப்பை வியக்காமலிருக்க முடியாது. சொல்லப்போனால், அத்தகைய கற்பனை, உலகத்தில் இந்தப் பல்லாயிரம் ஆண்டுகளில், வேறு எவனுக்கும் கிடையாது. 2. சாதிகள் “இந்து சமய வரலாற்றின் மிக ஆரம்ப காலத்தில் இந்து சமூகமானது பல நிலைகளாகப் பகுக்கப்பட்டு அமைந்திருந்ததையே விளக்கும் வகையில், சாதி முறையானது அமைந்திருந்தது. பழங்குடி மக்கள் என்ற அடிப்படையிலும், செய்தொழில் அடிப்படையிலும், சாதி முறையானது அமைந்ததில் ஏற்பட்ட குழப்பமானது கண்டிப்பான நியதிகளில் ஒன்றாகப் பழங்குடி மக்களுடைய பழக்க வழக்கங்கள் பித்தியேகமாக ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான காரணதாயுள்ளது. சாதிமுறை அமைப்பினுடைய சமூக அம்சத்தைப் பார்க்கும்பொழுது அந்த அமைபானது மனிதர்களால் உருவாக்கப்பட்டதே தவிர, அது தெய்வீக அமைப்பின் மர்ம்மாக அமைந்துவிடவில்லை. மக்களிடையே காணப்பட்ட உண்மையான வேற்றுமைகளுக்கு ஏற்பவும், இலட்சியமான வகையில் அமைய வேண்டிய ஒற்றுமைக்காகவும், மனித சமுதாயத்தினை நெறிப்படுத்தி அமைப்பதற்காகவே,சாதி முறையானது அமைக்கப்பட்டது. மிகப் பெரிதோர் அமைப்பினுடைய பல்வேறு அம்சங்களாகச்சமூகத்தினுடைய பல்வேறு பகுதிகளும் கருதப்பட்டது பற்றி, முதல் முதலா ‘புருஷசூக்தம்’ எனும் நூலில் ஜாதிமுறை அமைப்புப் பற்றிக் குறிப்பிடப்பட்டுக் காணப்படுகிறது. மனித சமுதாயமானது பல்வேறு உறுப்புகளுடன் கூடிய ஒருமுழுமைப்பொருளாகவும், அதனுடைய ஒவ்வோர் அங்கமும் தனக்கான பொறுப்புக்களையும் உடமைகளையும் சரிவர நிறைவேற்றுவதன் மூலமாகப் பிற அங்கங்களும் தம்முடைய பொறுப்பு களையும் கடமைகளையும் செவ்வனே நிறைவேற்றுவதற்கு உதவியும், பிற அங்கங்கள் தம்முடைய பொறுப்புகளையும் கடமைகளையும் செவ்வனே நிறைவேறி வரக்கூடிய காரணத்தால், தன்னுடைய பொறுப்புகளையும் கடமைகளையும் செவ்வனே நிறைவேற்றும் வகையில், பல அம்சங்களும் ஒன்றை மற்றது இயல்பாச் சார்ந்து அமையும் வகையில் அமைந்துள்ளன. இந்த கண்ணோட்டத்துடன் பார்ப்போமேயானல் முழுப் பொருளினுடைய தன்மையானது அதனுடைய பலவேறுபட்ட அங்கங்கள் ஒவ்வொன்றிலும் அதனுடைய பலவேறு அங்கங்கள் ஒவ்வொன்றும் இன்றியமையாததாகவும் உள்ளன. ஒரு சமூகத்தினுடைய தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் வகையில் பணியாற்றி வரக்கூடிய பல பிரிவுகளுடனும் கூடிச் சமூகங்கள் அனைத்தும் அமைந்து காண்கின்றன. பல்வேறு பிரிவுகளும் பொதுவானதோர் இலட்சியத்தை எய்தும் வகையில் செயலாற்றக்கூடிய காரணத்தால், அவற்றினிடையே ஒற்றுமையுணர்வும் சமூக சகோதரத்துவமும் நன்கு மருவுகின்றன. முதல் பிரிவாக பண்பாட்டின் வளர்ச்சிக்காகவும் ஆன்மீகத்தின் உயர்வுக்காகவும் முதலாவது பிரிவில் ஈடுபட்டவர்களையும், இர்ண்டாவது பிரிவாகப் போர்த்துறையிலும் ஆரசியலிலும் ஈடுபட்டுள்ளவர்களையும், மூன்றாவது பிரிவாகப் பொருளாதாரத் துறையிலும் வர்த்தகத்திலும், வாணிபத்திலும் ஈடுபட்டு உள்ளவர்க்களையும், நான்காவது பிரிவாகத் தேர்ச்சி பெறாத தொழிலாளிகளையும் உழைப்பாளிகளையும் கொண்டு ஆக இந்த நான்கு பிரிவுகளையும் கொண்டு, சாதி அமைப்பானது அமைந்தது. மனித வாழ்க்கையினுடையபல்வேறு கடமைகளும் மிகத் தெளிவான வகையில் புகுத்தப்பட்டும், அவற்றினுடைய பிரத்தியேகமான இயல்புகளும், எவ்வகையில் அவை பிறவற்றுடன் ஒருங்கே இயங்கினால் அதன் விளைவாக நிறைவு காண முடியும் எனும் நோக்குடன், அவை ஒவ்வொன்றினுடைய சிறப்பியல்புகளும் தெளிவாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஒவ்வொரு சாதிக்கும் சமூகத்தில் ஆற்ற வேண்டிய குறிப்பாக ‘பணியும், கடமையும்’ அது அனுசரிக்க வேண்டிய நியதியும், அதற்கான தனிப்பட்ட பாரம்பரியமும் உள்ளன. உணவியல் பற்றியும், திருமண இயல் பற்றியும் சில முறைகளைக் கையாச்டும், ஓரளவு பரம்பரை வழிவந்த பழக்க வழக்கங்களை மேற்கொண்டும் பல்வேறு பிரிவுகளும் ஒன்றுக்கொன்று இயைந்து ஒற்றுமையுடன் கூடி வழ்ந்து வரக்கூடிய ஒரு கூட்டு நிறுவன் போன்றதுதான், சாதிமுறை அமைப்பு ஆகும். ஒவ்வொரு பிரிவும் பிற பிரிவுகளுடைய ஈடுபாடும் தலையீடுமின்றித் தனிப்பட்ட கையில் தம்முடைய இலட்சியங்களையும் குறிக்கோள்களையும் எய்தும் முயற்சியில் பூரண சுதந்திரமுடனும், சுயேச்சையாகவும் இயங்குவதற்குக் கூடியவழிவகைகள் உள்ளன. பல்வேறு சாதிகளிடையே பல்வேறுபட்ட கடமைகளும் முழு அமைப்பினுடைய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே அனைத்தும் கருதப்பட்டன. வேத நூல்களில் காணக்கூடிய உயரிய கருத்துக்களைப் பிறருக்கு எடுத்துக் கூறவேண்டிய அமைதியும், போர்க்களத்தில் சமர்புரியும் வீரனுடைய வீரமும் திறனும், வர்த்தக வாணிபத்தில் ஈடுபட்டுள்ள வருடைய மன நேர்மையும், தொழிலாளியின் பொறுமையுணர்வும் உழைப்புத் திறனும், இவையனைத்தும் சமுதாயத்தின் நல்வளர்ச்சிக்கு வழிகோலுகின்றன. இந்த அம்சங்கள் ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட முறையில் தனிப்பட்டதொரு நிறைவுநிலை என்பது ஒன்று உண்டு. -மேலே நீங்கள் படித்தது டாக்டர் ராதா கிருஷ்ணன் அவர்களுடைய கருத்துரையாகும். ‘இந்து தர்ம்மும் வாழ்க்கையும்’ என்று நூலில், அவர் இவ்வாறு கூறுகிறார். அவரது தெளிவான கருத்தை அறிந்துகொள்ள முடியாதவாறு, அந்த நூலை மொழிபெயர்த்தவர் கொடுமையான தமிழைக் கையாண்டிருக்கிறார். ஆயினுத்ர அவருடைய தமிழையே நான் மீண்டும் மொழிப்பெயர்த்து ஓரளவு புரிந்துகொண்டேன். “சாதிப் பிரிவு என்பது நாட்டுக்குத் தேவையான நான்கு அம்சங்களைக் கொண்டது” என்கிறார் ராதா கிருஷ்ணன். 1. ஆன்மிகத் துறை 2. அரசியல், போர்த்துறை 3. வாணிபம்-தொழில்துறை 4. தொழில்களை இயக்கும் தொழிலாளிக் துறை. நான்கு வருணங்களாக அமைக்கப்பட்டன என்பது டாக்டர் ராதாகிருஷ்ணனின் வாதம். அவர்மட்டுமல்லாது, இந்து மதச் சான்றோர்களின் வாதமும் அதுதான். காழ்ப்புணர்ச்சியின்றி, ஆத்திரமின்று, த்த்துவ ரீதியாக இதை நாம் ஆராய வேண்டும். மேற்கண்ட நான்கு பிரிவுகளையும், சாதிப் பிரிவுகள் என்று அழைப்பதை நான் ஒப்புக்கொள்வதில்லை. ஒவ்வொரு வருணத்திற்குள்ளும் பல்வேறு சாதிகள் இருக்கின்றன. ஆதலால், இந்த நான்கு பெரும் பிரிவுகளும் சாதிப் பிரிவுகள் ஆகமாட்டா. முதலில், இந்த நான்கு அங்கங்களாகப் பிரித்து, ஒன்றை ஒன்று அனுசரித்து வாழும் முறையை இந்துமதம் உருவாக்கியது. ஆன்மிகத் துறையில் ஈடுபட்ட முதற்பிரிவினர். எல்லோருக்கும் கடவுள் நம்பிக்கையை உண்டாக்கவும், நீதி நியாயங்களைப் போதிக்கவும், வழிகாட்டவும் உருவாக்கப்பட்டன. இரண்டாவது பிரிவினர், அரசியலில் ஈடுபடவும், நாட்டை நிர்வகிக்கவும், பகைவரிடமிருந்து நாட்டைக் காக்கவும் உருவாக்கப்பட்டனர். மூன்றாவது பிரிவினர், வாணிபம் நடத்தவும் பொருளீட்டி நாட்டின்செல்வத்தை வளர்க்கவும் உருவாக்கப்பட்டனர். இந்த மூன்று துறைகளிலும் பயிற்சியற்றவர்கள், உடல் உழைப்பாளிகளாக இருந்து தொழில்களை இயக்கவும், கட்டடங்கள் கட்டவும் பயன்படுத்தப்பட்ட நான்காவது பிரிவினரானார்கள். இந்த நாட்று பிரிவுகளகுக்குள்ளேயுமே, அன்றைய மொத்த சமுதாயமே அடங்கி விடுகிறது என்பதை நாம் கவனிக்கவேண்டும். நாகரிக உலகத்தின் விஞ்ஞான வளர்ச்சி தோன்றுமுன்பு நாடுகள் எந்த நிலையில் இருந்தனவோ, அந்த நிலையைக் கணக்கெடுத்தே இந்தப் பிரிவுகள் வகுக்கப்படன. அந்தநாளில் பிரம்ம்ப்பிரிவைச் சேர்ந்தவன் ஆன்மிகத்துறையில்மட்டுந்தான் ஈடுப்பட்டான். க்ஷத்திரியன் அரசியலிலும் போரிலும் மட்டுந்தான் ஈடுபட்டான். வைசியன் வாணிபத்தில் மட்டும்தான் ஈடுபட்டான். (சூத்திரன் என்றால் ‘இழிமகன்’ என்று இந்து மதம் கூறுவதாக ஒரு பொய்யான வாதம் பலருடைய மனத்தைப் புண்படுத்தியிருக்கிறது) இந்த மத்த்தையோ, ‘சூத்திரன்’ என்ற வார்த்தையையோ சரியாகப்புரிந்து கொள்ளாத எவனோ இட்டுக்கட்டி உரைத்த உரை இது.) ‘சூத்திரம்’ என்றால், இயக்கப்படுவதற்கான ‘இலக்கணம்’ என்று பொருள். ‘சூத்திரன்’ என்றால் ‘இயக்குகிறவன்’ என்று பொருள். (சூத்திரதாரி என்ற வார்த்தையின் மரூஉ. அது.) ஆக அந்த நாளையச் சமுதாய அமைப்பின்படி, இந்த நான்கு வருணங்கள் பிரிக்கப்பட்டன. காலங்களால் சமுதாய அடிப்படை மாறி, அவரவர் ஏற்றுக்கொண்ட பணிகளும் மாறிவிட்டன. மேற்கூறிய நாட்கு பெரும் பிரிவைச் சேர்ந்தவர்களும் எல்லாத் தொழில்களிலும் காணப்படுகிறார்கள். ஆன்மிகத் துறையில் அனந்தராம தீட்சிதர் மட்டும் இல்லைந கிருபானந்தவாரியாரும் இருக்கிறார். வாணபத் துறையில் ஈடுபடாத சாதிகளே இல்லை. அதுபோல உடல் உழைப்பிலும் எல்லாப் பிரிவினரும் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆகவே, இந்து சமயம் தோற்றுவித்த வருணங்களின் நோக்கமே அடிபட்டுப் போய்விட்டது. தாங்கள் மேற்சாதி என்று உயர்ந்த மனப்பன்மை கொண்டவர்களும், தாங்கள் கீழ்ச்சாதி என்ற தாழ்வு மனப்பான்மைக் கொண்டவர்களும், இன்று வெகுவாக்க் குறைந்துவிட்டார்கள். கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே என்றபடி, ஹரிஜன் ஒருவர் கலெக்டராக இருக்க அவரக்குக்கீழே பிராமணர் ஒருவர் தாசில்தாராக இருப்பது இன்று சர்வ சகஜம். இந்துமதம் பிரித்த பிரிவுகள் தொழில் நோக்கம் மட்டுமே கொண்டவை. ஆகவே இன்றைய மாறதல்களூய்மு வளர்ச்சியையும் இந்து மதம் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறது. தீண்டாமை என்பதும், தாழ்ந்தவன் உயர்ந்தவன் என்பதும், வெறுப்பின் அடிப்படையிலே தோன்றிய சாதிப் பிரிவுகளாக இந்து மதத்தின்மூல வேதங்கள் எவையும் கூறவில்லை. நாடார், முதலியார், நாயக்கர், செட்டியார் என்ற சாதிப்பெயர்களெல்லாம் அந்த நாளில் ஒவ்வொரு துறையில் பங்காளிகளாக இருந்தவர்கள், தங்களுக்கு இட்டுக் கொண்ட பட்டப்பெயர் அல்லது குடும்பப்பெயர்களே! இந்தச் சாதிப்பெயர் எதையும் இந்து வேதங்களில் காண முடியாது. காலப்போக்கில், அவ்வப்போது தோன்றிய உபன்யாசிகள், வரவர் மனப்போக்கின்படி உருவாக்கிய பேதங்கே அன்றி, இவை இந்து மதம் உருவாக்கிய பேதங்கள் அல்ல. இன்றைய சமுதாய அமைப்பின்படி, இந்த நான்கு வருணங்களைத் தொழி முறையில் பிரிக்க முடியாது. காலத்தைக கொண்டு கவிதையை ஆராய்வது பேலத்தான் மத்த்தையும் நாராய வேண்டும். அந்நாளைய சமுதாய அமைபுத்தான் எந்நாளும் இருந்தாக வேண்டும் என்று இந்துமதம் வற்புறுத்தவில்லை. ஆகவே வெறுப்பின்மீது கட்டப்பட்ட எந்தக் கட்டடமும், இந்து மத்த்தால் உருவாக்கப்பட்டதல்ல என்பது உறுதி. இந்த பேதங்களை உருவாக்கியவர்கள், தீண்டானையை உருவாக்கியர்கள், முற்பிரிவினர்கள்தான் என்ற பொய் வாதத்தைத் தகர்க்க, அதே பிரிவினர்தான் அவற்றை ஒழிப்பதிலும் ஈடுபட்டார்கள் என்பதை தேசிய போராட்ட காலத்தில் நான் கண்டிருக்கிறோம். இடைக்காலத்தில் வந்த சாதிகள், நம் தலைமுறையிலேயே மறையத் தலைப்பட்டிருப்பது, ‘நாம் நல்ல காலத்தில் வாழ்கிறோம்ய என்பதைக் காட்டுவதோடு, இந்து மத்த்தின் மீது சுமத்தப்பட்ட களங்கத்தையும் துடைத்து வருகிறது. 3. வாசலில் அமீனா நிற்கிறான் தமிழர் ஒருவர் லண்டன் நகருக்குச்சென்றார். காலையில் குளித்துவிட்டுக் கட்டுக்கட்டாக விபூதி பூசினார். அதைபார்த்த ஓர் ஆங்கிலேயர் அவரிடம் கேட்டார். “ஏன் இப்படிச் சாம்பலை அள்ளி நெற்றியில் பூசுகிறீர்கள்?” தமிழர் பதில் சொன்னார்; “இந்த உடம்பு என்றாவது ஒருநாள் சாம்பலாகப் போகிறது என்பதை நாங்கள் தினமும் நினைவுப்படுத்திக்கொள்கிறோம். அதன்மூலம் கெட்ட புத்தி விலகிவிடுகிறது.” ஆங்கிலேயர் திகைத்துப்போனார். அன்று முதல் இந்து மதத்தைப்பற்றி ஆராய்ச்சி செய்யத்தொடங்கினார். இன்றும் லண்டனில் வாழ்ந்துகொண்டிருக்கும் அந்தத் தமிழர் எனக்குச் சொன்ன செய்தி இது. யாக்கை நிலையாமையை இந்து சமய த்த்துவ ஞானிகள் அடிக்கடி கூறி வந்திருப்பது, மனிதனை விரக்தியடையச் செய்வதற்கு அல்ல. வாழ்க்கையில் ஒரு தைரியத்தை உண்டக்குவதற்கே. விட்டுவிடப் போகுதுயிர்; விட்ட வுடனே உடலைச் சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார். -என்று பட்டினத்தார் மரணத்தைச் சுட்டிக் காட்டியது, ஒருநாள் மரணம் வரப்போகிறது என்பதை உணர்ந்து அதுவரை வாழ்க்கையை நேர்மையைக நடத்துமாறு செய்வதற்கே. இந்த ஞானம், ஒவ்வொர் சராசரி மனிதனுக்குக் கூட ஒருநாள் வருகிறது. ஏதாவது ஒருசாவு வீட்டுக்குப் போகும்போது “நாமும் சாகத்தான் போகிறோம்” என்ற எண்ணம் வருகிறது. அதையே மயான வைராக்கியம்’ என்பார்கள். “காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா” என்றுபாடியவர், இறைவன் படைத்த உடலை அவமானப் படுத்துவதற்காகப்பாடவில்லை. ‘பொய்யான இந்தக் காயத்தைக் காப்பாற்ற, நீ பொய் சொல்லாதே. நீ திருடாதே, பிறரை ஏமாற்றாதே. என்று எச்சரிப்பதற்கப் பாடினார். இந்த உயிர் இறைவன் கொடுத்த கடன். இந்த உடல் இலவசமாக்க் கொடுத்த பரிசு. தலை வழுக்கை விழுவதோ, ரோம்ம் நரைப்பதோ, பல் விழுவதோ இறைவன் நமக்குப் போடும் ஞாபக்க் கடிதம். ‘நீ கையெழுத்துப்போட்ட பாத்திரம் காலாவதி