வியாழன், 27 ஆகஸ்ட், 2015

குண்டலினி சக்தி என்பது உங்களுக்குள் இருக்கும் ‘வெளிப்படாதசக்தி’

 அது தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் வரை, அப்படியொரு சக்தி உங்களுக்குள் இருப்பதைக் கூட நீங்கள் அறியமாட்டீர்கள். ஆம், ‘அசையாத வரை’ இல்லாதது போல் இருக்கும், ஆனால் அது எழுச்சியுற்று, வெளிப்பட ஆரம்பித்துவிட்டாலோ, இத்தனை சக்தியும் உங்களுக்குள் தான் இருந்ததா என்று நீங்கள் மலைத்துப் போவீர்கள். இக்காரணத்தினால்தான் இந்த சக்தியை ‘சுருண்டு கிடக்கும் பாம்பாக’ குறித்தார்கள். சுருண்டு கிடக்கும் பாம்பு நகர ஆரம்பிக்கும் வரை, யார் கண்ணிலும் படாது. அதேபோல் தான் உங்களுள் அமிழ்ந்திருக்கும் இந்த சக்தி எழுச்சியுற்று நகரும் வரை, அதை நீங்கள் உணரமாட்டீர்கள்.இந்த சக்தி எழுச்சியுறும் போது, நீங்கள் கற்பனையில் கூட நினைத்திடாதஅதிசயங்கள் உங்களுக்குள் நடக்கத் துவங்கும். முற்றிலும் புதுவிதமான, அபரிமிதமான சக்தியோட்டம் உங்களுக்குள் நிகழ, அனைத்துமே வேறு வகையில் இயங்கும்.
குண்டலினியை எளிமையாக விளக்க உங்கள் வீட்டின் சுவற்றில் பிளக் பாயிண்ட் (plug point) இருக்கிறது. அது தானாக மின்சாரத்தை உருவாக்குவதில்லை. எங்கோ ஓரிடத்தில் ஒரு பெரிய மின்சாரத் தயாரிப்பு நிலையம் இருக்கிறது, அதுதான் மின்சாரத்தை உருவாக்குகிறது,ஆனால் அது உங்களுக்கு நேரடியாக மின்சாரத்தை வழங்க முடியாது.இந்த பிளக் பாயிண்ட்தான் உங்களுக்குமின்சாரத்தைக் கொடுக்க முடியும். பெரும்பாலானவர்கள் அந்த மின்நிலையத்தை நினைத்துக்கூட பார்ப்பதில்லை, இல்லையா? அவர்களுக்கு அப்படி என்றால் என்னவென்று தெரியாமல் இருந்தாலும், ஒரு மின்சாதனத்தை இந்த பிளக் பாயிண்டோடு இணைத்துவிட்டால், அந்த சாதனம் வேலை செய்யும் என்பது மட்டும் தெரிந்திருக்கிறது. இந்தக் குண்டலினியும் ஒரு பிளக் பாயிண்ட் போலத்தான், அதுவே ஒரு மின்நிலையம் அல்ல. இது 3 பின்களைக் (pin) கொண்ட பிளக் பாயிண்ட் அல்ல. 5 பின்களைக் கொண்ட பிளக் பாயிண்ட். இதை இப்படிப் பார்க்கலாம். உடலில் இருக்கும் ஏழு சக்கரங்கள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதில் மூலாதார சக்கரம், அடிப்படை அல்லது ஆதாரமாக இருக்கும் சக்கரம். இது ஒரு பிளக் பாயிண்டைப் போலவும் அடுத்த 5 சக்கரங்கள் சேர்ந்து 5 பின்கள் கொண்ட ஒரு பிளக் போலவும் இருக்கிறது.ஏழாவது சக்கரம் ஒரு பல்பைப் (bulb) போன்றது. இப்போது பிளக்கை பிளக் பாயிண்ட்டில் சொருகினால், உங்களைப் பற்றிய அனைத்தும் ஒளிவிடுகின்றன. இப்போது உங்களைப் பற்றிய அனைத்தையும் படிக்க முடியும். இப்படி உங்களுடைய பிளக் அதற்கான பிளக் பாயிண்டில் சரியாக சொருகப்பட்டு விட்டால், பிறகு விளக்குகள் இருபத்தி நான்கு மணி நேரமும் பிரச்சனையின்றி தொடர்ந்து எரியும். பேட்டரி தீர்ந்துவிடுமோ என்று பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது. எனவே, உங்களில், பிளக் சரியாக பிளக் பாயிண்டில் இணைக்கப்பட்டிருக்கும்போது, நீங்கள் எல்லையில்லாத சக்தியின் மூலத்தோடு தொடர்பு கொள்கிறீர்கள். அதுதான் குண்டலினி.
