செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

சுக்கிரன் யோகம் தரும் கிரகம்

சுகபோகம் தரும் பெரும்பாலும் எல்லாரும் ஆசைப்படுவது எதற்கு? வளமான வாழ்க்கை, சுகபோகங்கள், ஆரோக்யமான நீண்ட ஆயுள். இதை பல கிரகங்கள் தந்தாலும் எல்லாவற்றிற்கும் சிகரமாக இருந்து வாரி வழங்கக்கூடிய தன்மை சுக்கிரனுக்கு உண்டு. சுக்கிரன் சுகபோகங்களின் அதிபதி. திருமண பாக்யத்துக்கு அதிகாரம் வகிப்பவர். இன்பங்களின் ஊற்றாக இருப்பவர். இயல், இசை, நாடகம் உள்ளிட்ட ஆய கலைகள் அறுபத்து நான்குக்கும் அதிபதி. தாம்பத்ய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதும் இவரது அனுக்கிரகத்தால் நடக்கக்கூடியதே. எல்லா வகையிலும் இன்பங்களை வாரி வழங்குவதாலேயே சுக்கிர பகவான் சுகபோகம் அருளக்கூடியவர் என்றும் போற்றப்படுகிறார். ஒருவருக்கு பொன், பொருள், அழகமைந்த மனைவி, சுகமான வாழ்க்கை, உயர் பதவி, கலை, வாகன் யோகம் போன்றவைகளை சிறப்புடன் வாழும் யோகத்தை தருவது சுக்ரன் ஆகும். அசுர குரு சுக்ரன் ஆவார். இவர் இகலோக ஆசையை அளிப்பவர். சுக்ரன் விடி வெள்ளி பிரகாஷமாக தெரியும் - இளமையாக இருப்பவர்கள் ஜொலிப்பார்கள் ஆக இளமையும், ரசனையையும் அளிப்பவர். ஆடல் பாடல் முதலான நளின கலைகளுக்கு நாயகன், மனைவியைக் கொடுத்து மகிழ்ச்சிகாரமான இல்லற வாழ்க்கையைத் துவக்கி வைத்துப் பரிபாலனம் செய்வர். சுக்ரன் தொழில் வேஷக்காரன், நடிகர்கள், கலைத்துறைக்காரன்கன், ஒப்பனைப் பொருட்கள், அலங்கார வஸ்த்துக்கள், ஆடம்பர வஸ்துகள், சுக்ரன் என்றால் வெள்ளை என்று பொருள், வெண்மை பொருள்கள் அனைத்துக்கும் காரகன், சுக்கில பட்சம் , வைரம் மிக பிரகாஷம் ஜொலிப்பது போல் எல்லாம் சுக்கிரன் , இளம் பெண் குறிப்பது சுக்ரன், விடியற் காலை பொழுத்தைக் குறிப்பவர் இவர், வான் மண்டலத்தில் விடியல் காலை பொழுதில் சுக்ரன் தெரிகிறார். அதிகாலையில் மனிதனுக்கு காமக் கிளர்ச்சியை ஏற்படுத்துவதும் இவர் தான். காமத்துக் காரன் சுக்ரன். களத்திரகாரகன் சுக்ரன் சுக்ரன் இல்லற் வாழ்வுக்குறியவர், சுக்ரன் மனைவி யோகம் தருபவர் ஆணுக்கு மனைவியைப்பற்றியும், பெண்ணுக்கு மண வாழ்க்கையைப் பற்றியும் சொல்லுகின்றவர். உலக வாழ்கையில் இன்பமும் செளபாக்கியங்களையும் சுக போக செளரியங்களையும் தருபவன் சுக்ரன். வாகன வசதிகளை அளிப்பவர் இவர், மிக உயர்ந்த வாகனமா, நடுத்தரமான வாகனமா, கடைசி நிலை வாகனமா, ஒன்றுக்கு மேற்பட்ட வாகனமா என குறிப்பவர் இவர்தான். ஒருவரின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியவர் இவர். கையில் காசுடையவர்களாய் வைப்பரும், சொந்த வீடு அளிப்பவரும் இவர்தான், கலை உலகில் சிறப்பான நிலையை அளிப்பவர். பெண்களிடம் மோகத்தை அளிப்பவரும், வாழ்நாள் முழுவதும் அதே நினைப்பில் இருக்க வைப்பவர் இவர்தான். ஜாதகத்தில் சுக்கிரன் தரும் யோக பலன்கள் வலுப் பெற்ற சுக்ரன் (சுக்ரன் ஆட்சி, சுக்ரன் உச்சம்) கலாரசனை என்கின்ற அற்புத உணர்வு அளிப்பவர், அழகு, அழகின் படைப்பான ஆரணங்கு, அந்த ஆரணங்கத்தின் மீது காதல் கொண்டு சுகமடையும் தகுதி, சிற்றின்பம், திருமணம் முதலான ஆணுக்கு அளிப்பவர். அதே போல் பெண்களுக்கு நளினத் தன்மையையும் அழகான தோற்றம், கவர்ச்சி, வீரியசக்தி, அறிவாற்றல், மனத்துக்கிசைந்த கணவனை அடையும் தகுதியையும், சுக போகங்களில் திளைத்து மகிழும் ஆற்றலையும் வழங்குவார். மாட மாளிகையில் வாழ்க்கை நடத்தும் பாக்கியத்தை இரு பாலருக்கும் அளிப்பவர். தனம், குடும்பம், திருமண விஷயங்களில் இவரது அருள் தேவைப்படுகிறது. சுக்கிரன் களத்திரகாரகன். அதாவது, வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடுப்பவர். ஆகையால் சுக்கிரன் நமது ஜாதக கட்டத்தில் நல்ல யோக அம்சத்துடன் இருப்பது அவசியம். லக்னத்துக்கு 1, 2, 4, 5, 7, 9, 10, 11 ஆகிய இடங்களில் பலம் பெற்று இருந்தால் நல்ல பலன்களை வாரி வழங்குவார். இவருடைய தசா காலமான 20 வருடங்களில் மிகப்பெரிய ராஜ யோக பலன்கள் உண்டாகும். அதே நேரத்தில் நீசம் 6, 8, 12 போன்ற கிரக சேர்க்கை பெற்று பலம் குறைந்து இருந்தால் எதிர்மறையான பலன்கள் ஏற்படலாம். பெண்களால் அவமானம், திடீர் இழப்புகள், செலவுகள், தன விரயம், கவுரவ குறைவு, அவமரியாதை, மர்ம ஸ்தானங்களில் வியாதி என்று கெடுபலன்கள் ஏற்படலாம். ஒவ்வொரு லக்னம், ராசிக்கும் ஒவ்வொரு கிரகம் யோகத்தைச் செய்யும். சில கிரகங்கள் அதன் ஆதிபத்ய தன்மைக்கு ஏற்ப அவயோகங்களையும் செய்யும் என்றாலும் பிரதான கிரகங்களான தேவகுரு வியாழனும், அசுர குரு சுக்கிரனும் அவரவர் ஜாதகங்களில் பலம் பெற்று இருந்தால்தான் சுகபோக சுகவாழ்க்கை கிட்டும். கார் - பங்களா நிலம், பூமி ஆகியவற்றிற்கு அதிபதி செவ்வாய். ஆனால், அதற்கு மேல் கட்டப்படும் கட்டிடங்கள் அடுக்குமாடிகள் சொகுசு பங்களாக்கள், தோட்ட வீடுகள் போன்ற நவீன கட்டிடங்களுக்கு அதிபதி சுக்கிரன் ஆவார். ஜாதகத்தில் சுக்கிர பலம் இருந்தால்தான் இதைப் போன்ற வசதியான யோகம் கிடைக்கும். அதேபோல், சுக்கிரனின் அருள் யோகம் இருந்தால்தான் ஒருவருக்கு விதவிதமான வாகனங்கள், ஆடம்பரகார்கள் சொகுசு வண்டிகளில் பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும். சுகங்களைத் தரும் சுக்ரன் சுக்ரன் என்றால் இன்பம் என்று பொருள் கொள்ளலாம். அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடியவர். இன்பம் என்கிற ஆனந்தத்தை அடைவதற்குரிய மனநிலையை உருவாக்குகிறவர் சுக்ரன். இவர் கலை உணர்வால் இன்பம் உண்டாக்குவார். அழகு, ஆராதனையால் இன்பம் ஏற்படுத்துவார். கலையம்சமுள்ள பொருட் சேர்க்கையால் இன்பம் தருவார். அழகு வனிதையால் ஆடவருக்கு சுகம் ,வாசனைத் திரவியங்களால் உற்சாகம் ஊட்டுவார். இசையால், இசையுணர்வால் இன்பம் தருவார், கற்பனை வளத்தால் மாபெரும் இன்பம் தருவார் வாசனை திரவியங்களால் சுகானுபவம் அளிப்பவார். கவியின்பம் தருவார். காவிய இன்பம் தருவார். கற்பனை வளத்தால் மா பெரும் இன்பம் தருவார். நடன நாகரீக மணிகளை உருவாக்குவார். நாடகக் கலைஞர்களைத் தோற்றுவிப்பார். வெண் திரைச் சலனப்படத்திற்கு ஆதாரம் அவர். கண்களைப் பிரதிபலிப்பவர், ஜனன உறுப்புகளைக் காப்போன். மேலே குறிப்பிட்ட இன்பத்தை யாருக்கு தருவார் என்றால் மீனத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று இருக்க, அவருக்கு நட்பு கிரகங்களின் தொடர்பும், பகை கிரக தொடர்பு இன்றி இருத்தால் கண்டிப்பாக கிடைக்கும். அதே போல் சுக்ரன் ஆட்சி வீடான ரிஷபம் மற்றும் துலாமில் இருந்தாலும் சுக வாழ்வு உண்டு. [சுக்ரனுக்கு புதன் நட்பு கிரகம். புதனின் வீடான கன்னியில் சுக்ரன் நீசம் அடைகிறார். அங்கு நீச பங்கம் பெறாமல் இருந்தால் சுக வாழ்வு எதிர்பார்க்க முடியாது... ஜோதிடத்தில் சுக்ரன் தரும் யோக பலன்கள் சுக்கிரன் ஜென்ம லக்கினத்தில் இருந்தால் அழகு, கவர்ச்சியான உடல் அமைப்பு, வசதி, வாய்ப்பு, நல்ல உடல் அமைப்பு, தைரியம் துணிவு, சுக போக வாழ்வு, நல்ல குடும்பம், ஆடை, ஆபரண சேர்க்கை, உண்டாகும். சுக்கிரன் பலம் இழந்தால் நல்லது அல்ல. சுக்கிரன் ஜென்ம லக்னத்திற்கு 2ல் இருந்தால் வசதி வாய்ப்பு, நல்ல குடும்பம் அழகான கண்கள், பொன் பொருள் சேர்க்கை சுக வாழ்வு சொகுசு வாழ்வு உண்டாகும். கவர்ச்சியான பேச்சால் மற்றவர்களைக் கவரும் நிலை உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்று பலம் இழந்தால் கண்களில் பாதிப்பு, தவறான பெண் தொடர்பு தீய பழக்க வழக்கம் உண்டாகும். சுக்கிரன் 3ல் இருந்தால் எடுக்கம் முயற்சியில் அனுகூலம், கலை, இசை ஆர்வம், வசதி வாய்ப்பு உண்டாகும். குறிப்பாக இளைய உடன் பிறப்பு ஸ்தானம் என்பதால் இளைய சகோதரி பிறப்பு உண்டாகும். சந்திரன் சேர்க்கை பெற்றால் கலை, இசைத்துறையில் சாதனை செய்ய நேரிடும். சுக்கிரன் 4ல் இருந்தால் நல்ல அறிவாற்றல், கல்வி, அசையும் அசையா சொத்து, சுக வாழ்வு, சொகுசு வாழ்வு தாராள தன வரவு உண்டாகும். பொதுவாக சுபர் பார்வையும் இருந்தால் வாழ்வில் ஏற்றம் தாய்க்கு நீண்ட ஆயுள் உண்டாகும். பெண்ணுக்கு 4ம் வீடு கற்பு ஸ்தானம் என்பதால் பாவிகள் சேர்க்கை பெற்றால் கற்பு நெறி தவறிய பெண்ணாக இருப்பாள். சுக்கிரன் 5ல் இருந்தால் வசதி வாய்ப்பு, பூர்வீக சொத்து, கல்வியில் மேன்மை, மகிழ்ச்சியான மண வாழ்வு, பெண் குழந்தை யோகம் உண்டாகும். சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்றால் கலப்பு திருமணம் காதல் திருமணம் உண்டாகும். சுக்கிரன் 6ல் இருந்தால் உறவினர்களால் அனுகூலம், தேவையற்ற செலவுகள், வீண் செலவுகள், திருமணம் காலதாமதமாக நடக்கும் நிலை, சுக வாழ்வு பாதிப்பு உண்டாகும். பலம் இழந்து பாவிகள் சேர்க்கை பெற்றால் திருமண வாழ்வில் பிரச்சனை, கண் களில் பாதிப்பு, பெண்கள் வழியில் எதிர்ப்பு, ரகசிய நோய்கள் உண்டாகும். சுக்கிரன் 7ல் இருந்தால் சுப பார்வையும் கிரக சேர்க்கை இல்லாமல் இருந்தால் மண வாழ்வில் மகிழ்ச்சி, சந்தோஷம் வசதி, வாய்ப்பு ஏற்படும். கிரக சேர்க்கை பெற்றால் எத்தனை கிரகமோ அத்தனை தாரம். சுபர் சேர்க்கை நல்லது. பாவிகள் சேர்க்கை பெற்றால் கலப்பு திருமணம் காதல் திருமணம், பலம் இழந்தால் திருமண வாழ்வில் பிரச்சனைகளும் பிரிவு உண்டாகும். சுக்கிரன் 8ல் இருந்தால் சுக வாழ்வு பாதிக்கும், தாமத திருமணம், வீடு, வாகனம் அமையத் தடை உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்றோ, அஸ்தங்கம் பெற்றோ சூரியன் இருந்தால் ரகசிய நோய், உடல் உறவில் ஈடுபட முடியாத நிலை, கண்களில் நோய் உண்டாகும். சுக்கிரன் 9ல் சுபர் கிரக பார்வை மற்றும் சேர்க்கையுடன் இருந்தால் தந்தைக்கு நீண்ட ஆயுள், செல்வம், செல்வாக்கு, வசதி, வாய்ப்பு பூர்வீகத்தால் அனுகூலம், மனைவி மூலம் சொத்துக்கள் சேரும் யோகம், சந்தோஷமான குடுமுப வாழ்வு, பொதுக் காரியங்களில் ஈடுபட்டு சமுதாயத்தில் நற்பெயர் உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்றால் வெளியூர் வெளிநாடு யோகம், பெண் சேர்க்கை உண்டாகும். சுக்கிரன் 10ல் இருந்தால் கலை, இசை, பெண்கள் உபயோகிக்கும் பொருட்கள் மூலம் லாபம், பெண் தொடர்புள்ள தொழில் உத்தியோகம் மூலம் உயர்வு உண்டாகும். ஆடை, ஆபரணம், வண்டி வாகனம் மூலம் நற்பலன் உண்டாகும். சிலர் மனைவியுடன் கூட்டு தொழில் செய்யும் யோகம் உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்றால் சில தவறான செயல்களில் ஈடுபட நேரிடும். சுக்கிரன் 11ல் இருந்தால் நல்ல அறிவாற்றல், வசதி, வாய்ப்பு, எதிர்பாராத தன சேர்க்கை அசையும், அசையா சொத்து சேர்க்கை, உடன் பிறப்பு மூலம் அனுகூலம், பெண், மூத்த உடன் பிறப்பு யோகம் உண்டாகும். சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்றால் நிறைய பெண் தொடர்பு, தவறான வழியில் சம்பாதிக்கும் நிலை உண்டாகும். பலம் இழந்தால் தவறான பெண் தொடர்பு உண்டாகும். சுக்கிரன் 12ல் இருந்தால் சுபர் பார்வை மற்றும் சேர்க்கை உடன் 12ல் இருந்தால் சுக வாழ்வு, சொகுசு வாழ்வு, உடல் உறவில் எல்லை இல்லாத மகிழ்ச்சி சுகத்திற்காக நிறைய செலவு செய்ய நேரிடும். சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்று பலம் இழந்தால் தவறான பெண் தொடர்பால் இழப்பு, தீய பழக்க வழக்கம், ரகசிய நோய்கள் கண்களில் பாதிப்பு, வீண் விரயம், ஏழ்மை ஏற்படும். ஜாதகத்தில் சுக்ரன் நிலையும் காமக் கலையும் துலாம் லக்னத்திற்கு சுக்கிர பகவான் லக்னாதிபதியாகி லக்னத்தில் ஆட்சி பெற்று மாளவ்ய யோகம் தருவார். துலாம் ராசி சுக்கிரனுக்கு மூலத்திரிகோண வலுவுள்ள இடமும் ஆகும். இங்கிருக்கும் சுக்கிரன் சனியும்சேர்ந்து , உச்சம் பெற்றிருந்தால் ஜாதகர் அதீத காம ஈடுபாட்டுடன் இருப்பார். பெண் பித்தராகவும் இருக்கலாம். ஜாதகர் சும்மா இருந்தாலும் பெண்கள் அவரைச் சும்மா இருக்க விட மாட்டார்கள். சனியும் பலம் பெற்றிருப்பதால் ஜாதகர் கடின உழைப்பிற்கு அஞ்சாதவராகவும், நெஞ்சுரம் கொண்டவராகவும், கருணையற்ற முடிவுகளை எடுப்பவராகவும், பிடிவாதக்காரராகவும், உயரம் குறைந்தவராகவும் இருப்பார். அதேநேரம் சனி வக்ரம் அடைந்திருந்தாலோ அல்லது வேறு வகையில் பலம் இழந்திருந்தாலோ இந்த பலன்கள் மாறும். மற்றபடி இங்கு தனித்த நிலையில் வலுவுடன் இருக்கும் சுக்கிரனின் தசையில் ஏதேனும் ஒரு பத்து வருடங்கள் சிறந்த மாளவ்ய யோகம் கிடைக்கும்.லக்னாதிபதிக்கு வேறு கெட்ட ஆதிபத்தியங்கள் இருந்தாலும் லக்ன பலனே வலுப்பெறும் என்று நமது கிரந்தங்கள் கூறினாலும் அனுபவத்தில் அது சரியாக வரவில்லை. துலாம் லக்னத்திற்கு அஷ்டமாதிபத்திய பலனையும் சுக்கிரன் செய்யத்தான் செய்கிறார்.வலுவுடன் இங்கிருக்கும் சுக்கிரனால் ஜாதகர் சிறந்த கலாரசிகராக இருப்பார். திறந்தமனது, அழகுணர்ச்சி, வெளிப்படையான பேச்சு. உண்மைக்குணம் ஆகியவை ஜாதகரிடம் நிரம்பியிருக்கும். சிற்றின்பப் பிரியராக இருப்பார். உண்மைக் காதலராக இருப்பார் என்பதால் பெண்களால் விரும்பப்படுவார். சிறந்த ஆடம்பரமான சொகுசு வாழ்க்கை சுக்கிரனால் கிடைக்கும். வாழ்க்கையில் நல்ல மேலான நிலைக்குச் செல்ல முடியும். விருச்சிக லக்னத்திற்கு சுக்கிரன் ஏழாமிடத்தில் ஆட்சி பெற்று மாளவ்ய யோகத்தை அளிப்பார். சுக்கிரன் இங்கிருப்பது களத்திர தோஷத்தை அளிக்கும் என்பதால் இங்கு அவர் பலம் பெறும் நிலையில் தாமத திருமணம் அல்லது முறையற்ற திருமணத்தை அளிப்பார். ஆயினும் இயற்கைச் சுபரான சுக்கிரன் இங்கிருந்து லக்னத்தைப் பார்வையிடுவார் என்பதால் ஜாதகர் நல்ல குணங்களைப் பெற்றிருப்பார். இந்த லக்னத்திற்கு சுக்கிரன் பனிரெண்டுக்குடைய போக ஸ்தானாதிபதியுமாவார். அவர் அயன சயன போகஸ்தானத்திற்க்கு எட்டில் மறைந்து ஏழாமிடத்தில் ஆட்சி பெறுவது ஒரு வகையில் நல்ல நிலை தான்.விருச்சிக லக்னத்திற்கு ஏழாமிடத்தில் பலம் பெற்று தசை நடத்தும் நிலையில் இங்கிருக்கும் சுக்கிரன் பெண்கள், காதல், காமம் சம்பந்தப்பட்ட பலன்களையே பெரும்பாலும் செய்வார். மேலும் ரிஷபம் சுக்கிரனின் பெண்ராசி என்பதாலும் அது பற்றிய பலன்கள் சற்றுத் தூக்கலாகவே இருக்கும். விருச்சிக லக்னத்தவர்களுக்கு சுக்கிரனின் காரகத்துவங்களான வீடு, வாகனம் போன்றவைகளை சுக்கிரன் செய்வது கடினம். தனது தசையில் அவர் பெண்கள், காமம், உல்லாசம், கேளிக்கை, வெளிநாட்டு வேலை, அயல்தேசவாசம், பெண்களால் செலவு, முறை தவறிய போகம் ஆகிய பலன்களையே செய்வார்.சுக்கிரன் களத்திரகாரகன் என்பதால் திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கைத்துணையின் வழியாக ஜாதகர் நல்ல பலன்களை அனுபவிப்பார். தனுசு லக்னத்திற்கு நான்காம் இடமாகிய மீனத்தில் சுக்ரன் உச்சம் பெற்று மாளவ்ய யோகத்தை சுக்கிரன் செய்வார். தனுசு லக்னத்திற்கு ஆறு, பதினொன்றுக்குடைய ஆதிபத்திய விசேஷம் இல்லாத பாவி இவர். ஒரு சூட்சும நிலையாக தனுசு லக்னத்திற்கு சுக்கிரன் அவரது காரகத்துவங்களை வலிமையாகச் செய்ய வேண்டுமெனில் சுக்கிரனை விட லக்னாதிபதி குருபகவான் வலிமை பெற்றிருக்க வேண்டும் ஏனெனில் நமது ஞானிகளால் ஜென்ம விரோதிகளாக உருவகப் படுத்தப்பட்ட கிரகங்களின் லக்னத்தில் பிறப்பவர்களுக்கு எதிரிக் கிரகங்கள் லக்னாதிபதியை விட வலுப்பெற்றால் யோகத்தை அனுபவிக்க முடியாது. லக்னாதிபதி குரு வலுப்பெறும் நிலையில் இந்த லக்னத்திற்கு நான்காமிடத்தில் உச்சம் பெற்று திக்பலமும் பெறும் சுக்கிரன் தனது தசையில் அவரது நல்ல காரகத்துவங்களைச் செய்வார். ஆயினும் இந்தக் கட்டுரைகளின் ஆரம்பத்தில் நான் சொன்னதைப் போல எதிரியின் லக்னங்களுக்கு கிரகங்கள் முழுமையான யோகம் தராது. நிச்சயமாக மனைவி தாம்பத்திய சுகம் காமம் போன்றவற்றில் ஏதாவது ஒரு குறையை சுக்கிரன் செய்தே தீருவார். இங்கு இருக்கும் சுக்கிரன் மிகச்சிறந்த வசதியான ஆடம்பரமான வாழ்வை ஜாதகருக்கு தருவார். நல்ல வீடு அமையும். உயர்தர வாகனம், கல்வி, ஆரோக்கியம், தன் சுகத்திற்காக எதுவும் செய்தல், மற்றும் அம்மா வழியில் மிகச்சிறந்த லாபங்கள், தாயைத் தெய்வமாகக் கருதுதல் போன்ற பலன்களை அளிப்பார். சில நிலைகளில் மேற்சொன்ன எல்லா வசதிகளையும் ஜாதகருக்கு அளித்து திருமண வாழ்வில் நாட்டம் இல்லாத நிலையை சுக்கிரன் உண்டு பண்ணுவார் இங்கிருந்து அவர் பத்தாம் இடத்தை பார்வையிடுவார் என்பதாலும் மீனம் குருவின் வீடு என்பதாலும் ஜாதகரை ஆன்மீகம் சம்பந்தப்பட்ட இனங்கள் மற்றும் தனது காரகத்துவங்கள் ஏதேனுமொன்றில் ஈடுபடுத்தி செல்வம் தருவார். இந்த லக்னத்திற்கு அவர் ஆறுக்குடையவர் என்பதால் தசையின் ஏதேனும் ஒரு பத்து வருடங்கள் சில சிக்கல்களையும் ஏற்படுத்துவார். ஆனால் சுக்கிரன் இயற்கைச் சுபர் என்பதாலும் சுபகாரகத்துவங்கள் உள்ளவர் என்பதாலும் பெரிதாக பாதிக்காது. மகரம் மகர லக்னத்திற்கு சுக்கிரன் ஐந்து மற்றும் பத்தாமிடத்திற்கு அதிபதியாகி பத்தில் ஆட்சி பெற்று மாளவ்ய யோகம் தருவார். சுக்கிரன் இயற்கைச் சுபக்கிரகம் என்பதால் பெருங்கேந்திரமான பத்தாமிடத்திற்குப் பதிலாக திரிகோணமான ஐந்தில் அவர் ஆட்சி பெறுவதே நன்மைகளைத் தரும். ஆயினும் பத்தாமிடத்தில் அவர் மாளவ்ய யோகம் தருவார் என்பதால் தனது காரகத்துவங்களுக்கு உட்பட்ட சினிமா, தொலைக்காட்சி, மாடலிங், டெக்ஸ்டைல்ஸ், ஹோட்டல், டிராவல்ஸ், லாட்ஜிங், பேன்சி அயிட்டங்கள், அவசியம் இல்லாத ஆடம்பர பொருட்கள், பெண்கள் சம்பந்தப்பட்ட பொருட்கள் போன்ற துறைகளில் ஜாதகரை வழி நடத்தி செல்வம் அளிப்பார். துலாம் சரராசி என்பதாலும் சரராசியில் வலுப்பெறும் கிரகங்கள் மிகப் பெரிய யோகத்தைச் செய்யும் என்பதாலும் மாளவ்யயோகம் மகர லக்னத்திற்கு நன்கு பலன் தரும். ஆயினும் இங்கிருக்கும் சுக்கிரனுடன் சனி இணைய கூடாது. மகர லக்னத்திற்கு சனி லக்னாதிபதியாகி பத்தாமிடமாகிய துலாத்தில் உச்சம் பெறுவார். என்னுடைய கருத்தின்படி சனி லக்னாதிபதியே ஆனாலும் நேரடியாக உச்சம் பெற்று வலிமை பெறக்கூடாது. அவ்வாறு வலுப்பெற்றாலும் வேறுவகையில் கெட்டு சூட்சும வலுதான் பெற வேண்டும் இங்கு பூரண வலுவுடன் உச்சமாகும் சனிபகவான் சுக்கிரன் தர இருக்கும் நல்ல பலன்களைக் கெடுப்பார். எனவே இங்கு சனி சுக்கிரனுடன் இணைந்து இருந்தாலும் வக்ரம் போன்ற நிலைகள் பெற்று வலிமை இழந்து இருப்பது நல்லது. இந்த இடத்தில் திக்பலத்தை சுக்கிரன் இழந்து கேந்திராதிபத்திய தோஷமும் பெறுவார். அவர் தனித்து இருக்கும் நிலையில் தோஷம் வலுப்பெறும். இது நன்மைகளைத் தராது. புதனுடன் இணைத்திருப்பது நல்ல யோகம் பத்தாமிடத்தில் அவர் இருக்கும் நிலையில் நான்காமிடத்தை பார்வையிடுவார் என்பதால் தனது தசையில் அழகிய பெரிய வீடு, நல்ல வாகனம், சுகமான வாழ்க்கை, உயர்கல்வி, தனக்கு ஈடுகொடுக்கும் நல்ல வாழ்க்கைத்துணை, தாயார் வழியில் முன்னேற்றம் ஆகியவற்றை சிறப்புடன் வழங்குவார். கும்பம் : கும்ப லக்னத்திற்கு நான்காமிடத்தில் ஆட்சி பெற்று சுக்கிரன் மாளவ்ய யோகம் தருவார். மேலும் கும்ப லக்னத்திற்கு சுக்கிரன் பாதகாதிபதியும் ஆவார். இந்த லக்னத்திற்கு சுக்கிரன் இரண்டில் உச்சம் பெறுவதை விட தனது பாதக ஸ்தானமான ஒன்பதாமிடத்திற்கு எட்டில் மறைந்து நான்கில் ஆட்சி பெறுவது சிறப்பான நிலைதான். மேலும் சுக்கிரன் இந்த இடத்தில் திக்பலமும் பெறுவார். இந்த இடத்தில் இருக்கும் சுக்கிரன் கேந்திராதிபத்திய தோஷமும் பெறுவார் என்பதால் சிம்ம லக்னத்திற்கு நான் சொன்னது கும்பத்திற்கும் பொருந்தும் இங்கிருக்கும் சுக்கிரன் பத்தாமிடத்தை தொடர்பு கொள்ளும் நிலையில் தனது தசையில் தனது காரகத்துவங்களான சினிமா, தொலைக்காட்சித் துறை, வீடியோ சாதனங்கள், பெண்களின் பொருட்கள், உணவுக் கூடம், துணி விற்பனை, வெண்மையான பொருட்கள், வாகனத்துறை, ஆடம்ப சொகுசுப் பொருட்கள் போன்றவற்றில் ஜாதகரை வழி நடத்தி பணக்காரர் ஆக்குவார். நான்காமிடத்தில் இருப்பதால் பெரிய வீடு, நல்ல வாகனம், கல்வி, ஆடம்பரமான வாழ்க்கை, தாயாரை தெய்வமாக மதித்தல் போன்ற நல்ல பலன்களை தனது தசையில் ஜாதகருக்கு அருளுவார். இங்கு யோகம் தரும் நிலையில் சுக்கிரன் இருந்தாலும் கும்ப லக்னத்திற்குப் பாவிகளான சூரிய சந்திர செவ்வாய் ஆகியோரின் நட்சத்திரத்தில் தான் அவர் இருக்க முடியும். எனவே யோகம் செய்யும் நிலையிலும் சில குறைகள் இருக்கும். மேலும் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் சுக்கிரன் இருந்தால் ஜாதகர் சிற்றின்பப் பிரியராக இருப்பார். காம இச்சையில் அதிக ஈடுபாட்டுடனும் செயல்திறனுடனும் இருப்பார். பெண்கள் இவரை விரும்புவார்கள். பெண்களுக்காக எதையும் செய்வார். கிருத்திகை நட்சத்திரத்திலிருந்தால் ஏழுக்குடையவரின் சாரம் பெறுவதால் காதல், உல்லாசம், கேளிக்கை, இளமை விளையாட்டுகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவராகவும், வருமானத்தை பெண்கள் விஷயத்தில் செலவு செய்பவராகவும் இருப்பார். மீனத்திற்கு லக்னத்தில் உச்சம் பெற்று சுக்கிரன் மாளவ்ய யோகம் தருவார். ஆயினும் இந்த லக்னத்திற்கு சுக்கிரன் மூன்று, எட்டுக்குடைய ஆதிபத்திய விசேஷம் இல்லாத பாவி ஆவார். அஷ்டமாதிபதி லக்னத்தில் உச்சம் பெறுவது நல்லதல்ல என்றாலும் அவர் இயற்கை சுபர் என்பதால் எட்டுக்குடையவனின் கெடுதல்கள் எதுவும் இருக்காது. ஆயினும் தனுசு லக்னத்திற்கு நான் சொன்னதைப்போலவே சுக்கிரன் இங்கு உச்சம் பெற்றால் அவர் தரும் யோகத்தை முறைப்படி அனுபவிக்க லக்னாதிபதி குருபகவானும் அதிவலு அடைந்திருக்க வேண்டும். சுபர் உச்சம் பெறுவதால் இந்த அமைப்பு உள்ள பெரும்பாலானவர்கள் அழகான தோற்றம் உடையவராக இருப்பார்கள். இவர்களுக்கென்று தனித்துவமான சிந்தனை இருக்கும். வேறு கிரகங்களின் பாதிப்பு இருந்தால் இவர்களின் வழி தனிவழியாக இருக்கும். இளமையில் எந்நேரமும் காதலின் நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருப்பார்கள். தான் காதலிப்பவரின் மேல் அதீத ஈடுபாடும் வெறித்தனமான அன்பும் இருக்கும். அதனாலேயே சிக்கலான ஒத்துவராத முடிவுகளை எடுப்பார்கள். இங்கிருக்கும் சுக்கிரன் ஏழாமிடத்தை உச்சமாகிப் பார்ப்பதால் இவர்களுக்கு காம உணர்ச்சி மிகுதியாக இருக்கும். எப்போதுமே இளமையில் வரும் சுக்கிரதசை இவர்களை திசை திருப்பி விடுகிறது. மீனலக்னத்திற்கு சுக்கிரன் தனது சுப காரகத்துவங்களைச் செய்ய மாட்டார். அதற்குப் பதிலாக தனது தசை,புக்திகளில் ஜாதகரை வெளிநாட்டு இனங்களில் தொடர்பு படுத்துவார். வெளிநாட்டில் அல்லது தூர இடங்களில் வேலை செய்ய வைப்பார். அயல்தேசக் குடிமகன் ஆக்குவார். வாழ்க்கைத்துணையை வெளிநாட்டில் காண வைப்பார். விருந்துகள் கேளிக்கைகள் உள்ளிட்ட இளைமையின் அத்தனை பரிமாணங்களிலும் ஜாதகரை ஈடுபடுத்துவார். சொகுசு வாழ்க்கையும் தருவார் களத்திரகாரகன் என்பதால் மாளவ்யயோகம் எனும் வாழ்க்கையின் தேவைகளை திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கைத்துணையின் மூலமாக சுக்கிரதிசையில் செய்வார். சுக்கிரனால் வரும் நோய்கள் சுக்கிரன் பலம் குறைந்து ஜாதகத்தில் இருந்தால் கட்டி, பிளவை, மர்மஸ்தான நோய்கள், பால்வினை நோய்கள் போன்றவை ஏற்படும். கண்நோய், கண் பார்வைக் கோளாறு போன்றவை உண்டாகும். சுக்கிலத்திற்கு அதிபதியாக இருப்பதால் விந்து குறைபாடு, விந்து அணு குறைபாடு ஏற்படும். ஆகையால் குழந்தை பாக்கியம், குழந்தை பாக்கியத்தடை குறைகள் ஏற்படும். சுக்ரன் பரிகாரம் சுக்கிரன் பலம் பெற்றோ, குறைந்தோ இருந்தாலும், சுக்கிரனுக்குரிய பரிகாரம் செய்வதன் மூலம் யோகங்கள் விருத்தியடையும். வெள்ளிக்கிழமை விரதம் இருந்து அம்பாள் கோயில்களில் நெய் விளக்கேற்றி வழிபடலாம். பௌர்ணமி அன்று அம்பாளுக்கு மொச்சை சுண்டல் நிவேதனம் செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக தரலாம். ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை தரிசிக்கலாம். கும்பகோணம் அருகே கஞ்சனூர் சுக்கிர தலத்தில் தனது தேவியருடன் அருள் பாலிக்கிறார், சுக்கிர பகவான். இவரை வழிபட்டால் எல்லாவகைத் திருமணத் தடைகளும் நீங்கும். கருத்துவேறுபாட்டால் பிரிந்த தம்பதியர் இங்கு மனமுருக பிரார்த்தித்தால் ஒன்று சேர்வார்கள். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட பிணக்குகளை தீர்த்து வைத்து, அவர்களிடையே அன்யோன்யத்தை ஏற்படுத்தக்கூடியது கஞ்சனூர். சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் உள்ள வெள்ளீச்சரம் கோயில், சுக்கிரனுக்கு உரிய தலம். இங்குள்ள சுக்ரேஸ்வரரை வழிபடுவதால் கண் கோளாறுகள் நிவர்த்தியாகும். வெள்ளிக்கிழமை விளக்கேற்றி வைத்து அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் சொல்லி சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு கொடுத்து அவர்களின் ஆசி பெற்றால் தோஷங்கள், தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். கிழமை - வெள்ளி தேதிகள் - 6, 15, 24 நட்சத்திரம் -பரணி, பூரம், பூராடம் ஆட்சி வீடு -ரிஷபம், துலாம் உச்சம் -மீனம் நீச்சம் - கன்னி ரத்தினம் -வைரம் உலோகம் - வெள்ளி தானியம் -மொச்சை நிறம் -வெண்மை ஆடை - வெண்பட்டு தசா காலம் - 20 ஆண்டுகள் கிரக அமைப்பு - பெண் வாகனம் - கருடன் புஷ்பம் -வெள்ளை தாமரை சுவை -இனிப்பு. சுக்ரன் வரலாறு நவகிரகங்களில் முக்கிய சுப கிரகமாக விளங்கும் சுக்கிரன், பார்க்கவன் என்று அழைக்கப்படுகிறார். பார்க்கவன் காசி நகரம் சென்று சிவலிங்க பிரதிஷ்டை செய்து பன்னெடுங்காலம் கடுந்தவம் செய்தார். அதனால் மனம் மகிழ்ந்த ஈசன் பார்க்கவன் விரும்பியவாறே இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் அமிர்த சஞ்சீவினி மந்திரத்தை உபதேசித்தார். அசுரர்கள் இதனையறிந்து சுக்கிரனை தங்களது குலகுருவாக கொண்டனர். தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் ஏற்பட்ட போர்களில் இறந்த அசுரர்கள், சுக்கிராச்சாரியாரின் அமிர்த சஞ்சீவி மந்திரத்தால் உயிர்பெற்று எழுந்தனர். இந்நிலையில் தேவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. தேவர்கள் அனைவரும் சென்று சிவபெருமானிடம் முறையிட்டனர். தான் கொடுத்த வரபலத்தை தவறான வழியில் பயன்படுத்தும் அசுர குருவாகிய சுக்கிரனை சிவபெருமான் விழுங்கிவிட்டார். பலகாலம் சிவனின் வயிற்றில் இருந்து, பின்பு அமரர்களின் வேண்டுகோளின்படி சுக்கில வழியாக வெளியே வரச் செய்ததனால் 'சுக்கிரன்' என்றும் தூய வெண்மையாக வந்ததனால் 'வெள்ளி' என்றும் பெயர் ஏற்பட்டது. அதனால் யாவராலும் வணங்கப்படும் கிரக பதவி கிட்டியது. மகாபலியிடம் திருமால் வாமனனாக வந்து மூன்றடி மண் கேட்டபொழுது கமண்டலத்திலுள்ள நீர் வெளியே வராமல் வண்டு உருவம் எடுத்து துவாரத்தை சுக்கிராச்சாரியார் அடைக்க, திருமால் தர்ப்பையால் குத்த, அசுர குருவின் கண் குருடாகியது. இதனால்தான் ஜாதகத்தில் சுக்கிரன் பலம் குறைந்தால் கண் பார்வை பிரச்னைகள் ஏற்படுகிறது. ஒவ்வொருவர் வாழ்க் கையிலும் இன்ப-துன்பங்கள், ஏற்ற-இறக்கங்கள், லாப- நஷ்டங்கள் மாறி மாறி வருகின்றன. இது இயற்கையின் நியதிதான் என்றாலும் கிரக அம்ச யோகங்களால் திடீர் பதவி, பங்களா, செல்வம், செல்வாக்கு என்று சிலர் அனுபவிக்கிறார்கள். இந்த அமைப்புகள் கிடைக்க பூர்வ புண்ணியமே காரண மாகும். இந்த பூர்வ யோகத்தை நாம் பிறக்கும்போதே நம் ஜாதக கட்டத்தில் நம் கண்ணுக்குத் தெரியாமல் இறைவன் எழுதிவிடுகிறான். அந்த யோக தசைகளுக்கு ஏற்ப நம் வாழ்க்கைச் சக்கரம் சுழல்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...