யாகிப் போகிறது. கடனைக் கட்டுவதற்குத்தயாராகிக் கொள். உன் உயிரை நான் ஜப்தி செய்யப்போகிறேன். -என்று இறைவன் நம்மை எச்சரிக்கிறான். உயிரை ஜப்தி செய்வதற்காக, அமீனா எப்போதும் வாசலில் நிற்கிறான் என்பதை, நமது சித்தர்களும், ஞானிகளும் சுட்டிக் காட்டினார்கள். அந்த அமீனாவுக்கு யமன் என்றும், கூற்றுவன் என்றும் பெயர் கொடுத்தார்கள். உடலின் நிலையாமையை மனிதன் உணர்ந்து கொண்டிருந்தால், கூடுமானவரை அவன் மனத்தில், நாணயம், நேர்மை, இரக்கம், கருணை எல்லாம் வளர்ந்து விடுகின்றன. சாவதற்குள் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை வருகிறது. துன்பங்களை அலட்சியப்படுத்தும் சக்தி வருகிறது. அல்லது சாவதற்குள் நன்றாக உழைத்துக் குடும்பத்திற்கு வரு வழி செய்துவிட வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. யாக்கை நிலையாமையை மறந்தவர்கள், எப்படி யாவது சம்பாதிக்க வேண்டும் என்று அலைந்து, சம்பாதித்த பணத்தைத்தாங்கள் அனுபவிக்காமலே மாண்டு போகிறார்கள். மரணத்தின் மகத்தான சக்தியை மரணம் வரு முன்பே மனிதனை அறிந்துகொள்ளச்செய்வது, இந்து சமய வாதிகளின் நோக்கங்களில் ஒன்றாகும். எதையும் அளவோடும் நியாயமாகவும் பகிர்ந்து அனுபவிக்கும் உணர்ச்சிக்கு இது அடித்தளம். ஆவியோடு காயம் அழிந்தாலும் மேதினியில் பாவிஎன்று நாம்ம், படையாதே! -மேவியசீர் வித்தாரமும் கடம்பும் வேண்டா மடநெஞ்சே! செத்தாரைப் போலத் திரி! இப்பிறப்பை நம்பி இருப்பாரோ? நெஞ்சகமே! வைப்பிருக்க வாயில் மனைஇருக்கச் – சொப்பனம்போல் விக்கிப்பற் கிட்டக்கண் மெத்தப்பஞ் சிட்டு அப்பைக் க்கிச் செத்துக் கொட்டக் கண்டு! ஒன்பதுவாய்த் தோல்பைக்கு ஒருநாளப் போலவே அன்புவைத்து நெஞ்சே அலைந்தாயே! – வன் கழுக்கள் த்த்தித்தத் திச்செட்டை தட்டிக்கட் டிப்பிட்டுக் கத்திக்குத் தித்தின்னக் கண்டு! முதற்சங்கு அமுதூட்டும், மெய்குழலார் ஆசை நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டும் – கடைச்சங்கம் ஆம்போ ததுஊதும், அம்மட்டோ? இம்மட்டோ? நாம்பூமி வாழ்ந்த நலம்! எத்தனைநாள் கூடி எடுத்த சரீரம் இவை! அத்தனையும் மண்தின்ப தல்லவோ – வித்தகனார் காலைப் படித்து மெள்ளக் கங்குல்பகல் அற்றடித்தே மேலைக் குடியிருப்போ மே? இருப்பதுபொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே! ஒருத்தருகும் தீங்கினை யுன்னாதே- பருத்ததொந்தி நம்மதென்று நாமிருப்ப நாய்நரிகள் பேயக்கழுகு தம்மதென்று தாமிருக்கும் தான்! -இவை பட்டினத்தார் பாடல்கள். காயம் நிலையாமையைப் பற்றிப் பாடிய பட்டினத்தார் வாழ்க்கையில் விரக்தியடைந்த நிலையில் தான் பாடினார் என்றாலும், அந்தச் சிந்தனை வந்த பிறகுதான், அவருக்கு அமைதி வந்தது என்பதை, அவரது வாழ்க்கையிலிருந்து காணுகிறோம். “செத்தாரைப் போலே திரி” என்று அவர் சொன்னது பற்றில்லாமல் வாழச் சொன்னதாகும். அதே நேரத்தில், ஆவியும் காயமும் அழிவதென்றாலும், பாவி என்ற பெயரைப்படைக்கக்கூடாது என்று அவர் கூறுவது கவனிக்கத்தக்கது. வாழ்க்கைகுமூன்று சங்குகள் என்கிறார் பட்டினத்தார். முதல் சங்கு பாலூட்டுகிறது, குழந்தையாக இருக்கும்போது. இரண்டாவது சங்கு திருமணத்தின்போது ஊதப்படுகிறது. மூன்றாவது சங்கு மரணத்திற்குப்பிறகு ஊதப்படுகிறது. அதிலும் வார்த்தைகளோடு அழகாக விளையாடுகிளார் பட்டினத்தார். சங்கம் என்ற வார்த்தை சங்கையும் குறிக்கும், சங்கம்ம் ஆவதையும் குறிக்கும். ‘முதற்சங்கம் அமுதூட்டும்’ என்பது, சங்கு பால்கொடுப்பதைக் குறிக்கிறது. ‘மொய்குழலார் ஆசை நடுச்சங்கம்’ என்பது, ஆண் பெண் உறவு நடுவிலே சங்கம்மாதைக்குறிக்கிறது. ‘கடைச்சங்கம்’ என்பது கடைசியில் மரணத்தில் சங்கம்மாதைக் குறிக்கிறது. “இவ்வளவுதான் நாம் பூமியில் வாழ்ந்த வாழ்க்கை” என்கிறார் பட்டினத்தார். ‘இந்த உடல் நமக்கே சொந்தம்’ என்று நாமிருக்கிறோம். ‘நாயும், நரியும், பேயும், கழுகும், தாம் ஒரு நாள் இதை உண்ணப்போகிறோம்’ என்று காத்துக்கொண்டிருக்கின்றனவாம்! நிலையாத இந்த உடம்பின் மீது எவ்வளவு மோகம்ந எவ்வளவு வருணனைகள்! இந்து உடம்பும் அழகும் பொய்யென்று நினைப்பதில் என்ன லாபம் என்று நீங்கள் கேட்க்க் கூடும்? அளவுக்கு மிஞ்சிய பற்று அடிபட்டுப் போவது, முதல் லாபம். கடற்பாம்பின் கால்கள் போல் ஆசைகள் திசைதோறும் பரவாமல், கிடைத்த வரைக்கும் நிம்மதி என்று வருவது, இரண்டாவது லாபம். அதனால்தான் இந்துக்கள், பிற மத்த்தவரைப் போல், இறந்தவர் உடலைப் புதைப்பதில்லை; எரித்து விடுகிறார்கள். இந்த உடம்புகளை தவணை முடிந்துவிட்டது; அது சாம்பலாகி விடுவதுதான்நியாயம். அதைப் புதைத்து வைத்து, இன்னும் அது இருப்பது போன்று பிரமையை உண்டாக்கக்கூடாது என்று இந்துக்கள் கருதினார்கள். புதைக்கப்பட உடலுக்கு, அது புதைக்கப்பட்ட இடம் சொந்தமாகி விடுகிறது. எரிக்கப்பட்ட உடலுக்கு, எது சொந்தம்? “காதற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என்றார்கள். இறந்த உடலுக்கு, ஏன் ஆறடி நிலத்தைச் சொந்தமாக்க வேண்டும்? அது சாம்பலாகிக் கரைந்து போவதுதான் முறை என்று நம்பினார்கள். தங்களைத் தாங்களே சரிபார்த்துக்கொள்ள நமது த்த்துவ ஞானிகள் வற்புறுத்திய நிலையே யாக்கை நிலையாமை. “அமீனா வாசலில் நிற்கிறான்.” “இறைவனிடம் வாங்கிய கடனைத் திருப்பிக் கட்டத் தயாராக இருங்கள்” 4. ஒரு புதிய சிந்தனை ராமகிருஷ்ணா மிஷனைப்போல, உத்திரப் பிரதேசம் ஷஜஹான்பூரில் ஸ்ரீராம் சந்த்ர மிஷன் என்று ஒன்று இருக்கிறது. இதனுடைய ஆதாபகர் மகாத்மா ஸ்ரீராம் சந்த்ரஜி ஆவார்கள். அவர்களைப் பற்றிய விவரங்களோடு, அவர்கள் எழுதிய ‘சத்யோதயம்’ என்று புத்தகத்தின் தமிழாக்கம் ஒன்றையும், சேலத்தைச் சேர்ந்த நண்பர் திருவேங்கடம் என்பார் எனக்கு அனுப்பியிருந்தார். இந்து மத்த்தில் ஒரு புதிய மார்க்கத்தை உபதேசிக்கிறார். எனக்குத் தெரிந்தவரை இந்த மார்க்கம் மற்றவர்கள் சொல்லாத ஒன்றாகும். விக்கிரக ஆராதனையை வெறும் ஸ்தூல ஆராதனை என்று வருணித்து அது மனத்தின் உள்நோக்கத்தை அதிகமாகப்பூர்த்தி செய்வதில்லை என்று சிலர் கூறியிருக்கிறார்கள். வெறும் ஸ்தூல வழிபாட்டில் சிக்கியவர்கள் பெரும் ஆன்மிகப்பயிற்சியைப் பெற்றிதில்லை என்று அவர்கள் வாதிக்கிறார்கள். ஸ்ரீராம் சந்த்ரஜியும் அதைத்தான் கூறுகிறார் என்றாலும், மற்றவர்கள் கூறாத புதிய கருத்துகளையும் கூறுகிறார். கோஷ்டி பஜனைகளைப் பற்றி அவர் கூறும் போது, கூட்டமாக உட்கார்ந்து பஜனை செய்வதில், தெய்வத் தியானம் விருப்பத்தை நிறைவேற்றுவதில்லை என்கிறார். விக்கிரக ஆராதனையும், பூனைகளும் பக்குவமில்லாத தாழ்ந்த நிலையில் – ஆரம்ப நிலையில் மட்டுமே பயன்படும் என்கிறார். சாதாரணமாக, இன்றைய இளைஞர்களின் மனத்தில் இதே சிந்தனை தோன்றியிருப்பது கவனிக்கத்தக்கது. “கோவிலுக்குப் போய்க் கூட்டத்தோடு கோவிந்தா போடுவதில் என்ன கிடைக்கிறது?” “பஜனைப்பாடல்களை சத்தம்போட்டுப் பாடுவதில் என்ன பயன் இருக்கிறது?” என்உறதான், இனைறைய இளைஞர்களும் கேட்கிறார்கள். ஆத்மாவுக்கு அமைதிப் பயிற்சி அளிப்பது பற்றியும், மனத்தின் கடிவாளங்களை இழுத்துப் பிடிப்பது பற்றியும், ஸ்ரீராம் சந்த்ரஜியின் கருத்துகள் சுவையாக இருக்கின்றன. முழுப் பிரயத்தனத்தோடு தனியாகத்தியானம் செய்வதை அவர் வற்புறுதுகிறார். இவை அனைத்தையும் விட, லௌகிக வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு ஒட்டுமொத்தமாகப் பற்றற்ற வாழ்க்கையையும், துறவி வாழ்க்கையும் போதிப்பதை அர் கண்டிப்பதில் அர்த்தமிருக்கிறது. குடும்ப வாழ்க்கையில் இருந்துகொண்டே பற்றுகளைச் சமநிலைப்படுத்தி, அளவற்ற ஆசையின்றிப் பண்பாடாக வாழும் வாழ்க்கையி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...