யோகா செய்வதன் அடிப்படையே அவர்களுக்குள் ஒரு சமநிலையை ஏற்படுத்துவதுதான். அந்த சமநிலை வந்துவிட்டால், பிறகு ப்ளக்கை பிளக் பாயிண்டில் சரியாக சொருகி விடுவீர்கள். அப்படிச் சரியாக தொடர்பு கொள்ளும்போது, எல்லையில்லாத சக்தியுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பீர்கள்.
குண்டலினியும் அதனை உணர்தலும்--------- சக்தி நிலை கூடுகிறது என்றால் உங்கள் ‘ஆழ்ந்து உணரும்’ ஆற்றலும் கூடுகிறது. யோக விஞ்ஞானம் முழுவதுமே உங்களின் இந்த நுண்ணுணர்வை அதிகரிக்க உருவாக்கப்பட்டவை தான். ஆன்மீக செயல்முறை என்றாலே உங்களின் உணரும் திறனை அதிகரிப்பதற்குத்தான்… ஏனெனில் உங்கள் அறிவின் சாரம், நீங்கள் அறிபவை எல்லாம் நீங்கள் உணர்வதை சார்ந்தே இருக்கிறது. சிவன் பாம்புடன் காட்சியளிப்பதும் கூட இதனால் தான். சிவனின் சக்தி அதன் உச்சத்தை எட்டியதால், அவரின் உணரும் திறனும் உச்சத்தில் இருக்கிறது. அதனால் அவரின் நெற்றிக்கண்ணும்திறந்துவிட்டது.
குண்டலினியும் நெற்றிக் கண்ணும்:---
மூன்றாவது கண் என்றால் ஒருவருடைய நெற்றி பிளந்து, அங்கே இன்னொரு கண் தோன்றிவிட்டது என்று அர்த்தமல்ல. இது ஒரு குறியீடு… முற்றிலும் புதுவிதமான பரிமாணத்தில் உணரும் திறன் வந்துவிட்டது என்பதைக் குறிப்பதற்கு பயன்படுத்தப்படும் ஒரு குறியீடு… அவ்வளவே! இந்த இரண்டு கண்களால் பொருள்நிலையில் உள்ளவற்றை மட்டுமே பார்க்க முடியும். உதாரணத்திற்கு, இந்தக் கண்களை கைகளால் மூடினால், அவற்றால் எதையும் பார்க்க முடியாது. அதன் திறன் அவ்வளவு தான். பொருள்நிலைக்கு உட்பட்டே அது செயல்படுகிறது. ஆனால் ‘நெற்றிக்கண் திறந்துவிட்டது’என்று சொன்னால், அது உள்நோக்கிப் பார்ப்பது. வாழ்கையை முற்றிலும் வேறு விதமாக உணரும் பரிமாணம் திறந்து கொண்டுவிட்டதால், இவ்வுலகில் எதையெல்லாம் உணரவேண்டுமோ, அவை அனைத்தையுமே உணர்ந்துகொள்வது.
குண்டலினி யோகா ---
“குண்டலினி” என்ற வார்த்தையை உச்சரிக்க வேண்டும் என்றாலும் கூட, மிக்க கவனத்துடன், விழிப்புணர்வோடு, மரியாதையோடு தான் உச்சரிக்கவேண்டும். ஏனெனில் அந்த வார்த்தையே அத்தனைப் பெரிது. உங்கள் உடல், மனம், உணர்வுகள் அனைத்தையும் தேவையான அளவிற்கு தயார் செய்து கொண்ட பின்னரே, குண்டலினியை எழச்செய்ய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த அளவிற்கு சக்தியை தாங்கிக்கொள்ள முடியாத உடலில் அதைச் செலுத்தினால், ‘ஹை வோல்டேஜ்ஜால்’ செயலிழக்கும் எந்திரங்கள் போல், உங்கள் உடலும் சமனற்றோ, செயலிழந்தோ போகும். தேவையான வழிநடத்துதலும்,துணையும் இன்றி செய்தல் ஆகாது-
குண்டலினி யோகா தான் இருப்பதிலேயே மிக அபாயகரமான யோகமுறை. அபாயம் என்பது… அதுதான் இருப்பதிலேயே மிகவும் வீரியம் வாய்ந்த செயல்முறை என்பதால்! எது சக்திவாய்ந்ததோ,அதைத்தவறாகப் பயன்படுத்தினால், அது பேராபத்தாய் முடிந்துவிடும்.உதாரணத்திற்கு மின்சாரத்தை உற்பத்தி செய்ய பல வழிகள் இருக்கிறது. அதில் ஒன்று அணுஉலை வாயிலாக உற்பத்தி செய்வது. மின்சாரம் உற்பத்தி செய்ய நாம் அறிந்தருக்கும் எல்லா வழிகளிலும் இதுதான் சிறந்த வழி… என்றாலும், இதுதான் மிகவும் ஆபத்தான வழியும் கூட. நிஜம் தானே? எல்லாம் சரியாக நடக்கும்போது மிகச்சிறப்பான வழியாய் இருப்பது, தவறாகிப் போனால் சரிசெய்ய முடியாத அளவிற்கு பெரும் பிரச்சினைகளை உருவாக்கிவிடுகிறது. அதேபோல் தான் குண்டலினி யோகாவும். அனைத்திலும் சிறந்த வழி… அதே நேரத்தில் மிகவும் ஆபத்தானதும் கூட. தேவையான முன்னேற்பாடுகளோடு, அதைப் பற்றி முழுமையாய் அறிந்தவரின் தொடர்வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையில் மட்டுமே இதை நாம் பயிற்சி செய்யவேண்டும். இல்லையெனில்இதை செய்யாதிருப்பதே நல்லது..இதனால் குண்டலினி யோகா செய்வது தவறு என்று இல்லை. முறையாய் செய்தால் அது போன்ற ஒரு அருமையான வழியில்லை, ஆனால்பிரச்சினை என்னவெனில், ‘சக்தி’க்கு என்று தனியாய் பிரித்தறியும் திறன் கிடையாது. அதை வைத்து உங்கள் வாழ்வை உருவாக்கவும் செய்யலாம், அழித்தும் கொள்ளலாம், இன்று மின்சாரம் தான் உங்கள் வாழ்வை பல வழிகளிலும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது… ஆனால் அதுவே மின்சாரக் கம்பியை கைகளால் தொட்டால், என்னாகும் என்று உங்களுக்கே தெரியும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

குரு பெயர்ச்சி 21.04.2023 ஒரு நாள் ஜாதகம் சலுகை விலையில்

 வணக்கம் நண்பர்களே குரு பெயர்ச்சி தினத்தை முன்னிட்டு ஜாதகம் தேவை படும் நபர்கள் பெற்று கொள்ளலாம்  சுத்த திருக்கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட...